August

August

ஜனாதிபதியாக தப்பியோடி நாடாளுமன்ற உறுப்பினராக வருகிறார் கோட்டாபாய ..?

தாய்லாந்தில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அடுத்த வாரம் இலங்கை திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக கோட்டாபய ராஜபக்ச நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரது பாதுகாப்பு மற்றும் சட்ட விவகாரங்கள் மற்றும் வெளிநாட்டு பயணங்களில் தேவையான இராஜதந்திர  உதவி பெற்றுக்கொள்ளும் வகையில் அவருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கோட்டாபய ராஜபக்ச பாராளுமன்றத்திற்கு வருவதற்காக பொதுஜன முன்னணியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான விசேட வைத்திய நிபுணர் கலாநிதி சீதா அரம்பேபொல இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே நேரம் கோட்டாபய ராஜபக்சவை வரவேற்க மொட்டு கட்சியால் கோட்டா கம் ஹோம் சமூக ஊடக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதும் குறிப்பிடதக்கது.

மதுபோதையில் நின்று பணிசெய்த துப்புரவு பணியாளர் – நடவடிக்கை எடுத்த யாழ்.மாநகர சபை உறுப்பினர் மீது தாக்குதல் !

மதுபோதையில் நின்று பணிசெய்த துப்புரவு பணியாளருக்கு எதிராக நடவடிக்கை எடுத்த யாழ் மாநகர சபை உறுப்பினர் மற்றும் மேற்பார்வையாளர் மீது தாக்குதல் மற்றும் அச்சுறுத்தும் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,

நல்லூர் ஆலய உற்சவம் இடம்பெற்றுவரும் நிலையில் இன்று (20) அதிகாலை துப்பரவு பணியில் ஈடுபட்ட ஊழியர் மதுபோதையில் நிற்பதை அவதானித்த யாழ் மாநகர சபை உறுப்பினர், குறித்த துப்புரவு பணியாளரை நாளைய தினம் வந்து கடமையில் ஈடுபடுமாறும் மதுபோதையில் இருந்து பணியில் ஈடுபடவேண்டாம் எனவும் கூறுமாறு மேற்பார்வையாளருக்கு அறிவுறுத்தினார்.

இந்நிலையில் குறித்த துப்புரவு பணியாளர் மதுபோதையில் பணியில் ஈடுபட முடியாது என மேற்பார்வையாளர் கூறிய நிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட குறித்த பணியாளர் மாநகர சபை உறுப்பினர் மற்றும் மேற்பார்வையாளரை அச்சுறுத்தும் தாக்குதல் முயற்சியிலும் ஈடுபட்டார்.

இதனையடுத்து குறித்த துப்புரவு பணியாளருக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ள யாழ் மாநகர சபை குறித்த பணியாளரை பணியில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

“இறுதி யுத்தம் நடைபெற்ற காலப் பகுதியில் சிறுவர்களாக இருந்தவர்களே அரசியல் கைதிகளாக சிறையிலுள்ளனர்.”- எம்.ஏ.சுமந்திரன்

“ஐ. நா வையும், தமிழ் மக்களையும் அரசாங்கம் ஏமாற்ற விழைகின்றது. இதற்கு கூட்டமைப்பும் ஒத்து ஓதுகின்றது என்பதுதான் வேதனை.” என தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தில் நடாத்திய ஊடகவியாளர்கள் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக ஆரம்பம் முதலே விக்னேஸ்வரன் ஒரே நிலைப்பாட்டில் இருந்து வருகின்றார். அவர் ரணிலை ஆதரித்தபோதும் அதன் பின்னரான ரணிலுடனான சந்திப்புக்களின்போதும் “முதல்கட்ட நல்லிணக்கமாக அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டுமென்றே வலியுறுத்தினார். ஆனால் இடையில் இந்தப் பிரச்சனையில் தலையிட்ட கூட்டமைப்பினர் “அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிக்காவிட்டாலும் அவர்களில் ஒரு தொகுதியினரை முதல்கட்டமாக விடுவிக்குமாறு” கோரியிருந்தனர்.

தற்போது உள்ள அரசியல் கைதிகளைப் பொறுத்தவரை 47 பேர் வரை சிறைச்சாலைகளில் உள்ளனர். அவர்களில் அதிகமாக 27 வருடங்கள் தொடங்கி 13 வருடங்களுக்கு இடைப்பட்டவர்களாக இருந்து வருகின்றனர். தற்போது அரசாங்கம் வழமைபோன்று தனது ஏமாற்று வேலையை ஆரம்பித்துள்ளது.

