February

February

இலங்கையுடனான போட்டி – தலையில் பந்து அடித்ததால் ஏற்பட்ட காயம் – இஷான் கி‌ஷன் வைத்தியசாலையில் !

இந்தியா- இலங்கை அணிகள் இடையேயான 2-வது 20 ஓவர் போட்டி தர்மசாலாவில் நேற்று நடந்தது.
இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கி‌ஷன் 15 பந்தில் 16 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். போட்டியின்போது 4-வது ஓவரில் அவரது தலையில் பந்து தாக்கியது.
லகீரு குமாரா வீசிய பவுன்சர் பந்து அவரது ஹெல்மட்டை தாக்கியது. உடனடியாக அவர் ஹெல்மட்டை கழற்றினார். இந்திய மருத்துவக்குழு அவரது உடல்நிலை குறித்து ஆய்வு செய்தது.
இந்த நிலையில் தலையில் பட்ட காயத்துக்காக இஷான் கி‌ஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மூளையில் ஸ்கேன் எடுக்கப்பட்டது.
இது தொடர்பாக கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இஷான் கி‌ஷன் நேற்று இரவு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மூளையில் ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான முடிவுக்காக காத்திருக்கிறோம்‘ என்றார்.
ஏற்கனவே காயம் காரணமாக சூர்யகுமார் யாதவ், தீபக் சாஹர், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரில் இருந்து விலகி இருந்தனர்.

மட்டக்களப்பில் வியாழேந்திரனின் ஆதரவாளர்களின் ஆதரவுடன் தாக்கப்பட்ட ஊடகவியலாளர் – வைத்தியசாலையில் சென்று சந்தித்த சாணக்கியன் !

மட்டக்களப்பில் தாக்கப்பட்ட ஊடகவியலாளரை வைத்தியாசாலையில் சென்று பார்வையிட்டுள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தாக்குதல் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை கோரியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தாக்குதலுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளரினை நானும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் உட்பட சந்தித்திருந்தோம். மட்டக்களப்பு வந்தாறுமூலை பகுதியில் ஊடகவியலாளர் ஓருவர் தாக்கப்பட்ட நிலையில் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பினை சேர்ந்த லட்சுமனன் தேவ பிரதீபன் என்ற ஊடகவியலாளரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்கான நிலையில் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பேருந்து நிலையம் அகற்றுவது தொடர்பாக வந்தாறுமூலை பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது கிழக்கு பல்கழைக்கழகத்தில் பணிபுரியும் பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு தாக்குதல் நடாத்தியுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு வந்தாறுமூலை பகுதியில் பஸ்தரிப்பு நிலையம் ஒன்று அகற்றப்பட்டது தொடர்பில் அந்த பஸ்தரப்பு நிலையத்தினை அமைத்தவர்களின் உறவினர்கள் குறித்த பகுதியில் போராட்டம் நடாத்தியுள்ளனர். இந்த நிலையில் அப்பகுதிக்கு வந்த இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் ஆதரவாளர்கள் அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர்.

இதன்போது அப்பகுதியில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளரான லட்சுமனன் தேவ பிரதீபன் மீது அங்கிருந்த பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர் தாக்குதல் நடாத்தியுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் ஆதரவாளர்களின் ஆதரவுடனேயே தன்மீது தாக்குதல் நடாத்தப்பட்டதாக ஊடகவியலாளர் லட்சுமனன் தேவ பிரதீபன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்பாக இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக சுயாதீனமான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

“இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்ற நம்பிக்கை எமக்குண்டு.” – பிரதமர் மஹிந்த

“இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்ற நம்பிக்கை எமக்குண்டு.” என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நேற்று (26) பிற்பகல் , கிரம – கட்டுவன ஒருங்கிணைந்த நீர் வழங்கல் திட்டம் மற்றும் கிரம பேருந்து நிலையம் ஆகியவற்றை திறந்து வைத்து உரையாற்றும் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.

அனைவருக்கும் சுத்தமான குடிநீரை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் ஒஸ்திரிய அரசாங்கம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதியில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் கிரம-கடுவான நீர் வழங்கல் திட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 34 கிராம அலுவலர் பிரிவுகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்படும். வராபிட்டியவிலுள்ள கிரம நீர்த்தேக்கத்திலிருந்து நீரைப் பெற்று வெலந்தகொடவில் புதிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணித்து அப்பகுதியில் வசிக்கும் சுமார் 26,000 மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், வலஸ்முல்ல, கிரம, கட்டுவன, மித்தெனிய வீதியில் 24 கிலோமீற்றர் தூரத்திற்கு குழாய்களை பொருத்தி குடிநீர்ப் பிரச்சினையை அதிக அளவில் தீர்ப்பதற்கு முடிந்துள்ளது.

