இலங் கையில் வருடாந்தம் மூன்றுலட்சம் வாகன விபத்துக்கள் இடம் பெறுகின்றன. இதில் 2300 பேர் வரை பலியாகின்றனரென பயணிகள் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன் கிழமை இடம்பெற்ற வீதி அபிவிருத்தி அதிகார சபை திருத்த சட்டமூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
தினமொன்றுக்கு எட்டரை லட்சம் மக்கள் கொழும்புக்குள் வருகின்றனர். இவர்களில் 3 இலட்சம் பேர் ரயில்மூலமும் ஐந்தரைலட்சம் பேர் 12 ஆயிரம் பஸ் வண்டியிலும் 1,75000 பேர் ஏனைய வாகனங்கள் மூலமும் வருகின்றனர்.
வருடாந்தம் 3 இலட்சம் விபத்துகள் இடம்பெறுகின்றன இதில் 2300 பேர் உயிரிழக்கின்றனர். எனவே, உரிய வீதி அபிவிருத்தி தேவைப்படுகின்றது. அதனை இலக்காகக் கொண்டே நாம் செயற்பட்டு வருகின்றோம்.
களனி மேம்பாலம் கட்டப்படுவதற்கு பெரும் தொகைப்பணம் செலவிடப்பட்டதாக சிலர் விமர்சித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த மேம்பாலம் அமைக்கப்படுவதற்கு முன் இந்த வீதியில் பெரும் வாகன நெருக்கடி ஏற்பட்டிருந்தது.
24 மணி நேரத்தினுள் 8 மணி நேரம் ரயில் பாதை மூடப்பட்டிருந்தது. இதன் காரணமாக எரிபொருள் வீண்விரயமாகியது. எரிபொருள் சுமார் 1.5 பில்லியன் ரூபாவரை வீண்விரயமாகியது தற்போது இப்பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது.