நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான முன்னேற்பாட்டுச் செயற்குழு: வி. உருத்திரகுமாரன்

tamilnational_.jpgநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்குவது அவசியம் என தாயகத்திலும், வெளிநாடுகளிலும் வாழும் ஈழத் தமிழர்கள் கருதுகின்றனர் என நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான செயற்குழுவின் ஒருங்கிணைப்பாளர் விசுவநாதன் ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ருத்திரகுமாரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மானிடம் பேணும் சட்ட நெறிகளையும் மனித நாகரீகத்தின் அனைத்துப் பண்புகளையும் முற்றுமுழுதாக மீறி, கொடூரமிக்க, அதீத இராணுவ ஆக்கிரமிப்பின் மூலம் சிங்கள அரசு, தமிழ் மக்களின் நியாய பூர்வமான தன்னாட்சித் தீர்மான முன்னெடுப்புக்களை நசுக்கிச் சிதைத்துள்ளது. வன்னிப் பிராந்தியத்தில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொலைக்களரியானது முழு உலகையுமே பேரதிர்ச்சியிலும் ஆழ்ந்த வேதனையிலும் அமிழ்த்தியுள்ளது.

குறிப்பாகப் பாவனைக்குத் தடைசெய்யப்பட்ட கனரகப் போராயுதங்களினாலும் அறாத்தொடர்ச்சியான எறிகணைகளாலும், பீரங்கிக்குண்டுகளினாலும் 30,000 க்கு மேற்பட்ட தமிழர்கள் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் கொன்று குவிக்கப்பட்டனர்.

இன்று சிங்கள இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்ட சிறை முகாம்களில் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் வன்னடைப்புச் செய்யப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடு சார்ந்த நிறுவனங்களும், பன்னாட்டு அரச நிறுவனங்களும், செய்தியாளர்களும் இந்த முகாம்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முகாம்களுக்கு வெளியேயுள்ள தமிழர்களும் நடைப்பிணங்களாகவே வாழ்கின்றனர். யாழ் தீபகற்பம் ஒரு திறந்தவெளி மறியற்சாலையாகவே உள்ளது. கிழக்கு மாகாணம் இராணுவ ஆட்சி நிலவும் நிலமாகவுள்ளது.

ஸ்ரீலங்காவின் தெற்குப்பகுதியில் சிங்களப் பேராதிக்கக் கட்டுப்பாட்டில் தமிழ் மக்கள் பாதுகாப்பற்று, பயமுறுத்தப்பட்டு, பல்வேறு இம்சைகளுக்கு உள்ளாக்கப்படுதல் நாளாந்;த நிகழ்வாயுள்ளது. தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காவே இவர்கள் குறிவைக்கப்படுகின்றனர். நன்கு திட்டமிட்ட கொலைகள், கடத்தல், காணமல் போதல், வன்மையான அடையாள அழிப்பு, தமிழீழ நிலப்பறிப்பு, இனச்சுத்திகரிப்பு போன்றவற்றினால் தமிழ் மக்களின் தேசிய இனத்துவ முழுமை சிதைக்கப்பட்டுவருகின்றது.

இலங்கைத தீவில் தமிழ் மக்களின் உயிர் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது மட்டுமல்லாமல் அவர்களது நியாய பூர்வமான அரசியல் அபிலாசைகளை எடுத்துரைக்கும் அரசுரிமைவெளியும் அழிந்துபோயுள்ளது.

மக்களின் குரலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் உயிராபத்தின் விளிம்பில் வாழ்கின்றனர். திரு யோசப் பரராசசிங்கம் (2005), திரு நடராசா ரவிராஜ் (2006), திரு க. ந. சிவநேசன் (2008) ஆகிய தமிழ்க்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் உயிர் ஆபத்தை எதிர் கொண்ட போதும் அசாத்தியத் துணிவுடன் பணியாற்றுகின்றனர்.

இவை தவிர இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் முதல் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பு, தேர்தல்; தொகுதிகளின் எல்லைகளைக் கபடமாக மாற்றியமைத்தல் போன்றவற்றினாலும், புதிய வாக்காளர்களைப் பதியாமல் விட்டமை, மற்றும் தொடர்ந்து போரினால் பாரிய அளவில் ஏற்பட்ட இடப்பெயர்வுகள் ஆகியனவும் பாராளுமன்றத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை எண்ணுக்கணக்கில் குறுகச் செய்துள்ளது. இவை அனைத்துமே இலங்கைத் தீவின் அரசியல் நீரோட்டத்தில் தமிழர்கள் பங்கு பெறுவதை சாத்தியமற்றதாக்கியுள்ளது.

இந்நிலையில் ஸ்ரீலங்காவின் அரச அமைப்பிலும் அதன் யாப்பு முறையிலும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஆக்கபூர்வமான, பயன்தருவகையில் முன்னெடுப்பதற்கான எத்தகைய அரசியல்வெளியும் இல்லை. இத்தீவில் தமிழர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வழி எதுவுமேயில்லை. எனவே இலங்கைத் தீவுக்கு வெளியிலேயே தமிழர்கள் தமது உரிமைகளை நிலை நிறுத்துவதற்கான முன்னெடுப்பு முயற்சிகளைத் தொடரமுடியும்.

ஆகவே தமிழீழத்தில் வாழும் மக்களும் வெளிநாடுகளில் பரவி வாழும் தமிழீழத்தவர்களும் தற்பொழுதிற்கான நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (Provisional Transnational Government of Tamil Eelam) ஒன்றினை உருவாக்குதல் அத்தியாவசியமான மிகமுக்கிய பணியெனக் கருதுகின்றார்கள்.

சட்டபூர்வமற்ற முறையில் இராணுவ பலத்தைப் பிரயோகிப்பதும், சித்திரவதைக்காக மக்களைக் கடத்துவதும் திட்டமிட்டு இன அழிப்பில் ஈடுபடுவதும் இவை போன்ற போர்க்குற்றங்களும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளும்; குழந்தைகளைக் கடத்துவதுமாகிய கொடூரங்களும் இவற்றினூடாக அரசியற் தலைவர்களை புறந்தள்ளலும் ius cogens அடிப்படை சட்டநெறித் தத்துவங்களுக்கு முற்றிலும் முரணானதாகும். இத்தகைய சூழலில் நாடு கடந்த நிலையில் சட்ட பூர்வமான அரசாட்சியை நிறுவுதற்கான தேவையினை செயற்படுத்துவதற்கு சர்வதேச சட்டமரபுநெறிகள் இடம் தருகின்றன.

இது தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றினை தற்பொழுதிற்கு அமைப்பதற்கான திட்டம் ஒன்றினை முன்வைக்க விரும்புகின்றோம். எமது செயற்பாடுகளும் திட்ட முறைமைகளும் ஜனநாயக அடிப்படையிலமைந்தவையாகும். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றினை உருவாக்குவதற்கான கட்டமைப்புக்களை, பின்வரும் விடயங்களைக் கருத்திற் கொண்டு பணியாற்ற செயற்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

1. 1976ல் வரையறுக்கப்பட்ட வட்டுக்கோட்டைப் பிரகடனத்தினதும், 1977ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ் மக்களால் ஒரு மனதாக வாக்களித்து வரவேற்கப்பட்டதும், பின்பு 1985ல் திம்புப் பிரகடனத்தில் வெளிப்படுத்தப்பட்டதும், 2003ல் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரப்பகிர்வின் தளமாக அமைந்ததுமாகிய

தமிழர் ஓர் தேசிய இனம்

வடக்கு- கிழக்கு தமிழர் தாயக நிலம்

ஈழத்தமிழரின் தன்னாட்சி உரிமை

போன்ற அடிப்படைக் கோட்பாடுகளை ஈழத்தமிழரின் அரசியல் அபிலாசைகளின் ஆதார சுருதியாக ஏற்றுக் கொள்ளும் அனைத்துத் தமிழ் மக்களையும் ஓன்றிணைப்பது

2. 2001ம் ஆண்டு, 2004ம் ஆண்டு பொதுத் தேர்தல்களின்போது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் அரசியல் கட்சியாகத் தமிழ் மக்களினால் ஏற்று உறுதி செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் ஈழத்தமிழரின் தன்னாட்சிக் கோட்பாட்டினை ஏந்தி ஆதரிக்கும் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளுடனும் இணைந்து செயற்படுதல்.

3.  சிங்கள தேசத்துடனான பேச்சுவார்த்தைகளுக்கான தமிழர் தேசத்தின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தல்.

4.  உலகனைத்தும் பரவி வாழும் ஈழத்தமிழர் மத்தியில் பன்னாட்டு மதிப்பினைப்பெற்ற நிறுவனம் ஒன்றினுடன் இணைந்து வாக்காளர் பட்டியல் ஒன்றினைத் தயாரித்;தல். இவ்வாறு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் வாக்களிப்பை நடத்தி தமிழ்த் தேசியப் பேரவையினை தெரிவு செய்து இப் பேரவையினூடாக தமிழீழ அரசியல் யாப்பினை வடிவமைத்தலும்; தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு காணும் நோக்குக்கு வழிகோலும் வகையில் பொது வாக்கெடுப்பினை பன்னாட்டு மேற்பார்வையில் நடத்த வழிசெய்தலும்.

5.  ஈழத்தமிழர் உலகப்பேரவை ஒன்றினையும், நிறைவேற்று அதிகாரக் குழு ஒன்றினையும் தெரிவு செய்யும் முறைநெறிகளை வரையறை செய்தல்.

6.  அரசுகளுடனும், பல்அரசுகள்சார்ந்த நிறுவனங்களுடனும் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்துதல்.

7.  உலகெங்கும் பரவிவாழும் ஈழத்தமிழரின் சமூக, பொருண்மிய, பண்பாட்டு மேம்பாடுகளைத் துரிதப்படுத்தல்.

8.  தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களுக்கிடையிலான வேறுபாடுகளை தமிழர் தன்னாட்சி உரிமைக்கெதிரான பயத்தை தோற்றுவிக்கும் கருவியாகக் கொள்ளாமல், முஸ்லீம் மக்களுடன் இணைந்து இரு சமூகத்தினரும் ஒருமித்து பங்குபெறும் அரசியல் வழிமுறைகளை இனம் காணுதல்.

9.  வடக்கு- கிழக்கில் வாழும் ஈழத் தமிழர்களினதும், உலகெங்கும் வாழும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களினதும் நலன் பேணும் வகையிலான செயற்பாடுகளை ஊக்குவித்தல்.

இலங்கையில் தொடர்ந்து நிகழும் இனப்படுகொலையினை நிறுத்துமுகமாக பன்னாட்டு அரசு சார் நிறுவனங்களுடனும், அரச சார்பற்ற பன்னாட்டு நிறுவனங்களுடனும் தொடர்புகளை ஏற்படுத்திச் செயற்டுவதனையும் இக்குழு தனது பணியாகக் கொண்டுள்ளது.

இவ்வாறு தொடர்புகளைப் பேணிக் கொள்வதன் மூலம் ஈழத்தழிழரின் உயிர் இருப்பை உறுதி செய்தல் மற்றும் தமிழ் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளையும், தமிழ்ச் சிறுவர்கள்  மீதான வன்முறை சித்திர வதைகளையும் சிங்கள அரசும் அதன் இராணுவமும் மேற் கொள்ளாதபடி தடுத்து நிறுத்துதல், பிரிந்த குடும்பங்களை விரைவாக ஒன்று சேர்த்து இன்று கொடுமை முகாம்களில் வதைபடும் மூன்று இலட்சம் தமிழ் மக்களையும் அவர்களின் சொந்த வீடுகள், ஊர்களில் குடியமரும்படியான வழிவகைகளை இனம் காணுதல், தமிழ் இன அழிப்பில் ஈடுபட்டவர்களையும் மனித நேயத்திற்கு எதிரான போர்க்குற்றங்களைத் திட்டமிட்டுப் புரிந்தவர்களையும் நீதியின்படியாக விசாரணைக்கு உள்ளாக்குதல் போன்ற விடயங்களில் உரிய நடவடிக்கை எடுக்கத் தூண்டுவதில் இக்குழு கவனம் செலுத்தும்.

தனக்குரிய கடமைகளை நிறைவேற்ற உலகெங்கும் பரவி வாழும் தமிழ்மக்கள் மத்தியிலுள்ள அமைப்புகளுடனும் குறிப்பாக புதிய இளைய தலைமுறையினருடன் இணைந்து செயற்படுதலில் இக்குழு கூடுதல் கவனம் செலுத்தும். மேற்குறிப்பிடப்பட்ட இச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக அமைக்கப்படும் இச் செயற்பாட்டுக்குழு நாடுகள் தழுவியரீதியிலும் துறைகள் சார்ந்த வகையிலும் பல உபகுழுக்களை கொண்டியங்கும். இச் செயற்பாட்டுக்குழுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியில் நாம் தற்போது ஈடுபட்டிருக்கிறோம்.

