பழி நாணுவார் : ஷோபாசக்தி

Shoba_Sakthiஇந்தக் கட்டுரை இரு பகுதிகளாலானது. கட்டுரையின் இரண்டாவது பகுதி, உருவாகிவரும் ‘செங்கடல்’ திரைப்படம் குறித்தும் நான் படப்பிடிப்பில் ஊதியம் கேட்ட தொழிலாளர்களைத் தாக்கினேன் என்றும் கடந்த இரண்டு மாதங்களாகப் பத்திரிகைகளிலும் இணையங்களிலும் வெளியான செய்திகளின் / விமர்சனங்களின் யோக்கியதையை ஆராய்வது. முதற்பகுதி, எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன் இப்போது இணையத்தளங்களில் என்மீதும் எனது தோழர்கள் மீதும் படுதீவிரமாகச் செய்துவரும் சேறடிப்புகளிற்கான எதிர்வினை.

கட்டுரையின் முதற் பகுதியான யமுனா ராஜேந்திரன் மீதான எதிர்வினையைப் படிக்கும்போது “என்ன இவன் எப்போது பார்த்தாலும் யமுனாவோடு மல்லுக்கு நிற்கிறானே” என்று நீங்கள் சலிப்படையக் கூடும். எனக்கும் கூட யமுனாவின சேறடிப்புகளிற்கும் அவதூறுகளிற்கும் பதிலளித்து பதிலளித்துச் சலித்துத்தான் போய்விட்டது. “நான் திட்டவட்டமாகச் சொல்கிறேன்: காலனிய எதிர்ப்பு இந்துத்துவமும், மேற்கத்திய மற்றும் மார்க்சிய எதிர்ப்பு அரசியல் இஸ்லாமும், நரேந்திர மோடியும் பின்லாடனும் பின்நவீனத்துவ உற்பத்திகள்தான் “ என்றெல்லாம் திட்டவட்டமாகக் கிறுக்குத்தனமாக எழுதிக் கொண்டிருப்பவரிடம் நான் எதைத்தான் அரசியல்ரீதியாக விவாதிக்க முடியும்? ‘குமிஞ்சான்’, ‘குடிகாரன்’ என்றெல்லாம் கட்டுரைகளில் ‘பட்டம் தெளிச்சு’ சிறுபிள்ளைத்தனமாக விளையாடிக் கொண்டிருப்பவரிடம் நான் எதைத்தான் ஆரோக்கியமாக விவாதிப்பது?

இந்த அவதூறுகள் வெறும் தனிமனிதத் தூஷணைகள் என்றளவில் நின்றிருந்தால் அவை என்னைச் சிறிதளவேனும் வருத்தும் வல்லமையற்றவை. அதாவது இப்போது இணையத்தளங்களின் பின்னூட்டப் பகுதிகளில் பல்லி, பூரான் என்று சில சல்லிப் பயல்கள் வந்து எழுதுவதுபோல அவை தனிமனித தூஷணைகள் என்றளவில் நின்றுவிட்டால் எனக்கு அவற்றால் எந்தச் சலனமோ வருத்தமோ பிரச்சினையோ கிடையாது. “பொதுக் காரியங்களில் இருப்பவன் மானம் பார்க்கக் கூடாது” என்ற தந்தை பெரியாரின் வார்த்தை எனக்கு வழிகாட்டி. நாய் கடித்தால் பதிலிற்குத் திருப்பி நாயைக் கடிப்பதும் நமது மரபல்ல.

ஆனால் யமுனா ராஜேந்திரனின் சேறடிப்புகளும் அவதூறுகளும் வெறும் தனிநபர் தூஷணை என்ற வகைக்குள் அடங்கிவிடுவன அல்ல. நாங்கள் வரித்திருக்கும் பாஸிச எதிர்ப்பு அரசியலையும் சாதியொழிப்பு அரசியலையும் நாங்கள் முன்னிறுத்திய விளம்புநிலை அரசியற் சிந்தனைகளையும் தனது கருத்துப் பலத்தால் அல்லாமல் வெறும் அவதூறுகளின் மூலம் சுரண்டிப் பார்க்க யமுனா இடையறாது முயற்சிக்கும்போது, சலிப்பையும் அலுப்பையும் சற்றுத் தள்ளி வைத்துவிட்டு நானும் யமுனா ராஜேந்திரனுக்கு எதிர்வினை செய்தே ஆகவேண்டியிருக்கிறது.

1.

தோழர் அ.மார்க்ஸ் இதுவரை எத்தனையோ உண்மை அறியும் குழுக்களிற்குத் தலைமை தங்கிச் சென்று ஆய்வு செய்து பல உண்மைகளை வெளிக்கொணர்ந்துள்ளார். ஆனால் அப்போதெல்லாம் சந்திக்காத அவதூறுகளை அவர் அண்மையில் வெளிப்படுத்திய ஓர் உண்மையால் அவர் எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. அவர் தனது அண்மைய நூலொன்றின் முன்னுரையில் யமுனா ராஜேந்திரன் ‘மூடத்தனமானவர்’ என்ற உண்மையை வெளியிட்டுள்ளதாலேயே புதிய அவதூறுகளை அவர் எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.

இவ்வளவிற்கும் இந்த உண்மையை அ. மார்க்ஸ்தான் முதன் முதலில் கண்டுபிடித்துள்ளார் என்று நாம் கருதினால் அது வரலாற்று வழு. ஏற்கனவே பேராசிரியர்கள் சிவசேகரம், நுஃமான், தோழர் எஸ்.வி.ராஜதுரை போன்ற பல அறிஞர்கள் கண்டெடுத்துத் தங்கள் எழுத்துகளில் நிறுவிக்காட்டிய உண்மையொன்றையே அ. மார்க்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார் என்று மட்டுமே நாம் சொல்லிக் கொள்ளலாம். இந்த உண்மையை அ.மார்க்ஸ் எழுதியதால் ‘கீற்று’ இணையத்தளத்தில் யமுனா ராஜேந்திரன், அ.மார்க்ஸை இலக்கு வைத்து ‘அரசன் அம்மணமாக வருகிறான்’ என்று ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார்.

யமுனா ராஜேந்திரனுடன் வாதிடுவது, கருத்துப் போர் புரிவதெல்லாம் மிகவும் துன்பமானது. அந்தத் துன்பத்தை தந்தை பெரியாரின் சொற்களில் ” நூறு அறிவாளிகளுடன் மோதுவதைவிட ஒரு மூடனோடு மோதுவது மிகச் சிரமமானது” என்று விளக்கலாம். ஒவ்வொரு தடவையும் பதினைந்து வருடங்களிற்கு முன்பே பதில் சொல்லித் தீர்க்கப்பட்ட கேள்விகளோடு மறுபடியும் மறுபடியும் யமுனா வருவார். பத்து வருடங்களுக்கு முன்னமே அவரின் பதில்களின் குளறுபடிகளை நாம் மறுபடியும் மறுபடியும் சுட்டிக்காட்டியிருந்தபோதும் அதே பதில்களுடனும் வருவார். கேள்வியும் ரீமிக்ஸ், பதிலும் ரீமிக்ஸ். ஆனால் உயிர்மை, கீற்று, தேசம், இனியொரு என்று புதுப் புதுத் தியேட்டர்கள்.

இப்படியாகத்தான் சரியாக இரண்டு வருடங்களிற்கு முன் ‘ தேசம் நெற்’றில் ஷோபாசக்தியை அம்பலப்படுத்துகிறேன், அலங்கோலப்படுத்துகிறேன் என்றொரு பிரகடனத்துடன் யமுனா பத்துப் பக்கங்களிற்கு ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். வழமைபோலவே என்னோடு சேர்த்து சுகனுக்கும், அ. மார்க்ஸுக்கும் யமுனா பழிப்புக் காட்டியிருந்தார். நானும் சுகனும் உடனேயே மிகுந்த பொறுப்புணர்வுடன் பதிலுக்கு ஆளுக்குப் பத்துப் பத்துப் பக்கங்களில் தனித் தனியாக மறுத்தான் கட்டுரைகளை எழுதி ‘சத்தியக் கடதாசி’யில் வெளியிட்டோம். எங்களது கட்டுரைகளுக்குப் பத்து நாட்களில் பதில் தருவதாகத் தேசம் நெற்றில் அறிவித்தார் யமுனா. பத்து, இருபது, முப்பது நாட்கள் பொறுத்தோம். நாற்பதாவது நாளாகியும் பதில் வராததால் ‘யமுனா ராஜேந்திரனைக் காணவில்லை’ என்று விளம்பரம் வேறு வெளியிட்டுப் பார்த்தோம். அந்தக் கட்டுரைகளில் நாங்கள் எழுப்பிய கேள்விகளிற்கு இன்றுவரைக்கும் பதில்கள் வந்தபாடில்லை. யமுனாவின் கட்டுரையில் இருந்ததெல்லாம் பொய்களும் அவதூறுகளுமே என்று நாங்கள் சான்றாதாரங்களோடு நிறுவியும் அவை குறித்து இதுவரை எந்த விளக்கமோ வருத்தமோ யமுனாவிடமிருந்து வெளியாகவில்லை. நாங்களும் பதிலோ, விளக்கமோ வருமெனக் காத்திருந்தோம். குரங்கிடம் மூத்திரம் கேட்டால் அது கொப்புக்கு கொப்புத் தாவுமாம். அந்த விவாதத்தை அப்படியே போட்டுவிட்டு அந்த விவாதத்தில் தான் எழுதிய பொய்க் குற்றச்சாட்டுகளையும் அவதூறுகளையும் வெவ்வேறு வடிங்களில் வெவ்வேறு இணையத்தளங்களிற்குத் தாவித் தாவி யமுனா திரும்பத் திரும்ப எழுதிக்கொண்டேயிருக்கிறார்.

யமுனாவின் இந்த மாயப் போரின் கடைசி ‘அட்டாக்’ தான் அந்தக் கீற்றுக் கட்டுரை. அ.மார்க்ஸை இலக்கு வைத்து எழுதப்பட்ட கட்டுரையில் வழமைபோலவே என்னையும், சுகன், ஆதவன் தீட்சண்யா, பௌசர், சுகுணா திவாகர் போன்ற தோழர்களையும் இணைத்தே அவர் பழித்திருக்கிறார். இம்முறை தோழர். எஸ்.வி. ராஜதுரையையும் தனது அவதூறு வளையத்திற்குள் கொண்டுவர யமுனா முயற்சித்துள்ளார். “எஸ்.வி.ஆருடையதும் அ.மார்க்ஸினதும் தற்போதைய ஈழம் குறித்த அரசியல் பார்வைகள் தமிழ்த் துவேஷ சிங்கள இனவாத மார்க்ஸியர்களின் பார்வையை ஒத்தது” என்கிறார் யமுனா. “இவர்களது மனித உரிமைப் பிரகடனங்கள் ஈழத்தைப் பொறுத்தவரை பசப்பலானவை” என்றும் சொல்கிறார் யமுனா.

கடந்த வருடம் திருவனந்தபுரத்தில் ‘புலம்பெயர்ந்த இலங்கையர்களிற்கான சர்வதேச ஒன்றியம்’ (அய்.என்.எஸ்.டி) நடத்திய கருத்தரங்கில் எஸ்.வி.ஆர். கலந்து கொண்டதே யமுனாவின் குற்றச்சாட்டின் அடிப்படை. நான் அறிந்தளவிற்கு அய்.என். எஸ்.டி. குறித்து முதலில் சொல்லிவிடுகிறேன்: புலம் பெயர்ந்த இலங்கையர்களால் நடத்தப்படும் இந்த அமைப்பில் தமிழர்களும் சிங்களவர்களும் இணைந்து செயற்படுகிறார்கள். பத்திரிகையாளர்கள் சுனந்த தேசப்பிரிய, சனத் பாலசூரிய, மஞ்சுள வெடிவர்த்தன எழுபதுகளில் ஜே.வி.பியின் மத்தியகுழு உறுப்பினராயிருந்த ரஞ்சித், ந.சுசீந்திரன், ‘உயிர்நிழல்’ லஷ்மி, ‘சரிநிகர்’ சரவணன், சிவராசன், கிருஷ்ணா போன்றவர்கள் இந்த அமைப்பை வழிநடத்திச் செல்பவர்களில் முதன்மையானவர்கள். கறாரான அரசியல் வேலைத்திட்டங்கள் இவர்களிடம் இல்லாத போதும் இலங்கையில் அனைத்து மக்களிற்குமான சனநாயக உரிமைகளும் ஊடகச் சுதந்திரமும் உறுதி செய்யப்படவேண்டும் என்ற முன்னோக்கில் இவர்கள் சர்வதேச நாடுகளில் கருத்தரங்குகளை நடத்துகிறார்கள். அரசின் மனித உரிமை மீறல்களை பகிரங்கப்படுத்தி அறிக்கைகளையும் பிரசுரங்களையும் வெளியிடுகிறார்கள். குறிப்பாக இவர்கள் மகிந்த ராஜபக்ஷவின் அரசைக் கடுமையாக எதிர்த்துக்கொண்டிருப்பவர்கள். ‘சனல் 4′ல் வெளியாகிய இலங்கை அரசபடைகளின் படுகொலைகள் குறித்த ஒளிநாடாவை வெளியிட்டவர்கள் அய்.என்.எஸ்.டி என்றே இலங்கை அரசு குற்றஞ்சாட்டியது. குறிப்பாக தோழர் ரஞ்சித்தை அரசு குற்றஞ்சாட்டியது. இதனால் இவர்கள் முன்பு புலிகளின் ஆதரவாளர்கள் என்றும் இப்போது அய்க்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் என்றும் விமர்சனங்களைச் சந்தித்துக்கொண்டிருப்பவர்கள். தங்களது அமைப்பிற்கு அரசு சாரா நிறுவனங்களிடமிருந்து நிதியைப் பெற்றுக்கொள்பவர்கள்.

இந்த அமைப்பினர்தான் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் – சிங்கள – முஸ்லிம் அரசியற் செயற்பாட்டாளர்களை ஒன்றிணைத்து திருவனந்தபுரத்தில் இலங்கை அரசியல் பிரச்சினைப்பாடுகள் குறித்த கருத்தரங்கொன்றை நடத்தினார்கள். இவர்கள் நடத்திய இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றியதால் எஸ்.வி.ஆர். தமிழ் துவேஷியாகவும் சிங்கள இனவாதத்தன்மையுடையவராகவும் மாறிவிடுவாரா? இப்படிச் சொல்வதற்கு எஸ்.வி.ஆரின் எழுத்துகளிலிருந்தோ பேச்சுகளிலிருந்தோ ஏதாவது ஆதாரம் காட்ட யமுனா தயாரா? மூடனுக்கும் புரியக் கூடியவகையில் நான் திரும்பவும் நிதானமாகக் கேட்கிறேன்: சிங்கள இனவாதத்திற்கு ஆதரவான பேச்சையோ தமிழ் மக்களிற்கு எதிரான துவேஷப் பேச்சையோ எஸ்.வி.ஆர் எங்காவது பேசியுள்ளாரா? எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இந்தத் தீராத பழியை யமுனா எஸ்.வி.ஆர். மீது சுமத்துகிறார். எஸ்.வி.ஆரின் மனித உரிமை கோரிய பேச்சுகள் பசப்பலென்று யமுனா எந்த ஆதாரத்தின் அடிப்படையில் சொல்கிறார்? கட்டுரையில் ஒரேயொரு மேற்கோளைத் தன்னும் ஒரேயொரு ஆதாரத்தைக் கூட யமுனா எழுதவில்லையே. ஏனிந்த அவதூறுப் பிழைப்பு?

“‘உயிர் எழுத்து’ இதழில் ரஞ்சித்தைக் குறித்து மனித உரிமைக் காவலர் என்று பச்சைப் பொய்யை எழுதியுள்ளார் எஸ்.வி.ஆர்.” என்று அடுத்த விசக் கத்தியைச் சொருகுகிறார் யமுனா. யமுனாவுக்கு ரஞ்சித்தைக் குறித்து எதுவும் தெரிவதற்கு வாய்ப்பில்லை. ரஞ்சித் ஜே.வி.பியின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவர். 1971 கிளர்ச்சியை நடத்திய தலைவர்களில் ஒருவர். ரோகண விஜேவீர சிறைப்பட்டு யாழ் டச்சுக்கோட்டையில் அடைக்கப்பட்டிருந்தபோது ரோகணவை மீட்க ஜே.வி.பியினர் கோட்டையின் மீது நடத்திய தாக்குதலைத் தலைமைதாங்கி வந்தவர்களில் ஒருவர். தோல்வியில் முடிந்த அந்தச் சிறையுடைப்பு நடவடிக்கையில் கைதாகி ஊறாத்துறைக் கடற்கோட்டையில் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டவர். 1977ல் விடுதலையாகி ஜெர்மனிக்கு வந்து அரசியல் தஞ்சம் பெற்றவர். தனது போராட்ட அனுபவங்களை ‘ஏப்ரல் கண்ணீர்’ என்ற நூலாக எழுதி வெளியிட்டவர். ஜே.வி.பி.மீது விமர்சனங்களை வைத்து அந்த அமைப்பிலிருந்து வெளியேறியவர்.அந்த முன்னாள் ஜே.வி.பி தோழர் இன்று இலங்கை அரசின் மனிதவுரிமை மீறல்களை சர்வதேசமெங்கும் பரப்புரை செய்வதில் ஓய்வொழிச்சலற்ற மனிதவுரிமைப் போராளி.

தோழர் ரஞ்சித் இலங்கை அரசிற்கு மன்னிப்புக் கடிதம் எழுதிவிட்டார் என்பது மாவீரன் யமுனாவின் குற்ச்சாட்டு. இலங்கையிலிருந்த ரஞ்சித்தின் குடும்ப உறுப்பினர்கள் இலங்கை அரசால் குறிவைக்கப்பட்டிருந்த நிலையில் தனக்கும் அந்த ஒளிநாடாவுக்கும் தொடர்பில்லை என ரஞ்சித் இலங்கை அரசுக்குக் கடிதம் எழுதினார். வீரியம் பெரிதல்ல காரியமே பெரிது என்பதைக் களப்போராளிகள் புரிந்துகொள்வார்கள். சிங்களத்திலேயே எனக்குப் பிடிக்காத வார்த்தை ‘சமாவெயன்’ என்று ரஞ்சித் சொல்ல இதுவொன்றும் ‘ரமணா’ திரைப்படமல்ல, ரத்தமும் சதையுமான உயிர்களும் வாழ்க்கையும். ரஞ்சித்தை மனிதவுரிமைப் போராளி இல்லையென்று நிறுவவதன் மூலம் யமுனா என்ன சாதிக்க நினைக்கிறார். ரஞ்சித்தின் குடும்பம் இலங்கை அரசிடம் சிக்கிச் சீரழிய வேண்டுமென்றா யமுனா கருதுகிறார். விளக்கம் தேவை.

இனி அ.மார்க்ஸிடம் வருவோம். தமிழகத்தில் அறிவுஜீவிகள் விடுதலைப் புலிகளின் அரசியலையும் மனிதவுரிமை மீறல்களையும் விமர்சிக்கத் தயங்கிய காலத்திலேயே புலிகளை விமர்சித்து எழுந்த மிகச் சில குரல்களில் அ.மார்க்ஸுடைய குரல் முதன்மையானதும் வலுவானதும். இதனாலேயே அவர்மீது இலங்கை அரசின் ஆதரவாளர் என்று தமிழ்த் தேசியவாதிகள் சிலரால் குற்றம் சாட்டப்படுகிறதே அல்லாமல் அ.மார்க்ஸின் எழுத்துகளிலிருந்து ஒரு சொல்லைத் தன்னும் இலங்கை அரசுக்கு ஆதரவாகவோ இந்திய அரசுக்கு ஆதராவாகவோ இவர்களால் காட்ட முடிவதில்லை. புலிகளை எவ்வளவுக்கு விமர்சித்தாரோ அதைவிடப் பன்மடங்கு இந்திய – இலங்கை அரசுகளை ஈழப் பிரச்சினையில் மட்டுமல்லாமல் பல்வேறு பிரச்சினைகளிலும் எதிர்த்து நிற்பவர் அவர். எழுத்தோடு நின்றுவிடாமல் இடையறாத அரசியற் செயற்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்தியிருப்பவர். அவரையெல்லாம் தமிழ் துவேஷியென்றும் சிங்கள இனவாதத்தைப் பேசுகிறவரென்றும் பசப்பலாக மனித உரிமைகள் குறித்துப் பேசுபவரென்றும் யமுனா எழுதுவதற்கு எதாவது பொருளிருக்கிறதா? யோக்கியமிருக்கிறதா?

அ.மார்க்ஸ் ஒன்றும் விமர்சிக்கப்படக் கூடாதவரல்ல. அவரும் தன்மீதான விமர்சனங்களிற்கு கரிசனையுடன் ஓய்வொழிச்சலில்லாமல் பதில் சொல்லிக்கொண்டிருப்பவர்தான். ஆனால் ஆதாரங்கள் எதுவுமில்லாமல் வெறுமனே காழ்ப்புணர்வுடன் யமுனா பழிப்பும் நெளிப்பும் மட்டுமே காட்டிக் கொண்டிருந்தால் அவரால் மட்டுமல்ல வேறுயாரால்தான் என்ன செய்ய முடியும். இந்த பழிப்புக்கெல்லாம் எப்படிப் பதில் சொல்வது? இந்தப் புளிப்புக்கெல்லாம் ‘மூடத்தனம்’ என்ற ஒற்றை வார்த்தையைத் தவிர வேறென்ன பதிலிருக்கிறது?

யமுனா சில மாதங்களிற்கு முன்பு ‘உயிரோசை’யில் எழுதிய ‘விடுதலைப் புலிகளின் சாதி: அ.மார்க்ஸ், ரவிக்குமார், ஷோபாசக்தி’ என்ற கட்டுரையிலும் இதே கரைச்சல்தான். பலதடவைகள் நானே பல்வேறு இடங்களில் பதில் சொல்லித் தீர்த்த, விளக்கம் சொல்லி வெறுத்துப்போன கேள்விகளையும் பிரச்சினைகளையும் அப்படி ஒரு விவாதமே எக்காலத்திலும் எங்கேயும் நடவாதது போன்ற பாவனையுடன் அந்த ‘உயிரோசை’க் கட்டுரையில் யமுனா எழுதியிருப்பார். எடுத்துக்காட்டாக, யாழ்ப்பாணத்திலிருந்து இசுலாமியர்களைப் புலிகள் கட்டிய துணியுடன் விரட்டியடித்ததற்குக் காரணத்தைச் சில இஸ்லாமியர்கள் இராணுவத்திற்கு உளவு சொன்ன கதையில் ஆரம்பித்திருக்கிறார் யமுனா. நடந்தது இனச் சுத்திகரிப்பே தவிர வேறல்ல என்பது எங்களது கருத்து. அந்த வெளியேற்றம் புலிகள் இந்துமத நோக்கிலிருந்து நடத்தியதல்ல எனகிறார் யமுனா. தமிழ்த் தேசியத்திற்கும் இந்துமதத்திற்கும் உள்ள உறவுகள் குறித்து மறுபடியும் நாமொருமுறை விளக்க வேண்டிவரும். புலிகள் இயக்கத்திற்குள் சாதி பார்ப்பதில்லை என்பார் யமுனா. அது எங்களிற்கும் தெரியும் எங்களின் விமர்சனமெல்லாம் புலிகள் சாதியொழிப்பை வீரியமாக முன்னெடுக்கவில்லை என்பதும் சாதியொழிப்புப் போராட்ட அமைப்புகளைத் தடைசெய்தார்கள் என்பதுமே என்போம் நாம். அதிபர் இராசதுரையின் கொலையை சாதியப் படுகொலையாகப் பார்க்கக் கூடாது என்பார் யமுனா. அதிபரின் கொலை வெறுமனே சனநாயக மறுப்பு மட்டுமல்ல அங்கே கொல்லப்பட்டது ஒரு தலித் அறிவுஜீவியும் போராளியும் என்போம் நாம். மறுபடியும் இரண்டுமாதம் கழித்து இதே பிரச்சினைகளை வேறு இணையத்தளத்தில் வேறு தலைப்பில் எழுதுவார் யமுனா. தலைப்பிலும் பெரிய மாறுதல்கள் இருக்காது. இந்தக்கட்டுரையில் ‘அ.மார்க்ஸ், ஷோபாசக்தி’ என்றிருந்தால் அடுத்த கட்டுரையில் ‘ ஷோபாசக்தி, அ.மார்க்ஸ்’ என்றிருக்கும்.

இந்த எல்லாத் துன்பங்களையும் சகித்துக்கொண்டாலும் ‘கீற்று’ இணையத் தளத்தில் யமுனா தன்னை “நானொன்றும் விடுதலைப் புலிகளின் விமர்சனமற்ற ஆதரவாளன் இல்லை” என்று சொல்வதைத்தான் நம்மால் சகித்துக்கொள்ள முடிவதில்லை. புலிகளின் வீழ்ச்சி உறுதியாகத் தெரியும்வரைக்கும் யமுனா எங்கே எப்போது புலிகளை விமர்சித்தார்? புலிகளின் வீழ்ச்சி உறுதியானவுடன் தவித்த முயல் அடிக்கும் தந்திரத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பட்டும்படாமலும் அவர் இப்போது புலிகளை விமர்சிக்கிறாரே தவிர விடுதலைப் புலிகளின் எழுச்சிக்காலத்தில் அவர்கள் ஈழத்திலும் புகலிடத்திலும் வகைதொகையற்ற மனித உரிமை மீறல்களையும் கொலைகளையும் நடத்தியபோது அவர் என்ன செய்துகொண்டிருந்தார்? அவர் அப்போது புலிகளின் பத்திரிகையான ‘ஈழமுரசு’விலும் புலிகளின் வானொலியான IBCயிலும் கூலிக்கு மாரடித்துக் கொண்டிருந்தார்.

சபாலிங்கம் படுகொலை, அதிபர் இராசதுரை படுகொலை, வெருகல் படுகொலைகள் போன்ற எண்ணற்ற கொலைகள் நடந்த போதெல்லாம் யமுனாவின் விமர்சனக் குரல் எங்கே போயிருந்தது? பள்ளிவாசல் படுகொலைகள் குறித்து யமுனா எங்கே தன் விமர்சனத்தையோ கண்டனத்தையோ வைத்திருக்கிறார்? புலம் பெயர் தேசங்களிலே மாற்றுக் கருத்தாளர்கள் புலிகளால் வதைக்கப்பட்டபோது யமுனாவின் விமர்சனக் குரல் எங்கே ஒளிந்திருந்தது? அப்போது அது வாரம் 500 பிராங்குகளிற்கு புலிகளின் ‘ஈழமுரசு’ பத்திரிகையில் அடகு வைக்கப்பட்டிருந்ததுதானே உண்மை. புலிகள் கம்யூனிஸ்டுகளை, தலித் தலைவர்களை, தொழிற்சங்கவாதிகளை, எழுத்தாளர்களைக் கொல்வதிலும் கட்டாயப் பிள்ளை பிடிப்பிலும் மும்மூரமாக இருந்தபோது யமுனா ராஜேந்திரனின் விமர்சனக் குரல் எங்கே போயிருந்தது. அந்தக் குரல் அப்போது புலிகளிள் IBC வானொலியில பொறுக்கித் தின்றுகொண்டிருந்தது. இதுதானே உண்மை! இதுதானே யமுனா ராஜேந்திரன் புலிகளை விமர்சனத்துடன் ஆதரித்த இலட்சணம். பொறுக்கும் வரை புலிகளிடம் பொறுக்கிவிட்டு எல்லாம் முடிந்தவுடன் வெளியே வந்து ‘புலிகள் மீதும் எனக்கு விமர்சனமிருக்கிறது’ என்று சொல்வதைத்தான் பசப்பலான மனிதவுரிமைப் பேச்சு என்பது.

நான் விடுதலைபுலிகளின் விமர்சனமற்ற ஆதரவாளன் இல்லை என்று யமுனா சொல்வதின் மறுவளமான அர்த்தம் அவர் விமர்சனபூர்வமான புலிகளின் ஆதரவாளர் என்பதுதானே! அவரே சொல்லிக்கொள்ளும் அவருடைய மார்க்ஸியப் பகுப்பாய்வு முறைமையில் எதற்காக அவர் புலிகளை ஆதரிக்கிறார் என்பதை அவர் விளக்க வேண்டும். அவர்களின் ஒட்டுமொத்த சனநாயக மறுப்பிற்காகவா, அவர்கள் இஸ்லாமிய இனச் சுத்திகரிப்புச் செய்ததாலா, சிங்கள் அப்பாவி மக்களைக் கொன்றதாலா, அவர்கள் புகலிடங்களில் இந்துக் கோயில்களைக் கட்டியதாலா, அவர்கள் சிறுவர்களை கட்டாயமாகப் படையில் சேர்த்ததாலா, அவர்கள் ராஜினி- கோவிந்தன் – செல்வி போன்றவர்களைக் கொன்றதாலா, கம்யூனிஸ்ட் அமைப்புகளை ஈழத்தில் தடை செய்ததாலா, இல்லை இறுதியில் மூன்று இலட்சம் மக்களை மனிதத் தடுப்பரண்களாகக் கட்டாயமாக நிறுத்தி வைத்ததாலா அல்லது இவை எல்லாவற்றுக்காகவுமா எதற்காக எந்தப் புள்ளியில் யமுனா புலிகளை விமர்சனத்துடன் ஆதரிக்கிறார் என்பதை அவர் விளக்கி வைக்க வேண்டும் என்பது எனது ஆர்வம். ஆனால் இந்தக் கேள்விகளைக் கேள்விகளாகவே விட்டுவிட்டு அவர் கொப்புத் தாவி விடுவார் என்பது எனது அனுபவம்.

யமுனா ராஜேந்திரன் பொதுவாகவே இவ்வாறான தனது அவதூறுக் கட்டுரைகளின் முடிவில் ஒரு வழக்கமான முடிவுரையை வழங்குவதுண்டு. ‘ஷோபாசக்தி பேசும் எதிர்ப்பு அரசியலும் விளிம்புநிலை அரசியலும் போலியானவை, ஷோபாசக்தியின் அடையாளத்தைத் தக்க வைப்பதற்கே அவர் தனது போலி அரசியலை உபயோகப்படுத்துகிறார்’ என்பதாக அந்த முடிவுரை அமையும். கட்டுரைக்குத் தக்கவாறு அவ்வப்போது என்னுடன் இணைத்து சுகனோ, தலித் மேம்பாட்டு முன்னணியினரோ யமுனாவால் வசைபாடப்படுவார்கள். அதை அண்மைய ‘கீற்று’ மற்றும் ‘உயிரோசைக்’ கட்டுரைகளிலும் அவர் செய்திருக்கிறார்.

எங்களுடைய ஈழப் போராட்டம் குறித்த பார்வையும் எழுத்தும் செயற்பாடுகளும் போதாமைகளைக் கொண்டிருக்கலாம். நாங்கள் ஈழப் போராட்டத்தில் அதைச் செய்தோம், இதைச் செய்தோம் என்று பாத்தியதை கோரும் தைரியமும் எங்களிற்குக் கிடையாது. நாங்கள் தொட்டது எதுவுமே துலங்காதது மட்டுமல்ல அவை காலப்போக்கில் பாஸிச அதிகார மையங்களாகவும் மாறியிருந்த நிலையில் நாங்கள் ஆயுதம் தாங்கிய ஈழப் போராட்டத்திலிருந்து விலகிச் சென்றோம். ஈழப்போராட்டத்திற்காக அந்த இந்தத் தியாகங்களைச் செய்தோம் என்றும் நாங்கள் எந்த உரிமையையோ அனுதாபத்தையோ கோருவதுமில்லை. ஆனால் ஈழப் போராட்டத்தையோ ஈழப் போரில் விழுந்த கொலைகளையோ யுத்தத்தத்தால் அகதிகளாகச் சிதறிச் சென்ற மக்களையோ நானோ எனது தோழர்களோ எங்களது சுய இலாபத்திற்காக ஒருபோதும் பயன்படுத்தியது கிடையாது.

ஆனால் நீங்கள் எப்படி யமுனா? ஈழத்தில் யுத்தத்தால் கொல்லப்பட்ட மக்களின் பெயராலும் அகதிகளாக உலகெங்கும் அலையும் ஈழத்து ஏதிலிகளின் பெயராலும் உங்கள் இருப்பைக் காப்பாற்றியவரல்லாவா நீங்கள். ஈழத்தையே இன்றுவரை நீங்கள் கண்ணால் கண்டிராதபோதும் ஈழத்திலிருந்து துன்பமும் துயரமும் அடைந்தேன் என்று பொய்யுரைத்து அந்த யுத்தத்தையும் இரத்தத்தையும் கண்ணீரையும் சாட்சிகளாக்கி நோகாமல் ‘ஈழத்து அகதி’ என்று கள்ள ‘சேர்ட்டிபிகட்’ முடித்து இலண்டனில் அரசியல் தஞ்சம் பெற்றவரல்லவா நீங்கள்! நீங்களா எங்களைப் பார்த்து போலிகள் என்றும் இருப்புக்காக அலைபவர்களென்றும் தூற்றுவது? நீங்களா எங்களைப் பார்த்து புலி எதிர்ப்பு அரசியலால் பிழைப்பவர்கள் என்று எழுதுவது? உங்களிற்கு கடுகளவேனும் மனச்சாட்சியிருந்தால் இதற்குப் பதில் சொல்லுங்கள். எப்போதும் போலவே தொடர்ந்து விவாதிப்பேன். அந்தத் துன்பியல் அனுபவத்திற்கு நான் தயாராகவேயிருக்கிறேன்

2.

அந்தக் ‘கீற்று’க் கட்டுரையில் யமுனா அடிக்கடி ‘ராமேஸ்வரம் வன்முறை’ என்றொரு சிலேடை காட்டியிருப்பார். ஏற்கனவே இந்த இராமேஸ்வரம் பிரச்சனை குறித்து இனியொரு, தேசம், வினவு, தமிழக அரசியல், நம் தேசம் போன்ற இணையத்தளங்களும் வேறு சில சப்புச் சவர் இணையத்தளங்களும் ஏராளமாகவே எழுதியிருந்தன. மறுபிரசுரங்களும் நிகழ்ந்தன. தொடர்ந்தும் இராமேஸ்வரத்தில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்ததால் அதுகுறித்து என் தரப்பிலிருந்து எதுவும் எழுத வேண்டாம், பேச வேண்டாம் என்று எனக்குப் படப்பிடிப்புக் குழுவினர் அறிவுறுத்தியிருந்தனர். நேற்றோடு படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.

சரி, இராமேஸ்வரத்தில் ‘செங்கடல்’ படப்பிடிப்பில் அப்படி என்னதான் நடந்தது? நானும் இயக்குனர் லீனா மணிமேகலையும் தொழிலாளர்களைத் தாக்கினோம், சம்பளம் கொடுக்க மறுத்தோம், நான் உதவி இயக்குனர் தீபக்கைத் தாக்கிக் கொலை செய்ய முயற்சித்தேன் என்றெல்லாம் இவர்கள் செய்திகளை வெளியிட்டார்கள். அந்தச் செய்திகளின் அடிப்படையில் கீற்றில் பா. செயப்பிரகாசமும் என்னை ‘தொழிலாளர் விரோதி’ என்று தீர்ப்பிட்டு எழுதினார். யமுனாவின் சிலேடைக்கும் அவையே ஆதாரம். இணையத்தளங்கள் வெளியிட்ட செய்திக்கான ஆதாரம் ‘தினத்தந்தி’யில் வெளியான செய்தி. ‘சதக் சதக் கத்திக்குத்து செத்த பிணம் பத்து’ என்று செய்தி வெளியிடும் பாரம்பரியம் கொண்ட தினத்தந்தியின் செய்திக் குறிப்பையெல்லாம் நம்பி நமது எழுத்தாளர்கள் மேட்டரை டெவலப் செய்திருக்கிறார்கள். அவ்வளவுக்குப் பரபரப்புக்கும் பழிதீர்க்கவும் ஆர்வம்.

சரி தினத்தந்திக்கு இந்தச் செய்தி எப்படிக் கிடைத்தது? நடந்த சம்பவத்தைப் புலனாய்வு நடத்தியா அவர்கள் எழுதிக் கிழித்தார்கள்? இராமேஸ்வரம் கீழவாசல் பொலிஸ் நியைத்தில் என் கண்முன்னாலேயே சப் இன்ஸ்பெக்டர் சிலைமணி தினத்தந்தி நிருபர் சேதுவிற்கு ‘நியூஸ்’ கொடுத்தார். அதைச் சேது ‘தினத்தந்தி’ தர்மப்படி பரபரப்பாக உப்புப் புளி சேர்த்துப் பிரசுரித்தார். அதனடிப்படையில் மற்றைய பத்திரிகைகளும் சன் டிவியும் செய்திகளைக் கொடுத்தன. தினமணியும் நக்கீரனும் சன் டிவியும் செய்தியோடு நிறுத்திக்கொண்டன. ஆனால் இனியொருவும், வினவு இணையத்தளமும் தினத்தந்தி செய்தியையே திரிக்கவும் அதனை டெவலப் செய்யவும் தயங்கவில்லை. தினத்தந்தியிலேயே இல்லாத செய்தியாக அவர்கள் என்னோடு சேர்ந்து லீனாவும் தொழிலாளர்களைத் தாக்கினார் என்றெல்லாம் எழுதினார்கள்.

