ஆட்சியை மாற்றி இராசபச்சேயின் கொடுங்கோல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! : தமிழ் படைப்பாளிகள் கழகம்

TCWAஎதிர்வரும் ஆட்சித்தலைவர்  தேர்தல் மூலம் இலங்கைத் தீவில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தும் அரிய வாய்ப்பு தமிழ்மக்களுக்குக கிடைத்துள்ளது.

“நடைபெற இருக்கும் ஆட்சித்தலைவர் தேர்தலில் கடந்த காலங்களைப் போல் தமிழ் மக்களை வாக்களிக்க வேண்டாம் என்று கூறுவதோ அல்லது தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கும் வகையில் சுயேச்சையாகப் போட்டியிடுவதோ புத்திசாலித்தனமானதல்ல” என யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையை நாம் முழு மனதோடு வரவேற்கிறோம்.  இதே கருத்தை வலியுறுத்தியுள்ள முன்னாள் உச்ச நீதிமனற் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களோடும் நாம் நூறு விழுக்காடு உடன்படுகிறோம்.

2005 ஆண்டு இருந்த களநிலையோ அரசியல் நிலையோ இன்றில்லை என்ற உண்மையை (யதார்த்தத்தை)  நாம் மறந்துவிடக் கூடாது.   2005 இல் வி.புலிகள் இராணுவ சமபலத்தோடு இருந்தார்கள். ஒரு நிழலரசும் இயங்கிக் கொண்டிருந்தது.  இன்று இந்த இரண்டும் இல்லை.

 இன்று எமது மக்கள் சிங்கள – பவுத்த வெறிபிடித்த ஒற்றை ஆட்சிக்குள் சிக்கித் தவிக்கிறார்கள்.  அவர்களது வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டுள்ளது.  வன்னி முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்ட மக்கள் தங்கள் வீடுவாசல்களில் குடிபுக முடியாமல் இடைநடுவில் விடப்பட்டுளார்கள். மறு வாழ்வு என்ற பெயரில் ஒரு குடும்பத்துக்கு அய்ந்து தகரங்களும் ரூபா.25,000  மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.  

ஒரு இலட்சத்துக்கும் மேலான மக்கள் தொடர்ந்து வன்னி முகாம்களில் சிறைவைக்கப்பட்டுள்ளார்கள். .  பன்னீராயிரம் போராளிகள் சிங்களைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் கூறுவது போல் “எமது விதியை நாமே நிருணயிக்க வேண்டும். இதற்காக நாம் எமக்குக் கிடைத்திருக்கும் சிறிய துரும்புச் சீட்டையும் உரிய வகையில் உபயோகிக்க வேண்டும். வீரவசனங்களாலும் வெற்றுப் பேச்சுக்களாலும் காலம் கடத்தும் எமது அரசியல்வாதிகளை உரிய வகையில் நாம் இனங்காண வேண்டும்.”

அதாவது பட்டது போதும் இனிப் படமுடியாது என்ற நிலையில் ஆட்சிமாற்றம் ஒன்றே எமது மக்களுக்கு ஓரளவாவது நிம்மதியைத் தேடிக் கொடுக்கும்  என்ற உண்மையை உணரவேண்டும்.

தேசியத் தலைவரின் பெற்றோர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சதாசிவம் கனகரத்தினம் சிறையில் வாடுகிறார். எழுநூறுக்கும் அதிகமான தமிழ் அரசியல் கைதிகள் ஆண்டுக்கணக்காகச் சிங்களச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

North Eastern Monthly என்ற செய்தி ஏட்டின் ஆசிரியர் து.ளு. திசநாயகம் அமைதிக் காலத்தில் எழுதிய இரண்டு கட்டுரைக்கு ஒரு சிங்கள நீதிபதியால் இருபது ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

மகிந்த இராசபச்சேயின் ஆட்சிக் காலத்தில் கொல்லப்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோசேப் பரராசசிங்கம்,  நடராசா  ரவிராஜ், கிட்டினன் சிவநேசன், தியாகராசா மகேஸ்வரன் போன்றோர்களது கொலையாளிகள் இன்னும் நீதிக்கு முன் நிறுத்தப்படவில்லை.

இதேபோல் மகிந்த இராசபக்சே அரசின் தமிழின அழித்தொழிப்பபின் (Genoside)  ஒரு கூறாகக் 30 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். பலர் கொடிய சிங்கள அரசுக்கு அஞ்சி வெளிநாடுகளுக்கு ஓடித் தப்பியுள்ளார்கள். 

எனவே எமது மக்கள் கொஞ்சமேனும் மூச்சுவிட வேண்டும் என்றால் ஆட்சிமாற்றம் தேவை. மகிந்த இராசபக்சேயை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். அவரது குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். முள்ளிவாய்க்காலில் 50,000 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ்மக்களைக் கொன்று குவித்ததை வெடிகொளுத்திக் கொண்டாடிய கொடிய ஆட்சிக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழ், தமிழீழம் என்ற சொற்களுக்குத்  தடைவிதிக்கச் சட்டம் கொண்டு வந்து இலங்கைத் தீவில் சிறுபான்மையினர் இல்லை,  தமிழர்களுக்கு  தாயகம் இல்லை, தேசியம் இல்லை, தன்னாட்சி உரிமை இல்லை, வடகிழக்கு இணைப்பில்லை என்று கொக்கரிக்கும் மகிந்த இராசபக்சே என்ற கொடுங்கோலனை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்க வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக சிங்கள ஆட்சியாளர்களுக்குப் பல்லக்குத் தூக்கிக் கைகட்டி வாய்பொத்தி சேவகம் செய்து வாழும் ஒட்டுக்குழுக்கள் அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட வேண்டும்.

முன்னெப்பொழுதும் இல்லாதவாறு சிங்கள தேசம் தமக்குள் மோதிக்கொண்டிருக்கிறது. இதனை நாம் சாணக்கியத்தோடு எமக்குச் சாதகமாகப் பயன்படுத்த வேண்டும். இரண்டு எதிரிகளில்  ஒரு எதிரியை ஒழிக்க . இன்னொரு எதிரியோடு கூட்டுச் சேரவேண்டும்.

எனவே மேற்கூறிய காரணங்களை மனதில் கொண்டு தமிழ்மக்கள் தங்கள் வாக்குகளைப் புத்திசாலித்தனத்தோடு பயன்படுத்த வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

Show More
Leave a Reply to thurai Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

14 Comments

  • Seelan
    Seelan

    ஆட்டை மாற்ற கோழிக்கு வாக்களியுங்கள். கோழி கூவல் அதிகம். அதனை மாற்ற ஓணானுக்கு வாக்களியுங்கள். இப்படியே வாக்களித்து வாக்களித்து மண்டையை போடும் வயசாச்சு. இனியாவது உண்மைக்கு வாக்களிப்பம்.

    யார் இந்த படைப்பாளிகள் தயவு செய்து பெயர்களை தெரியப்படுததுங்கள்.

    Reply
  • Kumaran
    Kumaran

    தேசியத் தலைவருக்கும், புலி ராணுவ ஆட்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ள இந்தப் படைப்பாளிகள் யார்??

    Reply
  • rohan
    rohan

    //Seelan இனியாவது உண்மைக்கு வாக்களிப்பம்.//

    இந்த உண்மை என்றால் என்ன என்று தெரிந்தவர்கள் யாரேனும் உள்ளீர்களா?

    Reply
  • thurai
    thurai

    இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் தங்கள் விருப்பு வெறுப்பிற்கேற்ப வாக்களிப்பார்கள். அனுபவித்தவர்கள் அவர்களே. புலத்தில் உள்ளவர்கள் அனைவரும் பார்வையாளர்களேயாகும்.

