10

10

இறந்த மகனின் உடலை எடுக்க லஞ்சம் கேட்ட அரசு மருத்துவமனை – பிச்சை எடுத்த தந்தை!

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் இறந்து போன மகனின் உடலை எடுத்துச் செல்ல அரசு மருத்துவமனை பணம் கேட்டதால் பிச்சை எடுக்கும் தந்தையின் அதிர்ச்சி காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சமஸ்டிபூரைச் சேர்ந்தவர் மகேஷ் தாக்குர். இவரது மகன் கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போனதாக கூறப்பட்டது.
இந்நிலையில், சதார் அரசு மருத்துவமனையில் மகனின் உடல் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

உடலை வாங்க தனது மனைவியுடன் அவர் சென்றுள்ளார். ஆனால், அங்கிருந்த ஊழியர்கள் உடலை தர வேண்டுமானால் 50 ஆயிரம் ரூபாய் கேட்டதாக கூறப்படுகின்றது.

இதனால் வேதனையடைந்த தம்பதி இலஞ்சம் கொடுக்க தெரு தெருவாக பிச்சை எடுத்துள்ளனர். இதனை அருகில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். இந்த அதிர்ச்சி காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தங்கம் தோண்ட முற்பட்ட 7 பேர் யாழில் கைது !

யாழ்ப்பாணம் – கோப்பாய் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட இருபாலையில் வீடொன்றில் தங்கம் புதைக்கப்பட்டிருப்பதாக தோண்ட முற்பட்ட 7 பேர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீட்டு உரிமையாளர் மற்றும் தென்னிலங்கையைச் சேர்ந்த 6 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வீட்டின் வளாகத்தில் பல கோடி ரூபாய் பெறுமதியான தங்கத் தகடு புதைத்து வைத்துள்ளதாகத் தெரிவித்து, அதனைத் தோண்டி எடுக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடமிருந்து வெடிமருந்து மற்றும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மின் பயன்பாடு அற்ற டெட்டினேற்றர்கள், மின் டெட்டினேற்றர்கள், யூரியா, யூரியாவை வெடிமருந்தாக மாற்றும் ஜெல், கொன்கிறீட் உடைக்கும் உபகரணங்கள் என்பன அவற்றில் அடங்குகின்றன.

பதுளை, மகரகம, அநுராதபுரம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 6 சந்தேக நபர்களும் புதையல் தோண்டும் பல்வேறு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் ஏழு பேரும் விசாரணைகளின் பின் கோப்பாய் காவல் நிலையத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.

1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கையிருப்பில் – அத்தியாவசிய பொருள் இறக்குமதியில் சிக்கல் !

இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்புகள் கடந்த மாதத்தில் அதிகரித்திருந்தாலும் இதனால் எரிபொருள், எரிவாயு மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கான வெளிநாட்டு கையிருப்பு போதுமானதாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களே கையிருப்பில் மிஞ்சி உள்ளதாகவும் இதனால் உள்நாட்டு அந்நியச் செலாவணி சந்தைகளுக்கு எந்த விதமான ஸ்திரத்தன்மையையும் காணப்படவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.

மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட அண்மைய தரவுகளின்படி, ஏப்ரல் மாதத்தில் ஆயிரத்து 812 மில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்ட உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் மே மாதத்தில் ஆயிரத்து 920 அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ளது. இதன் பகுதிகளில் ஒன்றான வெளிநாட்டு நாணய இருப்புக்கள், ஏப்ரல் மாதத்தில் ஆயிரத்து 602 மில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்டதுடன் மே மாதத்தில் ஆயிரத்து 805 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் ஏனைய உறுப்பு பகுதிகளான சிறப்பு வரைதல் உரிமைகள் 115 மில்லியன் அமெரிக்க டொலரில் இருந்து 21 மில்லியன் அமெரிக்க டொலராக சரிவடைந்துள்ளது. அதே நேரத்தில் தங்க கையிருப்பு 28 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது . இரண்டு மாதங்களுக்கு இடையில் 29 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ளது.

வெளிநாட்டு கையிருப்பு விகிதம் மே 13 முதல் இந்த வாரம் வரையில் அதிகரித்துள்ளதை மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் வெளிநாட்டில் இருந்து அனுப்பிய பணம், டொலர்களை மாறியதில் இருந்து பெறப்பட்ட வருமானம், திறந்த கணக்குகள் மீதான கட்டுப்பாட்டு வழிகாட்டுதல் மூலம் பெறப்பட்ட வருமானம் மூலமம் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரித்துள்ளது.

எவ்வாறாயினும் பொதுமக்கள் வரிசையில் நிற்காமல் தமது அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள மேலதிகமாக 6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு வருமானங்கள் இன்னும் தேவைப் படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

குவியும் மக்கள் – தினமும் 2500 கடவுச்சீட்டுக்கள் விநியோகம் !