இச் செயற்பாட்டுக்குழுவுக்கு உரிய ஆலோசனைகளை வழங்குவதற்காக பல்துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்ட ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் சொர்ணராஜா (பிரித்தானியா) பேராசிரியர் பிரான்சிஸ் பொய்ல் (அமெரிக்கா) பேராசிரியர் பி. இராமசாமி (மலேசியா) பேராசிரியர் நடராசா சிறிஸ்கந்தராசா (சுவீடன்) கலாநிதி முருகர் குணசிங்கம் (அவுஸ்திரேலியா) வைத்தியக்கலாநிதி சிவனேந்திரன் சீவநாயகம் (அவுஸ்திரேலியா) கலாநிதி வசந்தகுமார் (பிரித்தானியா) சட்ட அறிஞர் கரன் பார்க்கர்(அமெரிக்கா) திரு செல்வா சிவராசா(அவுஸ்திரேலியா) திரு போல் வில்லியம்ஸ் (நெதர்லாந்து) பேராசிரியர் பீற்றர் சால்க் (சுவீடன்) ஆகியோர் இவ் ஆலோசனைக்குழுவில் இணைந்து பணியாற்ற முன்வந்துள்ளனர்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் இச் செயற்திட்டத்திற்குரிய குழுக்களில் இணைந்து பணியாற்ற முன்வருமாறு ஆர்வமுள்ள அனைவரையும் வேண்டிக்கொள்கிறோம்.

இக்குழு 2009ம் ஆணடு  மார்கழி மாதம் 31ம்; திகதி வரை செயற்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இத் திகதி வரையிலான செயற்பாடுகளை இக் குழு அறிக்கையாகச் சமர்ப்பிக்கும். இத் திட்டம் தொடர்பாக தமிழ் மக்களினது ஆக்கபூர்வமான கருத்துக்களை வரவேற்கிறோம். மக்கள் தொடர்புக்குரிய மின்னஞ்சல் முகவரி:  info@govtamileelam.org

விசுவநாதன் உருத்திரகுமாரன்
இணைப்பாளர்
16.06.2009

Show More
Leave a Reply to thurai Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

21 Comments

  • SETHURUPAN
    SETHURUPAN

    இதிலை அதி சிறந்த வேடிக்கை என்ன தெரியுமா? ஒரு 25 வயது சிங்கள இழைஞனும் புகுந்துள்ளார். இவா; புலித்தேவனுக்கு பிறத்தாலை திரிஞ்சு புலிகளிடம் எத்தனை வீமானம் இருக்கு என்டு தேடி திரிஞ்ச காலம் மிகவும் நகைச் சுவையானது. அவரு ஒரு வெள்ளைகாற பேரிலை கொலன்டிலை மாணவர் பாராளுமண்றத்திலை இருந்தவர்.

    Reply
  • SUDA
    SUDA

    //மானிடம் பேணும் சட்ட நெறிகளையும் மனித நாகரீகத்தின் அனைத்துப் பண்புகளையும் முற்றுமுழுதாக மீறி….// உருதிரகுமாரன்.
    சகோதர இயக்கத்தவர்களை கொடூரமாக கொலை செய்தமை உயிருடன் எரித்தமை சகோதர முஸ்லிம் மக்களை அவர்களது வாழிடங்களிலிருந்து 10 மணித்தியால அவகாசத்தில் விரட்டியடித்தமை அவர்களை மஸ்ஜிதுகளிலும் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தபோதும் படுகொலை செய்தமை போன்ற இழிவசயல்களால் சிங்களத்துக்கு கற்றுக் கொடுத்தவர்களே உங்கள் புலிப்படைதானே உருதிரகுமார். எப்படியோ நீங்கள் வயிறு வளர்ப்பதற்காக எதையாவது ஏமாந்த புலம்பெயர் சனத்துக்கு சொல்லிக் கொண்டேயிருங்கோ.

    ஒன்றை மட்டும் ஞாபகத்தில் வச்சிருங்கோ உருதிரகுமார் புலித்தலைவருக்கு ஒரு அஞ்சலியேனும் செலுத்திடாத பாலசிங்கத்தையும் தமிழ்ச்செல்வனையும் துரோகிகளாக பார்க்கத் துவங்கியிருக்கின்ற இந்தப் புலம் பெயர் சமூகம் உங்களையும் துரோகிப்பட்டம் தந்து குப்பைக் கூடையில் போட நெடுநாளாக மாட்டாது.