தினத்தந்தி போன்ற பரபரப்புக்காக நடத்தப்படும் ஒரு வணிகப் பத்திரிகை வெளியிட்ட செய்தியின் அடிப்படையில் விவாதிப்பதை விட்டுவிட்டு என்மீது காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்த தீபக் என்ன சொல்கிறார் என்பதைக் கவனியுங்கள். சம்பவம் நடந்த சில நாட்களிற்குப் பின்பாக அவர் இரண்டு ஊடகங்களிற்கு விரிவான நேர்காணல்களைக் கொடுத்தார். நடந்தது குறித்து நம் தேசம் இணையத்தில் தீபக் சொல்லியிருப்பது இது:

லீனா என்னை அவர் தங்கியிருந்த இடத்திற்கு வரச் சொன்னார். அப்போது இரவு மணி 11 இருக்கும். லீனாவின் ஆட்கள் என்னை அழைத்துச் சென்றனர். அங்கே லீனாவோடு, சோபாசக்தியும் இருந்தார். எல்லாருமே குடி போதையில் இருந்தார்கள். நான் பேசுவதற்குமுன்பே, சோபாசக்தி என்னை அடிக்கத் தொடங்கிவிட்டார். லீனாவின் மேலாளர்கள் இருவரும் என் கைகளை விரித்துப் பிடித்துக் கொண்டனர். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.

ஓரிரு நாட்கள் இடைவெளியில் தமிழக அரசியல் என்ற பத்திரிகையில் தீபக் சொல்லியிருப்பது இது:

“ஷோபா சக்தி. மீட்டிங் என்று ப்ரொடக்ஷன் டீம் தங்கியிருக்கும் வேர்க்கோடு மஹாலுக்குக் கூட்டிப் போனார். அங்கே லீனா மணிமேகலையின் மேனேஜர்கள் தனுஷ், வெங்கட் இருவரும் இருந்தனர். ‘பேட்டா கொடுக்கலேன்னு நீதான் அவங்கக்கிட்ட ஃபுட்டேஜைக் கொடுத்து அனுப்பிட்டியாமே?’ என்றபடியே ஷோபா சக்தியும் அவர்களும் என்னை ரூமுக்குள் போட்டு கடுமையாகத் தாக்கினர். என் தலையில் அடித்த ஷோபா சக்தி, அதோடு மர ஸ்டூலைத் தூக்கி என்னைத் தாக்க முயற்சித்தார். கூச்சல் போட்டு வெளியே ஓடிவந்த நான் அந்த நள்ளிரவிலும், லீனா தங்கியிருக்கும் ஹோட்டலுக்குப் போய் அவரிடம் முறையிட்டேன்.

இவை தினத்தந்திச் செய்தியோ, பொலிஸ் ‘நியூஸோ’ கிடையாது. இவை தீபக்கின் நேரடியான வாக்குமூலங்கள். தீபக்கின் இரண்டு வாக்குமூலங்களிற்கும் இடையேயான முரண்களைக் கவனித்திருப்பீர்கள். தீபக் பேசுவது உண்மை கிடையாது அவர் இடத்திற்கு ஒருமாதிரிப் பேசுகிறார் என்பதில் உங்களிற்கு இனியும் சந்தேகம் இருக்காது. நடந்ததை நான் சொல்கிறேன்:

தயாராகிக்கொண்டிருக்கும் ‘செங்கடல்’ திரைப்படத்திற்கு நான் எழுத்தாளர். லீனா மணிமேகலை இயக்குனர். படத்தை முதலில் இயக்குநர் சமுத்திரக்கனி தயாரித்தார். படப்பிடிப்புத் தொடங்கிய எட்டு நாட்களிலேயே அவர் தயாரிப்புப் பொறுப்பிலிருந்து விலகிவிட இப்போது வேறொருவர் தயாரிப்புப் பொறுப்பை ஏற்றுள்ளார். மிகவும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் படம் என்பதாலும் எனக்குப் படத்தின் மீதுள்ள ஈடுபாட்டாலும் நான் இதுவரை ஊதியமே பெறாமல்தான் அந்தப் படத்தில் பணியாற்றி வருகிறேன். தீபக் இந்தப் படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். தவிரவும் அவர் ஏற்கனவே லீனா மணிமேகலையோடு ஆவணப் படங்களில் பணியாற்றியவர்.

முதற்கட்டப் படப்பிடிப்பு ஜனவரி 2ம் தேதி முடிவடைந்தது. அன்றிரவு படப்பிடிப்புக் குழுவிலுள்ளவர்களில் ஒருபகுதியினர் இராமேஸ்வரத்திலிருந்து கிளம்பத் தொடங்கிவிட்டார்கள். நான் அடுத்தநாள் சென்னை திரும்புவதாக ஏற்பாடு. 2ம் தேதி இரவு பத்தரை மணியளவில் கமெரா உதவியாளர்கள் மூவரும் இரண்டு நாட்கள் ஒளிப்பதிவு செய்த ஃபுட்டேஜ்களுடன் கமெராவை எடுத்துக்கொண்டு இராமேஸ்வரத்திலிருந்து கிளம்பிப் போய்விட்டதாக எனக்குச் செய்தி வந்தது. அவர்கள் இரண்டு நாட்கள் படம் பிடித்ததை எடுத்துக்கொண்டு போவது தீபக்கிற்குத் தெரியும். ஏனெனில் அன்றாடம் படம் பிடிக்கப்படும் ஃபுட்டேஜ்களைத் இரவே தரவிறக்கம் செய்து வைத்துக்கொள்வது உதவி இயக்குனர் தீபக்கின் வேலை. கடைசி இரண்டு நாட்களும் ஈழத்து அகதிகளையும் தனுஷ்கோடி மீனவர்களையும் இணைந்து நடிக்க வைத்துப் படம் பிடித்து வைத்திருந்தோம். நூற்றுக்கு மேற்பட்ட நடிகர்களும் நாற்பது பேர்கள் கொண்ட படப்பிடிப்புக் குழுவுமாகக் கடுமையாக உழைத்து எடுத்திருந்த காட்சிகள் கைவிட்டுப் போய்விட்டன என்றறிந்தவுடன் நான் அதிர்ந்துபோனேன். எப்படி இந்தத் தவறு நடந்தது, எதற்காக நடந்தது என்று எதுவுமே புரியவில்லை. படப்பிடிப்புக் குழுவினர் எல்லோரும் கலங்கிப்போனோம். ஃபுட்டேஜை எடுத்துச் செல்பவர்கள் அவற்றை அழித்தவிட்டாலோ அல்லது காட்சிகளை வெளியே கசிய விட்டாலோ என்ன செய்வது என்ற பதற்றம்வேறு தொற்றிக்கொண்டது. கமெராவை படப்பிடிப்பிற்கு வாடகைக்குத் தந்திருந்த முதலாளியின் தொலைபேசிக்குப் படப் பிடிப்புக் குழுவின் மனேஜர் போன் செய்திருக்கிறார். மறுமுனை அணைக்கப்பட்டிருந்தது.

இயக்குனர், ஒளிப்பதிவாளர், சவுண்ட் என்ஜினியர் தவிர படப்பிடிப்புக் குழுவிலுள்ள மற்றவர்கள் அனைவரும் எங்களது இராமேஸ்வர அலுவலகலத்தில் நள்ளிரவில் கூடிவிட்டோம். இந்தப் படத்தைப் பொறுத்தவரை தீபக் உதவி இயக்குனராக இருந்தாலும் அவர் ஒரு பயிற்சி ஒளிப்பதிவாளரும்கூட. கமெரா யூனிட்டுக்கும் இயக்குனர் யூனிட்டுக்கும் தொடர்பாளாராக அவர்தான் செயற்பட்டுக்கொண்டிருந்தார். நான் தீபக்கிடம் “இரண்டு நாட்களாகப் படம் பிடித்ததை எதற்குத் தரவிறக்கம் செய்து வைக்கவில்லை?” என்று கேட்டேன். அவர் அது தனது வேலையல்ல என்றார். “சரி போகட்டும் கமெராவோடு கிளம்பிப் போனவர்களோடு பேசி ஃபுட்டேஜ்களை உடனே திரும்பப் பெறுவதற்கு அவர்களின் தொலைபேசி இலக்கங்களைத் தாருங்கள்” என்றேன். அந்த இலக்கங்கள் தன்னிடமில்லை என்றார் தீபக். படப் பிடிப்புக் குழுவிலுள்ள மற்றவர்களும் கேட்டுப் பார்த்தார்கள். அவர் தன்னிடம் அந்தத் தொடர்பிலக்கங்கள் இல்லையெனச் சாதித்தார். அவர் சொல்வது பொய்யென எனக்குத் தெரியும். கமெரா யூனிட் குறித்த அனைத்துத் தொடர்பு இலக்கங்களும் அவரிடமிருக்கும். அவரின் கையில் கைத்தொலைபேசி இருந்தது. எப்படியாவது ஃ புட்டேஜைக் காப்பாற்ற வேண்டுமென்ற பதற்றத்திலிருந்த நான் சடுதியாகத் தீபக்கின் முகத்தில் தாக்கிவிட்டு அவரின் கைத்தொலைபேசியைப் பிடுங்கிவிட்டேன். அதற்குப் பின்பு ஓடிப்போனவர்களோடு பேசி காலையில் ஃபுட்டேஜ் சென்னையில் திரும்பப் பெறப்பட்டது.

இரவு கமெராவைச் சென்னைக்கு எடுத்துச் செல்ல வாகனம் ஏற்பாடு செய்து கொடுக்கத் தாமதித்தால் கமெராவை படப்பிடிப்பிற்கு வாடகைக்குக் கொடுத்திருந்த முதலாளியின் உத்தரவின் பேரில்தான் அந்தக் கமெரா உதவியாளர்கள் ஃபுட்டேஜுடன் கமெராவை எடுத்துச் சென்றார்கள் என்பது எங்களுக்குப் பின்பு தெரியவந்தது. எங்கள் நூற்று நாற்பது பேர்களின் உழைப்போடு ஒரு கமெரா முதலாளி விளையாடிப் பார்த்த வேலையது. இதைத் தவிர வினவு கட்டுரையாளர் எழுதியது போலவோ இனியொரு இட்டுக்கட்டியது போலவோ இது ஊதியம் கொடுக்க மறுத்ததால் நிகழ்ந்த பிரச்சினையல்ல. பா. செயப்பிரகாசம் கற்பனை செய்வது போல இது நான் கூலி கேட்ட தொழிலாளர்களை அறையில் போட்டு அடித்ததுமல்ல. பா. செயப்பிரகாசத்தின் மொழியில் சொன்னால் நான் தாக்கியது ஒரு தொழிலாளியையல்ல. நான் தாக்கியது ஒரு கருங்காலியை. இதில் சிறப்பாக இனியொரு. கொம் “கடைசியாகக் கிடைத்த தகவலின்படி இதுவரையும் தொழிலாளர்களிற்குச் சம்பளம் வழங்கப்படவே இல்லையாம்” என்று பக்கத்திலிருந்து பார்த்தது போல எழுதியிருந்தது. நடத்துங்க ராசா!

நள்ளிரவில் நடந்த சம்பவத்திற்கு ஆற அமர ஆலோசனை செய்து இல்லாத பேட்டா, சம்பளப் பிரச்சினைகளை உருவகித்து அடுத்தநாள் மாலை 4 மணியளவில் காவல் நிலையத்தில் தீபக் என்மீது முறைப்பாடு கொடுக்க பொலிசார் என்னை விசாரணைக்கு அழைத்துச் செல்ல வந்தனர். வந்த பொலிஸாரோடு ” அரஸ்ட் வாரண்ட் இருக்கிறதா? அப்படி அழைத்துச் செல்லச் சட்டமிருக்கிறதா?” என்று இயக்குனர் வாதிட பொலிசாரோடு நடுத்தெருவில் தகராறு ஆகிப்போனாது. இராமேஸ்வரம் கீழவாசல் காவல் நிலையத்தில் தீபக்கைத் தாக்கியதாக என்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஜனவரி மாதம் 28ம் தேதி வழக்கு இராமேஸ்வரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நான் தீபக்கைத் தாக்கியதை ஒப்புக்கொண்டேன். எனக்குத் தண்டப் பணமாக ரூபா 1700 விதிக்கப்பட்டது. இனியொரு இணையத்தளம் எழுதியது போல மேலிடத்து சிபாரிசுகளின் அடிப்படையில் நான் காப்பாற்றப்படவில்லை. எல்லாம் ‘சட்டப்படி’ தான் நடந்து முடிந்தன.

இந்த இராமேஸ்வரப் பிரச்சினையைக் கடும் ஓவராக எழுதியவர் ‘வினவு’ கட்டுரையாளர்தான். அவர் கடுமையான ஆய்வெல்லாம் நடத்தி ‘செங்கடல்’ புலிகளிற்கு எதிரான படம் என்று ஒரு ஊகத்தை வெளியிட்டார். அதே வாரத்தில் இதே பொருள்பட செங்கடல் புலி எதிர்ப்புப் படமென்று ஜுனியர் விகடனும் ஒரு செய்தியை வெளியிட்டது. வெளியே வராத ஒரு படத்தைப் பற்றி இவர்கள் எதன் அடிப்படையில் ஊகங்களைக் கொட்டுகிறார்கள்?

அதுவும் வினவு கட்டுரையாளர் ஒருபடி மேலே போய் தமிழக மீனவர்களிற்கு புலிகளால்தான் பிரச்சினை என்று நாங்கள் படமெடுக்கிறோம் என்றும் சமுத்திரக்கனி ஒரு கோடி ரூபா கொடுத்தார் என்றும் வதந்திகளை அள்ளி வீசினார். உடனே பின்னூட்டப் பகுதியில் ஒரு அறிவாளி பலபடி கீழிறங்கி ‘ஒரு ஆவணப் படத்திற்கு ஒரு கோடி ரூபா என்பது மோசடி’ என்று உளறினார். நாங்கள் எடுத்துக்கொண்டிருப்பது ஆவணப் படமா அல்லது கதைப்படமா என்று கூடத் தெரியாத நிலையில் கதையைப் பற்றியும் பட்ஜெட்டைப் பற்றியும் பேசுபவர்களை என்னவென்று அழைப்பது! அவர்களைக் கேட்டால் புரட்சியாளர்கள் என அழைக்கச் சொல்வார்கள்.

வினவு கட்டுரையாளர் ‘செங்கடல்’ குறித்து எழுதியது அவர் லீனா மணிமேகலையின் கவிதைகள் குறித்து எழுதிய விமர்சனத்தின் ஒரு பகுதியா அல்லது ‘செங்கடல்’ குறித்த அவரது விமர்சனத்தில் லீனா மணிமேகலையின் கவிதைகள் குறித்த விமர்சனம் ஒரு பகுதியா என்பதில் ஒரு குழப்பம் இருந்தபோதிலும் அந்தக் கட்டுரை முழுவதும் வக்கிரமான ஆணாதிக்க மொழியில் எழுதப்பட்ட கட்டுரை என்பதில் ஒரு குழப்பமும் கிடையாது. அந்தக் கட்டுரை முழுவதும் வெளிப்பட்டது ஒரு கலாச்சார அடிப்படைவாதியின் குரல். லீனா மணிமேகலை மற்றும் பெண் கவிஞர்களின் உடலரசியல் குறித்த கவிதைகள் ‘சரோஜாதேவி’ வகைப்பட்ட எழுத்துகளென்றும் வெறும் பாலியல் கிளர்ச்சியைத் தூண்டும் எழுத்துகள் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதைச் சொல்வதற்கு மார்க்ஸியமும் லெனினியமும் கற்ற இவரெதற்கு? இத்தகையை மதிப்பீட்டைத்தானே சில வருடங்களிற்கு முன்பு சினிமாக் கவிஞர்கள் பழனி பாரதியும் சிநேகிதனும் ‘கவிக்கோ’ அப்துல் ரகுமானும் வைத்தார்கள். இத்தகைய கவிதை எழுதும் பெண்களை நடுத்தெருவில் நிறுத்தி அடிக்க வேண்டும் என்றார்கள். அவர்களின் வசவுக்கும் வினவு கட்டுரையாளரின் வசவுக்கும் என்ன வித்தியாசம்? வசவுகளிலெல்லாம் புரட்சிகர வசவு எனத் தனியாக ஒரு வகை கிடையாது.

லீனாவின் ‘காதலற்ற முத்தமும் லெனினும்’ என்ற கவிதை வினவு கட்டுரையாளர் இன்னொருவரை கடுமையாகவே சினமுற வைத்திருக்கிறது. அவர் அதற்கு வினவு இணையத்தில் ஒரு வக்கிரமான எசப்பாட்டையும் பாடியிருந்தார். கவித்துவமும் வக்கிரமும் எங்கே வித்தியாசப்படுகிறது எனபதற்கு லீனாவின் கவிதையும் வினவு கட்டுரையாளரின் எசப்பாட்டுட்டும் சிறந்த எடுத்துக்காட்டுகள். லீனாவின் மொழி பாலியல் விடுதலை கோரிய மொழியென்றால் வினவு கட்டுரையாளரின் மொழி பாலியல் உறுப்புகளையும் பாலியல் செயற்பாடுகளையும் உபயோகித்து எதிராளியை வசைபாடும் மொழி.

‘காதலற்ற முத்தமும் லெனினும்’ என்ற கவிதையை அதன் சரியான வீச்சில் விளங்கிக்கொள்ள ‘ஒரு கோப்பைத் தண்ணீர் கோட்பாடு’ குறித்து முதலில் வினவு கட்டுரையாளர்களிற்குத் தெரிந்திருக்க வேண்டும். ஒரு கவிதையை வாசிப்பதற்கான தகுதி / தராதரம் என்றெல்லாம் எழுதி மிரட்டுகிறேன் என்று தயவு செய்து எண்ணிவிடக் கூடாது. கலாவின் ‘கோணேஸ்வரிகள்’ கவிதையை அதன் முழுவீச்சில் உணர்ந்துகொள்வதற்கு கோணேஸ்வரிக்கு நடந்தது என்னவென்பதைத் தெரிந்திருப்பதும் ஈழத்து அரசியல் குறித்த அடிப்படை அறிவும் அவசியமல்லவா. அதே போன்றதுதான் இதுவும்.

ருஷ்ய மார்க்ஸியரும் பெண்ணியவாதியுமான அலக்ஸ்சாந்ரா கொலொன்ராய் (1857- 1933) ‘கம்யூனிச சமூக அமைப்பில் பாலியல் என்பது ஒரு கோப்பை நீர் அருந்துவதுபோல இலகுவாயிருக்க வேண்டும்’ என்றார். இது மார்க்ஸிய விரோதக் கருத்து எனக் கடுமையாகச் சாடிய லெனின் ஒரு கோப்பை நீரில் பல இதழ்கள் வாய் வைத்துக் குடிக்கலாகாது ( The Emancipation Of Woman) என் றெழுதினார். இதுகுறித்து லெனினைக் கடுமையாக விமர்சித்து இன்னொரு மார்க்ஸியப் பெண்ணியவாதியான கிளாரா செட்கின் (Lenin on the woman’s question) குரலெழுப்பினார். இந்த நிகழ்வுகளின் பகைப்புலத்தில் எழுதப்பட்டிருக்கிறது லீனாவின் கவிதை. கவிதையின் முதல்வரியே ‘ஒரு கோப்பைத் தண்ணீர் கோட்பாட்டை லெனின் சொன்னார் ‘ என்பதாக இருக்கும். இந்தக் கவிதையைப் பொறுத்தவரை வினவு கட்டுரையாளர் இயல்பாக லெனின் மீதுதான் கோபமுற வேண்டும். ஆனால் கோபம் லெனினின் மீது கேள்வியெழுப்பியவரை நோக்கித் திரும்பியிருக்கிறது.

இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் பாலியல் ஒழுக்கம், சமூக கலாச்சார ஒழுங்குகள் எல்லாவற்றையும் இந்த வரட்டுச் சித்தாந்தவாதிகள் கட்டிக்கொண்டு அழப்போகிறார்கள காதல் விருப்புகளையும் இயல்பான பாலியல் வேட்கைகளையும் கட்டிப்போட்டு வைக்க இந்த உலகில் எந்தத் தத்துவம் வல்லமை பெற்றது? அலெக்ஸாந்திராவையும் கிளாரா செட்கினையும் அறியாவிட்டால் கூட “கற்பு விபச்சாரம் என்னும் வார்த்தைகள் சுதந்திரமும் சமத்துவமும் கொண்ட வாழ்க்கைக்குச் சிறிதும் தேவையில்லாததாகும். ஜீவ சுபாவங்களுக்கு இவ்விரண்டு வாரத்தைகளும் பொருத்தமற்றதேயாகும்” என்ற தந்தை பெரியாரின் வார்த்தைகளைக் கூட இவர்கள் அறியமாட்டார்களா?

வினவு இணையத்தளத்தில் நானும் லீனாவும் லண்டனில் கார்ல் மார்க்ஸின் கல்லறை முன்பு நின்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டிருப்பார்கள். அந்தப் புகைப்படத்தைச் சற்றுப் பெரிதாக்கிப் பார்த்தால் அந்தக் கல்லறையில் கார்ல் மார்க்ஸ், ஜென்னி மட்டுமல்லாமல் ஹெலன் டெமூத்தும் புதைக்கப்பட்டிருப்பது தெரியும். ஹெலன் டெமூத்தோடு தனக்கிருந்த காதலையோ தன்மூலம் ஹெலன் டெமூத்துக்குப் பிறந்த குழந்தையையோ கார்ல் மார்க்ஸ் அவர் மரணிக்கும்வரை வரை ஒப்புக்கொள்ளவேயில்லை. நீண்ட காலத்திற்கு அது ஏங்கெல்ஸ் உட்பட வெகுசிலருக்கு மட்டுமே தெரிந்த உண்மையாயிருந்தது. ஹெலன் டெமூத் மரணித்த பின்புதான் அவருக்கு கார்ல் மார்க்ஸின் காதலியென்ற ‘அங்கீகாரம்’ கிடைக்கப்பெற்று அவர் மார்க்ஸின் கல்லறையிலேயே புதைக்கப்பட்டடார். வினவு கட்டுரையாளரே நீங்கள் கார்ல் மார்க்ஸை எவ்வாறு மதிப்பிடுவீர்கள்? பாலியல் ஒழுக்கத்தை மீறிய சீரழிவுவாதி என்பீர்களா? அல்லது கார்ல் மார்க்ஸ் மீது வசவு சொல்லி ஒரு எசப்பாட்டுப் பாடுவீர்களா? இல்லைப் போரூர் ஏரியில் தள்ளிக் கொல்வீர்களா? என்னைப் பொறுத்தவரை கேடுகெட்ட சமூக ஒழுங்குகளிற்கும் மரபுகளிற்கும் – ஒருவேளை கட்சியின் விதிகளிற்கும் – கட்டுப்பட்டுத் தன் காதலை மறைத்து வைத்து மருகிக்கொண்டிருந்த பரிதாபத்திற்குரியவராகத்தான் இந்த விடயத்தில் கார்ல் மார்க்ஸை மதிப்பிட முடியும். மார்க்ஸை விட ஆயிரம்மடங்கு பரிதாபத்திற்குரியவர் சமூக ஒழுக்கங்களின் பெயரால் மார்க்ஸால் வஞ்சிக்கப்பட்ட ஹெலன் டெமூத்.

பெண்கள் மீது திணிக்கப்பட்ட மதம் சார்ந்த ஒழுக்கங்களையும் ஆணாதிக்கக் கலாச்சார அடிப்படை வாதத்தையும் பாலியல் சுதந்திரமின்மையும் தன் எழுத்துகள் மூலம் பெண் கேள்விக்குள்ளாக்கினால் உங்களால் பொறுக்க முடிவதில்லை. மலினமான பாலியல் எழுத்து, விபச்சாரம் அது இதுவென்று எழுதுகிறீர்கள். அதைத் தொட்டு அவர்களின் அந்தரங்கமான குடும்ப வெளிகளிற்குள்ளும் நுழைந்து பழிப்புக் காட்டுகிறீர்கள். பெண் கவிஞர்களின் படுக்கையறைகளிற்குள் கமெரா பொருத்தும் அதிகாரம் உங்கள் வசம் வந்தால் நீங்கள் அதையும் செய்வீர்கள் என்பற்கான தடயம் மட்டுமே உங்களது அந்த விமர்சனப் பிரதியில் எஞ்சிக் கிடக்கிறது. தோழர்களே! ‘காடு விளஞ்சென்ன மச்சான் நமக்குக் கையும் காலும் தானே மிச்சம்’ என்ற பட்டுக்கோட்டையாரின் வரிகளைக் கவிதை கடந்து செல்லாதென்றா கருதுகின்றீர்கள்? ‘மயிர்கள் சிரைக்கப்படாத என் நிர்வாணம் /அழிக்கப்படாத காடுகளைப் போல் / கம்பீரம் வீசுகிறது’ என்பது சுகிர்தராணியின் வரிகள்.

வினவு கட்டுரையாளரே! ‘செங்கடல்’ குறித்து நீங்கள் எழுதியுள்ளவற்றில் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டியுள்ளேன். சம்பவம் நடந்த இடத்திலேயே இல்லாத லீனாவை அவரும் சேர்ந்து தொழிலாளர்களைத் தாக்கினார் என்று எழுதினீர்கள். படத்திற்காக அவர் சமுத்திரக்கனியிடம் கோடி ரூபா பெற்று ஆட்டையைப் போட்டார் என்று கிசுகிசு எழுதினீர்கள். பேட்டா, ஊதியப் பிரச்சினை என்று இல்லாதவற்றை எழுதி அவதூறு செய்தீர்கள். தமிழக மீனவர்களிற்குப் புலிகளால்தான் பிரச்சினை என்ற அடிப்படையில் ‘செங்கடல்’ எடுக்கப்பட்டு வருகிறது எனக் கலப்பில்லாத முழு வதந்தியைப் பரப்பினீர்கள். யமுனா ராஜந்திரன் போன்றவர்களுக்குத்தான் அவதூறு அரசியல் பிழைப்பென்றால் உங்களுக்கும் அதுவா பிழைப்பு? நீங்கள் பரப்பிய இத்தகைய அவதூறுகள் குறித்து என்ன சொல்லப் போகிறீர்கள்? திணைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார் என்பது வள்ளுவனின் வாக்கு. இந்தக் குறள் உறைக்க வேண்டும் உங்களிற்கு.

Show More
Leave a Reply to Jeyarajah Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

138 Comments

  • tamizachi
    tamizachi

    ///ஏற்கனவே இந்த இராமேஸ்வரம் பிரச்சனை குறித்து இனியொரு தேசம் வினவு தமிழக அரசியல் நம் தேசம் போன்ற இணையத்தளங்களும் வேறு சில சப்புச் சவர் இணையத்தளங்களும் ஏராளமாகவே எழுதியிருந்தன. மறுபிரசுரங்களும் நிகழ்ந்தன.///

    இக்கட்டுரையில் எம்மைப்பற்றிய மறைமுகத் தாக்குதல் உள்ளதால் நேரடியாக விளக்கம் அளிக்க தீர்மானித்திருக்கிறேன். நேசம் நெற்றுக்கு பின்னுட்டம் செய்யக்கூடாதென்று நினைத்திருந்தேன். இம்முறை பின்னுட்டங்கள் மட்டுறுத்தப்படாமல் நேர்மையான முறையில் விமர்சனத்தை முன்வைக்கும் என்று நம்புறுகிறேன்.

    இக்கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ள சப்புச் சவர் இணையத்தளங்களுள் எம்முடைய இணையதளமும் ஒன்று என்பதாலும் மறுபிரசுரங்கள் செய்யப்பட்ட கட்டுரைகளில் எமது கட்டுரையும் ஒன்று என்பதாலும் நேரடியாக விவாதிப்பது நல்லதென்பதால் விவாதத்திற்கு வந்திருக்கிறோம். எம்தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் :

    ஆண்குறி அரசியல் வெறிக்குள் பெண்குறி!
    tamizachi.com/index.php?page=date&date=2010-01-14

    பெண்ணிய இலக்கியம் ஆபத்தான அபத்தங்களை நோக்கி…
    tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=1722

    வாசகர் கடிதங்களில் ஒரு வாசகர் லீனா கவிதை குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்ததை தோழர் இரயாகரன் தளத்தில் பிரசுரித்திருந்தார். வினவு பின்னுட்டத்தில் குறிப்பிட்டது.
    tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=1824

    “நிரம்பவும் கபடமாகத்தான் பேசுகிறார் தமிழ்நதி” என்று புள்ளைப்பூச்சியைப் பார்த்து கேள்வி கேட்க தெரிந்த கட்டுரையாளருக்கு “தமிழச்சி நிரம்பவும் ரெளடித்தனமாகத்தான் அடிக்கிறார்” என்று ஏன் பேசத் தெரியவில்லை.

    ஜாக்கிரதை…

    மீண்டும் தொடங்கினால் இழுத்து வச்சி அறுத்துவேன்…

    Reply
  • ஷோபாசக்தி
    ஷோபாசக்தி

    கட்டுரையை மறுபிரசுரம் செய்ததற்கு நன்றி. அநேகமாக ‘உள்ளுக்க வரவிட்டு அடிக்கப் போறிங்க’ என்று நினைக்கிறேன்…செய்யுங்க! வாழ்த்துகள்!!

    ஷோபாசக்தி

    Reply
  • indiani
    indiani

    உங்கள் பக்கத்து நியாயத்தை எதிர்பார்த்தோம் இன்று விளங்கிக்கொள்கிறோம் அந்த கடற்கரையில் ஏன் அலை அடித்தது என்று.

    Reply
  • Muththu
    Muththu

    சோபாசக்தி ‘உள்ளுக்கு வர விட்டு அடிக்கப் போறிங்க’ என்று நீங்கள் சொல்ற அனுபவமே தனி. இது புலி சொல்ற மாதிரி ரீல் விடுற அடியில்ல.’உள்ளுக்கு வரவிட்டு அடிக்கிறம்’ ‘உள்ளுக்கு வரவிட்டு அடிக்கிறம்’ என்று முள்ளிவாய்காலில ஒதுங்கின மாதிரி தேசம்நெற்றுக்கு முள்ளிவாய்கால் கட்ட கனபேர் வெளிக்கிட்டவை. ஒன்டும் சரிவரேல்ல. இப்ப நீங்கள் வேற உள்ளுக்கு விட்டு அடிக்கப் போறீங்க என்று சொல்றதைப் பார்த்தா ஆருக்கோ முள்ளிவாய்க்கால் வெட்டியாச்சுப் போல கிடக்கு. பொறுத்திருந்து ஆருக்கு என்று பார்ப்பம்.

    Reply
  • tholar balan
    tholar balan

    தன் மீது ஆதாரம் இல்லாத அவதூறை யமுனா தேசம் இனியொரு என்பன எழுதுவதாக குறிப்பிடும் சோபாசக்தி அவர்கள் என்ன ஆதாரத்தின் அடிப்படையில் கால்மாக்ஸ் தன் வேலைக்காரியுடன் தகாத உறவு வைத்து பிள்ளை பெற்றுக்கொண்டார் என்று எழுதியுள்ளார்? இதற்கான ஆதாரத்தை சோபாசக்தி முன்வைக்க முடியுமா?

    தினத்தந்தி போன்ற நம்பகத்தன்மையற்ற பத்திரிகைச் செய்தியை ஆராயாமல் எழுதியதாக குற்றம் சாட்டும் சோபாசக்தி கால்மாக்ஸ் மீதான தனது குற்றச்சாட்டுக்கு நிச்சயம் நம்பகத்தன்மையான ஆதாரத்தை முன்வைப்பார் என நம்புகிறேன்.

    சோபாசக்தி மீது குற்றம் சாட்டியிருப்பவர்கள் யமுனா தேசம் மற்றும் இனியொரு போன்றவையேயொழிய கால்மாக்ஸ் அல்ல. அப்படியிருக்க சோபாசக்தி எதற்காக மாபெரும் ஆசான் கால் மாக்ஸ் மீது அவதூறு பொழியவேண்டும்?

    Reply
  • thalaphathy
    thalaphathy

    தோழர் பாலன்!
    நீங்கள் உங்கள் கண்ணை மூடிக்கொண்டதால் மட்டும் உலகமெல்லாம் இருட்டில்தான் இருக்கிறது என்பது பொருளாகாது. நெற்றில் தேடுங்கள் உங்கள் அறிவுக்கண் சிறிதாவது திறக்கும். உங்கள் கேள்விக்கான விடை இதோ:

    1850:
    Herausgeber der “Neuen Rheinischen Zeitung. Politisch-ökonomische Revue” (Hamburg-New York).
    Beginn der Beziehung mit seiner Haushälterin Helena Demuth (1823-1890), mit der er einen gemeinsamen Sohn hat.

    Thanks: http://www.dhm.de/lemo/html/biografien/MarxKarl/index.html

    Reply
  • ஷோபாசக்தி
    ஷோபாசக்தி

    //சோபாசக்தி கால்மாக்ஸ் மீதான தனது குற்றச்சாட்டுக்கு நிச்சயம் நம்பகத்தன்மையான ஆதாரத்தை முன்வைப்பார் என நம்புகிறேன்/

    தோழர் பாலன்! உங்கள் நம்பிக்கையை நான் வீணடிக்கமாட்டேன். ‘சாம்பிளுக்கு’ இந்த ஆதாரத்தைப் பொறுமையுடன் படியுங்கள். இதைப் போன்று ஏராளமான ஆதாரங்கள் கொட்டிக்கிடக்கின்றன.!

    “The story of ‘Marx’s illegitimate son'”
    http://marxmyths.org/terrell-carver/article.htm

    Reply
  • பொடிப்பயல்
    பொடிப்பயல்

    நான் சடுதியாகத் தீபக்கின் முகத்தில் தாக்கிவிட்டு //

    பிரபாகரனும் இதைத்தான் செய்தார்.. என்ன அது பெரும் பதற்றம்.. சோபாக்கு சிறு பதற்றம்..

    Reply
  • ஷோபாசக்தி
    ஷோபாசக்தி

    தோழர் பாலன்! நீங்கள் ஏற்கனவே ஹெலன் டெமூத் குறித்து ஏதும் அறியாதவராயிருந்தால் நான் முதலில் அனுப்பிய சுட்டியிலுள்ள கட்டுரை உங்களிற்கு உதவி செய்யாது என்றுதான் நினைக்கிறேன். குறைந்தபட்சம் இவ்வாறான ஒரு ‘பிரச்சினை’ இருக்கிறது என்பதையாவது நீங்கள் அறிந்துகொள்ள ஒருவேளை அந்தக் கட்டுரை உதவலாம். பஞ்சியைப் பாராமல் கொஞ்சம் இணையத்தில் தேடிப்பாருங்கள். யமுனா கூட ஷீலா ரோபொத்தத்தை ஆதாரம் காட்டி ஹெலன் டெமூத் குறித்து ஏதோ ஒரு சிறுபத்திரிகையில் எழுதியதியிருந்ததாக நினைவு. முடிந்தால் அவரிடம் கேட்டுப்பாருங்கள்

    Reply
  • ஷோபாசக்தி
    ஷோபாசக்தி

    //பிரபாகரனும் இதைத்தான் செய்தார்.. என்ன அது பெரும் பதற்றம்.. சோபாக்கு சிறு பதற்றம்..//

    தம்பி பொடிப்பயல்! பிரபாகரன் மட்டும்தான் சடுதியில் தாக்குவாரா? நீங்கள் லண்டன் வீதியிலோ பாரிஸ் வீதியிலோ இரவில் தனியாக நடந்துபோகும் போது வழிப்பறி செய்பவர்கள் உங்களை மடக்கினால் என்ன செய்வீர்கள்? சடுதியில் தாக்க மாட்டீர்களா?

    Reply
  • NANTHA
    NANTHA

    திரைப்படங்கள் யதார்த்தத்தை வெளிக்கொணரும் ஒரு சாதனமாகவும் மக்களின் சிந்தனைகளுக்கு (சரி/பிழை) ஒரு வடிகாலாகவும் இன்று மாறியுள்ளன.

    தமிழ் படங்கள் என்றால் எனக்கு எப்போதுமே ஓர் அலர்ஜி. தமிழ் நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாழ்வை அல்லது பிரச்சனைகளை தமிழ் படங்களில் காண முடிவதில்லை. சமூகத்தின் “பங்களிப்பு” பற்றி தமிழ் படங்களில் காண்பது கஷ்டம்.

    ஷோபாசக்தி இந்தியாவிலுள்ள தமிழ் அகதிகளின் வாழ்வு பற்றி ஓர் படம் எடுக்க முயற்சித்துள்ளார் என்றே எண்ணுகிறேன். இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளின் முகாம் நிலைமைகள் பற்றி யாரும் இதுவரையில் அலட்டிக் கொண்டதில்லை. ஆனால் “இடம் பெயர்ந்து” வன்னியில் முள்ளு வேலிகளுக்குப் பின்னால் தமிழர்கள் நின்றபொழுது வெளிநாடுகளில் படு பயங்கர ஆர்ப்பாட்டங்களும், அறிக்கைகளும் வெளி வந்தன. அந்த “அக்கறை” பற்றி சிறு ஆய்வு செய்த பொழுது அந்த முகாம்களில் “பொது மக்கள்” மாத்திரமல்ல பல புலிக் கொலைகாரர்களும் “பொதுமக்கள்” வேஷத்தில் ஒளிந்திருந்தார்கள் என்ற உண்மையும் தெரிய வந்தது. அதனால்த்தான் வெளி நாட்டு புலிகள் “வன்னி பொது மக்கள்” சித்திரவதை முகாம்களில் வாடுகிறார்கள் என்று குதித்தார்கள்.

