டெங்கு ஒழிப்பு சம்பந்தமாக எடுக்கக் கூடிய சகல நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கும் உள்ளூராட்சிச் சபை நிறுவனங்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார். டெங்கு ஒழிப்பு நடவடிக்கை சம்பந்தமாக நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை வழங்கியுள்ளார்.
சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, அமைச்சர் ஜயரத்ன ஹேரத், அமைச்சின் செயலாளர் அதுல கணந்த லியனகே, மாகாண சபை, உள்ளூராட்சிச் சபை அமைச்சின் செயலாளர் கெஷின் ஹேரத், கொழும்பு மாநகர சபை ஆணையாளர் ஹத்தானி விஜேவர்தன உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.
பல உள்ளூராட்சிச் சபைகளுக்குப் பைகளைப் போடுவதற்கு உரிய இடமில்லையானால் அவசரகால சட்ட விதிகளுக்கமைய தற்போது உள்ளூராட்சி நிறுவனங்கள் குப்பை போடும் இடங்களை அரசாங்கம் சுவீகரித்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இதன்போது ஜனாதிபதி உரிய அதிகாரிகளைப் பணித்துள்ளார்.
குப்பை கூளங்களினால் சகல உள்ளூராட்சி நிறுவனங்களிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதைத் தவிர்க்கும் வகையில் குப்பைகளை மீள்சுழற்சிக்குட்படுத்த விரும்பும் முதலீட்டாளர்க ளுடன் கலந்துரையாடி அதற்கேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அத்துடன், டெங்கு ஒழிப்பு சம்பந்தமாக குறிப்பாக சிவில் பாதுகாப்புப் பிரிவு, கல்வியமைச்சு, சமுர்த்தி நிறுவனங்கள் மற்றும் அரச ஊழியர்களுக்கும் தெளிவுபடுத்தி இது தொடர்பில் தொடர்ச்சியான செயற்றிட்டங்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
ஒவ்வொரு வருடமும் மழைக் காலங்களில் டெங்குக் காய்ச்சல் பரவி வருவதைக் கவனத்திற் கொண்டு வீட்டுத் தோட்டம், வேலைத் தளங்கள் மற்றும் டெங்கு நுளம்பு உற்பத்தியாகும் இடங்களை இனங்கண்டு அவற்றை அழிப்பதில் மக்களுக்கு விழிப்புணர்வூட்ட வேண்டுமெனவும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.
கியூபாவில் டெங்கு நுளம்பு ஒழிப்பதற்காக உபயோகப் படுத்தப்படும் பக்aரியாவை இலங்கைக்குக் கொண்டு வந்து அதன் சாத்தியத் தன்மையை பரீட்சிக்குமாறு தெரி வித்த ஜனாதிபதி, இங்கு அந்த பக்aரியாவை உருவாக்க விரும்புபவர்களை ஊக்குவிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
எத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுத்த போதும் இத்தகைய தொற்று நோய்களை கட்டுப்படுத்த சட்டத்தினால் மட்டும் இயலாது எனக்குறிப்பிட்ட ஜனாதிபதி, சகலரும் தமது பொறுப்புக்களை உணர்ந்து செயற்படுவது மிக முக்கியமெனவும் தெரிவித்தார்.
இதேவேளை, டெங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளோர் தொகை நேற்று வரை 11,968 ஆக அதிகரித்துள்ளதுடன் 146 பேர் இதுவரை பலியாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.