தடுப்பு முகாம் தமிழர்கள் இலங்கை பிரஜைகளா? : வாசு

Wanni IDPsகடந்த 30 வருடங்களுக்கு மேலாக தமிழீழ தனித்தேசம் அமைக்க நடைபெற்ற ஆயுதப் போராட்டம் இன்று முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் கடந்த நான்கு மாதங்களாக இலங்கை அரசின் தடுப்பு முகாம்களுக்குள் இருக்கும் மக்களின் அவல வாழ்விற்கு முற்றுப்புள்ளி வந்தபாடில்லை. இந்த மக்கள் இன்னுமொரு நாட்டின் போர்க் கைதிகள் போலவே தற்போதும் நடாத்தப்பட்டு வருகிறார்கள். விடுதலைப் புலிகளை களையெடுப்பதாகவும் அதனால் தான் மக்களை தடுத்து வைத்திருப்பதாகவும் அரசு கூறுகிறது.

ஆனால் விடுதலைப் புலிகளின் மிக முக்கியமான புள்ளிகளான தயா மாஸ்டரையும் ஜோர்ஜ் மாஸ்ரையும் பிணையில் விடுவித்துள்ளது.  புலிகளின் இந்த இரு மாஸ்டர்களும் புலிகள் இயக்கத்தில் மிக முக்கிய பதவி வகித்தவர்கள். புலிகளின் தலைவருடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள். ஆனால் இவர்களை சுதந்திரமாக வெளியில் செல்ல அனுமதித்த அரசு புலிகள் இயக்கத்தால்  வலிந்து கடத்திச் செல்லப்பட்ட இளைஞர்களையும் யுவதிகளையும் மக்களையும் இன்னமும் தடுப்பு முகாம்களில் வைத்திருப்பது மிகவும் வேடிக்கையாக உள்ளது. புலிகளை பிரித்தெடுக்கிறோம் வடித்தெடுக்கிறோம் என்று புனைகதை பேசும் அரசு நூற்றுக்கணக்கான விடுதலைப் புலி உறுப்பினர்கள் இந்த முகாம்களில் இருந்து படையினருக்கும் உயர் அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்து வெளியேறியதை அறியவில்லையா? புலிகள் அமைப்பின் நிதர்சனம்  தொலைக்காட்சியில் அடிக்கடி வந்து போன திருநாவுக்கரசு கொழும்பு விமான நிலையத்தின் ஊடாக தப்பி சென்றபோது இலங்கை அரசு கண்களை இறுக மூடிக்கொண்டிருந்ததா?

இன்று வன்னி பிராந்தியத்தில் முழு அமைதி நிலவுகிறது. புலிகள் அமைப்பின் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டனர். அல்லது கைது செய்யப்பட்டுள்ளனர். புலிகள் அமைப்பின் அதிகாரங்களை முழுவதுமாக தம்வசம் வைத்திருந்த புலிகளின் மேல்கட்டுமானம் முற்றிலுமாக சிதைக்கப்பட்டுள்ளது. அதன் தலைவர்கள் கொல்லப்பட்டும் கைது செய்யப்பட்டும் உள்ளனர். அது மட்டுமல்லாது மே 17ம் திகதி  முள்ளிவாய்க்கால் முற்றுகையை உடைத்து சென்ற புலிகளின் ஒரே ஒரு தளபதியான கெங்காவும் (கருணாவின் அந்தஸ்தை ஒட்டிய ஒரு கிழக்கு மாகண தளபதி) கடந்த ஜுலை 26ம் திகதி வெள்ளை கொடியுடன் விசுவமடுவில் இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளார். உண்ண உணவும் இன்றி வெளியுலகில் எந்த தொடர்புமற்ற நிலையில் ஜெயந்தன் படையணியின் முக்கிய தளபதி இவ்வாறு சரணடைந்தது வன்னியில் புலிகளின் இருப்பை நன்கே வெளிப்படுத்துகிறது. உதிரிகளாக காடுகளுக்குள் அனாதரவாக திரியும் ஏனைய புலிகள் தலைமையின் தொடர்புகள் அற்று பட்டினியையும் தனிமையையும் எதிர்கொள்ள முடியாது காடுகளில் இருந்து கிராமங்களை நோக்கி வருகின்றனர். இவர்களில் பலர் தற்போது கைது செய்யப்பட்டும் உள்ளனர். இந்த நிலையில் இன்னமும்  புலிகள் போரட இருக்கிறார்கள் என்ற பயப்பிராந்தியை அரசு தோற்றுவிப்பதுதான் வேடிக்கையாக உள்ளது.

இரண்டரை லட்சம் மக்களை தொடர்ந்து முகாம்களில் வைத்திருப்பதுடன் வன்னியில் மக்களின் சுதந்திர நடமாட்டங்களை தடுப்பதே அரசின் தற்போதைய நோக்கமாக தெரிகிறது. கடந்த வாரங்களில் ஒரு தொகை மக்கள் மீளக் குடியமர்த்த கிழக்கிற்கும் யாழ் நாகரிற்கும் எடுத்துச் செல்லப்பட்டனர். இவர்களில் பலர் இன்னமும் இடைத்தாங்கல் முகாம்களில் தடுத்து வைத்திருப்பது அரசு மேலான சந்தேககங்களை மேலும் வலுப்படுத்துகிறது. இருப்பினும் கிட்டதட்ட 5000 பேர் கிழக்கில் மீள குடியமர்த்தப்பட்டு உள்ளதாக தெரியவருகின்றது. இந்த மக்கள் அண்மையில் தாம் முகாம்களில் பட்ட அவலங்களை வெளிப்படையாக கூறியதுடன் அரசின் அசமந்தை போக்கை வெளிப்படையாகவே விமர்சித்தார்கள்.

