வன்னி யிலிருந்து வவுனியாவுக்கு இடம்பெயர்ந்து வந்தவர்களில் முப்பதாயிரம் பேரை மன்னாருக்கு அனுப்பிவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வன்னியில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கையால் அங்கிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வவுனியா வந்துள்ளனர்.
இவர்களை தங்கவைத்து பராமரிப்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து, சுமார் 30,000 பேரை மன்னாருக்கு அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மன்னாரில் இவர்களைத் தங்க வைக்க 20 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அங்கு இவர்கள் அனுப்பப்பட்டு அங்கு தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப்படவுள்ளனர்.
நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை வவுனியா மாவட்ட செயலகத்தில் அனர்த்த நிவாரண அமைச்சர் அமீர் அலி, தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. மன்னார் தீவுக்குள் உள்ள 20 பாடசாலைகளில் மக்களை தங்கவைக்க வசதிகள் உள்ளதாக மகாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.
தேசநிர்மாணத்துறை அமைச்சர் எவ்.எம்.சந்திரசேனா, வடமாகாண ஆளுநர், வவுனியா மன்னார் மாவட்ட அரச அதிபர்கள் உட்பட முக்கிய அதிகாரிகள் பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஓமந்தைக்கு இடம்பெயர்ந்த மக்கள் பல்லாயிரக்கணக்கில் வந்து சேர்ந்துள்ளதாக இராணுவத் தரப்பு தகவல்கள் தெரிவித்தன. வியாழக்கிழமை முதல் இடம்பெயர்ந்த மக்களை பஸ்கள் மூலம் மன்னாருக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படுமென படை அதிகாரிகள் தெரிவித்தனர்.