இலங்கைத் தமிழர்களின் ஆங்கில நூல்கள் – நூல்தேட்டம் ஆங்கில நூல் தொகுப்புக்கானதொரு அறிமுகம் : என். செல்வராஜா (நூலகவியலாளர்)

Selvarajah Nஇலங்கையின் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் ஆங்கில மூலமான நூல்களை எழுதி வெளியிட்டதில் தமிழருக்கும் முஸ்லீம்களுக்கும் முக்கிய பங்குண்டு. அண்மைக்காலத்தில் கூட பல்வேறு நாடுகளில் ஈழத்தமிழர்களின் ஆங்கில நூல்கள் பல்துறைகளிலும் வெளிவந்த வண்ணமே உள்ளன. இவை எவ்வளவுதூரம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன வென்பதையோ திட்டமிட்டு ஆவணப்படுத்தப்படாமல் ஒதுக்கப்பட்டுள்ளனவென்பதையோ நாம் இன்றுவரை கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. அதை ஓரளவு உணர்ந்தவர்கள்கூட இது வேறு எவனோ ஒருவனுக்கு வித்pக்கப்பட்ட பணி என்று மூன்றாவது மனிதராகக் கைகட்டிப் பார்வையாளராக இருந்துவிடுகின்றார்கள்.

1970களில் பேராதனை பல்கலைக்கழக நூலகராகவிருந்த எச்.ஏ.ஐ.குணத்திலக்கவின் A Bibliography of Ceylon: a systematic  guide to the literature on the land, people, history and culture published in the Western  languages from the sixteenth century to the present day  என்ற தலைப்பில் ஆங்கில நூல்களுக்கான நூற்பட்டியல் 1970-1983 காலப்பகுதியில் 5 தொகுதிகள் வெளிவந்தது. இதை சுருக்கமாக H.A.I.Goonetileke’s Bibliography of Ceylon என்று அழைக்கிறோம். இதில் இலங்கைவாழ் தமிழர்களின் ஆங்கில நூல்கள் பெரும்பாலானவை பதிவுசெய்யப்படாததை அக்காலகட்டத்தில் நாம் கண்டுகொள்ளவில்லை.

ஈழத்தமிழர்களின் ஆங்கில நூல்கள் பெருஞ்சந்தை வாய்ப்புக்களை நாடாததும் தமக்குள்ளேயே வெளியிட்டு சிறுவட்டங்களுக்குள் அதை விநியோகித்து திருப்திகாண்பதும் அன்றும் இன்றும் எமது மக்களைப் பொறுத்தவரையில் பொதுவானதாகவே உள்ளது. ஏ.ஜே.வில்சன், எச்.டபிள்யு தம்பையா, சிவானந்தன் போன்றோரின் நூல்கள் ஓரளவு சர்வதேசச் சந்தையை எட்டியுள்ளனவாயினும் ஒப்பீட்டு அடிப்படையில் எம்மவர்களின் விநியோகத் திட்டம் வலுவிழந்ததே என்பதை எவரும் மறுக்கமுடியாது.

அண்மையில் 1987இல் பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் நகரிலுள்ள Clio Press என்ற நூல் வெளியீட்டாளர்கள் World Bibliographical Series  என்ற ஒரு தொடரை வெளியிட்டார்கள். 77 நாடுகளில் அந்நாட்டவர்களால் ஆங்கிலத்தில் வெளியிடப்பெற்ற சகலதுறையிலான நூல்விபரங்களையும் குறிப்புரையுடன் (நூல்தேட்டம் தொகுப்புகள் போன்று) தொகுத்து ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு தொகுதி என்ற வகையில் வெளியிட்டார்கள் 20ஆவது தொகுதி இலங்கைக்குரியது. அதனை விஜய சமரவீர என்பவர் தொகுத்திருந்தார். ((W.H.Smithஇல் இந்நூல் விற்பனைக்குண்டு). 631 ஆங்கில நூல்களை, இலங்கையரால் வெளியிடப்பட்டதாக அவர் அடையாளம் கண்டிருந்தார். இவற்றில் சின்னப்பா அரசரத்தினம், க.குலரத்தினம், சோ.செல்வநாயகம், கைலாசபதி உள்ளிட்ட சில தமிழர்கள் எழுதிய 46 ஆங்கில நூல்களையே இலங்கைக்குரியதாக அவரால் கண்டுகொள்ள முடிந்தது. புத்திஜீவிகளாகவும், முன்தோன்றிய மூத்தகுடிகளாகவும் தம்மை விதந்துரைக்கும் எம்மவரின் பங்களிப்பு வெறும் 46 தானா என்பதைக்கூட நாம் அப்போது சிந்திக்கவில்லை.

