எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனமாக “மஹிந்த சிந்தனை”யின் இரண்டாம் பாகம் வெளியிடப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார்.
2005 ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த சிந்தனையின் முதலாவது பாகம் வெளியிடப்பட்டு மக்கள் ஆணை கோரப்பட்டது. இதன் படி மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி பதவியில் அமர்த்தினர்.
மக்களின் ஆணைப்படி மஹிந்த சிந்தனையின் முதலாம் பாகத்திலுள்ள பெரும்பாலான அம்சங்கள் நிறை வேற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், எதிர்வரும் தேர்தலில் மக்களின் ஆணையைப் பெறுவதற்காக மஹிந்த சிந்தனையின் இரண்டாம் பாகம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் அரசியல் தீர்வு யோசனை, பாரிய அபிவிருத்தித் திட்ட யோசனைகள் அடங்கலான பல முக்கிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
தனது முதலாவது பதவிக் காலத்தில் பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது இரண்டாவது பதவிக் காலத்தில் நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக பயன்படுத்த உள்ளார்.
ஏற்கனவே பல பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த அபிவிருத்தித் திட்டங்களினூடாக நாட்டின் பொருளாதாரம் மேலும் வளர்ச்சியடைந்து தெற்காசியாவில் தலை சிறந்த நாடாக மாறும் என்றார்.