11

11

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம் – தீர்வுகள் ஏதுமின்றிய 2000 நாட்கள் நாளையுடன் நிறைவு !

வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம் மேற்கொண்டு வரும் நிலையில்  நாளை (வெள்ளிக்கிழமை) யுடன் 2000 நாட்களை கடக்கவுள்ளது.

இதேவேளை உறவுகளை தேடியலைந்து 121 உறவுகள் நோயினால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

இதில்   வவுனியா மாவட்டத்தில் 16 பேர் இவ்வாறு   உயிரிழந்துள்ளதாக உறவுகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சர்வதேசத்தின் தலையீடுகளை கோரியும் , ஐக்கிய நாடுகள் தலையீடு செலுத்தி தீர்வுகளை பெற்றுத்தருமாறு கோரியும் உறவுகள் தமது போராட்டங்களை  முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிட்டதக்கது.

 

2015ஆம் ஆண்டு நல்லாட்சி அமைக்கப்போகிறோம் – காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினைக்கு தீர்வு தருகிறுாம் என கூறியே கூட்டமைப்பு மைத்திரி – ரணில் அரசை ஆட்சி பீடமேற்றியது. எனினும் எந்த ஒரு நகர்வுமே இந்த பிரச்சினைக்காக மேற்கொள்ளப்படவில்லை.

தொடர்ந்து கோட்டாபாய ஜனாதிபதியாக இருந்த போது காணாமலாக்கப்பட்டோருக்கான தீர்வுகளை இரண்டு மாதங்களுக்குள் பெற்றுத்தருவதாக கூறிய டக்ளஸ் தேவானந்தாவும் ஏமாற்றிவிட்டார். இதற்கெல்லாம் மணிமகுடம் வைத்தாற்போல ஐ.நா மாநாட்டில் பேசிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச “இறந்தவர்களுக்கான மரணசான்றிதழ்களையும் – நிதி உதவிகளையும் செய்வதாக குறிப்பிட்டார். தற்போது ஜனாதிபதியாக இருக்கும் ரணில் விக்கிரமசிங்க நல்லாட்சி அரசு காலத்தில் காணாமலாக்கப்பட்டோர் வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றிருக்கலாம் என்றார்.

இப்படியாக அனைவராலும் வஞ்சிக்கப்பட்ட இந்த மக்கள் என்றாவது தங்களுடைய காணாமல் போன உறவுகளை காணலாம் – விடுவிப்பார்கள் என்ற எண்ணத்தில் சர்வதேசத்திடம் தீர்ப்பு வேண்டி போராடிக்கொண்டிருக்கிறார்கள். போராட்டம் தொடர்கிறது.. !

இலங்கை பொருளாதார நெருக்கடி – உதவிக்கரம் நீட்டுகிறது அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி !

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு நிவாரணமாக 45,000 டொலர்களை அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி நன்கொடையாக வழங்கியுள்ளது.

சிறுவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ‘யுனிசெப்’ ஊடாக இந்தப் பணம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவுஸ்ரேலியா, இரண்டு டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடியது.

இந்த போட்டிகளின்போது பெற்றுக்கொண்ட பரிசுத்தொகையினையே அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

கோட்டாபாயவுக்கு அடைக்கலம் கொடுத்தது தாய்லாந்து – வெளியாகியுள்ள அறிவிப்பு !

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வேறு நாட்டில் நிரந்தரமாக தஞ்சம் அடையும் வரை தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருப்பார் என தாய்லாந்து பிரதமர் ஜென்ரல் பிரயுத் சான்-ஓ-சா  அறிவித்துள்ளார்.

ஆரம்பத்தில், தங்கள் நாட்டில் தஞ்சமடைய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுக்கவில்லை என தாய்லாந்து அரசாங்கம் அறிவித்த நிலையிலேயே, தற்போது அந்நாட்டு பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தாய்லாந்து அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தாய்லாந்து செல்வதற்கு இலங்கை அரசாங்கம் விசா கோரியுள்ளதாகவும் அரசியல் தஞ்சம் கோரும் எண்ணம் அவருக்கு இல்லை என்றும் தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு எதிராக கடும் போராட்டங்கள் வெடித்ததுடன், கடந்த ஜூலை 9 ஆம் திகதி போராட்டகாரர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டனர்.

