October

October

“கௌதம் அதானியின் இலங்கை விஜயம் உத்தியோகபூர்வ விஜயம் அல்ல.” – அரசு தரப்பு அறிவிப்பு !

இந்தியாவின் கோடீஸ்வர வர்த்தகர் கௌதம் அதானியின் இலங்கை விஜயம் உத்தியோகபூர்வ விஜயம் அல்ல, அது ஒரு தனிப்பட்ட விஜயம் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், அதானி நிறுவனம் இலங்கையில் உள்ள ஏனைய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆராயவுள்ளதாக கூறினார்.

முதலீட்டாளர்கள் வருகை தருவதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவது அரசாங்கங்கத்தின் பொறுப்பு என குறிப்பிட்ட அமைச்சர், நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாட்டைத் தீர்ப்பதற்கும் அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதற்கும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

கொழும்பு துறைமுகத்தில் மேற்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு அதானி நிறுவனம் ஏற்கனவே விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

நேற்று இலங்கைக்கு வந்துள்ள கௌதம் அதானி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திப்பார் என இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தபோதும் ஜனாதிபதி ஊடக பிரிவு இதுவரை அதனை உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“யாரையும் காட்டிக்கொடுப்பதோ பழிவாங்குவதோ எங்களது நோக்கம் இல்லை.” – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

“யாரையும் காட்டிக்கொடுப்பதோ பழிவாங்குவதோ எங்களது நோக்கம் இல்லை, இருக்கிறதை பாதுகாத்துக்கொண்டு முன்னோக்கிச் செல்வேண்டும் என்பதே எமது நோக்கம்.” என மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

13வது திருத்த சட்டத்தினை அமுல்படுத்தவேண்டும் என்னை துரோகியாக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று அந்த சட்டத்தினை கோரி நிற்பதாகவும் அவர் தெரிவித்தார்.

காட்டிக்கொடுப்பதோ பழிவாங்குவதோ எங்களது நோக்கம் இல்லை: டக்ளஸ் தேவானந்தா -  தமிழ்வின்மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மீன்பிடியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் ஆராயும் வகையிலும் எதிர்காலத்தில் வாகரையில் மீன்பிடி தொடர்பில் முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டார்.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பிரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஆகியோரின் அழைப்பினையேற்று இன்று விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது வாகரை மீன்பிடி திணைக்கள காரியாலய வளாகத்திற்கு சென்ற அமைச்சர் அங்கு விசேட சந்திப்பில் மீனவர்களுடன் கலந்துகொண்டார்.

இந்த சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பிரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது வாகரை பிரதேசத்தில் மீன்பிடியாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்து கொண்ட அமைச்சர் முக்கியமாக வாகரை பிரதேசத்தில் மீன்பிடி துறைமுகம் ஒன்றினை அமைப்பது குறித்து ஆராயப்பட்டது.

அத்துடன் வாகரை பிரதேசத்தில் மீன்பிடி நடவடிக்கைகளை மேம்படுத்தி இங்கிருந்து தனித்துவமான மீன் ஏற்றுமதிகளை முன்னெடுப்பது குறித்தும் ஆராயப்பட்டது. வாகரை பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தில் உயர்த்துவதற்கு விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதன்போது தெரிவித்தார்.

இன மற்றும் மத அடிப்படையிலான பெயருடைய கட்சிகளின் பதிவுகளை இடைநிறுத்த விமல் வீரவன்ச தரப்பு கோரிக்கை !

இன மற்றும் மத அடிப்படையிலான பெயர்களைக் கொண்ட கட்சிகளின் பதிவுகளை இடைநிறுத்த வேண்டும் என விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் நாடாளுமன்ற விசேட குழு கூடியபோதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர இதனைத் தெரிவித்தார்.

