13

13

மீனவர் கொல்லப்பட்டமைக்கு நீதி வேண்டி யாழில் போராட்டம் !

யாழ்ப்பாணம் – மாதகல் கடற்பரப்பில் கொல்லப்பட்ட மீனவர் எட்வேட் மரியசீலனின் படுகொலைக்கு நீதி வேண்டி இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற குறித்த மீனவர் அதிகாலை மாதகல் கடற்பரப்பில் சடலாமாக மீட்கப்பட்டிருந்தார்.கடற்படையினரின் படகு மோதியே குறித்த மீனவர் கொல்லப்பட்டதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ள நிலையில், இன்றைய தினம் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் இறுதிச் சடங்கான இன்று, பொது மக்கள், மீனவர்கள், அரசியல் பிரமுகர்கள் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.‘கடல் கொலைகள் நிறுத்தப்பட வேண்டும்’, ‘கடல் விபத்துகளுக்கு இழப்பீடு’, ஆகிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

“நாம் கேட்ட திருத்தத்தை தந்து விட்டோம் என்று எங்கள் வாயால் சொல்ல வைப்பதற்கு அரசு முனைகிறது.” – கஜேந்திரகுமார் சாடல் !

சமஸ்டி சமஸ்டி என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கூறிக்கொண்டு ,ஒற்றை ஆட்சிக்குள் தமிழ் மக்களை அமுழ்த்துவதற்கு எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என தமிழ் தேசிய மக்கள் முன்னணயின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

நாம் என்ன நினைக்கிறோம், முதலில் 13 ஆவது திருத்தம் நடைமுறைக்கு வரட்டும்.அதிலுருந்து இப்போது உள்ள இருப்புக்களை நாம் பாதுகாப்போம்.ஆனால் இது தீர்வாகாது என்று கூறி வருகின்றோம். ஆனால் கூட்டமைப்பு சமஸ்டி என்று கூறிக்கொண்டு,தேர்தல் நிறைவடைந்த பின்னர் தமிழ் இன நீக்கத்தை செய்யும்வகையில்,ஒற்றை ஆட்சிக்குள் முடக்கும் செயற்பாட்டை செய்து வருகிறது.

13 ஆவது திருத்தத்தை மக்கள் ஆதரிக்கும் வகையில்,என்ன செய்யலாம், என்ற நாடகம் இங்கு நடைபெறுகிறது. 34 வருடங்களாக நாம் மறுத்த வந்த இந்த திருத்தத்தை ,இனப் பிரச்சினைக்கு தீர்வாக நம்ப வைக்கும் நாடகமே இங்கு நடைபெறுகிறது. நாலாவது அரசியல் திருத்தத்தை ஒப்பு கொள்ள வைப்பதற்கு ,நாம் கேட்ட திருத்தத்தை தந்து விட்டோம் என்று எங்கள் வாயால் சொல்ல வைப்பதற்கு அரசு முனைகிறது.

இதை விடுத்து சி.வி .விக்னேஸ்வரன் அயோக்கிய தனமாக ,13 ஆவது திருத்தம் தொடர்பில் தாறுமாறாக கூறி வருகின்றார். இதை இந்திய முகவர்கள் எமக்கு திணிப்பதற்கு முயற்சிக்கின்றனர்.மக்கள் இதை விளங்கி கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

நயினாதீவு ரஜமஹா விகாரையை புனித பூமியாக பிரகடனப்படுத்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச வலியுறுத்தல் !

இம்முறை அரச வெசாக் விழாவிற்கு முன்னதாக நயினாதீவு ரஜமஹா விகாரையை புனித பூமியாக பிரகடனப்படுத்தி சன்னஸ் பத்திரம் வழங்கப்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

2022 அரச வெசாக் விழாவை இம்முறை பலங்கொட கூரகல வரலாற்று சிறப்புமிக்க தலத்தை மையமாகக் கொண்டு நடத்துவதற்கு தீர்மானித்து நேற்று பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு அரச வெசாக் விழாவினை வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு ரஜமஹா விகாரையில் நடத்துவதற்கு நாம் தீர்மானித்திருந்தோம். ஆனால் கொவிட் தொற்று நிலைமைக்கு மத்தியில் சுகாதார பிரிவின் ஆலோசனைக்கேற்ப பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பை கருத்திற்கு கொண்டு அரச வெசாக் விழாவினை நடத்த முடியாது போனது.