கடந்த வருடம் ஐ.நா கூட்டத்தொடருக்கு முன்பாக சுமார் 25 பேர் வரையான அரசியல் கைதிகள் அவசர அவசரமாக பிணை வழங்கி விடுவிக்கப் பட்டிருந்தனர். அதே பிணை வழங்கிய கைதிகளையே இந்த வருடம் ஐ.நா கூட்டத்தொடருக்கு முன்பாக விடுதலை செய்வதற்கான முயற்சியில் அரசாங்கம் முனைப்புக் காட்டி வருகின்றது.

தற்போது அரசாங்கம் விடுவிப்பதற்காக முயற்சித்து வரும் கைதிகள் யாருமே விடுவிக்கப்பட கூடாதவர்கள் என்பதல்ல. அவர்களும் விடுதலை செய்யப் பட வேண்டியவர்களே அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் தற்போது விடுவிக்கப்பட உள்ளவர்கள் யாருமே கைது செய்யப்பட்டிருக்க வேண்டியவர்களே அல்லர். எல்லோருமே இருபது இருபத்தி இரண்டு பராயத்தை உடையவர்கள்.

இறுதி யுத்தம் நடைபெற்ற காலப் பகுதியில் ஆறு ஏழு வயது சிறுவர்களாக இருந்தவர்கள். யுத்தம் முடிந்த பின்னர் ‘மாவீரர் நாளுக்கு விளக்கேற்றினார்கள், தலைவரின் புகைப்படத்தை முகப்புத்தகத்தில் பகிந்தார்கள்’ போன்ற காரணங்களுக்காக புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முயற்சித்தார்கள் என்ற குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார்கள்.

தற்போது பிணையில் உள்ள இவர்களையே ஐ.நா கூட்டத்தொடருக்கு முன்பாக விடுவித்துவிட்டு ஐ. நா வையும், தமிழ் மக்களையும் அரசாங்கம் ஏமாற்ற விழைகின்றது. இதற்கு கூட்டமைப்பும் ஒத்து ஓதுகின்றது என்பதுதான் வேதனை என தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வெளிநாட்டு கடனில், பாதியளவான கடன் சீனாவுடையதே – IMF கடனை பெறுவதில் புதிய சிக்கல் !

இலங்கையின்  வெளிநாட்டு கடனில், பாதியளவான கடன் சீனாவிடமிருந்தே பெறப்பட்டுள்ளதாக இலங்கை நிதி அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ, கடன் விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்திற்கு சீனாவின் நிலைப்பாடு முக்கியமானதாக அமைந்துள்ளது. எனவே, கடன் மறுசீரமைப்பு தொடர்பான சீனாவின் நிலைப்பாடு, சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) பணியாளர் ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

2022, ஆகஸ்ட்டில், நிதி அமைச்சின் கடன் வழங்குநர் பட்டியல் இற்றைப்படுத்தலின்படி, இலங்கையின் மொத்த இரு தரப்புக் கடன் 10 பில்லியன் டொலர்களாகும். இதில் 44 சதவீதமானவை கடந்த ஆண்டு இறுதி வரை சீனாவிடம் இருந்து வாங்கிய தொகைகளாகும். அத்துடன், ஜப்பானிடம் 32 சதவீதமும், இந்தியாவிடம் 10 சதவீதமும் கடன்களாக பெறப்பட்டுள்ளன. தென் கொரியா மூன்று சதவீதத்திலும், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும், ரஷ்யா, ஹங்கேரி, ஸ்வீடன், கனடா, அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தலா இரண்டு சதவீதத்திலும் உள்ளன.மீதமுள்ள ஒரு சதவீத கடன், சவூதி அரேபியா, அமெரிக்கா, குவைத், ஸ்பெயின் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் இலங்கைக்கு வழங்கியவையாகும். இதில் அரசாங்கம் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் இருதரப்பு கடன் 3 பில்லியன் டொலர்களாகும்.

