பாது காப்புப் படையினரால் தற்போது மீட்கப்பட்டு வரும் பெருந்தொகையான பொது மக்களை தங்க வைப்பதற்கான சகல ஏற்பாடுகளையும் அரசாங்கம் பூர்த்தி செய்துள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எம். எஸ். எஸ். அமீர்அலி தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நேரடி கண்காணிப்பின் கீழ் இந்த மக்களுக்குத் தேவையான சகல வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ள அதேசமயம், மருத்துவ நிபுணர்கள், மின்சார சபை அதிகாரிகள் அடங்கிய இரண்டு விசேட குழுக்கள் நேற்று உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கு மேலதிகமாக வந்துள்ள மக்களின் நிலைமைகளை விசேடமாக அவதானிக்கவென ஜனாதிபதி செயலக அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று நேற்று முன்தினமும், அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் செயலாளர் தலைமையில் நேற்று மற்றுமொரு குழுவுடன் சென்றுள்ளதுடன் இன்று இன்னுமொரு குழு செல்லவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். கொள்ளுப்பிட்டியில் உள்ள அனர்த்த நிவாரண சேவைகள் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் உரையாற்றுகையில் :-
மீட்டெடுக்கப்பட்ட மக்களை நிவாரண கிராமங்களுக்கு அனுப்பி வைக்கவென மேலதிகமாக 154 பஸ் வண்டிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சுமார் 58 ஆயிரம் மக்களுக்குத் தேவையான சகல வசதிகளும் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதுடன் 6700 கூடாரங்களும் தயாரான நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
அருணாச்சலம், கதிர்காமர், வலயம் – 01 ஆகிய மூன்று நிவாரணக் கிராமங்களிலும், தாண்டிக்குளம், புதுக்குளம், ஓமந்தை, ஆண்டி புளியங்குளம் மற்றும் முதலியார் குளம் ஆகிய ஐந்து பாடசாலைகளிலும் இவர்களை தற்காலிகமாக தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சுமார் 30 ஆயிரத்திற்கும், 40 ஆயிரத்திற்கும் இடைப்பட்ட மக்களே எஞ்சியிருக்கலாம் என நம்பப்படுகிறது. எதிர்காலத்தில் வருகைதரவுள்ள மக்களையும் எந்த பாதிப்புக்களுமின்றி தங்க வைக்கவென ஆயிரம் ஏக்கர் காணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பரயான்குளத்தில் – 600 ஏக்கர், மெனிக்பாம் – செட்டிக்குளம் பகுதிகளில் – 200 ஏக்கர், மதவாச்சி – செட்டிக்குளம் பகுதிகளில் 200 ஏக்கர் காணிகள் தற்பொழுது சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. இதற்கான நடவடிக்கைகளை வடமாகாண ஆளுநர் தலைமையில் முன்னெடுக்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
rajan
உலகநாடுகள் தயவு செய்து வன்னி வந்துள்ள மக்களை சந்தித்து கணக்கெடுத்து அவர்களை உரிய முறையில் பாதுகாக்க முன்வர வேண்டும். அல்லது சட்டியிலிருந்து நெருப்பில் விழுந்த கதையாகத் தான் முடியும். ஐநா செயலர் மக்களின் வரவில் சந்தோசம் தெரிவிப்பதோடு நில்லாது வந்தவர்களை பாதுகாக்க முயற்சி எடுக்கவேண்டும். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உதவி வழங்கும் நிறுவனங்கள் செயற்பட பாதுகாப்பில்லை என்பதை ஏற்றுக்கொண்டாலும் அரசகட்டுப்பாட்டுப்பகுதிக்கு வந்தவர்களை பாதுகாப்பதில் எந்த பிரச்சனையும் இருக்காது. ஏன் இந்த தாமதம. தங்களது தாமதங்கள் தமிழர்களின் உயிரழிவுக்கே வித்திடும்
பார்த்திபன்
தற்போது வெளியேறி வரும் மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளைச் செய்வதாக ஐ.நாச் செயலாளரும் உறுதியளித்துள்ளார். எனவே அந்த மக்களுக்கு விரைவாகச் செயற்பட்டு அரசு உதவுவது போல், அவர்களை மீள் குடியேற்றி நிம்மதியான ஒரு நிலையான வாழ்க்கை அமைத்துக் கொடுப்பதிலும் அரசு துரிதமாகச் செயற்பட வேண்டும்.