வன்னி யுத்த அனர்த்தங்கள் காரணமாக முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா நகரிலுள்ள நலன்புரிநிலையங்களில் தங்கியுள்ள மாணவர்களின் நலன்கருதி அந்தந்த நலன்புரிநிலையங்களினுள்ளே இயங்கும் பாடசாலைகளில் கல்வி பயிலும் தரம் 05 மாணவர்களுக்கான மாதிரிவினாத்தாள்களும், வழிகாட்டிப் புத்தகமும் இன்று வவுனியா இடைத்தங்கல் முகாம் பாடசாலைகளின் கல்வியதிகாரி திரு. த. மேகநாதன் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
தேசம்நெற் ஆசிரியர் குழுவும், சிந்தனைவட்டமும் இணைந்து இந்த நலன்புரிநிலையங்களில் தங்கியுள்ள மாணவர்களின் நலன்கருதி கல்வி செயற்பாடுகளுக்கு உதவும் திட்டத்தின் முதல்படியாக எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ள தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்காக வேண்டி மாதிரிவினாத்தாள்களையும், வழிகாட்டி புத்தகங்களையும் வழங்க முன்வந்தமை அறிந்ததே. இத்திட்டத்தின் கீழ் 1057 மாணவர்களுக்கு 1100 வீதம் மாதிரிவினாத்தாள்கள் 10உம், புலமைப்பரிசில் சார்ந்த செயற்பாடு தொகுதி 01 நூலும் கடந்த வாரங்களில் வழங்கப்பட்டன.
இந்த மாதிரிவினாத்தாள்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு, பரீட்சையாக நடத்தப்படுகின்றன. இந்த அனுப்பப்படும் பொதிகளில் பின்வரும் மாதிரிவினாத்தாள்களும், வழிகாட்டி புத்தகங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
மாதிவிரிவினாத்தாள் இலக்கம் 11 1100 பிரதிகள்
மாதிவிரிவினாத்தாள் இலக்கம் 12 1100 பிரதிகள்
மாதிவிரிவினாத்தாள் இலக்கம் 13 1100 பிரதிகள்
மாதிவிரிவினாத்தாள் இலக்கம் 14 1100 பிரதிகள்
மேலும், தரம் 05 புலமைப்பரிசில் சார்ந்த செயற்பாடுகள் தொகுதி 02 எனும் நூலின் 1100 பிரதிகள்
மேற்படி மாதிரிவினாத்தாள்களும், வழிகாட்டிப் புத்தகமும் கீழுள்ள பாடசாலைகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கதிர்காமர் வித்தியாலயம், சிவானந்தா வித்தியாலயம், செட்டிக்குளம் ம.வி., பம்பைமடு விடுதி, தொழில்நுட்பக்கல்லூரி, கலைமகள் வித்தியாலயம், முஸ்லிம் ம.வி., காமினி வித்தியாலயம், சைவபிரகாச வித்தியாலயம், தமிழ். ம.ம.வி, புந்தோட்டம் ம.வி, கல்வியியற் கல்லூரி, கோவில்குளம் இந்துக் கல்லூரி
தரம் 05இல் கல்வி பயிலும் மாணவர்களுக்காக வேண்டி மேலும் புலமைப்பரிசில் சார்ந்த செயற்பாடுகள் தொகுதி 03 புலமைப்பரிசில் சார்ந்த செயற்பாடுகள் தொகுதி 04 ஆகிய நூல்களையும் 16 மாதிரிவினாத்தாள்களையும் (விசேட மாதிரிவினாப்பத்திரம் இலக்கம் 01 – 16 வரை) இம்மாத இறுதிக்குள் வழங்க தேசம்நெற் உம் சிந்தனைவட்டமும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பரீட்சை ஆகஸ்ட் மாதம் நடைபெறுவதினால் அதற்கேற்ற வகையில் இந்த வழிகாட்டல் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், தரம் 06, 07, 08, 09, 10, 11 மாணவர்களுக்காக வேண்டி வி.ச. சுப்பரமணியம், ஞானசுந்தரம், பா. கிருபாகரன் ஆகிய எழுத்தாளர்களால் எழுதப்பட்ட நூல்களின் ஒரு தொகுதியும் குவி அச்சக வெளியீடுகளின் ஒரு தொகுதி செயல் நூல்களும் இன்று அனுப்பப்பட்டுள்ளன.