தேர்தல் நடைபெறுவதால் மே தின ஊர்வலம் நடத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. மே 1ம் தேதி தொழிலாளர் தினமாக உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களால் கொண்டாடப்படுகிறது. அப்போது அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் ஊர்வலம் நடத்துவார்கள். பின்னர் பொதுக் கூட்டம் நடத்துவார்கள்.
சென்னையில் அனைத்துக் கட்சிகளின் தொழிற்சங்கங்களும் ஊர்வலமாக சென்று, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் மலர் அஞ்சலி செலுத்துவார்கள். பின் வீர வணக்கமும் செலுத்துவார்கள்.
ஆனால் இந்த ஆண்டு தேர்தல் நடப்பதால், மே தின ஊர்வலம், பொதுக் கூட்டம் நடத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தேர்தல் நேரத்தில் ஊர்வலம் நடத்தக் கூடாது என்று ஏற்கனவே தேர்தல் ஆணைய விதிமுறையில் கூறப்பட்டுள்ளது. இதனால்தான் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இந்த உத்தரவுகள் மாவட்ட எஸ்பி அலுவலகம், கமிஷனர் அலுவலகங்களுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது. சென்னையில் மே தின ஊர்வலம் நடத்த 8 அரசியல் கட்சிகள் அனுமதி கேட்டுள்ளன. தேர்தல் கமிஷன் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால், அரசியல் கட்சிகளின் தொழிற் சங்கங்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என்று போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.