இன்று அரசு இவ்வளவு தாமதமாக பாதிக்கப்பட்ட மக்களை மீளக்குடியமர்த்த முயல்வது தமிழ் பேசம் மக்களின் பாரம்பரிய வாழ் நிலங்களின் வரைபடத்தை மாற்றவே. கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒரு நிலையை வன்னி பிராந்தியத்தில் கொண்டுவரவே இலங்கை அரசு முயல்கிறது. கிழக்கில் ஏற்கனவே சிங்கள மக்களின் குடியேற்றங்கள் அவர்களின் நிரந்தர வாழ்விடமாகவும் மாறியுள்ளது. இன்று கிழக்கில் ஏறக்குறைய தமிழ் மக்களின் பெரும்பான்மைக்கு சமமான சனத்தொகையில் சிங்களவர்கள் குடியிருக்கிறார்கள். அதே போல் வன்னியிலும் சிங்கள மக்களை குடியேற்றுவதன் மூலம் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையக  இல்லாதொழிக்க முனைவதாக பலத்த சந்தேகம் எழுகிறது.

அண்மையில் கிளிநொச்சியூடாக பயணம் செய்த ஒரு பயணியின் தகவல் அடிப்படையில் கிளிநொச்சியில் முன்பு இருந்த அனைத்து கட்டிடங்களும் புல்டோசர்களால் தரைமட்டமாக்கப்பட்டு உள்ளது. கிளிநொச்சி கைப்பற்றப்பட்ட போது முதல் தடவையாக சென்ற போது அரைகுறையாக இருந்த கட்டிடங்கள் கூட தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. ஆனால் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ள கட்டிடங்கள் மட்டும் சிறப்பாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது. மக்களை இந்த பகுதியில் குடியமர்த்த வேண்டுமாயின் வீடுகள் மீளக்கட்டப்பட வேண்டும். இந்த நிலையில் வன்னி மக்கள் தொடர்ந்தும்  தடுப்பு முகாம்களில் நீண்ட காலம் தங்கி இருக்க வேண்டிய கட்டாயம் தொடரப் போகிறது. மக்கள் மீள குடியமர்வில் கண்ணி வெடிகளின் அபாயம் என்ற அடுத்த காரணத்தை கூறும் அரசு  மக்களை தம் வாழிடங்களுக்கு செல்ல தடுப்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒரு விடயம். அண்மையில் அரியாலையில் வெடித்த கண்ணி வெடியில் மக்கள் பாதிக்கப்பட்டது தெரிந்த விடயமே. அரியாலை பகுதி 1995இல் விடுவிக்கப்பட்ட ஒரு பிரசேதம். இருப்பினும் கண்ணிவெடிகளை 100 வீதம் அகற்ற முடியாது என்பதற்கு இது ஒரு சான்று. 

ஆனால் இந்த காரணங்களை காட்டி மக்களை தொடர்ந்தும் முகாம்களில் வைத்திருப்பது அவசியமான ஒன்றாக இருப்பதை நாம் ஒப்புக்கொண்டாலும் மக்களின் சுதந்திர நடமாட்டத்தை ஏன் அரசு தடுக்கிறது என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. கண்ணி வெடியுள்ள பிரதேசங்களை குறீயீடு செய்து அந்த பகுதிகளுக்கு மக்கள் செல்வதை தடுப்பது நியாயாமே. ஆனால் தடுப்பு முகாமில் உள்ள மக்களை தொடர்ந்தும் துப்பாக்கி முனையில் காவலில் வைத்திருப்பது என்ன நியாயம்? காவல்கள் அகற்றப்பட்டு மக்களின் சுதந்திர நடமாட்டம் அனுமதிக்கப்பட்டால் மக்கள் தாம் விரும்பியதை செய்வார்கள். புலிகளால் வலிந்து அழைத்து செல்லப்பட்ட இந்த மக்களிற்கு இன்று முக்கிய தேவையாக இருப்பது சுதந்திர நடமாட்டமே. புலிகளின் மிகமோசமான அடக்குமுறைக்குள் சிக்கி தவித்த இந்த மக்களின் இன்றைய தேவை சுதந்திரமான வாழ்வு. தொடர்ந்தும் துப்பாக்கி முனையில் திறந்தவெளிச் சிறைக்கைதிகளாக இருக்க இவர்கள் செய்த பாவம்தான் என்ன? தமிழர்களாக பிறந்த ஒரு குற்றமும் புலிகளின் அடக்கு முறைக்குள் சிக்கி தவித்ததுமே இந்த மக்கள் செய்த குற்றங்களா?

அண்மையில் மெனிக்பார்ம் முகாமில் கடமை புரியும் ஒரு உதவியாளர் தெரிவிக்கையில் முகாம் மக்கள் மிக விரைவில் மீள குடியேற்ற தவறும் பட்சத்தில் பல்வேறு சிக்கல்களை அரசு எதிர்நோக்க வேண்டியிருக்கும் என தெரிவித்தார். பருவகால மழை இந்த மாத இறுதியில் ஆரம்பித்தால் முகாம்கள் வெள்ளத்தில் மூழ்குவதுடன் தொற்று நோய்கள் மூலம் மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் என அச்சம் தெரிவித்துள்ளார். மூன்று நான்கு நாட்கள் மட்டுமே பெய்த மழையில் இடம்பெற்ற அவலங்களை நாம் முன்னர் கண்டோம். ஆனால் பருவகால மழை தினமும் பெய்யும் பட்சத்தில் நிலைமைகள் மிகவும் மோசமாக இருக்கும் என அச்சம் தெரிவித்ததார். அவர் மேலும் தெரிவிக்கையில் இளைஞர்கள் மிகவும் விரக்தியான நிலையில் இருப்பதாகவும் தமக்கு பேசுவதற்கோ சுதந்திரமாக நடமாடுவதற்கோ எந்த அனுமதியும் இல்லை என்று அங்கலாய்ப்பதாகவும் பாதுகாப்பின்மை, கல்வியின்மை, எந்தவித தொழில்சார் பயிற்சிகளும் அற்ற நிலையில் தாம் விரக்தியின் உச்சத்தில் இருப்பதாகவும் இவர் தெரிவிக்கின்றார். பல இளைஞர்கள் தாமாகவே படித்து க.பொ.தா உயர்தர பரீட்சையில் பல்கலைக்கழக அனுமதிக்கான சித்தியும் பெற்றுள்ளார்கள். ஆனால் இவர்கள் இந்த முகாம்களை விட்டு வெளியேறி பல்கலைக்கழகம் போக முடியாத நிலையில் உள்ளனர். தாம் ஏன் வாழ வேண்டும் என்ற கேள்வியுடன் வாழும்  இந்த இளைஞர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்துவதைதான் அரசு விரும்புகிறதா?

