05

05

நிறுத்தப்பட்டது வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா – காரணம் என்ன..?

தை பொங்கல் தினத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த வல்வெட்டித்துறை பட்டத் திருவிழாவை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வருடா வருடம் தை பொங்கல் தினத்தன்று வல்வெட்டித்துறை உதயசூரியன் திடலில் நடாத்தப்பட்டு வரும் பட்டத்திருவிழாவை இம்முறையும் நடத்துவதற்கு ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்து அறிவித்திருந்தனர்.

அதிகரித்து வரும் கொரோனா அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களை முன்னிறுத்தி இம்முறை பட்டத்திருவிழாவை இடைநிறுத்துமாறு பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் பட்டத்திருவிழா ஏற்பாட்டு குழுவினருக்கும் பிரதேச மக்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று மாலை இடம்பெற்றிருந்தது.

குறித்த கலந்துரையாடலில் படத்திருவிழாவை தற்கால சூழ்நிலையில் இடைநிறுத்துமாறு பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இம்முறை வல்வெட்டித்துறை பட்டத்திருவிழா இடைநிறுத்தப்படுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த பட்டத்திருவிழாவிற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல்ராஜபக்ஷ உள்ளிட்டோரை வரவேற்ற ஏற்பாட்டுக்குழுவினர் முயற்சிகளை மேற்கொண்டிருந்த நிலையில் “தமிழின அழிப்பை நடாத்தியும் தமிழர்களது பூர்வாங்க நிலங்களை பறித்தெடுத்தும் எண்ணில் கணக்கற்ற தமிழர்களை பயங்கரவாத தடைச்சட்டம் என்ற பெயரில் சிறையில் அடைத்தும் தனது அடக்குமுறை ஆட்சியை நடாத்தி வருகின்ற சிறிலங்கா அரசின் அமைச்சரும் மகிந்த ராஜபக்சவின் மகனுமாகிய நாமல் ராஜபக்சவையும் இன அழிப்பு அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களையும் பட்டத்திருவிழாவிற்கு  அழைப்பதானது எமது இனத்திற்கு இழைக்கும் வரலாற்று தவறாகும்.” என  பல தமிழ்தேசிய தரப்பினரும் விசனம் வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

டிக்டொக் தகராறில் இளைஞன் சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் – 06 சிறுவர்கள் கைது !

டிக்டொக் தகராறில் இளைஞன் சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞர்களை ஜனவரி மாதம் 7 ஆம் திகதி வரையில் தடுத்து வைக்க கொழும்பு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர்கள் 18 வயதிற்கு குறைந்தவர்கள் என்பதினால் அவர்களை மாகொல சிறுவர் சீர்திருத்த நிலையத்தில் தடுத்து வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

“தடுப்பூசி போடாதவர்களை சிறுநீர் கழிப்பதுபோல் உதாசீனப்படுத்தப் போகிறேன்.” – பிரான்ஸ் அதிபர் சர்ச்சைக்கருத்து !

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இதையடுத்து தடுப்பூசி செலுத்த சொல்லி ஒவ்வொரு நாட்டு அரசாங்கமும் மக்களை வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், தடுப்பூசி செலுத்தாத மக்கள் குறித்து பேசிய வார்த்தைகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் பேசியதாவது:-
தடுப்பூசி செலுத்தாதவர்களை நான் சிறைக்கு அனுப்பப்போவதில்லை. அவர்களை கட்டாயப்படுத்தி தடுப்பூசி செலுத்தவைக்கப்போவதில்லை. என்னுடைய திட்டம் எளிமையானது. மக்களை எரிச்சலூட்டபோகிறேன்.
தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் உணவகம் செல்ல முடியாது,.காபி குடிக்க முடியாது. படம் பார்க்க முடியாது. ஒன்றுமே செய்ய முடியாது என மக்களை எரிச்சலூட்டபோகிறேன். தடுப்பூசி போடாதவர்களை சிறுநீர் கழிப்பதுபோல் உதாசீனப்படுத்தப் போகிறேன். அதுதான் இனி அரசின் கொள்கை.
இவ்வாறு இம்மானுவேல் தரக்குறைவாக பேசினார்.
பிரான்சில் அதிபர் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் இம்மானுவேல் மேக்ரான் பேசிய வார்த்தைகள் அந்நாட்டு மக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜபக்ஷ அரசில் இருந்து வெளியேறுகிறதா மைத்திரி தரப்பு – வெளியாகியுள்ள அறிவிப்பு !

“அரசு தவறான வழியில் பயணிக்குமானால் அதற்கான ஆதரவை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் வழங்காது.” என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரான இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“இந்த அரசு ஆட்சிக்கு வருவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் காரணம். ஜனாதிபதித் தேர்தலின்போது எமது 15 இலட்சம் வாக்குகள்தான் தீர்க்கமானதாக மாறியது. அன்று ‘மொட்டு’ கட்சியுடன் வரச் சொன்ன மக்கள், இன்று மீண்டும் அந்த க் கட்சியுடன் வேண்டாம் எனச் சொல்கின்றனர். நாம் மக்கள் பக்கம் நின்றே முடிவெடுக்க வேண்டும். இந்த அரசை விமர்சிக்கும் உரிமை எமக்கும் இருக்கின்றது.