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கை நாளாந்தம் 100 வீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் (8) மாத்திரம் சுமார் 2,500 கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் பியூமி பண்டார அறிவித்துள்ளார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் முன்னர் ஒரு நாளைக்கு 1,200 கடவுச்சீட்டுகளை மாத்திரம் வழங்கியது. தற்போது கடந்த இரண்டு வாரங்களாக நாளொன்றுக்கு சுமார் 2,500 கடவுச்சீட்டுகளை வழங்கி வருகின்றது. இருந்த போதிலும் ஒரு நாளைக்கு சுமார் 1,000 பேர் திருப்பி அனுப்ப படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் குறித்த திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யாமல் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக வருகின்றமையே இந்த நிலைக்குக் காரணம். இதனால் திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யாமல் மக்கள் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வரவேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் காலை 6.15 க்கு ஆரம்பித்து இரவு 10.00 மணி வரை கடவுச்சீட்டுகளை விநியோகித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அறுவடைக்கு எரிபொருள் பெற்றுத்தாருங்கள் – கிளிநொச்சி விவசாயிகள் கவலை !

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புளியம்பொக்கனை நெத்தலியாற்றுப் பகுதியில் கழிவு நீரைக் கொண்டு தண்ணீர் பம்பிமூலம்150 ஏக்கருக்கும் மேற்பட்ட பயிற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கமநல  சேவைகள் திணைக்களம் ஊடாக பெறப்பட்ட சேதன உரத்தை கொண்டு பயிற்செய்கை மேற்கொள்ளப்பட்டு தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.

இந்த நிலையில் அறுவடை மேற்கொள்வதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னரே எரிபொருளை பெறுவதற்காக வரிசையில் வாகனம் நிறுத்தப்பட்டும் எரிபொருள் பெற முடியாத நிலை காணப்படுவதாக விவசாயிகள் கவலை வெளியிடுகின்றனர்.

இன்னும்  சிலநாட்களுக்குள்  எரிபொருள் கிடைக்கப்பெறாவிட்டால் நெற்கதிர்கள் சேதமடைந்து போய்விடும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

எனவே தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு எமது கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எமக்கு எரிபொருளை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

 

ராஜபக்ஷக்கள் ஏன் தோற்றார்கள் ..? – ஜே.வி.பி விளக்கம்!

“அப்பாவியின் உயிரை பறித்துவிட்டார்கள். போராட்டக்காரர்களின் கைகளில் இரத்தம் படிந்துள்ளது.” – மகிந்த ஆவேசம் !

கோட்டா கோ கம போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் கைகளில் இரத்தம் படிந்துள்ளதாக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.

கடந்த மே மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மதத் தலைவர்களாலும் தடுக்க முடியவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் படுகொலை தொடர்பான அனுதாப பிரேரணை மீதான உரையின்போதே அவர் இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்தப் போராட்டத்தை அமைதியானதாக கருத முடியாது எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கைகளில் இரத்தம் இருப்பதாகவும் முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.

மறைந்த அமரகீர்த்தி அத்துகோரள கோட்டா கோ கம போராட்டத்தில் எவ்வித தவறும் செய்யவில்லை என்றும் அப்பாவியான ஒருவரின் உயிரைப் பறித்த இந்தப் போராட்டம் அஹிம்சையான போராட்டமல்ல என்றும் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் மறைந்த அமரகீர்த்தி அத்துகோரலவின் படுகொலையானது ஜனநாயக ரீதியில் வாழ விரும்பும் மக்கள் மத்தியில் அச்சத்தை தூண்டும் ஒன்றாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மே 09ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின்போது கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வடக்கில் தலைதூக்கும் வன்முறைக்கலாச்சாரம் – மன்னாரில் வாள்வெட்டு – இருவர் உயிரிழப்பு !

மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் இன்று(10) காலை மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் வாள்வெட்டில் முடிவடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன. இதன்போது உயிரிழந்த இருவரும் உயிலங்குளம் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

அத்துடன், படுகாயமடைந்த நால்வர் மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் இதுதொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

நேற்றைய தினம் மல்லாவி பகுதியில் இளைஞர் குழு ஒன்றுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முரண்பாடாக மாறி இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

நாளுக்கு நாள் வடக்கு பகுதியில் போதைப்பொருள் வர்த்தகமும் – இளைஞர் குழுக்களிடையேயான வாள்வெட்டு சம்பவங்களும் அதிகரித்த வண்ணமே உள்ளன. பொலிசார் இவை தொடர்பில் சில கைதுகள் மேற்கொள்கின்ற போதிலும் கூட இந்த பிரச்சினைகளுக்கு முறையான எந்த ஒரு முடிவும் ஏற்படவில்லை. இது தொடர்பில் அச்சம் ஏற்படுவதற்கான காரணம் வாள்வெட்டு – இதனோடு தொடர்புடைய பிரச்சினைகளில் அதிகம் இளைஞர்களும் – 18வயதை தொட்ட சிறுவர்களுமே அதிகம் தொடர்புபடுவதாகும்.

 

இவற்றை தடுக்க வடக்கு மாகாண பொலிஸ்பிரிவும் – ஆளுநர் குழுவும் என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பது கூட தெரியவில்லை.

விரைந்து இந்த வன்முறை கலாச்சாரத்துக்கு முடிவு எட்டப்படாவிட்டால் மிகபாரிய அளவிலான வன்முறைக்கலாச்சாரம் மிக்க அடுத்த  ஒரு சமுதாயம் ஒன்று நம் கண் முன்னே உருவாவதை யாராலும் தடுக்க முடியாது.