இந்த வெளிநாட்டு நாணயக் கடனுக்கான வட்டியாக சராசரியாக 2.9 சதவீதம் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் உள்ளூர் நாணயக் கடனுக்கான வட்டி வீதம் 9.3 சதவீதமாக உள்ளது. எனினும் வெளிச் சந்தைக் கடன்கள் – சர்வதேச பிணை பத்திரங்கள் என்பன நிதி அமைச்சின் கடன் விளக்கங்களில் இருந்து விலக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் அடுத்த கட்டம், சர்வதேச நாணய நிதியம் உடனான கலந்துரையாடல்களை இறுதி செய்வதாகும் என்று நிதி அமைச்சு கூறுகிறது. இதனை தொடர்ந்து, கடன் வழங்குநர்களைப் புதுப்பிக்க ஒரு பொது முதலீட்டாளர் கடன் விளக்கத்தை தயாரித்து, சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர்கள் நிலை ஒப்பந்தத்தை எட்டுவதாகும் என்று தெரிவிக்கப்படுள்ளது. சர்வதேச நாணய நிதிய குழுவின் அனுமதியை அடைவது மிகவும் முக்கியமானது. இதற்கு முன்னர், கடன் கொடுத்தவர்களுடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதே இறுதி கட்டமாக இருக்கும். இந்தநிலையில், பொருளாதார மற்றும் நிதி மறுசீரமைப்பு மற்றும் கொள்கைகள் குறித்து இலங்கை அதிகாரிகளுடன் தொடர்ந்து கலந்துரையாடுவதற்காக, சர்வதேச நாணய நிதிய பணியாளர்கள் எதிர்வரும் 24 -31 வரை கொழும்புக்கு வருவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

பல்கலைகழக மாணவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டம் – சுமந்திரன் விசனம் !

பயங்கரவாதம் எனக்கூறி மூன்று மாதங்களுக்கு பல்கலைக்கழக மாணவர் தலைவர்களை தடுப்பிலேயே வைத்திருப்பது மிகவும் வருந்தத்தக்கது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட மூன்று பேர் 72 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பாக அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படுகின்ற வரை அதனை உபயோகிக்க மாட்டோம் என வாக்குறுதி கொடுத்த தற்போதைய அரசாங்கம், அதனை திடீரென மீண்டும் பயன்படுத்துவதாக எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டினார்.

பயங்கரவாத செயல்கள் எதுவும் நடைபெறாமல் மக்கள் ஜனநாயக வழியில் போராடுவது அவர்களுக்கான உரிமை என்றும் இதற்காக அவர்களுக்கு தண்டனை வழங்குவது என்பது மிகவும் வருந்தத்தக்கது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் இந்த சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் என்றும் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தினார்.

உக்ரைனுக்காக 800 மில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுத உதவி – அமெரிக்கா அறிவிப்பு !

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஐந்து மாதங்களுக்கு மேலாகிறது. இந்த போரில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். ரஷ்யா ராணுவத்தின் தாக்குதலுக்கு உக்ரைனும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில், உக்ரைனுக்கு கூடுதலாக 800 மில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுத உதவிகளை வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த இராணுவ உதவியில் ஹைமார்ஸ் ஏவுகணைகள், பீரங்கி மற்றும் கண்ணிவெடி அகற்றும் உபகரணங்கள், டொவ் ஏவுகணைகள் அடங்கும். இந்த தொகுப்பில் கணிசமான அளவு கூடுதல் வெடிமருந்துகள், ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் இதுவரை உக்ரைனுக்கு 19 இராணுவ தொகுப்புகள் அடங்கிய உதவிகளை அமெரிக்கா வழங்கியுள்ளது.

இதே நேரம் உக்ரைனுடனான போரை அமெரிக்க உள்ளிட்ட நாடுகளே ஆயுத உதவிகளை வழங்கி தொடர்ந்தும் பூதாகரமாக்கி வருகின்றன என ரஷ்யா குற்றஞ்சாட்டிவருவதும் குறிப்பிடத்தக்கது.