சுமார் 40 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட கிரம பேருந்து நிலையம் மஹிந்த சிந்தனை புரநெகும திட்டத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட திட்டமாகும். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருந்த இந்த பேருந்து நிலையமானது ஆறு கடை தொகுதிகளை உள்ளடக்கியுள்ளது.

நிகழ்வில் பிரதமர் மேலும் பேசிய போது,

எண்பத்தைந்து இடைத்தேர்தலின் போது நாங்கள் இங்கு வந்து கிரம பகுதியில் இருந்து பிரசாரம் செய்தது எனக்கு நினைவிருக்கிறது. அமைச்சர் ஜோர்ஜ் ராஜபக்ஷவின் காலத்திலும் அதற்கு முன்னரும் உங்களது பெற்றோர், இந்த இளைஞர்களின் பெற்றோர் உள்ளிட்ட குழுக்கள் இந்தப் பிரதேசத்தில் எமக்கு ஆதரவளித்தனர். அதனுடன் இன்று பல புதிய அபிவிருத்தி முன்மொழிவுகள் இந்தப் பிரதேசத்திற்கு வந்துள்ளன.

குறிப்பாக நம் அனைவருக்கும் தண்ணீர் தேவை. எமது அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்கள் இன்று காலை எம்பிலிப்பிட்டிய பிரதேசத்திற்கும் தற்போது இப்பிரதேச மக்களுக்கும் சுத்தமான குடிநீரை வழங்கும் வேலைத்திட்டத்தை செயற்படுத்துகிறார். மக்களுக்கு சுத்தமான குடிநீர் அவசியம். ஏனெனில் அது எல்லா பக்கங்களிலும் விளைவுகளை ஏற்படுத்துகிறது. சுத்தமான குடிநீர் கிடைக்கும் பகுதிகளில், நோய் பாதிப்பு குறைவாக உள்ளது.

கடந்த அரசாங்கத்தின் போது இந்த மாகாணத்தில் அபிவிருத்தித் திட்டங்கள் நிறுத்தப்பட்டன. இந்தப் பிரதேசத்தில் மட்டுமன்றி முழு நாட்டிலும் அபிவிருத்தி நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்திருந்தன. இதனால் அன்று நாம் ஆரம்பித்த அபிவிருத்தித் திட்டங்கள் முடங்கின. சர்வதேச துறைமுகங்கள், விமான நிலையங்கள், இந்தப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி பணிகள் அனைத்தும் நம்மைப் பழிவாங்கும் எண்ணத்தில் கடந்த அரசால் நிறுத்தப்பட்டது. எதுவும் செய்யவில்லை. யாரை பழிவாங்கினார்கள்? இறுதியில் ஹம்பாந்தோட்டை மாவட்ட மக்களையும், மொனராகலை மாவட்ட மக்களையும் இந்தப் பிரதேசத்தில் மட்டுமன்றி நாடெங்கும் உள்ள எமது மக்களையே இவர்கள் பழிவாங்கினர்.

இன்று மீண்டும் எம்மீது நம்பிக்கை வைத்து எம்மை வென்று ஆட்சியை அமைத்துள்ளீர்கள். எமது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று அரசாங்கத்தை அமைத்து சேவையாற்றி வருகிறார். இன்று காலை எம்பிலிப்பிட்டியவில் நடைபெற்ற அபிவிருத்தி நிகழ்வில் நானும் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் கலந்துகொண்டோம். இவ்வாறாக ஒவ்வொரு மாகாணத்திலும் ஒரு புதிய அபிவிருத்தி ஏற்படும். மக்களுக்கு குடிக்க தண்ணீர் கிடைக்கிறது. மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறோம்.

