March

March

அதிகரிக்கும் மின்சார நெருக்கடி – வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு அரச ஊழியர்களுக்கு அறிவிப்பு !

நிலவும் மின்சார நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்காக இன்றும் நாளையும் அரச துறை ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு,( PUCSL) முன்மொழிந்துள்ளது.

வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை பின்பற்றினால் மின்வெட்டு காலத்தை இரண்டு அல்லது மூன்று மணிநேரம் குறைக்க முடியும் என அதன் தலைவரான ஜானக ரத்நாயக்க தெரிவித்தார்.

அலுவலகங்கள் செயற்படுவதற்கு மின்வெட்டு நேரத்தில் மின்பிறப்பாக்கிகள் பயன்பாட்டில் இருப்பதாகவும், இதற்குப் பயன்படுத்தப்படும் டீசலின் அளவைக் குறைத்து, நாளாந்த போக்குவரத்து சேவைகளைக் குறைப்பதன் மூலம், டீசல் இருப்புக்களை மின் உற்பத்தியை நோக்கி செலுத்த முடியும் .

, இந்திய கடன் திட்டத்தின் மூலம் பெறப்பட்ட எரிபொருள் ஏற்றுமதி நாளை நாட்டை வந்தடையும் எனவும், ஏப்ரல் 1 ஆம் திகதி இறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

எனவே இன்றும் நாளையும் சவாலான காலகட்டமாக இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், மருத்துவமனைகள் போன்ற முக்கியமான உள்கட்டமைப்புகள் மின் தடைகளை எதிர்கொள்ளாது, அதே நேரத்தில் சுதந்திர வர்த்தக வலயங்கள் மின்வெட்டுகளை எதிர்கொள்ளக்கூடும் என அவர் தெரிவித்தார்.

கடந்த இரண்டு மாதங்களில் அதிகளவிலான வளங்களைப் பயன்படுத்தியதன் காரணமாக நீர்மின் உற்பத்தி கணிசமாகக் குறைந்துள்ளது. காசல்ரீ நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 7% ஆகவும், கொத்மலை 20% ஆகவும், சமனலவெவயில் 11% ஆகவும், மொத்த நீர் ஆதாரங்கள் 27% ஆகவும் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

நீர்மின் உற்பத்தி 325 மில்லியன் அலகாக உள்ளதாகவும், அது 200 மில்லியன் அலகுகளை எட்டும்போது, ​​நீர் மின் உற்பத்தியை நிறுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

எரிசக்தி நெருக்கடி மோசமடைந்து வருவதாகவும், காலப்போக்கில் எச்சரிக்கப்பட்டும் பொதுமக்களும் நிறுவனங்களும் அதன் தாக்கத்தைத் தணிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

அந்நியச் செலாவணி நெருக்கடியில் இருந்து மின் நெருக்கடி உருவாகிறது என்றும், பல நாட்களுக்கு முன்னர் வந்த எரிபொருள் ஏற்றுமதி இன்னும் வெளியிடப்படவில்லை, ஏனெனில் பங்குகளை வெளியிடுவதற்கு டொலர்களை பெற முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.

ஆமை புகுந்த வீடும் ராகவன், நிர்மலா, ஷோபாசக்தி புகுந்த இலக்கியச் சந்திப்பும்! : பாகம் 34

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 34 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 13.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

தேசம்: நாங்கள் பரிசில் நடந்த கலை இலக்கிய முரண்பாடுகள் பற்றி கதைத்துக் கொண்டிருக்கிறோம். அதுல நீங்கள் சொல்லி இருந்தீர்கள் எக்ஸில் முரண்பாடு. அன்றைக்கு முக்கியமாக ஷோபாசக்தி அந்த முரண்பாட்டை தூண்டியதாக குற்றம்சாட்டி இருந்தீர்கள். அது என்ன மாதிரி நடந்தது? எக்ஸில் அது என்ன பிரச்சனை?

அசோக்: எக்சில் சஞ்சிகையில் ஏற்பட்ட முரண்பாடுகள் கோட்பாடு சார்ந்த பிரச்சனை இல்லைத்தானே கோட்பாடுகளில் சினேக முரண்கள்தோன்றினால் விவாதங்கள், உரையாடல்கள், கற்றல்கள் முலம் தீர்த்துக் கொள்ளலாம். கோட்பாடு ரீதியான பெரிய முரண்பாடுகள் வந்தா ஒன்று சேருவதற்கான சந்தர்ப்பங்கள் இல்லாமல் போகும். இது தனிப்பட்ட முரண்பாட்டில் இருந்து தான் தோற்றம் பெறுது. இங்க கோட்பாடும் இல்லை. சித்தாந்த பிரச்சனையும் இல்லை. முழுக்க முழுக்க தனிநபர் முரண்பாடுகள்தான். இங்க ஈகோ பிரச்சனைதான். இதை இலகுவாக தீர்த்திருக்க முடியும். திட்டமிட்டு சாதிய முரண்பாடாக்கி ஊதிப் பெருக்கடி வைத்த புண்ணியம் நம்ம சோபாசத்தியைத்தான் சாரும். இந்த காலகட்டத்திலதான் தமிழ்நாட்டில் தலித்திய இலக்கிய அரசியல் ஏழுச்சி கொள்ளுது. அப்ப இந்த தனிப்பட்டமுரண்பாடுகளை சாதிய பிரச்சனை சார்ந்த முரண்பாடாக கட்டமைத்தால் இவர்களுக்கு சாதகம் என சோபாசக்தியின் சாணக்கிய மூளை கணக்குப்போட்டு இருக்கும்.