கடந்த மே மாதம் புலிகளை வெற்றி கொண்ட  விழாவில் பேசிய ஜனாதிபதி இலங்கையின் அனைத்து பகுதிகளும் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக கூறியவர் அனைத்து மக்களும் நாட்டின் அனைத்து பிரதேசங்களுக்கும் சுதந்திரமாக செல்ல முடியும் என்று கூறினார். ஆனால் யுத்தம் முடிவுக்கு வந்து மாதங்கள் 4 கடந்தும் யாழ் குடாவில் உயர்பாதுகாப்பு வலயங்கள் இன்னும் அசையாது அப்படியே இருக்கிறது. இந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் இன்னமும் அகதிகளாகவே வாழ்கிறார்கள். கிட்டத்தட்ட 14 வருடங்களிற்கு மேலாக யாழ் குடாநாடு அசர கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது. புலிகள் அழிக்கப்பட்ட நிலையில் இந்த உயர்பாதுகாப்பு வலயங்களை அகற்ற ஜனாதிபதி மறுப்பது மிகவும் அபத்தமானது. இது தமிழர்களின் பிரதேசம் என்பதால்தான் இந்தநிலை என்ற குற்றச்சாட்டிற்கு அரசின் பதில் என்ன? வன்னியிலும் தற்போது இவ்வாறான உயர்பாதுகாப்பு வலயங்கள் தோன்றி வருகிறது. இனி வன்னி மக்களும் தாங்கள் தமது வாழ் நிலங்களுக்கு மீளவே செல்ல முடியாத ஒரு நிலை வரலாம் என்று அச்சம் தெரிவிக்கின்றனர்.

தற்போது இந்தியாவும் அமெரிக்காவும் இந்த மக்களை முகாம்களை விட்டு வெளியேறி சுயாதீனமாக வாழ விடுமாறு இலங்கைக்கு பல்வேறு விதமான அழுத்தங்களை பிரயோகித்து வருகிறது. மக்களை மீள குடியமர்த்தும் பணிக்கு உதவியாக அமெரிக்கா கடந்த ஜுலை மாதம் மேலும் 8 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்க முன்வந்துள்ளது. இது போல் ஏனைய நாடுகளும் பெருந்தொகை பணத்தை மீள் கூடியேற்றத்திற்காக கொடுத்துள்ளனர். அண்மையில் அமெரிக்க மற்றும் ஐநாவின் முக்கிய பிரமுகர்களின் வன்னி விஜயம் அத்துடன் இலங்கைக்கான இந்திய தூதுவரின் மெனிக் பார்ம் விஜயமும் இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு செயற்பாடக இருந்தபோதும் இலங்கை அரசு அகதிகளை விடுவிப்பதில் எந்தவித அவசரத்தையும் காட்டுவதாக தென்படவில்லை. மந்தகதியல் மீளக்குடியேற்றம் செய்யும் அரசு, மீள் குடியேற்றம் தாமதமாகும் பட்சத்தில்  குறைந்த பட்சம் இந்த முகாம்களின் பாதுகாப்பை தளர்த்தி மக்களின் சுதந்திர நடமாட்டத்திற்கு உத்தரவாதம் வழங்க வேண்டும். மரணத்தின் பிடியில் சிக்கி தப்பிவந்து விரக்தியுடன் வாழும் மக்களின் பொறுமை ஒரு எல்லைவரை தான் போகும். அண்மையில் இந்த முகாம்களில் மக்கள் கொந்தளித்து காவல் புரிவோருக்கு எதிரான வன்முறையில் இறங்கியதை வெறும் சம்பவமாக பாராது அதை ஒரு எச்சரிக்கையாக அரசு எடுக்க வேண்டும். இந்த முகாம்களில் இருப்பவர்களும் இலங்கை நாட்டின் பிரசைகள் என்பதை அரசு உணர மறுக்கும் பட்சத்தில் அரசின் இராணுவ வெற்றி தமிழ் பேசும் மக்களை ஓடுக்க பெற்ற வெற்றியாகவே கருதப்படும்.

Show More
Leave a Reply to வாசு Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

23 Comments

  • theva
    theva

    அரசுக்கு கிடைத்த வெளிநாட்டு உதவிகளுக்கு என்ன நடந்தது?
    உலகுக்கு படம் காட்டுறதுக்காக தமிழ்மக்களை முகாம்களில் வைத்திருக்கிறது அரசு. கண்ணிவெடி அகற்றுமட்டும் இவர்கள் இந்த சிறைமுகாம்களிலே இருந்தாகணுமா? புலிகளிடமிருந்து மக்களை அரசு மீட்டெடுத்தால் ஏன் மககளை சிறைமுகாம்களிலே வைத்திருக்கணும். புலி மக்களை பணயம் வைத்திருந்தது. என்றதை கத்திகொண்டிருப்பவர்கள் ஏன் அரசு இப்படி மக்களை சிறைப்படுத்தி வைத்திருப்பதை தட்டிகேட்கிறார்களா?
    குற்றப்பத்திரிகை வாசிக்கிறதும் செத்தவனை குற்றவாளியாக்கி பேசுவதை நிறுத்தி வாழுற-வாழவேண்டிய மக்களுக்கு தோள்கொடுங்கள். கொடுப்போம்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    // அண்மையில் கிளிநொச்சியூடாக பயணம் செய்த ஒரு பயணியின் தகவல் அடிப்படையில் கிளிநொச்சியில் முன்பு இருந்த அனைத்து கட்டிடங்களும் புல்டோசர்களால் தரைமட்டமாக்கப்பட்டு உள்ளது. – வாசு //

    கிளிநொச்சியூடாக பயணம் செய்தவர் வீதியின் கரைகளில் இருந்த கடைகள் உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டதாகவே பிபிசி பேட்டியில் சொன்னதை இவர் GTV போல் தன் பங்கிற்கு அனைத்துக் கட்டிடங்களும் உடைக்கப்பட்டிருந்ததாகக் கதையளக்கின்றார். பயணம் செய்தவர் தான் பேருந்தில் பயணம் செய்யும் போது பார்த்ததைத் தான் சொன்னார் அவர் விமானத்தில் பயணம் செய்திருந்தால் கிளிநொச்சி முழுவதையும் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்திருக்கும். பேருந்தில் பயணம் செய்யும் போது இது சாத்தியமா என்ற சிந்தனை கூட கட்டுரையாளருக்கு இல்லாமல் போனது ஏனோ??

    Reply
  • Thaksan
    Thaksan

    இந்த முகாமின் வேலைகளை பிய்த்தெறிவது ஒன்றும் கடினமான விடயமல்ல அங்குள்ள மக்களுக்கு. ஆனால் அவர்கள் எங்கே போவது? என்பதே இன்றைய கேள்வி. புலிகள் செய்த மாபெரும் தவறு போக்கிடமற்ற நிலைக்கு மக்களை இட்டுச் சென்றுவிட்டது. மே 18க்கு முன்னர் இதைச் சொன்னவர்களெல்லாம் இனத்துரோகிகள். புலிகள் ஒரு மாயை உலகத்துள் தங்களை மட்டுப்படுத்தியிருந்தார்களென்றால் இந்த மாயையை சிருஸ்டித்தவர்கள் புலம்பெயர்ந்தவர்களும்> இலங்கை தமிழ் அச்சு ஊடகங்களும் தமிழக இரண்டாம்தர அரசியல்வாதிகளுமே என்பதை நாம் இப்போதாவது ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த மாயையில் இருந்து யாதார்த்தம் உடைத்துக்கொண்டு வெளியேறுகையில் இழந்த உயிர்களுக்கு யார் பதில் சொல்ல வேண்டியவர்கள்? அழிந்த உடமைகளை கணக்கிலெடுக்காமல் விடலாம். நாம் பிறக்கும்போது எதையும் கொண்டு வந்தவர்களல்லர். நாளைக்கும் நாம் இழந்த உடமைகளை சற்று சிரமப்பட்டேனும் தேடிக்கொள்ளலாம். இழந்த உயிர்களை மீட்க முடியுமா? எங்கேயோ உயிரச்சமின்றி வாழும் பிரகிருதிகள் தங்களின் மாய கனவுகளுக்காக (அது அவர்களின் கனவு என்றுகூட என் மனம் ஒப்பவில்லை. அவர்களின் வயிற்று பிழைப்புக்கும் வசதிகளுக்குமாக அவர்கள் வரித்துக்கொண்ட இலகு வழி)இந்த மண்ணிலேயே வாழ்ந்த அந்த மக்களின் உயிர்வாழும் உரிமை மறுக்கப்பட்டு>> இனி எப்போதுமே மீண்டு வர முடியா மரணத்தை ஏற்படுத்திய மாபெரும் குற்றத்தை செய்தருப்பதை மனந்திறந்து ஒப்புக் கொண்டாலே போதும். அட> விடுதலை போராட்டத்தில் இதெல்லாம் சகஜமப்பா என தங்களை தாங்களே ஏமாற்றிக் கொண்டு இன்னும் ஓசியில் வயிறும் சொத்தும் வளர்க்க “நாடுகடந்த தமிழீழ” நாடகம் போட நாக்கை தொங்கப்போட்டு பார்த்துக்கொண்டு நாலுகாசு போட நாலுபேர் இருந்தால் இனியென்ன செய்ய?????

    Reply
  • poor themulu
    poor themulu

    Why all tamils are thinking like “theva”???
    “ஒன்றுபடு தமிழா ஒன்றுபடு
    உன் உறவைக் காக்க ஒன்றுபடு”

    Reply
  • appu hammy
    appu hammy

    All Ministers are repeating and repeating and repeating the same record. If so, segregate them and release the rest. Surely, there can’t be mines all over the Northern and Eastern Provinces. Had there been any casualties during the last few months after the war ended in Mid May. We feel that the mines shown in thousands were the ones that the LTTE left behind. Have any wild elephants or cattle or any human beings become victims of these mines. No, there is a political agenda to keeping these innocent IDPs. They are being used to enhance the ill-gotten wealth of the politicians. For the present day politicians, the personal gains by keeping these IDPs are more important than even losing the GSP+ which is being very badly affected by the poor workers in case of closures of the factories but definitely not the politicians.

    Reply
  • pannda
    pannda

    UN Secretary General Ban ki-moon has pushed for a commitment by the Sri Lankan government to the pledges it has made on the resettlement of the Internally Displaced People.

    This was conveyed by the UN chief at a meeting today with a Sri Lankan delegation led by Prime Minister Ratnasiri Wickramanayaka, UN Under-Secretary-General for Political Affairs B. Lynn Pascoe told reporters a short while ago.

    Reply
  • வாசு
    வாசு

    //பிபிசி பேட்டியில் சொன்னதை இவர் GTV போல் தன் பங்கிற்கு அனைத்துக் கட்டிடங்களும் உடைக்கப்பட்டிருந்ததாகக் கதையளக்கின்றார்.// பார்த்திபன்