இம்முறை அரச வெசாக் விழாவிற்கு முன்னதாக நயினாதீவு ரஜமஹா விகாரையை புனித பூமியாக பிரகடனப்படுத்தி சன்னஸ் பத்திரத்தை வழங்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை காலம் தாமதிக்காது முன்னெடுக்குமாறு பிரதமர் அமைச்சின் அதிகாரிகள் மத்தியில் குறிப்பிட்டார்.

கூரகல வரலாற்று சிறப்புமிக்க தலத்தை மையமாகக் கொண்டு நடைபெறும் அரச வெசாக் விழாவுடன், கூரகல வரலாற்று சிறப்புமிக்க தலத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்துமாறு பிரதமர் தெரிவித்தார்.

அரச வெசாக் விழாவை முன்னிட்டு வெசாக் பக்தி பாடல் நிகழ்வு, தன்சல், வெசாக் அலங்கார கூடு போட்டி, சூழல் பாதுகாப்பு நிகழ்வுகள், விசேட சமய நிகழ்வுகள், கலாசார நிகழ்வுகளை நடத்துவது மற்றும் விகாரை, அறநெறி பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களை மேம்படுத்துவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. இம்முறை அரச வெசாக் விழாவை முன்னிட்டு கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் வெசாக் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது குறித்து கவனம் செலுத்துமாறும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.

கூரகல புண்ணிய தலம் அமைந்துள்ள பலங்கொட மற்றும் கல்தொட பிரதேசங்களை அண்மித்த பகுதிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்திய பிரதமர், அது தொடர்பில் சம்பந்தப்பட்ட துறையினருடன் கலந்துரையாடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இம்முறை வெசாக் விழாவினை சுகாதார துறையினரின் ஆலோசனைக்கேற்ப நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் என்ற ரீதியில் நாம் மேற்கொள்வோம். சுற்றாடல் பாதுகாப்பு வேலைத்திட்டம் என்பது விசேடமாக மரக்கன்றுகளை பகிர்ந்தளிப்பது மாத்திரமல்ல. அந்த மரக்கன்றுகள் முறையாக பாதுகாக்கப்படுகின்றனவா என்பது குறித்தும் ஆராயுமாறு பிரதமர் குறிப்பிட்டார்.

பெண்ணின் உடலுக்குள் 50 சென்ரிமீற்றர் நீளமுள்ள துணியை வைத்துத் தைத்த யாழிலுள்ள தனியார் வைத்தியசாலை !

நெல்லியடியில் உள்ள ரூபின்ஸ் தனியார் மருத்துவமனையில் சத்திர சிகிச்சை செய்து கொண்ட பெண் கிருமித் தொற்றுக் காரணமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சத்திர சிகிச்சை மேற்கொண்ட மருத்துவ குழு உள்ளிட்ட விவரம் அடங்கிய அறிக்கையை எதிர்வரும் ஜனவரி 18 ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்குமாறு பருத்தித்துறை நீதிவான் பொன்னுத்துரை கிரிசாந்தன் உத்தரவிட்டுள்ளார்.

பருத்தித்துறை யாக்கருவைச் சேர்ந்த மனோன்மணி குலவீரசிங்கம் (வயது-60) என்ற பெண்ணே உயிரிழந்தார்.

பெண்ணுக்கு கற்பப்பையில் ஏற்பட்ட புற்றுநோய் காரணமாக அதனை அகற்றுவதற்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. அதனால் நெல்லியடியில் உள்ள ரூபின்ஸ் தனியார் மருத்துவமனையில் கடந்த டிசெம்பர் 10 ஆம் திகதி பெண்நோயியல் சத்திரசிகிச்சை வல்லுநர் ஒருவரினால் பெண்ணின் கற்பப்பை அகற்றும் அறுவைச் சிகிச்சை இடம்பெற்றது.

இந்த நிலையில் அந்தப் பெண்ணுக்கு திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் உயிரிழந்தார். மந்திகை ஆதார மருத்துவமனை சட்ட மருத்துவ வல்லுநர் கனகசபாபதி வாசுதேவா முன்னிலையில் பெண்ணின் சடலம் நேற்று உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது.