தேசம்: இதுக்குள்ள சாதிய முரண்பாடு என்று சொல்லுற அளவுக்கு இல்லை. பெரும்பாலும் இதுக்குள்ள அரசியல்ரீதியாக இருந்தவர்கள் எல்லாருமே ஏதோ ஒரு வகையில் சாதிய எதிர்ப்பை கொண்டவங்கதானே.

அசோக்: தனி நபர் முரண்பாட்டை கூர்மையாக்க மற்றவர்களின் ஆதரவை பெற கலைச்செல்வன், லக்சுமி ஆட்கள் மீது இவ்வாறன குற்றச்சாட்டை வைக்க வேண்டிய தேவை அவங்களுக்கு வருகிறது. இந்த முரண்பாட்டிக்கு நீங்கள் நியாயம் கற்பிப்பதற்கான தேவை ஒன்று ஏற்படும் தானே. ஒவ்வொரு சாதியிலும் பிறப்பது தற்செயல் நிகழ்வு. ஆதிக்க சாதியான வேளாளர்கள் என்று சொல்லப்படுகின்ற சமூகத்தில் பிறக்கிற ஆட்களை வந்து முழுக்க முழுக்க எங்கள் மீதான ஒடுக்குமுறையாளர்கள் என்று கருத இயலாது. ஏனென்றால் அதிலும் நல்ல சக்திகள் உண்டு. ஒடுக்குமுறைக்கு எதிராக செயற்படுகின்ற இடதுசாரி கருத்தியல் கொண்ட ஆட்கள் இருப்பார்கள். இலங்கையில் நடந்த சாதிய எதிர்ப்புப் போராட்டங்களை கவனித்தம் என்றால் அந்த போராட்டங்களில் தீவிரமாக முண்ணனி வகித்தவங்க வேளாள சமூகத்தை சேர்ந்த தங்களை சாதிய தற்கொலை செய்து கொண்ட இடதுசாரிய கருத்தியல் கொண்ட தோழர்களாக இருப்பாங்க.

எங்களை ஒடுக்கிற ஆதிக்கம் செலுத்துகிற தங்களின் சுய சாதியிலிருந்து விடுபட்டு தோழமையோடு எம்மை நோக்கி வருகின்ற சக்திகளை நாம் சாதியின் பெயரால் புறம் தள்ளக் கூடாதுதானே. இவங்களிட்ட சாதியம் தொடர்பான எந்த புரிதல்களும் இருக்கல்ல. கோட்பாட்டு அரசியலும் இருக்கல்ல. தங்களை முதன்மைப்படுத்துற அடையாள சிக்கல்தான் இவங்களிட்ட இருந்தது. இது கலைச்செல்வன், லக்சுமி பக்கத்திலிருந்து பறிக்கப்படுவதாக இவங்க நினைக்கும் போது இந்த முரண்பாடுகள் வருகிறது. இவங்களால சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் இருக்குதானே அந்தக் காரணங்கள் எல்லாம் வந்து சோடிக்கப்பட்ட கட்டுக்கதைகள் ஆகத்தான் இருந்தது. அதற்கான உருவாக்கத்திற்கான பின்புலமாக சோபாசக்தி தான் இருந்தவர். சோபாசக்தி நினைத்திருந்தால் அந்த பிரச்சனையை தீர்த்து இருக்கலாம்.

நான் எப்பவுமே புலிகள் மீதான விமர்சனத்தை வைப்பதற்கான காரணம் என்னவென்றால் புலிகள் எப்பவுமே ஒரு ஜனநாயக அமைப்புகளை ஜனநாயக சக்திகள் ஒன்று கூடுவதை எப்பவுமே விரும்புவது இல்லை. எங்க போராட்ட வரலாற்றை எடுத்து பார்த்தீர்களென்றால் ஈழத்தில் தமிழ்ப் பிரதேசங்களில், புகலிட நாடுகளில் சகல ஜனநாயக அமைப்புகளை உடைத்தது எல்லாம் புலிகள்தான். அதுக்குள்ள ஊடுருவுவார்கள் அல்லது அப்படியே உள்வாங்குவார்கள். அல்லது அதிகாரத்தை பயன்படுத்தி அப்படியே இல்லாமல் ஆக்குவார்கள். இதில் அபத்தம் என்னவென்றால் கலைச்செல்வன், லக்சுமி ஆளுமைக்குள் உட்பட்டிருந்த இவங்கள், சுயநலப்போக்கும், மோசமான அரசியலும் கொண்ட பிழையான சத்தியான சோபாசக்தியின் வலையில் சிக்கிக் கொண்டதுதான்.

தேசம்: புலிகள் எதையுமே உருவாக்கினது கிடையாது…

அசோக்: ஷோபாசக்தி புலிகளில் இருந்து வந்தபடியால் அவரிடமும் அந்த இயல்பு இருக்கும்.

நான் முதலே சொல்லிஇருக்கிறன் புலிகளிடமிருந்து வந்த யாரையும் நம்புவதும் இல்லை, நான் ஏற்றுக்கொள்வதும் இல்லை. போராளிகள் பற்றியதல்ல இந்த அபிப்பிராயம். புலிகளில் குறிப்பிட்ட மட்டங்களில் கருத்தியல் சார்ந்து இயங்கிய எல்லாரிடமும் தங்களைத் தவிர ஏனைய அமைப்புகள் உருவாகுவதையோ ஏனைய சக்திகள் உருவாகுவதையோ அவங்கள் விரும்புவது இல்லை. ஒரு இலக்கிய சஞ்சிகையோ, இலக்கிய சந்திப்போ சாதாரண அமைப்புகள் கூட தங்களை வரக்கூடாது என்றுதான் விரும்புவார்கள்.

தேசம்: தங்கட கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்று நினைக்கினம்…

அசோக்: அப்படி தங்கட கட்டுப்பாட்டுக்குள் இல்லையென்றால் உடைப்பார்கள் அல்லது அவர்கள் மீது ஏதும் அதிகாரத்தை பிரயோகிப்பார்கள். இலக்கிய சந்திப்புக்கும் அதுதான் நடந்தது. எக்ஸிலுக்கும் அதுதான் நடந்தது.

தேசம்: நீங்கள் இதே குற்றச்சாட்டை தான் ராகவன் நிர்மலா நித்தி மீதும் வைத்தீர்களா?

அசோக்: என்னைப் பொருத்தவரை இவர்கள் புலிகளை எதிர்க்கின்ற இன்னொரு புலிகள்தான். அதுல நீங்கள் ராகவன் ஆக இருந்தால் என்ன, நித்தியானந்தனாக இருந்தா என்ன நிர்மலாவாக இருந்தால் என்ன, முழு பேரும் அந்த மனோநிலையோடு, அந்த அந்த ஆதிக்க உளவியல் கட்டமைப்போடுதான் சிந்திப்பாங்க செயற்படுவாங்க. இவர்களை எல்லாம் ஒரு ஜனநாயக சக்தியாக நான் ஒருபோதும் பார்க்கவில்லை. ஏனென்றால் இருக்கிற முரண்பாடுகளை தீர்க்கின்ற நபர்களாக அவர்கள் எப்பொழுதும் இருந்ததில்லை. முரண்பாடுகளை கூர்மையாக்கி, குழுவாதத்தை உருவாக்கி தாங்க நினைப்பதை சாதிப்பாங்க. அதற்கு நாங்களும் துணை போவம். நீங்க பார்த்தீங்க என்றால் இவங்களுக்கு பின்னால் நாங்கதான் போனோமே தவிர எங்களுக்கு பின்னால் அவங்க வரவில்லை. தங்களின் அதிகாரத்தில் மேலாதிக்கத்தில் அவங்க கவனமாக இருந்தாங்க.

எல்லாத்தின் உடைவுகளுக்கும் மூல காரணங்களை தேடி போனீர்கள் என்றால் புலிகளில் இருந்த பழைய உறுப்பினர்களாக தான் இருப்பார்கள். ஒன்று சோபாசக்தி ஆக இருக்கும் ஒன்று ராகவன் ஆக இருக்கும், ஒன்று நிர்மலாவாக இருக்கும், இவர்கள்தான் பின்புலமாக இருந்திருப்பார்கள். இலக்கியச் சந்திப்புகளின் உடைவுகளை தேடி போனீர்கள் என்றால் முடிவு அங்க தான் இருக்கும். ஆனா என்னதான் உடைவு இருந்தாலும் சோபாசக்தி, ராகவன், நிர்மலா எனைய முன்னாள் புலிகள் இவங்களுக்குள்ள ஒற்றுமை இருக்கும். ஒரே அணியில இருப்பாங்க. யோசித்துப்பாருங்க. புலிகளின் வன்முறைகளுக்கும் கொலைக் கலாச்சாரத்திற்கும் எதிராக புகலிடத்தில் செயற்பட்ட TBC ரேடியோவுக்கு என்ன செய்தார்கள்? உங்க தேசம் இணையத்தளத்தை முடக்க தங்களின்ற குழுவாத கும்பல்களோடு சேர்ந்து கையெழுத்து வேட்டை நடத்தினாங்களே. இதையெல்லாம் எந்த நோக்கத்தில் செய்தாங்க.

தேசம்: புலிகள் என்பதும் எங்களுடைய சமூகத்தின் ஒரு உற்பத்தி தானே. நீங்க சொல்லுற இந்த குணாம்சம் இந்தப் பிரிவிடம் மிகக் கூடுதலாக இருக்கு என்று சொல்லவாறீர்களா?

அசோக்: எனக்கு ஆச்சரியம் என்னவென்றால் இந்தக் குணாம்சம் கொண்டவர்கள்தான் புலிகளிடம் போகிறார்களா அல்லது புலிகளுக்கு ஒரு சிந்தனை முறை இருக்குதானே புலிகளுடைய பயிற்றுவிப்பு கல்வியூட்டல்கள் சிந்தனை முறை இருக்குதானே அது இப்படித்தான் இவர்களை உருவாக்கிறது. தங்களை மீறி யாரும் வரக்கூடாது என்று. ஜனநாயக சக்திகளோ, தங்களை கேள்வி கேட்கின்றவர்களோ தங்கட இருப்புக்கு அது தடையாக இருக்கிறது என்று நினைப்பார்கள். தங்கட இருப்புக்கு ஒரு அமைப்பு சாதகமாக இருக்கும் பட்சத்தில் அதைப் பயன்படுத்திக் கொள்ள நினைப்பார்கள். இல்லாதபட்சத்தில் அதை அழிப்பார்கள். இல்லாட்டி இவ்வளவு ஆரோக்கியமான இலக்கியச் சந்திப்புக்கு கடைசியில் என்ன நடந்தது?

இன்னொன்றையும் நீங்க அவதானிக்கலாம். புலிகள் பலரிடம் இந்த திறமை இருக்கு. எங்கட பலவீனங்களை கண்டு பிடித்து அதற்கு தீனி போடுவாங்க. பலரும் இவங்க பின்னால் அலைவதற்கு இதுவும் ஒருகாரணம். முற்போக்காளர்கள் என்று சொல்லிக் கொள்கிற நாங்க தனிப்பட்ட வாழ்வில் மிகமிக பலவீனமானவங்க. அத அவங்க தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறாங்க. எவ்வளவுதிறமை சாலி அவங்க பாருங்க.

தேசம்: இலக்கிய சந்திப்பு எப்படி இப்படி உடைந்தது ?

அசோக்: இலக்கியச் சந்திப்பின் உருவாக்கம் சிறு சஞ்சிகைகளினுடைய ஆசிரியர்களின் வாசகர்களின் இணைவாக இருந்து ஒரு காலகட்டத்தில் அராஜகங்களுக்கு எதிரான ஒரு வடிவமாக வருது ஜனநாயகத்தையும், அதிகார எதிர்ப்பையும் முன்னிலைப்படுத்திய புகலிட இலக்கியச்சந்திப்பை சார்ந்தவர்கள், விடுதலைப் புலிகளால் புகலிடத்திலும், இலங்கையிலும் இருந்த அச்சுறுத்தலால், விடுதலைப் புலிகளின் எதிர்ப்பாளர்களாக இருந்தது இயல்பாக இருந்தது. அனைத்து அடக்குமுறைகளுக்கும் எதிரான ஒரு இயல்பான அரசியல் அதுக்குள்ள மேலோங்கியிருக்கிறது.

நான் முதலாவது இலக்கிய சந்திப்பில் தொண்ணூற்றி மூன்றாம் ஆண்டு கலந்து கொள்கிறேன். அதுக்குப் பிறகு இரண்டு இலக்கிய சந்திப்பு பாரிசில் நடந்தது. அதை நாங்கள் லக்ஷ்மி, கலைச்செல்வன், புஸ்பராஜா, அசோக் பிரகாஸ், கிருபன், மோகன், உதயன், யோகராஜா நடத்தினோம். நாங்க எல்லா இலக்கிய சந்திப்புக்கும் போவோம். ஜெர்மனியில்தான் அதிகம்தான் நடந்தது. 2009 மே முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் பின்பு நிலைமை நிலமை மாறிப் போய்விட்டது. முள்ளிவாய்க்கால் பிரச்சனைக்குப் பிற்பாடு இலக்கிய சந்திப்பு ஒரு டேர்ன் எடுக்குது. முழுக்க முழுக்க புலிகள் அழிக்கப்பட்டதன் பிற்பாடு பாரிசில் நடந்த இலக்கிய சந்திப்பில் இலங்கை அரசு சார்பான ஒரு போக்கை அவர்கள் எடுக்கிறார்கள். அந்த எடுவைக்கு காரணம் அதுக்குள்ள இருந்த ஒரு சக்திதான். அதுல தலித் முன்னணி முக்கியமான ஆட்கள். அதுல ஷோபா சக்தியும் இருந்தவர். அடுத்தது ராகவன் ஆட்களும் அதுக்குள்ள இருந்தார்கள்.

புலிகள் மீது கடும் விமர்சனம் இருக்கு. முள்ளிவாய்க்கால் தொடர்பாக. பொதுமக்கள் அழிக்கப்பட்டதற்கான அடிப்படைக் காரணம் புலிகளுடைய நடவடிக்கையும் ஒன்று. அது விமர்சிக்கப்பட வேண்டியது. புலிகள் மீது கடும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட வேண்டியது. அதற்காக நீங்கள் பேரினவாத அரசின் ஆதரவு சக்தியாக மாற முடியாது. நான் முள்ளிவாய்க்கால் படுகொலையை ஒரு இனப்படுகொலை என்றுதான் பார்க்கிறேன். அது தொடர்பாகக் கருத்து முரண்பாடு இருக்கலாம். மிக மோசமாக கொத்துக் கொத்தாக மக்கள் படுகொலை செய்யப்பட்டதை மறந்து இலங்கையில் ஜனநாயக சூழல் உருவாகிவிட்டது, ஜனநாயக இடைவெளி ஏற்பட்டுவிட்டது என்று சொல்லி இலங்கைப் பேரினவாத அரசு ஆதரவு நிலை கொண்டு நடத்தும் போது எப்படி எங்களால் ஏற்றுக் கொள்ளமுடியும். எப்படி நாங்கள் கலந்து கொள்ள முடியும்? அப்போ நான் அதில் இருந்து ஒதுங்கிக் கொண்டேன். இலக்கிய சந்திப்பின் பிரதான நோக்கத்தையே குழிதோண்டி புதைத்து விட்டார்கள்.

அதற்கு பிற்பாடு லண்டனில் நடந்த இலக்கிய சந்திப்பில் முரண்பாடு வருகிறது. இலக்கிய சந்திப்பை இலங்கைக்கு கொண்டு செல்வதற்கான முயற்சி நடக்குது. இந்த இலக்கிய சந்திப்பு புகலிடத்திற்காக, அதன் அரசியல் இலக்கிய சமூக வெளிக்காக உருவாக்கப்பட்டது. எனவே, இலங்கைக்கு கொண்டு போக முடியாதென்று என்று பலரும் இதை எதிர்க்கிறாங்க. புகலிட இலக்கியச் சந்திப்பை இலங்கைக்கு கொண்டு போவதற்கான அவசியம், காரணம் என்ன என்ற முக்கியமான கேள்வி எங்களுக்கு எழுகிறது

தேசம்: புகலிடத்திற்காக உருவாக்கப்பட்ட இலக்கிய சந்திப்பை ஏன் இவர்கள் இலங்கைக்கு கொண்டு போக விரும்புகின்றார்கள்?