    மலையாள படங்கள் பல (சில தமிழ் படங்கள் போன்றவை) பல சமூக பிரச்சனைகளையும் கம்யூனிஸ்டுகளின் போராட்ட காலத்து சம்பவங்களையும் அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளன.

    மோகன் லால், முரளி, கீதா நடித்த “லால் சலாம்”, லால், சித்தீக் நடித்த “gulmohar”, லால், ப்ரிதிராஜ் நடித்த “தலைப்பாவு” போன்ற படங்கள் எனக்கு பிடித்த படங்கள்.

    தமிழ் நாட்டு யதார்த்த நிலைமைகளை திரைப்படம் மூலம் வெளிக்கொணர சக்திக்கு தடைகளே அதிகம் என்று நினைக்கிறேன்,

    Reply
  • tholar balan
    tholar balan

    மதிப்புக்குரிய சோபாசக்தி அவர்களுக்கு! தங்கள் பதில் எனக்கு மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.உங்களைப்பற்றி தினத்தந்தியில் வந்த செய்தியை ஆராயாமல் தேசம் இனியொரு என்பன பிரசுரித்துவிட்டன என்று கூறும் நீங்கள் கால்மாக்ஸ் பற்றி எழுதும்போது நிச்சயம் தகுந்த ஆதாரத்துடன் எழுதியிருப்பீர்கள் என நம்பினேன்.எனவேதான் ஆதாரத்தை முன்வையுங்கள் என்று கேட்டேன்.ஆனால் நீங்களோ “பஞ்சியைப்பாராமல் நெட்டில் தேடிப்பாருங்கள் அல்லது யமுனாவிடம் கேட்டுப்பாருங்கள்” என்று பதில் தந்துள்ளீர்கள்.ஆக இதன் மூலம் தங்களிடம் ஆதாரம் இல்லை என்றே எண்ணத்தோன்றுகிறது.சரி ;நீங்கள் கூறுவது போன்று யமுனாவிடம் கேட்டு அவரின் கருத்தை ஏற்றுக்கொள்வதாயின் அவர் உங்களைப்பற்றி தெரிவிக்கும் கருத்துக்களையும் நான் சரி என்று ஏற்றுக்கொள்ள வேண்டிவருமல்லவா? அல்லது நீங்கள் குறிப்பிட்டபடி பஞ்சியைப்பாராமல் நெட்டில் தேடினாலும் அதில் உள்ள கருத்துக்களை அப்படியே எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்?ஏனெனில் ஒரு சாதாரண சோபாசக்தியின் செய்தியையே முதலாளித்துவ பத்திரிகையான தினத்தந்தி திரித்து வெளியிடுகின்றதாயின் இந்த முதலாளித்துவத்தையே அழிக்கின்ற தத்துவத்தை எழுதிய தத்துவவியலாளர் குறித்து முதலாளித்துவம் எப்படி நேர்மையாக உண்மையான செய்திகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கமுடியும்?எனவேதான் உங்களிடம் நம்பகமான ஆதாரத்தை முன்வைக்கும்படி கேட்டேன்.

    சோபாசக்தி ;தயவுசெய்து நான் உங்களை சங்கடப்படுத்துவதற்காக இவ்வாறு கேட்பதாக எண்ணவேண்டாம்.உண்மையிலே இந்த விடயம் குறித்து நீண்ட நாட்களாக நம்பகமான ஆதாரத்திற்காக நான் முயன்று கொண்டிருக்கிறேன்.அதனால்தான் நீங்கள் இந்த விடயம் குறித்து எழுதியவுடன் உங்களிடம் இதுபற்றி நம்பகமான ஆதாரம் இருக்கக்கூடும் என எண்ணினேன்.

    லண்டனில் கால்மாக்ஸ் கல்லறை உள்ள மயானத்தில் அவரின் கல்லறையைப் பராமரிக்கும் அறக்கட்டளை சார்பாக ஒரு பிரசுரம் விற்கப்படுகிறது.அதில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.இதனைப்படித்த நான் அந்த அறக்கட்டளையுடன் தொடர்புகொண்டு இது பற்றி மேலும் விபரங்கள் அறிய முயன்றேன்.ஆனால் எனது முயற்சி இதுவரை வெற்றி பெறவில்லை.எனினும் இது பற்றி 90 களில் எஸ்.வி.ராஜதுரை தமிழ்பரப்பில் எழுதியதும் அதற்கு இந்திய புரட்சியாளர்கள் பதில் அளித்ததும் அறிந்துள்ளேன்.ஆனால் எஸ.வி.ராஜதுரை அவர்களும் இதற்குரிய நம்பகமான ஆதாரத்தை முன்வைக்கவில்லை என்றே அறிய வருகிறது.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //..நான் விடுதலைபுலிகளின் விமர்சனமற்ற ஆதரவாளன் இல்லை என்று யமுனா சொல்வதின் மறுவளமான அர்த்தம் அவர் விமர்சனபூர்வமான புலிகளின் ஆதரவாளர் என்பதுதானே!…///

    நான் புலிகளை 100% எதிர்க்கிறேன் அதேபோல் அரசை 110% எதிர்க்கிறேன்!

    Reply
  • தமிழ்வாதம்
    தமிழ்வாதம்

    தங்கள் தவறுகளை மறைப்பதற்காகவே, சிலர் இணையச் செய்திகளை கல்வெட்டாக மாற்றி, ஆதாரம் காட்டி, அவதாரம் எடுக்கிறார்கள்.

    Reply
  • msri
    msri

    சோபாசக்தி கார்ல் மாக்ஸ்பற்றி சொலகின்றார்! சோபாசக்திபற்றி தமிழிச்சியிடம் கேட்டால் கதைகதையாக சொல்வார்! பெண்கள் படுக்கை அறைக்குள் கமரா பொருத்தம் அதிகாரம் உங்கள் வசமிருந்தால் நீங்கள் அதையும் செயவீர்கள் என்கின்றார் சோபா. படுக்கை அறைக்குள் நடப்பது என்ன என்பதையே கவிதையாக்கியுள்ளார் உங்கள் தோழி பிறகேன் கமரா?

    Reply
  • பல்லி
    பல்லி

    //நான் புலிகளை 100% எதிர்க்கிறேன் அதேபோல் அரசை 110% எதிர்க்கிறேன்//
    பல்லி முற்பாதியில் சாந்தனுடன் கூடி செல்கிறேன்;
    பிற்பாதியில் அரசை விமர்சிக்கிறேன்;

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    /…நான் புலிகளை 100% எதிர்க்கிறேன் அதேபோல் அரசை 110% எதிர்க்கிறேன்…/

    பல்லி,
    இதைச் சொன்னது நானல்ல சோபாசக்தி! யமுனாவின் வாதத்தில் ’மறுவளம்’ தேடும் சோபா தனது 100%, 110% எதிர்ப்பினை விளக்கினால் நலம்!

    Reply
  • ஷோபாசக்தி
    ஷோபாசக்தி

    தோழர் பாலன்! எந்த ஆதாரத்தை நீங்கள் நம்புவீர்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்பதுதான் பிரச்சினை. எடுத்துக்காட்டாக நீங்கள் இணையத்தில் சொடுக்கினால் ஹெலன் டெமூத் கார்ல் மார்க்ஸின் காதலி என ஒருதொகைக் கட்டுரைகளும் அதுகுறித்த புத்தகங்கள் நாடகம் சினிமா குறித்த விபரங்களும் கிடைக்கும். ( அதே போல அவர் காதலி என்பதை மறுத்த ஆயிரக்கணக்கான கட்டுரைகளும் இணையத்தில் கிடைக்கின்றன).

    ஹெலன் டெமூத்தின் குழந்தைக்கு தந்தை இல்லாதது மார்க்ஸ் இறந்தவுடன் ஹெலன் டெமூத் ஏங்கெல்ஸிடம் அடைக்கலம் புகுந்தது ஹெலன் இறந்தபோது ஜென்னி ஏற்கனவே கோரியிருந்தவாறு மார்க்ஸின் குடும்பக் கல்லறையில் அவர் புதைக்கப்பட்டது 1898ல் தற்கொலை செய்துகொண்ட மார்க்ஸின் மகள் எலியனோருக்கும் ஹெலனின் மகன் ஃபிரடரிக் டெமூத்துக்கும் நடந்த நீண்ட கடித உரையாடல்கள் என எல்லாவற்றையும் ஆய்வு செய்து எழுதப்பட்ட கட்டுரைகள் இணையத்தில் கிடைக்கின்றன.ஒரு சொடுக்கில் ஆதாரம் எனச் சுட்டிகளை வரிசையாகக் கொடுக்க முடியும். ஆனால் நீங்கள் நம்ப வேண்டுமே! முதலாளித்துவ எழுத்தாளர்களின் சதி என நீங்கள் புறக்கணித்துவிட்டுப் போகவும் வாய்ப்புள்ளதல்வா!

    அதனால்தான் உங்களையே தேடிப் பார்த்துப் படிக்கச் சொன்னேன். தவிரவும் யமுனாவும் அதுகுறித்து எழுதியிருந்ததால் அவரிடம் மேலதிக தகவல்கள் கிடைக்கலாம் எனச் சொல்லியிருந்தேன்.

    நீங்கள் “சங்கடப்படுத்துவதாக நினைக்க வேண்டாம்” என எழுதியிருந்தார்கள். இந்த ஆதாரம்/ ஆதாரமின்மை குறித்து உங்களோடு உரையாடுவதில் சங்கடம் ஏதுமில்லை. ஆனால் நமது பேராசான் கார்ல் மார்க்ஸ் மீது நான் வீம்புக்கு பழி சுமத்துகிறேன் என்ற தொனியில் நீங்கள் என்னை அணுகுவது உண்மையிலேயே மிகுந்த சங்கடமாயுள்ளது.

    மிக்க அன்புடன்
    ஷோபா

    Reply
  • ஷோபாசக்தி
    ஷோபாசக்தி

    msri
    //சோபாசக்திபற்றி தமிழிச்சியிடம் கேட்டால் கதைகதையாக சொல்வார்! // அப்படியா! அந்தக் கதைகளினால் என் மீது உங்களிற்கு ஏதாவது விமரிசனம் உண்டா? இருந்தால் சொல்லுங்கள் என் விளக்கத்தைச் சொல்கிறேன். நம்மிடம் ஒளிவு மறைவெல்லாம் கிடையாது.

    //படுக்கை அறைக்குள் நடப்பது என்ன என்பதையே கவிதையாக்கியுள்ளார் ?// மைக்கல் ஏஞ்சலோவின் நிர்வாண ஓவியத்தை நீண்ட நேரமாகப் பார்த்துக்கொண்டிருந்த ஒருவன் ‘இவ்வளத்தைக் கீறத் தெரிஞ்சவனுக்கு ஒரு ஜட்டி கீறத் தெரியலயே’ என்று கவலையுற்றானாம்.

    ஏன் தோழரே படுக்கை அறைக்குள் நடப்பது என்ன என்பதை எழுதினால் தவறா? காமத்துப் பாலையும் ஆண்டாள் பாசுரங்களையும் எத்தனையோ நுhற்றாண்டுகளிற்கு முன்பே தந்த செம்மொழியல்லவா நம்மொழி! கவிதையைப் படிச்சால் அனுபவிக்க வேணும்.. சும்மா சின்னப் பிள்ளையள் மாதிரி வெட்கப்படக்கூடாது.

    Reply
  • tholar balan
    tholar balan

    Shobashakthi, I have read the link you attached. Nowhere in the article does it mention that there is concrete proof that there was a liason between Marx and the house servant. Even the conclusion reiterates this point.

    I’m not sure if you have read this article yourself or if you mentioned it to me, believing it to be about one thing. Yet, the points covered in the article seems to reaffirm my statements. So, I’m hoping that you will be reading this article once again and be changing your opinion accordingly.

    Alternatively, if you wish to continue to stand firm by your intial comments/opinions then I ask that you bring forth the relevant proof. But please read the resources before putting them forward.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    /அவர் சொல்வது பொய்யென எனக்குத் தெரியும். கமெரா யூனிட் குறித்த அனைத்துத் தொடர்பு இலக்கங்களும் அவரிடமிருக்கும். அவரின் கையில் கைத்தொலைபேசி இருந்தது. எப்படியாவது ஃ புட்டேஜைக் காப்பாற்ற வேண்டுமென்ற பதற்றத்திலிருந்த நான் சடுதியாகத் தீபக்கின் முகத்தில் தாக்கிவிட்டு அவரின் கைத்தொலைபேசியைப் பிடுங்கிவிட்டேன். அதற்குப் பின்பு ஓடிப்போனவர்களோடு பேசி காலையில் ஃபுட்டேஜ் சென்னையில் திரும்பப் பெறப்பட்டது./– ஷோபா!
    “இலாபகரமாகத்தான் முகத்தில் பஞ்ச் வைத்திருக்கிறீர்கள்”!. ஊதியமே பெறாமல் கதைவசனம் எழுதிய டாக்டர் கலைஞரான உங்களுக்கு இருக்கும் அக்கறை, படத்திற்கு முதலீடு செய்தவர்களுக்கு ஏன் இல்லை. நீங்கள் இவ்வளவு தியாகம் செய்யும் அளவுக்கு படத்தின் விஷயங்கள் மக்களுக்கு? பயன்படுமா?, பார்க்கத்தான் வேண்டும்?.

    இலங்கையின் மொத்த ஜனத்தொகை, இரண்டுகோடி என்று நினைக்கிறேன். தமிழ்நாட்டின் ஜனத்தொகை நாலுகோடி. ஐம்பது இலட்சம்கூட இல்லாத இலங்கைத்தமிழர் பிரச்சனையுடன் நீங்கள், நூறு கோடி இந்திய பிரச்சனையில் நுழைக்கிறீர்கள்!. இதற்கு, சென்னை மாநிலக்கல்லூரி அ.மார்க்ஸை துணைக்கழைக்கிறீர்கள்!. மார்க்ஸ், ஸ்டாலின் என்று பெயர் வைத்துக் கொள்பவர்களெல்லாம் “நகல் போலிகள்”. மாநிலக்கல்லூரியில்தான் தமிழக துணைமுதல்வர் ஸ்டாலினும் கல்வி பயின்றார். தற்போது தி.மு.க.வின் “தலித்திய தளபதிகளின்” கோட்டையாக (இடஒதுக்கீட்டின் துணையுடன்)இருக்கிறது?. நான் கூறும் இந்த “ஜோக்” உங்களுக்குப் புரியாது, காலம் பதில் சொல்லும்!.

    /நான் தீபக்கைத் தாக்கியதை ஒப்புக்கொண்டேன். எனக்குத் தண்டப் பணமாக ரூபா 1700 விதிக்கப்பட்டது. இனியொரு இணையத்தளம் எழுதியது போல மேலிடத்து சிபாரிசுகளின் அடிப்படையில் நான் காப்பாற்றப்படவில்லை. எல்லாம் ‘சட்டப்படி’ தான் நடந்து முடிந்தன./–இதிலிருந்து நீங்கள் ஒரு “குழந்தைப்” போராளி என்று தெரிகிறது!. இதை விட மூர்க்கமாக இந்தியாவிற்குள் நாங்கள் போராடி அலுத்துவிட்டோம்!. கோடம்பாக்கத்தில் விழுந்து புரண்டவன் நான். இதில் இலங்கையரின் பங்களிப்புப் பற்றி, “எல்லீஸ் ஆர் டங்கன்” – கலைஞர் கருணாநிதி காலத்தில் பெரும் பங்கு ஆற்றிய இலங்கையில் வாழ்ந்த வாழ்ந்துக் கொண்டிருக்கிற? ஏ.கே.சாமி? அவர்களை கேளுங்கள் பார்ப்போம்!. யமுனா ராஜேந்திரனைவிட உங்களுக்கு சினிமாத்துறைப் பற்றி அனுபவம் இருக்கும் என்று தோன்றவில்லை!.

    வே.பிரபாகரன் அவர்கள் (உடனே புலி, கிலி என்று மொழுமொழுவென்று பிடித்துக்கொள்ள வேண்டாம், வரலாற்றில் சில சொற்களை சரியாக பதிய வேண்டுமென்ற இந்திய “பிரஸ்பெக்டிவ்” இது), கோடம்பாக்கத்தின் மூலம் சாதிக்கமுடியும் என்று நம்பியிருந்தால், இயக்கம் துவங்கியிருக்க மாட்டார்!, எம்.ஜி.ஆரிடம் சிபாரிசு கடிதம் பெற்று, “வேஷம் கேட்டு வாங்கியிருப்பார்”!.

    /ஆனால் நீங்கள் எப்படி யமுனா? ஈழத்தில் யுத்தத்தால் கொல்லப்பட்ட மக்களின் பெயராலும் அகதிகளாக உலகெங்கும் அலையும் ஈழத்து ஏதிலிகளின் பெயராலும் உங்கள் இருப்பைக் காப்பாற்றியவரல்லாவா நீங்கள். ஈழத்தையே இன்றுவரை நீங்கள் கண்ணால் கண்டிராதபோதும் ஈழத்திலிருந்து துன்பமும் துயரமும் அடைந்தேன் என்று பொய்யுரைத்து அந்த யுத்தத்தையும் இரத்தத்தையும் கண்ணீரையும் சாட்சிகளாக்கி நோகாமல் ‘ஈழத்து அகதி’ என்று கள்ள ‘சேர்ட்டிபிகட்’ முடித்து இலண்டனில் அரசியல் தஞ்சம் பெற்றவரல்லவா நீங்கள்! நீங்களா எங்களைப் பார்த்து போலிகள் என்றும் இருப்புக்காக அலைபவர்களென்றும் தூற்றுவது? நீங்களா எங்களைப் பார்த்து புலி எதிர்ப்பு அரசியலால் பிழைப்பவர்கள் என்று எழுதுவது? உங்களிற்கு கடுகளவேனும் மனச்சாட்சியிருந்தால் இதற்குப் பதில் சொல்லுங்கள்./–
    1985 – 1987 வரை இலங்கைத்தமிழர் தொடர்பிருந்த பலர், இந்த நீரோட்டத்தில் இழுத்துச் செல்லப்பட்டது உண்மை!. இதில் வியாபார தொடர்பிருந்த “முஸ்லீம்களும்” அடங்கும். பின்னாளில் எல்லாம் வியாபாரமாகிவிட்டது என்பது வேறு விஷயம்!. இலங்கைத் தமிழரது ஆழ்மனதின் “இருட்டுப் பகுதியிலிருந்து” வந்த இந்த வரிகளை புரிந்து கொள்ளக்கூடிய நிலையிலிருக்கும் “விரல்விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையில் இருக்கும்” மனிதர்களுக்கு தற்போது நாற்பது வயதிலிருந்து ஐம்பது வயதுக்கு மேல் இருக்கும். 1987 ல் (இந்திய இராணுவம் நுழைந்தபிறகு) உள்ள இந்திய, தமிழக இளைஞர்களுக்கு,இவைகள் பற்றி ஒன்றுமே தெரியாது!. தகவல் தொழில் நுட்பம், மற்றும் ஆராய்ச்சி மாணவர்களாக தற்போது பெருமளவில் வெளிநாடுகளில் குவிந்திருக்கும் இந்திய இளைஞர்களின் “இலங்கைத் தமிழர்களின்” மீதான புரிதல் என்பது, எழுதுவதற்கு உகந்ததாக இல்லை!. இதற்கு காரணம் இலங்கைத் தமிழர் “அரசியல் பிரச்சனையில்” “லாஜிக் கெட்டுப் போய்” தனிநபர்களின் வியாபரத்தனமாக மாறிய பிறகு, உண்மையிலேயே,”/ பண்ணைகளிலும் அதற்கு வெளியிலும் என்னோடு வாழ்ந்த போராளிகள் ஒடுக்கு முறைக்கு எதிராக தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். இன்று மறுபடி பின்னோக்கிப் பார்க்கும் போது ஆயிரம் தவறுகள், குறைபாடுகளைக் கண்டுகொள்ள இயலுமாயுள்ளது. எது எவ்வாறாயினும் சுயநலமின்றி தான் சார்ந்த சமூகத்தின் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவதற்காக தமது இளமைக் காலத்தை அர்ப்பணித்தவர்கள். தமது வீடுகளின் கொல்லைப்புறத்தால் பேரினவாதப் பிசாசு மிரட்டிய போது தெருவிற்கு வந்து நெஞ்சு நிமிர்த்தி குரல் கொடுத்தவர்கள்.
    அவர்கள் வரித்துக்கொண்ட வழியுமி புரிந்து கொண்ட சமூகமும் தவறானதாக இருக்கலாம். ஆனாலும் தேவைப்பட்ட போராட்டம் ஒன்றின் முன்னோடிகள். சாதி ஒடுக்குமுறை, சமூக ஒடுக்குமுறை, பிரதேசவாதம் போன்ற எதுவுமே இவர்களைக் கட்டுப்படுத்தியதில்லை./- இது உண்மை!

    அதாவது அரசியல் தளம் இல்லை. கொல்லைப் புரத்திற்கு, வீட்டுக்குள் வெள்ளம் புகுந்த பிறகுதான் கண்விழித்தார்கள்!, புறச்சூழலின் அழுத்தத்தால். இந்த “புறச்சூழல்” புலம்பெயர்ந்த நாடுகளில் விலகிவிடவே மீண்டும் “முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டார்கள்”!. இதில் இரண்டு இருக்கிறது “இனப்பிரச்சனை? அடுத்து சமுதாயப்பிரச்சனை”. இனப்பிரச்சனைக்கான “புறச்சூழல்” விலகும் போது, ”சமுதாயப்பிரச்சனை” மீண்டும் ஆக்கிரமித்துக் கொள்கிறது, என்பதும் உண்மை!. “இந்த வரிகளை யாரும் நினைவுப் படுத்த முயலும் போது “முரண்பாடுகள்” ஏற்ப்படுகின்றன!.

    Reply
  • மாயா
    மாயா

    சோபா சக்தி , தாக்கியதை ஒப்புக் கொண்டதாகவும் , அதற்கு தண்டப் பணம் கட்டப்பட்டதாகவும் எழுதியுள்ளீர்கள். அதில் லீனா இயக்குனர் என்று வேறு குறிப்பிடுகிறீர்கள். சினிமா பின்னணியில் உள்ளவர்கள் , ஒரு தொழிலாளியையோ அல்லது கலைஞரையோ என்ன பிரச்சனை வரினும் தாக்க முடியாது. இதற்கென புகார் செய்வதற்கு சினிமா சங்கங்கள் அல்லது யூனியன்கள் இருக்கின்றன. அவற்றில புகார் செய்ய வேண்டும். ஒரு கலைஞன் புகார் செய்தால் , அந்தப் படம் வெளிவராமல் தடுக்கும் உரிமை , அடிப்படையாக வேலை செய்யும் துணை நடிகனுக்கோ அல்லது லைட் போய்ககோ கூட இருக்கிறது. அப்படி முன்னர் நடந்துள்ளது. ஆனானப்பட்ட MGR போன்ற நடிகர்கள் கூட ஒரு அடிமட்ட வேலையாளைக் கூட சினிமாவுக்காக , அந்த பின்னணியில் தாக்கியதில்லை. MGR , ஒரு வேலையாள் உண்ணாமல், தனியாக சாப்பிடாத உயர் பண்பைக் கொண்டவர்.

    அந்தவகையில் , உங்கள் எழுத்துகளால், தவறுகளை நியாயப்படுத்த எழுதுகிறீர்கள். தவறான முன்னுதாரனமாக இவை எவருக்கும் ஆகக் கூடாது.

    Reply
  • ஷோபாசக்தி
    ஷோபாசக்தி

    மாயா நீங்கள் சொல்வதை முழுவதுமாக ஏற்றுக்கொள்கிறேன். நடந்த சம்பவத்தை ஆளாளுக்கு விருப்பப்படி திரித்தும் உருப்பெருக்கியும் கொலை முயற்சி/ ஊதியம் வழங்க மறுத்தது என்றெல்லாம் எழுதியதாலேயே நான் உண்மையில் என்ன நடந்தது என்பதைச் சொல்லியிருக்கிறேனே தவிர தீபக்கைத் தாக்கியதை நான் நியாயப்படுத்த முயற்சிக்கவில்லை. நன்றி.

    Reply
  • ஷோபாசக்தி
    ஷோபாசக்தி

    //மீண்டும் தொடங்கினால் இழுத்து வச்சி அறுத்துருவேன்//

    பரவாயில்லீங்க..மறுபடியும் நான் ஒட்ட வைச்சுக்குவேன்..

    Reply
  • msri
    msri

    கவிதையைப் படித்தால் அனுபவிக்கவேணும்> சும்மா சின்னப்பிள்ளைகள் ஆட்டம் என்கின்றார் சோபா! சோபாசக்தி! பாலியல் மனிதனின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்று! இதை மனிதகுலம் நாளாந்தம் அனுபவிததுக் கொண்டுதான் இருக்கின்றார்கள்! இந்த அனுபவிப்பிற்கு உங்களின் இந்த “முற்போக்குக் கவிதைகள்” தேவையில்லை! அதற்கு பல மஞசல் மசாலைகள் உண்டு! தாங்களும் தங்களைப் போன்ற “தலித்திய செயற்பாட்டாளர்களின்” பிரதான வேலை, ஏகப்பட்ட அடக்கியொடுக்கப்பட்ட தலித் மக்களும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினைகளும் உதுவல்ல! தோழரே படுக்கை அறை பரிவர்த்தனங்களை> அனுபவிப்புக்களை> உச்சகட்டங்களை அந்தந்த நேரகாலங்களில் பகுதியாகச் செய்யுங்கள்! இதைத்தான் உலகின் சகல ஜீவராசிகளும் செய்கின்றன! தாங்கள் ஓர் “தலித்திய செயற்பாட்டாளராக” உலாவருகின்றீர்கள் தங்களின் பிரதான வேலை எதுவோ? இதுதானா?

    Reply
  • Gopalan
    Gopalan

    1. தனிமனித முரண்பாடுகளே மாபெரும் தத்துவ விவாதமாக இருக்கும் நிலையை காட்டுகின்றது. இவ்வாறான விமர்சன விவாதங்களுக்கும் வர்க்கப் போராட்டத்திற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? (யமுனா – சோபா அன் கோ)
    2. தனிமனித பலவீனத்தை மறைப்பதற்கு தோழர் – தலைவர்- ஆசான் என போற்றப்படும் மார்க்ஸ் இங்கு வலிந்திலுக்கப்பட்டுள்ளார். இவ்வாறு முன்னர் இலக்கியச் சந்திப்பு கழியாட்டக்காரர்கள் மார்க்சின் வாழ்வை சாட்சியாகக் காட்டியுள்ளார்கள். மார்க்ஸ் தூற்றுபவர்கள் மார்க்சீய விரோதிகளே அன்றி வேறுயாருமல்ல. அவருடைய வாழ்வின் ஏன் ஜென்னியின் வாழ்வின் பல சோக அத்தியாயங்கள் எவ்வாறு இருந்தது என்பதை கூலிக்கு மாரடித்த மார்க்ஸ்காலத்து உளவாளியின் பகுப்பாய்வு தன்மை கூட மார்க்சை ஏற்றுக் கொள்பவர்களிடம் இல்லையென்பதை அறியலாம். (தோழர் பாலனுடன் உடன்பாடு உண்டு)
    3. ஏகாதிபத்திய சமூகத்தில் வாழ்ந்து கொண்டு இங்குள்ள வாழ்க்கை முறையின் அளவீட்டின் அடிப்படையில் தெருவில் படுத்துறங்கும் மக்கள்ளைப் பற்றி மதிப்பீடு செய்வதான எண்ணும் சிந்தனையை இங்கு பார்க்கலாம். நீங்கள் வாழும் தேசத்தின் வாழ்வியல் சிந்தனை வேறு அங்கு வாழும் மக்களின் பொருளாதார வளம் வேறு; வாழ்க்கை முறை வேறு; மேற்குலக கண்ணாடி போட்டுக் கொண்டு அல்லது வளர்முகநாடுகளின் மேட்டுக்குடி கண்ணாடியைப் போட்டுக் கொண்டு கட்டுடைப்புச் செய்வது பெரும்பான்மை மக்களின் வாழ்நிலையை பிரதிபலிப்பதாக இருப்பதில்லை என்பதை மறுக்கின்றது போக்கு.
    4. செக்ஸ்; உடறுறவு -வாதம் (உடலரசியல்) என்பதே முதன்மைக் உலகக் கண்ணோட்டமாக இருக்கின்ற அணுகுமுறை வர்க்கச் சிந்தனையை மழுங்கடிக்கின்றது. இது தனியே வெறும் யோனி – ஆண்;குறி (குண்டலினி- லிங்கம்) இவற்றிற்கிடையோன பிரச்சனையே முதன்மையானது என்று சுட்டி நிற்கின்றது.
    5.கோணேஸ்வரி பற்றி தமிழச்சி எழுதியுள்ளதை வாசகர்கள் வாசிப்பது தகும்.

    Reply
  • BC
    BC

    இந்த வினவு புலி ஆதரவாளர்களை தன்பக்கம் எடுப்கதற்காக எதுவும் எழுதும். இலங்கை பிரச்சனை பற்றி தீவிர புலி ஆதரவாளரை கனடா வாழ் வசதியான அகதியை கொண்டு கட்டுரை எழுதுவிக்கிறது.
    கால்மாக்ஸ் தன் வேலைக்காரியுடன் தகாத உறவு வைத்து பிள்ளை பெற்றுக்கொண்டார் என்பது எனக்கு இதுவரை தெரியாது. கால்மாக்ஸ் பற்றிய இந்த விடயங்கள் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். பலருக்கு தெரியாது என்று நினைக்கிறேன். மாக்ஸ்சியமோ அல்லது மதமோ புனிதப்படுத்தி தமிழர் தலையில்கட்ட வேண்டாம்.

    Reply
  • ஷோபாசக்தி
    ஷோபாசக்தி

    msri
    //கவிதையைப் படித்தால் அனுபவிக்கவேணும்//

    இந்தக் கவிதை அனுபவம் – கவித்துவ அனுபவம் என்றெல்லாம் சொல்கிறார்களே அதைத்தான் நான் சொன்னேன். நீங்கள் அனுபவிப்பது என்றவுடன் அதை கலவி என்று பொருட்படுத்திக் கொண்டு விட்டீர்கள். மாத்தி யோசிங்க msri!

    Reply
  • ஷோபாசக்தி
    ஷோபாசக்தி

    தோழர் கோபாலன்! வர்க்கப் போராட்டமே முதன்மையானது மற்றையவை அனைத்தும் (பெண்கள் விடுதலை – சாதிய விடுதலை- இனவிடுதலை.. ) அதற்குக் கீழானவை என்ற மரபு மார்க்ஸியத்தை நான் ஏற்றுக் கொள்வதற்கில்லை. எல்லா விடுதலை கோரிய போராட்டங்களும் ஒன்றையொன்று ஊடும் பாவுமாகப் பாதிப்பவை ஒன்றுக்கொன்று துணைநிற்பவை என்ற எளிய உண்மையை நான் கண்டடைந்து நீண்ட நாட்களாகிவிட்டன. எனினும் தங்கள் கருத்துகளிற்கு நன்றி.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    /மீண்டும் தொடங்கினால் இழுத்து வச்சி அறுத்துருவேன்/
    பரவாயில்லீங்க..மறுபடியும் நான் ஒட்ட வைச்சுக்குவேன்..
    /– ஷோபா!.
    இவருடைய அதிகபட்ச இலட்சியம், தோலை ஒட்டவைக்க கூடிய “பசையை” கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிக்குள் அடங்கிவிட்டதாக நினைக்கிறேன்!.
    நடிகை “ரஞ்சிதா” மேட்டரை அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இவைகளெல்லாம் 1950 களிலேயே கோடம்பாக்கத்தில் முடிந்துவிட்ட விஷயங்கள். வேண்டுமென்றால், “தென்னாப்பிரிக்க” “குட்டி பத்மினியிடம்” கேட்டு தெரிந்துக் கொள்ளவும்!. நீங்கள் போராட்டத்தில் மட்டும் 30 வருடங்கள் பின்தங்கி போகவில்லை, சிந்தனையிலும்தான்!. உங்களின் “ஒரு கோப்பையில் தண்ணீர் கோட்பாடு”, “காமசூத்திரத்தில், பின்னுக்குவிடும்” “பின்நவீனத்தைப் பார்த்து” 1990 களில் துவங்கிய மேற்குலகமே அதிர்ந்துவிட்டது. “While pornography specifically oriented toward alternative culture did not arise until the 1990s” “Depictions of a sexual nature are as old as civilization (and possibly older, in the form of venus figurines and rock art), but the concept of pornography as understood today did not exist until the Victorian era.” “Revenues of the adult industry in the United States have been difficult to determine. In 1970, a Federal study estimated that the total retail value of all the hard-core porn in the United States was no more than $10 million.

    In 1998, Forrester Research published a report on the online “adult content” industry estimating $750 million to $1 billion in annual revenue. As an unsourced aside, the Forrester study speculated on an industry-wide aggregate figure of $8–10 billion, which was repeated out of context in many news stories,[6] after being published in Eric Schlosser’s book on the American underground economy. Studies in 2001 put the total (including video, pay-per-view, Internet and magazines) between $2.6 billion and $3.9 billion.

    A significant amount of pornographic video is shot in the San Fernando Valley, which has been a pioneering region for producing adult films since the 1970s, and has since become home for various models, actors/actresses, production companies, and other assorted businesses involved in the production and distribution of pornography.
    The porn industry has been considered influential in deciding format wars in media, including being a factor in the VHS vs. Betamax format war (the videotape format war) and in the Blu-ray vs. HD DVD format war (the high-def format war).””டைனஸார்கள்” அழிந்தததை ஆராய்ச்சி செய்பவர்கள்கூட, எல்லவற்றிற்கும் ஒரு “தென்னிந்திய”(டெக்கான்) சங்கிலி பிணைப்பு இருப்பதாக கூறுகிறார்கள்!. “அன்பில்லாத முத்தம்” பற்றி டாக்டர் ராதாகிருஷ்ணன் காலத்திலேயே(1950 கள்) ஐரோப்பாவில் ஆராய்ந்துவிட்டனர். வாழ்வில் திருப்தியுடன் சாகும் மனிதனை அடையாளம் காட்ட முடியுமா?. அதற்குதானே “பாரடைஸ்” என்ற கானல்நீர் உள்ளது!. பசியும், குறையும் உடையவன்தானே “முதல் பாவம் செய்த” மனிதன்!. பசிக்கும் சகமனிதனுக்கு, தன் உணவில் பகிர்ந்தளிப்பவன் எத்துணைப் பேர்(உடனே “பிரட் ஃபார் ஹங்கர்” என்ற என்.ஜி.ஓ.வைக் காட்ட வேண்டாம்!). தனிமனித ஆசை அபிலாஷைகளைப் பற்றி நீங்கள் கூறுவது சரி!. மனித உயிர் ஒவ்வொன்றிற்கும் “ஒரு பெயர்” உள்ளது, “கடவுள்” என்றால், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருப்பவன் என்பது “இந்துத்துவம்?”. எல்லோருடைய ஆசைகளும் (மாயை)நிறைவேற்ற சரிப்பட்டு வருமா?. “முடிவில்லாத கதை(அன் என்டிங் ஸ்டோரி)” என்ற திரைப்படத்தைப் பாருங்கள் புரியும்!. “தனிமனிதனுக்கு உணவில்லை என்றால், ஜெகத்தினை அழித்திடுவோம்” என்றுதான் மகாக்கவி பாரதி சொன்னார்,” “தனிமனிதனுக்கு ரஞ்சிதா இல்லையென்றால்” என்று கூறவில்லை!.