சத்திரசிகிச்சையின் போது பெண்ணின் உடலுக்குள் 50 சென்ரிமீற்றர் நீளம் 10 சென்ரிமீற்றர் அகலமுள்ள துணி ஒன்று வைத்து தையலிடப்பட்டமை கண்டறியப்பட்டது. அவரது உயிரிழப்புக்கு அந்த துணியினால் ஏற்பட்ட கிருமித்தொற்றே காரணம் என்று சட்ட மருத்துவ அறிக்கையில் வழங்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் பொன்னுத்துரை கிரிசாந்தன், தனியார் மருத்துவமனை பணிப்பாளர், மந்திகை ஆதார மருத்துவமனை சட்ட மருத்துவ வல்லுநர் உள்ளிட்டோரை இன்று மன்றில் முன்னிலையாக உத்தரவிட்டார்.

பெண்ணின் உடலை உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்திய மந்திகை ஆதார மருத்துவமனை சட்ட மருத்துவ வல்லுநர் கனகசபாபதி வாசுதேவாவிடம் இன்று முற்பகல் வாக்குமூலம் பெறப்பட்டது. தொடர்ந்து இன்று பிற்பகல் ஒரு மணியளவில் தனியார் மருத்துவமனை சத்திரசிகிச்சை கூடத்துக்குச் சென்ற நீதிவான் விசாரணைகளை முன்னெடுத்தார்.

உயிரிழந்த பெண்ணுக்கு சத்திரசிகிச்சை முன்னெடுத்த மருத்துவ குழுவினரின் விவரம் உள்ளிட்டவை வரும் ஜனவரி 18 செவ்வாய்க்கிழமை பருத்தித்துறை நீதிவான் மன்றில் முன்வைக்கவேண்டும். அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு விசாரணை முன்னெடுக்கப்படும் என்று நீதிவான் பொன்னுத்துரை கிரிசாந்தன் உத்தரவிட்டார்.

“கொள்கைகள் ஒத்துப் போகவில்லையென்றால் அரசாங்கத்தைவிட்டு வெளியேறுங்கள்.”- மைத்திரி தரப்புக்கு நாமல் ராஜபக்ஷ அறிவிப்பு !

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகள் ஒத்துப் போகவில்லையென்றால், கண்ணியத்துடன் அரசாங்கத்தைவிட்டு வெளியேற வேண்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் பல்வேறு விடயங்கள் தொடர்பாக கருத்துக்களை வெளியிடுவதை ஊடகங்களில் பார்த்ததாகவும் எனவே, ஆங்காங்கே சொல்லித் திரிவதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சரவையில் இருப்பதால் கூட்டுப் பொறுப்பு இருக்க வேண்டும் என்றும் தனியே மொட்டுக் கட்சி மீது குற்றம் சுமத்த முடியாது  என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த அரசாங்கத்தின் ஒவ்வொரு முடிவுகளுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மொட்டுக் கட்சியும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் ஏனெனில் அரசாங்கம் என்ற வகையில் எமக்கு கூட்டுப் பொறுப்பு உள்ளதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்தக் கொள்கைகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எவ்வகையிலும் பொருந்தவில்லையென்றால், வேறு கொள்கைகளைக் கேட்பார்களானால் கட்சித் தலைமைகள் வெவ்வேறு கூட்டங்களில் விமர்சித்துக்கொண்டிருக்காமல் கண்ணியமாகப் பேசுவது நல்லது என்று நாமல் கூறியுள்ளார்.

முன்னாள் போராளியும் பத்திரிகை ஆசிரியருமான தோழர் அமீனுக்கு இதயபூர்வமான அஞ்சலிகள்!!!

