இந்திய அரசாங்கத்தின் நேரடி உதவிகளுக்கு நாட்டு மக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும் – இராணுவத் தளபதி

sarath-fonseka.jpgஇலங் கையில் ஊடறுத்துள்ள பயங்கரவாதத்தினை ஒழிப்பதற்கு நட்புறவு நாடுகள் வழங்கிவரும் இராணுவ ரீதியிலான உதவிகள் பாராட்டிற்குரியவை என்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இறைமையையும் பிரதேசத்தின் தன்னாதிக்கத்தினையும் பாதுகாப்பதற்கென இந்திய அரசாங்கம் வழங்கிவரும் நேரடி உதவிகளுக்கு நாட்டு மக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும் என்றும் இராணுவ தளபதி மேலும் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது இந்நியா உள்ளிட்ட பல நட்புறவு நாடுகள் இலங்கை அரசாங்கத்துக்குத் தேவையான அனைத்துவித இராணுவ உதவிகளையும் வழங்கி வருகின்றன. இந்நிலையில் இலங்கை இராணுவ வீரர்களுக்குத் தேவையான பயிற்சிகளையும் வழங்க அந்நாடுகள் முன்வந்துள்ளமை வரவேற்கத்தக்கதாகும்.

விடுதலைப் புலிகள் இயக்கமானது முழு நாட்டினையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின்னர் ஈழம் இராச்சியத்தை அமைப்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றனர் என்று பாதுகாப்பு தரப்பினருக்கு இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளது.

அவர்களின் இந்த கனவு ஒருபோதும் நனவாகிவிட இராணுவத்தினர் இடமளிக்கப் போவதில்லை. இலங்கை மக்கள் ஒற்றுமையாக வாழ்வதன் மூலமே பலமான அபிவிருத்தியுள்ள நாட்டினைக் கட்டியெழுப்ப முடியும். இன அடிப்படையில் நாட்டைப் பிரிப்பது நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் என்பதை அனைத்து இன மக்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்நிலையில் இராணுவத்தின் பலத்தையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அத்துடன் இராணுவத்தின் பலத்தை ஒன்றுதிரட்டும் நீண்ட கால நோக்கம் நிறைவேற்றப்பட வேண்டுமானால் இராணுவம் முற்றாக புனரமைக்கப்பட வேண்டும்.

வடபகுதியிலும் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவதற்கான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பொதுமக்களிடமிருந்து விடுதலைப் புலி உறுப்பினர்களால் பிரித்தெடுக்கப்பட்ட ஜனநாயக உரிமைகளை மீண்டும் அவர்களுக்கு வழங்குவதற்கான சந்தர்ப்பத்தினையும் அரசாங்கம் பெற்றுள்ளமை பெருமைக்குரிய விடயமாகும். 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *