தேசத்தைக் கட்டியெழுப்புதல் வரியை 3% ஆக அதிகரிப்பதால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் எந்தவிதத்திலும் அதிகரிக்கப்படாதென ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன நேற்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பத்து அத்தியாவசிய பொருட்களுக்கு வரிகளை நீக்கியதாலும், மட்டுப்படுத்தியதாலும் அரசாங்கத்திற்கு 9991 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்தத் தொகை ஒருவருடத்திற்கு சமுர்த்தி நிவாரணமளிக்க போதுமானதென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தேசத்தைக் கட்டியெழுப்புதல் வரி திருத்தச் சட்ட மூலம் அதிகார சபை (விசேட ஏற்பாடுகள்) திருத்தச் சட்ட மூலம் ஆகியன மீதான விவாதத்தில் கலந்து கொண்டு அமைச்சர் உரையாற்றினார். பொது மக்களுக்குச் சுமையைக் குறைப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளால், தேசிய வருமானத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2004ம் ஆண்டு இறக்குமதி வரி 25% அறவிடப்பட்டதால் 222 மில்லியன் வருவாய் இருந்தது. ஆனால், தற்போது தேசிய உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல், அரசாங்கத்திற்கு பல்வேறு விதமான செலவுகள் உள்ளன. இன்று (நேற்று 21) முற்பகல் 11 மணிவரை பாதுகாப்பு வலயத்திலிருந்து 39042 பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துள்ளனர்.
இவர்களுக்கு நிவாரணமளிக்க வேண்டும். இன்று சிகரட் மூலம் கிடைக்கும் வருமானம் இழக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இழக்கப்பட்டவற்றை ஈடு செய்து தேசத்தைக் கட்டியெழுப்பு முகமாகவே ஒரு வீதமாக இருந்த வரியை 3%ஆக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் எந்தவித தாக்கமும் ஏற்படாது” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.