08

08

ஆப்கானிஸ்தானில் வன்முறையால் பலியான நூற்றுக்கணக்கான குழந்தைகள் – யுனிசெப் அதிர்ச்சி அறிக்கை !

ஆப்கானிஸ்தானில் வன்முறையால் இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் 460 குழந்தைகள் பலியாகியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
யுனிசெப் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதன் படி ,
கடந்த வியாழக்கிழமை காலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பெண் குழந்தைகள் இரண்டு ஆண் குழந்தைகள் உள்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. குந்தூஸ் பகுதியில், போர்க்காலத்தில் பதுக்கிவைக்கப்பட்ட குண்டு திடீரென வெடித்ததால் அக்குடும்பமே பரிதாபமாக பலியாகியுள்ளது. இதுமட்டுமல்லாமல் இந்த குண்டுவெடிப்பால் வேறு மூன்று குழந்தைகளும் காயமடைந்துள்ளனர்.  தினசரி மூளை முடக்கத்தால் பாதிக்கப்பட்ட 10 முதல் 15 குழந்தைகள் தினமும் சிகிச்சைக்காக அழைத்துவரப்படுவதாக ஆப்கானிஸ்தானை சேர்ந்த மருத்துவர் முகமது பாஹிம் கூறுகிறார்.
பல ஆண்டுகள் நீடித்த உள்நாட்டு போர் குறித்து விளக்கிய யுனிசெப், ஆப்கானிஸ்தானில் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இந்த ஆண்டில் இவ்வளவு குழந்தைகள் குண்டுவெடிப்பில் பலியானது கவலை அளிப்பதாக யுனிசெப்  கூறி உள்ளது. வறுமை, உணவுப் பஞ்சம், ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பிரச்சினைகளால் குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் யுனிசெப் கவலை தெரிவித்துள்ளது.

விண்வெளியில் நடந்த முதல் சீன வீராங்கனை என்ற பெருமையை பெற்றார் வாங் யாபிங் !

சீனா தனியாக தியான்காங் என்ற பெயரில் விண்வெளி நிலையத்தை அமைத்து வருகிறது. இங்கு சில வீரர்கள் தங்கி இருந்து ஆய்வுப்பணிகளை செய்து வருகிறார்கள். அதில் வாங் யாபிங் என்ற பெண் வீராங்கனையும் ஒருவர். நேற்று இரவு அவர் விண்வெளி நிலையத்தில் இருந்து வெளியே வந்து விண்வெளியில் சிறிது தூரம் நடந்தார்.

அவருடன் தலைமை விண்வெளி வீரர் ஷாய் சிகாங்கும் விண்வெளியில் நடந்தார்.

Astronaut Wang Yaping becomes first Chinese woman to walk in space -  SCIENCE Newsவாங் யாபிங் விண்வெளி நிலையத்திற்கு சென்ற 2-வது வீராங்கனை ஆவார். ஆனால் முதன் முதலில் விண்வெளியில் நடந்த முதல் சீன வீராங்கனை என்ற பெருமையை வாங் யாபிங் பெற்றுள்ளார்.

சில நிமிடங்கள் மட்டும் நடந்துவிட்டு பின்னர் அவர் விண்வெளி நிலையத்திற்கு திரும்பினார்.

வாங் யாபிங் சீன விமானப்படை வீராங்கனையாக இருந்து வந்தார். 2010-ம் ஆண்டு அவர் விண்வெளி வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார். 41 வயதான நிலையில் அவர் விண்வெளியில் நடந்து இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.

“இலங்கையின் கடன்களுக்கு மகிந்தராஜபக்ஷவே காரணம்.” – ஹர்ச டி சில்வா காட்டம் !