    உண்மையில் சனத்துக்கு நல்லது செய்ய நாடினால் உங்கள் மூளையால் சனத்துக்கு படம் காட்டாமல் மனச்சாட்சியை முன்னிறுத்தி யதார்த்தத்தை மட்டும் செயற்படுத்த முனையுங்கள்.அது உங்களுக்கு நல்ல பிராயச்சித்தமாக அமையும்.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    நாட்டிலிருந்த பலர் உலகத்துக்கே பாடம் படிப்பிப்பதாக சொன்னார்கள். அவர்கள் கிணத்துத் தவளைகள்தான். இருந்தாலும் பரவாயில்லை, அவர்கள் அங்குள்ள தளத்திலிருந்து போராடிக் கொண்டிருந்தார்கள். அந்த உணர்வில் பேசினார்கள்.

    இப்போது உலக அரங்கில் சில படித்த அறிவுக் களஞ்சியங்கள், கனவுலகில் தமிழீழம் அமைக்க போவதாக சொல்கிறார்கள். என்ன கொடுமை?……… இதே ஆட்கள்தான் வணங்காமண் அனுப்பினார்கள். நடந்தது தெரியும்தானே? ஒரு கப்பலை சரியா விடுறதுக்கே தெரியாத ஆட்கள், இப்ப நாடு அமைக்கிறது என்பது இதுவும் அப்பாவிகளை கவிழ்கும் இன்னொரு கப்பல்தான் என்பதில் ஏதாவது சந்தேகம் வருமோ?

    Reply
  • thurai
    thurai

    5 வருடத்திற்கு ஒருமுறை யாழ்ப்பாணம் போய் அரசியல் நடத்திய பரம்பரை தான் இவர்கள். கொழும்பிலை அடிவிழ வெளிநாட்டிற்கு ஓடிவந்த கூட்டங்கள்.

    தமிழரைத் தாங்கள்தான் ஆள வேண்டும் என் எண்ணுபவர்கள். தமிழர்களால் தமிழர்களிற்கு ஏற்பட்ட தீங்குகளை சுட்டிக்காட்ட துணிவில்லாத கோழைகளாக் வாழ்பவர்கள்.

    இவர்கள் தமிழரின் உருமை விடுதலை பற்ரிப் பேச எந்த அருகதையுமற்ரவர்கள்.

    துரை

    Reply
  • மகுடி
    மகுடி

    அடுத்தவன் காணிகளைக் காட்டி, தோட்டத்தில நின்ற மாடுகளைக் காட்டி வங்கிக் கடன் வாங்கின கூட்டம், புலத்தில எவன் நிலத்தையோ காட்டி தமிழீழம் அமைக்கப் போகுதாம். நல்ல ஜோக்.

    முன்னர் சர்தார் ஜோக்குகள் பிரபல்யம். இன்னும் கொஞ்ச காலத்தில புலிகளது ஜோக்குகள்தான் பிரபல்யமாகப் போகுது. முன்ன இவங்கள் சொன்னதெல்லாம் வாசிச்சு பாருங்கோ உண்மையில சிரிப்பு வரும். சீரியஸா எடாதேங்கோ….எடுத்தால் இந்த மூர்த்திகளுக்கு முன்னால நீங்கள்தான் மென்டல் ஆசுப்பத்திரியில இருப்பீங்கள்.அதுக்கு நான் பொறுப்பில்ல. பை.

    Reply
  • palli.
    palli.

    சேது உங்கள் பின்னோட்டம் புரியவில்லை நேரம் இருப்பின் விபரமாக தரவும்
    பல்லி.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    “இலங்கை அரசு சார்பில் கருத்து வெளியுறவுத்துறை செயலர் டாக்டர் பாலித கோஹன, “மனப்பிரமை உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனையை நாடவேண்டும், மற்ற சிலருக்கு இண்டர்போல் என்ற சர்வதேச போலிசிடம் இருந்து தப்பிக்கவேண்டிய தேவை இருக்கிறது. அவர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்” என்று குறிப்பிட்டார்” – பிபிசி தமிழோசை

    “புலன்” பெயர்ந்த புண்ணாக்குகளுக்கு இதை விட சிறந்த பதில் கூற முடியாது.

    Reply
  • மதி
    மதி

    திரும்பவும் தமிழருக்கு “கோவிந்தா! கோவிந்தா!”

    தமிழ் மக்கள் கடந்த கால தவறுகளில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு தங்களின் உண்மையான தேவை என்ன? அதை எவ்வாறு அடைவது சாத்தியம்? வெறும் உணர்சியினாலோ, உணர்வுகளினாலோ பலி எடுப்பதையும் பலி கொடுப்பதையும் தொடர்ந்தும் கண்டும் காணாதுபோல இருக்கப்போகிறார்களா? இல்லை, தமது ஒளிமயமான எதிர்காலத்தை தாமே அமைக்க முன்வரப்போகிறார்களா?

    தற்காலத்தில் ஏற்படுவதுதான் ‘ஞானம்’ காலம் கடந்த ஞானம் ‘நஞ்சு’க்கு ஒப்பானது

    Reply
  • ராபின் மெய்யன்
    ராபின் மெய்யன்

    உங்களது (ஆயுத) வாண வேடிக்கை திடீரென்று எதிர்பாராமல் முடிவுக்கு வந்து விட்டதால், பிழைப்பு கெட்டுப்போய்விடும் என்ற பயத்தில் வார்த்தை ஜாலங்கள் காட்டக் கிளம்பிவிட்டீர்கள். அப்பாவி மக்களை அநியாயமாய் அழிப்பதைத் தவிர உங்களால் வேறு வழிகளால் பிழைக்க முடியாதா? இலங்கையில் வாழும் எந்த ஏழைத்தமிழனாவது தனக்கு உடனடியாக வெளிநாட்டில் ஒரு அரசாங்கம் வேண்டும் என்று கேட்டானா? அல்லது உங்கள் குழுவில் எவராவது கடந்த பத்து வருடங்களுக்குள் ஊருக்கு கொலிடே எண்டாலும் போயிருக்கிறீர்ககளா? ஐயா, இனிமேலாவது அந்த மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள்… அவர்கள் உங்களுக்கு கோயில் கட்டி கும்பிடுவார்கள்..

    Reply
  • மாயா
    மாயா

    புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் கே.பி. என்று அழைக்கப்படும் செல்வராசா பத்மநாதனை சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    இந்நிலையில், கே.பி.யின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற கற்பனையை கனவுலகத்திலேயே மட்டுப்படுத்துவோம் என்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார். – செய்தி

    Reply
  • மகுடி
    மகுடி

    ராபின் மெய்யன், மீன் பிடிக்கிறது மாதிரி மக்களை பிடித்து காசாக்கப் போறார்கள். இவர்களுக்கு எதுக்கு கோயில்? இவர்கள் சுடுகாட்டைக் கும்பிட்டவர்கள்.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    ஹவேர்ட் பல்கலைக் கழகத்தில் (அமெரிக்கா)சட்டம் பயின்ற திரு.உருத்திரகுமாரின் அக்கறையை குறைத்து மதிப்பிட முடியாதுதான்!.இவர் இலண்டனில் உள்ள தயா இடைக்காடரின் சொந்தக்காரர். இவர் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினரான திரு.லாரன்ஸ் திலகரின் நெருங்கிய நண்பர். இச் செயற்பாட்டுக் குழுவில் இடம்பெற்றிருக்கும் சுவீடன், பேராசிரியர் பீட்டர் சார்ல்ஸ் வீட்டிலுள்ள நிலவறை அலுவலகத்தில், உள்ள பிரத்தியேகமான சிலை சீன முகாமைப்பு வடிவிலான புத்தர் சிலையாகும். இவர் அப்சாலா பல்கலைக் கழகத்தில் செய்த ஆராய்ச்சி “மதங்களின் வரலாறு” ஆகும். கிடைத்த சில செய்திகளின்படி, மதிப்பிற்குறிய பேபி(இளங்குமரன்),கா.வே.பாலக்குமார், இளம்பரிதி, எழிலன், யோ.யோகி, புதுவை இரத்தினத்துரை, ஆகியோர் இலங்கை இராணுவத்திடம் சிறைக் கைதிகளாக உள்ளனர் என்று கூறுகிறது. சர்வதேசம் இதைதான் கூறுகிறது தமிழர்களின் தற்காப்பு உரிமை(ரைட் ஆஃப் வயலன்ஸ்) வலுக்கட்டாயமாக பிரிட்டிஷ் காலனியால் பறிக்கப்பட்டிருந்தது, அது இலங்கை மற்றும் இந்திய இராணுவங்களிடம் சுதந்திரம் என்றப் பெயரில் கையளிக்கப்பட்டிருந்தது, இதை தமிழர்களின்? கையில் மாற்றீடு செய்ய(தார்மீகக் கடமைகள் நிறைவேற்றப் படாத பட்சத்தில்)வழிவகை செய்யப் பட்டிருக்க வேண்டுமே தவிர, பிரிட்டிஷ் போலவே(அணுகுமுறை)வலுக்கட்டாயமாக கைப்பற்றப்பட எந்தவிதமான தார்மீக உரிமையும் கிடையாது என்பதாகும். இத்தகைய வழிவகைகளை செய்ய இந்த “தமிழீழ இடைகா(டர்)ல அரசாங்கம் உதவியாக இருக்கும் என்றால், அதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தமிழர்கள் தாங்கள் ஆயுதம் தாங்கும் உரிமையை கைவிடுவது என்பது சட்ட ரீதியாக எந்த “இனக்குழுவும்” ஏற்றுக் கொள்ளமுடியாது, இதை சொல்லுவத்ற்கு இலங்கைத் தமிழருக்கு உரிமையும் கிடையாது (இலங்கையில் மட்டும் தமிழர் இல்லை), ஆனால் அதற்காக ஆயுதம் ஏந்துவதும் “சட்டப்படி” குற்றமாகும் (எந்தஒரு இறையாண்மையுள்ள நாட்டின் அங்கீகாரமும் இல்லாமல்).