அசோக்: நல்ல கேள்வி. இவங்க முழுப்பேர்களுமே குறிப்பாக தலித் முண்ணனி, பிள்ளையான் அணி, ராகவனும் அவருடன் சேர்ந்த ஆட்களைப் பார்த்தீர்கள் என்றால், வெறும் இலங்கை அரசு ஆதரவாளர்களாக இருந்தார்களே தவிர தனித்துவ அடையாளங்கள் அற்றவங்க இவங்க. ஆழமான அரசியல் புரிதல்களோ, இலக்கிய ஆற்றலோ அற்றவங்க. இவங்க இலங்கைக்கு, வெறும் இலங்கை அரச விசுவாசத்தோடு தமிழ்ப் பிரதேசங்களுக்கு செல்லமுடியாது. அங்க யாரும் இவர்களை கவனிக்க மாட்டார்கள். அப்ப இவங்களுக்கு அடையாளம், ஒரு அமைப்பு தேவைப்படுகிறது. இலக்கிய சந்திப்புக்கு ஒரு வரலாற்று தடம் பங்களிப்பு இருக்கிறது. இலக்கிய சந்திப்பு பற்றி இலங்கையில் பெரிய எதிர்பார்ப்பு உண்டு. அப்ப இந்த இலக்கிய சத்திப்பினுடாக, அங்கு தங்கட அடையாளத்தை, இருத்தலை நிறுவ முயலுறாங்க இதுதான் நடந்தது.

தேசம்: இதை உங்களைப் போன்றவர்கள் எதிர்க்க வில்லையா?

அசோக்: இவர்கள் இலங்கை அரசு ஆதரவு நிலைப்பாடு எடுத்ததன் பின் இந்த இலக்கிய சந்திப்பில் கலந்து கொள்வதை நான் விட்டுட்டன். ஆனா இவர்களின் இந்த செயற்பாட்டிக்கு எதிராக கடும் கண்டனங்களை எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறன். நான் சிறிரங்கன், நாவலன் பலர் இதுபற்றி எழுதியுள்ளோம்.

இலங்கைக்கு கொண்டு போவதற்கு இவங்க முடிவு செய்த லண்டன் இலக்கிய சந்திப்பில் பலர் இதனை எதிர்த்திருக்காங்க. கிருஸ்ணராஜா, லட்சுமி, சுசிந்திரன், றஞ்சி, சிவலிங்கம் தோழர் போன்றவங்க. புலம்பெயர் இலக்கியச் சந்திப்பு இது. நீங்கள் நாட்டுக்கு கொண்டு போக இயலாது என்று. அதை மீறித்தான் அவங்க அங்கு கொண்டு போகிறார்கள். அப்போ இந்த ஜனநாயகப் பண்பை எப்பவும் ஏற்கவில்லை தானே இவர்கள். நாங்கள் எதற்காக ஒரு அமைப்பை உருவாக்கினோம், எதனை நோக்கி உருவாக்கினோம் என்ற அடிப்படை அம்சங்கள் எல்லாவற்றையும் இல்லாமலாக்கிப்போட்டு, நீங்கள் உங்களுடைய சுயநலத்துக்காக, உங்களுடைய அரசியலுக்காக கொண்டு போகின்ற போக்கு இருக்குதானே அது எனக்கு பெரிய அதிருப்தியாக இருந்தது.

இந்த ஜனநாயகத் தன்மை கொண்ட இலக்கிய சந்திப்பை தங்களின்ற அதிகார மேலாண்மை இருத்தலுக்காக பயகன்படுத்திக் கொண்ட இந்த நபர்களை பார்த்தால், இவங்களின்ற இந்த இலக்கிய சந்திப்பு தொடர்பு இடைக்காலத்தில்தான் ஏற்பட்டது. ஆனால் இந்த குறுகிய காலத்தில் தங்களுக்கேற்ற குழுவாதத்தை முரண்பாட்டை உருவாக்கி இலக்கிய சந்திப்பை தங்கள் உடமையாக்கிக் கொண்டாங்க. இதனைத்தான் நான் புலிக்குணம் என்றது. இதுதான் எனக்கு இருந்த விமர்சனமே தவிர தனிப்பட்ட ரீதியில் இவங்களோட எந்த முரண்பாடுகளும் எனக்கில்லை. சந்திக்கும்போது கதைப்பதுண்டு. அதேநேரம் கருத்துக்களும் விமர்சனங்களும் எனக்கு இருக்கும். இங்க ஒன்றை பதிவு செய்யணும். இவங்கட முரண்பாட்டிக்கு பிறகு இவங்க வெளியிட்ட எக்சில் சஞ்சிகையின் அட்டையில் லக்சுமியைபற்றி மிக மோசமாக தாக்கி எழுதி இருந்தாங்க. ஒரு இலக்கிய சஞ்சிகையின் அட்டையில் ஒருவரை தாக்கி மோசமாக எழுதி வெளியிட்ட பெருமை இவங்களைத்தான் சாரும்.

 

“இலங்கையின் நிலையை கண்டு கண் கலங்கினேன்.” – இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்

மருந்துத் தட்டுப்பாடு காரணமாக பேராதனை போதனா வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இந்திய உதவியை வழங்கும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார்.