    Reply
  • tholar balan
    tholar balan

    கால்மாக்ஸ் பற்றி சோபாசக்தி குறிப்பிட்டிருக்கும் வரிகள் /”ஹெலன் டெமூத்தோடு தனக்கிருந்த காதலையோ தன்மூலம் ஹெலன் டெமூத்துக்குப் பிறந்த குழந்தையையோ கார்ல் மார்க்ஸ் அவர் மரணிக்கும்வரை வரை ஒப்புக்கொள்ளவேயில்லை. நீண்ட காலத்திற்கு அது ஏங்கெல்ஸ் உட்பட வெகுசிலருக்கு மட்டுமே தெரிந்த உண்மையாயிருந்தது. ஹெலன் டெமூத் மரணித்த பின்புதான் அவருக்கு கார்ல் மார்க்ஸின் காதலியென்ற ‘அங்கீகாரம்’ கிடைக்கப்பெற்று அவர் மார்க்ஸின் கல்லறையிலேயே புதைக்கப்பட்டடார்.”/ அதுமட்டுமல்ல சோபாசக்தி இறுதியாக தன் கருத்தாக பின்வருமாறு கூறுகிறார் /”என்னைப் பொறுத்தவரை கேடுகெட்ட சமூக ஒழுங்குகளிற்கும் மரபுகளிற்கும் – ஒருவேளை கட்சியின் விதிகளிற்கும் – கட்டுப்பட்டுத் தன் காதலை மறைத்து வைத்து மருகிக்கொண்டிருந்த பரிதாபத்திற்குரியவராகத்தான் இந்த விடயத்தில் கார்ல் மார்க்ஸை மதிப்பிட முடியும். மார்க்ஸை விட ஆயிரம்மடங்கு பரிதாபத்திற்குரியவர் சமூக ஒழுக்கங்களின் பெயரால் மார்க்ஸால் வஞ்சிக்கப்பட்ட ஹெலன் டெமூத்.”/

    தினத்தந்தி தன்னைப்பற்றி திரித்து எழுதிய செய்தியை ஆராயாமல் ஆதாரம் இன்றி யமுனா தேசம் இனியொரு என்பன எழுதிவிட்டதாக கூறும் சோபாசக்தி கால்மாக்ஸ் பற்றி எழுதும்பொது நிச்சயம் தகுந்த ஆதாரங்களின் அடிப்படையிலே எழுதியிருப்பார் என்று நம்பி அந்த ஆதாரத்தை முன்வைக்கும்படி கோரினேன்.அதற்கு சோபாசக்தி அவர்கள் /”தோழர் பாலன்! உங்கள் நம்பிக்கையை நான் வீணடிக்கமாட்டேன். ‘சாம்பிளுக்கு’ இந்த ஆதாரத்தைப் பொறுமையுடன் படியுங்கள். இதைப் போன்று ஏராளமான ஆதாரங்கள் கொட்டிக்கிடக்கின்றன.!
    “The story of ‘Marx’s illegitimate son’”
    http://marxmyths.org/terrell-carver/article.htm

    Reply
  • tholar balan
    tholar balan

    சோபாசக்தி இணைத்த ஆதாரத்தை இங்கு எத்தனை பேர் படித்தார்களோ தெரியவில்லை. ஆனால் நான் அவர் கேட்டுக்கொண்டபடி படித்தேன். அதில் பெடரிக் டெமுத் க்கு தந்தை கால்மாக்ஸ் என்பதற்கு எந்தவித தகுந்த ஆதாரமும் இல்லை என்றே தெளிவாக குறிக்கப்பட்டுள்ளது. இதை எப்படி தனது ஆதாரமாக சோபாசக்தி முன்வைத்தார் என்பது எனக்கு புரியவில்லை. கட்டுரையில் என்ன உள்ளது என்பதை படிக்காமலே சோபாசக்தி இதை இணைத்திருக்க வேண்டும் அல்லது யாரையாவது நம்பி ஏமாந்துவிட்டாரா தெரியவில்லை. ஆனால் இதை இணைத்த அவரே அடுத்து எழுதிய பின்னோட்டத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார் /”தோழர் பாலன்! நீங்கள் ஏற்கனவே ஹெலன் டெமூத் குறித்து ஏதும் அறியாதவராயிருந்தால் நான் முதலில் அனுப்பிய சுட்டியிலுள்ள கட்டுரை உங்களிற்கு உதவி செய்யாது என்றுதான் நினைக்கிறேன். குறைந்தபட்சம் இவ்வாறான ஒரு ‘பிரச்சினை’ இருக்கிறது என்பதையாவது நீங்கள் அறிந்துகொள்ள ஒருவேளை அந்தக் கட்டுரை உதவலாம். பஞ்சியைப் பாராமல் கொஞ்சம் இணையத்தில் தேடிப்பாருங்கள். யமுனா கூட ஷீலா ரோபொத்தத்தை ஆதாரம் காட்டி ஹெலன் டெமூத் குறித்து ஏதோ ஒரு சிறுபத்திரிகையில் எழுதியதியிருந்ததாக நினைவு. முடிந்தால் அவரிடம் கேட்டுப்பாருங்கள்”/

    நான் ஆதாரம் கேட்டதும் அவர் முன்வைத்த ஆதாரத்தையே பின் அது உதவிசெய்யாது என்று கூறுகிறார். அத்தோடு என்னை நெட்டில் தேடிப்பார்க்க கூறுகிறார். அல்லது யமுனாவிடம் கேட்டுப்பாருங்கள் என்கிறார். ஆக இதில் இருந்து என்ன தெரியவருகிறது? இவரிடம் ஆதாரம் இல்லை என்பதே. எனவே இங்கு நான் கூறவருவது என்னவெனில் தன்னுடைய பிரச்சனையில் ஆதாரத்துடன் தேசம் இனியொரு என்பன எழுதவேண்டும் எனக்கோரும் சோபாசக்தி தான்மட்டும் கால்மாக்ஸ் மீது ஆதாரம் இல்லாமல் அவதூறு பொழியமுடியும் என்பதே. அதாவது தனக்கு ஒரு நியாயம். கால்மாக்ஸ்க்கு ஒரு நியாயம். இதுதான் சோபாசக்தியின் நியாயம்!

    /தோழர் பாலன்! எந்த ஆதாரத்தை நீங்கள் நம்புவீர்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்பதுதான் பிரச்சினை. /

    முதலில் நீங்கள் ஆதாரத்தை முன்வையுங்கள். அதன்பின் அதை ஏற்றுக்கொளளலாமா? இல்லையா என்பதை நாம் முடிவு செய்கிறோம். மேலும் இங்கு நான் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவெனில் -மாக்சியத்திற்காகவே நான் மாக்ஸ் மீது மதிப்பு வைத்துள்ளேனேயொழிய மாறாக மாக்ஸ்ற்காக மாக்சியத்தை விரும்பவில்லை. எனவே மார்க்ஸ் தொடர்பான விடயங்கள் குறித்து ஆராய நான் திறந்த மனத்துடனேயே உள்ளேன்.

    /ஒரு சொடுக்கில் ஆதாரம் எனச் சுட்டிகளை வரிசையாகக் கொடுக்க முடியும். ஆனால் நீங்கள் நம்ப வேண்டுமே! முதலாளித்துவ எழுத்தாளர்களின் சதி என நீங்கள் புறக்கணித்துவிட்டுப் போகவும் வாய்ப்புள்ளதல்வா!/
    தனது செய்தியை தினத்தந்தி திரித்து வெளியிட்டுவிட்டதாக கூறும் சோபாசக்தி கால்மாக்ஸ் செய்திகளை மட்டும் அப்படியே உண்மையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக்கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. சாதாரண ஒரு சோபாசக்தியின் செய்தியையே ஒரு முதலாளித்துவ பத்திரிகையான தினத்தந்தி திரித்து வெளியிடும்போது இந்த முதலாளித்துவத்திற்கு எதிராக தன்வாழ் முழுவதும் அயராது உழைத்து மாபெரும் தத்துவத்தை தந்த மாக்ஸ்ற்கு பற்றி நேர்மையாக செய்திகள் வெளியிடப்படும் என எப்படி எதிர்பார்க்கமுடியும் ?
    சரி நான்தான் நீங்கள் என்ன ஆதாரத்தை முன்வைத்தாலும் அதனை கண்ணைமூடிக்கொண்டு ” இது முதலாளித்துவத்தின் சதி” என்று கூறி ஒதுக்குவதாக வைத்துக்கொண்டாலும் தேசம் வாசகர்களுக்காவது நீங்கள் தகுந்த ஆதாரத்தை முன்வைக்கலாம் தானே?

    Reply
  • tholar balan
    tholar balan

    கால்மாக்ஸ்ற்கு வேலைக்காரியுடன் தொடர்பு இருந்ததாகவும் அதன் மூலம் அவருக்கு குழந்தை பிறந்ததாகவும் செய்திகள் முதன்முதலாக 1960களில் தான் வெளிவந்தன.கால்மாக்ஸ் உயிருடன் இருந்தபோது இவ்வாறான செய்திகள் வெளிவரவில்லை.அவர் இறந்தபின்பும் இவ்வாறான செய்திகள் பல வருடங்களாக வரவில்லை.அதன்பின்னு கிட்டத்தட்ட நுhறுவருடங்கள் கழித்தே இந்த செய்திகள் வெளிவந்துள்ளன.இந்த செய்திகள் வெளிவந்த 1960களை உற்று நோக்கினால் அப்போது சர்வதேசத்தில் கம்யுனிச ஆட்சிகளும் கம்யுனிச போராட்டங்களும் உச்ச நிலையில் இருந்த காலம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.இந்தக்கால கட்டங்களில் மாக்சியத்திற்கும் மாக்சிய தலைவர்களுக்கு எதிராக முதலாளித்துவம் பல புனைகதைகளையும் இட்டுக்கதைகளையும் பரப்பி வந்ததை நாம் அறிந்து கொள்ள முடியும்.உதாரணத்திற்கு தோழர் ஸ்டாலின் குறித்து 60களில் எழுதிய இருவர் இங்கிலாந்து உளவு அமைப்பிடம் பணம் பெற்றுக்கொண்டு எழுதிய விபரம் தற்போது ஆதாரத்துடன் வெளிவந்துள்ளது.

    முதலாளித்துவம் வேண்டுமென்றே ஆதாரம் இன்றி அவதூறுகள் பரப்புவது உண்மை என்றாலும் இந்த செய்திகள் குறித்து ஆராய்வதில் எமக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை.நாம் இது குறித்து திறந்த மனதுடன் இருக்கிறோம் என்பதை அழுத்தமாக தெரிவித்துக் கொள்கிறோம்.இந்த செய்திகளை உருவாக்குபவர்களையும் அதனை ஏற்று பரப்பிக் கொண்டிருப்பவர்களையும் அவர்களுடைய நோக்கங்களையும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் பணியை ஓய்வின்றி சோர்வின்றி நாம் எப்போதும் செய்வோம் என உறுதியாக தெரிவித்துக்கொள்கிறோம்.

    கால்மாக்ஸ்க்கு வேலைக்காரியுடன் தொடர்பு மூலம் கென்றி பெடரிக் என்னும் பிள்ளை உள்ளதாக சோபாசக்தி கூறுகிறார்(இது சோபா சக்தி கண்டு பிடித்த செய்தி அல்ல.60 களில் வெளிவந்த செய்தியை சோபாசக்தி தனக்கு துணைக்கு அழைத்துள்ளார்)இவர்கள் இவ்வாறு கூறுவதற்கு என்ன ஆதாரம்?
    டி.என.ஏ சோதனை மூலம் உறுதிப்படுத்தினார்களா?
    இல்லை.
    பிறப்பு அத்தாட்சிப்பத்திரத்தில் தந்தை பெயர் மாக்ஸ் என்று உளளதா? இல்லை.
    கால்மாக்ஸ் எங்கேயாவது கென்றி பெடரிக் தனது மகன் என்று குறிப்பிட்டுள்ளாரா?இல்லை.
    அல்லது கென்றி பெடரிக் தனது தந்தை கால்மாக்ஸ்
    என்று எங்கேயாவது குறிப்பிட்டுள்ளாரா? இல்லை.
    கால்மாக்ஸ் மனைவி ஜென்னி இது பற்றி எங்கேயாவது குறிப்பிட்டுள்ளாரா? இல்லை.
    எங்கெல்ஸ் எங்கேயாவது இது பற்றி குறிப்பிட்டுள்ளாரா? இல்லை.
    கால்மாக்ஸ் எங்கெல்ஸ் மற்றும் மாக்ஸ் மனைவி ஜென்னி போன்றோர் டைரிக்குறிப்புகள் கடிதங்கள் கட்டுரைகள் என்று நிறைய ஆதாரங்களை விட்டுச் சென்றுள்ளார்கள்.அதில் எதிலுமே இந்த விடயங்கள் குறித்து எந்த ஒரு ஆதாரமும் இல்லை.இதனை இந்த அவதூறு பரப்புவோரும் ஒத்துக்கொள்கின்றனர்.

    அப்படியாயின் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இந்த செய்தியை பரப்பிக்கொண்டிருக்கின்றனர்?
    நேரடி சம்பந்தப்பட்டவர்களின் எந்த ஆதாரத்தையும் முன்வைக்க முடியாத இவர்கள் இந்த இவர்களுடன் நேரடியாக சம்பந்தப்படாத மூன்றாம் நபராகிய லூயிஸ் என்பவரின் கடிதத்தை ஆதாரமாக கூறுகின்றனர்.இவரும் இதுபற்றி தன்வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே கூறியிருக்கிறார்.மேலும் இந்த லுயிசின் கடிதம் நம்பிக்கையான ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று ரெரல் காவர் தனது கட்டுரையில் தெரிவிக்கிறார்.(இந்த காவரின் கட்டுரையையே சோபாசக்தி தனது ஆதாரமாக இணைத்துள்ளார்)

    சோபாசக்தி தனது ஆதாரமாக இணைத்துள்ள கட்டுரையில் கட்டுரையாளர் காவர் முடிவுரையாக சொல்வது என்னவெனில் “கென்றி பெடரிக்கின் தந்தை கால்மாக்ஸ் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை.அதுபோல் எங்கெல்ஸ் தந்தையாக இருக்கலாம் என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.மாறாக இங்கு வந்துபோன ஒரு மூன்றாம் நபரே காரணமான இருக்கமுடியும்” என்கிறார்.இவ்வாறு தான் இணைத்த ஆதார கட்டுரையாளரே கூறியுள்ள நிலையில் சோபாசக்தி “கால்மாக்ஸ்தான் கென்றி பெடரிக்கின் தந்தை” என்று கூறுவதுடன் அதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்.அதெப்படி ஆதாரம் இல்லாமல் அவதூறு பொழிவதை ஏற்றுக்கொள்ள முடியும் என்று கேட்டால் நாம் கண்ணை மூடிக்கொண்டு இருப்பதாகவும் இண்டநெட்டில் உண்மையை தேட பஞ்சிப்படுவதாகவும் கூறுகிறார்.இனி தேசம் வாசகர்களே நீங்களே இது பற்றி முடிவு எடுத்துக்கொள்ளுங்கள்.

    Reply
  • Tharman France
    Tharman France

    இந்த சோபாசக்தி தனது புகழுக்கு ஜெயபாலனுக்கு அனுப்பி போடகேட்டுவிட்டும் இப்படி எழுதி தனக்கு பெயர் எடுக்கும் தந்திரத்தை பாருங்கள் இவர்கள் எல்லாம் தாம் மக்களின் தோழர்கள் பீலா விடுவார்கள்

    பாவம் ஜெயபாலன் – ஷோபாசக்தி

    ஜெயபாலனின் படம் பிரசுரிக்கப்பட்டடிருந்தது)

    எனது வலைத்தளத்தில் எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன் மற்றும் ‘தேசம் நெற்’ உட்பட சில இணையத்தளங்களை நான் விமர்சித்துப் ‘பழி நாணுவார்’ என்ற கட்டுரையை வெளியிட்ட உடனேயே சூட்டோடு சூடாக அக்கட்டுரையை ‘தேசம் நெற்’றில் அதன் ஆசிரியர் த. ஜெயபாலன் மறுபிரசுரம் செய்தார். முன்னொருமுறை ‘தேசம் நெற்’றில் என் குறித்து யமுனா எழுதிய கலப்பிடமில்லாத அவதூறுக் கட்டுரையொன்றிற்கு நான் வரிவரியாக விரிவான மறுப்பை எழுதி என் வலைத்தளத்தில் வெளியிட்டுவிட்டு அதைத் தேசத்தில் மறுபிரசுரம் செய்யுமாறு அப்போதைய தேசம் ஆசிரியர் குழுவில் ஒருவரான சேனன் மூலம் ‘தேசம் நெற்’றைக் கேட்டபோது மறுபிரசுரம் செய்ய மறுத்த தேசம்இ இப்போது நான் கேட்காமலேயே எனது கட்டுரையை மறுபிரசுரம் செய்ததால் நான் கொஞ்சம் ஸ்ரெடியானேன்.

    முன்பு யமுனா எழுதிய கட்டுரையிலாகட்டும்இ பின்பு காலத்திற்கு காலம் ‘தேசம் நெற்’ வெளியிட்ட கட்டுரைகளிலாகட்டும்இ அவர்கள் கடந்த ஜனவரி 6ம் தேதி எழுதிய ‘ஷோபாசக்தி கைது’ என்ற செய்திக் குறிப்பிலாகட்டும் பின்னூட்டப் பகுதியில் என்னைக் குறித்தும் என் தோழர்கள் குறித்தும் அவதூறுகளைஇ பொய்களைஇ கட்டுக்கதைகளைத் தேசம் ‘வாசகர்கள்’ எழுதித் தள்ளினார்கள். நான் பொதுவாக இந்தப் பின்னூட்ட விவாதங்களில் அதிகமாக ஆர்வம் காட்டாததாலும் குறிப்பாகத் தேசம் இணையத்தின் பின்னூட்டப் பகுதிக்குள் ஒருபோதும் இறங்காததாலும் தேசம் வாசகர்களும் கட்டுரையாளர்களும் விருப்பம்போல விளையாடிக்கொண்டிருந்தார்கள். இந்த விளையாட்டை ‘பழி நாணுவார்’ என்ற இந்தக் கட்டுரையிலும் அவர்களைக் காட்ட விடுவதில்லை என்ற முடிவோடு அந்தக் கட்டுரைக்கு முதலாவது பின்னூட்டத்தை நானே இவ்வாறு அனுப்பி வைத்தேன்:

    //கட்டுரையை மறுபிரசுரம் செய்ததற்கு நன்றி. அநேகமாக ‘உள்ளுக்க வரவிட்டு அடிக்கப் போறிங்க’ என்று நினைக்கிறேன்…செய்யுங்க! வாழ்த்துகள். //
    தொடர்ந்து ‘தேசம்’ வாசகர்களின் வெவ்வேறு பின்னூட்டங்கள் வெளியாகின. ஒருவர் ஒரு கேள்வி கேட்டால் நான் மூன்று பதில்கள் சொன்னேன். எது குறித்து எவர் வந்தாலும் பதில் சொல்லி விவாதிப்பது என்ற முடிவோடு இருந்தேன். ஒன்றிரண்டு ‘விசர்’ விமர்சனங்கள் வந்தபோதும் அவற்றுக்குக் கூட எள்ளலான பதில்களைச் சொல்லிக் கடந்தேன். நான் ஒரு வேட்டை நாய்போல தேசம் பின்னூட்டப் பகுதிக்குள்ளேயே சுற்றிக்கொண்டு நின்றேன். இம்முறை பூரான்இபூச்சி போன்ற தேசத்தின் ஆஸ்தான பின்னூட்ட மன்னர்கள் அந்தப் பக்கமே வரவில்லை. பல்லி ஒருமுறை எட்டிப்பார்த்தாலும் ‘அறப் படிச்ச’ வேலை காட்டாமல் சைலண்டாய் வந்து போனது. குறிப்பாகஇ வழமையாகத் தேசத்தின் பின்னூட்ட விமர்சனங்களில் துள்ளி விளையாடும் யமுனா ராஜேந்திரன் இம்முறை துக்கம் விசாரிக்கக் கூட அந்தப் பக்கம் வரவில்லை. நேற்று மாலைவரை எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. நான் மாலையில் இந்தப் பின்னூட்டத்தைத் தேசத்திற்கு அனுப்பி வைத்தேன்:
    //ஷோபாசக்தி ழn ஆயசஉh 6இ 2010 3:20 pஅ லுழரச உழஅஅநவெ ளை யறயவைபைெ அழனநசயவழைn.

    தேசம் இணையத் தோழர்களே! உங்கள் தணிக்கை விதிகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. ‘எம்சிறீக்கு’ எழுதிய பதிலில் ‘மாத்தி யோசிங்க தலைவா’ என அன்பாக எழுதியிருந்தேன். ‘தலைவா’ என்பது உங்களிற்குத் தணிக்கைக்கு உரிய வார்த்தையாகத் தெரிந்திருக்கிறது.’தலைவா’ என்ற சொல்லை எடுத்துவிட்டு அந்த இடத்தில் ‘எம்சிறீ ‘ என்று நிரப்பியுள்ளீர்கள். பாராட்டுகள்! ஊடகம் உங்களுடையது. தணிக்கையும் உங்களது உரிமை.
    ஆனால் ஒரு எளிய கேள்வி.. நீங்கள் ஜனவரி மாதம் 6ம் தேதி வெளியட்ட என் கைது குறித்த செய்தியில் வெளியாகி இப்போதுவரை உங்கள் தளத்திலிருக்கும் பின்னூட்டங்ளை ஒருமுறை படித்துப் பாருங்கள். ‘அவர் இவரின் கள்ளக் காதலர்’ என்றும் ஏக வசனத்தில் ‘அவள் – இவள்’ என்றும் பின்னூட்டங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. ‘தலைவா’ என்ற தோழமையான விளிப்பே தணிக்கைக்குரியதெனில் ‘கள்ளக் காதலன்’இ ‘அவள் – இவள்’ போன்ற வசைகளை நீங்கள் எப்படி அனுமதித்திருக்கிறீர்கள்? தயவு செய்து விளக்கம் தேவை தலைவா! //

    எனது இந்தப் பின்னூட்டத்தை ‘தேசம்’ பிரசுரிக்கவில்லை. இந்தப் பின்னூட்டத்தைப் பிரசுரிப்பதில் அவர்களிற்கு என்ன பிரச்சினை? இத்தகைய இருட்டடிப்புகளைச் செய்துகொண்டிருக்கும் இவர்களது இணையத்தளத்தில் போய் நான் எதை விவாதிப்பது? ஆனால் நான் குறிப்பிட்ட அந்த பிரச்சினைக்குரிய வார்த்தைகளை எனது பின்னூட்டம் அனுப்பப்பட்டவுடனேயே நைஸாக இணையத்தளத்திலிருந்து நீக்கி விட்டார்கள்.

    நீக்கினால் முடிந்ததா பிரச்சினை? இரண்டு மாதங்கள் இந்தப் பின்னூட்டங்கள் உங்களது இணையத்தில் நாறிக்கொண்டிருந்தனவே. இதில் ஒரு பின்னூட்டம் இன்னொரு இணையத்தில் மறுபிரசுரம் செய்யப்பட்டு அது இப்போதும் அங்கே சவமாகக் கிடக்கிறதேஇ அதற்கு நீங்கள் பொறுப்பாளியில்லையா? நான் உங்களிற்கு அனுப்பியிருந்த கேள்விக்குப் பகிரங்கமாக விளக்கத்தைத் தருவது உங்கள் கடமையல்லவா! அதை விட்டுவிட்டு என் கேள்வியையே இருட்டிப்புச் செய்த உங்கள் செயல் எந்த ஊடக அறத்தில் சேர்த்தி? நீங்கள் தவறிழைத்தீர்கள் எனும் பட்சத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் பகிரங்கமாக வருத்தம் தெரிவிப்பது கட்டயாமல்லவா! பழம் பெரும் ஊடகக்காரரும் லண்டனில் நான்கு ஊடகங்களைக் கையில் வைத்திருப்பவருமான உங்களிற்கு இதையெல்லாம் நானா சொல்லித்தர வேண்டும். வருத்தமாயிருக்கிறது.

    ஆகஇ ‘தேசம் நெற்’றில் தொடர்ந்து அவதூறுக்கு உள்ளாகிவரும் எனக்குத் ‘தேசம்நெற்’றின் பின்னூட்டப் பகுதியில் ஒரு எளிய கேள்வியைக் கூட எழுப்ப அனுமதியில்லாதிருக்கும்போது ‘தேசம் நெற்’றுக்கு நான் பின்னூட்டங்களையும் மறுப்புகளையும் விமர்சனங்களையும் எழுதியனுப்பி என்ன பயன்! அவதூறுப் பின்னூட்ட மன்னர்களே! இப்போது மகிழ்ச்சிதானே.. ஆளில்லாத கிரவுண்டில் அடிச்சு ஆடுங்க ராசா!

    நண்பா ஜெயபாலன்! தவறிழைப்பது இயல்புதான். நீங்கள் தவறிழைக்கிறீர்கள் எனச் சில காலத்திற்கு முன்பு நாங்கள் எழுபத்துச் சொச்சப் பேர்கள் சேர்ந்து ‘தேசத்தின் அவதூறு அரசியல்’ என்று கையெழுத்து இயக்கம் நடத்தியது வீண் வேலையென நீங்கள் அப்போது சொன்னீர்கள். அது உண்மையிலேயே வீணான வேலையென்று நான் இப்போது உணர்கிறேன். கடுகளவேனும் பலன் தராத வேலையெல்லாம் வீண்வேலைதானே.

    உங்கள் தவறுகள் மீதான விமர்சனங்களை நேர்மையாக எதிர்கொள்வதை விடுத்து விமர்சனங்களை இருட்டடிப்புச் செய்தும் நைஸாகப் பதிவுகளை அழித்துவிட்டும் குற்றவுணர்வேயின்றிப் பம்மிக்கிடக்கும் உங்களை அயோக்கியன் என்றோ ஊடக வியாபாரி என்றோ சொல்லித் திட்டி உங்களை என் எதிரியாக்குவதை என்னால் செய்ய முடியாது. ஏனெனில் எதிரியென்றால் கொஞ்சமாவது ‘தண்டுசமத்தாய்’ இருக்க வேண்டும்.

    பாவம் ஜெயபாலன் நீங்கள்!

    Reply
  • Eelamaran
    Eelamaran

    கார்ள்ஸ் மாக்ஸ் ஒன்றும் கடவுள் கிடையாது. கந்தனில் இருந்து பிரேமானந்தா வரைக்கும் இது ஒன்றும் பெரிய ரகசியம் கிடையாது. பாலன் சொல்வதைப் பார்த்தால் நாம் படிக்கிற கார்ஸ்மாக்சின் பெரும்பாலான புத்தகங்களை எந்த மொழியில் படிக்கிறோம். அவருக்கு தகாத தொடர்பு இருந்ததா இல்லையா என்பதை அவர் வீட்டு இறையில் மெழுகு வர்த்தி பிடித்தவன் மாதிரி பாலன் எதிர்ப்பது எந்த ஆதாரத்தைக் கொண்டு. மாக்சியத்தை ஏற்பவன் மாக்சின் எல்லாத் திரரு தத்தங்களையும் ஏற்க வேண்டும் என்பதில் என்ன நியாயம். தென்னாலிராமன் குதிரை வித்த கதையாக அல்லவா இருக்கிறது.

    குழந்தை யாருக்குப் பிறந்நதது எனபதை சோபாசக்தி தான் படித்தவற்றிலிருந்து கூறுகிறார். நாம் கூறும் அத்தனைக்கும் வீடியோ எவிடன்ஸ் கேட்கும் பாலன் மாக்ஸ்சே வந்து சொன்னாலும் விடமாட்டீங்க போல.

    வேலைக்காரிக்கும் மாக்ஸ’சும் தொடர்பு இருந்துதா இல்லை எங்கல்ஸ் விளையாட்டைக் காட்டினாரா என்பது யாருக்கும் தெரியாது. வரலாற்றில் எழுதப் படும் சிலவற்றை ஏற்கிறோம். அதுபோலவே இதுவும். சோபா சக்தி ஏதோ எனக்குப் பிற்நத பிள்ளைக்கு அப்பன் மாக்ஸ்தான் என்று வம்புக்கிழுத்தமாதிரி ஏன் பாலன் அடம்பிடிக்கிறீர்.

    Reply
  • palli
    palli

    /. இம்முறை பூரானிபூச்சி போன்ற தேசத்தின் ஆஸ்தான பின்னூட்ட மன்னர்கள் அந்தப் பக்கமே வரவில்லை. பல்லி ஒருமுறை எட்டிப்பார்த்தாலும் ‘அறப் படிச்ச’ வேலை காட்டாமல் சைலண்டாய் வந்து போனது.//
    உங்கள் நினைப்பை ஏமாற்ற மாட்டேன்; இது உள்ளே விட்டு அடிக்கும் சமாசாரம் என்பதால் சிறிது காலம் தாள்த்தி உங்கள் களத்தில் வரலாம் என இருக்கிறேன்; நீங்களோ தெருவில் (தேசத்தில்) போகும் பூரானிபூச்சியை பிடித்து ;;;;;;;; குத்தாட்டம் போட ஆசைபடுறியள். ஆனாலும் இந்த கட்டுரையில் சில தேவைகள் சிலரை அறிமுகம் செய்யந் தேவைபடுவதால் பல்லி அறபடியாத எழுத்தை தொடங்கவில்லை ஆனா இருக்கு அதுமட்டும் நிஜம்;

    //எழுபத்துச் சொச்சப் பேர்கள் //
    சொச்சப் பேர்கள் என்பதன் அர்த்தம் அறியலாமோ?

    //உங்களை என் எதிரியாக்குவதை என்னால் செய்ய முடியாது. ஏனெனில் எதிரியென்றால் கொஞ்சமாவது ‘தண்டுசமத்தாய்’ இருக்க வேண்டும்.// அறுப்பது ஒட்டுவதை தானே சொல்லுறியள்.

    //அவதூறுப் பின்னூட்ட மன்னர்களே! இப்போது மகிழ்ச்சிதானே.. ஆளில்லாத கிரவுண்டில் அடிச்சு ஆடுங்க ராசா!
    கிரவுண்டில் ஆடுவது தப்பில்லை; ஆனால் இருட்டில் அதுவும்;; ஆட நினைத்தன் விளைவுகள் எத்தனை?? எமக்கும் வார்த்தை விளையாட்டு வரும்:

    தூங்கி இருக்கும் பல்லியை ….. தட்டி எழுப்பி சில்லறை கேக்கபடாது; அதன் விளைவு மீண்டும் தேசத்தில் அவதூறு என வீடு வீடாய் கைநாட்டு பிச்சை கேக்க நேரிடும்; இது தேவையா? சரி….. தேசத்தை சுத்தவும்; சைவம் (கருத்து) இங்கே கிடைக்கும்; அசைவம் (வன்முறை) இங்கே கிடைக்காது எப்படி வசதி; தொடரும் பல்லி

    Reply
  • Jeyarajah
    Jeyarajah

    இங்கு யாரும் பம்மவில்லை. எங்களுடைய பிரச்சனை மாக்ஸ்க்கு பிள்ளை பிறந்ததா இல்லையா என்பதல்ல. அங்கு இருக்கும் எம் பிள்ளைகளுக்கு பால் இல்லாமல் அழக்கூடாது என்பதுதான். தனிநபர்கள் முட்டி மோதிக்கொள்வதில் எங்கள் மூக்கை நாங்கள் நுழைக்க விரும்பவில்லை. எங்களுக்கு வலிதான் தெரியும் இந்த வரிகள் தெரியாது.

    சேற்று நிலத்தில் கால் நிறைய புண்களுடன் 3 மணிநேரம் மீன்கடிக்க நின்ற வேதனை உங்களுக்குத் தெரியாது. அது யமுனாவாக இருக்கட்டும் சோபாசக்தியாக இருக்கட்டும் தர்மனாக இருக்கட்டும்.

    செல்வநாயகம் கோஷ்டிகள் ஆரம்பித்தபோது சரியான இடதுசாரிகளை இனங்காணாமல் விட்டது தப்பு. பின்பு உமா மகேஸ்வரன் பத்மநாபா இவர்களையும் தவறவிட்டது தப்பு. இப்ப தூஷணக் கோஷ்டிகள் தத்துவம் எழுதுகிறார்கள் இதிலும் பார்க்க அங்கிருக்கும் அந்த மக்களுக்கு என்ன செய்ய வேணுமோ அதைச் செய்ய முயற்சிக்கலாமே

    நந்தா எழுதிய கருத்துக்களுக்கு ஏன் இவ்வளவு காலமும் மொனம் சாதித்தீர்கள்

    Reply
  • tholar balan
    tholar balan

    ஈழமாறன் தங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்.

    /கார்ள்ஸ் மாக்ஸ் ஒன்றும் கடவுள் கிடையாது/
    கால்மாக்ஸ் கடவுள் என்று நான் எங்கும் கூறவில்லை.ஆனால் அவர் கடவுள் அல்ல என்பதற்காக அவர் மீது அவதூறு பொழியலாம் என்று அர்த்தம் அல்ல.

    /கந்தனில் இருந்து பிரேமானந்தா வரைக்கும் இது ஒன்றும் பெரிய ரகசியம் கிடையாது/
    கந்தனும் பிரேமானந்தாவும் மாக்சியம் படைக்கவில்லை. மாக்ஸ்தான் மாக்சியம் தந்தார். எனவே அவர் கந்தனுக்கும் பிரேமானந்தாவுக்கும் மேலானவர் என்னைப் பொறுத்தவரையில்.

    /பாலன் சொல்வதைப் பார்த்தால் நாம் படிக்கிற கார்ஸ்மாக்சின் பெரும்பாலான புத்தகங்களை எந்த மொழியில் படிக்கிறோம்./
    எந்த மொழியில் படிக்கிறோம் என்பதல்ல முக்கியம். புரியும்படி படிக்கிறோமா என்பதே முக்கியம்.

    /அவருக்கு தகாத தொடர்பு இருந்ததா இல்லையா என்பதை அவர் வீட்டு இறையில் மெழுகு வர்த்தி பிடித்தவன் மாதிரி பாலன் எதிர்ப்பது எந்த ஆதாரத்தைக் கொண்டு./
    கால்மாக்ஸ் வேலைக்காரியுடன் தகாத உறவு வைத்திருந்தார் என்று சோபாசக்திதான் எழுதியிருந்தார். எனவே உண்மையில் நான்தான் “நீர் விளக்கு பிடித்து பார்த்தனீரோ என்று கேட்டிருக்கவேண்டும். ஆனால் நான் நாகரீகம் கருதி அவ்வாறு கெட்பதை தவிர்த்தேன்.ஆனால் நீங்கள் தற்பொது அதை என்னிடம் கேட்கிறீர்கள்.எனினும் நான் இவ் வரிகளை எழுதுவதையும் இவ்வாறான வரிகளுக்கு பதில் எழுதுவதையும் தவிர்க்கவே விரும்புகிறேன்.

    /மாக்சியத்தை ஏற்பவன் மாக்சின் எல்லாத் திரரு தத்தங்களையும் ஏற்க வேண்டும் என்பதில் என்ன நியாயம்./
    உண்மைதான். ஆனால் மாக்ஸ்ற்கு பெருமை என்னவெனில் அவர் மாபெரும் மாக்சிய தத்துவத்தை தந்தது மட்டுமல்ல அந்த தத்துவத்திற்காக உண்மையாக இறுதிவரை வாழ்ந்தார் என்பதே. எனவே அவர் தனது தத்துவத்திற்கு மாறான திருகுதத்தங்களை செய்ததாக நீங்கள் அறிந்திருந்தால் அதனை தாராளமாக இங்கு முன்வையுங்கள்.

    /தென்னாலிராமன் குதிரை வித்த கதையாக அல்லவா இருக்கிறது./ இநதக் கதை மட்டுமல்ல இன்னும் நிறைய கதை எனக்கும் தெரியும். ஆனால் அவை இங்கு நாம் விவாதிக்கும் விடயத்திற்கு தேவையில்லை என்று கருதுகிறேன்.

    /குழந்தை யாருக்குப் பிறந்நதது எனபதை சோபாசக்தி தான் படித்தவற்றிலிருந்து கூறுகிறார்./
    அதைத்தான் நானும் அவரிடம் கேட்கிறேன். அவர் தன்னிடம் இருக்கும் ஆதாரத்தை முன்வைக்கட்டும்.

    /நாம் கூறும் அத்தனைக்கும் வீடியோ எவிடன்ஸ் கேட்கும் பாலன் மாக்ஸ்சே வந்து சொன்னாலும் விடமாட்டீங்க போல./
    நான் வீடியோ எவிடன்ஸ் கேட்கவில்லை. நீங்கள் என் கோரிக்கையை தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள் போலும்.

    /வேலைக்காரிக்கும் மாக்ஸ’சும் தொடர்பு இருந்துதா இல்லை எங்கல்ஸ் விளையாட்டைக் காட்டினாரா என்பது யாருக்கும் தெரியாது/
    இதைத்தான் நானும் கூறுகிறேன். என் கருத்துக்கு ஆதரவாக எழுதியமைக்கு நன்றிகள். ஆனால் மாக்ஸ்தான் பிள்ளைக்கு தந்தை என்று சோபா சக்தி உறுதியாக கூறுகிறார். அதனால்தான் நான் அதற்குரிய ஆதாரத்தை கேட்டேன்.

    /சோபா சக்தி ஏதோ எனக்குப் பிற்நத பிள்ளைக்கு அப்பன் மாக்ஸ்தான் என்று வம்புக்கிழுத்தமாதிரி ஏன் பாலன் அடம்பிடிக்கிறீர்./
    சோபாசக்தியே எனக்கு பதில் தருவதில் தனக்கு எந்த சங்கடமும் இல்லை என்று தெரிவித்திருக்கும்போது நீங்கள் எதற்காக நான் அடம் பிடிப்பதாக எழுதுகிறீர்கள் என்று புரியவில்லை.

    ஈழமாறன் அவர்களே உங்கள் பின்னுட்டத்தை படிக்கும்போது மாக்ஸ்தான் வேலைக்காரிக்கு பிறந்த குழந்தையின் தந்தை என்ற விடயம் பற்றி மட்டுமல்லாது மாக்ஸ் திருகுதாளங்கள் பற்றிய விபரங்களும் தங்களிடம் இருப்பதாக தெரிகிறது. அவற்றை நீங்கள் ஏன் இங்கு முன்வைக்கக்கூடாது?

    Reply
  • Roman
    Roman

    அம்பல வீரன் ஈழமாறன்
    முதலில் டாக்குத்தர் மூர்த்தியின் கணக்கு வழக்குகளை பாருங்கள். தேவை என்றால் அதாவது இருட்டு என்றால் ஒரு விளக்கையும் கொண்டு போங்கோ கணக்கு வழக்கு வடிவாய் தெரியும்.

    பின்னர் நீங்கள் மார்க்ஸ் தொடர்பாக ஒரு DNA பரிசோதனை செய்ய முயற்சி செய்யுங்கள். எல்லாம் அம்பலமாகும்.