எனவே, தொழில்துறையை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்களையும் உங்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கான புதிய திட்டங்களையும் நாங்கள் ஆரம்பித்துள்ளோம். அத்துடன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வேலைத்திட்டங்களையும், நாட்டின் ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றோம். அதன் மூலம் மக்களின் பல கேள்விகளுக்கு எம்மால் பதிலளிக்க முடிந்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் அரசாங்கம் பதவிக்கு வந்த நாள் முதல் இந்த நாட்டில் ஒரு புதிய போக்கு உருவாகியுள்ளது. நாடு அபிவிருத்தியை நோக்கி நகர்ந்தது. இந்த அபிவிருத்தி வேலைத்திட்டம் ஒரு மாகாணத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாது முழு இலங்கையிலும் செயற்படுத்தப்பட்டது. வடக்கு, தெற்கே, கிழக்கு அல்லது மேற்கு இந்த அனைத்து மாகாணங்களின் அபிவிருத்தியும் ஒரே சீரான முறையில் நடைபெற்ற யுகமொன்று எமக்கு இருந்ததில்லை.

எனவே, இப்பிரதேசத்தில் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்த திரு.வாசுதேவ நாணயக்கார அவர்களுக்கு இன்று நாம் குறிப்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்ற நம்பிக்கையும் எமக்குண்டு. குறிப்பாக இந்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு நாட்டில் உடனடியாக அபிவிருத்தி ஏற்பட வேண்டும். அபிவிருத்தி இல்லாமல் வேலைவாய்ப்புகளை வழங்க முடியாது.

எனவே அபிவிருத்திக்கு முன்னுரிமை வழங்கி தொழில் துறைகளை உருவாக்கி முன்னோக்கி செல்வோம் என்ற செய்தியை இந்த மக்களுக்கு நாங்கள் நினைவூட்டுகிறோம். எனவே, இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள கட்டுவன-கிரம நீர் வழங்கல் திட்டம் உங்களுக்கு பயனளிக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

4300-க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்களை கொன்றுவிட்டோம் – ரஷ்யாவிடம் அடங்க மறுக்கும் உக்ரைன் !

உக்ரைன் மீது ரஷிய படைகள் 4வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. அதன்படி, இன்று உக்ரைன் மீதான ரஷ்யாவின்  தாக்குதல் தொடர்ந்து வருகிறது. உக்ரைன் தலைநகர் கியூவ்வை ரஷ்ய இராணுவ வீரர்கள் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் தலைநகர் கீயூவின் பல இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதேபோல் மற்றொரு பெரிய நகரமான கார்கிவிலும் ரஷிய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த சண்டையில் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. விரைவில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு வந்தால் மட்டுமே இழப்புகளை தவிர்க்க முடியும்.
இந்நிலையில், போர் தொடங்கியதில் இருந்து இதுவரை உக்ரைன் நடத்திய பதில் தாக்குதல்களில் 4300-க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது.
ரஷ்ய இராணுவத்தின் 146 பீரங்கிகள், 27 போர் விமானங்கள், 26 ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் கூறி உள்ளது. இதுதவிர
ரஷிய வீரர்கள் சிலரை போர்க் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாகவும் உக்ரைன் ராணுவம் கூறி உள்ளது.
இதேபோல் ரஷிய பாதுகாப்புத்துறை கூறியிருக்கும் தகவலில், 223 பீரங்கிகள் மற்றும் ராணுவ வாகனங்கள், 28 போர் விமானங்கள், 39 ராக்கெட் லாஞ்சர்கள், 86 சிறிய ரக பீரங்கி மற்றும் மோர்ட்டார்கள், 143 சிறப்பு ராணுவ வாகனங்கள் அழிக்கப்பட்டதாக கூறி உள்ளது.

இலங்கை உதைப்பந்தாட்ட அணியில் ஜொலித்த தமிழ்வீரர் உயிரிழப்பு – தற்கொலையா என சந்தேகம் !

இலங்கை உதைப்பந்தாட்ட அணி வீரரும் மாலைதீவின் கழக அணி வீரருமான பியூஸ் மாலைதீவில் உயிரிழந்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தை சேர்ந்த டக்ஸன்  பியூஸ்லஸ் என்பவரே நேற்றைய தினம்(சனிக்கிழமை) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சிறந்த வீரருக்கான விருதை சர்வதேச ரீதியில் பெற்று கொண்ட மன்னார் கால்பந்தாட்ட  வீரர் - NewMannar நியூ மன்னார் இணையம்

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் கல்வி கற்ற இவர். பாடசாலை காலத்தில் மத்திய களத்தில் (CD) தடுப்பாட்ட நுட்பத்துடன் விளையாடும் சிறந்த வீரராக இருந்தார்.