“இலங்கை இன்று செலுத்திக்கொண்டிருக்கும் ஒவ்வொரு கடனுக்கும் காரணம் மகிந்தராஜபக்ஸவே.” என  ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

தற்போதைய அரசாங்கம் வருடாந்தம் செலுத்திக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பில்லியன் டொலர் கடனும் கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்த சமயத்தில் பெற்றுக்கொண்டவை. சுற்றுலாத்துறை மூலம் இலங்கை  ஒருபோதும் 5 பில்லியன் டொலர்களை அந்நிய செலாவணியாக பெற்றுக்கொண்டதில்லை.

சுற்றுலாத்துறை மூலம் கிடைக்கப் பெறும் 5 பில்லியன் டொலர் தற்போது முற்றாக இல்லாமல் போயுள்ளதாக அரச தலைவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் சுற்றுலாத்துறையின் ஊடாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் 5 பில்லியன் டொலர் கிடைக்கப் பெற்றதில்லை. கடந்த 2018 ஆம் ஆண்டில் மாத்திரமே சுற்றுலாத்துறை ஊடாக 4.5 பில்லியன் என்ற அதிகபட்ச அந்நிய செலாவணி கிடைக்கப் பெற்றது. மாறாக ஏனைய வருடங்களில் சராசரியாக 2.4 பில்லியன் மாத்திரமே சுற்றுலாத்துறை ஊடாகக் கிடைக்கப் பெறும். இலங்கையின்  அந்நிய செலாவணி கிடைக்கப் பெறும் அதேவேளை இலங்கையர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது 1.6 பில்லியன் டொலர் செலவிடப்படுகிறது.

தற்போது சுற்றுலாத்துறை மூலமான அந்நிய செலாவணி வீழ்ச்சியடைந்துள்ளமைக்கான காரணம் கொவிட் தொற்று அல்ல. அரசாங்கத்தின் முறையற்ற நிர்வாகமேயாகும். கொவிட் தொற்றின் பின்னர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக இலங்கையில் 0.7 வீதமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏனைய நாடுகளில் 4.5 வீதமளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அது மாத்திரமின்றி தடுப்பூசி கொள்வனவு உள்ளிட்ட கொவிட் செலவுகளுக்காக உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்டவற்றிடமிருந்து நிதி உதவிகள் கிடைக்கப் பெற்றன.

கடந்த அரசாங்கம் பெற்றுக்கொண்ட கடன்களையே தற்போது தாம் செலுத்திக் கொண்டிருப்பதாக அரச தலைவர் கூறுவது உண்மைக்கு புறம்பானது. காரணம் கடந்த ஆண்டு செலுத்திய ஒரு பில்லியன் டொலர் 2010 இல் மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் பெற்ற கடனாகும். அதேபோன்று இவ்வாண்டு செலுத்திய ஒரு பில்லியன் டொலர் 2011 இல் மஹிந்த ராஜபக்ச பெற்றுக் கொண்டதாகும். இவ்வாண்டு ஜூலை மாதமளவில் பெற்றுக் கொண்ட ஒரு பில்லியனும் 2012 இல் தனது சகோதரன் பெற்றுக் கொண்ட கடன் என்பதை ஜனாதிபதி நினைவில் கொள்ள வேண்டும். நாடு தற்போது பாரிய அபாயத்தில் உள்ளது என்பதை அவர் உணர வேண்டும். தாம் ஒருபோதும் சர்வதேச நாணய நிதியத்தை நாடப் போவதில்லை என்றும், அஜித் நிவாட் கப்ரால் முஸ்லிம் நாடுகளிடம் கடன் பெறுவார் என்றும் அரச தலைவர் செயலர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இங்கு நீதி அமைச்சர் அலி சப்ரி பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார். அவ்வாறிருக்கையில் எவ்வாறு முஸ்லிம் நாடுகளிடமிருந்து உதவியை எதிர்பார்க்க முடியும் எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

பத்து மாதங்களில் ராஜபக்ஷக்கள் பெற்ற கடன் தொகை எவ்வளவு..? – அம்பலப்படுத்திய ஐக்கிய மக்கள் சக்தி !