    Reply
  • tholar balan
    tholar balan

    ஜெயராசா அவர்களுக்கு: தங்களின் பின்னூட்டத்தில் எனது பெயர் குறிப்பிடவில்லையாயினும் தாங்கள் தெரிவித்த கருத்து தொடர்பாக நான் சில அபிப்பிராயங்களை கூற விரும்புகிறேன்.
    /எங்களுடைய பிரச்சனை மாக்ஸ்க்கு பிள்ளை பிறந்ததா இல்லையா என்பதல்ல. அங்கு இருக்கும் எம் பிள்ளைகளுக்கு பால் இல்லாமல் அழக்கூடாது என்பதுதான்./
    /சேற்று நிலத்தில் கால் நிறைய புண்களுடன் 3 மணிநேரம் மீன்கடிக்க நின்ற வேதனை உங்களுக்குத் தெரியாது./

    உங்களுடைய இந்த உணர்வுகளை நான் மதிக்கிறேன்.
    கஸ்டப்படும் ஏழை மக்கள் பற்றியும் அவர்களுடைய விடுதலை பற்றியும் விஞ்ஞான பூர்வமாக எமக்கு போதிக்கும் ஒரே தத்துவம் மாக்சியம் மட்டுமே.அதனால்தான் தங்கள் அழிவை போதிக்கும் மாக்சியத்தை இல்லாதொழிக்க முதலாளித்துவம் பல வருடங்களாக இரவு பகலாக முயற்சிசெய்து வருகிறது.மாக்சியம் விஞ்ஞான பூர்வமாக நிறுவப்பட்ட தத்துவமாக இருப்பதால் அதனை நேரிடையாக எதிர்கொள்ள முடியாமல் மறைமுகமாக அழிக்க முனைகிறார்கள்.அதன் ஒரு அங்கமே தாமும் மாக்சியவாதிகள் என்று கூறிக்கொண்டு மாக்சிய ஆசான்களின் மீது ஆதாரமில்லாத அவதூறுகளை அள்ளி வீசும் திரிபுவாதமாகும்.இவர்கள் மாக்சிய ஆசான்களின் மீது அவதூறு பொழிந்து அவர்களை தவறானவர்களாக காட்டி அதன்மூலம் இந்த தவறானவர்களால் முன்வைக்கப்பட்டதே மாக்சியம் என்று நிறுவ முனைகின்றனர்.அதன் மூலம் மாக்சிய தத்துவத்தையும் மாக்சிய பேராட்டத்தையும் ஒழித்துவிட கனவு காண்கின்றனர்.

    எனவே ஏழை மக்களுக்காக அவர்களின் விடுதலைக்காக நாம் விரும்புவது உண்மை என்றால் அந்த ஏழை மக்களின் நலனுக்காக முன்வைக்கப்பட்ட மாக்சியம் அவசியமாகிறது.மாக்சியம் அவசியம் என்பதை நாம் ஏற்றுக்கொண்டால் அந்த மாக்சியத்தை அழிக்கும் வண்ணம் மாக்சிய ஆசாசான்கள் மீது பொழியப்படும் அவதூறுகளை துடைத்தெறிவது கடமையாகிறது.அந்த அடிப்படையிலே அதாவது உங்களின் உணர்வின் அடிப்படையிலே நான் மாக்ஸ் மீது சோபாசக்தியால் முன்வைக்கப்பட்ட அவதூறுக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்து வருகிறேன்.

    எனவே இனியும் இதுபோன்ற கருத்துக்களை முன்வைப்பதன் மூலம் அது சோபாசக்தி போன்றவர்களின் நோக்கங்களுக்கே மறைமுகமாக ஆதரவாக அமைந்து வடும் என்பதை உணர்ந்து இனி அதற்கு இடங்கொடுக்காது என்னுடன் சேர்ந்து மாக்சிய ஆசான்கள் மீது ஆதாரம் இல்லாமல் செய்யும் அவதூறுகளை எதிர்த்து ஏழை மக்களின் விடுதலைக்கு தொடர்ந்தும் பாடுபட உதவுமாறு தங்களை அன்புடனும் தயவுடனும் கேட்டுக்கொள்கிறேன்.

    Reply
  • palli
    palli

    தூங்கி விட்டாரா? பல மணிநேரமாய் சத்தத்தை கானோம்; சத்தமிட்டால் இப்படி நண்டு பூரான் எல்லாம் ஊரதான் செய்யும் ,

    Reply
  • tholar balan
    tholar balan

    ரோமன்! உங்கள் கோபம் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இங்கு நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில் எங்களை இவர்கள் நக்கல் நையாண்டி பண்ணுகிறார்கள் என்பதல்ல. மாறாக இவர்கள் ஆதாரம் இன்றி மாக்சிய ஆசான்கள் மீது அவதூறு பொழிகிறார்கள் என்பதை வாசகர்கள் மத்தியில் நிருபித்துக் காட்டுவதே. நாம் விவாதத்திற்கு சம்பந்தமில்லாத விடயங்களை சுட்டிக்காட்டினால் அவர்கள் அதையே சாக்காக வைத்து விவாதத்தை திசைதிருப்பி விடக்கூடிய அபாயம் உள்ளது. (மேலும் ஈழமாறன் தனது வழக்கமான பாணியில் நகைச்சுவையாக கருத்து தெரிவித்துள்ளார்.அதனை நான் அவருடைய மற்ற எழுத்துக்கள் போன்று ரசித்துள்ளேனேயொழிய கோபப்படவில்லை).

    தோழர் சண்முகதாசன் தனது “கால்மாக்சின் வாழ்வும் போதனைகளும்” என்னும் நுhலில் (பக்-5) கெலன் டெமூத் பற்றி பின்வருமாறு எழுதுகிறார்.
    “மாக்சின் வாழ்வில் முக்கியமானதொரு பங்கு வகித்த இன்னொருவர் லென்சென் என பிரியமாக அழைக்கப்பட்ட கெலன் டெமூத் ஆவார். திருமதி ஜென்னி மாக்ஸ்ற்கு எட்டு அல்லது ஒன்பது வயதிருக்கும் போது அவருக்கு பணியாற்ற வந்த லென்சன் அதன்பின் அவரை எல்லா இடத்தும் தொடர்ந்து சென்றார். திருமதி மாக்ஸ் வீட்டின் எஜமானி என்றால் லென்சென் வீட்டின் சர்வாதிகாரி என்பார்கள். மார்க்ஸ் இன் சாவிற்கு பின்னர் அவர் தனது சாவு வரை எங்கெல்ஸ்சைக் கவனித்துக் கொண்டார். அவரது சடலம் மாக்ஸினதும் அவரது மனைவினதிற்கும் அருகாகப் புதைக்கப்பட்டுள்ளது. அவருடைய மரணச்சடங்கின்போது எங்கெல்ஸ் கூறியதாவது “சிரமமானதும் சிக்கலானதுமான கட்சி விவகாரங்கள் பற்றி அவரது ஆலோசனையை மாக்ஸ் கேட்பார். என்னைப் பொறுத்தவரையில் மாக்ஸின் சாவிற்கு பின்னர் நான் செய்ய இயலுமாயிருந்த வேலைகட்கு எல்லாம் மாக்ஸின் சாவின் பின்பு என் வீட்டில் வசிக்க வந்து என்னைக் கெளரவித்து தனது இருப்பால் என் வீட்டிற்குச் சூரிய ஒளியும் ஆரோக்கியமும் கொண்டுவந்த அவருக்கு கடமைப்பட்டிருக்கிறேன்.”

    தோழர் சண்முகதாசன் இவ்வாறு ஏழுதிய இந்த நுhலை லண்டனில் “தேசம்” சார்பாக முன்னின்று வெளியிட்டவன் நான். இதனை இங்கு நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் சோபாசக்தி தனது பின்னூட்டத்தில் “தோழர் பாலன் ! கெலன் டெமூத் பற்றி இதுவரை நீங்கள் அறியாதவராக இருந்தால்….”என்று குறிப்பிட்டிருக்கிறார். அப்படியாயின் தோழன் சண்முகதாசன் நுhலில் என்ன எழுதியிருக்கிறார் என்பதை வாசிக்காமலே நான் புத்தகத்தை வெளியிட்டிருப்பேனா? எனது வாசிப்பு பற்றிய சோபா சக்தியின் இந்த மதிப்பீடு குறித்து நான் எதுவும் அவருக்கான பதிலில் குறிப்பிடாமைக்கு காரணம் எனது முழு நோக்கமும் அவர் ஆதாரம் இன்றி கால்மாகஸ் மீது அவதூறு பொழிகிறார் என்பதை நிருபிப்பதே. எனவே தயவு செய்து விவாதம் திசை திரும்பிச் செல்ல இடம் அளிக்கா வண்ணம் நாம் எமது கருத்துக்களை தொடர்ந்து முன்வைப்போம்.

    Reply
  • nilavu
    nilavu

    எதிரணியை எதிர்கொள்ள முடியாவிடின் ‘வெற்றிகரமாக பின்வாங்கினோம்’ ‘தருணம் பார்த்து முறியடிப்போம்’ என்பதெல்லாம் நாம் கேட்டுச் சலித்ததொன்றே.

    Reply
  • paarthi
    paarthi

    இந்த நீண்ட உரையாடலை க்வனித்தே வருகிறேன்.

    இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடந்ததை திருடி ஓடமுயன்றவரை அடித்ததாகவும் அதனை நியாப்படுத்த இல்லை என்றும் பஞ்சாயத்து செய்யும் சோபா பிரபாகரனின் தவறாக முன்வைக்கும் விசயங்களிலிருந்து பல விசயங்களை புலிகள் கடந்துவந்ததை எங்காவது ஒரு இடத்தில் ஒத்துக்கொண்டிருக்கிறாரா.. இவரது பிரச்சினையை பற்றி கூட குறைத்து தினத்தந்தி எழுதுவதை டீக்கடையில் பேசிக்கொண்டதை செய்தியாக போடுவதாக சொல்லி ஆற்றாமை கொள்ளும் ஷோபா என்றேனும் புலிகள் மீது இவர் வைக்கும் குற்றச்சாட்டின் தன்மையை சூழலுக்கேற்ப மாற்றிக்கொண்டுள்ளாரா என்ன?

    சரி விடும். புலிகளிடமிருந்து பணம் வாங்கி புலி ஆதரவு எழுத்தை எழுதுகிறார்கள் என உரைக்கும் சோபா புலிகளின் வீழ்ச்சிக்கு பிறகாவது அங்கு முகாமில் வதைப்படும் மக்கள் குறித்து என்ன எழுதியிருக்கிறார்.?

    பத்திரிக்கைகளின் பரபரப்புக்கு ஏவலாய் செய்திகொடுக்கும் வேலையை தாண்டி எந்த புரட்சியையும் சோபா செய்து கிழிக்கவில்லை.

    பிலிம் திருடிவனை பொறுத்துக்கொள்ள முடியாமல் அடித்தாராம் அதை புரிந்துக்கொள்ளாமல் ஊடகங்களும் விமர்சகளும் அவசரப்பட்டு விட்டனராம்.. அங்கே ஈழத்தில் போராட்டக்களத்தில் நிகழ்வும் நடவடிக்கைகளை இவர் கையில் மதுவோடு போட்டோவுக்கு போஸ் கொடுத்துக்கொண்டே எழுதுவாராம்..

    போதும்.. உம்மை தமிழக் சிந்தனைவாதிளும் . இலக்கியவாதிகளும் புறம்தள்ளியாயிற்று..
    வெற்றுக்கூச்சலை விட்டு ..போய் ஏதாவது மாகானத்து பிரதிநிதி பதவியை எப்படி வாங்குவது என முயற்சித்து உமது வழியில் முன்னேற்றம் அடையுங்கள். உடனடியாக செய்தால் தெரிந்துவிடுமே.. உமது முகம் வெளுத்துவிடுமே என்றெல்லாம் யோசிக்காதீர்.. அதை எல்லாம் இம்மக்கள் உணர்ந்து வெகுநாளாச்சு ..
    ஆதிகாலத்தில படிச்ச பெரியார் மார்க்ஸ் கொட்டேசனை வைச்சு கட்டுரை எழுதி காலத்தை கழிக்காமல் அடுத்த படத்தை ஸ்கிரிப்ட் எழுதுங்கள் எக்ஸ் வொய் இசட் காம் “ரேட்”

    அன்பு.

    பார்த்தீபன்.

    Reply
  • msri
    msri

    தோழர் பாலன்;!
    சண்ணின் இப்புத்தகம் (“கார்ல் மார்க்சின் வாழ்வும் போதனைகளும்) என்னிடம் இருந்து ஓர் நண்பருக்கு சென்று இன்றுதான் என்கைக்கு வந்தது! நானும் இவ்விடயததை இப்புத்தகத்தில் ஏற்கனவே படித்தேன்! புத்தகம் கைவசம் இல்லாததால் பின்னூட்டம் எழுதமுடியாமல் போய்விட்டது! நீங்கள் இதை உரிய நேரத்தில் செயதுள்ளீர்கள்! மிக்க நன்றி! இது நிற்க இவ்விடயம் > அதன் ஊடான விவாதங்களின் மூலம் நாம் பலவற்றை பட்டறிந்துள்ளோம்! தொடர்ந்து நாம கற்றது கைமண்ணளவு கல்லாதது என்னும் எவ்வளவோ உள்ளது என்ற நிலைநோக்கி சகலதையும கற்போம்!

    Reply
  • palli
    palli

    பல்லியை வம்புக்கு இழுத்த சோபா எங்கே; பல்லி இது மேலிடத்து சமாசாரம் (ஜெயராஜ்) சொன்னது போல் நமக்கு இங்கு வேலை இல்லை என
    இருந்தால் சோபா வந்து மல்லுக் கட்டுகிறார்; சரி வாருங்கள் பார்க்கலாம் என சொன்னால் ஓடத்தான் அப்படி செய்தேன் என்பது போல் சோபா மாறிவிட்டார்;

    Reply
  • mathan
    mathan

    யமுனா சோபா போன்றவர்கள் எழுத்துப் புலிகள். நிஜத்திற்கு எதிரானவர்கள். கம்யூனிசத்தை கரைத்துக் குடித்துள்ள யமுனா எத்தனை போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளார்? சோபா சக்தி நிஜத்துக்கு வாருங்கள்.

    Reply
  • NANTHA
    NANTHA

    “தமிழ் ஈழ காச்சல்” தொடங்கிய போது உழைப்பை பற்றி எதுவும் தெரியாத அல்லது உழைப்பின் பெறுமதி அறியாத தமிழ் வாலிபர்கள் “உழைப்பின்” தத்துவங்கள் எழுதிய மார்க்சின் நூல்களை பற்றி நன்கறிந்த சில “பழைய” மார்க்சிஸ்டுகளோடு தொடர்பு கொண்டு சில “வார்த்தைகளை” உச்சாடனம் செய்யத் தொடங்கினார்கள்.

    மார்க்சிசத்தை பற்றி தெரிய முதலே “உட்கட்சி போராட்டம்’ என்று தங்களுக்கு போட்டியானவர்களைப் போட்டுத்தள்ளும் அளவுக்கு போனார்கள்.

    இந்த மார்க்சின் ‘காதல் கதை” இயக்கங்களில் இருந்த சில ஆண்களுக்கு பெண்களோடு சல்லாபம் செய்வதை நியாயப்படுத்த உதவியது. இந்த ஆண்கள் உழைக்காமலே சாப்பிடும் வித்தையை கண்டறிந்தவர்கள். இவர்கள்தான் “பெண் விடுதலை” என்றும் கதைப்பார்கள்.

    பிரச்சனைகளைக் கண்டு அறிய முன்னரே மக்களின் ” வாய்களை’ மூடவும் சில மேதாவித்தனம் செய்யவும் சமத்துவம், மார்க்ஸ், மார்க்சின் வைப்பாட்டி என்று பல கதைகளை தங்களின் ” வயதுக் கோளாறுக்கு” தீனி போட எடுத்துக் கொண்டார்கள். மார்க்சின் “மூலதனம்” படிக்காமலே மூலதனம் தேடிக்கொண்ட இயக்க மேதாவிகள் பலர் இப்போதும் உள்ளனர்.

    சில இயக்க மார்க்சிஸ்டுகள் “எங்கெல்ஸ்” ஒரு பணக்காரர் என்று கூறி நம்ம ஊர் வட்டி வாசிகளுக்கும் பல வழிகளில் சப்போர்ட் கொடுத்தவர்களும் உண்டு.

    உழைப்பவர்களின் பிரச்சனைகளை தீர்க்க “மார்க்சின்” தத்துவங்கள் எப்போதும் அவசியமே ஆகும். ஏனென்றால் ஒரு மனிதனின் உழைப்பின் அளவை அல்லது உழைப்பின் பெறுமதியை கண்டு பிடிக்க எதுவித “மானியும்” (மீட்டர்) இதுவரை எந்த விஞ்ஞானியாலும் கண்டு பிடிக்கப்படவில்லை.

    Reply
  • புறா இல்ல சுறா
    புறா இல்ல சுறா

    தேசம் நெட்டின் கோழைத்தனம்! »March 9th, 2010 ஷோபாசக்தி,

    அன்புள்ள ஹெலன் டெமூத்
    அன்னையே!

    நான் உங்களைப் பற்றி எழுதிய ஒரு குறிப்பால் கடந்த சில நாட்களாக ‘தேசம்’ இணையத்தளத்திலும் நேற்றுமுதல் ‘தமிழ் அரங்கம்’ இணையத்தளத்திலும் நீங்கள் சந்திக்கும் அவமதிப்புகளையிட்டு மனம் பதைபதைத்து இந்தக் கடித்தை உங்களுக்கு எழுதுகிறேன்.

    நான் பத்து வருடங்களிற்கு முன்புதான் முதன்முதலாக உங்களது பெயரை ஷீலா ரௌபாத்தம் எழுதிய ‘அன்புள்ள டாக்டர் மார்க்ஸ்’ என்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பிலிருந்து அறிந்துகொண்டேன். அந்த நூலின் 70வது பக்கத்தில் ஷீலா ரௌபாத்தம் இவ்வாறு உங்களைக் குறித்து எழுதியிருந்தார்:

    “1845ல் மார்க்ஸும் திருமதி மார்க்ஸும் புலம் பெயர்ந்து பிரஸ்லெஸ்ஸில் வாழ்ந்துகொண்டிருந்தபோது ஹெலன் டெமூத் என்ற 25 வயது இளம்பெண் அவர்களிடம் ஒரு பணிப்பெண்ணாகச் சேர்ந்தார். 1851ல் அவர் கார்ல் மார்க்ஸின் மகனைக் கருத்தரித்தார். ஃபிரெட்டி டெமூத் என்றழைக்கப்பட்ட அக்குழந்தை இலண்டனிலுள்ள ஹாக்னி ( Hackney ) என்ற இடத்தில் ஒரு தொழிலாளி வர்க்கத் தம்பதியால் வளர்க்கப்பட்டது.”

    இதைப் படித்ததும் முதலில் நான் பதறிப்போனேன். ஆனால் கண்டிப்பாக அது கலாச்சார அதிர்ச்சி கிடையாது. வருடக்கணக்காகத் தெருவில் நின்று ‘தொழிலாளர் பாதை’யும் ‘மார்க்ஸிய முன்னோக்கு’ம் விற்றுவிட்டு இவ்வளவு காலமாக இதுகுறித்து எதுவும் தெரியாமலிருந்தேனே என்ற சுயபச்சாதாபத்தால் ஏற்பட்ட பதற்றமேயது. என்றாலும் ஒருபுறம், ஷீலா ரௌபாத்தமின் அந்த நூல் ‘எதிர்க் கட்சிகளின் திட்டமிட்ட சதியோ’ என்ற சந்தேகமும் எனக்கு ஏற்பட்டது என்பதையும் அன்னையே நான் வெட்கத்துடன் உங்களிடம் ஒப்புக்கொள்கிறேன்.

    ஷீலா ரௌபாத்தம் யாரென்று தேடி அவர் மூத்த மார்க்ஸியரும் பெண்ணியவாதியும் ஆய்வாளரும் கல்வியாளரும் என்று அறிந்தபின்பு எனக்கு அந்தச் சந்தேகம் சற்று மங்கினாலும் ஒருவேளை இது தமிழ் மொழிபெயர்ப்பாளரின் இடைச்செருகலாக இருக்குமோ என்ற ‘சமுசயம்’ இருக்கத்தான் செய்தது. ஆனால் நூலை மொழிபெயர்த்தவர்கள் தோழர்கள் வ. கீதாவும், எஸ்.வி. ராஜதுரையுமாயிருக்க அவர்களின் மொழிபெயர்ப்பைச் சந்தேகப்பட்டால் நான் மனிதனே இல்லை என்று என் மனச்சாட்சி சொன்னது. ஏனெனில் அவர்கள் இருவரும் மொழிபெயர்ப்புகளில் மற்றும் தங்களது எழுத்துகளில் மார்க்ஸியம் குறித்தும் பெரியாரியம் குறித்தும் இலக்கியம் குறித்தும் எவ்வளவு தீவிரமாகவும் நேர்மையாகவும் உழைப்பவர்கள், அவர்களையா நான் அய்யுறுவது!

    சரி பதிப்பாளர்களிற்கு உள்நோக்கங்கள் ஏதும் இருக்குமோ என்ற கோணத்திலும் கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன். ஷீலா ரௌபாத்தமின் அந்தப் பிரதியை ஆங்கிலத்தில் வெளியிடவர்கள் Socialist Register: Vol 34. (1998). தமிழில் வெளியிட்டதோ ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான நூல்களையும் மார்க்ஸிய நூல்களையும் தொடர்ச்சியாக வெளியிட்டுவரும் ‘விடியல் பதிப்பகம்’. எஞ்சியிருந்த சந்தேகமும் என்னிடம் இல்லாமல் போயிற்று அன்னையே.

    பின்னொருநாள் நான் இலண்டன் வந்திருந்தபோது பேராசான் கார்ல் மார்க்ஸின் கல்லறைக்கு வந்தேன். அங்கே ஒரே கல்லறையில் மார்க்ஸோடு நீங்களும் ஜென்னியும் நித்தியமாகத் துயின்றுகொண்டிருந்தீர்கள். அங்கே கல்லறையைப் பராமரிக்கும் அமைப்பு வழங்கிய பிரசுரத்திலும் ஷீலா ரௌபாத்தம் உங்களைக் குறித்த எழுதியிருந்த செய்தி உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. அடுத்த வருடம் வெளியான எனது முதல் நாவலான ‘கொரில்லா’வை நான் உங்களுக்கே காணிக்கையாக்க விரும்பினேன். நான் அந்த நாவலில் காணிக்கைக் குறிப்பை இவ்வாறு எழுதினேன்:

    “பேராசான் கார்ல் மார்க்சுக்கு
    காதலியாய்க் கிடந்து, மரித்து
    வரலாற்றின் இருள் அடுக்குகளில் சிதிலமாய்
    கீறப்பட்ட அந்த ஊழியக்காரி
    ஹெலன் டெமூத்தின் நினைவுகளுக்கு…”

    அன்னையே! ‘கொரில்லா’ நாவல் இதுவரை மூன்று பதிப்புகள் வெளியாகிவிட்டன. மின்நூலாகவும் இணையத்தில் கிடைக்கிறது. ‘கொரில்லா’ ஆங்கிலத்தில் வெளியாகிய போதும் நான் இதே வரிகளுடன் உங்களுக்கே காணிக்கையாக்கியிருந்தேன். ‘கொரில்லா’ குறித்து இதுவரை ஏராளமான விமர்சனங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் பத்திரிகைளில் / இணையங்களில் வெளியாகியிருந்தபோதும் உங்கள் குறித்த அந்தக் காணிக்கைக் குறிப்பை ஒருவர் கூட மறுத்துப் பேசியதில்லை. இப்போது ‘தமிழ் அரங்கம்’ இணையத்தில் “கார்ல் மார்க்ஸ் தன் வேலைக்காரியுடன் தகாத உறவு வைத்து பிள்ளை பெற்றுக்கொண்டார் என்று ஷோபாசக்தி எழுதியுள்ளார்! இதற்கான ஆதாரத்தை ஷோபாசக்தி முன்வைக்க முடியுமா?” என்று ‘தில்’லாய் கேள்வியைப் பிரசுரித்திருக்கும் இரயாகரன் கூட சமர் 30வது இதழில் ‘கொரில்லா’ நாவலிற்கு ஒரு நீண்ட விமர்சனத்தை எழுதியிருந்தார். ஆனால் அவர்கூட அந்தக் காணிக்கைக் குறிப்புக் குறித்து எதுவும் கேள்வி எழுப்பியிருக்கவில்லை. சென்னையில் நடந்த ‘கொரில்லா’ விமர்சனக் கூட்டத்தில் கருத்துரைத்த தோழியர் அ. மங்கை “எனக்கு இந்த நாவலைவிட இந்த நாவல் யாருக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது என்ற விடயமே முக்கியமாகப்படுகிறது” என்று உவகையுடன் சொன்னது எனக்கு இப்போதும் ஞாபகத்திலிருக்கிறது.

    தோழர் பாலன் “ஷோபாசக்தி, கார்ல் மார்க்ஸ் தன் வேலைக்காரியுடன் தகாத உறவு வைத்து பிள்ளை பெற்றுக்கொண்டார் என்று எழுதியுள்ளார்” எனத் தவறாக என்னைத் ‘தேசம்’ இணையத்தில் மேற்கோள் காட்டுகிறார் அன்னையே. இருவர் மனமொத்த உறவில் தகாத உறவு, தக்க உறவென்று ஏதுமுள்ளதா சொல்லுங்கள்! காதலில் கள்ளக் காதல், நல்ல காதல் என்றெல்லாம் ஏதுமுண்டா? சமூக அதிகாரங்களின் இந்தக் கற்பிதமான துவிதங்களால் வஞ்சிக்கப்பட்டவரல்லவா நீங்கள். நான் ‘அம்மா சத்தியமாக’ தகாத உறவு என்றெல்லாம் எழுதவேயில்லை அன்னையே. உங்களைக் குறித்து நான் இப்படித்தான் எழுதியிருந்தேன்:

    “ஹெலன் டெமூத்தோடு தனக்கிருந்த காதலையோ, தன்மூலம் ஹெலன் டெமூத்துக்குப் பிறந்த குழந்தையையோ கார்ல் மார்க்ஸ் அவர் மரணிக்கும்வரை வரை ஒப்புக்கொள்ளவேயில்லை. நீண்ட காலத்திற்கு அது ஏங்கெல்ஸ் உட்பட வெகுசிலருக்கு மட்டுமே தெரிந்த உண்மையாயிருந்தது. ஹெலன் டெமூத் மரணித்த பின்புதான் அவருக்கு கார்ல் மார்க்ஸின் காதலியென்ற ‘அங்கீகாரம்’ கிடைக்கப்பெற்று அவர் மார்க்ஸின் கல்லறையிலேயே புதைக்கப்பட்டார்.”

    அன்னையே! தோழர் பாலன் ‘தகாத உறவு’ போன்ற சொற்றொடர்களை உருவாக்குவதைத் தயவு செய்து ஒரு சிறப்புக் குற்றமாகக் கருதாதீர்கள். நீங்கள் வாழ்ந்த காலத்தில் அய்ரோப்பாவில் குடும்பம் குறித்து என்னவகையான கட்டுப்பெட்டித்தனமான மதிப்பீடுகள் இருந்தனவோ அவைதான் இப்போதும் எங்களது ஈழத் தமிழ்ச் சமூகத்தில் நிலவிவருகின்றன. பொதுசனங்கள் இந்த மதிப்பீடுகளில் கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் கூட நமது சமூகத்தில் கட்சி சார்ந்த மார்க்ஸியர்கள் இவ்வகையான ஒழுக்கவாத மதிப்பீடுகளில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்களாகவேயுள்ளார்கள்.

    தோழர் பாலன் இதுவரை சற்றொப்ப 2000 வார்த்தைகளில் நீங்கள் கார்ல் மார்க்ஸின் காதலி அல்ல என்பதற்கான வாதத்தை வைத்துள்ளார். அவற்றில் ஒருமுறை கூட அன்னையே அவர் உங்களைப் பெயர் சொல்லிக் குறிப்பிடவில்லை. வேலைக்காரி…வேலைக்காரி என்றே எழுதுகிறார். ‘வேலைக்காரி’ என்று உங்களை அழைப்பதை உழைப்பையே மூச்சாகக் கொண்டிருந்த நீங்கள் தவறாகக் கருதமாட்டீர்கள். ஆனால் இங்கே பாலன் உங்களை ‘வேலைக்காரி’ என்றே தொடர்ந்து அழைப்பதின் உள்ளே உறைந்திருக்கும் அலட்சியத்தை குமுதத்தில் வெளியாகும் மோசமான வேலைக்காரி ‘ஜோக்’குகளைப் படித்தறிந்திராத நீங்கள் உணர்ந்துகொள்ள வாய்ப்பில்லை. பாலனிடமிருப்பது ‘போயும் போயும் ஒரு வேலைக்காரியிடமா நமது மாமேதை பிள்ளை பெற் றுக்கொள்வார்!’ என்ற மேட்டுக்குடி மனநிலையே என்பதை அவரின் ‘வேலைக்காரி’ என்ற இடைவிடாத விளிப்புகளில் நான் காண்கிறேன். அட, ஒருமுறை கூட அவரின் வாயில் உங்கள் பெயர் நுழையமாட்டேன் என்கிறது அன்னையே! தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு என்பது பார்ப்பனியத்தின் கொடையெனில் வாயால் உச்சரித்தாலே தீட்டு என்பது மார்க்ஸியத்தின் கொடையா? வெட்கமாயிருக்கிறது அன்னையே! நீங்கள் மரணித்தபோது ஏங்கெல்ஸ் வெளியிட்ட அறிக்கையில் நீங்கள் கார்ல் மார்க்ஸின் எழுத்துப் பணிகளிற்கு அறிவுசார்ந்தும் துணைநின்றதாகக் குறிப்பிடுகிறார். ஆனால் இவர்களிற்கு நீங்கள் வேலைக்காரி மட்டுமே.

    தோழர் ராஜன்குறையுடனான ஒரு தனிப்பட்ட உரையாடலில் “மார்க்ஸும், ஹெலன் டெமூத்தும் காதலர்கள் என்ற அடிப்படையில்தான் குழந்தை பிறந்திருக்க முடியுமே தவிர மார்க்ஸ் பலவந்தம் செய்ததாலோ, வெறும் இச்சையிலோ நடந்திருக்க முடியாது. ஏனெனில், குழந்தை பிறந்தது 1851இல். அதன் பிறகு 1883இல் மார்க்ஸ் மரணிக்கும் வரை ஹெலன் மிகுந்த அன்புடன் மார்க்ஸ் குடும்பத்தை நிர்வகித்திருக்கிறார். மார்க்ஸ் மரணத்திற்குப்பின் ஏங்கெல்ஸிடம் சென்று பணி புரிந்திருக்கிறார். இயக்கம்
    சார்ந்தவர்கள் அனைவரும் ஹெலனை மார்க்ஸ்- ஏங்கெல்ஸின் உண்மைத் தோழராக அறிந்துள்ளனர். எனினும் மார்க்ஸும் ஏங்கெல்ஸும் ஃபெடரிக் டெமூத்திற்கு எந்த நியாயமும் செய்யவில்லை என்பதை ஏற்கவேண்டியிருக்கிறது. ‘மார்க்ஸின் மகனாக இல்லாவிட்டால் கூட’ தங்கள் உண்மைத் தோழரான ஹெலனின் மகனை அவர்கள் உதாசீனம் செய்த விதம் அவர்கள் பேசிய இலட்சியத்திற்கு முற்றிலும் முரணாக இருக்கிறது. ஆண்+அறிவு என்பது அயோக்கியத்தனமின்றி இருக்காது என்று பெண்ணிலைவாதிகள் சொன்னால் தலைகுனிந்து நிற்பதைத்தவிர வேறு வழியில்லை” என்று ராஜன்குறை குறிப்பிட்டார்.

    அன்னையே! அந்தக் கட்டுரையில் உங்களுக்கும் கார்ல் மார்க்ஸிற்குமான உறவு குறித்து நான் சுட்டிக்காட்டியது சமூக ஒழுக்கங்களின் வன்முறையை விவரிக்கவே தவிர மார்க்ஸை இல்லாததும் பொல்லாததும் சொல்லி அவதூறு செய்வதற்காகவல்ல. அவருக்கு இன்னும் நான்கு காதலிகளும் உங்களிற்கு இன்னும் அய்ந்து காதலர்களும் இருந்தாலும் எனக்கு மகிழ்ச்சியே. மரபான ஒழுக்க விதிகளிற்குக் கட்டுப்பட்டு உங்களையும் மகனார் ஃபெடரிக் டெமூத்தையும் மார்க்ஸ் வஞ்சித்ததை நான் சுட்டிக்காட்டுவது அவதூறு ஆகாது.

    பாலன் இந்தச் செய்திக்கு ஆதாரம் கேட்போது நான் கொடுத்த ஒரு சான்றாதாரம் வலுவற்றது என்கிறார் பாலன். க்ளாரா ஸெட்கின் ஒரு கடிதத்தில் தன்னிடம் எலினார் மார்க்ஸே ‘கார்ல் மார்க்ஸுடைய மகன்தான் ஃபிடரிக் டெமூத்’ எனக் கூறியிருப்பதாக சொல்லியிருக்கிறார். இந்தக் கடிதம் Heinrich Gemkow, Rolf Hecker ஆகியோர் 1994 இல் பிரசுரித்த ‘Unbekannte Dokumente überMarx’ Sohn Frederick Demuth’ [‘Unknown Documents concerning Marx’s Son Frederick Demuth’] என்ற நூலில் இருக்கிறது. இதைச் சுட்டுவதற்காகத்தான் நான் அந்தத் தொடுப்பைக் கொடுத்திருந்தேன். ஆனால் பாலன் சொல்வதுபோல Terrell Carver கிளாரா ஸெட்கினை மறுக்கிறார். கிளாரா ஸெட்கினை நம்புவதா அல்லது கார்வரை நம்புவதா என்பது பாலனின் தேர்வு. இந்த ‘நசலு’க்காகத்தான் பாலனையே சான்றாதாரங்களை இணையத்தில் பஞ்சியைப்பாராமல் தேடிப்பார்க்குமாறு நான் கேட்டுக்கொண்டேன். அதை ஒரு அவமதிப்பாக அவர் எடுத்துக்கொண்டுவிட்டார். உழைக்கச் சொல்லிக் கேட்பதெல்லாம் ஒரு அவமதிப்பா என்ன!

    உலகளாவிய மார்க்ஸிய இயக்கங்களும் அதிகாரமும் ஒரு உண்மையைத் திட்டமிட்டு மறைத்து வைத்துள்ளபோது ‘உண்மை’யை உரித்து நோகாமால் வாய்க்குள் கொண்டு வந்து யாராவது ஊட்டிவிடுவார்கள் என்று பாலன் போன்றவர்கள் எதிர்பார்க்கக் கூடாது. என்னை ‘மடக்குவது’தான் அவர்களின் நோக்கமென்றால் இப்படியே ‘எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி’ என்றரீதியில் அவர்கள் அனர்த்திக்கொண்டிருக்கலாம். ஆனால் உண்மையைக் கண்டுகொள்ள விரும்பினால் ஒன்றுக்கொன்று எதிராய் புதிராய்க் கிடக்கும் பிரதிகளிலிருந்தும் பிம்பங்களிலிருந்தும் கவனமான ஆய்வுகளின் மூலம்தான் அவர்கள் உண்மையைக் கண்டடைய முடியும். எல்லாவித சர்வதேசத் தொலைக்காட்சிகளிலும் ‘முள்ளிவாய்க்கால்’ சண்டையை இரவிரவாக முழித்திருந்து பார்த்துவிட்டு விடிந்தபின்பு பிரபாகரன் உயிரோடிருக்கிறார் என்று சொல்லிக்கொண்டிருப்பவர்களையும் நாம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம். பிரபாகரனின் மரணச் சான்றிதழை இலங்கை அரசாங்கம் தங்களுக்குத் தபாலில் அனுப்பிவைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களுக்கும் பாலன் போன்றவர்களிற்கும் என்ன வித்தியாசம்?

    சொந்தமாகக் கொஞ்சமாவது யோசிக்கமாட்டார்களா? கிளாரா ஸெட்கினுக்கு கார்ல் மார்க்ஸ்மீது அவதூறு சுமத்த வேண்டுமென்று நேர்த்திக் கடனா? ஹெலன் டெமூத்தின் மகனுக்குக் குடும்பப் பெயராக ஏங்கல்ஸின் குடும்பப் பெயரான ஃபிடரிக் என்ற பெயர் ஏன் சூட்டப்பட்டது? ‘மார்க்ஸின் குடும்பத்திற்குச் செய்த சேவைக்காகவும் மார்க்ஸின் அறிவுப் பணிகளில் துணை நின்றதற்காகவுமே ஹெலன் டெமூத் மார்க்ஸின் குடும்பக் கல்லறையில் புதைக்கப்பட்டார்’ என ஏங்கெல்ஸ் சொல்வது சரியான தர்க்கமெனில் ஏங்கெல்ஸுமல்லவா மார்க்ஸின் குடும்பக் கல்லறையில் புதைக்கப்பட்டிருக்க வேண்டும். ஏங்கெல்ஸை விட மார்க்ஸிற்குத் துணைநின்றவர் வேறுயார்? 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஒரு பெண் தந்தையில்லாத குழந்தையைப் பெற்றெடுப்பது எவ்வளவு பெரிய வலியும் சமூக அவமானமும் சட்ட விரோதமும். குழந்தை பிறந்த பின்பும் சரியாக 32 வருடங்கள் கார்ல் மார்க்ஸுடனும் ஜென்னியுடனும் நீங்கள் வாழ்ந்திருக்கறீர்கள் அன்னையே. அந்த நீண்ட காலப்பகுதியில் உங்களது குழந்தையின் தந்தையைக் கண்டுபிடிக்கவும் சமூகத்திற்கு அறிவிக்கவும் ஏன் மார்க்ஸோ ஜென்னியோ முயற்சி செய்யவில்லை என்று கூட இவர்கள் சிந்தித்துப் பார்க்கமாட்டார்களா அன்னையே. தந்தையே இல்லாமல் குழந்தை பெற்றெடுக்க நீங்கள் என்ன கன்னி மரியாளா?