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    DEMOCRACY,
    நீங்கள் ஏதாவது சொல்ல வாறீங்களா?? நான் மேலிருந்து கீழ் நோக்கியும், கீழிருந்து மேல் நோக்கியும் வாசித்து பார்த்தேன். ஆனால் சத்தியமாய் ஒன்றுமே புரியவில்லை, தலை சுத்தியது தான் மிச்சம்………

    Reply
  • நண்பன்
    நண்பன்

    பார்த்திபன் , உங்களைப் போலவே DEMOCRACY சொன்னது ஒன்றுமா விளங்கயில்ல. சுருக்கிச் சொல்லப் போய் செருகிட்டு என்று நினைக்கிறன். am i correct?

    Reply
  • BC
    BC

    DEMOCRACY என்ன சொல்கிறார் என்று எனக்கும் விளங்கவில்லை.மக்களை நிம்மதியாக வாழ அனுமதிக்க முடியாது என்று சொல்லவில்லை தானே!!

    Reply
  • IHSAN
    IHSAN

    சிறுபான்மையின் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஆயுதப்போராட்டகாலத்தில் இழந்தவைகளை மீளப்பெருவதுதே சிறுபான்மையின் சமகால முதற்பணி. அமைச்சர் கருணா மற்றும் அரசுடன் இணைந்த சிறுபான்மை அரசியல்வாதிகள் இவற்றுக்கு முனைப்புடன் மக்கள் இலங்கைச் சிறுபான்மையுடன் ஒத்துழைக்க உறுதியுடன் இருக்கின்றனர். இந்திய மத்தியரசும் சிறுபான்மை நலன்பற்றி அக்கறைகொள்வதற்கு இலங்கை அரசை நிர்பந்திக்கிறது

    அரசும் சிறுபான்மை செறிந்து வாழும் பிரதேசங்களை வளப்படுத்த வாக்குறுதி அளித்துள்ளது. சுமபால நிகழ்வுகள் இவ்வாரு இருக்க தோழ்வியுற்ற விடுதலைப் புலிகள் தற்போது இக்கட்டுல் அகப்பட்டுள்ள சிறுபான்மையை மறந்துவிடுவது தர்மமில்லை. எனவே புலிகளின் தனித்துவத்தை இழக்காமல் கட்டுருவாக்கம் செய்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசு என்ற நிறுவன அமைப்பினுடாக தமிழர் நலன்களை பேண அவர்கள் முன்வந்துள்ளார்கள். என்னைப் பொருத்தவறை சிறுபான்மை யாராயினும் இவற்றில் எதற்காயினும் எதிர்ப்பைத் தெரிவிப்பது சிறுபான்மை நலன்களுக்கு தடையாக இருப்பதாகவே உணர்ந்துகொள்வேன்