தற்போதைய அரசாங்கம் 2021 ஆம் ஆண்டில் மட்டும் 2.3 டிரில்லியன் கடன்களைப் பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார்.

மேலும் பேசிய அவர் ,

குறித்த பெ2.3 டிரில்லியன் பணத்தை அரசாங்கம் எதற்கு பயன்படுத்தியது..? என வெளிப்படுத்த வேண்டும்.

மேலும் கடந்த அரசாங்கத்தினால் பெறப்பட்ட கடன்களை தீர்பதற்கே குறித்த கடன்தொகை பெறப்பட்டது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். எவ்வாறாயினும் தாமரை கோபுரம், துறைமுகங்கள், மைதானங்கள், விமான நிலையங்களை நிர்மாணிப்பதற்கும் குடும்பத்தினர் பயணம் செய்வதற்கும் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் பெரும் தொகை கடனாகப் பெறப்பட்டது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

இதேவேளை நாட்டில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திகள் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவுவதாகவும் எஸ்.எம்.மரிக்கார் கூறினார்.

முகக்கவசத்தை கழட்டாமல் புகைப்படம் எடுக்குமாறு இலங்கையர்களுக்கு அறிவுறுத்தல் !

புகைப்படங்கள் எடுக்கும் போது முகக்கவசங்களை அகற்ற வேண்டாம் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

நிகழ்வுகளின் போது புகைப்படங்கள் எடுக்கும் சந்தர்ப்பத்தில் முகக்கவசத்தை நீக்காமல் இருப்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். எனவும் புகைப்படம் எடுக்கும் போது முகக்கவசத்தை நீக்குமாறு கூற வேண்டாம் எனவும் புகைப்பட கலைஞர்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்தியாவசிய தேவை தவிர்ந்து எந்தவொரு காரணத்திற்காகவும் நிகழ்வுகளின் போது முகக்கவசத்தை நீக்க வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.

சில நொடிகளுக்காவது முகக்கவசத்தை நீக்க வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“எனக்கு நடந்த அநியாயம் எந்த சிறுபான்மை தலைவருக்கும் ஏற்படக்கூடாது.” – ரிஷாத் பிரார்த்தனை !

எனக்கும், எனது குடும்பத்துக்கும் ஏற்பட்ட அநியாயம் இனிவரும் காலங்களின் சிறுபான்மை சமூகத்தின் எந்தவொரு தலைமைக்கும், எந்தவொரு அரசியல்வாதிக்கும் வந்துவிடக் கூடாது என்பதை பிரார்த்தனையில் கேட்டுக் கொண்டேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

ஒரு இனவாதியாக கடந்த காலங்களில் ஊடகங்களில் காட்டப்பட்ட பொழுது எங்களை பல சந்தேக பார்வையோடு காட்டுவதற்கான பல சதிகளை பல ஊடகங்கள் திட்டமிட்டு செய்தது. குண்டு வெடித்த தினத்தில் இருந்து சில ஊடகங்கள் குண்டு தாக்குதலோடு எங்களை சம்பந்தப்படுத்தி பொய்யான செய்திகளை வெளியிட்டு வந்ததை நாட்டு மக்க்ள அறிவார்கள்.

பயங்கரவாத தடுப்பு சட்டம் என்பது மிகவும் ஆபத்தான சட்டம் இந்த சட்டத்தினை நீங்குமாறு உலகமே பேசிக் கொண்டிருக்கின்றது. ஜீஎஸ்பிளஸ்ஸை நிறுத்துவோம் என்று ஐரோப்பிய ஒன்றியம் பேசிக் கொண்டிருக்கின்றது. இவ்வாறான மோசமான சட்டத்தின் கீழ் நான் கைது செய்யப்பட்டேன்.

எதிர்காலத்தில் சிறுபான்மை சமூகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், பாதுகாப்பு, இருப்பு, காணி பிரச்சனைகள் போன்று பல பிரச்சனைகள் இருக்கின்றது. இவற்றுக்காகத்தான் நாங்கள் அரசியல் செய்கின்றோம் என்றார்.