பேராதனை போதனா வைத்தியசாலையில் திட்டமிடப்பட்ட அனைத்து சத்திரசிகிச்சைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இன்று முற்பகல் தெரிவிக்கப்பட்டது.

இதன்படி, அத்தியாவசிய மருந்துகள் மற்றும் நுகர்வுப் பொருட்களின் பற்றாக்குறை காரணமாக அறுவை சிகிச்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அவசர சத்திரசிகிச்சைகள் மாத்திரமே தற்போது இடம்பெற்று வருவதாக பேராதனை வைத்தியசாலை வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடம் இது தொடர்பில் ஆராயுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

“இந்தச் செய்தியைக் கண்டு கலங்கினேன். இந்தியா எவ்வாறு உதவ முடியும் என்பதைத் தொடர்புகொண்டு விவாதிக்குமாறு உயர் ஆணையர் பாக்லேயிடம் கேட்டுக்கொள்கிறேன்,” என ஜெய்சங்கர் இன்று ட்வீட் செய்துள்ளார்.

 

பங்களாதேஷிடம் கடனுதவி கோரியுள்ள இலங்கை அரசாங்கம் !

இலங்கை அரசாங்கம் பங்களாதேஷிடம் கடனுதவி கோரியுள்ளது.

250 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியே கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச குத்துச்சண்டை போட்டி – இலங்கைக்கு தங்கம் வென்று கொடுத்த முல்லைத்தீவின் யோகராசா நிதர்சனா !

INTERNATIONAL BRAVE BOXING COUNCIL நடாத்தும் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இலங்கை அணிவீரர்கள் சார்பாக வவுனியா மாவட்டத்தை சேர்ந்த S.சிறீதர்சன், T.நாகராஜா ஆகிய இரண்டு வீரர்களும், முல்லைத்தீவை சேர்ந்த E.கிருஸ்ணவேணி, Y.நிதர்சனா ஆகிய இரண்டு வீராங்கனைகளும் பங்குபற்றினர்

ஆசிரியர் நந்தகுமார் அவர்களிடம் பயிற்சி பெற்ற குறித்த நான்கு மாணவர்களில் மூவர் தங்கப் பதக்கத்தையும் ஒருவர் வெள்ளி பதக்கத்தையும் பெற்றுள்ளனர்.

அந்த வகையில் போட்டியில் பங்குபற்றிய முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு கைவேலி மருதமடு பகுதியில் வசிக்கும் யோகராசா நிதர்சனா என்ற தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்துவரும் யுவதியும் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்து முல்லைத்தீவு மாவட்டத்திற்கு நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

யாழ்ப்பாணத்தின் மூன்று தீவுகள் இந்தியாவிடம் – இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட 6 உடன்படிக்கைகள் !

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கரின் இலங்கை விஜயத்தின் போது இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான ஒப்பந்தங்கள் நேற்று (28) பிற்பகல் வெளிவிவகார அமைச்சில் கைச்சாத்திடப்பட்டன.

உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத்தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோருக்கு இடையில் நேற்று நடைபெற்றது.

இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இந்திய மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் உறவுவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவிக்கின்றது.

 

குறித்த உடன்படிக்கைகள் வருமாறு,

  • காலி மாவட்டத்திலுள்ள 200 பாடசாலைகளுக்கு நவீன கணினி கட்டமைப்பு மற்றும் ஸ்மார்ட் பலகைகளை வழங்கும் வகையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை.
  • இலங்கையில் விசேட இலத்திரனியல் அடையாளஅட்டை திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை.
  • சமுத்திர பாதுகாப்பு தொடர்பு மத்திய நிலையங்களை ஸ்தாபிப்பதற்கு மற்றுமொரு புரிந்துணர்வு உடன்படிக்கை.
  • இலங்கையிலுள்ள மீனவத் துறைமுகங்களை அபிவிருத்தி செய்யும் வகையிலான உடன்படிக்கை.
  • சுஷ்மா சுவராஜ் வெளிநாட்டு சேவை நிறுவனம் மற்றும் கட்டுநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனம் ஆகியவற்றை ஸ்தாபிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை.
  • யாழ்ப்பாணத்திலுள்ள மூன்று தீவுகளில் ஐபிரிட் மின்சார திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான புரிந்துணர்வு போன்ற உடன்படிக்கைகள் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிடையே கைச்சாத்திட்டுள்ளன.

“நாம் தோற்க மாட்டோம்.”- பிரதமர் மஹிந்த நம்பிக்கை !

அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,
‘நாட்டில் பிரச்சினைகள் இருந்த போதிலும், அவற்றை விரைவில் தீர்க்க அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. அரசாங்கம் மீது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை. எனது பதவிக்காலம் முடியும் வரை நான் நாட்டின் பிரதமராக நீடிப்பேன். அடுத்த தேர்தலுக்குப் பிறகும் நாங்கள் வெற்றி பெறுவோம்.
எனக்கு இன்னும் சிறிது காலம் இருக்கிறது. உடனே ஓய்வு பெற மாட்டேன். தேசிய அரசாங்கம் தொடர்பில் வெளியாகும் ஊகங்கள் அனைத்தும் வதந்தி.
தற்போதைய நெருக்கடிகளான பொருளாதாரம், மின்சாரம், எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகள் அனைத்தையும் அரசாங்கம் விரைவில் தீர்க்கும்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க டொலர் 450 ரூபா வரை செல்லும் – யாராலும் தடுக்க முடியாது என்கிறார் சிரேஷ்ட பேராசிரியர் அமிந்த மெத்சில பெரேரா !