“தமிழ் தலைமைகள் மக்களின் அவலங்களில் குதூகல மகிழ்ச்சியடைகின்றன.” – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

“எமது நடைமுறைச் சாத்தியமான அரசியல் வழிமுறை பட்டிதொட்டி எங்கும் நெருப்பாக பற்றிக்கொள்ளும் வகையில் எடுத்துச் செல்லப்பட வேண்டும்.” என  அமைச்சரும் ஈபிடிபி கட்சியின் செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா தமது கட்சியின் ஆதரவாளர்களுக்கு எடுத்து விளக்கியுள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

ஏமாற்றும் தமிழ் தலைமைகள் மக்களின் அவலங்களில் குதூகல மகிழ்ச்சியடைகின்றன. அவலங்களை தீர விடாது தடுத்து வைத்து அவர்கள் அடுத்த தேர்தல் வெற்றி குறித்து கனவு காண்கிறார்கள். ஆனால், ஈ.பி.டி.பி. யினராகிய நாம் அவலங்களை தீர்த்து வைத்து, மக்களின் மாற்றத்தை நோக்கி பயணிக்க விரும்புகிறோம்.

எங்காவது ஓரிடத்தில் நெருப்பு எரிகின்றது என்றால், அதில் அவர்கள் எண்ணை ஊற்றி பற்றி எரிய வைக்கிறார்கள். ஆனால், நாம் எரிகின்ற இடத்தில் தண்ணீரை ஊற்றி எரியும் நெருப்பை நிரந்தரமாக அணைய வைக்க விரும்புகிறோம்.

இதுவே எமக்கும் ஏனைய சுயலாப தமிழ் அரசியல் கட்சி தலைமைகளுக்கும் இருக்கும் வேறுபாடு. எமது நடைமுறைச் சாத்தியமான அரசியல் வழிமுறை பட்டிதொட்டி எங்கும் நெருப்பாக பற்றிக்கொள்ளும் வகையில் எடுத்துச் செல்லப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

“கடும்போக்குவாதியாக காணப்பட்ட கோத்தாபாய இப்போது மென்மையானவராக மாறிவிட்டார். ” – மகிந்த ராஜபக்ச

“ஜனாதிபதியாக  கோத்தபாய ராஜபக்ச  கடும் அழுத்தங்களை சந்தித்தார். அவர் முன்னர் கடும்போக்குவாதியாக காணப்பட்டார். தற்போது மென்மையானவராக மாறிவிட்டார். ” என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

சண்டே டைம்சிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர்,

 

நான் அரசியலில் தொடர்ந்தும் நீடிப்பேன். பொருத்தமான தருணத்திலேயே ஓய்வு பெறுவேன். அதுவரை நான் போகமாட்டேன்.

பொதுஜனபெரமுனவின் தலைவராக தொடர்ந்தும் நீடிப்பதா என்பதை கட்சியே தீர்மானிக்கவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டாலும் நான் ஒரு சட்டத்தரணி. என்னால் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக பணிபுரிய முடியும். தேவையென்றால் அதனை செய்ய தயார்.

கோத்தாபய ராஜபக்ச தான் செய்துமுடித்திருக்கவேண்டிய விடயத்தை செய்து முடித்திருக்கவேண்டும். ஆனால் அவர் அரசியல்வாதியில்லை. நாட்டிலிருந்து தப்பியோடுவது குறித்து  எனக்கு அவர் தெரிவிக்கவில்லை. கோத்தாபாய ராஜபக்ச சென்றிருக்ககூடாது. இலங்கையிலிருந்து வெளியேற தீர்மானித்ததும் நான் போகின்றேன் . நான் எதனையும் தெரிவிக்கவில்லை.

நான் போகலாமா என கோத்தபாய ராஜபக்ச என்னை கேட்டிருந்தால் வேண்டாம் என்றே சொல்லியிருப்பேன். நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிற்கு கோத்தபாய ராஜபக்ச மாத்திரம் காரணமல்ல. முன்னைய அரசாங்கங்களும்  நானும் கூட அதற்கு காரணம் பதில்கூறவேண்டும்.

கோத்தபாய ராஜபக்ச தான் நம்பிய ஆலோசகர்களின் ஆலோசனைப்படி செயற்பட்டார். ஆகவே அவர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தமுடியாது. பாதுகாப்பு செயலாளராக காணப்பட்டவேளை அவர் சிறந்த நிர்வாக திறனை வெளிப்படுத்தினார். ஜனாதிபதியாக அவர் கடும் அழுத்தங்களை சந்தித்தார். அவர் முன்னர் கடும்போக்குவாதியாக காணப்பட்டார். தற்போது மென்மையானவராக மாறிவிட்டார்.

கோத்தபாய ராஜபக்ச தன் முன் காணப்பட்டபணிகளை சரியாக பூர்த்தி செய்திருக்கவேண்டும் எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் – முள்ளியவளையில் கவனயீர்ப்பு நடவடிக்கை !