“சஜித்பிரேமதாஸ தரப்பினரை மாற்று அணியாக கருத முடியாது.” – கட்சி உறுப்பினர் பொன்சேகா

ஐக்கிய மக்கள் சக்தியை மாற்று அரசியல் சக்தியாக மக்கள் இன்னும் கருதவில்லை என்று அக்கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மீரிகம பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் பொன்சேகா மேலும் கூறியதாவது:-

தற்போதைய அரசின் மீது அதிருப்தி கொண்டுள்ள மக்கள் மாற்று அரசியல் சக்தியாக, ஐக்கிய மக்கள் சக்தியை இன்னும் கருதத் தொடங்கவில்லை. ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு ஆதரவாக வாக்களித்த 50 வீதமானவர்கள் அதிருப்தியடைந்துள்ளனர் .

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட கட்சியின் பல உறுப்பினர்கள் மீது எவ்வித ஊழல், மோசடி குற்றச்சாட்டுக்களும் கிடையாது. ஊழல், மோசடிகளைத் தடுப்பதாகக் கூறி ஆட்சிப்பீடம் ஏறிய நல்லாட்சி அரசைச் சேர்ந்தவர்களில் சிலரே ஊழல், மோசடிகளில் ஈடுபட்டனர் – என்றார்.

3 நாட்களில் 8 மில். அமெ.டொலர் நஷ்டஈடு: தவறினால் சட்ட நடவடிக்கை – சீன நிறுவனம் எச்சரிக்கை

8 மில்லியன் அமெரிக்க டொலர்களை நஷ்டஈட்டை கடிதம் கிடைத்து 3 நாட்களுக்குள் அனுப்பி வைக்குமாறு சர்ச்சைக்குரிய சேதன உரத்தை விநியோகித்த சீன நிறுவனம் கோரிக்கை கடிதம் அனுப்பி வைத்துள்ளது. இலங்கையில் உள்ள தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவைகள் மேலதிக பணிப்பாளரிடம் இருந்து இந்த நஷ்டஈடு கோரப்பட்டுள்ளது.
குறித்த நஷ்டஈட்டு கோரிக்கைக் கடிதத்தில் QingdaoSeawin நிறுவனம் தெரிவித்துள்ளதாவது,

விஞ்ஞான ஆய்வுகளின் முடிவுகளை மீறும் வகையில், சோதனை அறிக்கைகளை வௌியிடும் தரப்பிற்கும் பரிசோதனை அறிக்கைளை உண்மைக்கு புறம்பான விதத்தில் பிரசாரம் செய்யும் ஊடகங்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தமக்கு உரிமை உள்ளது தெரிவித்துள்ளது.

இலங்கையானது, உடன்படிக்கைகளுக்கு கௌரமளிக்காமை மற்றும் அங்குள்ள மக்களை தவறாக வழி நடாத்திச் செல்கின்ற விடயம் தொடர்பில் தம்மால் புரிந்துகொள்ள முடியாதுள்ளது. சீனாவின் நிறுவனமொன்று இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நுண்ணங்கிகள் அடங்கிய சேதனப் பசளையை ஏற்றுமதி செய்ததாக கூறப்படும் பொய்யான அறிக்கை, அது தொடர்பில் உண்மை தெரியாத பலரையும் நுகர்வோரையும் தவறான திசைக்கு கொண்டுசென்று ஏற்றுமதி தொழில் முயற்சியாளர்களின் வர்த்தகத்திற்கு பாரிய இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தேசிய தாவர தனிமைப்படுத்தல் அதிகாரிகள் மற்றும் ஊடகங்கள் தெரிவிக்கும் கருத்திற்கு அமைய, குறித்த உற்பத்தியில் Erwinia பக்டீரியா காணப்படுவதாக தெரிவிக்கப்படும் அறிக்கையில் எவ்வித உண்மையும் இல்லை. 600 பாகை செல்சியஸ் வெப்பநிலையில் 20 நிமிடங்களுக்கு கிருமி நீக்கம் செய்யப்படும் இந்த சேதன பசளையில், ஒருபோதும் Erwinia பக்டீரியா இருக்க முடியாது என அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பஷிலின் கொரோனா பட்ஜெட்டுக்கு 102 தரப்பினரிடமிருந்து பரிந்துரைகள்

