ஒவ் வொரு ஏப்ரல் மாதமும் 08ஆம் திகதி சர்வதேச உரோமர் கலாசார தினம் கொண்டாடப்படுகின்றது. உரோமர் கலாசாரம், உரோமப் பாரம்பரியங்கள், மற்றும் உரோமர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி அவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது இத்தினத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
20ஆம் நூற்றாண்டில் பின்னரைப் பகுதிகளில், குறிப்பாக 1960களில் உரோம கலாசாரத்தைப் பேணுவது தொடர்பாக ஐரோப்பிய நாடுகளில் பல இயக்கங்களும், அமைப்புகளும் அதிகளவில் உருவாகின. இதனால் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக 1971ஆம் ஆண்டில் லண்டனுக்கருகே ஓப்பிளிங்டன் Orpington எனுமிடத்தில் அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்து சர்வதேச உரோமானிய அமையத்தை International Romani Union (IRU), உருவாக்கினர்.
1990ஆம் ஆண்டு போலாந்தில் உள்ள ‘செரொக்’ எனுமிடத்தில் நடைபெற்ற 04ஆவது சர்வதேச உரோமானிய அமையத்தின் International Romani Union (IRU), கூட்ட முடிவின்படியே ஏப்ரல் 08ஆம் திகதி சர்வதேச உரோம கலாசார தினத்தை கொண்டாடுவதென தீர்மானிக்கப்பட்டது.
பொதுவாக இத்தினத்தை உரோம கலாசாரங்கள், உரோம பாரம்பரியங்கள், மரபுகள் என்பவற்றை வலியுறுத்தக்கூடிய வகையில் போட்டிகள், கருத்தரங்குகள், கண்காட்சிகள், கலைநிகழ்ச்சிகள், விளையாட்டுகள் என்பவற்றை நடத்தி இத்தினத்தை கொண்டாடுவர். தற்போது உலகில் பெரும்பாலான நாடுகளில் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.