வாசிப்பை நேசிக்காத ஒரு சமூகத்தில் விரல்விட்டு எண்ணக் கூடிய பத்திரிகைகளே வெளிவந்தவன. அவை கூட சில ஆயிரங்களுக்கு மேல் விற்பனையாகவில்லை. ஆனால் இந்தச் சூழலை உடைத்து லட்சம் பிரதிகள் விற்பனையை எட்டியது தினமுரசு பத்திரிகை. அதன் ஆசிரியர்கள் பணியாளர்கள் கொலைப்பட்டியலில் இருந்த போதும் பத்திரிகையின் விற்பனையை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. அப்பத்திரிகையும் அற்புதனின் மறைவைத் தொடர்ந்து வீழ்ச்சி கண்ட போது அதனைத் தாங்கி நிறுத்தியவர் தோழர் அமீன். அப்பத்திரிகையின் ஆசிரியராக வருவதற்கு முன்னரே ஏரிக்கரைப் பத்திரிகையான தினகரனில் அவர் ஆசிரியராகப் பணியாற்றியவர். அரசியல் காரணங்களினால் அவர் பதவியிறக்கப்பட்டு சாதாரண உத்தியோகத்தர் ஆக்கப்பட்டார்.
தனது அறுபதாவது வயதைக் கடந்த தோழர் அமீன் கடந்த ஒரு மாதகாலமாக ஆசிறி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர். அதற்கான செலுவுகளை அமைச்சர் தோழர் டக்ளஸ் தேவானந்த செலுத்தியதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக தனியார் மருத்துவ மனைகள் கட்டணம் செலுத்தாமல் உடலை எடுக்க அனுமதிக்க மாட்டார்கள்.
தோழர் அமீன் பல்லாயிரம் இளைஞர்களைப் போல் தாயக விடுதலைக்காப் போராட இடதுசாரி அமைப்பான ஈபிஆர்எல்எப் இல் இணைந்து பின்நாட்களில் தோழர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபி அமைப்பில் இணைந்துகொண்டவர். வடமராட்சி பருத்தித்துறையைப் பூர்வீகமாகக் கொண்ட இவரின் இயற்பெயர் சிதம்பரப்பிள்ளை சிவக்குமார். இவர் பின்னாட்களில் பெரும்பாலும் தென்மாராட்சி சாவகச்சேரி பகுதியிலேயே தனது இளம்பிராயத்தைக் கழித்தார். அதன் பின் விடுதலைப் போராட்டம் அதன்பின் தொழில் என்று அவர் தலைநகர் கொழும்பிலேயே வாழ்ந்தார்.
2018இல் எனது தாயாரும் ஆசிறி மருத்துவமனையில் பிரைன் அனுறிசம் என்ன மூளை நரம்பு வெடிப்பு சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இரு வாரத்திற்கு 35 லட்சம் ரூபா செலுத்தி உயிரோடு மீண்டார். அதன் பின் ஒரு நாள் நானும் எழுத்தாளர் கருணாகரனும் தேசம் சஞ்சிகையை மீளப் பதிப்பிப்பது தொடர்பாக பேசுவதற்கு தோழர் அமீனை ஓரிரவு சந்தித்தோம். பல மணிநேரம் நீண்ட அந்த உரையாடல் விடுதலைப் போராட்டம் கடந்து வந்த பாதைகள் அப்போதைய அரசியல் எனப் பலதையும் தொட்டு வந்தது.
திறமையும் ஆளுமையும் மிக்க தோழர் அமீன் போன்றவர்கள் இச்சமூகத்துக்கு மிகவும் அவசியமானவர்கள். அவருடன் உரையாடிய சில மணி நேரப் பதிவுகளே ஒரு வரலாற்றின் முக்கிய காலகட்டத்தின் சாட்சியமாக அமைந்தது, அவர்களது தலைமுறையின் மறைவு இலங்கைத் தமிழர்களின் வரலாற்றின் முக்கிய காலகட்டத்தின் சாட்சியங்களின் மறைவும் கூட.
இச்செய்தி பதிவேறுகின்ற போது அவருடைய இறுதிக்கிரியைகள் கொழும்பில் நிறைவேறியிருக்கும் அவரது பிரிவுத் துயரால் வாடும் அனவரது துயரோடும் எனது துயரைப் பகிர்ந்து கொள்கின்றேன்.

யாழில் தொடரும் கூட்டுப் பாலியல் வல்லுறவுகள்: ரீட்டா, வித்தியா… யாழ் பல்கலைக்கழகம் எங்கே போகின்றது? தமிழ் சமூகம் எங்கே போகின்றது?

செவ்வாய்கிழமை ஜனவரி 11ம் திகதி நெல்லியடியைச் சேர்ந்த 18 வயது இளம் பெண் நான்கு கயவர்களினால் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு அவரிடம் இருந்த பணம் நகைகள் என்பனவும் சூறையாடப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் தவறுதலான தொலைபேசி அழைப்பில் வந்த உறவு மிகக்கொடூரமான நிலைக்கு அப்பெண்ணைத் தள்ளியுள்ளது. துணிகரமான அப்பெண் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமையை பொலிஸில் முறைப்பாடு செய்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் கொண்டு வருவதற்கு முயற்சிக்கின்றார்.

