பொதுத்தேர்தல் அறிவிப்பு வெளியானதும் வேட்பாளர் தெரிவில் கட்சிகள் மும்முரம்

srilanka_parliament_02.jpgஏப்ரல் மாதம் எட்டாந்திகதி நடைபெறவுள்ள புதிய பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான இறுதிக்கட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. பாராளுமன்றம் நேற்று முன்தினம் (09) நள்ளிரவிலிருந்து தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் செயற்பாடுகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன.

இம்மாதம் 19ம் திகதி முதல் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய முடியும் என வர்த்தமானி அறிவித்தலில் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக வேட்பாளர் பட்டியல்களைப் பூர்த்தி செய்ய அரசியல் கட்சிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மாகாண மட்டத்தில் வேட்பாளர்களுக்கான நேர்முக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இன்னும் இரண்டொரு தினங்களில் மாவட்ட மட்டத்தில் வேட்பாளர் பட்டியலை பூர்த்தி செய்யவுள்ளதாக முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் தெரிவித்தார்.

முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சி களுக்கு மாவட்ட மட்டத்தில் வேட்பாளர் களைப் பகிர்வது குறித்து, கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகக் கூறிய அமைச்சர் பிரேம் ஜயந்த், எவ்வாறெனினும் எதிர்வரும் 20ம் திகதிக்குள் வேட்பாளர்கள் நியமனப்பத்திரங்களில் கைச்சாத்திடவுள்ளதாகக் குறிப்பிட்டார். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான கூட்டணி இன்னும் தீர்க்கமான முடிவு எதனையும் மேற்கொள்ளவில்லையென அக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் அளவில் இந்தத் தேர்தலில் வேட்பாளர்களைக் களமிறக்கத் தீர்மானித்துள்ளதாகவும், இது தொடர்பில் சகல கூட்டணிக் கட்சிகளுடனும் பேசி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி இவ்வாரம் முடிவொன்று எட்டப்படுமென்றும் திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) சகல மாவட்டங்களிலும் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக அதன் பிரசாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்னும் இரண்டொரு தினங்களில் இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடையே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கருத்து முரண்பாடு எழுந்திருந்தது. இந்நிலையில் கூட்டமைப்பால் போட்டியிடுவது பற்றிய தீர்மானம் எதனையும் கூட்டமைப்பு இன்னும் மேற்கொள்ளவில்லை.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆளுந்தரப்புடன் இணைந்து போட்டியிடுவதென ஏற்கனவே தீர்மானித்துவிட்டது. அந்தக் கட்சியின் சார்பில் 9 பேர் தேர்தலில் களமிறங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிடுமெனத் தகவல்கள் வெளியாகியுள்ளபோதிலும், இறுதி முடிவுகள் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

ஆளுந்தரப்பில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளும் இன்னும் ஆலோசனை நடத்தி வருகின்றன. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தேர்தலில் போட்டியிடுவது பற்றித் தீர்மானிக்க முடியாமல் அதன் உயர்மட்ட கலந்துரையாடலை நிறுத் தியுள்ளது. ஜனாதிபதியுடன் மீண்டும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்பே இறுதி முடிவெடுக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதின்மூன்றாவது பாராளுமன் த்தின் ஆயுட்காலம் எதிர்வரும் ஏப்ரல் 22ம் திகதியுடன் நிறைவ டைவதால், நேற்று முன்தினம் (09) நள்ளிரவிலிருந்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அரசியலமைப்பின் 70 (1) சரத்தின் 11 ம் பிரிவின் கீழ் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதி காரத்தைப் பயன்படுத்தி பாராளுமன்றத்தை கலைத்துள்ளார்.

இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைவாக எதிர்வரும் ஏப்ரல் எட்டாந்திகதி தேர்தல் நடைபெறுமென தேர்தல்கள் மேலதிக ஆணையாளர் டபிள்யூ. பீ. சுமணசிறி தெரிவித்தார். வர்த்தமானி அறிவித்தலில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளவாறு வேட்பாளர் நியமனப் பத்திரங்கள் எதிர்வரும் 19ம் திகதி முதல் 26ம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும்.

கடந்த 2004ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 105 ஆசனங்களைப் பெற்று வெற்றியீட்டியது. ஐக்கிய தேசியக் கட்சி 82 ஆசனங்களையும், தமிழ்த் தேசியயகூட்டமைப்பு 22 ஆசனங்களையும் பெற்றிருந்தன. ஜாதிக ஹெல உறுமய 9 ஆசனங்களைப் பெற்ற அந்தத் தேர்தலில் 75% மக்கள் வாக்களித்திருந்தனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஜே.வி.பியுடன் இணைந்து 42 இலட்சத்து 23 ஆயிரத்து 970 வாக்கு களைப் பெற்று (45.60 சதவீத வாக் குகள்), ஐக்கிய தேசிய கட்சி 35 இலட்சத்து 04 ஆயிரத்து 200 வாக்குகளையும் (37.83% சதவீதம்) தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 6,33,654 வாக்குகளையும், ஜாதிக ஹெல உறுமய 5,54,076 வாக்குகளையும் பெற்றிருந்தன.

அடுத்த பாராளுமன்றத்துக்கான தேர்தல் ஏப்ரல் எட்டாந்திகதி நடைபெறுவதுடன் ஏப்ரல் 22ம் திகதி முதலாவது அமர்வு நடைபெறும். புதிதாக அமையவிருப்பது 14 வது பாராளுமன்றம். என்றாலும் 1978ம் ஆண்டின் அரசியலமைப்பின்படி ஏழாவது பாராளுமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றத்திற்குத் தேர்தல் வாக்கெடுப்பின் மூலம் 196 உறுப்பினர்களும் போனஸ் மூலம் 29 உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *