ஐ.சீ.சீ. சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் சுற்றுத் தொடரில் கலந்துகொள்வதற்காக இலங்கை கிரிக்கெட் அணியினர் இன்று அதிகாலை தென்னாபிரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. கொழும்பிலுள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமையகத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற சமயக் கிரியைகளையடுத்து குமார் சங்கக்கார தலைமையிலான இலங்கை அணி வீரர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக தென்னாபிரிக்காவுக்குப் பயணமாகினர்.
உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு அடுத்தபடியாக இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வரும் சம்பியன்ஸ் கிண்ண சுற்றுத் தொடர் அடுத்த மாதம் 22ஆம் திகதி தென்னாபிரிக்காவில் ஆரம்பமாகவுள்ளது.
14 நாட்களுக்குத் தொடராக நடைபெறவுள்ள இச்சுற்றுப் போட்டி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி இடம்பெறவுள்ள இறுதி ஆட்டத்துடன் முடிவடையவுள்ளது.
மினி உலகக் கிண்ணம் எனக் கருதப்படும் இத்தொடரில் 8 நாடுகளின் அணிகள் பங்குபற்றவுள்ளதோடு அவை ஏ மற்றும் பி என இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
அடுத்த மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இத்தொடரின் முதல் ஆட்டத்தில் இலங்கை அணி தென்னாபிரிக்க அணியை எதிர்த்தாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.