மேலும் புதிய அரசியலமைப்பின் ஊடாக உள்ளூராட்சிமன்றத்திற்கு தெரிவு செய்யப்படும் உள்ளூராட்சிமன்ற பிரதானிகளின் மாகாண சபையை மாகாண அபிவிருத்தி சபையாக மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் பரிந்துரைத்துள்ளனர். அவ்வாறு மாற்றப்படும் அந்த சபைகளுக்கு மக்கள் இறையாண்மையுடன் தொடர்புடைய அதிகாரங்களை மாத்திரம் வழங்க வேண்டும் என்றும் தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

அத்தோடு அதன் மூலம் மாகாண சபை தேர்தலை இரத்துச் செய்ய வேண்டும் எனவும் தேசிய சுதந்திர முன்னணி நாடாளுமன்ற விசேட குழுவில் சுட்டிக்காட்டியுள்ளது. தேசியப் பட்டியலின் மூலம் நியமிக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை மொத்த உறுப்பினர்களில் 5 சதவீதமாகக் குறைக்கப்பட வேண்டும் என்றும் தேசிய சுதந்திர முன்னணி பரிந்துரைத்துள்ளனர்.

மைதானத்தில் வாய்த்தர்க்கம் – லஹிரு குமார மற்றும் லிட்டன் தாஸிற்கு அபராதம் !

ஐசிசி ரி20 போட்டித் தொடரின் சூப்பர் 12 சுற்றின் 15 ஆவது போட்டி நேற்றைய தினம் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் பந்தவீச தீர்மானித்தது.

அதனடிப்படையில் பங்களாதேஷ் அணி சார்ப்பில் லிட்டன் தாஸ் மற்றும் மொஹம்மட் நயீம் ஆகியோர் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கினர்.

போட்டியின் 6 ஆவது ஓவரை வீசிய லஹிரு குமாரவின் பந்தில் லிட்டன் தாஸ் ஆட்டமிழந்திருந்தார். இதன்போது லஹிரு குமார மற்றும் லிட்டன் தாஸிற்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருந்தது.

குறித்த சம்பவம் தொடர்பில் லஹிரு குமாரவிற்கு போட்டியின் சம்பளத்தில் 25 விகிதமும் லிட்டன் தாஸிற்கு போட்டியின் சம்பளத்தில் 15 விகிதமும் தண்டப்பணமாக விதிக்கப்பட்டுள்ளது.

வௌிநாட்டு பணத்தை இலங்கைக்கு அனுப்புவதற்காக புதிய செயலி அறிமுகம் !

வௌிநாட்டு பணத்தை இலங்கைக்கு அனுப்புவதற்கான புதிய செயலியை SL Remit என்ற பெயரில் அறிமுகப்படுத்துவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

இலங்கை மத்திய வங்கியில் இன்று (25) நடைபெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இதனை குறிப்பிட்டார்.

மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட வௌிநாடுகளிலிருந்து 07 பில்லியன் அமெரிக்க டொலர் பணம் நாட்டிற்கு பறிமாற்றப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கூறினார்.

உரிய வழிமுறையின் கீழ் குறித்த பணம் பரிமாற்றப்படாமையால், நாட்டிற்கு கிடைக்க வேண்டிய அந்நிய செலவாணி உரிய வகையில் கிடைக்காமையை கருத்திற்கொண்டு, SL Remit என்ற செயலியை அறிமுகப்படுத்துவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

இந்த திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்கும்பட்சத்தில், 02 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி நாட்டிற்கு கிடைக்கும் என அவர் நம்பிக்கை வௌியிட்டார்.

இதனிடையே, நாட்டிலுள்ள அனைவருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டையை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அறிமுகப்படுத்த தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் குறிப்பிட்டார்.