இதனை அடுத்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 2 நாட்களில் மாலைதீவு சென்றதுடன் அங்கிருந்து ஜூலை 14 ஆம் திகதி சிங்கப்பூர் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“அரச தொழில் நியமனத்தில் தமிழ் பேசுபவர்களில் 2000 பேருக்கு கூட தொழில்வாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை.” – இரா.சாணக்கியன் விசனம் !

கடந்த 2004ஆம் ஆண்டு 25 ஆக இருந்த வடகிழக்கு தமிழ் பிரதிநிதித்துவம் தற்போது வட கிழக்கு தமிழர்களுக்கு எதிரான பேரினவாத அரசியல் செயல்பாடுகளினால் குறைவடைந்து வருகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) நடைப்பெற்ற ஜனாதிபதியின் சிம்மாசன உரையின் மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

´நாட்டில் 74 வருடங்களாக ஆட்சி செய்த ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்கள் பல உரைகளை பாராளுமன்றில் ஆற்றியிருந்தாலும் இந்த நாட்டினதும், நாட்டு மக்களினதும் எதிர்காலத்தை தீர்மானிப்பது பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த ஜனாதிபதி ஒருவர் என்பது சகலரும் அறிந்ததே. இலங்கையராக அனைவரும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என குறிப்பிட்டாலும் கூட ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிக்கு தமிழ் பேசும் ஒருவர் தெரிவு செய்யப்படவில்லை. விரும்பினாலும், விரும்பாவிடினும் பெரும்பான்மையாளரில் ஒருவரை தலைவராக தெரிவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எமது மக்களின் வாக்குகளினால் ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்ய முடியாத நிலை காணப்படுகிறது. 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்க வேண்டிய நிலைப்பாடு இருந்தது. 2015ஆம் ஆண்டு பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தோம். அதே போலதான் தொடர்ச்சியாக தேர்தலில் இரு வேட்பாளர்களின் எவர் சிறந்தவர் என ஆராய்ந்து அவருக்கு ஆதரவு வழங்கியுள்ளோம்.

இதுவரையில் ஆட்சியில் இருந்த அரச தலைவர்கள் அனைவரும் நாட்டு மக்களின் பொருளாதாரத்தை இல்லாதொழித்துள்ளார்கள். தமிழ் சமூகம் பொருளாதாரம் மாத்திரமல்ல அதற்கு அப்பாற்பட்ட பல இன்னல்களை எதிர்க்கொண்டுள்ளது. அவசரகால சட்டத்தை கொண்டு தற்போது தெற்கில் கைது இடம்பெறுகிறது. நாங்கள் 1979ஆம் ஆண்டு முதல் அவசரகால சட்டத்தை எதிர்த்து வருகிறோம். அவசர கால சட்டத்திற்கு எதிராக இன்று எதிர்தரப்பினர் குரல் கொடுக்கிறார்கள்.தமிழ் மக்கள் அவசரகால சட்டத்தினால் பல இன்னல்களை அனுபவித்துள்ளதை நினைவுப்படுத்த வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி முன்னேற்றத்திற்கு எந்த அரசாங்கமும் உரிய நடவடிக்கையினை முன்னெடுக்கவில்லை. தொடர்ச்சியாக தமிழ் சமூகம் ஏமாற்றப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்த அரசாங்கம் திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யவில்லை. பாலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படவில்லை, மாறாக எமது வளங்கள குறிப்பாக மண் வளம் சூறையாடப்படுகிறது. நல்லாட்சி அரசாங்கத்தில் குற்றச்சாட்டுக்குள்ளான முன்னாள் அமைச்சர் ஹெலிகொப்டரில் மன்னாருக்கு சென்றுள்ளார். மன்னார் மாவட்டத்தில் உள்ள வளங்களை சூறையாடுவதற்கான நிகழ்ச்சி நிரல் முன்னெடுக்கப்படுகின்றன. குச்சவெளி பகுதியின் பெயரை மாற்றுவதற்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

 

வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டத்தில் உள்ள மீனவர்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கு எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை, மறுபுறம் விவசாயிகளும் உரம் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கடந்த வருடம் வழங்கப்பட்ட அரச தொழில் நியமனத்தில் தமிழ் பேசுபவர்களில் 2000 பேருக்கு கூட தொழில்வாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை. ஆகவே தமிழ் மக்களின் வாழ்வாதாரம் குறித்து சிந்திக்காத தலைவர்கள் நாட்டை ஆண்டுள்ளார்கள். வடக்கு மற்றும் கிழக்கு இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால் இனி வரும் காலங்களில் தமிழ் பிரதிநிதித்துவத்தின் வீதம் குறைவடையும் நிலை ஏற்படும். மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் நடுத்தர வர்க்கத்தினர் பெரிதளவில் பாதிக்கப்படுவார்கள்.

 

மாதம் 4 ஆயிரம் ரூபாவாக காணப்பட்ட மின்கட்டணம் இனிவரும் காலங்களில் 6 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க கூடும். மின்கட்டணம் பன்மடங்கு அதிகரித்துள்ளதால் நடுத்தர மக்கள் பொருளாதார ரீதியில் மோசமான பாதிப்புக்களை எதிர்க்கொள்வார்கள். நீர்க்கட்டணம் அதிகரிக்கவுள்ளது. ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதால் அனைத்து சேவைகளின் கட்டணமும் உயர்வடைந்துள்ளது. பொருளாதார நெருக்கடியினை ஏற்படுத்தியவர்களுக்கு கண்டிப்பாக தண்டனை வழங்க வேண்டும். தவறான பொருளாதார முகாமைத்துவத்தினால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் இன்று மீண்டும் ஒன்றிணைந்துள்ளார்கள். பொருளாதார நெருக்கடியினை ஏற்படுத்தியவர்களுக்கு தண்டனை வழங்குவது குறித்து ஜனாதிபதி தனது சிம்மாசன உரையில் குறிப்பிட்டிருந்தால் அது மகிழ்வுக்குரியதாக அமைந்திருக்கும்.´ எனக் குறிப்பிட்டுள்ளார்.

“ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் பங்காளியாக இருக்கும்.” – இலங்கைக்கு வழங்கப்பட்டள்ள உறுதி !

சவாலான காலங்களில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் பங்காளியாக இருக்கும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழு உறுதியளித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்கள் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்கள் இலங்கை ஜனாதிபதியுடன் ஆக்கபூர்வமான சந்திப்பொன்றை நடத்தியதாக இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக கருத்துச் சுதந்திரம் மற்றும் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தும் உரிமைக்கு மேலாக சிவில் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

“இலங்கையை மீண்டும் அப்பாதையில் கொண்டு வருவதற்கு வெளிநாட்டு விவகாரங்களில் கூட்டு மற்றும் உள்ளடக்கிய நடவடிக்கை தேவை என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்” எனத் தூதுவர்கள் தெரிவித்தனர்.

பின்வரும் 3 முக்கிய செயன்முறைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியம் ஜனாதிபதியை ஊக்குவிப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

1.ஜீஎஸ்பி +

2.சர்வதேச நாணய நிதியம்

3.மனித உரிமைகள் பேரவை

இந்தச் செயன்முறைகளை வெற்றியடையச் செய்வதற்கு இலங்கை அரசாங்கத்தினால் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் நம்புவதாக இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு மேலும் கூறியுள்ளது.

உயிரை தியாகம் செய்யுமாறு கூறிய பொன்சேகாவின் ‘பீல்ட் மார்ஷல்’ பதவி ..?

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவின் ‘பீல்ட் மார்ஷல்’ பதவி தொடர்பில் தீர்மானம் எடுக்குமாறு அமைச்சர்கள் குழுவொன்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சரத் பொன்சேகா அண்மையில் வெளியிட்ட கருத்துகள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இறுதிப் போராட்டத்துக்காக கொழும்புக்கு வருமாறும், உயிரைத் தியாகம் செய்யுமாறும் அல்லது போராட்டத்தில் வெற்றி பெறுமாறும் அவர் விடுத்துள்ள அறிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.