வடக்கு கிழக்கு மக்களுக்கான கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் என வலியுறுத்திய கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்று நேற்று காலை முள்ளியவளை நீராவிப்பிட்டி கிராமத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை நாட்டிற்குள் கௌரவமான உரிமையுடன்கூடிய அரசியல் தீர்வினை வலியுறுத்தியும், வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப்பரவலாக்கம் என்பது ஜனநாயக உரிமையாகும்,13 ஆவது திருத்தச்சட்டமானது அரசியலமைப்பு ரீதியாக அதிகாரப்பரவலாக்கத்துக்கான உரிமையினை உறுதிப்படுத்துகின்றது என்பதை வலியுறுத்தியும் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் 100 நாள் செயல்முனைவு திட்டத்தின் இன்று 20 ஆவது நாள் முல்லைத்தீவு முள்ளியவளையில் நீராவிப்பிட்டி கிராமத்தில் கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கவனயீர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்து அறிக்கை ஒன்றும் வாசிக்கப்பட்டுள்ளது இதில்,

கௌரவமான அரசியலுடன் கூடிய மக்கள் குரல் என்ற தொனிப்பொருளிலான கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்று முள்ளியவளை நீராவிப்பிட்டி பகுதியில் நடைபெற்றுள்ளது. வடக்கு கிழக்கு மக்களுக்கான அரசியல்தீர்வு அதிகாரப் பரவலாக்கம் என்பது இலங்கையின் அரசியலமைப்பின் அங்கமாயிருப்பதுடன், சர்வதேச சமூகத்தினாலும் ஐக்கிய நாடுகள் சபையினாலும்; வரவேற்கப்படுகின்ற ஒன்றாகும். ஆகவே, எமக்கான உரிமையை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இலங்கை அரசுக்கும், நட்பு நாடான இந்தியாவுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் வலியுறுத்திக்கொள்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளதுடன். வடகிழக்கு வாழ்கின்ற சிறுபான்மை மக்களின் உரிமையினை நிலைநாட்ட இந்த கவனயீர்ப்பு முன்னெடுக்கபடுகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் முஸ்லீம்களும் சிறுபான்மையாக வாழ்ந்து வருகின்றார்கள். 72 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்த அரசாங்கம் இன்னும் சிறுபான்மை மக்களுக்கான சம உரிமை வழங்கப்பாடாமல் இருக்கின்றது. இறுதியா பாராளுமன்றத்தில் வெற்றியீட்டி ஜனாதிபதி சிம்மாசன உரையில் சிறுபான்மை மக்களுக்கும் சம உரிமை வழங்குவதாக கூறியுள்ளார். இவரின் இந்த உரையினை நாட்டில் நிலைநாட்ட வேண்டும். 2010 ஆம் ஆண்டு போர் முடிவடைந்த பின்னர் முஸ்லீம்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளார்கள் ஆனால் முல்லைத்தீவில் திட்டமிடப்பட்ட மீள்குடியேற்றம் இன்னும் நடைபெறாமல் இருக்கின்றது காணிப்பிரச்சினை இன்னும் இருந்து கொண்டிருக்கின்றது. இன்னும் அகதி வாழ்கையாகவே இருக்கின்றது. ஐனாதிபதி இதில் கவனம் செலுத்துவதுடன் வடக்கு மாகாண சபையும் இதில் கவனம் செலுத்தவேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ரணில் ராஜபக்ஸ” ஒரு சர்வதிகாரி – ஹிருணிகா

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர இன்று காலை 11.00 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் ஒன்றை வழங்கியிருந்தார்.
விசாரணைகளுக்குப்பின் ஊடகங்களிடம் பேசிய அவர், விசாரணையின் தன்மை குறித்து தமக்கு தெரிவிக்கப்படவில்லை என்றார்.

அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து விசாரிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது முயற்சித்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். ரணில் விக்கிரமசிங்கவே மக்கள் போராட்டங்களின் பலனைப் பெற்று நாட்டின் ஜனாதிபதியானார் என்றும் மேலும் தெரிவித்தார்.

“ரணில் ராஜபக்ஸ” ராஜபக்ஸவை விட சர்வாதிகாரி என்றும் ஹிருணிகா மேலும் கூறினார்.