    கீழேயும் சுட்டிகளில் சில சான்றாதாரங்களை வழங்கியிருக்கிறேன். ஆனால் இந்த ‘விரலை விட்டுப் பார்க்கும் தோமஸ்கள்’ அதை ஏற்றுக்கொள்ளவா போகிறார்கள்! (உங்கள் காதலர் கூட அடிக்கடி விவிலியத்திலிருந்து உவமானங்கள் வழங்குவார் அல்லவா அன்னையே). இவர்கள் ஒன்று இப்படியே சைலண்டாவார்கள் அல்லது இவையெல்லாம் ‘முதலாளித்துவ சதி’ என்பார்கள். அவர்கள் கிடக்கட்டும்…. அன்னையே உண்மையான மார்க்ஸியவாதிகளின் மனதிலும் மாசற்ற காதலர்களின் ஆன்மாவிலும் நீங்கள் நீடுழி வாழ்ந்திருப்பீர்கள்.

    வணக்கத்துடன்
    ஷோபாசக்தி
    09.03.2008

    தொடுப்புகள்:
    1. Issue 233 of SOCIALIST REVIEW
    “Perhaps this is at its best in her description of Eleanor’s discovery that Freddy Demuth, who she always imagined was the illegitimate son of Engels, was in fact the son of Marx and therefore her half brother. This was only revealed to her when Engels was dying and when Marx, Jenny and Freddy’s mother, Helene Demuth, were long dead. Her shock and her increasing closeness to Freddy in the last years of her life are very movingly portrayed.”…

    http://pubs.socialistreviewindex.org.uk/sr233/german.htm

    2. 1975 – 1981 by David Wallechinsky & Irving Wallace
    “The Father of Modern Communism” also fathered 7 children, 4 of whom survived to adulthood. His only son, Frederic Demuth (1851-1929) was illegitimate; “Freddy’s” mother, Helen Demuth, was maidservant to Marx’s wife. Marx never acknowledged paternity, and it was not until 12 years after his death, when Frederic Engels lay on his death-bed, that it was revealed–by Engels, writing on a blackboard–that “Freddy is Marx’s son.” …

    http://www.trivia-library.com/a/children-of-famous-parents-father-of-communism-karl-marx.htm

    3.ஷீலா ரெளபாத்தம் (விக்கிபீடியா)
    http://en.wikipedia.org/wiki/Sheila_Rowbotham

    4.ஹெலன் டெமூத் (விக்கிபீடியா)
    http://en.wikipedia.org/wiki/Helene_Demuth

    5.அன்புள்ள டாக்டர் மார்க்ஸ்
    https://jps.library.utoronto.ca/index.php/srv/article/view/5698

    6.ஹெலன் டெமூத் குறித்த ஏங்கெல்ஸின் அறிக்கை:
    http://www.marxists.org/archive/marx/bio/family/demuth/obitry.htm

    7. Marx and the maid
    http://rmit.net.au/browse;ID=f8y3gemb99dsz

    8.Servant of the Revolution
    http://servantrevolution.blogspot.com/

    shobasakthi.com/shobasakthi/?p=593

    Reply
  • raja
    raja

    தேசம் நெட்டின் கோழைத்தனம்!
    -லீனா மணிமேகலை

    பழி நாணுவார் என்ற தோழர் ஷோபாசக்தியின் கட்டுரைக்கு வந்த பின்னூட்டங்களில் என்னைப் பற்றிய அவதூறுகளுக்கான பதிலாக “அவதூறு என்பது பலவீனர்களின் முதலும் கடைசியுமான ஆயுதம்” என்ற என் கருத்தை, உங்களால் அவமரியாதை செய்யப்பட்டவர் என்ற வகையில் என் மறுப்புரையை, உங்கள் தளத்தில், பின்னூட்டமாக ஏன் வெளியிட மறுத்தீர்கள் ஜெயபாலன்?

    மட்டறுப்பு என்பது முதுகெலும்பை கழற்றி வைப்பதற்கென்றால், ஜெயபாலன் அவர்களே, உங்களுக்கெல்லாம் எதற்கு ஒரு இணையதளம், செய்தி, கட்டுரை, விவாதம் மண்ணாங்கட்டியெல்லாம்?

    ஒருவரைப் பற்றிய அவதூறுகளையும், வதந்திகளையும் எந்தவித தயக்கமும் இல்லாமல் வக்கிர புத்தி தலை தெறிக்க பதிப்பிக்க முடியும், ஆனால், அதற்கு மறுப்புரையோ, வாதமோ எழுதியனுப்பினால், அதை வெளியிட துப்பிருக்காதென்றால், தேசம் நெட் என்ற இணையதளத்தின் நோக்கம் என்ன? இந்த மோசடிகளின் மூலம் ஜெயபாலன்,மற்றும் அவர் அனுமதிக்கும், நியமிக்கும் பின்னூட்டவாதிகள் நிறுவ விரும்புவது என்ன? இதற்கெல்லாம் பிண்ணனி யாது?

    அப்பாவி மக்களுக்கு மத்தியில் குண்டு வைத்துவிட்டுப் போகும் மூட வன்முறையாளர்களுக்கும், தேசம்நெற், வினவு போன்ற தகாத சொற்களின் மூலம் பெண் படைப்பாளியை பாலியல் பலாத்காரம் செய்து பார்க்கும் இணையதள வக்கிர வன்முறையாளர்களுக்கும் சிறிதும் வித்தியாசமில்லை.

    இந்த இணையதளத்தின் எடிட்டர்களுக்கு மட்டுமல்ல, வாசகர்களுக்கும் இந்த வெளியில் எழுதும் படைப்பாளிகளுக்கும் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லும் கடமையிருக்கிறது.

    Reply
  • tholar balan
    tholar balan

    சோபாசக்தி அவர்கள் “தேசம் நெற்றி”ல் எழுதாவிட்டாலும் நான் கேட்டுக்கொண்ட விடயம் பற்றி தனது வலைத்தளத்தில் எழுதியுள்ளார். அவர் அதை எனக்கு எழுதாமல் அவர் குறிப்படுவது போல் மனம் பதைபதைத்து அன்னைக்கு(கெலன் டெமூத்) எழுதியுள்ளார். எனக்கு எழுதுவதில் அவருக்கு என்ன சங்கடம் என்று புரியவில்லை. எனினும் அவர் பதில் எழுதியமைக்கு முதலில் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் அவருடைய இந்தப் பதில் குறித்து நான் சில கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

    “அன்னையே! நான் உங்களைப்பற்றி எழுதிய ஒரு குறிப்பால் கடந்த சில நாட்களாக தேசம் இணையத்திலும் நேற்றுமுதல் தமிழ்அரங்கம் இணையத்தளத்திலும் நீங்கள் சந்திக்கும் அவமதிப்புகளையிட்டு மனம் பதைபதைத்து இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன் “ என்று அவர் தனது கட்டுரையை ஆரம்பிக்கிறார். கதை எழுதுவதில் சோபாசக்தி திறமைசாலி என்று நான் அறிந்திருக்கிறேன். ஆனால் இப்படி ஒரு கதையை ஆரம்பிப்பார் என்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. சோபாசக்தி கால்மாக்ஸ் பற்றி கருத்துக்கூறியதால்; அதற்குரிய ஆதாரத்தை வையுங்கள் என்று அவரிடம் நான் கேட்டேன். நான் எழுதிய இந்தக் கருத்தை தமிழ்அரங்கம் அப்படியே வெளியிட்டுள்ளது. இது எப்படி கெலன் டெமூத்தை அவமதிப்பதாகும்? இதற்காக ஏன் சோபாசக்தி மனம் பதைபதைக்க வேண்டும்? ஆதாரம் கேட்பது அவமதிப்பா? அல்லது தான் சொல்வதை அப்படியே கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சோபாசக்தி நினைக்கிறாரா? நான் ஆதாரம் கேட்டதால் அவர் மனம் பதைபதைக்கின்றாரா அல்லது முன்வைக்க ஆதாரம் இல்லையே என்று பதைபதைக்கின்றாரா என்று தெரியவில்லை.

    கெலன் டெமூத்துக்கு பிறந்த குழந்தைக்கு தந்தை கால்மாக்ஸ் என்பதை ஷீலா ரௌபாத்தம் எழுதிய “அன்புள்ள டாக்டர் மார்கஸ்” என்ற நூலில் 70 வது பக்கத்தில் படித்து அறிந்து கொண்டதாக சோபாசக்தி குறிப்பிடுகிறார். இதோ அந்த வரிகள் “1845 இல் மார்க்சும் திருமதி மார்க்ஸம் புலம் பெயர்ந்து பிரஸ்லெசில் வாழ்ந்து கொண்டிருந்த போது கெலன் டெமூத் என்ற 25 வயது இளம் பெண் அவர்களிடம் ஒரு பணிப்பெண்ணாக சேர்ந்தார்.1851 இல் அவர் கார்ல் மார்க்சின் மகனை கருத்தரித்தார். புpரடெரிக் டெமூத் என்றழைக்கப்பட்ட அக் குழந்தை இலண்டனில் உள்ள கேக்னி என்ற இடத்தில் ஒரு தொழிலாளி வர்க்க தம்பதியால் வளர்க்கப்பட்டது”.
    இந்த வரிகளை படித்த சோபாசக்தி அவர்கள் உடனே ஷீலாபோர்த்தம் பற்றி விசாரித்தாராம். அவர் ஒரு மார்க்சியர் பெண்ணியலாளர் ஆய்வாளர் கல்வியாளர் என்று அறிந்து கொண்டாராம். எனவே அவருடைய கருத்து ஏற்றுக்கொளளலாம் என முடிவு செய்தாராம். அதன் பின்பு அதனை மொழிபெயர்ப்பு செய்தது எஸ்.வி.ராஜதுரை என்று அறிந்து பூரணமாக ஏற்றுக்கொண்டாராம். ஏனெனில் எஸ்.வி ராஜதுரையின் மொழிபெயர்ப்பை சந்தேகப்படுபவன் ஒரு மனிதனாகவே இருக்கமுடியாதாம். அதற்கும் மேலாக இதனை வெளியிட்டவர்கள் விடியல் பதிப்பகம் என்பதால் தனக்கு எஞ்சியிருந்த சந்தேகமும் நீங்கிவிட்டதாம். இதுதான் சோபாசக்தி பூரணமாக நம்பிய கதையின் விபரம்.

    சோபாசக்தி அவர்களே நீங்கள் இந்த விடயத்தை எழுதியவர் யார்? அதனை தமிழில் மொழி பெயர்த்தவர் யார்? அதனை தமிழில் வெழியிட்டவர் யார்? என்றெல்லாம் சிரமப்பட்டு ஆராய்ந்ததற்கு பதிலாக இந்த ஷீலா ரௌபாத்தம் என்ன ஆதாரத்தின் அடிப்படையில் இதனை எழுதுகிறார் என்று கொஞ்சம் ஆராய்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அத்தோடு அவர் முன்வைக்கும் ஆதாரம் எந்தளவு நம்பகத்தன்மையானது என்று ஆராய்ந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். அதுமட்டுமல்ல நான் ஆதாரம் கேட்டவுடன் நீங்களும் உடனே கொடுக்கக்கூடியதாக இருந்திருக்கும். இப்போதும் ஒன்றும் தாமதித்துவிடவில்லை. நான் கூறிய வழியில் கொஞ்சம் முயற்சி செய்து பாருங்கள்.

    தனது “கொரில்லா” நாவலில் “பேராசான் கால் மார்க்ஸ்க்கு காதலியாக கிடந்து மரித்து வரலாற்றின் இருள் அடுக்குகளில் சிதிலமாய் கீறப்பட்ட அந்த ஊழியக்காரி கெலன் டெமுத்தின் நினைவுகளுக்கு” என்று குறிப்பு எழுதியதாகவும் அந்த நாவல் பல மொழிகளில் பல பதிப்புகள் வந்துவிட்டதாகவும் இதுவரையாரும் இது குறித்து தன்னிடம் கேள்வி எழுப்பவில்லை என்று சோபாசக்தி குறிப்பிடுகிறார். குறிப்பாக அப்போது விமர்சனம் எழுதிய ராயாகரன் கூட இது பற்றி எதுவும் கூறாமல் இருந்துவிட்டு தற்போது எப்படி தேசத்தில் நான் எழுதிய கருத்துக்களை பிரசுரிக்க முடியும் எனக்கேட்கிறார். அவர்கள் யாரும் கேட்கவில்லை என்பது எந்தளவு உண்மையோ தெரியாது. மேலும் அது உண்மையென்றாலும் அவர்கள் யாரும் கேள்வி கேட்கவில்லை என்பதற்காக இனி யாரும் கேட்கக்கூடாது என்று சொல்வது என்ன வாதம்? இது சினப்பிள்ளைத்தனமாக அல்லவா இருக்கிறது?

    நான் சுமார் 2000 வார்த்தைகள் எழுதியிருப்பதாகவும் அதில் ஒருமுறைகூட கெலன் டெமூத்தை பெயர் சொல்லி அழைக்கவில்லை என்றும் வேலைக்காரி என்றே குறிப்பிட்டதாகவும் இது எனது மேட்டுக்குடித்தனத்தை காட்டுவதாகவும் சோபாசக்தி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். சோபாசக்தி என்னை அறிந்திருக்க நியாமில்லைத்தான். எனவே என் பற்றிய அவர் கணிப்பீடு குறித்து நான் கவலைப்படவில்லை. ஆனால் நான் வேலைக்காரி என்று எழுதியது அவர் மனதை புண்படுத்தியிருந்தால் அதற்காக நான் அவரிடம் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கு எனது நோக்கம் என்னவெனில் நான் ஒரு உண்மையான மாக்சிவாதியா? அல்லது உண்மையான மாக்சியவாதி என்றால் சோபாசக்தியின் சேட்டிபிக்கேட் வாங்கவேண்டும் என்பதா? அல்ல மாறாக கால்மாக்ஸ் குறித்து தான் கூறிய கருத்துக்கு சோபாசக்தி என்ன ஆதாரம் வைத்திருக்கிறார் என்பதை தெரிந்து கொள்வது மட்டுமே. எனவே நான் எத்தனை எழுத்து எழுதினேன் என்று எண்ணிக்கொண்டிருப்பதில் நேரத்தை செலவழிக்காமல் ஆதாரத்தை முன்வைக்க முனையும்படி சோபாசக்தி அவர்களிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    தான் பல ஆதாரங்களை முன்வைத்துள்ளதாகவும் எனவே இவர்கள் ஒன்று இப்படி சைலண்டாவார்கள் அல்லது இது முதலாளித்துவத்தின் சதி என்பார்கள் என்று முடிக்கிறார். நான் சைலண்டாவேனா அல்லது இது முதலாளித்துவத்தின் சதி என்று கூறுவேனா என்பதை இவர் எப்படி கண்டு பிடித்தாரோ தெரியவில்லை. சரி இவர் வைத்த ஆதாரங்களை கொஞ்சம் பார்ப்போம்.

    இவர் தனது ஆதாரமாக முதலில் ஒரு இணைப்பைக் கொடுத்தார். அதில் கால்மாக்ஸ்தான் தந்தை என்பதற்கு எவ்வித தகுந்த ஆதாரமும் இல்லை என்று தெளிவாக முடிவுரை கூறப்பட்டுள்ளது. எனவே இது எப்படி சோபாசக்தியின் கூற்றுக்கு ஆதரவான ஆதாரமாக இருக்கமுடியும்?

    அடுத்து யமுனாவிடம் கேட்டுப்பாருங்கள் என்றார். ஆனால் இப்போது தனது கட்டுரையில் இந்த யமுனா எழுதிய கட்டுரை பற்றி எதுவும் குறிப்படாமல் தனக்கு ஆதரவாக எஸ.வி.ராஜதுரையை துணைக்கு அழைக்கிறார். இதை வாசித்த தோழர் ஒருவர் என்னிடம் தொடர்புகொண்டு “யமுனாதான் இதனை முதலில் தமிழில் எழுதியதாகவும் ஆனால் அப்போதே இதனை எதிர்த்து எஸ்.வி.ராஜதுரை அவர்கள் எழுதியதாக” குறிப்பிடுகிறார். இது உண்மையாயின் அப்போது சோபாசக்தியின் பதில் என்னவாக இருக்கும்?

    இந்த முறை எட்டு இணைப்பை ஆதாரமாக சோபாசக்தி கொடுத்துள்ளார். இதில் 3மும் 4மும் ஒரே இணைப்பை குறிக்கிறது. அதுபோல் 7மும் 8மும் ஒரே இணைப்பைக் குறிக்கிறது. இவை பெரிய தவறல்ல. இருப்பினும் இணைக்கும் இணைப்புகளை படித்துப்பார்த்து இணைப்பது நல்லது.

    சோபாசக்தி அவர்களே தயவு செய்து வார்த்தைஜாலங்கள் செய்து எமக்கு கதை சொல்லவேண்டாம். முடிந்தால் தகுந்த ஆதாரத்தை முன்வையுங்கள். அல்லது தகுந்த ஆதாரம் இன்றி அவதூறு பொழிந்ததை ஒத்துக்கொள்ளுங்கள்.

    Reply
  • Roman
    Roman

    இங்கே நடைபெறும் விவாதத்திற்கும் மார்க்ஸ்சின் பிரதானமான படைப்பான மூலதனம் (Das Kapitel] புத்தகத்தில் அவரால் வரையறுக்கப்பட்ட முதலாளித்துவ பொருளாதார அமைப்பு முறையின் இயக்கம் பற்றிய ஆய்வுக்கும் என்ன சம்பந்தம்?

    அத்துடன் எந்த மட்டத்திற்கு தற்போதைய நிதி மூலதனத்தின் சீரழிவினை விளங்கப்படுதுவத்ட்கு மூலதனம் புத்தகத்தின் ஆய்வுகளுக்கு அப்பால் மர்க்ஸ்சின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய விவாதம் தேவை? நிட்சயமாக பெரும் பெரும் வங்கிகளினதும், பங்கு சந்தையினதும் உடைவுகளினால் பாதிக்கப்பட்ட மில்லியன் கணக்கான சாதாரண மக்களுக்கு தேவை இல்லை.

    முதலாளி வர்க்கத்திற்கும் தேவை இல்லை. மார்க்ஸ்சின் ஆய்வுகளில் ஒரு வரி கூட இன்று கேள்விக்குரியதாக இல்லை. “கடைசியாக சிரிக்க போவது கார்ல் மார்க்ஸ்” [The one who laughs last is Karl Marx] என்பது பிரபல்யமான முதலாளித்துவ பொருளாதார வாதிகள் மத்தியில் பரிமாறப்படும் ஒரு வசனம்.

    இந்த விவாதத்தில் உண்மையை கண்டு பிடிப்பதால் தான் மர்க்ஸ்சின் வேலைத்திட்டம் பாதுகாக்கப்படும் என்றளவுக்கு அந்த வேலைத்திட்டம் பலவீனமானதுமல்ல. தொழிலாளர்கள் மர்க்ஸ்சின் தனிப்பட்ட வாழ்கையில் இருந்து அவரது வேலைத்திட்டத்தினை மதிப்பிடும் அளவிற்கு அரசியல் அனுபவம் இல்லாதவர்கள் இல்லை,

    மர்க்ஸ்சிட்கு ஒரு பிள்ளை இரகசியமாக இருந்ததா இல்லையா என்பது மனித சமுதாயத்தின் தவிர்க்க பட முடியாத பிரச்சினை என்றால் சம்ப்தப்பட்டவர்களின் கல்லறைகளை தோண்டியெடுத்து ஒரு DNA பரிசோதனை மூலம் கண்டுகொள்ளலாம். ஆனால் மனித சமுதாயத்தின் தேவை மர்க்ஸ்சின் எழுத்துக்களில் மட்டுமே இருக்கின்றது.

    Reply
  • mathan
    mathan

    லீனா நீங்கள் ஒரு பச்சை வியாபாரி. உங்களிடம் மக்கள் சேவை நோக்கம் இல்லை. பணம் சேர்க்கும் நோக்கமே உங்களது குறிக்கோள். நீங்கள் படம் பிடித்து பணம் சோர்க்கும் மக்களுக்கு என்ன செய்துள்ளீர்கள்? ஆதாரத்துடன் பட்டியலிடுவீர்களா? தேசம் நெட்க்கு பயந்தால் உங்கள் தளத்தில் அல்லது ஏதாவது தளத்தில் விடையளியுங்கள்.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    தேசம் நெற்றின் கோழைத் தனம் என எழுதும் லீனா மணிமேகலை , அமெரிக்கா வந்த போதெல்லாம் தங்கியது புலி ஆதரவு இந்தியத் தமிழர் வீடுகளில்தான். பேசியதெல்லாம் புலி ஆதரவு வார்த்தைகளைத்தான். புலிகளுக்கு ஆதரவாக லீனா மணிமேகலை , டில்லி வரைச் சென்று புலிப் பணத்தில் போராட்டம் நடத்தி விட்டு வேறு வந்தார். அப்போது பீபீசி தமிழோசையில் வேறு பேட்டியளித்தார்.

    அஜீவன் , சினிமா பயிற்சிப் பட்டறை நடத்த , அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு வந்த போது, அமெரிக்கா நண்பர்களிடம் , அஜீவன் , புலிகளுக்கு எதிரானவர் என்ற தகவலை லீனா மணிமேகலை சொல்லி, அவரை அழைக்காதீர்கள் என சொன்னார். நாங்கள் , உடனடியாக சிங்கப்பூரில் இருக்கும் ஈழத்து நண்பர்களைத் தொடர்பு கொண்டு , அஜீவன் குறித்த தகவல் உண்மையா எனக் கேட்டோம். ” அஜீவன் , எவருக்கும் எதிரானவர் அல்ல. உண்மைகளை நேரடியாகப் பேசுவார். எல்லோரோடும் பழகுவார்.” என தகவல் கிடைத்தது. லீனா , ஐரோப்பா வந்த போது , அவருக்கு உதவியதில் முதன்மையானவர் அஜீவன். சோபா சக்தியைக் கூட , அஜீவன் பாரீஸ் அழைத்து வந்த போதுதான் அறிமுகப்படுத்தினார் என்பது பொய்யாகாது என நம்புகிறேன். அதை அவர் சொன்னது , மட்டுமல்ல , அந்த மாலை சந்திப்பு படங்கள் அஜீவனிடமிருந்து பார்த்திருக்கிறேன்.
    அமெரிக்க விஜயம் குறித்து : http://pksivakumar.blogspot.com/2006/05/blog-post_30.html
    கிடைத்தால் தேசத்துக்கு அனுப்புகிறேன்.
    இப்போது புலிகளுக்கு எதிராக லீனா பேசுகிறார். பாரீஸில் கூட , புலி ஆதரவாளர் வீட்டில்தானே லீனா தங்கியிருந்தார். இல்லையென்று லீனா சொல்வாரா?
    கனடா ஆதரவாளர்களோடு:
    http://www.yarl.com/forum3/index.php?showtopic=11206

    Reply
  • palli
    palli

    ஜயகோ!!
    சோபா சக்தி யாரோ ஒருவருக்கு எழுதிய உதவிமடல் பல்லியின் முகவரிக்கு (தேசம்) மாறி வந்துவிட்டது, வாங்கடா வம்புக்கு என தெனா வெட்டாய் வந்தவர் யாரிடமோ மடிபிச்சை கேப்பது தெரிகிறது; அதனால் சோபாவை மனிதநேயம் கருதி மன்னிக்கலாமோ
    என பல்லி சிந்திக்கிறேன், எதிரியை கூட குளிப்பாட்டி அழகுபார்க்கும் பல்லி இந்த சோபாவை மட்டும் வன்முறை செய்வேனா? சோபாவுக்கு உதவி செய்ய வந்த லீனா நீங்க குறிகவிபாடுவதில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது, இல்லையேல் நாருடன் கூடிய பூவும் நாறும் என்பது நிஜமாகிவிடும்;

    வெத்திலை போட்டால் சிவக்கனும்;
    கருத்து எழுதினால் சிந்திக்கனும்;

    லீனா நீங்கள் தேசத்தை பார்த்து கோழைதனம் என சொல்லுவதால் உங்களையும் தேசம் கோட்டில் நிறுத்துவோம்; அது சரி உங்கள் இயக்கத்தில் சோபா நடிப்பில் ஏதோ ஒரு படம் செய்ய போவதாக கோடம்பாக்கம் புலம்புகிறதே, இதனால் நித்தியானந்தா கோவிக்க மாட்டாரா?? லீனா இடைகிடை தமிழிச்சி;காம் பாருங்கோ உங்களுக்கு அங்குதான் ஆயுள்வேத மருத்துவம் நடக்கிறது,

    தோழர் பாலன் பல்லிக்கு மார்க்ச்சியம் தெரியாது; ஆனால் தற்ப்போது ஒரு சில புத்தகங்கள் வாசிக்கிறேன், அதுவும் இந்த சந்திரராஜா பல்லிக்கு எதுவும் தெரியாது என அடிக்கடி வம்புக்கிழுப்பதால்;

    பல்லியை பொறுத்த மட்டில் இந்த கட்டுரையில் புரிந்து கொண்ட விடயம், கார்ல் மார்க்ச்சாகா நாம் (சோபா) வாழ முடியாவிட்டாலும் கார்ல் மார்க்ச்சை எமது (சோபா போன்றோர்) நிலைக்கு கொண்டு வர முயல்வதாகவே படுகிறது,

    தோழர் பாலன் எனக்கு உங்கள் வரிகளில் பிடித்தது
    சண்னின் புத்தகத்தை படிக்காமலா நான் அதை வெளியிட்டு இருப்பேன்; என்பதே, மார்க்ச்சிச விமர்சனம் வேறு மார்க்ச்சிச நாயகர்கள் விமர்சனம் வேறு என்பது பல்லியின் கருத்து,
    இது தவறாயின் தோழர் மன்னிக்கவும்,

    இந்த வாதத்தில் பல்லி தானாக வரவில்லை, வில்லண்டத்துக்கு வரவழைக்கபட்டேன்,

    Reply
  • Gopalan

    நந்தா தாங்கள் எழுதிய சமூக நிலையை முழுமையாக ஆதரிக்கின்றேன். தோழர் பாலனின் வாதங்களுக்கு பதிலளிக்க முடியாது தனது கருணை உள்ளத்தை வெளிப்படுத்தும் பரிதாபமான ஒரு அன்பராகவே சோபா காணப்டுகின்றார். அவரை விட்டு விடுங்கள். தனது இயலாமை மறைப்பதற்கு மார்கஸ்சை செங்கடலுக்குள்ளும் லீனாவிற்குள்ளும் இழுப்பதற்கு பதிலாக இழுத்துவிட்டார். நாம் பின்னூட்டம் விட்டுக் கொண்டு இருக்கின்றோம். சோபா என்ற நபரை விட்டு விடுங்கள். வெல்வதற்கு உலகம் இருக்கின்றது அதனை நோங்கிப் பயணிப்போம்.

    Reply
  • kavithai
    kavithai

    சோபா(சக்தி) நீங்கள் மார்க்சியத்தை இணையத் தளங்களிலும் லீனாவிடமும் பயின்றுள்ளீர்கள். அது தான் இந்த குழப்பம். யமுனாவின் கட்டுரைகளை வாசித்தால் உங்கள் குழப்பம் தீரும்.

    Reply
  • thalaphathy
    thalaphathy

    இங்கு நடைபெறும் வாதப், பிரதிவாதங்களை வாசிக்கும்போது ஒன்றுமட்டும் புலனாகிறது, அதாவது அரைத்தமிழர்கள்(அறிவுபூர்வமான ஆய்வுமுறைகளைப் பற்றி தெரிந்து கொள்ளாதவர்கள்) கண்டதையும் படித்துவிட்டு தனக்கு தெரிந்தது மட்டும்தான் முடிவான உண்மையெனவும், அவர்களுக்கு உண்மையாகப்படுவதை அனைவரும் உண்மையென ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் அடம்பிடிக்கிறார்கள். கார்ல் மார்க்ஸ் ஓரு ஜேர்மனியர், அவர் பின்னர் சிறிதுகாலம் ஜேர்மனியிலிருந்து விரட்டப்பட்டாலும்கூட அவர் மீண்டும் ஜேர்மனிக்கு திரும்ப வந்து வாழ்ந்தவர். அவரின் வாழ்க்கைவரலாற்றைப் பற்றி ஜேர்மனியர்களைவிட இலங்கையர்களுக்கு, குறிப்பாக ஜேர்மன்மொழி வாசிக்கத் தெரியாத தமிழர்களுக்கு, கார்ல் மார்க்ஸை பற்றி எல்லாம் தெரியுமென வாதிடுவது – குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டுவது மாதிரித்தான். ஜேர்மன் நூதனசாலையில் கார்ல் மார்க்ஸின் வாழ்க்கைவரலாற்றை ஆதாரங்களுடன் காட்ச்சிக்கு வைத்திருக்கிறார்கள். தயவுசெய்து அவற்றை ஒருமுறை ஆய்வுசெய்துவிட்டு, உங்கள் ஆய்வு விமர்சனங்களை தேசம் நெற்றில் விடலாம்தானே.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    ஆயிரம்கால் மண்டம். ஆயிரம் விழுதுகளைப் பரப்பி மானிடத்தின் அதிஉயர்ந்த அறிவாகப் பரவி எந்த தத்துவவார்திகளும் பெயர்த்தெடுத்து முடியாதவாறு செழித்து மேல்லோங்கி வளர்ந்து வருகிறது. தேடுங்கள் தரப்படும். தட்டுங்கள் திறக்கப்படும். இதன் அர்த்தம் முயற்சி யுள்ளவர்களுக்கு அதை அடையமுடிய வேண்டுமென்பது தெளிவாகிறது. மாக்ஸியம் உலக உழைப்பாளிகளுக்கு சொந்தமாகிய போது அதை பொறுக்க முடியாதவர்கள் பலவிதமான கதைகளை கட்டவுழுத்து விட்டார்கள். அவர்கள் வெற்றி பெற்றார்களா?
    சோபாசக்தி எனக்கும் தெரிந்த பழகிய ஒரு நபரோ? அவர் கதை எழுதுபவர். இலங்கையில் நடந்த சம்பவங்களால் அடிபட்டுப் போனவர். நெளிந்த தகரப்போணி ஆகிவிட்டவர். மனத்தில் இருக்கும் கவலைகளை வீசியெறிந்து கதைப்பவர். முதுகில் சல்லிக்சாசையும் கட்டிக்கொள்ளும் எண்ணத்துடனும் கருத்தை முன்வைப்பவர் அல்ல.
    இப்படி இருக்கும் போது…மாக்ஸின் வழிமுறைகளை வழிகாட்டிப் பாதையில் நடந்து போகாமல் குறுக்குவழியால் மாக்ஸின் தனிப்பட்ட வாழ்கையில் குறுக்கிட்டு அதை ரப்பர் மாதிரி இழுத்து திருவது ஏன்?. சரி. அவர் இழுத்து திரிந்தாலும் ஒருசிலர் அவருக்கு பின்னால் அலைவது ஏன்?. கதை சொல்லுபவர் என்று வைத்துக் கொண்டாலே போதுமானது. அது கட்சியின் கட்டுப்பாட்டை ஏற்று அதாவது கம்யூனிஸ்கட்சின் கட்டுப்பாட்டை ஏற்று ஆர்பாட்டத்திலோ ஊர்வலத்திலோ செங்கொடி ஏந்திக்கொண்டு கடைசி வரிசையில் அணிவகுத்துச் செல்லும் அங்கத்துவம் வகிப்பவனுக்கு வரமுடியாது அல்லது எட்டமுடியாது இந்த “கதைசொல்லுபவர்கள்”.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    தளபதி! நானும் ஜேர்மனியில் தான் வசிக்கிறேன் கடந்த முப்பது வருடங்களாக. அரைகுறை ஜேர்மன் மொழி தெரிந்தவர்கள் என்பதில் ஏதோ உண்மையுள்ளது. நீங்கள் அறிந்த ஜேர்மன் மொழியை விட நாங்கள் அறிந்தது குறைவானதே!.
    எங்களுக்கு கிடைத்த அறிவின் படி தரவுகளின் படி !1851 ஆண்டின் பின் “பாட்டாளி மக்களின் தந்தை கால்மாக்ஸ்” ஜேர்மனியில் வாழ்வதற்கு எந்த வித உரிமையோ அனுமதியோ கிடைக்கவில்லை. அவரின் வாழ்வு பெல்ஜியம் பிரான்ஸ் இறுதியில் லண்டன் என சமாதி அடைந்தது. அவர் எங்கிருந்தார்? எப்படி வாழ்ந்தார்? என்பதைவிட அவரின் ஆய்வுகளிலும் அதன் சொற் வீச்சுகளிலும் நாம் மயங்கிப் போய்யுள்ளோம். உங்கள் மொழிப் புலமையைக் கொண்டு இதை தெளிவு படுத்துவீர்களா?.

    Reply
  • thalaphathy
    thalaphathy

    நன்றி சந்திரன்.ராசா!

    கொஞ்சம் மேலே பாருங்க. 5 வது பின்னோட்டத்தை

    Reply
  • msri
    msri

    சோபாசக்தி > நீங்கள் குறிப்பிடும் >ஹாக்கினி என்ற இடத்தில் ஓர் தொழிலாளி வர்க்க தம்பதிகளால் வளர்க்கப்பட்ட (மார்க்ஸ் மகன்) பிரெட்டி டெமூத் பற்றிய தகவல்கள் > ஆதாரங்கள் இருந்தால் அறியத்தரவும். இதில் ஏனையவர்களும் முயற்சிக்கலாம். காதலில் கள்ளக் காதல்> நல்ல காதல் என்றோ; இருவர் மனமொத்த உறவில் தக்க> தகாதது என்ற ஓன்று இல்லை. நான் கார்ல் மாhக்ஸின் வரலாறு படித்த காலம் முதல் ஹெலன் டெமூத் அம்மையாரை ஓர் வேலைக்காரியாக பார்க்க என்மனம் இடம் கொடுக்கவில்லை! சண் தோழர் குறிப்பிட்டது போல்> “ஜென்னி குடும்பத் தலைவி என்றால் அம்மையார் சர்வாதிகாரி” என்பதே உண்மை! ஆனால் பிரெட்டி டெமூத்தின் வரலாறு உண்மையென்றாலும்> கார்ல் மார்க்ஸ் பாட்டாளி வர்க்கப் புரட்சியாளன்தான். அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவன்தான்! ஹெலன் டெமூத் பற்றி சோபாசக்தி எழுப்பும் கேள்வியும் நியாயமானதே! ஆனால் அதை சோபாசக்கதி தன் தவறகளுக்காக சமப்படுத்த முற்படக்கூடாது! சோபா> நீங்கள் தவறுகளுக்கு அப்பாற்பட்ட மனிதன் அல்ல! என்று வாதிட முன்வரவேண்டாம்! எனவே இவைகளை நோக்கிய ஆக்கபூர்வமான விடயங்களைப் பகிர்வோம்!

    Reply
  • chandran.raja
    chandran.raja

    சூனியத்தில் தொடங்கி சூனியத்தில் முடிவடைவதாக சொன்னார்கள் எமது இந்துமத தத்துவவாதிகள். அதுதான் நடேசப் பெருமாளின் “ஊழிப் பெருநடனம்” என விளக்கமும் கூறுகிறார்கள். நாம் யாதும் அறியோம். விஞ்யாண அடிப்படையில் சில உண்மைகளையறிய நடந்த முயற்சில் பலகோடி பணச்செலவில்…பிரான்ஸ்-சுவிஸ் இடைப்பட்ட பாதாளச் சுரங்க பரிசோதனையில் அங்குள்ள இந்திய விஞ்யாணிகள் நடேசப்பெருமாளின் ஊழிநடன சிலையை அன்பளிப்பு செய்ததாகவும் சொல்லப் படுகிறது.
    இந்த பிரபஞ்சம் எப்படிப்போகும்? எப்படி ஆகும்?? என்பதைப் பற்றி கருத்துச் சொல்ல நாம் எல்லாம் அற்ப பதர்களே!. ஆக குறைந்தது மனிதர்களை மனிதர்களாக பழகுவதற்காக அனுமதித்தால் அது மனிதனின் வாழ்வில் கூடிய பெறுமதியாக இருக்கும். எமக்குள்ள பின்புலன்களை நிச்சியம் ஆய்வுக்குள்ளாக்க படவேண்டும். இதைதான் மாக்ஸியம் வலியுறுத்துகிறது. சுமன் போன்றவர்கள் தங்களை மேதாவியாகக் காட்டிக் கொண்டு மாக்ஸியமும் மதமும் பிழை என கூறிக்கொண்டு வலம்வந்து போகிறார்கள். பல்லி மேலும் படிப்பதற்கு முயற்சி செய்கிகிறார். இது மகிழ்சியான செய்தியே!. ஏனெனில் நாம் எல்லோரும் ஒருவகையில் கற்றுக் கொண்டிருப்பவர்களே!.