    உங்கள் கருத்துக்கு நன்றிகள் பார்த்திபன். நான் கதையளக்கவேண்டிய தேவை இங்கு கிடையாது. காரணம் நான் முதலில் அந்த பீபீசி நிகழ்வை பர்க்கவில்லை. இலங்கை வங்கியில் முக்கிய கடமை புரியும் எனது நண்பருடனான உரையாடலின் போது அவர் சொன்ன வார்த்தைகளை அப்படியயே எழுதியுள்ளேன். நான் நேரடியாக பார்த்ததாக் சொன்னால் அது நான் கதையளப்பது என்ற உங்கள் வாதத்தை ஏற்றுக்கொள்ளலாம். இன்று கிளிநொச்சியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளதாகவும் அந்த இராணுவத்திரே அங்குள்ள மிஞ்சிய கட்டிடங்களை திருத்தி அங்கு தங்கியிருப்பதாக அவர் எனக்கு மேலும் கூறினார். ஏற்கனவே விமான தாக்குதலாலும் மல்டிபரல் எறிகணைகளாலும் ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்திருந்தது. அவற்றில் பாதுகாப்பான கட்டிடங்களை தவிர மற்றைய கட்டங்களை இராணுவம் புல்டடோசர் மூலம் இடித்துள்ளனர். தமது பாதுகாப்பு நோக்கிற்காக இவ்வாறு இடிக்கபட்டடிருந்தால் கிளிநொச்சியும் உயர்பாதுகாப்பு வலயமாக மாறும் என்ற எனது ஆதங்கமே நான் இங்கு சொல்ல வந்த விடயம். கிளிநொச்சி நகரமே முற்றாக தரைமட்டமானது என்ற கருத்தபட நான் எழுதியது உங்கள் மனதை புண்படுத்தியிருந்தால் அதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோன்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    // “ஒன்றுபடு தமிழா ஒன்றுபடு
    உன் உறவைக் காக்க ஒன்றுபடு”- poor themulu //

    தங்கள் சிந்தனையைக் கூட ஒரு தமிழனாகத் தங்களால் சிந்திக்க முடியாது, ஒரு poor “themulu” ஆகத்தான் சிந்திக்க முடிகின்றதோ?? இதில் அடுத்தவனுக்கு உபதேசம் கண்ணைக் கட்டுது….

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    // அண்மையில் கிளிநொச்சியூடாக பயணம் செய்த ஒரு பயணியின் தகவல் அடிப்படையில் கிளிநொச்சியில் முன்பு இருந்த அனைத்து கட்டிடங்களும் புல்டோசர்களால் தரைமட்டமாக்கப்பட்டு உள்ளது. – வாசு //

    வாசு
    மேலேயுள்ள கருத்துத் தான் தங்களால் எழுதப்பட்டிருந்தது. எனது கேள்வி ஒரு குறிப்பிட்ட வீதியொன்றினால் பயணம் செய்த தங்கள் நண்பரால் எப்படி கிளிநொச்சியில் அனைத்துக் கட்டிடங்களும் இடிக்கப்பட்டிருந்ததை பார்க்க முடிந்தது?? என்பது தான். ஆனால் அதற்கு தகுந்த பதிலளிக்காது “நான் எழுதியது உங்கள் மனதை புண்படுத்தியிருந்தால் அதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோன்” என்று பூசி மெழுகுகின்றீர்கள். இதன் அர்த்தம் என்ன??

    நீங்களோ,GTV யோ பிபிசி செய்தியைப் பார்க்கவோ, கேட்கவோ இல்லை. ஆனால் பிபிசியில் யாழிலிருந்து கொழும்பிற்கு பயணம் செய்த ஒரு ஊடகவியலாளரின் பேட்டியின் பின்பு தான், திடீரென தங்களுக்கும் GTV க்கும் இப்படியான நண்பர்களின் செவ்வியும் கிடைத்தது ஆச்சரியமான விடயமல்லவா?? உண்மைகளை எழுதுங்கள். அதீத கற்பனைகளை அதனுள் புகுத்துவதால், பலவேளைகளில் உண்மைகள் கூட பொய்யாகி விடுகின்றன. நான் தங்கள் தவறை சுட்டிக் காட்டியது, தங்களுக்கு வேதனையை ஏற்படுத்தியிருந்தால் அதற்காக நான் மனம் வருந்துகின்றேன்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    வாசு
    கிளிநொச்சியில் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் பெரிதாக சண்டை நடைபெறாமலே, இராணுவத்தின் கைகளில் கிளிநொச்சி வீழ்ந்ததை தாங்கள் அறியவில்லைப் போலும். அதே போல் கிளிநொச்சியை விட்டு புலிகள் தப்பிச் செல்வதற்கு முன், புலிகளே அங்கிருந்த பல வீடுகளை, இராணுவத்தினர் வந்து தங்கக் கூடாதென்று தகர்த்ததையும், கிளிநொச்சி நகருக்கு தணணீரை வழங்கி வந்த பிரதான தண்ணீர்த் தொட்டியையும் தகர்த்துச் சென்றதையும் தாங்கள் அறிந்திருக்க வாய்ப்பிருந்திருக்காதென்றும் நம்புவோம்.

    Reply
  • palli
    palli

    புலியை எதிர்ப்பதாக நினைத்து சிலர் அரசின் செயல்களை நியாயபடுத்து எம்மினத்தை மிக கேவலமான நிலைக்கு கொண்டு செல்கின்றனர், இது அரசு தொடர்ந்தும் எம்மக்கள்மீது அடிமைதனத்தை தொடர்வதுக்கும், புலியை மக்கள் தொடர்ந்தும் ஆதரிக்கவும் உதவுமே என்பது எனது கருத்து, ஆனால் இந்த இரண்டாலும் அழிவைதேடுவது அப்பாவி மக்கள்தான் என்பது திண்ணம், புலிசெய்தது தமிழருக்கு துரோகம் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை, ஆனால் நாம் இப்போது அரசை ஆதரித்து அவர்களின் அத்துமீறல்களை நியாயபடுத்துவது நம்பிக்கை துரோகம் அல்லவா?

