இதுவரை காலமும் மணி சின்னத்தில் போட்டியிட்டுவந்த ஜே.வி.பி. என்ற மக்கள் விடுதலை முன்னணி எதிர்வரும் பொதுத் தேர்தலில் கிண்ணம் சின்னத்தில் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெனரல் சரத் பொன்சேகாவை முதன்மைப்படுத்தியதாக புதிய கூட்டமைப்பபொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த கூட்டமைப்புக்கு, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க மற்றும் சுதந்திர கட்சியின் மக்கள் பிரிவு பொது செயலாளர் டிரான் அலஸ் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ள தாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் காலத்தின் போது புதிய அரசியல் கட்சி ஒன்று பதிவு செய்ய முடியாது என்பதினால், ஏற்கனவே உள்ள கட்சி ஒன்றின் பெயரே புதுப்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்து பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர், ஜே வி பி அன்னச் சின்னத்தில் அனைத்து எதிர்கட்சிகளையும் ஒன்றிணைத்து போட்டியிட விரும்பியது. எனினும் இதனை ஐக்கிய தேசிய கட்சி ஏற்க மறுத்து, யானைச் சின்னத்திலேயே போட்டியிட தீர்மானித்தது.
அதற்கு ஆரம்பத்தில் எதிர்ப்புகள் ஏற்படினும், பின்னர் ஜனநாயக மக்கள் முன்னிணியின் மனோ கணேசன் மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர ஆகியோர் இணங்கியுள்ளதாகவும் இதனை அடுத்தே, ஜே வி பி இந்த புதிய தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாகயும் தகவல்கள் தெரிவிக்கின்றன.