அரசிலிருந்து வெளியேறும் காலப்பகுதியை எமது கட்சியின் மத்திய குழு தீர்மானித்தால் நாம் வெளியேறுவோம். அதுவரை அரசியல் இருப்போம். அரசை தவறான வழியில் செல்ல இடமளிக்கமாட்டோம். அவ்வாறு சென்றால் அதற்கு எமது ஆதரவு இருக்காது” – என்றார்.

கிரிக்கெட்டிலிருந்து திடீரென ஓய்வு பெற தீர்மானித்துள்ள பானுக ராஜபக்ஷ – பின்னணி என்ன..?

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் பானுக ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கமைய, தமது ஓய்வு கடிதத்தை கடந்த திங்கட்கிழமையன்று இலங்கை கிரிக்கட் சபைக்கு அவர் கையளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை கிரிக்கெட் அறிமுகப்படுத்தியுள்ள புதிய உடற்தகுதி நியமங்களுடன் இனி விளையாட முடியாது என பானுக ராஜபக்ஷ குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபை இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் விடுதலை !

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்கள் இன்று (05) மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை தலைமன்னார் கடற்படையினர் கடந்த மாதம் 19 ஆம் திகதி கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக சட்டத்தரணி எஸ்.டிணேசன் தெரிவிக்கையில், குறித்த 12 இந்திய மீனவர்களும் இன்றைய தினம் மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இவர்களில் சிறுவன் ஒருவனும் அடங்குகின்றார்.

இதன்போது குறித்த மீனவர்களுக்கு எதிராக 3 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு கடற்தொழில் திணைக்களத்தினால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதன்போது குறித்த மீனவர்கள் தமது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், மூன்று குற்றச்சாட்டுக்களுக்கும் ஒரு வருட சாதாரண சிறை தண்டனை வழங்கப்பட்டதோடு, குறித்த சிறை தண்டனை 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் குறித்த மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

குறித்த மீனவர்களில் சிறுவர் ஒருவர் உள்ளமையினால் நிபந்தனையின் அடிப்படையில் எச்சரிக்கப்பட்டு, குறித்த சிறுவன் தனது கல்வியை தொடர வேண்டும் என நீதவான் அறிவுறுத்தியதோடு குறித்த மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மீனவர்கள் இலங்கைக்கான இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

பகிடிவதையில் ஈடுபட்ட மாணவருக்கு பல்கலைக்கழகத்தின் எந்தவொரு பகுதிக்கும் உள் நுழைய முடியாதபடி தடையுத்தரவு !

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவன் ஒருவர், புதுமுக மாணவர்கள் மீது பகிடிவதையில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் மறு அறிவித்தல் வரை விசாரணைகள் முடியும் வரை பல்கலைக்கழகத்தின் எந்தவொரு பகுதிக்கும் உள் நுழைய முடியாதபடி தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவனை உடனடியாக விடுதியில் இருந்தும் வெளியேறுமாறு பணிக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட மாணவன் ஒருவர் மீதே விஞ்ஞான பீடாதிபதியினால் இந்தத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று (5) அதிகாலை 2 மணியளவில், புதுமுக மாணவர்களைப் பகிடிவதைக்கு உள்ளாக்கியதுடன் மாணவர்கள் மீது தாக்குதல் நடாத்தியதாகவும் குறித்த சிரேஷ்ட மாணவன் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள், மாணவர் நலச்சேவை அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் முடியும் வரை குறித்த மாணவன் உள்நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று விஞ்ஞான பீட பீடாதிபதியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

“தடுப்பூசியை பெறுவதில் வடக்கு மக்கள் ஆர்வம் காட்டவில்லை.” – வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசனம் !

இரண்டாவது தடுப்பூசியை பெற்று மூன்று மாதத்தின் பின்னர் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் வடக்கில் பொதுமக்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனையின் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை கடந்த வருடம் ஓகஸ்ட் மாதத்தில் 14135 கொரோனா தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்ட நிலையில் செப்டம்பர், ஒக்டோபர் நவம்பர் மாதங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து டிசம்பரில் 1381 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். ஜனவரி 4 வரை 33 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

கொரோனா இறப்புகளை பொறுத்தவரை கடந்த வருடம் செப்டம்பரில் 386 இறப்புகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவை படிப்படியாக குறைவடைந்து டிசம்பரில் 41 உயிரிழப்புகள் பதிவானது. இந்த வருடத்தில் இதுவரை 3 கொரோனா இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனாத் தடுப்பூசியைப் பொறுத்தவரை வட மாகாணத்தில் முதலாவது டோஸ் தடுப்பூசியை 90 வீதமானவர்களும் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை 80 வீதமானவர்களும் பெற்றுள்ள நிலையில் மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசியை 30 வயதுக்கு மேல் 25 வீதமானவர்கள் பெற்றுள்ளனர்.

இரண்டாவது தடுப்பூசியை பெற்று மூன்று மாதத்தின் பின்னர் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் வடக்கில் பொதுமக்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என்றார்.

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர் உயிரிழப்பு !

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

கல்முனையைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர் கடந்த வருடம் நவம்பர் மாதம் 23ஆம் திகதி சுகயீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன்பின்னர் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக குறித்த சந்தேகநபர் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 06ஆம் திகதி முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக சிறைச்சாலைகளின் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.