இலங்கை அணியின் தேசிய அணியில் இடம்பிடித்த இவர், காற்பந்து உலக கிண்ண கோப்பைக்கான (FIFA World Cup) தகுதிகான் போட்டியில் இலங்கை தேசிய அணியில் பங்கேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

அதே நேரம் இலங்கை தேசிய அணியில் சிறந்த பின் கள வீரராகவும் விளங்கினார். கடந்த ஆண்டு இடம்பெற்ற SAFF கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில், இந்திய அணியுடனான போட்டியில் சிறந்த வீரருக்கான விருந்தினை பெற்றுக்கொண்டார். அந்த போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தது.

இவ்வருடத்திற்க்கான மிக பிரபலமான வீரருக்காக இடம் பெற்ற கருத்து கணிப்பில் இரண்டாவது வீரராக பியூஸ்லஸ் தெரிவு செய்யப்பட்டிருந்தார். இறுதியாக வந்த தகவல்களின் அடிப்படையில் மாலைதீவில் இவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவருடைய மரணத்திற்கான காரணத்தை இன்னும் அறிய முடியவில்லை. எனினும், அவர் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு கோழை இல்லை என அவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்காரணமாக அவரது மரணம் தொடர்பில் சுயாதீனமான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

“சுதந்திரம் பலரால் தவறாக பயன்படுத்தப்படுகின்றது.” – ஜனாதிபதி கோத்தபாய

மக்களிற்கு சுதந்திரத்தை உறுதிசெய்யும் விதத்தில் அரசாங்கம் நாட்டை ஆள்கின்ற போதிலும் அந்த சுதந்திரம் பலரால் தவறாக பயன்படுத்தப்படுகின்றது என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எம்பிலிப்பிட்டியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவார்  இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

ஜனநாயகத்தை உறுதிசெய்ய நானும் எனது அரசாங்கமும் ஆட்சி செய்கிறது அவர் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு நாணயநெருக்கடிக்கு நானோ எனது அரசாங்கமோ காரணமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் மின்சாரம் இல்லை எரிபொருள் இல்லை என பல முறைப்பாடுகள் காணப்பட்டபோதிலும் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் நுரைச்சோலை மின்நிலையத்தை ஏற்படுத்திய பின்னர் அதற்கு பின்னர் ஆட்சிபுரிந்தவர்கள் ஒரு மின்நிலையத்தை கூட ஆரம்பிக்கவில்லை.

தன்னால் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பசுமை விவசாயத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தான் கொள்கை உறுதிமொழியை வழங்கியதாகவும் எனினும் துரதிஸ்டவசமாக அதனை தான்னால் உரிய விதத்தில் விவசாயிகளிற்கு தெரியப்படு;த்த முடியவில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதனை பயன்படு;த்தி எதிர்கட்சிகள் பல ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளன என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனில் வீதியில் சென்றுகொண்டிருந்த கார் மீது மோதும் இராணுவ தாங்கி – வைரலாகும் வீடியோ !

உக்ரைன் தலைநகர் கிவ்-வில் வீதியில் சென்றுகொண்டிருந்த கார் மீது இராணுவ தாங்கி ஒன்று ஏறிய வீடியோ தற்போது சமுகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த இராணுவ தாங்கி உக்ரைனை சேர்ந்ததா? அல்லது ரஷ்யாவை சேர்ந்ததா? என்ற தகவல் வெளியாகவில்லை.

இந்த சம்பவம் உக்ரைன் நாடாளுமன்றிலிருந்து வடக்கே 10 கிலோ மீற்றர் தொலைவில் இடம்பெற்றுள்ளது.

வீதியில் சென்றுகொண்டிருந்த கார் மீது எதிரே வந்த இராணுவ தாங்கி வேகமாக மோதியது. இதில், இராணுவ தாங்கிக்கு அடியில் கார் சிக்கிக்கொண்டது. காரை ஓட்டி வந்த முதியவரும் அதில் சிக்கிக்கொண்டார்.

அதன்பின்னர், சில வினாடிகள் கழித்து இராணுவ தாங்கி காரில் இருந்து கிழே இறங்கி முன்னேறி சென்றது. இதையடுத்து, அங்கு நின்றுகொண்டிருந்த மக்களில் சிலர் சிதைந்த காரில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இராணுவ தாங்கி ஏறியதில் கார் உருக்குலைந்தபோதும் காரில் இருந்த முதியவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

இராணுவ தாங்கி கார் மீது ஏறுவதும், காரில் சிக்கிய முதியவரை மீட்கும் வீடியோவும் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 

போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலை தரிசிக்க சென்ற சுமார் 193 பேர் பொலிஸாரால் கைது !