    சந்திரன் ராஜா சொன்னது போல் அந்த மக்களின் கண்கள் சிவக்க நாமும் ஒரு காரணமாய் இருக்கதான் வேண்டுமா? சர்வதேசமே அரசை சட்டத்தின் முன்நிறுத்த ஒன்றுபட வேண்டி சில வல்லரசுகளே முன்வரும்போது நாம் மட்டும் நல்லரசு என சான்றிதழ் கொடுப்பது நியாயமா? முடிந்தால் சிந்தியுங்கள் முடியாவிட்டால் தொடருங்கள் அநீதிக்காதரவாய்,

    Reply
  • மாயா
    மாயா

    //இன்று கிளிநொச்சியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளதாகவும் அந்த இராணுவத்திரே அங்குள்ள மிஞ்சிய கட்டிடங்களை திருத்தி அங்கு தங்கியிருப்பதாக அவர் எனக்கு மேலும் கூறினார். ஏற்கனவே விமான தாக்குதலாலும் மல்டிபரல் எறிகணைகளாலும் ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்திருந்தது. அவற்றில் பாதுகாப்பான கட்டிடங்களை தவிர மற்றைய கட்டங்களை இராணுவம் புல்டடோசர் மூலம் இடித்துள்ளனர்.- வாசு on September 29, 2009 8:34 am //

    கிளிநொச்சிக்குள் செல்ல தனி நபர்கள் எவரையும் இராணுவம் அனுமதித்ததில்லை. எனவே உங்கள் நண்பர் சொல்லும் கருத்தை வைத்து கட்டுரை எழுத வேண்டாம். இது ஒரு ஊகம் மட்டுமே. நம்பகமான தகவலாக இருந்தால் மட்டும் கட்டுரை எழுதுங்கள். அங்கு இராணுவத்தினர் இருக்கிறார்கள். தவிரவும் அவர்கள் வாழ்வதற்கு இருக்கும் வீடுகளை பயன்படுத்துகிறார்கள்.

    முக்கியமாக அங்கொன்றும் இங்கொன்றும் இருக்கும் வீடுகளை அரசு அழிக்கக் கூடிய வாய்ப்பு உள்ளதாக அறிகிறேன். ஒரு திட்டமிட்ட வரைவு நகராகவும், அழகாகவும் உருவாக்கும் எண்ணம் சில முக்கிய அமைச்சர்களிடம் உள்ளது. மேலத்தேசங்களில் உள்ள கட்டிடங்கள் போல அழகிய ஒரு பகுதியாக மாற்ற சிலர் விரும்புகிறார்கள். அங்கொன்றும் இங்கொன்றும் மேடும் பள்ளமும் போல் வீடுகளும் குடிசைகளும் இருப்பதை தவிர்த்து அழகியல் நிறைந்த ஒரு பகுதியை நிர்மாணிக்க மக்கள் இல்லாத பகுதியில் கட்டிட நிர்மாணங்களை செய்வது இலகுவானது. அது முழுத் தேசத்துக்கும் ஒரு முன் மாதிரியாகக் கூட அமையலாம். உதாரணமாக கட்டுநாயக்கா முதல் கொழும்பு வரையிலான பாதைகளை சீரமைக்கும் போது பல வீடுகளும் கட்டிடங்களும் தரை மட்டமாக்கப்பட்டு பாதை புணர்நிர்மானம் ஆனது. அன்று எழுந்த எதிர்ப்பு பின்னர் அடங்கிப் போனது. கொழும்பின் சிலம் போன்ற பகுதிகளிலும் இது போன்ற நடவடிக்கைகள் இடம் பெறுகின்றன. இவை குறித்து அகன்ற பார்வையின்றி நாம் இருத்தல் ஆகாது.

    Reply
  • வாசு
    வாசு

    கட்டிடங்களை யார் இடித்தார்கள் என்பததல்ல அங்கு நான் கூறவந்தது! புலிகள் கட்டங்களை மட்டும் இடிக்கவில்லை அங்கு வசித்த மக்களின் வாழ்வையும் ஒட்டு மொத்த தமிழனத்தின் நியாயமான அரசியல் போராட்டத்தையும் தான் இடித்துவிட்டு பேயிருக்கிறார்கள். இதை நான் வரிக்கு வரி கூறிதான் அரசின் அடக்கு முறையை விமர்சிக்க முடியும் என்று நீங்கள் கூறினால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்?

    ரோம் நகர் ஒரு நாளில் கட்டி முடிக்கப்படவில்லை என்பது எனக்கு தெரியும் ஆனால் அரசின் தற்போதைய செயற்பாடுகள் நம்பிக்கை தருவதாக இல்லாது சந்தேகம் தருவதாகவே அமைகிறது. இதை நான் மட்டும் கூறவில்லை. சக பத்திரிகையாளர்களும் கூறகிறார்களே? இதோ வாசிப்பிற்கு இரண்டு ஆங்கில கட்டுரைகள் சிரியர்களால் எழுதப்பட்டுள்ளது!

    http://transcurrents.com/tc/2009/09/post_431.html#more

    http://www.groundviews.org/2009/09/28/doing-the-right-thing-freedom-for-vanni-idps/

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    பல்லி,
    சில ஊடகங்களும் சில ஊடகவியலாளர்களாகத் தம்மைக் கூறிக்கொள்பவர்களும் வெறும் பரபரப்பிற்காக நடைபெறும் சில விடயங்களை அதீத கற்பனையில் மிகைப்படுத்துகின்றனர். இதனால் மக்களை ஏமாற்றி தங்கள் ஊடகங்களின் விற்பனையை அல்லது ஊடகங்களின் பார்வையாளர்களை அதிகரிக்கவும்,GTV போன்ற ஊடகஙகள் தங்கள் பிச்சை வருமானங்களை கூட்டவும் முயல்கின்றனர். இவற்றைச் சுட்டிக்காட்டுவது எப்படித் தங்களுக்கு அரசின் செயல்களை நியாயப்படுத்துவதாகத் தெரிகின்றதென்பது ஆச்சரியம். இன்றும் புலத்துப் புலிப்பினாமிகள் மக்களிடம் பணச்சுருட்டல்களை தொடர்ந்தும் செய்வதை நிறுத்தவில்லை. அதற்கு அவர்கள் ஆதாரமாகக் காட்ட முயல்வது இப்படியான அதீத கற்பனையில் மிகைப்படுத்திய கட்டுரைகளைத் தான் என்பது தாங்கள் அறியாததும் ஆச்சரியமானது.