தொலைபேசி அழைப்பில் வந்தவருடன் பேசியது காதலாக, தொலைபேசி அழைப்பில் வந்தவன் அப்பெண்ணுக்கு ஆசை வாரத்தைகளைக் காட்டி அவளைத் திருமணம் செய்வதாகக் கூறி சம்பவ தினம் செவ்வாய்க் கிழமை காலை வீட்டில் இருந்த நகைகளையும் பணத்தையும் கொண்டுவரச் சொல்லி கேட்டுள்ளான். அந்த இளம் பெண்ணும் தன்னுடைய காதலனை யோக்கியன் என நினைத்து அவன் சொன்னவாறே செய்துள்ளார்.

அவ்விளம்பெண் தன்னுடைய காதலுக்காக தன் பெற்றோரைவிட்டு புதுவாழ்வைத் தேடிச் செல்ல அவனோ அவ்அபலைப் பெண்ணை தனதும் தன்னுடைய நண்பர்களதும் காமமப்பசிக்கு பயன்படுத்தி விட்டு மீண்டும் அவளின் ஊரடியில் கொண்டு வந்து இறக்கிவிட்டுச் சென்றுள்ளான்.

அவ்விளம் அபலைப் பெண் தனக்கு ஏற்பட்ட இந்த நிலையை யாரிடமும் சொல்லமாட்டாள் அதனால் தங்களுக்கு எவ்வித பாதிப்பும் வராது என்ற துணிச்சலிலேயே இந்த அக்கிரமத்தை இக்கயவர்கள் செய்துள்ளனர். பெண்கள் மீது இழைக்கப்படும் அநீதிகளுக்கு அவர்களே காரணம் என்று காரணம் கற்பிக்கின்ற போக்கை தமிழ் சமூகம் இன்னமும் வைத்துக்கொண்டுள்ளதால் இந்தக் கயவர்களும் அதனை வைத்து தாங்கள் தப்பிக்கலாம் என்று நம்பியுள்ளனர்.

ஆனால் அத்துணிகரமான பெண் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை பொலிஸாரிடம் முறையிட்டு இவ்வாறான கயவர்களுக்கு பாடம் கற்பிக்க முயன்றுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் நெல்லியடி பொலிஸில் முறையிட்ட போதும் சம்பவம் பருத்தித்துறை பொலிஸ்பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நடந்ததால் சம்பவம் பருத்தித்துறை பொலிஸ்பிரிவுக்கு கையளிக்கப்பட்டது. விசாரணையை ஆரம்பித்த பொலிஸார் துன்னாலை பகுதியைச் சேர்ந்த நால்வரில் சந்தேகம் கொண்டு விசாரணைகளை மேற்கொள்ள, சம்பந்தப்பட்ட நால்வரும் தலைமறைவாகி உள்ளனர்.

பெண்களைப் பாலியல் பிண்டங்களாக மட்டும் பார்க்கின்ற போக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. யாழில் இவ்வாறான கூட்டு பாலியல் வல்லுறவுச் சம்பவம் நடைபெறுவது இது முதற் தடவையல்ல. எண்பதுக்களின் நடுப்பகுதியில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த ரீட்டா என்ற பெண்ணை அவ்வமைப்பில் இருந்து தீப்பொறி என்ற பெயரில் வெளியேறிய சிலர் தங்களை வேவு பார்த்ததற்காக கூட்டுப் பாலியல் வல்லுறவை மேற்கொண்டுவிட்டு அப்பெண்ணை புளொட் முகாம் அருகிலேயே வீசியெறிந்துவிட்டுச் சென்றனர். இச்சம்பவம் யாழ் கொக்குவில் பகுதியில் இடம்பெற்றது. பிற்காலத்தில் சம்பந்தப்பட்ட பிரான்ஸ் வந்து வாழ்ந்த போதும் மனநிலை பாதிக்கப்பட்டு சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார். இவர் மீது கூட்டுப் பாலியல் வல்லுறவு நிகழ்த்தியதாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் தற்போது கனடாவில் வாழ்க்கின்றனர்.

