20

20

5000 ரூபா திருட்டு தொடர்பான பிரச்சினை – மரணத்தில் முடிந்த சோகம் !

“உணவு பஞ்சம் ஏற்படும் போது எம் மக்களுக்கு உதவி செய்வதற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் தயாராக இருக்க வேண்டும்.”- சாணக்கியன்

இலங்கையில் எதிர்வரும் எட்டாம் மாதமளவில் உணவு பஞ்சம் ஏற்படும் போது எம் மக்களுக்கு உதவி செய்வதற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் தயாராக இருக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

சுவிஸில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

 

நாங்கள் ஜனாதிபதியினை சந்தித்த போது, வடக்கு- கிழக்கில் பொருளாதார அபிவிருத்தியினை செய்வதற்காக புலம் தமிழர்கள் உதவி செய்வார்கள் என அவரிடம் மிக முக்கியமாக தெரிவித்தோம்.
ஆனால் அதற்கு நீங்கள் எங்களுக்கு அரசியல் தீர்வினை தர வேண்டும் என கூறியிருக்கின்றோம்.

இந்த விடயத்தில் அரசாங்கம் மௌனம் காக்கின்றது. எனினும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள அரசாங்கத்தினை காப்பாற்ற நாம் முயற்சிப்பதாக சிலர் சமூக வலைத்தளங்களில் விமர்சித்தனர்.

2009ஆம் ஆண்டு இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியும், அதற்கு முந்தைய காலப்பகுதியிலும் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த விடயம், காணி அபகரிப்பு போன்ற விடயங்கள் தமிழ் மக்களுக்கு முக்கியமான பிரச்சினையாகக் காணப்படுகின்றன.

நாங்கள் தொடர்ச்சியாக ஜனாதிபதியினை சந்தித்து பேசுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், காணி விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேசி வருகின்றோம்.

குறிப்பாக பொத்தவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டத்தின் போது நாங்கள் முன்வைத்திருந்த கோரிக்கைகளில் இவையும் உள்ளடங்குகின்றன.

பலரும் கேட்கின்றார்கள் குருந்தூர் மலை விவகாரம் குறித்து ஏன் சாணக்கியன் எதுவும் பேசாமல் மௌனமாக இருக்கின்றார் என்று. நாங்கள் குருந்தூர் மலையினை சென்று பார்வையிட்டுள்ளோம். இந்த விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனினும் நீதிமன்றத்தின் உத்தரவினையும் மீறி ஜனாதிபதி தனக்குள்ள அதிகாரத்தினை பயன்படுத்தி இவ்வாறான விடயங்களை செய்து வருகின்றார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் கிழக்கு மாகாணத்திலுள்ள பல பகுதிகள் அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்தில் எங்கெல்லாம் காணி அபகரிப்பிற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றனவோ அங்கெல்லாம் நான் இருந்திருக்கின்றேன். அவற்றினை எதிர்த்திருக்கின்றேன். இனினும் இருப்பேன்.

எங்களுடைய அரசியல் தீர்வின் ஊடாகவே இவற்றினை மாற்றியமைக்க முடியும். எங்களுடைய கைகளில் எங்களுடைய அரசியல் அதிகாரம் இருந்தால் நாங்கள் இதனை மாற்றியமைக்கலாம்.

இது நீண்டகால போராட்டமாக இருகின்றது. இலங்கை வரலாற்றில் இதுதான் எங்களுடைய காலமாக இருக்கலாம்.

எங்களது எதிர்காலம் எப்படியாக இருக்க வேண்டும் என சொன்னால் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் ஒன்றாக வாழ வேண்டும்.

முஸ்லீம்களிடமிருந்து கிழக்கினை மீட்க வேண்டும் என கூறி நாடாளுமன்றம் வருகை தந்த பிள்ளையானும், வியாழேந்திரனும், நஸீர் அஹமட்டுன் இணைந்து தற்போது பணியாற்றுகின்றனர்.

எனவே அரசியல் இலாபங்களுக்காக வாய்களில் வந்த அனைத்தினையும் சொல்லக் கூடாது. நாம் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து வாழ வேண்டும். அப்படி செய்யாவிட்டால் கிழக்கு மாகாணம் தமிழ் மக்களுக்கும் இருக்காது முஸ்லீம் மக்களுக்கும் இருக்காது- எனக் குறிப்பிட்டுள்ளார்.