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியால் அமெரிக்க டொலர் 450 ரூபாவை நெருங்குவதைத் தடுக்க முடியாது என இலங்கை வடமேல் பல்கலைக்கழகத்தின் வர்த்தக கற்கைகள் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் அமிந்த மெத்சில பெரேரா தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்கான காரணத்தையும் பிரச்சினையின் அளவையும் அரசாங்கம் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார்.

அரசாங்கத்தின் சில தவறான முடிவுகளால் நிதி ஒழுக்கம் சீர்குலைந்தது மட்டுமல்லாமல், பட்ஜெட்டில் அரசாங்க வருவாயும் 25% குறைக்கப்பட்டது.

இதை முதலில் பார்த்தபோது செலவு பக்கத்தைக் குறைக்க வேண்டும் என்று சொன்னோம். எனினும் அரசாங்கம் அரசியல் பிரசாரத்துடன் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்தது. வருமானத்துக்குப் பதிலாக செலவுகள் அதிகரித்த போது கடன் வாங்க வேண்டியதாயிற்று. ஆனால் தற்போது கடன் தராத நிலை ஏற்பட்டுள்ளது. இலகுவாக அரசாங்கம் பணத்தை அச்சடிப்பதைத் தொடர்ந்தது.

இதனால் டொலர் மதிப்பு உயர்கிறது. இந்த அரசாங்கம் வந்ததும் 180 ரூபாவாக இருந்த டொலரைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சித்தது. டொலரை நெகிழ்வாக வைத்திருக்கச் சொன்னோம். ஒன்றரை வருடங்களுக்கு முன்பு சொன்னதைக் கேட்டிருந்தால், இன்று 230 ரூபாவுடன் டொலரை நிறுத்த வாய்ப்பு கிடைத்திருக்கும் என்றார்.

தூக்கிட முயன்ற மனைவியை கண்டு கணவன் தூக்கிட்டு தற்கொலை !

ஏறாவூர் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட மயிலம்பாவெளி பிரதேசத்தில் மனைவி தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்ததனை கண்டு சந்திரகுமார் கோபனா (28) என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் இருவரும் திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட குடும்ப தகராற்றினால் வீட்டின் அறையினுள் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதனை கண்ட கணவன் மனைவியை தூக்கில் இருந்து மீட்டெடுத்து அதே தூக்குக்கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் இச்சபவத்தில் மனைவியான கணேசன் பிரதீபா (20) என்பவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற ஏறாவூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நசீர் சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

“வெகு விரைவில் வடக்கு கிழக்கு மாகாண மக்களின் அடையாளம் இல்லாமல் போய்விடும்.” – சீ.வி.விக்னேஸ்வரன்