இலங்கைத்தீவின் இராணுவ வரலாற்றை முதலில் எழுதியவர் ஒரு தமிழர் என்பதோ (The Military History of Ceylon/ Anton Muttukumaru), கொழும்பு நகரின் தெருக்களின் வரைபடத்தை (A-Z Street  Guide of Greater Colombo, Kandy, Nuwara eliya, Anuradhapura & Polonnaruwa) நூலுருவில் வழங்கியவர் T.சோமசேகரம் என்ற தமிழரென்றோ நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இலங்கையின் சிங்கள குடித்தொகைப் பரம்பலையிட்டு தனது ஆராய்ச்சியை லண்டன் School of Economics  என்ற உயர் பல்கலைக்கழகக் கல்லுரியில் மேற்கொண்டவர் ஆர்.ராஜேந்திரா என்பவர். 1952இல் இவர் மேற்கொண்ட இந்த ஆய்வு இலங்கைப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் விதந்துரைக்கப்பட்டு 1955இல் பெருமையுடன் நூலுருவில் கொண்டுவரப்பட்டது. சிங்களவர்களின் குடித்தொகைப் பரம்பல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முதலாவது ஆய்வு இதுவென்று குறிப்பிடப்படுகின்றது. இப்படியாக விவசாயத்துறை, பொருளியல்துறை, அரசியல்துறை, உயிரியல்துறை என்று பல்வேறு துறைகளிலும் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் தமிழ் அறிஞர்கள் தமது மேலான பங்களிப்பை வழங்கி வந்துள்ளார்கள். இதுவரை இது உலகில் எங்குமே முழுமையாக ஆவணப்படுத்தப்படவில்லை.

இன்று ஈழத்தமிழர்களின் வாழ்வு திறந்தவெளிச் சிறைகளுக்குள்ளும் தடுப்புமுகாம்களுக்குள்ளும் புலம்பெயர் தேசங்களின் இனக்கலப்புகளுக்குள்ளும் சிக்கிச் சீரழிந்திருக்கும் நிலையில் அவர்களின் தனித்துவம் பற்றிப் பேசப்படுகின்றது. இலங்கையில் அவர்களது கௌரவமான இருப்பிற்கான வழிகள் பற்றிப் பேசப்படுகின்றன. எங்கிருந்தோ வந்த இலங்கைத் தமிழர் தமக்கு ஒரு சுமை என்று இலங்கையின் இனவாத அரசுகள் சிந்தித்து செயற்படும் இன்றைய நிலையில், இலங்கைத் தமிழரின் இருப்பிற்கான உரிமைப்போர் ஒரு சர்வதேச சமூகத்தின் அவதானத்திற்கு உரியதாக மாறிவரும் இவ்வேளையில் இலங்கையில் தமிழ்பேசும் குடியினரின் அந்நாட்டின் கட்டுமானத்திற்கு என்ன செய்தார்கள் என்ற கேள்விக்கு விடைதேடும் பணியொன்றும் எமக்குள்ளது.