    புலிகள் போட்டுப் படுத்திய பாடு போதும். தமிழர்களை சிங்கள இராணுவம் கொன்று குவிக்கவிட்டு, புலிகளைக் காக்க முயன்றவர்கள் புலத்தில் வாழும் தமிழர் பலர். சிங்களவர்களின் ஆட்சியில் மாற்ரம் கொண்டுவர தமிழர்களால் முடியாது. யார் வந்தாலும் தமிழர்கள் இரண்டாம் தரப்பிரசைகளாகவே கருதுவார்கள்.

    தமிழர் முதலில் சிங்களவர்களின் நம்பிக்கைக்கு உரியபிரசைகளாக இலங்கையில் வாழவேண்டும். பகைமையை அகற்ரவேண்டும். இதுவே இன்று தேவை.

    துரை

    Reply
  • meerabharathy
    meerabharathy

    த.தே.கூ இன் முடிவு அரசியல் அடிப்படையில் மிகவும் முட்டாள்தனமான முடிவு….
    காலம் காலமாக வாக்குறுதிகளை நம்பி ஏமாந்தும் இன்னும் பாடம் கற்காமல் இருப்பது மிகவும் கவலைக்கிடமானது…
    இந்த “மா” மனிதர்களுக்கு “மாமனிதர்” பட்டம் கொடுக்கு அவர்களுடைய முன்னால் தேசிய தலைவர் இல்லாதாலையே இவ்வாறான ஒரு முடிவுக்குச் சென்றுள்ளனர்…
    சிறிலங்காவின் இரண்டும் தேசிய கட்சிகளும் இனவாத கட்சிகளே…
    இவர்களை ஆதரிப்பதால் எப்பொழுதும் ஒரு நன்மையும் யாருக்கும் கிடைக்கப் போவதில்லை…
    ஒரு மாற்றத்திற்காக கூட புதிதாக சிந்திக்க மறுக்கின்றனர் இந்த பழைமைவாதிகள்….
    தமிழ் பேசும் மனிதர்களின் அரசியல் உரிமைகள் தொடர்ந்தும் உரமாக ஓலிக்கவேண்டுமாயின்…
    தமிழ் பேசும் மனிதர்கள் தமது முதல் வாக்கை சிவாஜிலிங்கத்திற்கும்
    இரண்டாவது விருப்பு வாக்கை விக்கிரமபாகுவிக்கும் அளிப்பதே ….
    ஒரு மாற்றம்விருப்புவோரின் தெரிவாக இருக்கும்…
    இதேபோல் சிங்களம் பேசும் மனிதர்கள்….
    ஒரு மாற்றத்தை விரும்புவர்களாயின்….
    தமிழ் பேசும் மனிதர்களின் அரசியல் உரிமைகளை மதிப்பார்களாயின் ….
    தமது முதல் வாக்கை விக்கரமபாகுவிற்கும்….
    இரண்டாவது விருப்பு வாக்கை சிவாஜிலிங்கத்திற்கும் அளிக்கவேண்டும்….
    இந்த வாக்குகள்…இரண்டு இனவாத தேசிய கட்சிகளை நிராகரிக்கும் வாக்குகளாகவே கருதப்படும்…
    வெல்லப்போவது மகிந்தவே என்பது உறுதியானது…
    இதில் தமிழ் பேசும் மனிதர்கள் தமது அரசியல் உரிமைகளுக்காக தொடர்ந்தும் உறுதியுடன் நிற்கின்றார்கள் என்பதை வெளிப்படுத்துவதே இந்த தேர்தல் மூலம் நிலைநிறுத்தப்படவேண்டும்….
    இல்லையேல்…
    தமிழ் பேசும் மனிதர்கள் மீண்டும் அரசியல் அடிப்படையில் மண்கவ்வுவதை யாராலும தடுக்கமுடியாது….
    நன்றி
    மீராபாரதி

    Reply
  • chandran.raja
    chandran.raja

    குண்டுவீச்சு விமானங்கள் பறப்பது மக்கள் பதுங்குகுழியில் பயந்தொதுங்குவது கிளமோர் வைப்பது மரணதண்டனை நிறைவேற்றுவது இப்படியான சாவீடுகளை படமாக்கி புலம்பெயர் நாடுகளில் பணம் வசூலிப்பது போன்ற நிகழ்வுகள் அடியொட்ட நிறுதப்பட்டு இலங்கையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. நாடு மெல்லமெல்ல சுமூகநிலைக்கு திரும்பி வந்துகொண்டிருக்கிறது. புதிய தலைமுறைகள் கல்விகற்ற பிரவேசித்துள்ளார்கள். யாழ்பாணம் கொழும்பு பாதைகள் இணைப்பால் விவசாயிகள் தொழிலாளர்களுக்குள் சிறுவியாபாரிகளுக்குள் புதிய நம்பிக்கை பிறந்துள்ளது.
    இந்த மாற்றத்தை உணராதவனும் அதில் மகிழ்சி கொள்ளாதவனுமே இன்னொரு மாற்றத்தை உடனடியாக எதிர்பார்பான். இவர்கள் எதிர்பார்கிற மாற்றம் எதுவென்பது புரிகிறது. திரும்பவும் இனவெறிகளை தூண்டிவிட்டு அவர்கள் வேதனையில் இவர்கள் குளிர்காய்வதே! மனிதநேயம் உள்ளவர்கள் இதை அங்கீகரிக்கலாமா?.

    Reply
  • Naane
    Naane

    யாருமே சரியாக முடிவு எடுக்கமுடியாத நிலயில்தான் இருக்கின்றார்கள். இதற்குள் கண்டவன் நிண்டவன் எல்லாம் அறிக்கை வேறு. புலி புகழ்பாடி பின் ஒட்டுக்குழுக்களை ஓரங்கட்டவேண்டும் என்ற உள் மனக்கிடக்கைகளையும் வெளிவிட்டிருக்கின்றார்கள், இவர்களுக்கு மகிந்தாவைப் பற்றியோ சரத்தை பற்றியோ இருக்கின்ற அக்கறையை விட ஒட்டுக்குழுக்களில் தான் கரிசனம் அதிகம். வாழ்க தமிழ் படைபாளிகள்.

    Reply
  • Ajith
    Ajith

    TNF is a party elected by tamil people and it has the right to guide the tamil people. TNF made a decision considering variuos options that fit into their party. Similarly EPDP, Karuna, Pilliyan made a decision to support Rajapakse. They made their decision to reflect their situation. You must be a geneious to predict who will be a good leader and who will give the rights of tamils. Did Lasatha Wickrematunga ever thought his one time friend and a human rights activist turn against to him and send him to the next world.The past is used to predict the future. It is up to the tamil people to decide about voting.
    I do not understand why you all talking too much about this decision and the group that welcome that decision. Why you all wanted to know who is this group? Is it to send white vans to pick this group? It is ok to give your opinion about TNF decision. If you all have an alternative to TNF decision, you can put those arguments to support your decision.
    It has become a norm for some commentators to criticise LTTE and TNF but keep silence about Rajapkase, Karuna, EPDP, Other Paramilitary groups,JVP, UNP, CP,LSSP and above all India. It is better you all can go to asian tribune where K.T. Rajasingam is doing a service to Rajapakse and his alliance. You all can help him.

    Reply
  • பல்லி
    பல்லி

    மீராபாரதி அவர்களே உங்கள் அளவுக்கு என்னால் அரசியலை அவதானிக்க முடியாவிட்டாலும்; ஓர் அளவு அவதானிப்பதில் எந்த தமிழ் தலமைக்கும் தாமாக முடிவு எடுக்கும் உரிமை இல்லை என்பது உறுதியாகிறது; அதையே உங்கள் பின்னோட்டமும் உறுதி செய்கிறது, மகிந்தாதான் வருவார் என்னும் மாயை பலர் போல் பல்லிக்கும் உண்டு, ஆனால் அது இன்றய சூழ்னிலையில் மிக போட்டியான நிலை உள்ளது போல் ஒரு பிரமை பல்லிக்கு உண்டு; ஆனாலும் சம்பந்தர் தானாக என்று முடிவு எடுத்துளார், அன்று புலி; அதன் பின் புழி; இன்று இந்தியா; இப்படியே அவரது காலம் முடிந்துவிடும்; இதில் சரியான முடிவை எடுக்கும் தமிழ் தலமை யார் என்பது பல்லியின் கேள்வி; சிவாஜியா?? இது வேடிக்கை; ஆக மகிந்தாவோ அல்லது சரத்தோதான் என்னும் நிலையில் நாம் யாருடன் பேச முடியும் என்பதே எனது நிலைபாடு, ஓடும் குதிரை மீது கவனம் செலுத்தாதவன் முட்டாள், ஓடாத குதிரை மீது பணம் (வோட்டு) செலுத்துவபவன் கலப்படம் இல்லாத முட்டாள் எனலாமா??

    Reply
  • lamba
    lamba

    இது மாதிரி நிறையக் காழான்கள் இனிமேல் உருவாகும்.

    Reply
  • lamba
    lamba

    சரத் வந்தால் சரத் தமிழர் விடயத்தில் கவனமெடுப்பார் என்று கூட்டமைப்பு கேட்கிறது. அவர்களுக்கு ஆதரிக்க முடிவெடுத்துள்ளது. சரி சந்தர்ப்பங்கள் 50க்கு 50 என்பதால் மகிந்தா வந்தால் அதன்பின் கூட்டமைப்பும் தமிழர் நிலைப்பாடும் எவ்வாறு, யாரால், கையாளப்படப் போகின்றது??

    Reply
  • thurai
    thurai

    இராஜபக்சவின் ஆட்சி கொடுங்கோல் என கூறும் தமிழ் படைப்பாளிகளே, புலியினை அழிக்காவிட்டால் செங்கோல் ஆட்சியெனெவா கூறுவீர்கள். புலியின் கொடுமைகளை சுட்டிகாட்டியவர்களை துரோகிகள் எனக் கூறி புலிகள் சுட்டுக் கொல்லும்போது எங்கிருந்தீர்கள். சரத் பொன்சேகாவையோ அல்லது மகிந்தாவையோ குற்ரம் சாட்டுவதற்கு, புலிகளின் குற்ரங்களை உலகிற்குக் கூறி புலியினால் துரோகிகளாக்கப்பட்டவர்களிற்கே
    உருமையுண்டு. புலியினை ஆதரித்தவர்கழும், மவுனமாக இருந்தவர்கழும் தமிழர்களை அழித்த சரத் பொன்சேகாவிற்கும், மகிந்தாவிற்கும் ஒப்பானவர்களே.

    துரை

    Reply
  • John
    John

    நீங்கள் என்ன படைப்பாளிகள் சங்கமா அல்லது குழப்பவாதிகள் சங்கமா?

    //இதே கருத்தை வலியுறுத்தியுள்ள முன்னாள் உச்ச நீதிமனற் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களோடும் நாம் நூறு விழுக்காடு உடன்படுகிறோம்.//
    இந்த கருத்தை திரு விக்னேஸ்வரன் எப்படி சொன்னார் என்பதை சரியாக விளங்கி வாசிக்கவும் இதை Sunday mirrorல் பாக்கலாம் பின்னர் கருத்தை பகிர்ந்து கொள்ளவும்

    //2005 இல் வி.புலிகள் இராணுவ சமபலத்தோடு இருந்தார்கள். ஒரு நிழலரசும் இயங்கிக் கொண்டிருந்தது. இன்று இந்த இரண்டும் இல்லை//.
    இந்த நிழல் அரசு மக்களுக்கு என்ன செய்தது என்று பத்து வரி எழுதமுடியமா? இப்படி சொல்லிக்கொண்டு கிளிநொச்சி யாழ் போய்விடாதீர்கள்

