வடக்கில் யுத்தம் முடிவுற்றுள்ள நிலையில் அப்பிரதேசங்களில் காணப்படும் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளுக்காக ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு மேலும் 160 மில்லியன் ரூபாவை வழங்கத் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக கொழும்பிலுள்ள ஜப்பான் தூதரகம் நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மன்னார் பிரதேசத்தில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளுக்காக ஜப்பான் அரசாங்கம் ஏற்கெனவே 80 மில்லியன் ரூபாவை இலங்கைக்கு உதவியாக வழங்கியுள்ளது. இதன்படி வடக்கில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளுக்காக ஜப்பான் அரசாங்கம் இதுவரை 240 மில்லியன் ரூபாவைப் பெற்றுக்கொடுத்துள்ளது.
தற்போது வழங்கப்படவுள்ள நிதியைக்கொண்டு யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய பிரதேசங்களில் உள்ள கண்ணிவெடிகள் அகற்றப்படும். இப்பணியை டானிஷ் டெமினிங் குழுவும், ஹலோ ட்ரஸ்ட் நிறுவனமும் மேற்கொள்ளும்.
இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுவரும் கண்ணிவெடிகளற்ற இலங்கை எனும் இலக்கை அடைவதற்கு தொடர்ந்தும் உதவியளித்து வரும் ஜப்பான், இடம்பெயர்ந்த மக்களைத் துரிதமாக மீள்குடியேற்றும் பணிகளுக்காக கடந்த 2003ஆம் ஆண்டிலிருந்து சுமார் 2250 மில்லியன் ரூபாவை உதவியாக வழங்கியுள்ளது என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.