சிவனொளிபாதமலை பருவகாலம் ஆரம்பமாகி சுமார் இரண்டு மாத காலத்துக்குள் போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலை தரிசிக்க சென்ற சுமார் 193 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிவனொளி பாதமலைக்கு போதை பொருட்கள் கொண்டு செல்வதனை தடுப்பதற்காக ஹட்டன் பொலிஸ் கோட்டத்திற்குட்பட்ட ஹட்டன் கொழும்பு பலங்கொடை பொகவந்தலா,நோர்வூட் மஸ்கெலியா,தியகல நோர்ட்டன் உள்ளிட்ட பிரதான வீதிகளில் பல இடங்களில் பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்த சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்னர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கேரள கஞ்சா, போதை மாத்திரைகள், தடைசெய்யப்பட்ட சிகரட்டுக்கள், மதன மோதகம், ஹெரோயின்,உள்ளிட்ட போதைப்பொருட்கள் மீட்க்ப்பட்டுள்ளன.

குறித்த சோதனை நடவடிக்கையின் போது ஸ்டூட் என்ற பொலிஸ் மோப்பநாய் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நாயின் உதவியுடன் சுமார் 87 போதை பொருட்கள் வைத்திருந்த நபர்களை ஹட்டன் பொலிஸார் மாத்திரம் கைது செய்துள்ளதாகவும் கடந்த காலங்களில் ஹட்டன் பொலிஸ் நிலையத்திலிருந்து கோரா என்ற நாயின் குறைப்பாட்டினை தற்போது உள்ள ஸ்டூட் மோப்ப நாய் நிவர்த்தி செய்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, நேற்றைய தினம் (25) ஹட்டன் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சிவனொளிபாதமலை யாத்திரை செய்வதற்காக கேரள கஞசாவுடன் சென்ற 13 இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாகவும் இவர்களை ஹட்டன் நீதவான் முன்னலையில் இன்று ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்து வருகை தந்தவர்கள் என்றும் அவர்களில் பெரும்பாலானவர்கள் 22 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பேச்சுவார்த்தைக்கு வர உக்ரைன் மறுப்பு – அனைத்து திசைகளிலும் முன்னேறி தாக்கும்படி வந்த கட்டளை !

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் 3-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.
போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைன் தாக்குதலை நிறுத்தினால் உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தைகளை நடத்த தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் புடின் கூறினார். ஆனால் பேச்சுவார்த்தைக்கான சூழ்நிலை தற்போது இல்லை.
இந்நிலையில், உக்ரைனை அனைத்து திசைகளிலும் முன்னேறி தாக்கும்படி ரஷிய இராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு வர உக்ரைன் மறுத்துவிட்டதாக கிரெம்ளின் மாளிகை குற்றம்சாட்டிய  நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
எனவே, இனி உக்ரைன் மீதான தாக்குதல் மேலும் தீவிரமடையும். தலைநகரை கைப்பற்றுவதற்கு கூடுதல் படையினர் வரவழைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவுடனான ரி20 போட்டி – ஜடேஜா , ஐயர் அதிரடியால் தொடரை இழந்தது இலங்கை !

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது

போட்டியின் நாணயசுழற்சியை வென்ற இந்தியா அணி முதலில் பந்துவீச தீர்மானித்திருந்தது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 183 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்ப்பில் பெத்தும் நிஸ்ஷங்க 75 ஓட்டங்களையும் தசுன் ஷானக ஆட்டமிழக்காமல் 47 ஓட்டங்களையும் மற்றும் தனுஷ்க குணதிலக 38 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

அதனடிப்படையில் இந்தியா அணிக்கு 184 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 17.1 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 186 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றிபெற்று வெற்றியை உறுதி செய்ததது. இந்திய அணி சார்ப்பில் ஸ்ரேயாஷ் ஐய்யர் ஆட்டமிழக்காமல் 74 ஓட்டங்களையும் ரவீச்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 45 ஓட்டங்களையும் மற்றும் சஞ்சு சம்சுன் 39 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் லஹிரு குமார 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

அதனடிப்படையில் 2 – 0 என்ற ரீதியில் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.