    // வன்னி முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்ட மக்கள் தங்கள் வீடுவாசல்களில் குடிபுக முடியாமல் இடைநடுவில் விடப்பட்டுளார்கள். மறு வாழ்வு என்ற பெயரில் ஒரு குடும்பத்துக்கு அய்ந்து தகரங்களும் ரூபா.25 000 மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.//
    இந்தியாவில் உள’ள அகதிகளுக்கு என் கொடுக்ப்பட்டது என்று ஒரு அறிக்கையை காட்டுங்கள் பார்க்கலாம்

    //ஒரு இலட்சத்துக்கும் மேலான மக்கள் தொடர்ந்து வன்னி முகாம்களில் சிறைவைக்கப்பட்டுள்ளார்கள்//
    அவர்களுக்கு வீடுவசாசல் இல்லாமல் எங்கே ஜயா போவது நாங்கள் என்ன சேரிப்புறத்தையா கட்டச் சொல்லுகிறீர்கள் குப்பைகளிலிருந்து தமிழ்நாட்டு மக்களை காப்பாற்றுங்கள்

    //பன்னீராயிரம் போராளிகள் சிங்களைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.//
    இவர்கள் மாவீரர் தினம் கொண்டாடுகிறார்கள் கேள்விப்படவில்லையா?

    //தேசியத் தலைவரின் பெற்றோர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.//
    இந்தப் பெற்றோர்கள் என்றுமே எங்கையும் துன்பபடவில்லை மக்கள்தானே கஸ்டப்பட்டார்கள்.

    //எழுநூறுக்கும் அதிகமான தமிழ் அரசியல் கைதிகள் ஆண்டுக்கணக்காகச் சிங்களச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள்//.
    கணக்குவழக்குளை சரியாக எழுதுங்கள்

    //எல்லாவற்றுக்கும் மேலாக சிங்கள ஆட்சியாளர்களுக்குப் பல்லக்குத் தூக்கிக் கைகட்டி வாய்பொத்தி சேவகம் செய்து வாழும் ஒட்டுக்குழுக்கள் அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட வேண்டும்//
    நீங்கள் இன்னும் துரோகிகள் பட்டத்திலிருந்து வெளியேவர முயற்ச்சிக்கவில்லை துரோகிகள் என்று கூறி யார் துரொகியானது என்பத இன்னுமா தெரியவில்லை

    //முன்னெப்பொழுதும் இல்லாதவாறு சிங்கள தேசம் தமக்குள் மோதிக் கொண்டிருக்கிறது. இதனை நாம் சாணக்கியத்தோடு எமக்குச் சாதகமாகப் பயன்படுத்த வேண்டும்//
    சிங்கள தேசம் எப்போதும் போலலே மோதுகிறது ஆனால் தமிழருக்கெதிரான சாணக்கிய ஒற்றுமையிலேயே மோதுகிறார்கள் என்பதை புரியவில்லையா?

    //இரண்டு எதிரிகளில் ஒரு எதிரியை ஒழிக்க . இன்னொரு எதிரியோடு கூட்டுச் சேரவேண்டும்//
    இது தவறு மக்களுக்காகவே கூட்டு சேர வேண்டும் எதிரியை ஒழிக்க பழிவாங்க இல்லை ஜயா?

    எனவே மேற்கூறிய காரணங்களை மனதில் கொண்டு தாங்கள் கவனத்துடன் உங்கள் அறிக்கைகளை இனிமேல் விடுங்கள் நன்றி

    Reply
  • kirupa
    kirupa

    எல்லாவற்றுக்கும் மேலாக சிங்கள ஆட்சியாளர்களுக்குப் பல்லக்குத் தூக்கிக் கைகட்டி வாய்பொத்தி சேவகம் செய்து வாழும் ஒட்டுக்குழுக்கள் அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட வேண்டும்.//இது சரத்தோட நிக்கிற ஒட்டுக்குழுக்களுக்கும் பொருந்துந்தானே

    Reply