“எனது கொடும்பாவிகளை எரித்தாலும் நான் அஞ்சமாட்டேன்.” – விவசாயத்துறை அமைச்சர்

“எனது கொடும்பாவிகளை எரித்தாலும் அஞ்சமாட்டேன். ஒருபோதும் பின்வாங்கபோவதும் இல்லை.” இவ்வாறு விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். நாடெங்கும் விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டின் எதிர்காலம், மக்களின் நலன்கருதியே இரசாயன உரப் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டது. பசுமை விவசாயத்துக்கான அடித்தளம் தற்போது இடப்பட்டுள்ளது. இந்நிலையில், மீண்டும் இரசாயன உரம் கோருவது ஏற்புடைய நடவடிக்கை அல்ல. நாம் எமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளமாட்டோம். எனது கொடும்பாவிகளை எரிக்கட்டும். இதற்கெல்லாம் அஞ்சி பின்வாங்கத் தயாரில்லை” என்றார்.

மன்னாருக்கு விஜயம் செய்குதுள்ள இந்தியக்கோடீஸ்வரர் கௌதம் அதானி !

இந்தியாவின் செல்வந்த வர்த்தகர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் கௌதம் அதானி உள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவரும் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். அதானி குழுமம் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்திக்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், அவர் இங்கு வருகை தந்துள்ளார். கெளதம் அதானியும் அவரின் குடும்பத்தின் சிலரும், இரண்டு தனியார் விமானங்களில் நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

கௌதம் அதானியின் மகன், பிரதம நிறைவேற்றதிகாரி, அதானி பசுமை எரிசக்தி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் உள்ளிட்டோரும் இலங்கைக்கு வந்துள்ளனர்.

துறைமுகம், எரிசக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி செயற்றிட்டம் தொடர்பில் இலங்கையின் உயர் அதிகாரிகளுடன் கௌதம் அதானி கலந்துரையாடவுள்ளார். அவர், கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம் தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்திய வர்த்தகர்கள் சிலர் இன்று மாலை மன்னாருக்கு சென்றுள்ளனர். இராஜாங்க அமைச்சர் சானக்க, இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் சஞ்சய மொஹொட்டால ஆகியோரும் அவர்களுடன் அங்கு சென்றிருந்தார்.

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் 51 வீத பங்கை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்கும் உடன்படிக்கை கடந்த செப்டம்பர் 30 ஆம் திகதி கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது. புதிய கூட்டு நிறுவனமொன்றினூடாக, இந்த மேற்கு முனையத்தின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதற்கு முன்னர், இந்தியா, ஜப்பான் மற்றும் இலங்கைக்கு இடையில் கூட்டுத் திட்டமாக கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு பிரேரிக்கப்பட்டிருந்ததுடன், தற்போதைய அரசாங்கம் அந்தத் திட்டத்தை நிறுத்தி, மேற்கு முனையத்தை அதானி குழுமம் தலைமையிலான கூட்டுத் திட்டத்திற்கு வழங்கியது.

இதனிடையே, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கம் இணைந்து அபிவிருத்தி செய்யும் கொழும்பு துறைமுகத்தின் நுழைவாயிலின் முதலாவது கான்கிரீட் பாலத்தை பொருத்தும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது. புதிய களனி பாலத்திலிருந்து காலி முகத்திடல் வரை தூண்களில் நிர்மாணிக்கப்படும் இந்த வீதியில், முன்னரே பொருத்தப்பட்ட கான்கிரீட் பாலத்தின் 3,279 பகுதிகள் பொருத்தப்படவுள்ளன.

நான்கு வழிச்சாலைகளையும், 5.3 கிலோமீட்டர் நீளத்தையும் கொண்டதாக இது அமையவுள்ளது. துறைமுக நுழைவாயிலின் அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தினால் துறைமுக வளாகத்தில் இடித்து அகற்றப்பட்ட கட்டடங்களுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒதுக்கீட்டில் 17 மாடிகளைக் கொண்ட கடல்சார் வசதி நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் ஏற்படவுள்ள மிகப்பெரிய பஞ்சம் – சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை !

எதிர்காலத்தில் அரசாங்கத்தால் டொலர்களை திரட்ட முடியாவிட்டால் மின்சார துண்டிப்பை தவிர்க்க முடியாததாக இருக்கும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

மேலும்  பேசியுள்ள அவர் ,

நாட்டில் இரண்டு மூன்று மாதங்களில் நிச்சயமாகப் பஞ்சம் ஏற்படும் என்றும் எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடி ஏற்படும் என்றும் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

இயற்கை உரத் திட்டம் எனக் கூறி இரசாயன உரத் திட்டம் நிறுத்தப்பட்டதால் நாட்டில் பஞ்சம் ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இயற்கை உரத் திட்டத்தால் நாட்டில் வாழ்வாதார விவசாயம் வீழ்ச்சியடைந்துள்ளது என்றும் தவறான உணவுக் கொள்கை மற்றும் மோசடிக் கொள்கையும் இதற்குப் பங்களித்தி ருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் அரசாங்கத்தால் டொலர்களை திரட்ட முடியாவிட்டால் மின்சாரம் மற்றும் எரிபொருள் வெட்டுகள் தவிர்க்க முடியாததாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

‘என் எண்ண ஓட்டத்தில்…’ நூல் வெளியீடும்! ‘சிவஜோதி நினைவுப் பரிசு’ (ஒரு லட்சம் ரூபாய்) – அறிவிப்பும்!

‘என் எண்ண ஓட்டத்தில்…’ என்ற தலைப்பில் அமரர் சிவஜோதி வயீத்தீஸ்வரனின் ஆக்கங்களின் தொகுப்பு வருகின்ற 18ம் திகதியன்று கிளிநொச்சி லிற்றில் எய்ட் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. லிற்றில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் இணைப்பாளராகப் பணியாற்றி குறுகிய காலத்தில் அம்மண்ணின் மைந்தனான சிவஜோதியின் 50வது பிறந்ததினத்தையொட்டி இந்நூல் வெளியீடு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சிவஜோதியின் பிறந்த தினமான நவம்பர் 18 இலேயே இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிவஜோதி எழுதிய கட்டுரைகள், மேற்கொண்ட நேர்காணல்கள், நூல் விமர்சனங்கள், ஆகியவற்றின் தொகுப்பாக இந்நூல் வெளியிடப்படுகின்றது. தேசம் வெளியீடாக வரும் இந்நூலை திருமதி ஹம்சகௌரி சிவஜோதி தொகுத்துள்ளார். நாடகக் கலை, நாடகக் கலைஞர்களுடனான நேர்காணல், பேராசிரியர் கா.சிவத்தம்பி மற்றும் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் ஆகிய கல்வியியலாளர்களின் நேர்காணல்கள் என பல்வேறு வகையான ஆக்கங்களையும் தாங்கி இந்நூல் வெளிவருகின்றது.

சிவஜோதியை ஆண்டுதோறும் நினைவு கூருகின்ற வகையில் சிவஜோதி நினைவுப் பரிசு ஒன்றை வழங்கவும் சிவஜோதி நினைவுக்குழு தீர்மானித்துள்ளது. மேலும் சிவஜோதி ஒரு நாடகக் கலைஞர் என்பதாலும்; நாடகக் கலையில் தீவிர ஆர்வத்தைக் கொண்டிருந்ததாலும் நாடகக் கலைக்காக தங்களை அர்ப்பணித்த ஒரு கலைஞருக்கு அல்லது நாடகக் கலைக்கு சேவையாற்றுகின்ற அமைப்பு ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. அதன்படி சன்மானத்தை பெறுகின்றவருக்கு அல்லது அமைப்புக்கு அந்நிகழ்வில் ஹம்சகௌரி சிவஜோதி ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்குவார்.