தற்போது அரசாங்கம் செல்லும் நிலையைப் பார்த்தால் வெகு விரைவிலே வடக்கு கிழக்கு மாகாண மக்களின் அடையாளம் இல்லாமல் போய்விடும். பல இடங்களிலும் அந்த அடையாளங்களை நீக்குவதற்கான நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகின்றன என யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் வடமாகாண முதலமைச்சருமான சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு தாளங்குடா பிரதான வீதியில் வெண்மதி கைத்தறி ஆடை உற்பத்தி நிலையத்தைத் திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எங்களுக்குள் ஒரு பொதுவான கருத்து இருக்கின்றது. வடக்கு கிழக்கு மக்கள் வேற்றுமைப்படக் கூடாது தங்களுக்குள் ஒருமித்து செயலாற்ற வேண்டும். நாங்கள் வடகிழக்குத் தமிழ் மக்கள் என்ற ரீதியில் எங்களுக்குள் அந்நியோன்யம் வரவேண்டும் என்ற வகையில் வட மாகாண மக்களுக்கு எவ்வாறான செயன்முறைகளைச் செயற்படுத்தி வருகின்றோமோ அதேபோல் கிழக்கு மாகாண உறவுகளுக்கும் எம்மாலான செயற்திட்டங்களை வகுத்து செயற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்திலே வெளிநாட்டு உறவுகளின் பண உதவியோடு சில நடவடிக்கைகைளை மேற்கொண்டு வருகின்றோம்.
இந்தச் செயற்பாடு அரசியல் ரீதியானதல்ல, தமிழ் மக்கள் சார்பானது. எமது மக்களின் வருங்காலம் பற்றிய சிந்தனையின் வாயிலாக ஏற்பட்ட நிகழ்வு. ஏனெனில் அரசியல் என்று வரும் போது எமக்கான வாக்காளர்கள் வட மாகாணத்தில் தான் இருக்கின்றார்கள். ஆனால் நாங்கள் வடக்கு என்று நில்லாது எமது மக்கள் எங்கிருந்தாலும் தமிழ் மக்கள் என்ற ரீதியில் எங்களிடம் ஒரு உறவுமுறை இருக்கின்றது. அதன் அடிப்படையில் நாங்கள் சில நடவடிக்கைளை எடுக்க வேண்டி நிலை வந்திருக்கிறது.
தற்போது அரசாங்கம் செல்லும் நிலையைப் பார்த்தால் வெகு விரைவிலே வடக்கு கிழக்கு மாகாண மக்களின் அடையாளம் இல்லாமல் போய்விடும். பல இடங்களிலும் அந்த அடையாளங்களை நீக்குவதற்கான நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகின்றன. பௌத்த வணக்கஸ்த்தலங்கள், எமக்கு அனுப்பப்படும் கடிதங்கள் சிங்கள மொழியில் மாத்திரம் அனுப்பப்படுத்தல், வடக்கு கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் பெருமளவில் குவிக்கப்பட்டிருக்கின்றார்கள். இவற்றையெல்லாம் பார்க்கும் போது வருங்காலத்திலே வடக்கு கிழக்கு மக்களின் நிலை எவ்வாறு இருக்கப் போகின்றது என்ற பயம் பீடித்திருக்கின்றது. அதே நேரம் இங்கிருக்கும் தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள் சம்மந்தமாகவும் எங்களுக்குள் பலவிதமான பிரச்சனை இருப்பதை நாங்கள் உணர்கின்றோம்.
இவ்வாறான பிரச்சனைகளில் இருந்து எமது மக்களை நாங்கள் காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் எமது செயற்திட்டங்கள் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தினை நாங்கள் பலப்படுத்த வேண்டும். அந்த அவசியத்தின் நிமித்தம் தான் இவ்வாறான செயற்திட்டங்களை வகுத்து அதற்கான நிதிகளைப் பெற்ற எமது மக்களுக்குக் கொடுத்து வருகின்றோம்.
இவ்வாறான சுயதொழில், கைத்தொழில் நடவடிக்கைகளில் எமது இளம் சமுதாயம் ஈடுபடுவதற்கான நடவடிக்களையும் நாங்கள் மேற்கொள்ள வேண்டும். அதனைச் சிறிது சிறிதாக ஆரம்பிக்க வேண்டும். வருங்காலத்தில் ஒவ்வொரு வீடுகளிலும் கைத்தொழில் மையங்கள் இருக்கக் கூடிய விதத்தில் நிலைமையை உருவாக்க வேண்டும்.
எமது கட்சியைப் பெருத்தளவில் தன்னாட்சி, தட்சார்பு, தன்நிறைவு எனும் முக்கிய மூன்று குறிக்கோள்கள் இருக்கின்றன. தன்னாட்சி என்பது அசியல் ரீதியானது. ஆனால் எமது குடும்பங்கள் எமது வாழ்க்கை என்ற ரீதியில் தட்சார்பினை நாங்கள் நாட வேண்டும். நாங்கள் இரண்டு வருடங்களுக்கு முன்னர் கூறிய விடயங்கள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தற்போது மரக்கறிகளிலன விலை மூன்று நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. அப்போது வீட்டுத் தோட்டம் அமைக்க எமது வடமாகாண மக்களுக்கு அறிவறுத்தியிருந்தோம். இப்படியொரு நிலை வரும் என்று நினைக்கவில்லை ஆனால் தமிழ் மக்கள் தங்களைத் தாமே பாதுகாத்துக் கொள்ளும் தட்சார்பு நிலையினை அடைய வேண்டும் என்பதற்காகவே நாங்கள் சொல்லியிருந்தோம்.
தற்போது வீட்டுத்தோட்ட செயற்பாடு பல இடங்களிலும் ஆரம்பிக்கப்படுகின்றன. அதே போன்று கிழக்கு மாகாணத்திலும் இவ்வாறான கைத்தறி செயற்பாட்டினை விரிவுபடுத்த வேண்டும். இதன் மூலம் எமது மக்கள் தங்களின் தேவைகளையாவது பூர்த்தி செய்யக் கூடிய நிலைமை உருவாகும் அதற்காகத் தான் எமது வெளிநாட்டு உறவுகள் ஊடாக நன்மைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக நாங்கள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்.
எங்களின் விஜயத்தின் போது எமது மக்கள் பல கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றார்கள். அதனை முடிந்தவரை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். நாங்கள் அரசாங்கமும் அல்ல, இந்த மாகாணத்திற்கு உரியவர்களும் அல்ல. ஆனால் கிழக்கு மாகாணம் என்பது எங்களுக்கு பிற மாகாணமோ, அந்நிய மகாணமோ அல்ல. தமிழ் மக்களைக் கொண்டிருக்கும் இந்த மாகாணத்தின் விடிவு இந்த மாகாணத்தின் நன்மை தீமைகளில் நாங்களும் பங்குபற்ற வேண்டிய கடமை எங்கள் எல்லோருக்கும் இருக்கின்றது. அந்த நிலையிலே சிந்தித்து எமது மக்களுக்குரிய சுயதொழில் நடவடிக்கை முயற்சிகளுக்கு எங்களால் இயலுமான உதவிகளைச் செய்வோம்.
அதற்கேற்றவாறு எமது மக்களும் ஒவ்வொரு விடயங்களிலும் தட்சார்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்க வேண்டும். எந்தவிதத்திலாவது எமது கல்வி நிலை மேம்பட வேண்டிய ஒரு அவசியம் இருக்கின்றது. முக்கியமாகத் தமிழ் பெண்கள் கல்வி நிலையில் மிகவும் மேம்பட வேண்டி அத்தியாவசியம் இருக்கின்றது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு நல்ல கல்வி நிலை இருந்தால் அந்த சமூகத்திற்கே ஒரு நல்ல நிலை கிடைக்கும். எனவே பெண் கல்வி மிகவும் முக்கியமானதொன்று.
எனவே இவ்வாறான உதவிகள்செய்வதற்கு நாங்கள் காத்துக்கொண்டிருக்கின்றோம். மக்களும் எங்களிடம்பெறும் உதவிகளை நல்ல விதத்திலே செயற்படுத்தி அனைவருக்கும் நன்மையைப் பெற்றுத் தரக் கூடிய விதத்திலே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.