    அரசின் அட்டூழியங்களைச் சுட்டிக்காட்ட வேண்டியது முக்கியம் என்பதை நானே பலதடவை அறிவுறுத்தியுமுள்ளேன். அதுபோல் சுட்டிக் காட்டியுமுள்ளேன். அதை மிகைப்படுத்துவதாலும் பிறசேர்க்கைகளை வலுவில் சேர்த்து பரபரப்பாக மாற்ற முயல்வதாலுமே பலதடவைகள் உண்மைகள் கூட பொய்யாகிப் போயின. இதற்கு நல்ல உதாரணம் சமீபத்தில் சனல் 4 தொலைக்காட்சியில் வெளியான மிருகத்தனமான கொலைகள். அவற்றை உள்ளது உள்ளபடியே வெளியிடாது, அவற்றில் சில போலித்தனமான வேலைகளை சிலர் செய்ததாலேயே, அந்த ஒளிப்பதிவே இன்று கேள்விக் குறியாக நிற்கின்றது. மீண்டும் சொல்கின்றேன். உண்மைகளை உள்ளபடியே கொண்டு வாருங்கள். அதைவிடுத்து அதீத கற்பனைத் திறன்களை வெளிக்காட்ட முயல்வதோ அல்லது வெறும் ஊகங்களை மட்டுமே அடிப்படியாக வைத்து கட்டுரைகள் வரைவதோ, நாளை உண்மை நிகழ்வுகளைக் கூட சந்தேகக் கண்கொண்டே பார்க்க வைக்கும்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    மாயா,
    தங்கள் தகவல்களின்படி அரசு கிளிநொச்சி நகரை அழகுபடுத்த விரும்பியிருந்தால் அது வரவேற்கத் தக்கதே. ஆனால் அங்கு ஏற்கனவே குடியிருந்த மக்களின் காணிகளை கையகப்படுத்த அரசு முயன்றால், அதற்குரிய இழப்பீட்டையோ, மாற்று வசதியையோ அரசு அவர்களுக்கு செய்து கொடுக்க முதலில் முன்வர வேண்டும். மேலும் கிளிநொச்சிப் பகுதியை மாற்றியமைப்பதற்கு முன், அந்த மக்கள் தமது குடிமனைகளை அடையாளம் காண அரசு அதற்கான சந்தர்ப்பத்தையும் வழஙக வேண்டும். கட்டிடங்கள் அழிக்கப்பட்டு வெறும் தரையாக எல்லாம் காட்சியளித்தால் எதை வைத்து அங்கு வாழ்ந்த மக்கள் தமது சொந்த நிலங்களை அடையாளம் காணுவார்கள்?? இந்த விடயத்தில் அரசு பகிரங்கமாக தமது திட்டங்களை அறிவித்து, அதற்கான பரிகாரங்களையும் மேற்கொண்டால் வீண் வதந்திகளுக்கு இடம் இருக்காதென்று நம்புகின்றேன்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    வாசு
    நீங்கள் திரும்பத் திரும்ப எனது கேள்விக்குப் பதிலளிக்காது ஏதோவெல்லாம் எழுதுகின்றீர்களே தவிர?? “தங்கள் நண்பரால் எப்படி கிளிநொச்சியில் அனைத்துக் கட்டிடங்களும் இடிக்கப்பட்டிருந்ததை பார்க்க முடிந்தது”?? என்பதற்கு பதிலை ஏன் தருகின்றீர்களில்லை?? இங்கே மீண்டும் மீண்டும் உங்களை புலிகளை மட்டுமே விமர்சிக்கச் சொல்லி யார் கேட்டது?? எழுதும் கட்டுரைகளை நம்பகமாக எழுதுங்கள் என்று தானே கேட்டோம். அதற்கு சிரியர்களின் கட்டுரைகளை இணைக்கின்றீரர்கள். வட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்கு விலை சொல்கின்றீர்கள். தயவுசெய்து முடிந்தால் என் கேள்விக்கு விடை தாருங்கள் சுற்றி வளைத்து எழுதாமல்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    இருந்தும் கெடுத்தான் உடையான். செத்தும் கெடுத்தான் உடையான். இந்து மததர்மங்களும் ஞானங்களும் ஏழேுபுறப்புகளுக்கும் பின் தொடர்வதாக கூறுகிறது. பெருவழியில் என்னிடம் சாட்சியம் இல்லாவிட்டாலும் முப்பது வருடச் காட்சியமும் சான்றுகளும் என்னிடம் உள்ளது. தமிழ்மக்களின் வினையின் பயனே! பரதேசி வடிவில் இருக்கிற முகாம்களும் வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிற சிறைக் கைதிகளும்.

    தமிழனைப் பற்றி தமிழர் உரிமையைப் பற்றி ஒருவர் பேசுவதாக இருந்தால் இதில்லிருந்து தான் தொடங்கவேண்டும். விவாதங்கள் தொடரட்டும்… வாசு எந்த வாசு. என்அனுமானம்சரியாக இருந்தால் தமிழர்கள் பெருமைப்பட கூடிய எமது பழைய வாசுவாகவே இருக்க முடியும். நீங்கள் தேசம்நெற்ருடன் தொடர்பு கொண்டதையிட்டு மிக்க மகிழ்ச்சி. விவாதங்கள் தூள் பறக்கட்டும். அதில்லிருந்து தான் உண்மைகள் வெளிவரும். அதையே நாம்எதிர்பார்ப்பது.

    Reply
  • palli
    palli

    புலத்து பினாமிகள் புலத்து பினாமிகள் என நாம் தொடர்ந்தும் ஏப்பம் விட்டுளோம்; (பல்லி உட்பட பல்லி புலிகளை புலிகள் பலமாக இருக்கும்போதே மிக கடுமையாக விமர்சித்துள்ளேன்) ஆனால் நாமோ இன்று அரசின் பினாமிகள் என்னும் நிலைக்கு வந்துவிட்டோம் என்பது மறுக்க முடியாத உன்மை, கிளிநொச்சி அழகுபடுத்தபட போகிறதாம்; (இதுகூட நாடுகடந்த ஈழத்துக்கு சமனான செய்திதான்)

    பார்த்திபன் பல்லியும் வீட்டில் குப்பற படுத்து கிடந்து எழுதவில்லை, மிகவும் நிதானமாகதான் விடயங்களை சேகரிக்கிறேன், இதில் கழக நண்பர்கள் பலர் எனக்கு உதவுவதோடு மட்டுமல்லாது தமது கடந்தகால அனுபவங்களையும் எனக்கு தருகின்றனர், இதேநேரம் அரசு செய்யும் நல்லகாரியஙள் சிலதுக்கு பல்லியின் பாராட்டே முதல் பின்னோட்டமாக வருவதைகூட கவனிக்கலாம்;