தம்பி நாட்டை மீட்டெடுப்பார் – மகிந்த பிறந்தநாள் வாழ்த்து!

நெருக்கடியில் இருந்து ஜனாதிபதி நாட்டை மீட்டெடுப்பார் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்துள்ள அவர், “ஜனாதிபதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் தனது வாழ்வின் மற்றொரு வருடத்தில் அடியெடுத்து வைக்கும்போது அனைத்திற்கும் நல்வாழ்த்துக்கள். அவரது இருப்பு எப்போதும் பலத்தின் ஆதாரமாக இருந்து வருகிறது.

மேலும் நெருக்கடியிலிருந்து இந்த நாட்டை அவர் மீட்டெடுப்பார் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது”  என பதிவிட்டுள்ளார்.

பிரதமர் ரணில் பதவி விலக வேண்டும் – வாசுதேவ வலியுறுத்தல் !

தற்போதைய அரசாங்கம் இருக்கும் வரை சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தற்போதைய பிரதமர் பதவியில் இருந்து விலகி அனைத்து கட்சி அரசாங்கத்திற்கு புதிய பிரதமரை நியமிக்க வேண்டும் எனவும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

சுமார் 3 கிலோமீட்டர் தாண்டியும் நீண்ட பெட்ரோலுக்கான வரிசை !

நாட்டில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவும் நிலையில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோலை பெற்றுக்கொள்ள ஓட்டமாவடி பிரதேசத்தையும் தாண்டி வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த எரிபொருள் நிலையத்தில் நேற்று பெற்றோல் விநியோகிக்கப்படும் எனும் தகவலை அறிந்து கொண்ட பொதுமக்கள் நேற்று முன்தினம் மாலை முதல் வரிசையில் காத்து நிற்கின்றனர்.

இந்த வரிசை வாழைச்சேனையிலிருந்து சுமார் மூன்று கிலோ மீற்றர் தூரம் தாண்டி ஓட்டமாவடி வரை நீண்டு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடரும் எரிபொருள் தட்டுப்பாடு – 850,000 முச்சக்கர வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக 850,000 தொழில்முறை முச்சக்கரவண்டி சாரதிகளின் வாழ்வாதாரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருள் நெருக்கடிக்கு உடனடியாக தீர்வு வழங்கப்படாவிட்டால் மூன்று மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என அகில இலங்கை முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்தார்.

போதிய எரிபொருள் இன்றி அவர்களால் தொழிலில் தொடர முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதிகள் வாகன இலக்கத் தகடுகளின் இலக்கங்களின் அடிப்படையில் வாரத்தின் குறிப்பிட்ட நாட்களில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் முறையை அறிமுகப்படுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று தெரிவித்தார்.

தற்போது தொழில்துறையில் அங்கம் வகிக்கும் நபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே இதுபோன்ற முன்மொழிவுகளை செயற்படுத்த வேண்டும்.

நடைமுறை திட்டங்களுக்கு தங்கள் ஆதரவை வழங்குவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

நாளொன்றுக்கு ஐந்து லீற்றர் எரிபொருளை வழங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ள வேலைத்திட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், கிராம சேவை உத்தியோகத்தர்கள் ஊடாக முச்சக்கர வண்டி சாரதிகளை இனங்கண்டு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அல்லது இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்கள் ஊடாக அவர்களுக்கு எரிபொருளை வழங்க முடியும் என்றார்.

அதிகாரிகள் அரச அமைப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு, கடுமையான திட்டத்தை விரைவில் செயற்படுத்த வேண்டும்.

ஒரு அமர்வை மட்டும் இயக்குவதற்கு 2,000 ரூபா பெற்றோலைப் பெறுவதற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் எரிபொருள் வரிசையில் காத்திருப்பதும் இன்னும் மூன்று நாட்களுக்கு வரிசையில் திரும்புவதும் மக்கள் முச்சக்கர வண்டி வர்த்தகத்தை கைவிடுவதற்கு மாத்திரமே வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனவே எரிபொருள் தட்டுப்பாட்டைத் தீர்ப்பதற்கும் முச்சக்கரவண்டி சாரதிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் அரசாங்கம் மிகுந்த அக்கறை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.