அப்பணியை தனிப்பட்டமுறையில் முன்னெடுத்து அண்மையில் ஒரு ஆங்கில நூற்பட்டியல் (Bibliography) ஒன்றினை உருவாக்கியிருக்கிறேன். நான் வாழ்நாள் பணியாக மேற்கொண்டுவரும் நூல்தேட்டம் என்ற தொகுப்பு முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த ஆங்கில நூற்பட்டியலை உருவாக்கியிருக்கிறேன். இலங்கைத் தமிழர்களும், தமிழ்பேசும் முஸ்லிம் மக்களும் இதுவரை எழுதி ஆங்கிலத்தில் பிரசுரித்துள்ள 323 நூல்களை பல்வேறு ஐரோப்பிய நூலகங்களிலும், தனியார் சேர்க்கைகளிலும் இருந்து இனம்கண்டு அவற்றை குறிப்புரையுடன் கூடியதாகத் தொகுத்து நூலுருவில் 201 பக்கங்களில் ஐரோப்பிய தமிழ் ஆவணக்காப்பக, ஆய்வகத்தினூடாக வெளியிட்டுள்ளேன்.

இந்த ஆங்கில மொழி நூற்பட்டியலை உலக நாடுகளெங்கும் இயங்கும் சர்வதேச நூலகங்களில் சேர்ப்பிக்க வேண்டிய அவசியம் இன்றுள்ளது. வெறும் வெளியீட்டு விழா நடத்தி ஒரு சிறு நண்பர் குழுவினருடன் சந்திப்பை ஏற்படுத்தி அதன்மூலம் இந்த நூலை அறிமுகம்செய்து விற்பனைசெய்து பணமீட்டும் முயற்சி இதுவல்ல. இக் கட்டுரையின் வாயிலாக ஒரு முக்கியமான ஆவணத்தின் இருப்பினை உங்களுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறேன். இது எனது முதற்கட்ட நடவடிக்கை.

நூல்தேட்டம் ஆங்கிலப் பதிப்பு ஒரு தனித்தொகுதியாகும். இதன் இரண்டாம் பதிப்பினை தற்போது சேகரித்துவரும் புதியதும், தவறவிடப்பட்டதுமான ஆங்கில நூல்களின் விபரங்களுடன் திருத்திய பதிப்பாக 2012இல் வெளியிடத் தீர்மானித்திருக்கிறேன். இவ்வாறு ஆங்கில நூல்தேட்டம் காலக்கிரமத்தில் முழுமையை நாடியதொரு தொகுப்பு முயற்சியாக அமையும் என்பது எனது நம்பிக்கை.

இந்நூல் தனிப்பட்ட தீவிர ஆய்வாளர்களுக்குப் பயன்பட வேண்டும். அவர்களின் மூலம் ஈழத்தமிழர்களின் பரந்துபட்ட அறிவியல் ஞானம் உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டப்படவேண்டும். இந்த அடுத்த கட்டத்தை முன்நகர்த்திச் செல்லும் பணியை தமிழர் வாழ்வியலுடன் அவர்களின் மேம்பாட்டுடன் தம்மை இணைத்துக்கொண்டுள்ள உங்களையொத்த அனைவரிடமும் ஒப்படைத்திருக்கிறேன்.

நூல்விபரம், விலை, மற்றும் கிடைக்குமிடம் போன்ற தகவல்களை இக்கட்டுரையின் இறுதியில் வழங்கியிருக்கிறேன். இந்நூலின் ஒரு பிரதியையாவது விலைகொடுத்து வாங்கி, அதனை உங்கள் பிரதேச நூலகத்திற்கு உங்கள் அன்பளிப்பாக வழங்க முன்வருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். இதன்மூலம் ஈழத்தமிழரின் ஒரு ஆவணம் உலகின் முக்கியமான நூலகங்கள் அனைத்திலும் வைப்பிலிடப்படுவதை உறுதிசெய்துகொள்வோம். தயவுசெய்து இதையும் நானே செய்து முடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். உலகின் பிரபல நூலகங்கள் விலைகொடுத்து இந்நூலை எம்மிடத் பெற்றுக்கொள்ளத் துடிக்கும் என்று நம்பியிருப்பது மடைமை. நாம் தான் நூலகங்களை நாடி இந்நூலை எடுத்துச்சென்று வழங்க வேண்டும். அதற்கு நீங்கள் முன்வருவீர்களா மாட்டீர்களா என்ற கேள்விகளுடன் இந்த அறிமுகத்தை நிறைவுசெய்கின்றேன். நன்றி.