2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதற்காக 102 தரப்பினரிடம்பரிந்துரைகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொவிட் தொற்றுக்கு மத்தியில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பொருளாதாரம் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில், இந்த சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்டு பொருளாதாரத்தை மீண்டும் பலப்படுத்தும் வகையில் அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் வழிகாட்டலுக்கமைய நிறுவனங்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலரிடம் வரவு – செலவுத் திட்டத்துக்கான பரிந்துரைகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், வெவ்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மாவட்ட அரசியல் அதிகாரிகள், வெவ்வேறு தொழிற்சங்கள், வர்த்தக அமைப்புக்கள், இறக்குமதியாளர்கள், இளம் அமைப்புக்கள், தேயிலை, தேங்காய், ஆடை, மரக்கறி, பழங்கள், உணவு, மீன் உள்ளிட்ட தொழிற்துறைச் சார்ந்தவர்கள், தகவல் தொழிநுட்பம், இரத்தினம் மற்றும் தங்க ஆபரணத் தொழிற்துறை நிபுணர்கள், உள்ளிட்ட 102 தரப்பினரிடம் இவ்வாறு பரிந்துரைகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

பட்டினியால் எவரும் சாகவில்லை: விலையேற்றம் பெரிய விடயமல்ல – பெரமுன எம்.பி ரஞ்சித் பண்டார

அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றத்தினால் எவரும் பட்டினியால் உயிரிழக்கவில்லை. சீனி, அரிசி ஆகிய பொருட்களின் விலை அதிகரிப்பு பெரியதொரு விடயமல்ல என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்தார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (7 ) இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்தன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

2020 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது,மக்களிடமிருந்து அரசாங்கம் நிவாரணம் பெற வேண்டும் என நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ குறிப்பிடவில்லை. மக்கள் மீது சுமை செலுத்தாத வகையில் வரவு-செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டது ஊடகங்களில் திரிபுப்படுத்தப்பட்டுள்ளன. வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அத்தியாவசிய பொருட்களை கட்டுப்படுத்தும் காலத்தில் நாம் தற்போது இல்லை. வர்த்தமானி ஊடாக வர்த்தகர்களை கட்டுப்படுத்த முடியாது. அதன் காரணமாக தான் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்ட விலைக்கமைய விற்பனை நடவடிக்கைகள் இடம்பெறாமல் இருக்கும் சூழல் காணப்படுகிறது. வர்த்தமானி அறிவித்தல் நீக்கப்பட்டு சந்தையில் போட்டித்தன்மையான சூழல் தற்போது ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

கொவிட்டால் கடந்த 2 வருட காலமாக முழு உலகமும் உற்பத்தி துறையில் பாதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான நிலையில் போலியாக வர்த்தமானி அறிவித்தல் ஊடாக பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவது பயனற்றது. பொருட்களின் விலையை நிர்ணயித்தால், சந்தையில் பொருள் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படும். எதிர்பார்க்காத அளவு பொருட்களின் விலை அதிகரிக்கப்படும்.

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தினால் எவரும் உயிரிழக்கவில்லை.சீனி,அரிசி,சீமெந்து ஆகியவை பெரும் பிரச்சினையல்ல அவற்றை காட்டிலும் தீர்க்க வேண்டிய பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. கொவிட்-19 தாக்கத்திலிருந்து நாட்டு மக்களை பாதுகாத்தற்கு அரசாங்கத்திற்கு மக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும் என்றார்.