இந்நிகழ்வில் சிவஜோதி நினைவாக லிற்றில் எய்ட் இல் கற்கும் மாணவ மாணவியருக்கு யாழ் விக்ரோரியாக் கல்லூரி பழைய மாணவர்கள், அவர்களுக்கு வேண்டிய பாடசாலை சீருடைகளை வழங்க உள்ளனர். சிவஜோதி யாழ் சுழிபுரம் விக்ரோரியாக் கல்லூரியின் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவஜோதியின் நினைவு நிகழ்வுகளை ஆண்டுதோறும் மேற்கொள்ளவும், நாடகக் கலைக்கு உழைக்கின்றவர்களையும் அமைப்புகளையும் கௌரவிக்கும் வகையிலும் ஆண்டுதோறும் சிவஜோதி நினைவுப்பரிசை வழங்கவும் சிவஜோதி நினைவுக்குழு தீர்மானித்து உள்ளது. அதற்காக சிவஜோதி ஞாபகார்த்த நிதியம் ஒன்று லிற்றில் எய்ட் இல் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சிவஜோதி நேசித்த நாடகக் கலைக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க முன்வருபவர்கள் இந்நிதியத்திற்கு நிதி வழங்குவதன் மூலம் அதனைச் செய்ய முடியும்.

சிவஜோதி ஞர்பகார்த்த நிதியத்துக்கு நிதி வழங்க விரும்புபவர்கள் கீழுள்ள வங்கிக் கணக்கிற்கு தங்கள் நிதியை வழங்க முடியும்.
வங்கி: HNB
கணக்கின் பெயர்: Little Aid Skill Development Centre (Gurantee) Limited
வங்கிக் கணக்கு இலக்கம்: 146020176746

இவ்வாண்டுக்கான சிவஜோதி நினைவுப் பரிசைப் பெறும் நாடகக் கலைஞர் அல்லது நாடக்குழு நவம்பர் 18 அன்று அறிவிக்கப்படும்.

இந்நிகழ்வில் அனைவரையும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு சிவஜோதி ஞாபகார்த்த குழு அழைப்புவிடுத்துள்ளது. இந்நிகழ்வை சிவஜோதி முன்நிலை உறுப்பினராக இருந்து இயக்கிய மக்கள் சிந்தனைக் கழகம் மற்றும் லிற்றில் எய்ட் அமைப்பு என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

– சிவஜோதி ஞாபகார்த்த குழு –

“மக்களின் துயர்துடைக்கவே கோட்டாபய ராஜபக்ச ஆட்சி பீடமேறினார்.” – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு, மக்களின் துயர் துடைக்கவே ஆட்சிப்பீடம் ஏறியது. மக்களின் வயிற்றில் அடிப்பது இந்த அரசின் நோக்கமல்ல.” என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நிலையில், மக்கள் மீது சுமையை இறக்க வேண்டாம் என நாம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, பஸ் உரிமையாளர்கள் பஸ் கட்டணங்களை அதிகரிக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படுமா என்று கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-

நாளுக்கு நாள் எரிபொருள் விலை அதிகரிக்குமானால் அது பாரிய பிரச்சினையாக மாறிவிடும். டீசலின் விலையை  அதிகரித்தால் பஸ் கட்டணங்களை அதிகரிக்க நேரிடும். எரிபொருள் விலையை அதிகரிப்பது அவசியம் என்றாலும் தற்போதைய நிலையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படக்கூடாது.

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டால், பஸ் கட்டணங்கள் தொடர்பான பிரச்சினை ஏற்படும். கடந்த காலங்களில் பஸ் கட்டணங்களை அதிகரிக்க வேண்டும் என்று பஸ் உரிமையாளர்கள் எம்மிடம் கோரிக்கை விடுத்தனர். எனினும், நாட்டின் தற்போதைய நிலையில், மக்கள் மீது சுமையை இறக்க வேண்டாம் என நாம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அவர்கள் பஸ் கட்டணங்களை அதிகரிக்கவில்லை.

ஒட்டுமொத்த நாட்டு மக்களின் துயர் துடைக்கவே நாம் ஆட்சிப்பீடம் ஏறினோம். மக்களின் வயிற்றில் அடிப்பது எமது நோக்கமல்ல. எதிரணியினரின் ஆசைகள் நிறைவேற நாம் ஒருபோதும் இடமளியோம்- என்றார்.