நூல் விபரம்:

Title: Noolthettam: An annotated bibliography of Sri Lankan Tamils.
Compiler: N.Selvarajah,  Co-ordinator,
European Tamil Documentation and Research Centre, London.
Publishers: European Tamil Documentation and Research Centre, London.
Pages: 201
Price: £ 15.00

Payment methods: Pay pal transaction: Noolthettam
Cheque: (UK only) payable to ETDRC
Bank: Abbey (Santender), 
Account Name: ETDRC, Sort Code 09-01-27, A/c No. 24459051,
IBAN: GB93ABBY09012724459051

Available at: United Kingdom:  N.Selvarajah, ETDRC, 48 Hallwicks Road, Luton LU2 9BH, United Kingdom.

Show More
Leave a Reply to Rohan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • dennis rutnam
    dennis rutnam

    Dear Mr.Selvarajah,
    My name is Dennis Rutnam (son of James T. Rutnam).I would like to contact you personally by e-mail if you would kindly revert with your personal e-mail address.
    Kind regards,
    Dennis Rutnam

    PS: It was by coincidence that I came across your site and must say your body of literary endeavours is extremely impressive…paticularly your work on Noolthettam.I eagerly await your reply.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    திரு டெனிஸ் ரட்ணம்,

    உங்களின் கருத்துக்கண்டு மிக மகிழ்ச்சி.
    முதன் முதலாக ஒரு ரட்ணம் என்ற பெயர் Rutnam என (Ratnam என அல்லாமல்)எழுதப்படுவதனை நான் அறிந்தது யாழ்பல்கலைக்கழகத்திற்கு உங்கள் குடும்பம் வழங்கிய பல்லினப் பண்பாட்டியல் கழகக் கட்டடத்தில் இருந்த பெயர்ப்பலகையிலேயே. பின்னரே உங்கள் தந்தையாரைப் பற்றியும் அவர் ஆற்றிய பணிகள் பற்றியும் அறியும் வாய்ப்புக் கிடைத்தது. நீங்கள் இன்றுவரை தமிழர்/தமிழ் நலன்களில் அக்கறையாக இருப்பது அறிந்து நன்றி.

    Reply
  • Rohan
    Rohan

    தமிழாராய்ச்சி மாநாடு யாழ்நகரில் நடந்த போதுநான் இந்த ஜேம்ஸ் ரி ரட்னம் அவர்களைப் பார்த்திருக்கிறேன். வெள்ளைத் தோலும் சிரித்த முகமும் தாடியுமாக ஒரு ‘அன்பான தாத்தா’ போல அவரை நான் உணர்ந்தேன்.

    பாம் கோட்டில் அவருக்குப் பக்கத்தில் அமர்ந்து சாப்பிட்டதாகவும் நினைவு. கொஞ்சம் வளர்ந்த பின் அவரது பின்னணியையும் கிண்டியிருக்கிறேன்.

    பிறகு சந்திரன் ரட்னம் வந்து ஆதர கதாவ எடுத்த போது அது ஜேம்ஸ் ரி ரட்னம் கதை தான் என்றும் சொன்னர்கள். நல்லது நடக்கட்டும்!

    Reply
  • dennis rutnam
    dennis rutnam

    I would truly appreciate you responding to my previous request for your contact information.
    Kind regards/Dennis Rutnam (son of James T.Rutnam).

    Reply