மற்றைய சம்பவம் தங்களுக்கு எதிராக சாட்சி சொன்னவர்களைப் பழிவாங்க அவர்களுடைய பள்ளி செல்லும் மகளை மிகக் கொடூரமாக கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி அவ்விளம்பெண்ணை படுகொலை செய்த சம்பவம் புங்குடு தீவில் இடம்பெற்றது. இதில் சம்பந்தப்பட்டவர்களை காப்பாற்ற இரு பெண் பிள்ளைகளின் தாயான விஜயகலா மகேஸ்வரன் முயற்சித்து இருந்தது தெரிந்ததே.

மேற்குறிப்பிட்ட இரு கூட்டுப் பாலியல் வல்லுறவுகளுமே பழிவாங்கலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் நெல்லியடியில் இடம்பெற்ற சம்பவம் ஒரு இளம்பெண்ணை நம்ப வைத்து மேற்கொள்ளப்பட்ட நம்பிக்கைத் தூரோகச் செயல்.

தமிழ் சமூகம் இவ்வாறு பல்வேறு நெருக்கடிகளையும் முகம்கொடுத்துக் கொண்டிருக்கையில் யாழ் பல்கலைக்கழகச் சமூகம், எவ்வித சமூக அக்கறையுமற்ற இதையெல்லாம் மீறிய ரவுடிக் கும்பலாக செயற்படுகின்றது. யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சமூகத்தின் எந்த விடயம் பற்றியும் உருப்படியான ஆய்வுகள் எதையும் இதுவரை செய்து வெளியிடவில்லை. குறைந்தபட்சம் ஏன் தங்கள் மாணவர்கள் காட்டு மிராண்டிகளாக செயற்படுகின்றனர் என்பதை அறிந்து அதனை மாற்றினாலே சமூகத்திற்கு மிகப்பெரும் உதவியாக அமையும். யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ராக்கிங் என்ற பெயரில் மேற்குள்ளும் காட்டுமிராண்டித் தனங்கள் பெண்கள் மீது மேற்கொள்ளும் பாலியல் துஸ்பிரயோகங்கள் நாகரீக சமூகம் அருவருக்கத்தக்க நிலைக்கு சென்றுள்ளது. இதையெல்லாம் இவர்கள் தமிழ் தேசியம் என்ற போர்வைக்குள் ஒழிந்துகொண்டே செய்கின்றனர்.

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் ஆசிரியர்கள் முதற்கொண்டு பரவலான பொதுத்துறைகளில் பணியாற்றுபவர்கள் யாழ் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்களே. பல்கலைக்கழகம் பொறுப்பற்ற காட்டுமிராண்டிகளை பட்டதாரி ஆக்கியதன் விளைவுகளில் ஒன்று தான் தமிழ் சமூகம் தொடர்ந்தும் கீழ் நிலைக்குச் செல்வதன் அடிப்படைக் காரணம்.

யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எஸ் சற்குணராஜா இந்நிலைமை தொடராமல் இருக்க சில நடவடிக்கைகளை எடுத்துவருகின்றார் என்ற போதும் அவருடைய நடவடிக்கைகளில் மிகுந்த போதாமை காணப்படுகின்றது. முன்னாள் துணைவேந்தர் பொன் பாலசுந்தரம்பிள்ளை காலத்தில் ஆரம்பித்த வீழ்ச்சி இன்னும் தொடர்ந்துகொண்டேயுள்ளது.

யாழ் பல்கலைக்கழகம் எங்கு போகின்றதோ அதனை நோக்கியே தமிழ் சமூகமும் செல்லும். காட்ட வேண்டிய பல்கலைக்கழகமே ரவுடிக்கும்பலாக இருந்தால் ரவுடி வாள் வெட்டுக்குழுவாகவும் கூட்டுப்பாலியல் வன்புனர்ச்சியாளர்களாகவும் தான் ஆவார்கள். யாழ் பல்கலைக்கழகம் எப்போது திருந்தும்? யாழில் சமூக மாற்றம் எப்போது வரும்? யாழ் பல்கலைக்கழகத்தை இனி கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்ற நிலைக்கு துணைவேந்தர் சற்குணராஜாவே வந்துவிட்டாரோ?