    பேருவளை – இஹ்ஸான்

    Reply
  • தாமிரா மீனாஷி
    தாமிரா மீனாஷி

    முருகர் குணசிஙகம் சாந்தனின் (லண்டன் வசூல் பொறுப்பாள்ர்) மைத்துனர் என்பதைத் தவிர அவருக்கு தமிழ் மக்களின் அரசியல் ஆலோசகராக இருக்க வேறு என்ன தகுதியிருக்கிறது? அவர் கலாநிதிப் பட்டம் பெற்ற வரலாறே நிறைய கிசு கிசுக்கள் நிரம்பிய விஷயம். அவர் எழுதியதாக கனடாவில் இயல் விருது வழங்கப்பட்ட(அதிலும் அரசியலா?)”இலங்கையில் தமிழர்” நூல் ஜெர்மனியில் வெளியிடப்பட்ட விதம் அறிவிலித் தனத்தின் உச்சக் கட்டம். இந்த நூல் நொர்வேயில் வெளியிடப்பட்டபோது அதை பாராட்டிப் பேச அழைக்கப்பட்டவர் டெல்லியில் சகல ஆண்களுக்கும் தெரிந்த அனிதா ப்ரதாப்! அவருக்கும் இலங்கையில் தமிழரின் பூர்விக வரலாற்றிற்கும் என்ன சம்பந்தமோ..? அது மு. கு. விற்கே வெளிச்சம். அது மட்டுமல்ல, இந்த வெளியீட்டு விழாக்களின் மொத்த செலவையும் பொறுப்பேற்றது யாரென்று நினைக்கிறீர்கள்?நடுங்கும் குளிரில் உழைத்து விடுதலைக்காகப் பணம் கொடுத்த அப்பாவி தமிழர்தான்…இவர்கள் தமது அரசாங்கத்திற்கு அரசியலமைப்பு எழுதினால் அதையும் தாம்பாளத்தில் வைத்து கோயிலிலிருந்து குடை குஞ்சரங்களுடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று தமது கலாநிதிப் பட்டத்தின் மகிமையை உறுதிசெய்வார்கள். தப்பித்தவறி யாராவது விமர்சனம் அல்லது விவாதம் செய்யக்கிளம்பினால் அவர்கள் கதி அவ்வளவுதான்…. பேருக்கும் புகழுக்கும் எந்தளவு கீழ் நிலைக்கேனும் இறஙகக் கூடிய இவர்கள் ஆலோசனை சொன்னால் இலங்கையில் தமிழ் மக்களின் எதிர்காலத்தைப் பற்றி எவராவது சிந்தித்து நேரத்தை வீண்டிக்க வேண்டியதில்லை என்பதை உறுதியாக நம்பலாம்.

    Reply
  • BC
    BC

    //இஹ்ஸான்-சிறுபான்மை யாராயினும் இவற்றில் எதற்காயினும் எதிர்ப்பைத் தெரிவிப்பது சிறுபான்மை நலன்களுக்கு தடையாக இருப்பதாகவே உணர்ந்துகொள்வேன்//

    புலிகள் எப்போதும் சிறுபான்மை நலன்களுக்கு தடையாகவும் அவர்கள் அழிவுக்கு காரணமாகவுமே இருந்திருக்கிறார்கள்.நாடுகடந்த தமிழீழ அரசு என்பது தொடர்ந்தும் புலம்பெயர் மக்களிடம் பணம் கறக்கும் திட்டமே.100% புலிகள் நலன் சம்பந்தப்பட்டது.

    Reply
  • Saambanaar Sugumugam
    Saambanaar Sugumugam

    Will the exile transitional government be an all party government or one party government?

    Will it be an open or secretive government?

    What will be its relationship to the Tamil people living in IDP Camps, those living other parts of the country including Colombo, Jaffna, Trincomalee, Batticaloa and Mannar?

    Reply
  • ThamilMahan
    ThamilMahan

    இங்கை குறைகூறுபவர்கள் இன்றைய பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு சொல்லாம மற்றவர்கள் ஒரு தீர்வை சொன்னாலும் அதை புலிகள் தீர்வு என்று சொல்லி காலத்தை கழித்து வருகிறார்கள். எப்பதான் நீங்கள் திருந்த போறீர்களோ தெரியவில்லை

    Reply
  • Karikalan
    Karikalan

    Democracy you are totally wrong man. Rudra never attended Harvard. He is a graduate from Southern Methodist University of Texas. Dr. Neelan Thiruchelvam got an admission to Rudra at Harvard but Rudra did not make use of it.

    I am unable to comment on the rest of your writing. As you do not even know where did Rudra study but claim to know a lot. Your other views also will surely will have facts wrong. do not live on what other say. Check for yourself.

    Rudrakumar failed in his carreer as a lawyer.

    Reply