    Reply
  • palli
    palli

    தளபதி,
    சோபா போன்றோர் பலர் இன்றல்ல அன்றும் இருந்திருப்பார்கள் தானே; நெற்றை வைத்துதான் நெற்றிகண் காட்டுகிறீர்களா?? சரி உங்கள் வாதபடி நீங்கள் சொல்லும் தகவலே சரியாயின் இதை இதுவரை ஏன் பாதுகாத்தீர்கள். அல்லது சோபா சொன்ன பின்தான் தேடலுக்கு புறப்பட்டீர்களா?? சோபா சொல்லுவதால் தகவல்கள் பிழையாக இருக்கும் என்பது எனது வாதம்அல்ல; சோபாவுக்கு தவறான தகவல்களிலேயே நாட்டம் அதிகம்; தேசத்தில் வம்பு இழுத்து விட்டு அன்னைக்கு கடிதமாம்; என்ன சின்னபிள்ளைதனம்; நல்லவேளை கார்ல் மார்க்ச் வாழ்ந்த காலத்தில் சோபா இல்லை; இருந்தால் இப்படி ஒரு சந்தேகத்துக்கு இடம் இல்லை; காரனம்,,,,,,,, ஜேர்மன் மொழியில் மட்டும்தான் இப்படியான தகவல்கள் அல்லது மார்க்ச்சின் வரலாறுகள் இருக்கா என்பதை சந்திரா அல்லது தோழர் எழுதினால் பல்லி போன்ற விடயம் தெரியாத(மார்க்ச்சியம்) பிரயோசனபடும் என நினைக்கிறேன், சோபாவுக்கு தளபதியாய் இல்லாமல் சரியான விமர்சனத்துடன் வாங்க; அது நமக்கும் பல விடயங்கள் அறிய வரும்;

    Reply
  • palli
    palli

    சோபா& தர்மன் நாம்(தேசம்) சுறாவையும் புறாவாக்குவோம்; ஆனால் நீங்களோ சுறாவை கறியாக்குவதானால் கூட ராமேஸ்வரம்தான் போகவேண்டும், அதுசரி இந்த வேட்டைநாய் சமாசாரம் என்ன ஆச்சு, ஊடக ரவுடியான நீங்கள் இப்படி பதுங்கலாமா?? வாங்கோ வாங்கோ உங்க சமாசாரம் அல்லைபிட்டியில் இருந்து அண்ணாநகர் வரை கொட்டியல்ல பரவிகிடக்கு, தேவையானதை தேர்ந்து எடுக்கலாம் வாங்கோ,

    Reply
  • thalaphathy
    thalaphathy

    நண்பர் பல்லிக்கு!

    எனது விளக்கத்தை 5 வது பின்னூட்டமாக வரைந்துள்ளேன், அதாவது சோபாசக்தி, தோழர் பாலனுக்கு மறுத்தான் அடிக்க முன்பே.

    திருக்குறளை ஆங்கிலத்திலோ அல்லது ஜேர்மன்மொழியிலோ(Deutsch) மொழிபெயர்த்தால் எப்படி இருக்கும். மொழிவீச்சு, எதுகை மோணையெல்லாம் சுவைதருமா?

    Reply
  • Roman
    Roman

    மார்க்ஸ் ஒரு பொருள் முதல் வாதி. பொருள்முதல் வாதத்தினை மிகவும் இலகுவான முறையில் சொல்லுவதானால். கடவுள் மனிதனை படைக்கவில்லை மனிதன் தான் கடவுளை படைத்தான். இந்த அடித்தளத்தில் உலகம் சூனியத்தில் இருந்து உருவாகவில்லை, சூனியத்தில் போய் முடியவும் இல்லை.

    உலகத்தின் தோற்றம் தொடர்பாக பல விதமான விஞ்ஞான ரீதியான கருத்துக்கள் இருக்கின்றன. 1931 இல் Georges Lemaître இனால் உருவாக்கப்பட்ட Big Bang [Urknall] வரைவுமுறை தொடர்பாக படிப்பதன் மூலமோ அல்லது Stephen Hawking இன் புகழ் பெற்ற புத்தகமான The Universe in a Nutshell இனை படிப்பதன் மூலமாகவோ தெரிந்து கொள்ளலாம்

    மதம் தொடர்பாக மர்க்ஸ்சின் கருத்து மதம் மக்களுக்கான போதை பொருள் [Die Religion ist das Opium des Volkes] என்பது ஆகும். இதை விட வேறு கருத்து சொல்ல முயல்வதிலும் பார்க்க நீங்கள் இங்கே மர்க்ஸ்சின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி குத்திமுறிவது நல்லம்.

    டக்க்ளசுக்கும் சோசலிசதிட்கும் இருக்கும் உறவு போலத்தான் மர்க்ஸ்சிட்கும் மதத்திற்கும் இருக்கும் உறவு. டக்லஸ் சோசலிசத்தின் விரோதி, மார்க்ஸ் மதத்தின் விரோதி

    Reply
  • Roman
    Roman

    பல்லி
    சோபாசக்தியுடன் எந்த விதத்திலும் ஒரு நேரடியான சண்டைக்கு போவது மனித சமுதாயத்தின் முன்னேறத்திற்கு ஒரு விதத்திலும் உதவப்போவதில்லை. இதே மாதிரியான ஆயிரம் குத்து வெட்டுகள் இணையதளங்களில் நடந்துகொண்டிருக்கின்றன. தேத்தண்ணிக் கோப்பைக்குள் அடிக்கும் புசல் போல் ஒரு பெரிய ஆபத்தையும் ஏற்ட்படுத்த போவதில்லை.

    மர்க்ஸ்சின் காலத்தில் சோபாசக்தி போன்றோர் இருந்தனர். ஆனால் மார்க்ஸ் தன்னை பற்றி தனிப்பட்ட ரீதியில் எழுதுவதை பற்றியோ அல்லது தனது ஆய்வுக்கு தொடர்பில்லாத விடயங்களில் கவனம் செலுத்துவதை தவிர்த்து கொண்டார்.

    மர்க்ஸ்சின் கவனம் சோஷலிசதத்துவத்தினை தனது எழுத்துக்களின் மூலம் உருவாக்கி நிலை நிறுத்துவதிலேயே இருந்தது. இது தொடர்பாக சமகாலத்து தத்துவாசிரியர்கள், சோஷலிச இயக்கத்தின் பல தலைவர்களுடன் செய்த போராட்டங்கள் அனைத்தும் புத்தகங்களாக அனைத்து முக்கியமான மொழிகளிலும் இருக்கின்றது. இந்தியாவில் New Century Book House தமிழ் புத்தகங்களை விற்பனை செய்தது. உங்களுக்கு தேவையெனில் இந்த புத்தகங்களை தமிழில் பெற்றுக் கொள்ள முடியும். அதற்கான முயற்சி செய்தால்.

    நீங்கள் உங்களுக்கு தெரியாது என்று சொல்லும் போது உங்களது நோக்கம் மர்க்ஸ்சிசம் தொடர்பாக அறிய வேண்டிய உண்மையான கவனமோ இல்லையோ என்பதை என்னால் தீர்மானிக்க முடியாது இருக்கின்றது. உங்களது கருத்துக்களை நீண்ட காலமாக் வாசிக்கின்றேன், சில வேளைகளில் உங்களுக்கு மர்க்ஸ்சிசம் தெரியாது என்பீர்கள், சில வேளைகளில் மர்க்ஸ்சிச அல்லது இடதுசாரி கருத்துக்கள் மீது தாக்குதல் நடத்துவீர்கள். எனவே முதலில் நீங்கள் தீர்மானிக்க வேண்டும். படிப்பதோ அல்லது தாக்குவதோ என்று.

    தனிய படிப்பதால் மட்டும் மர்க்ஸ்சிசத்தின் நண்பனாக வரமுடியாது. தொழிலாள ஒடுக்க பட்ட மக்கள் தொடர்பான ஒரு வர்க்க நிலைப்பாடு, உணர்மை வேண்டும். வேறு வார்த்தைகளில் மகிந்தவின் அரசியலுக்கெதிராக பொன்சேகா குறைந்த கிரிமினல் என்ற வாதம் தீவின் மக்களுக்கு விடுதலை பெற்று தராது. இரண்டு கிரிமினல்களும் சிங்கள, தமிழ் மக்களின் விரோதிகள் என்பதை உணர வேண்டும்.

    மர்க்ஸ்சிட்கு ஒரு முறை [method] இருக்கின்றது இது அவரது எழுத்து முழுமையும் பரவியிருகின்றது. அந்த முறை தனி மனிதனை அல்ல அந்த மனிதனின் கருத்துடன் கவனம் செலுத்துவது அல்லது கணக்கு தீர்ப்பது.

    சோபாசக்தி உங்களை பிராணி என்று சொன்னதற்காக அல்லது கேட்காமல் வம்பு குடுத்ததட்காக நீங்கள் “அல்லைபிட்டியில் இருந்து அண்ணாநகர் வரை கொட்டியல்ல பரவிகிடக்கு, தேவையானதை தேர்ந்து எடுக்கலாம் வாங்கோ” என்று சவால் விடுகின்றீர்கள்.

    மார்க்ஸ் உங்கள் இடத்தில இருந்திருந்தால் சோபாசக்தியின் கட்டுரையின் பம்மாத்து பெண்விடுதலை ஏன் பெண்களுக்கு விடுதலை பெற்று தராது என்பதில் கவனம் செலுத்தியிருப்பார்

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    /சூனியத்தில் தொடங்கி சூனியத்தில் முடிவடைவதாக சொன்னார்கள் எமது இந்துமத தத்துவவாதிகள். அதுதான் நடேசப் பெருமாளின் “ஊழிப் பெருநடனம்” என விளக்கமும் கூறுகிறார்கள். நாம் யாதும் அறியோம். விஞ்யாண அடிப்படையில் சில உண்மைகளையறிய நடந்த முயற்சில் பலகோடி பணச்செலவில்…பிரான்ஸ்-சுவிஸ் இடைப்பட்ட பாதாளச் சுரங்க பரிசோதனையில் அங்குள்ள இந்திய விஞ்யாணிகள் நடேசப்பெருமாளின் ஊழிநடன சிலையை அன்பளிப்பு செய்ததாகவும் சொல்லப் படுகிறது. இந்த பிரபஞ்சம் எப்படிப்போகும்?/— சந்திரன் ராஜா!.
    கர்ணன் திரைப்படத்தில் வரும் “பகவத் கீதை” வசனம்….”நானே விதியாக இருக்கும் போது,விதியை மீற என்னால் எப்படி முடியும்- கிருஷ்ண பரமாத்மா!”.இப்படிதன் போகும்!!…
    நீங்கள் கூறிய “சுவிஸ் பாதாள பரிசோதனையில்”, ரூபத்திற்கும், அரூபத்திற்கும் இடைப்பட்டது, “ஐன்ஸ்டீனின்” சார்புநிலக் கொள்கையும், “அணு இணைப்பில் செயல்படும்?” “நியூட்டனின் மூற்றாம் விதியும்” செயல்பட மாட்டேன் என்கிறது, ஆகையால் ஐன்ஸ்ட்டினின் கொள்கை தவறு என்று ஜெர்மன் கோப்ளன்ஸ் பல்கலைகழகத்தை சேர்ந்த ஒரு ஆராய்ச்சியாளர் முன் வைத்தார். இது நீரூபிக்கப்பட்டால், “அவதார் திரைபடத்தில்” வரும் மேற்கத்திய குற்ற உணர்வுக்கு (மனசாட்ச்சி) வேலையில்லை, அதாவது உலகம் ஒரு ஒழுங்கமைப்பிற்குள் செயல்பட்டு வருகிறது என்பது தகர்க்கப்பட்டு, அதன் “ஒழுங்கமைப்பு சார்புநிலை” வேறு ஒரு தளத்திற்கு மாற்றப்படும் “அபாயம்” உள்ளது!.

    …அதாவது உலகம் ஒரு ஒழுங்கமைப்பிற்குள் செயல்பட்டு வருகிறது என்பது தகர்க்கப்பட்டு, அதன் “ஒழுங்கமைப்பு சார்புநிலை” வேறு ஒரு தளத்திற்கு மாற்றப்படும் “அபாயம்” உள்ளது!.”கட்டுடைப்பு”,”பின்நவீனத்துவம்” என்பது இந்த தகர்ப்புதான்!.கட்டுடைப்பு செய்யக்கூடாது என்பது,எடுபடாதா “நியாவாதிகளின்” கூற்று என்பது மறுக்க முடியாது!.ஆனால்,சார்ப்பு நிலை என்பது முன்பு “ஈத்தர்” என்பதிலிருந்து மூன்றாண்டுகளுக்கு முன்பு,”இருட்டு சக்தி(டார்க் எனர்ஜி)” என்று பெளதீக ஆராய்ச்சியாளர்களால்,முன்வைக்கப்பட்ட “தொடர்பு நிலையாக இருந்தால்” “சூனியத்தை நோக்கி நகரும்” என்கிறார்கள்!,சுற்றுப்புற சூழல் சீர்க்கேடு போல!.இது தற்போது “போஸானை” கண்டுபிடித்த சத்தியேந்திரநாத் போஸின்,”Bose–Einstein condensate (BEC) ” கோட்படுகளுடன் விஞ்ஞான அரங்கில் விவாதிக்கப் படுகிறது!.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    சோபாசக்தி திரைப்படத் தொழிலாளியை அடித்தாரா, அவ்வாறாயின் ஏன் செய்தார், அது தன்னை ‘மனிதாபிமானி’யாகவும் ‘சோசலிஸ்ற்’ ஆகவும் சொல்லிக்கொள்ளும் ஒருவருக்கு ஏற்புடையதா..என்பது போன்ற வாதங்களில் மாக்ஸின் வேலைக்காரி பற்றியும், பிரபஞ்சம், பிக் பாங் தியரி, நடராஜரின் தாண்டவம், குவாண்டம் இயற்பியல் என திசைதிருப்பிப்போகும் நிலையை என்ன சொல்வது?
    நான் அறிந்தவரை இந்நிலை இன்று நேற்று ஏற்பட்டதல்ல 1980 இல் ‘புரட்சிகர’ இயக்கங்கள் தமது ‘படிப்புகளின்’ போது தேவையில்லாத ’விடயங்கள்’ படித்து விட்டு போராட்டத்தையும் தமது சொந்த வாழ்வையும் திசைதிருப்பி ஐரோப்பா வந்து சேர்ந்ததில் தான் நீள்கிறது.. இன்னும் ஓயவில்லை. இவர்களால் ஒரு தலைப்புக்குள் நின்று விவாதிக்க முடியாமல் இருக்கும் போது இவர்கள் எவ்வாறு மக்களின் விடுதலைக்கு உதவுவார்கள்? திசை திருப்புப்படுவதே ‘மாற்றுக்கருத்து’ எனும் முடிவுக்கு வரவேண்டி உள்ளது!

    Reply
  • நண்பன்
    நண்பன்

    லீனாவை நம்பி மோசம் போனவர்கள் ஏராளம். நல்லா கதைப்பா, நாசமாக்கி வீதியில விடுவா. லீனாவை நம்பி படமெடுக்க ஆசை காட்டி லீனாவால் அழைத்து வரப்பட்ட, ஒரு அமெரிக்கா வாழ் இந்தியப் பெண்ணில் பல ஆயிரம் டொலர்கள் அபேசாகியது. அது காவிரிப் பிரச்சனையை மையமாககக் கொண்டது. காவிரி போல அது காய்ந்தே போனது. அடுத்து குறும்பட இயக்குனர் சிவகுமார் தயாரித்து இயக்கிய படத்தில் லீனா , கதாநாயகி. படம் உருவாகி 5 வருடங்களுக்கு மேலாகிறது. படம் பெட்டிக்குள் , சிவகுமார் , கல்லா காலி. லண்டன் போன லீனா , இருந்த ராசா வீட்டில் பிரச்சனையை கிளப்பி விட்டு , குறும்பட திரை விழாவில் தாறு மாறாக கத்தினார். எதையும் தாங்கும் சித்திர ராசா, பாவியானார். யமுனாவும் பேட்டி எடுத்தார். சில லண்டன் ஈழத்து திரைச் சிற்பிகள் லண்டனை சுற்றிக் காட்டும் போதே , காசு வறுக , சினிமா ஆசை காட்டி சென்னை வரச் சொல்லியிருக்கிறார். சிலர் போயும் மவுனமாம்.

    பாரீஸ் போய் அங்கும் சுவிஸிலும் கொடுத்த நினைவு பரிசை , ஐரோப்பிய விருதாக குமுதம் வெப் டீவியில் ரீல் விட்டார். பாவம் , இந்திய தமிழிர்கள். இவர் வெளிநாடு போவது , திரைப்பட விழாவுக்கு என்று ரீல் விடுவார். அதை நம்பி செய்தி வரும். அவர் எதுக்கு போறார் என்பதை மேற்குலகம் அறியும். எல்லாம் சாசு பிடுங்கத்தான். போன இடமெல்லாம் , யாரையும் கேட்காமல் போனடிப்பார். கம்பியூட்டரில் உட்கார்ந்திடுவார். கணவன் ஜெரால்ட் , தனக்கு துணைவன் என்பார். ஆனால் , வாயில் வார்த்தைகள் தூசனமாகவே வரும். அதுவும் பப்ளிக்காக.

    பாரதிராஜாவோடு , தாஜ்மகால் படத்தில் வேலை செய்த போது , ஏற்பட்ட தொடர்பு காரணமான நித்தியானந்தா டைப்பில் காரியம் பார்க்கப் போக பாரதிராஜா மனைவி , தும்புக் கட்டையால் அடித்து விரட்டியதோடு , தாஜ்மகால் டைட்டலில் கூட இவர் பெயர் இல்லாமல் போனது. படத்தை விட்டு துரத்தப் பட்ட போது வெளியே வந்து பத்திரிகைகளுக்கு ” பாராதி ராஜா பொறுக்கி, என் கையைப் பிடிச்சு இழுத்தார்” என பேட்டி கொடுத்தார். இருந்தாலும் தண்ணி அடிச்சா பாரதிராஜா தொலைபேசி லீனாவை தேடும். பொறுக்கி என்று பேட்டி கொடுத்த லீனா, திரை எனக் கொண்டு வந்து நின்று விட்ட , சினிமா பத்திரிகையை ஆரம்பிக்க அழைப்பு விடுத்து , அப்பா எனக் கொஞ்சிக் குலாவினார். இப்போ பாவம் பாரீஸ். கவனம் பிளீஸ். இன்னும் உண்டு. பார்க்கலாம்.

    Reply
  • Roman
    Roman

    சாந்தன் on March 10, 2010 6:31 pm
    //நான் அறிந்தவரை இந்நிலை இன்று நேற்று ஏற்பட்டதல்ல 1980 இல் ‘புரட்சிகர’ இயக்கங்கள் தமது ‘படிப்புகளின்’ போது தேவையில்லாத ’விடயங்கள்’ படித்து விட்டு போராட்டத்தையும் தமது சொந்த வாழ்வையும் திசைதிருப்பி ஐரோப்பா வந்து சேர்ந்ததில் தான் நீள்கிறது//

    ஓம் ஓம், ஐரோப்பா, கனடா இன்னும் உலகம் முழுக்க ஓடி ஒளித்தவர்களை கலைத்தது தவிர மிச்சப்பேரை கொன்று தின்று பாலகுமாரனை சித்தாந்தம் பேசப்பண்ணி கடைசியாக நந்திகடலில் மிதந்த சித்தாந்தம் தொடர்கின்றது.

    படிப்பதற்கு எது தேவை எது தேவை இல்லை என்பதை யார் தீர்மானிப்பது? படிப்பவர்கள் மட்டும் தான் தீர்மானிப்பது

    யாராவது எதையாவது படிப்பது, விவாதிப்பது என்பது “திசை திருப்புவது” அவர்களுக்கு மண்டையில் போடுவது போராட்டம்.எதுக்கும் புலி முதல் முதலில் வெளியிட்ட புத்தகம் “சோஷலிச தமிழீழத்தை நோக்கி” என்பது அதில் புரட்சி தொடர்பாக நிறைய எழுதி இருக்கு.

    இங்கே நடக்கும் விவாதங்கள் ஒரு திசை இல்லாதவை என்பது உண்மை. நானா விதமான அரசியல் சக்திகளும் தங்கள் கருத்தை கொட்டுகின்றன. அதற்கான மேடை தான் இந்த இணைத்தளம். ஆனால் விவாதம் “போராட்டத்திற்கு” எதிரானது என்னும் பொழுது ஒரு மிருகத்தின் வால் தெரிகின்றது.

    Reply
  • palli
    palli

    றோமன்;
    //சோபாசக்தியுடன் எந்த விதத்திலும் ஒரு நேரடியான சண்டைக்கு போவது மனித சமுதாயத்தின் முன்னேறத்திற்கு ஒரு விதத்திலும் உதவப்போவதில்லை.//
    அதை நானும் விரும்பவில்லை, ஆனால் அவரே வந்து ஏதோ எல்லாத்தையும் சாதித்து விட்டு வந்துவிட்டேன்; என்பது போலவும் நாம் எதோ ஓடி ஒழிந்துவிட்டதாகவும் பார்ப்பது சரியா?? பல்லி பலருடன் இங்கு வாதம் செய்து உள்ளேன், இறுதியாய் நந்தாவுடன், அப்போதெல்லாம் வராத றோமன் இப்போது பல்லியை சாடுவது புரியவில்லை;

    //தேவையெனில் இந்த புத்தகங்களை தமிழில் பெற்றுக் கொள்ள முடியும். அதற்கான முயற்சி செய்தால். //
    தகவலுக்கு நன்றி;

    //நீங்கள் உங்களுக்கு தெரியாது என்று சொல்லும் போது உங்களது நோக்கம் மர்க்ஸ்சிசம் தொடர்பாக அறிய வேண்டிய உண்மையான கவனமோ இல்லையோ என்பதை என்னால் தீர்மானிக்க முடியாது இருக்கின்றது.//
    தெரியாததை தெரியாது என சொல்லுவதில் என்ன தப்பு, தெரியாத படியால் தெரிந்து கொள்ள கூடய சந்தர்ப்பம் இருக்கும் போது அதை தெரிந்து கொள்ளலாமே ;இது ஒரு தவறா?

    //உங்களது கருத்துக்களை நீண்ட காலமாக் வாசிக்கின்றேன், சில வேளைகளில் உங்களுக்கு மர்க்ஸ்சிசம் தெரியாது என்பீர்கள், சில வேளைகளில் மர்க்ஸ்சிச அல்லது இடதுசாரி கருத்துக்கள் மீது தாக்குதல் நடத்துவீர்கள்//
    யாராக இருந்தாலும் தவறை தவறெனதான் சொல்லுவேன்; அதுவே பல்லியின் பலம் பலவீனம்; நான் எங்கேயும் மார்க்ச்சிசத்தையோ அல்லது கமினிஸத்தையோ தாக்க முற்படவில்லை; சோபா போன்ற பலர் தம்மை அது இது என சொல்லுவதால் அவர்களை தாக்கும் (விமர்சிக்கும்போது வார்த்தைகள் வரலாம்) இது தவிர்க்க முடியாது அதோடு நான் பழகும் பலர் தம்மை மார்க்ச்சியவாதிகள் எனதான் சொல்லுகிறார்கள்? நான் எங்காவது நியாயம் இல்லாமல் கமினிஸ்ட்டுக்களை வம்புக்கு இழுத்தால் சுட்டி காட்டவும்;

    //முதலில் நீங்கள் தீர்மானிக்க வேண்டும். படிப்பதோ அல்லது தாக்குவதோ என்று//
    நான் இயக்க விபரங்கள் தெரிந்து கொள்ளும்போது தேசத்தில் எழுதுவதற்க்காக தேடவில்லை; ஆனால் இன்று எனக்கு அந்த தேடுதல் மிகவும் கை கொடுக்கிறது, மார்க்ச்சியமோ அல்லது கமினிஸமோ பரிட்ச்சைக்காக படிக்க நான் விரும்பவில்லை, தெரிந்து கொள்ளவே படிக்க முயல்கிறேன்; நான் ஒரு யதார்த்தவாதி என சொல்லுவதையே விரும்புகிறேன், அப்படியாயின் இவைகள் படிக்க கூடாதா என்ன?

    //தனிய படிப்பதால் மட்டும் மர்க்ஸ்சிசத்தின் நண்பனாக வரமுடியாது. //
    நான் மார்க்ச்சிசத்துக்கு நண்பனாக இருப்பதை விட மக்களுடன் நண்பனாக இருக்கவே ஆசைபடுகிறேன்; அப்படிதான் இருக்கிறேன்;

    //மகிந்தவின் அரசியலுக்கெதிராக பொன்சேகா குறைந்த கிரிமினல் என்ற வாதம் தீவின் மக்களுக்கு விடுதலை பெற்று தராது. இரண்டு கிரிமினல்களும் சிங்கள, தமிழ் மக்களின் விரோதிகள் என்பதை உணர வேண்டும். //
    நீங்கள் 2012 பற்றி யோசிக்கிறியள். பல்லி வருகிற 12ம்தேதியை பற்றி சிந்திக்கிறேன்; உதாரனத்துக்கு புலிக்கெதிராய் கருனாவின் குறைந்த கிரிமினல் வாதமே புலியை அழித்தது என்பதை இங்கே நான் சுட்டி காட்டலாமா? இது பற்றி மீண்டும் ஒருமுறை பின்பு விவாதிப்போம்;

    //சோபாசக்தி உங்களை பிராணி என்று சொன்னதற்காக அல்லது கேட்காமல் வம்பு குடுத்ததட்காக நீங்கள் “அல்லைபிட்டியில் இருந்து அண்ணாநகர் வரை கொட்டியல்ல பரவிகிடக்கு, தேவையானதை தேர்ந்து எடுக்கலாம் வாங்கோ” என்று சவால் விடுகின்றீர்கள்//
    அப்படியில்லை சோபா தோழர் பாலனுக்கு சொன்னார் கொட்டிகிடக்கு பல மர்மம் என்பதுபோல்; அதுக்கு தோழர் பல பின்னோட்டம் விட்ட பின்பு சோபாவின் நயாண்டி வசனங்கள் நீங்கள் கவனிக்கவில்லையா?? லீனாவை பாருங்கள் தேசம் ஒரு கோழை என சான்று கொடுக்கிறார்; ஆகவே இவர்களுக்கு அவர்களது பாணியில்தான் பதில் சொல்ல வேண்டும், இல்லையேல் நமக்கே கல்வெட்டு அடித்துவிடுவார்கள்?

    //மார்க்ஸ் உங்கள் இடத்தில இருந்திருந்தால் சோபாசக்தியின் கட்டுரையின் பம்மாத்து பெண்விடுதலை ஏன் பெண்களுக்கு விடுதலை பெற்று தராது என்பதில் கவனம் செலுத்தியிருப்பார்//
    அதுதான் சொல்லிவிட்டேனே எனக்கு இதுகள் தெரியாது, இவர்கள் போலியானவர்கள் என்பதை மட்டும் இப்போதைக்கு இனம் காட்டுவேன்; இதில் பல்லியை சொல்லிவிட்டு நீங்களும் பல்லியை போல் இதில்தான் எழுதிறியள்; மார்க்ச்சை போல் இது வேண்டாம் என ஒதுங்கி பம்மாத்து பேச்சுக்கள் எதையும் பெற்று தராது என என இப்படிதான் பல்லி எல்லோருடனும் தகராறு வருகிறது;

    றோமன் இத்தனை அறிவுரையையும் மார்க்ச்சியவாதி சோபாவுக்கு சொல்லாமல் யதார்த்தவாதியான பல்லிக்கு சொல்லியதில் இருந்து பல்லி ஏதோ செய்கிறது என்பதை பல்லி புரிந்துகொண்டேன், நன்றி றோமன்;

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //… தேசம் ஒரு கோழை என சான்று கொடுக்கிறார்; ஆகவே இவர்களுக்கு அவர்களது பாணியில்தான் பதில் சொல்ல வேண்டும்,…//palli
    தேசத்தைக் கோழை எனச் சொன்னால் நீங்கள் ஏன் பதில் சொல்ல வேண்டும். தேசம் எடிற்ரர்கள் அல்லவா தர்க்கரீதியாக பதில் சொல்ல வேண்டும்?

    முன்னர் ஒருமுறை ஜெயபாலனே சொல்லி இருந்தார் தேசம்நெற்றுக்கு சார்பாக கருத்தெழுதத் தேவையில்லை. உண்மைகளின் பக்கம் எழுதுங்கள் என்று !

    //…எதுக்கும் புலி முதல் முதலில் வெளியிட்ட புத்தகம் “சோஷலிச தமிழீழத்தை நோக்கி” என்பது அதில் புரட்சி தொடர்பாக நிறைய எழுதி இருக்கு…..//roman
    நானும் வாசித்தேன் அதில் புரட்சி தொடர்பாக இருந்தது அனால் மாக்சின் வேலைக்காரி பற்றி எல்லாம் இருததாக ஞாபகம் இல்லை

    Reply
  • JO
    JO

    பொழுது போக்கு அம்சமாக மாறிவிட்டார் சோபா. லீனாவுக்கு பொழுது போக்குத்தான் முழு நேர வேலை. அதுக்கு புலம் பெயரு தமிழனா கிடைத்தான். சோபா போன்றவா இருக்கும் வரை …………………

    Reply
  • Roman
    Roman

    பல்லி
    மர்ச்சிசம் நீங்கள் அணுகும் முறைக்கு நேரெதிரான முறையினை வேண்டி நிற்கின்றது. அதனை தொட்டுக் காட்டுவது தான் நான் உங்களது விலாசதிற்கு எழுதிய கருத்து. வேறு காரணங்கள் இல்லை

    அதிஸ்டவசமாக அல்லது துரதிஸ்டவசமாக நீங்கள் அதனை ஏற்ட்டுக்கொள்ளவில்லை. தொடர்ந்தும் நாங்கள் இருவரும் இந்த இணையதளத்தில் இந்த விடயம் தொடர்பாக கலந்துரையடுவதட்கு ஒன்றும் இல்லை.

    சாந்தன் on March 11, 2010 12:29 am
    [[//…எதுக்கும் புலி முதல் முதலில் வெளியிட்ட புத்தகம் “சோஷலிச தமிழீழத்தை நோக்கி” என்பது அதில் புரட்சி தொடர்பாக நிறைய எழுதி இருக்கு…..//roman
    நானும் வாசித்தேன் அதில் புரட்சி தொடர்பாக இருந்தது அனால் மாக்சின் வேலைக்காரி பற்றி எல்லாம் இருததாக ஞாபகம் இல்லை]]

    நான் எப்போ சொன்னேன் மர்க்ஸ்சின் வேலைகரியினை அந்தப் புத்தகத்தில் தேடும்படி.

    இடதுசாரி கருத்துக்களுடன் தான் புலிகள் தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் தொடங்கினார்கள் ஆனல் இந்த புத்தகத்துடன் “புரட்சி” பற்றிய கலந்துரையாடல் புலிகளின் தலைமைக்கு முடிந்து விட்டது.

    அதன் பின்னர் கலந்துரையடுபவர்களை கொல்லும் “புரட்சி” நந்திகடலில் கோமணங்கள் மிதக்கும் வரையில் தொடர்ந்தது. தற்போது இணையதளங்களில் ஆரம்பிக்க முயற்சி நடக்கின்றது

    Reply
  • புறா இல்ல சுறா
    புறா இல்ல சுறா

    ஷோபாசக்தியினது குரல் நியாயமென்பது எனது வாதம்.

    Helena Demuth und Marx, ஹெலேனா டெமுத்-மார்க்ஸ், ஷோபாசக்தி, தேசம் வாசகர்கள்:

    சிறுகுறிப்பு.

    ஷோபாசக்தியிடம் ஆதாரம் காட்ட முடியுமாவென வினவிக்கொள்வதால் உண்மைகளுக்கு மொட்டாக்குப் போடமுடியாது. ஹெலேனா டெமுத்துக்கும் மார்க்சுக்கும் இடையிலான உறவுகள் குறித்து நாம் புனிதக் காவற்கோட்டைக் காவலர்களாக முடியாது.

    அது போலவேதாம் கிட்லர்-ஸ்ராலின்பஃக் ஒப்பந்தம்.போலந்தில் நிகழ்ந்த படுகொலைகளை புதைத்துவிட்டு மனித விடுதலை குறித்துப் பேசுவது வேடிக்கை. இவற்றை எந்த அரசியலினதும் பெயராலும் எவரும் நியாயப்படுத்தலாம். ஆனால்,அவை மனித வளர்ச்சிக்கு உதவாது. மார்ஸ் மீதோ அல்லது லெனின், மாவோ, ஸ்ராலின் மீதோ துதிக்கத்தக்க வழிபாடு அவசியமில்லை! அரசியல் ரீதியாகவும், வியூக ரீதியாகவும் தவறுகளென்பது எவரும் செய்யக் கூடியதே.

    எது தவறு, எது சரியென்பதை வர்க்க ரீதியான சமூகமைப்பில் வைத்துப் புரிவதென்பது பரந்தபட்ட மக்களது கொலைகளை நியாயப்படுத்தித்தாம் சாத்தியமாகுமா? அது போன்றேதாம் இன்னொரு கேள்வி எழுகிறது. அதாவது, “கம்யூனிச ஆசான்கள் என்பவர்கள்மீதான விமர்சனங்கள் யாவும் முதலாளித்துவ எதிர்ப் பிரச்சாரமாகுமா? ” என்பது.

    பைபிள்மீது விமர்சனம் வேண்டாம் என்பதும், குரான்மீது அவ நம்பிக்கை கொள்ளக் கூடாதென்பதும் பலதரப்பட்ட தர்க்வாதத்தைப் புதைப்பதன் அடிப்படையைக் கொண்டது.

    கம்யூனிசத் தலைவர்கள் மாசற்ற பிதாமக(ள்)ன்கள் என்று எவர் பேச முனைகிறாரோ அவர் ஆபத்தான பேர்வழியென்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. தவறுகள் எங்கும் நிகழும். அது,தவறா அல்லது சரியாவென்பது நாம் கொண்டிருக்கும் உலகப் புரிதலுடன் சம்பந்தப்பட்டது. இங்கே,மார்க்சோ அல்லது லெனினோ தமது குடும்ப வாழ்வில் பலதரப்பட்ட சூழலில் காதல் வயப்பட்டிருப்பது அவர்களைப் பொறுத்தமட்டிலும், உலக-இயற்கைக்குட்பட்ட முறமைகளுக்கமையவும் தவறில்லை. அது,இயற்கையான மனித-உயிரின நடவடிக்கை. இங்கே, இந்தக் கருத்தியல் உலக- அமைப்புகளுக்குச் சாந்திட்டு காக்க அல்லது அடியொற்றிப் பேச முற்படுபவர்களுக்கு இது பெரும் சர்ச்சை. புனித நடாத்தையின் “தூய்மை” வாதப் பிரச்சனை.

    இன்று, மனித சமூகத்தில் பல பிரச்சனைகள் குறித்து ஆராயப்படுகிறது. இதுள் பொருளாதார மற்றும் அரசியல்-பௌதிகமென ஆய்வுகள் தொழில் ரீதியான முன்னேற்றத்துக்காகவும் மனித விடுதலைக்காகவும் செய்யப்படுகின்றன. நமது சூழலில் ஒன்றையொன்று மறுத்துத் தனிப்பட்ட நடாத்தைகள் சேறடிப்புகளென எழுத்துக்கள் மலிந்து விடுகிறது.

    நண்பர் ஷோபா சக்தி ஹெலேனா டெமுத்துக்காகத் தனது கொரில்லா நாவலைஅர்பணித்திருக்கிறார். சந்தோஷமான விடயம். மார்க்ஸ் அவர்களது வாழ்வில் கெலேனா அம்மையாருக்கான இடம் என்னவென்பது ஒரு முக்கியமான விஷயமே. இது குறித்து ஜேர்மனிய மார்க்சியர்கள்-இடதுசாரிக் கட்சிகள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் என்ன கூறியுள்ளார்களென்பது பலமாக ஜேர்மன் மொழிக்குள் இயங்குபவர்களால் அறிந்திருக்கக் கூடியதே.

    அவ்வண்ணமே ஜேர்மனியைப் பூர்வீகமாகக் கொண்ட ஹெலேனா டெமுத் அவர்களது வாழ்வு-சாவு, தியாகம்-விருப்பு வெறுப்புகளென எல்லா ஆசாபாசங்களும் ஜேர்மனிய மொழிக்குள் இருக்கிறது. ஹெலேனா அம்மையாரது கையெழுத்துப் பிரதிகள்கூட ஆவணக்காப்பகங்களில் இருக்கிறது. அவர் குறித்து வேலைக்காரியெனப் புரிதல் அரை குறை மார்க்சியப் புரிதலாளர்களிடம் இருக்கலாம். ஆனால், அந்த”வேலைக்காரி” இன்றி மார்க்சினது மூலதனம் சாத்தியம் இல்லை என்பது எனது புரிதல். ஹெலேனா அரசியல்-வர்க்கப் போராட்டம், அது குறித்த வியூகங்களென மார்க்சுடன் விவாதித்து இருக்கிறார். அவரது தியாகம் நிறைந்த உழைப்பின்றி மார்க்ஸ் குடும்பம் ஒருபோதும் இயங்கி இருக்க முடியாது. மார்க்சும் உழைப்பாளர்களது தந்தையாகி இருக்க முடியாது. எனவே,ஷோபாசக்தி தனது நாவலை ஹெலேனா அம்மையாருக்குக் காணிக்கையாக்கியது சரியானதே! எவர் மார்க்சின் மூலதனத்தை மெச்சுகிறாரோ அவர் நிச்சியம் ஹெலேனாவையும் மெச்சுகிறார் என்பதே எனது முடிபு-துணிபு!

