பொன்சேகா, தேர்தல் ஆணையாளரை வீட்டு காவலில் வைத்துள்ளதாக கூறும் செய்தி பொய்யானது – அமைச்சர் சமரசிங்க

எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவையும், தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கவையும் வீட்டுக் காவலில் வைத்திருப்பதாக கூறப்படும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையெனவும் அரசாங்கம் அவற்றை முழுமையாக மறுப்பதாகவும் மனித உரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்றுத் தெரிவித்தார்.

தனது தோல்வியை தாங்கிக் கொள்ள இயலாத பொன்சேகா சர்வதேச ஊடகங்கள் வாயிலாக பொய்ப் பிரசாரங்களைச் செய்து அனுதாபம் தேட முயல்கின்றார். இது போன்ற இழிவான அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் நாட்டின் நற்பெயருக்கு கலங்கத்தையும் அபகீர்த்தியையும் ஏற்படுத்த வேண்டாமெனவும் அமைச்சர் சமரசிங்க பொன்சேக்காவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொன்சேகா வீட்டுக் காவலில் வைக்கப்படவில்லை. அவர் நினைத்த நேரம் அந்த ஹோட்டலை விட்டு வெளியே செல்லலாம். ஒரு ஜனாதிபதி வேட்பாளரென்ற வகையில் பாதுகாப்பு வழங்குவதற்காக அவ்வீதியில் பாதுகாப்பு படையினர் சேவையிலீடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர் அதனை தவறாக கருத்தில் கொண்டுள்ளதுடன் ஊடகங்களில் போலி பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறார்.

மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று மாலை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட் டார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த், மைத்திரிபால சிறிசேன, ஜீ. எல். பீரிஸ், பாட்டளி சம்பிக்க ரணவக்க, அனுரபிரியதர்ஷன யாப்பா, ரிஷாட் பதியுதீன், விமல் வீரவன்ச எம்.பி, சட்டத்தரணி காலிங்க இத்ததிஸ்ஸ ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அமோக வெற்றியீட்டியிருப்பதனை புரிந்து கொண்ட எதிர்க்கட்சியைச் சேர்ந்த சதிகார கும்பல், மேற்கூறியது போன்ற கட்டுக்கதைகளை குறுந்தகவல்கள், மின்னஞ்சல்கள், இணையத் தளங்களினூடாக பரப்பி வருகின்றது.

அது மட்டுமன்றி எதிரணி வேட்பாளரும் கட்சித் தலைவர்களும் சர்வதேச ஊடகங்கள் வாயிலாக பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். பொன்சேகாவை யாரும் வீட்டுக் காவலில் வைக்கவில்லை. அவர் இருப்பது வீடு அல்ல அது பல உள்நாட்டு வெளிநாட்டவர்கள் வந்து போகும் பிரபலமான ஹோட்டலாகும் என்றும் அமைச்சர் சமரசிங்க தெரிவித்தார்.

எமக்கு கிடைத்த தகவலடிப்படையில் 26ம் திகதி மாலை 4.30 மணியளவில் பொன்சேகாவும் அவருடனிருந்த கட்சித் தலைவர்களும் மற்றும் ஆதரவாளர்களும் குறித்த ஹோட்டலிருந்த இரண்டு மாடிகளிலிருந்த 70 அறைகளை வாடகைக்கு அமர்த்தி தங்கியிருந்துள்ளனர். இவரை அரசாங்கம் அங்கே அழைத்து செல்லவில்லை. தானாக விரும்பியே அவர் அங்கு சென்றுள்ளார்.

குறித்த ஹோட்டல் அமைந்திருக்கும் பகுதி அதியுயர் பாதுகாப்பு வலையம் என்பது சகலரும் அறிந்ததே. ஹோட்டலுக்கு முன்பாகவே விமான படைத் தளம் அமைந்திருப்பதனால் எப்போதுமே அப்பகுதியில் படையினர் குவிக்கப்பட்டிருப்பது வழமை.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *