நாடு முழுவதிலுமுள்ள தேசிய பாடசா லைகளுக்கு நாளை (01) 860 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் வைத்து, காலை 9 மணிக்கு இந்த நியமனங்களை வழங்குவதாக பிரதி கல்வி அமைச்சர் மு. சச்சிதானந்தன் தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட நாடு முழுவதிலுமுள்ள தேசிய பாடசாலைகளுக்கு 1500 பட்டதாரிகளை நியமிக்கும் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 1000 பேருக்கு நியமனம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாளை 860 பேருக்கு நியமனம் வழங்குவதுடன், எஞ்சியோருக்குக் காலக்கிரமத்தில் வழங்கப்படுமென பிரதி கல்வி அமைச்சர் தெரிவித்தார். இலங்கை பரீட்சைத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் கூடுதல் புள்ளிகளைப் பெற்ற பட்டதாரிகளுக்கே இந்நியமனம் வழங்கப்படுகின்றது.
இந்த நியமனம் வழங்குவதுடன், ஊவா, மத்திய, சபரகமுவ மாகாணங்களின் தேசிய பாடசாலைகளில் நிலவிய ஆசிரிய பற்றாக்குறை பிரச்சினை தீர்த்து வைக்கப்படுவதாக பிரதியமைச்சர் தெரிவித்தார். ஜனாதிபதியின் பணிபுரைக்கு அமைய, கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்தவின் வழிகாட்டலின் கீழும் பிரதியமைச்சர் சச்சிதானந்தனின் ஒத்துழைப்புடனும் இந்நியமனம் வழங்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.