இலங்கையில் வீட்டுப் பணியாளர்களின் தொழில் உரிமைகளைப் பாதுகாத்தல் எனும் தலைப்பில் செங்கொடிச் சங்கம் அதன் மகளிர் பிரிவுடன் இணைந்து கருத்தரங்கொன்றை நடத்தியுள்ளது. வீட்டுப் பணியாளர் தொழில் உரிமைகள் கடுமையாக மீறப்படுகின்றன. இவர்கள் ஒழுங்கமைக்கப்படாத தொழிலாளர்களாகவுள்ளதால் தொழில் சட்டதிட்டங்களுக்கு அமைவாக நடவடிக்கை எடுக்க முடியாதுள்ளது. புதிதாத அத்தொழிலாளர்களின் தேவைகளுக்கு அமைய சட்டத்தை உருவாக்கும் நோக்கில் கொழும்பு,ஜானகி ஹோட்டலில் நடைபெற்றபோது பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் அரச தனியார் தொழிற்சங்கங்கள் பங்குபற்றின.
வீட்டுப் பணியாளருக்கு உரிய சட்டமொன்று அவசியமானது. எனினும், இவர்கள் வரையறையற்றிருப்பதால் சட்டத்தை உருவாக்க சிரமமாகவுள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் இங்கு பேசுகையில் தெரிவித்தார்.
அத்துடன் தேசிய சட்டத்தின் கீழ் வீட்டுப் பணியாளர்களின் சில உரிமைகள் மீறப்படுமெனின் நடவடிக்கை எடுக்கப்படும். உதாரணாக வயது குறைந்த பணியாளர்கள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகின்றதெனவும் அவர் மேலும் தெரிவித்தார். அதேநேரம், முக்கியமாக வீட்டுப் பணியாளர்கள் குறைந்த சம்பளத்தைப் பெறுவதே பெரிய பிரச்சினையாக உள்ளதாக செங்கொடிச் சங்கத்தின் மகளிர் பிரிவு தெரிவித்தது.
எனவே, சம்பள ரீதியில் பாதுகாப்பைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமெனவும் இங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.