யுத்தம் முடிவடைந்துள்ளபோதும் பலமான பாதுகாப்புப் படைகள் நாட்டுக்கு அவசியம் என்பதால் மேலும் 50 ஆயிரம் பேர் முப்படைகளுக்கும் பொலிஸ் சேவைக்கும் புதிதாகச் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர் என தேசிய பாதுகாப்பு பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,
பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் முடிந்து விட்டதால் படையனரின் எண்ணிக்கை குறைக்கப்படுமா என்றொரு கேள்வி எழுகின்றது. எனினும் அவ்வாறு நடைபெறாது. இனி இராணுவத்தினருக்கு வேலையில்லை அவர்கள் வீடு செல்லவேண்டியதுதான என சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர். இது தவறான கணிப்பீடாகும்.
மூன்று தசாப்தங்களாக அரசின் கட்டுப்பாட்டில் இருக்காத 16 ஆயிரம் சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பு இப்போது முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது. எனவே இங்கு பாதுகாப்பை மேலும் பலப்படுத்த பலம் வாய்ந்த கூடுதலான படையினர் தேவைப்படுகின்றனர். அதற்காவே முப்படைக்கும் பொலிஸ் சேவைக்கும் புதியவர்களைச் சேர்த்துக்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.