யாழ். தீவு பகுதியில் 6 இந்திய மீனவர்களின் சடலங்கள் கரையொதுங்கின

இராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்றபோது காணாமற்போனதாக கூறப்படும் இந்திய மீனவர்கள் அறுவரின் சடலங்கள் இலங்கையின் வடக்கு கடலில் கரையொதுங்கியிருப்பதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் டி. கே. பி. தஸநாயக்க தெரிவித்தார்.

நெடுந்தீவு மற்றும் ஊர்கா வற்றுறை பகுதிகளில் கடந்த 19 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையில் கரையொங்கிய ஆறு இந்திய மீனவர்களின் சடலங்களை கடற்படையினர் மீட்டிருப்பதாகவும் கடற்படைப் பேச்சாளர் கூறினார். இந்திய மீனவர்கள் ஏழு பேரைக் கொண்ட படகு கடலில் கடந்த வாரம் கவிழ்ந்துள்ளது.

இதனையடுத்து இம் மீனவர்கள் பற்றிய தகவல்கள் தெரியவரின் அறிவிக்குமாறு இந்திய பொலிஸார் எமக்கு அறிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து நாம் வடக்கு கடலில் கூடுதல் அவதானத்துடன் இருந்தோம். இதன்போதே கரையொதுங்கிய ஆறு சடலங்களும் மீட்கப்பட்டதாகவும் கடற்படைப் பேச்சாளர் கூறினார்.

இந்திய மீனவர்கள் அறுவரின் சடலங்களும் யாழ்ப்பாண வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக இந்தியப் பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்ட கடற்படை பேச்சாளர், சடலங்கள் குறித்த மேலதிக விடயங்களை இந்திய உயர் ஸ்தானிகராலயம் மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *