கிழக்கு மாகாண இலக்கியப் பெருவிழா எதிர்வரும் 24 ம், 25 ம், திகதிகளில் அம்பாறை டீ. எஸ். சேனநாயக்கா கல்லூரியில் இடம் பெறவுள்ளது. கிழக்கு மாகாண கல்வித் திணைக்களமும், கல்விப் பண்பாட்டலுவல்கள் அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர். இந்த இலக்கிய விழாவையொட்டிய ஆய்வரங்கு நிகழ்வு அக்கரைப்பற்று அல்ஸிராஜ் மகா வித்தியாலயத்தில் எதிர்வரும் 24 ஆம் திகதி (24/9/2009) இடம் பெறவுள்ளதாக கலாசார உத்தியோகத்தர் க. அன்பழகன் தெரிவித்தார்.
இந்த ஆய்வரங்கில் “கிழக்கிலங்கையின் நாட்டார் நம்பிக்கைகள்” எனும் தலைப்பில் எம். எஸ். அபுல்ஹஸனும், “கிழக்கிலங்கையின் கூத்து மரபு” எனும் தலைப்பில் நடராஜரத்தினமும், “கிழக்கிலங்கையின் நாட்டார் பாடல்கள்” எனும் தலைப்பில் ரமீஸ் அப்துல்லாவும், “கிழக்கிலங்கையின் நாட்டார் பட்டப் பெயர்கள்” – எனும் தலைப்பில் த. மலர்ச் செல்வனும், “கிழக்கிலங்கையின் நாட்டாரியல் பழமொழிகள்” – எனும் தலைப்பில் எஸ். முத்துமீரானும், “கிழக்கிலங்கையின் நாட்டார் ஆய்வுகள் அன்றும் இன்றும்” எனும் தலைப்பில் கலாநிதி. செ. யோகராசாவும், “கிழக்கிலங்கையின் இடப்பெயர்கள்” எனும் தலைப்பில் ஜலீலும், “கிழக்கிலங்கையின் நாட்டாரியல் வாய்மொழி மொழிகள் எனும் தலைப்பில் பேராசிரியர் சண்முகதாஸ¤ம், “கிழக்கிலங்கை மக்களின் வாழ்வும் வளமும்” எனும் தலைப்பில் எம். ஏ. மஜீத்தும், “கிழக்கிலங்கையின் நாட்டார் அறிவியல் எனும் தலைப்பில் தேனூரானும், “கிழக்கிலங்கையின் கிராமிய சிறு தெய்வ சடங்கு” எனும் தலைப்பில் முருகேசு தயாநிதியும் கட்டுரைகளைச் சமர்ப்பிக்கவுள்ளனர்.
இவ்வாண்டுக்கான கிழக்கு மாகாண இலக்கியப் பெருவிழாவில் நாடகம், நாட்டு கூத்து வளர்ச்சிக்காக காத்திரமான பணியாற்றிவரும் பேராசிரியர் சி. மெளனகுரு தேசிய விருது வழங்கி கெளரவிக்கப்படவுள்ளார்.
இவ்விழாவில் இவ்வாண்டுக்கான கிழக்கு மாகாண முதலமைச்சர் விருது பெரும் கலைஞர்களின் விபரம் வருமாறு, அக்கரை மாணிக்கம் (வ. ஞானமாணிக்கம்) த. தில்லைமுகிலன், ஆ. சிங்கராயர், செல்வி மணிமேகலா கார்த்திகேசு, இராமன் பிச்சை, ஏ. ஆர். ஏ. பிஷ்றுல்ஹாபி, என். மணிவாசகன், ஏ. முஸம்மில் இ. அரசகேசரி, க. தருமரெத்தினம், மா. செல்வராசா, க. செல்வத்தம்பி, பாவலர் சாந்திமுகைதீன் ஆகியோர் நாடகம், நாட்டுக் கூத்து, கவிதை, இலக்கியம், உயர் கல்வி, கைவினை, எழுத்து ஆகிய துறைகளுக்காக தெரிவு செய்யப்பட்டு கெளரவிக்கப்படுகின்றனர்.