    சந்திரன் ராஜா கூட சில இடங்களில் அரசின் தவறை சுட்டிகாட்டும் போது யதார்த்தம் என்ன என்பதை சொல்லுவார், (உதாரனத்துக்கு மக்களின் கண்கள் சிவக்க அரசு காரனமாய் இருக்க போகிறதா?) அவரது கேள்விதான் யதார்த்தம்; தேவையில்லாமல் போராட புறபட்டவர்கள் அடக்கி அடங்கி போக, அரசின் வன்முறயால் உன்மையான ஒரு போராட்டம் தொடருமா என பல்லியோ சந்திரன் ராஜாவோ பயபடுவதில் தவறென்ன, அதுவும் எமக்கோ அல்லது போராட புறபடபோகிறவர்களுக்கோ சேதமோ அழிவோ கிடையாது; ஆனால் அந்த அப்பாவி மக்களை சிந்தியுங்கள், பல்லியை பொறுத்த மட்டில் கிளிநொச்சி விவகாரம் வாசு சொன்னதை ஏற்று கொண்டுதான் ஆகவேண்டும்; அது இன்று நடக்காவிட்டாலும் அதுக்கான வாய்ப்பே அதிகம் என்பது வன்னியில் உள்ள குழந்தைகளுக்கு தெரியும்; இது அரசுடன் இக்கட்டான சூழ்நிலையில் இனைத்திருக்கும் அமைப்பை சேர்ந்தவர்கள் கருத்து;

    Reply
  • மாயா
    மாயா

    //வாசு எந்த வாசு. என்அனுமானம்சரியாக இருந்தால் தமிழர்கள் பெருமைப்பட கூடிய எமது பழைய வாசுவாகவே இருக்க முடியும். – chandran.raja //

    இந்த வாசு நாடகம் நடத்தும் வாசுவா? புலிகளுக்கு எதிராக இருந்து புலிகளோடு சேர்ந்த வாசுவா?……

    Reply
  • visuvan
    visuvan

    எனக்கொரு வாசுவை தெரியும். நாடகம் நடிப்பவர். ஆனால் இவர் புலிகளில் இருந்து வெளியேறி வந்து நாடகம் நடித்ததாகத்தான் நான் கேள்விப்பட்டேன். இவர் மீண்டும் புலிகளில் அமைப்பில் சேர நினைத்திருந்தாலம் புலிகள் சேர்த்திருக்க மாட்டார்கள். காரணம் இவர் இன்னுமொரு அமைப்பில் இணைந்து லண்டனில் தீவிரமாக வேலைசெய்தவர். சரி புலிகள் அமைப்பில் இருந்துதாலும் இதை தானே நாம் விரும்பினோம்.

    Reply
  • Thaksan
    Thaksan

    வன்னியில் கட்டுமானங்களை மறுசீரமைக்கவென அரச ஊழியர்கள் பல தடவைகள் அங்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். வீதி> மின்சார இணைப்புகள் போன்றவை ஏ9 க்கு அப்பால் உள்ளேயும் நடைபெறுகின்றன. குறிப்பாக ஏ9 க்கு மேற்கு பகுதியில். கூட்டுறவு சங்கங்கள்> விவசாய விஸ்தரிப்பு திணைக்களம்> வீதி அபிவிருத்தி திணைக்களம்> மின் விநியோக திணைக்களம் போன்றவை உட்பட விவசாயத்திற்கான குளங்கள் திருத்தங்கள் உட்பட நடைபெற தொடங்கி 2 மாதங்கள் ஆகிவிட்டன. இதற்காக அடிக்கடி அழைத்துச் செல்லப்படும் திணைக்கள உத்தியோகஸ்தர்கள் மூலம் அங்குள்ள நிலைமைகளை ஓரளவிற்கு விபரமாக அறிந்து கொள்ள முடிகிறது. வெறும் ஏ9 ல் மட்டுமல்ல உட்பகுதிகளிலும் அழிவுகள் நடந்தேயுள்ளது. வாசுவின் கட்டுரையை படித்த பின்பு இதுதொடர்பாக அங்கு சென்றுவரும் அரச திணைக்கள நண்பர்களிடம் வினவியபோது அவர்கள் கூறுவதற்கும் வாசுவின் கட்டுரையிலுள்ள விடயங்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதை என்னளவில் உறுதி செய்யமுடிகிறது. குறிப்பாக அங்கு தங்கியிருக்கும் ராணுவத்தினர் தெரிவித்த(அரச ஊழியர்களுக்கு) கருத்துக்களின் பிரகாரமும் அவர்களின் நடத்தைகளினுர்டாகவும் உதிரியான புலிப் போராளிகளின் சில்லரை நடமாட்டம் அந்தப் பகுதிகளில் தற்போதும் இருப்பதை உணரமுடிவதாக கூறுகிறார்கள்.

    Reply
  • siva
    siva

    கட்டுரை எழுதிய வாசு விரைவில் தன்னைப்பற்றிச் சொல்லவேண்டும் தவறினால் வாசகர்வட்டம் வாசுவுக்கு காண்டமும் வாசித்து விடுவார்கள் போலுள்ளது.

    Reply
  • palli
    palli

    நாம் அனைவரும் கிரகங்கள் போல் ஒரே வட்டத்தில்தான் நிற்க்கிறோம், ஆனால் இந்த சனி வியாளன் போல் அடிக்கடி மாறி வருகிறோம், அந்த வகையில் 27ம்தேதி மாறிய கிரகநிலைபடி அதே பரிஸ் வாசுவாக இருக்கலாம் எனதான் பல்லியும் எதிர்பார்க்கிறென் செலவுகள்(அரசியலில்)
    அதிகமாக இருப்பதால் வரவுகளயே பலரும் எதிர்பார்க்கின்றனர்; அதில் பலரைபோல் வாசுவையும் புடுங்குபட வருமாறு(நட்புடந்தான்) வருமாறு பல்லியும் அழைக்கிறேன்,

    Reply