    மார்க்ஸ் அவர்களுக்கும் ஹெலேனா அம்மையாருக்கும் இடையிலான தொடர்புகள், உறவுகள், திருமதி ஜென்னி மார்க்சினது விருப்புக்கமையவும் நிகழ்ந்தவை என்பதும், மார்க்ஸ் தனது சட்டபூர்வமான துணைவிக்கு எழுதிய கடிதத்திலிருந்து நம்மால் வாசித்தறியக் கூடியதாகவே இருக்கிறது. ஹெலேனாவின் மீதான காதலில் சிக்குண்டிருந்தபோது மார்க்ஸ் அதிகமாகக் காதல் வயப்பட்ட கடிதங்களை ஜென்னியோடு பகிர்ந்துள்ளார்.நாவோடு நா வைத்து முத்தமிடும் காதல் நடாத்தைகள் குறித்து மார்க்ஸ் தனது கைப்பட எழுதியிருக்கிறார். குடும்பம் பிரியாதிருப்பதற்காக அவர் பல முறைகள் காதலுணர்வின் உச்சத்தை ஜென்னி வெஸ்பாலினோடு செய்திருக்கிறார்.

    ஹெலேனா டெமுத் அவர்கள் மார்க்சினது மனைவி ஜென்னி ஃபொன் வெஸ்ற்பாலென் அவர்களது பெற்றோரிடம் வீடு பராமரிக்கும் தொழிலை ஆரம்பித்து இறுதிவரை அத்தொழிலை மார்க்ஸ் ஏங்கெல்ஸ்வரை செய்து, மடிந்திருக்கிறார். தான் விரும்புவது, விரும்பாததென அவரது கடிதம் கையெழுத்து எடுகளென(Poesiealbum)எழுதப்பட்டு ஆதாரமாக இருக்கிறது.

    ஹெலேனா அவர்களது கையெழுத்து ஏட்டை வாசிப்பவர்களுக்கு அவரது உள்ளத்தைப் புரியக் கூடியதாகவிருக்கும்.அவர் வீட்டு வேலைகளால் அதிகம் சுமையடைந்திருப்பதும், வெளியில் சென்று ஒரு நேரவுணவை ஒரு ரெஸ்ரேன்டில் உண்ணவும் விரும்பி இருக்கிறார்.தான் தனது கையால் சமைக்காத உணவை உண்பதே அவரது அதி விருப்பாகவும்-உலகத்தில் வாழ்வுப் பயனாகவும் கண்டிருக்கிறார். மார்க்ஸ் குடும்பம் மிக ஏழ்மையோடு உழைப்பாள வர்க்கத்துக்காக ஆய்வுகளில்-போராட்டத்திலிருந்தபோது ஹெலேனாவுக்கும் மார்க்ஸ் அவர்களுக்கிடையிலான காதலின் பொருட்டுப் பிறந்த குழந்தை 1851 இல்இன்னொரு குடும்பத்தில் கொடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டது ஹெலேனாவின் விருப்பின் பொருட்டானதாகவே இருக்கிறது.

    மார்க்சினது குடும்பத்தில் ஏலவே ஆறு குழந்தைகள் வறுமையினால் வாடும்போது தனது குழந்தையும் அவருக்குச் சுமை கொடுக்குமென்பதால் ஹெலேனா அம்மையார் தனது சொந்தக் குழந்தையை மார்க்சினது ஒப்புதலோடு வேறொரு குடும்பத்தில் வளர்க்கக் கொடுத்து விடுகிறார். இது வரலாறு.

    இங்கே, மார்க்ஸ் குறித்தோ அன்றி ஹெலேனா அவர்கள் குறித்தோ எவரும் சேறடிக்க முடியாது. அதைச் செய்தவர்கள் இடதுசாரிகளது வட்டத்திலிருந்த அதி துதிபாடிகளே. முதலாளியக் கருத்தியலாளர்கள்கூட ஜேர்மனியச் சூழலில் அதை மார்ஸ்-ஹெலேனா இருவரது சுதந்திரமாகவே பார்த்து வந்திருக்கிறார்கள்.

    சமீபத்தில் மார்க்சின் வரலாற்றை மீளப் பார்த்த சையிற் பத்திரிகைகூட மிக நாணயத்தோடு ஆவணங்களை முன்வைத்து இத்தகைய விவாதத்தை மிக அழகாகவும்,நீதியாவுஞ் சொல்லி இருக்கிறது.

    இங்கே,ஷோபாசக்தியினது குரல் நியாயமென்பது எனது வாதம்.

    ஒருபெரும் குடும்பம் (மார்க்ஸ் குடும்பம்) தொழிலாளர்களுக்காகத் தியாகஞ் செய்தபோது, அவர்களுக்காக அம்மையார் ஹெலேனா டெமுத் தனது வாழ்வையே அக் குடும்பத்துக்குத் தியாகித்து எமக்கு மூலதனம் எனும் அரிய விஞ்ஞானப் பாடத்தைத் தந்திருக்கிறார். இதன் ஆணிவேர் மார்க்ஸ் மட்டுமல்ல. அங்கே, ஏங்கெல்சுக்கு எவ்வளவு பங்குண்டோ அவ்வளவு பங்கு ஹெலேனாவுக்கு, ஜென்னி வெஸ்ற்பாலினுக்கு, ஜென்னி மார்க்சுக்கு உண்டு. அவ்வண்ணம் ஹெகலுக்கும் உண்டு. இதை எவரும்-எதன் பெயராலும் மறுக்க முடியாது.

    ப.வி.ஸ்ரீரங்கன்
    ஜேர்மனி
    10.03.2010

    Reply
  • msri
    msri

    நான் நேற்றையதினம் ஹெலன் டெமூத்தின் வரலாறு பற்றி அறிய முயலவேண்டும் என குறிப்பிட்டிருந்தேன். இதை சிறிரங்கன் தமிழரங்கத்தில் எழுதியுள்ளார். இதுபோன்று தொடர் படிப்பின் ஊடாக பலவற்றை பயிலமுடியும். தொடர்ந்து இதன் ஊடான ஆரோக்கியமான கருத்துக்களை பரிமாறலாம்.

    Reply
  • manithan
    manithan

    பெருமக்களே! மனிதன் மனிதத்தன்மையுடன் வாழ நிச்சயம் மாக்சிசமோ மதமோ தேவையா? ஏதோமாக்சுக்குத்தான் மண்டையிருக்கு மற்றவர்கள் எல்லாம் மண்டையில்லாமல் பிறந்தவர்கள் மாதிரியல்லவா அவரவர் பாட்டுக்கு அழவளாவுகிறீர்கள். உங்கள் மனச்சாட்சியை தொட்டுக் கேட்டு மற்றவர்களின் நிலையில் உங்களை நீறுத்தி நீங்களே நீதவானாய் நின்று வாழப்பழகுங்கள். மாக்சும் தேவையில்லை மதங்களும் தேவையில்லை. நல்ல மனச்சாட்சி உள்ள மனிதனை மாக்சே வந்து விழுந்து கும்பிடுவார். மனச்சாட்சியை அடைவு வைத்துவிட்டு மாக்சைச் சாட்சிக்கிழுப்பது தவறு. உங்களை மற்றவர்களின் நிலையில் சூழலில் நிறுத்திப்பாருங்கள். அதுபோதும் நீங்கள் மாக்சையும் மதங்களையும் விட உயர்ந்த நிற்கலாம். மனதாலும் வாக்காலும் மற்றவர்களைக் காயப்படுத்தாமல் இருந்தாலே போதும். நீங்கள் பெரிதாக எதையும் செய்யத் தேவையில்லை. பின்நோட்டம் என்ற பேரில் சேறடிக்கிறீர்களே. இதை மாக்ஸ் எங்காவது சொன்னாரா? மாக்சிதம் தெரியாதவர்களுக்கு உணவில்லை என்று யாராவது சொன்னார்களா. மிருகங்களுக்கு இருக்கும் தர்மமே மனிதனிடம் இல்லை இதற்குள் கார்மாக்சும் கடவுளும். நால்வது செய்பவர்களை வாழ்ந்துங்கள். இல்லையென்றால் நோகடிக்காமலாவது இருங்கள். அதுவே பெரியவிசயம்

    Reply
  • த ஜெயபாலன்.
    த ஜெயபாலன்.

    ஷோபாசக்தி மார்ச் 4 2010 11:01 பி ப
    கட்டுரையை மறுபிரசுரம் செய்ததற்கு நன்றி. அநேகமாக ‘உள்ளுக்க வரவிட்டு அடிக்கப் போறிங்க’ என்று நினைக்கிறேன்…செய்யுங்க! வாழ்த்துகள்!!
    ஷோபாசக்தி

    கட்டுரையை மறுபிரசுரம் செய்ததற்கு நன்றி தெரிவிக்கும் சோபாசக்தி சில நாட்கழித்து இவ்வாறு கட்டுரை எழுதுகிறார்.

    மார்ச் 7 2010 | : கட்டுரைகள் |
    பாவம் ஜெயபாலன் – ஷோபாசக்தி

    எனது வலைத்தளத்தில் எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன் மற்றும் ‘தேசம் நெற்’ உட்பட சில இணையத்தளங்களை நான் விமர்சித்துப் ‘பழி நாணுவார்’ என்ற கட்டுரையை வெளியிட்ட உடனேயே சூட்டோடு சூடாக அக்கட்டுரையை ‘தேசம் நெற்’றில் அதன் ஆசிரியர் த. ஜெயபாலன் மறுபிரசுரம் செய்தார். முன்னொருமுறை ‘தேசம் நெற்’றில் என் குறித்து யமுனா எழுதிய கலப்பிடமில்லாத அவதூறுக் கட்டுரையொன்றிற்கு நான் வரிவரியாக விரிவான மறுப்பை எழுதி என் வலைத்தளத்தில் வெளியிட்டுவிட்டு அதைத் தேசத்தில் மறுபிரசுரம் செய்யுமாறு அப்போதைய தேசம் ஆசிரியர் குழுவில் ஒருவரான சேனன் மூலம் ‘தேசம் நெற்’றைக் கேட்டபோது மறுபிரசுரம் செய்ய மறுத்த தேசம், இப்போது நான் கேட்காமலேயே எனது கட்டுரையை மறுபிரசுரம் செய்ததால் நான் கொஞ்சம் ஸ்ரெடியானேன்.//

    இப்படியெல்லாம் எழுதும் சோபாசக்தி பழி நாணுவார் கட்டுரை எழுதிய சூடு தணிவதற்குள் லீனா மணிமேகலைக்கு தனது கட்டுரைக்கான இணைப்பை அனுப்பிய அதேவேளை தேசத்திற்கும் அவ்விணைப்பினை வழங்கிவிட்டார். பொதுவாக நான் தமிழ் இணையத்தளங்களுக்குச் சென்று என்ன எழுதுகிறார்கள் என்று பார்ப்பதில்லை. தினமும் கட்டுரைகளுக்கான இணைப்புகள் வரும் தலைப்பின் விடயத்தைப் பொறுத்த குறிப்பிட்ட கட்டுரையை வாசிப்பேன். ஆனால் சோபாசகதி அவ்வாறான இணைப்புகள் எதனையும் முன்னர் அனுப்பியிருக்கவில்லை. ஓரளவு அறியப்பட்ட ஒரு எழுத்தாளன் தன்னுடைய கட்டுரையை எனக்கு அனுப்பி வைத்து பார்க்கும்படி கேட்கும் போது அதனை உதாசீனம் செய்வது அழகல்ல. அக்கட்டுரையை வாசித்தேன் அதில் இருந்த இரு பகுதிகளும் தேசம்நெற் உடன் தொடர்புபட்டு இருந்ததால் ஏனைய ஆசிரியர்குழு உறுப்பினர்களுடனும் கலந்துரையாடி அக்கட்டுரையை மீள் பிரசுரித்தோம்.

    கட்டுரை எங்களுக்கு அனுப்பபட்டது மாலை 3:42க்கு நாம் பிரசுரித்தது மாலை 9:42க்கு. சோபாசக்தியின் மொழியிலேயே சொல்வதானால் கட்டுரையை தேசத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு ‘வேட்டைநாய்’ போல் அல்லது ‘குட்டி போட்ட பூனை’யைப் போல் கட்டரை தேசம்நெற்றில் வருகின்றதா என்று அங்கும் இங்கும் தாவித் தாவி தேசம்நெற்றை செக் பண்ணிக் கொண்டு இருந்திருக்கின்றார். நாம் கட்டுரையைப் பிரசுரித்த சிறிது நேரத்திற்கு உள்ளேயே சோபாசக்தி நன்றி தெரிவித்து பின்னூட்டமும் விட்டுள்ளார் என்றால் அவரின் ஆர்வத்தை நாம் குறைத்து மதிப்பிட முடியாது.

    ஒரு அறியப்பட்ட எழுத்தாளன் தான் எந்த ஊடகத்திற்கு எதிராக கையெழுத்து வேட்டை நடாத்தினாரோ அந்த ஊடகத்தில் தனது கட்டுரை வர வேண்டும் என்று எதிர்பார்த்து இருந்து பின்னுட்டமும் விட்டது தேசம்நெற் கருத்தாளர்களுக்குக் கிடைத்த வெற்றியே. சோபாசக்தியின் மொழியில் சொல்வதானால் ‘பல்லி பூரான்’க்கு கிடைத்த வெற்றியே. இப்போதெல்லாம் எழுத்தாளர்கள் பல்லி பூரான்களுக்கும் பதில் கட்டுரை எழுதும் அளவுக்கு தேசம்நெற் இணையத்தில் ஜனநாயகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நாங்கள் பின்நவீனத்தவ வாதிகள்> முன்நவீனத்தவவாதிகள் இடை நவீனத்தவவாதிகள் எங்குளுக்கு எக்ஸ்ராவா கொம்பு முளைச்சிருக்கு நாங்கள் எழுதிக் குத்தினால் தாங்க மாட்டீர்கள் என்ற றீல் எல்லாம் மலையேறிப் போச்சு. நீங்கள் எழுதினால் கேட்பதற்கு பல்லியும் பூரானும் கூட இருக்கின்றார்கள் என்பதை சோபாசக்தி புரிந்துகொண்டவரை நல்லது.

    //தொடர்ந்து ‘தேசம்’ வாசகர்களின் வெவ்வேறு பின்னூட்டங்கள் வெளியாகின. ஒருவர் ஒரு கேள்வி கேட்டால் நான் மூன்று பதில்கள் சொன்னேன். எது குறித்து எவர் வந்தாலும் பதில் சொல்லி விவாதிப்பது என்ற முடிவோடு இருந்தேன்.// சோபாசக்தி
    ஆனால் தோழர் பாலன் கேட்ட மிகச்சாதாரண கேள்விக்கு ஏன் உங்களால் பதில் சொல்ல முடியவில்லை. அந்தக் கேள்விக்குப் பின் உங்களைக் காணவேயில்லை. பல்லி பூரானுக்கு எல்லாம் பதில் எழுதிய உங்களுக்கு தோழர் பாலனுக்கு ஏன் பதில் சொல்ல முடியாமல் போனது. அல்லது அவருக்கு தனியாக கட்டுரை எழுதுவதாக எண்ணமா. அப்படி ஏதாவது எழுதினால் தயவு செய்து இணைப்பை மறக்காமல் அனுப்பி வைக்கவும்.

    //நண்பா ஜெயபாலன்! தவறிழைப்பது இயல்புதான். நீங்கள் தவறிழைக்கிறீர்கள் எனச் சில காலத்திற்கு முன்பு நாங்கள் எழுபத்துச் சொச்சப் பேர்கள் சேர்ந்து ‘தேசத்தின் அவதூறு அரசியல்’ என்று கையெழுத்து இயக்கம் நடத்தியது வீண் வேலையென நீங்கள் அப்போது சொன்னீர்கள். அது உண்மையிலேயே வீணான வேலையென்று நான் இப்போது உணர்கிறேன். கடுகளவேனும் பலன் தராத வேலையெல்லாம் வீண்வேலைதானே.// சோபாசக்தி

    நண்பர் சோபாசக்திக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். நீங்கள் என்றைக்கு கடுகளவேனும் பலன்தரக் கூடிய வேலை செய்திருக்கின்றீர்கள் எனச் சொன்னால் எதிர்காலத்தில் மற்றவர்களும் அவ்வாறான பலன்தரக் கூடிய வேலைகளைச் செய்வதற்கு உதவியாக இருக்கும். சோபாசக்தி முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். உங்கள் செயற்பாட்டில் நம்பிக்கை இருந்தால் நீங்கள் ஏன் இன்னும் பலரைச் சேர்த்து இன்னுமொரு கையெழுத்து வேட்டை நடாத்தக் கூடாது. முன்பு கையெழுத்திட மறுத்த பலர் இப்போது கையெழுத்திடத் தயாராக இருப்பார்கள். முயற்சி செய்து பாருங்களேன். தேசம்நெற் மக்கள் ஊடகம் என்பதை நீங்கள் நம்பும்வரை நீங்கள் கையெழுத்து வேட்டை நடாத்த வேண்டும். அதுவே என் விருப்பம்.

    த ஜெயபாலன்.

    Reply
  • jo
    jo

    ப.வி.ஸ்ரீரங்கா புத்தகப் பூட்சியாய் அன்றிலிருந்து இன்று வரை அது சரி இது சரி ரருசியா சீனா பின் ரெலோ புளொட் ஈபி …… எல்லாவற்றையும் அழித்து ……சோபா தெரியாத ஒருவருக்கு பெயருக்காக அர்ப்பணிக்க குடை பிடிக்கின்றீர்கள். வர்க்கம் எனசொல்லும் நீங்கள் புத்தகம் வாசிப்பதைவிட உருப்படியாக என்ன செய்தீர்கள். நீங்கள் புலம் பெயாந்த நாட்டிலாவது மக்களுக்கு ஏதாவது……

    Reply
  • ravanan
    ravanan

    நீங்களே ஒரு மேடைபோட்டு நீங்களே அதில் ….
    பத்திரிகை சுவாரிசியம் எல்லாம் தேவைதான். அதற்காக உப்படியா?

    Reply
  • chandran.raja
    chandran.raja

    தமிழ் புத்தியீவிகள் தமிழ் சினிமா உலகத்தால் புடமிடப் பட்டு வெளிவந்தவர்கள். இதற்கு த.ஜெயபாலனே சோபாசக்தியோ விதிவிலக்கல்ல. இவர்கள் தங்களுக்குள் தங்களுக்குள் ஒரு சட்டதிட்டத்தை கொள்கைகளை வைத்து போராடுபவர்கள் அல்ல?.
    ஜமுனா ராஜேந்திரன்!?? தற்போதைக்கு சினிமா பாணியிலே பதில் அளிக்க வேண்டியதாக உள்ளது. “சிந்தித்தால் சிரிப்பு வரும். மனம் நொந்தால் அழுகை வரும்”.

    Reply
  • John205
    John205

    அன்புடன் சிறிரங்கள் சோபாவின் பால் நியாயம் இருப்பதாக எழுதியுள்ளீர்கள் சரி இந்த வாசகன் கூறும் விடயங்களை ~சோபா பதில் கூறியுள்ளாரா?
    புழியடயn ழn ஆயசஉh 6இ 2010 1:05 pஅ 1. தனிமனித முரண்பாடுகளே மாபெரும் தத்துவ விவாதமாக இருக்கும் நிலையை காட்டுகின்றது. இவ்வாறான விமர்சன விவாதங்களுக்கும் வர்க்கப் போராட்டத்திற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? (யமுனா – சோபா அன் கோ)
    2. தனிமனித பலவீனத்தை மறைப்பதற்கு தோழர் – தலைவர்- ஆசான் என போற்றப்படும் மார்க்ஸ் இங்கு வலிந்திலுக்கப்பட்டுள்ளார். இவ்வாறு முன்னர் இலக்கியச் சந்திப்பு கழியாட்டக்காரர்கள் மார்க்சின் வாழ்வை சாட்சியாகக் காட்டியுள்ளார்கள். மார்க்ஸ் தூற்றுபவர்கள் மார்க்சீய விரோதிகளே அன்றி வேறுயாருமல்ல. அவருடைய வாழ்வின் ஏன் ஜென்னியின் வாழ்வின் பல சோக அத்தியாயங்கள் எவ்வாறு இருந்தது என்பதை கூலிக்கு மாரடித்த மார்க்ஸ்காலத்து உளவாளியின் பகுப்பாய்வு தன்மை கூட மார்க்சை ஏற்றுக் கொள்பவர்களிடம் இல்லையென்பதை அறியலாம். (தோழர் பாலனுடன் உடன்பாடு உண்டு)
    3. ஏகாதிபத்திய சமூகத்தில் வாழ்ந்து கொண்டு இங்குள்ள வாழ்க்கை முறையின் அளவீட்டின் அடிப்படையில் தெருவில் படுத்துறங்கும் மக்கள்ளைப் பற்றி மதிப்பீடு செய்வதான எண்ணும் சிந்தனையை இங்கு பார்க்கலாம். நீங்கள் வாழும் தேசத்தின் வாழ்வியல் சிந்தனை வேறு அங்கு வாழும் மக்களின் பொருளாதார வளம் வேறு; வாழ்க்கை முறை வேறு; மேற்குலக கண்ணாடி போட்டுக் கொண்டு அல்லது வளர்முகநாடுகளின் மேட்டுக்குடி கண்ணாடியைப் போட்டுக் கொண்டு கட்டுடைப்புச் செய்வது பெரும்பான்மை மக்களின் வாழ்நிலையை பிரதிபலிப்பதாக இருப்பதில்லை என்பதை மறுக்கின்றது போக்கு.
    4. செக்ஸ்; உடறுறவு -வாதம் (உடலரசியல்) என்பதே முதன்மைக் உலகக் கண்ணோட்டமாக இருக்கின்ற அணுகுமுறை வர்க்கச் சிந்தனையை மழுங்கடிக்கின்றது. இது தனியே வெறும் யோனி – ஆண்;குறி (குண்டலினி- லிங்கம்) இவற்றிற்கிடையோன பிரச்சனையே முதன்மையானது என்று சுட்டி நிற்கின்றது.
    5.கோணேஸ்வரி பற்றி தமிழச்சி எழுதியுள்ளதை வாசகர்கள் வாசிப்பது தகும்.

    சோபா இவற்றிற்கு பதில் தந்திருந்தால் தகும். நீங்கள் கூறுவது போல் புனிதம் என்பது இல்லை. இங்கு மார்க்ஸ் பெண்நண்பர்களை கொண்டிருந்தார் என்பதல்ல பிரச்சனை. ஆனால் மார்க்ஸ் உடறுறவு -வாதம் உடலரசியல் என்ற கண்ணோட்டத்தில் மாத்திரம் தான் தன்து அல்லது ஜென்னி அவரின் குடும்பம் ஏங்கொல்ஸ் அல்லது அம்மையார் ஹெலேனா டெமுத் இவர்களின் உழைப்பை இருந்திருக்கின்றா? இவைதான மையப் பிரச்சனை. உடலரசியலுக்கு அப்பால் உருவாகிய இயங்கியல் பொருள்முதல் வாதம் என்பது முக்கிய பிரச்சனை இல்லை என்பதை தான் நிறுவிட்டார்கள்.

    Reply
  • palli
    palli

    //மர்ச்சிசம் நீங்கள் அணுகும் முறைக்கு நேரெதிரான முறையினை வேண்டி நிற்கின்றது. அதனை தொட்டுக் காட்டுவது தான் நான் உங்களது விலாசதிற்கு எழுதிய கருத்து. வேறு காரணங்கள் இல்லை
    அதிஸ்டவசமாக அல்லது துரதிஸ்டவசமாக நீங்கள் அதனை ஏற்ட்டுக்கொள்ளவில்லை. தொடர்ந்தும் நாங்கள் இருவரும் இந்த இணையதளத்தில் இந்த விடயம் தொடர்பாக கலந்துரையடுவதட்கு ஒன்றும் இல்லை.//roman
    அப்படா தப்பினேன் பல்லி நானும் நீங்கள் பதினாறாம் வாய்பாட்டை கேப்பியள்; நானும் தடக்குபடுவேன் என நினைத்தேன்; ஆனால் நீங்களோ பல்லிக்கு எட்டாம் வாய்பாடே தெரியாது என்பது போல் நன்றி வணக்கம் சொல்லி விட்டியள். நீங்களோ இறந்த காலங்களை அசை போடுறியள்; நானோ எதிர்காலத்தை எப்படி எதிர்பார்க்கலாம் என சிந்திக்கிறேன்; ஆக இறந்த காலமும் எதிர்காலமும் நிகழ்காலத்தில் விவாதிப்பது தேவையற்றது என்னும் உங்கள் கூற்றை பல்லியும் ஏற்றுகொள்கிறேன்;

    // தேசத்தைக் கோழை எனச் சொன்னால் நீங்கள் ஏன் பதில் சொல்ல வேண்டும். தேசம் எடிற்ரர்கள் அல்லவா தர்க்கரீதியாக பதில் சொல்ல வேண்டும்?:://
    சாந்தன் இதை இப்படி சொல்லலாமா?? புலியை சொன்னால் சிலருக்கு வரும் கோபம் பாருங்க; அப்படி கோபம் அல்ல இது, இதில் பல்லியையும் வம்புக்கு இழுத்தார்கள். அதை றோமனும் சுட்டி காட்டினார், தேச நிர்வாகம் சம்பந்தமாக இருந்தால் கண்டிப்பாக எமக்கு அங்கு வேலை இல்லை, ஆனால் இது தேசம் எழுதாளர் பற்றியது, அதுவும் பல்லி தேசத்தில் மட்டுமே எழுதுகிறேன்; மற்றபடி ஒன்றுமே இல்லை; பல்லிக்கு பால் வாக்கிறதிலேயே கவனமாய் இருங்க;

    Reply
  • tholar balan
    tholar balan

    தன்னை மாக்சியவாதி என்று கூறிக்கொள்ளும் சோபாசக்தி கூறுகிறார் “ஹெலன் டெமூத்தோடு தனக்கிருந்த காதலையோ தன்மூலம் ஹெலன் டெமூத்துக்குப் பிறந்த குழந்தையையோ கார்ல் மார்க்ஸ் அவர் மரணிக்கும் வரை ஒப்புக்கொள்ளவேயில்லை. நீண்ட காலத்திற்கு அது ஏங்கெல்ஸ் உட்பட வெகுசிலருக்கு மட்டுமே தெரிந்த உண்மையாயிருந்தது. ஹெலன் டெமூத் மரணித்த பின்புதான் அவருக்கு கார்ல் மார்க்ஸின் காதலியென்ற ‘அங்கீகாரம்’ கிடைக்கப்பெற்று அவர் மார்க்ஸின் கல்லறையிலேயே புதைக்கப்பட்டடார்.”

    கால்மாக்ஸ் இருந்த போது இது பற்றி எதுவும் பேசப்படவில்லையே..அவர் இறந்த பின்பும் பல காலம் இது பற்றி எதுவும் பேசப்படவில்லையே. இப்போது நீங்கள் இதை என்ன ஆதாரத்தின் அடிப்படையில் கூறுகிறீர்கள் என்று கேட்டால் அவர்கள் கண்டுபிடித்த ஆதாரத்தை முன்வைப்பதுதானே முறை. ஆனால் ஆதாரத்தை முன்வைப்பதை விட்டு ஆதாரம் கேட்ட எம் மீது எதற்காக புது லேபல்களை குத்த முயலவேண்டும்?

    இதோ சங்கமன் என்பவர் மாக்ஸ் பற்றி என்ன கூறுகிறார் என்பதை கொஞ்சம் கவனியுங்கள். “ மாக்ஸ் மாதிரி தன் மனைவியைச் சுரண்டியவர் வேறுயாரும் இருக்கமுடியாது. முழு நேரத்தையும் பிரிட்டிஸ் மியூசியத்தில் கழித்த மாக்ஸ் தன் உடல் இச்சையைத் தீர்ப்பதற்காகக்தான் மனைவியிடம் வந்தார். அவளைத் தொடர்ந்து கர்ப்பவதியாக்கினார். வறுமையில் வாட விட்டார். அது மட்டுமல்ல தன் உடல் இச்சையைத் தீர்த்துக்கொள்ள ஒரு வைப்பாட்டியை வேறு வைத்துக்கொண்டார். இதைவிடக் கேவலமான சுரண்டல்தான் தன் மூலம் வைப்பாட்டிக்கு கிடைத்த குழந்தைக்கு தான் அப்பன் என ஏற்றுக்கொள்ள மறுத்தது. அப்படிப்பட்டவரின் தத்துவத்தில் பெண்களை ஆண்கள் சுரண்டுவது பற்றிய பேச்சை எதிர்பார்க்கமுடியாது.”

    ஏன்ன இப்படி கொச்சையாக விமர்சிக்கின்றீர்கள். இதற்கு என்ன ஆதாரம் என்று நாம் இந்த சங்கமன் போன்றவர்களிடம்; கேட்டால் அவர்கள்; “மாக்சியவாதியான சோபசக்தியே சொல்லிவிட்டார்.அப்போது வாயைப்பொத்திக் கொண்டு இருந்துவிட்டு இப்போது நாங்கள் அதை திருப்பிச் சொல்லும் போது மட்டும் எங்களிடம் வந்து கேட்கிறீர்களே. “தில்” இருந்தால் சோபாசக்தியிடம் போய் கேளுங்கள் “ என்று சொன்னால் நாம் என்ன செய்யமுடியும்? எனவேதான் சோபாசக்தியிடம் மீண்டும் மீண்டும் கேட்கவேண்டியதாக இருக்கின்றது. சோபாசக்தி போன்றவர்கள் அறிந்தோ அறியாமலோ கூறும் விடயங்கள் மாக்சிய விரோதிகளின் நோக்கங்களுக்கு துணை புரிவதாலேுயே நாம இது குறித்து கவனம் செலுத்துகிறோம்.

    அடுத்து சோபாசக்தி தனது கட்டுரையில் தான் இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டதற்கு அதனை மொழிபெயர்த்த எஸ்.வி.ராஜதுரை அவர்களும் ஒரு காரணம் எனக் குறிப்பிட்டு அவர் பற்றி பின்வருமாறு தனது அபிப்பிராயத்தை தெரிவிக்கிறார். “நூலை மொழிபெயர்த்தவர்கள் தோழர்கள் வ. கீதாவும்இ எஸ்.வி. ராஜதுரையுமாயிருக்க அவர்களின் மொழிபெயர்ப்பைச் சந்தேகப்பட்டால் நான் மனிதனே இல்லை என்று என் மனச்சாட்சி சொன்னது. ஏனெனில் அவர்கள் இருவரும் மொழிபெயர்ப்புகளில் மற்றும் தங்களது எழுத்துகளில் மார்க்ஸியம் குறித்தும் பெரியாரியம் குறித்தும் இலக்கியம் குறித்தும் எவ்வளவு தீவிரமாகவும் நேர்மையாகவும் உழைப்பவர்கள்இ அவர்களையா நான் அய்யுறுவது!”

    சோபாசக்தி எந்த எஸ்.வி.ராஜதுரைபற்றி குறிப்பிட்டுள்ளாரோ அதே எஸ்.வி.ராஜதுரை அவர்களைப் பற்றி சிவசேகரம் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார். “மாக்ஸ்ற்கும் அவர் வீட்டின் வேலைக்கார பெண்ணிற்கும் இடையிலான உறவு தொடர்பாக யமுனா ராஜேந்திரன் எழுதியது பற்றி எஸ்.வி.ராஜதுரை லண்டனில் என்னிடம் மிகவும் கோபத்துடன் குறிப்பிட்டார். யமுனா ராஜேந்திரன் எழுதிய தகவல் மாக்ஸின் கல்லறைக்கு விஜயம் செய்வோருக்கு வழங்கப்படும் துண்டுப்பிரசுரத்தில் இருந்து பெறப்பட்டது என்பதையும் அப்பெண்ணின் உடலும் மாக்சின் கல்லறையில் புதைக்கப்பட்டுள்ளதாக அங்கு குறிப்பிட்டதை அவர் தனது கட்டுரையில் கூறாது தவிர்த்தமையும் பற்றி யாராவது எழுதவேண்டும் என்று எஸ்.வி.ஆர் என்னிடம் கூறினார்.”
    எஸ்.வி.ராஜதுரை மீது மிகுந்த மதிப்பு வைத்திருப்பதாக கூறும் சோபாசக்தி இதற்கு என்ன விளக்கம் கொடுக்கப்போகிறார்?

    சோபாசக்தி தனது கட்டுரையில் நான் கெலன் டெமூத்தின் பெயரைக் குறிப்பிடாமல் வேலைக்காரி என்று குறிப்பிட்டு அவமதித்து விட்டதாகவும் இது எனது மேட்டுக்குடி தன்மையை வெளிப்படுத்துவதாக என் மீது குற்றம் சுமத்தியிருந்தார். பாவம் சோபாசக்தி.இந்த தாக்குதல் உத்தியைக்கூட அவர் யமுனா ராஜேந்திரனிடமே இரவல் வாங்கியிருக்கிறார். இதோ உயிர்நிழல் சஞ்சிகையின் 1999 ஜீலை-ஆகஸ்டு இதழில் சிவசேகரம் குறித்து யமுனா எழுதிய வரிகள் “ சிவசேகரம் தனது இரண்டு கடிதங்களிலும் கெலன் டெமூத்தை வேலைக்காரப்பெண் என்றோ அல்லது அந்தப்பெண் என்றோதான் குறிப்பிடுகிறார். இதுதான் அவர் ஆதாரபூர்வமாக அறிவுபூர்வமாக பிரச்சனையை அணுகும் போக்கு எனில் இவரது மாக்ஸியம் நிச்சயம் புதைகுழிக்குத்தான் போகும். புpரச்சனைக்குரிய ஆளுமைகொண்ட மனுசியைக்கூட நாகரீகமாக கௌரவிக்க தெரியாத இவர் பேசுகிற பெண்ணிலைவாதம் நகைப்புக்குரியது. ஏதோ இரண்டாம்தர பிரஜையை பார்க்கிற மாதிரித்தான் சிவசேகரம் கெலன் டெமூத்தை பார்க்கின்றார்.”

    யமுனாராஜேந்திரனின் கருத்தை மட்டுமல்ல அவரின் தாக்குதல் உத்தியையும் இரவல் பெற்றுக் கொண்ட சோபாசக்தி அதனை தனது கட்டுரையில் ஒரு முறைகூட குறிப்படாதது எனக்கு ஆச்சரியம் தரவில்லை. ஏனெனில் இது குறித்து சோபாசக்தி இருக்கும் சங்கடத்தை என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது.

    மேலும் இங்கு சோபாசக்தியை சங்கடப்படுத்த வேண்டும் என்பது என் நோக்கம் அல்ல.மாறாக நான் தொடர்ந்து கூறிவருவது போல சோபாசக்தி போன்றவர்கள் என்ன ஆதாரத்தின் அடிப்படையில் கால்மாக்ஸ் மீது அவதூறு பொழிகிறார்கள் என்பதை தெரிந்து கொள்வது மட்டுமே. எனவேதான் இந்தவிடயத்திற்கு அப்பால் சோபாசக்தி எழுப்பும் மற்ற விடயங்கள் குறித்து எனது கருத்தை பதிவதை தவிர்த்து வருகிறேன்.

    Reply
  • tholar balan
    tholar balan

    “கெலன் டெமுத்- மேலும் ஆதாரங்கள”; என்ற தலைப்பில் சிறீரங்கன் என்பவர் எழுதிய கட்டுரையை சோபாசக்தி தனது வலைத்தளத்தில் பிரசுரித்துள்ளார். அதில் குறிப்பிடும் ஆதாரங்களையும் கருத்துக்களையும் தான் ஏற்றுக்கொள்கிறாரா அல்லது ஏற்றுக்கொள்ளவில்லையா என்பது குறித்து ஏதும் குறிப்பிடாமலே சோபசக்தி அதனை பிரசுரித்துள்ளார். மேலும் அதில் இணைக்கப்பட்டுள்ள எட்டு ஆதார இணைப்பில் ஒன்று மட்டுமே ஆங்கிலத்தில் உள்ளது. மற்றதெல்லாம் ஜெர்மன் மொழியில் உள்ளது. ஏனக்கு ஜெர்மன் மொழி தெரியாததால் அதில் இணைக்கப்பட்டிருக்கும் ஆதாரம் குறித்து என் கருத்தை தெரிவிக்க முடியவில்லை. சோபாசக்தி இதனை பிரசுரித்திருப்பதை பார்க்கும்போது அவர் அதில் என்ன உள்ளது என்பதை படித்துப் பார்த்து பிரசுரித்திருப்பார் என நம்புகிறேன். ( சோபாசக்தி தான் இணைக்கும் ஆதாரங்களையே படித்துப்பார்ப்பதில்லை.. இந்த நிலையில் சிறீரங்கனின் ஆதாரத்தை படித்திருப்பார் என நிபை;பது சிறந்த நகைச்சுவையாகவே இருக்கும் என சிலர் நினைக்கக்கூடும். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை.)இங்கு இணைத்துள்ள ஆதாரத்தில் என்ன உள்ளது என்பதை சோபசக்தியோ அல்லது சிறீரங்கனோ முழுமையாக மொழிபெயர்த்து கொடுக்காவிட்டாலும் முக்கிய பகுதிகளையாவது மொழிபெயர்த்து கொடுத்தால் நாம் எமது கருத்துக்களை தெரிவிக்க உதவியாக இருக்கும்.

    மேலும் சிறீரங்கன் நான் என்ன கேட்கிறேன் என்பது கூட புரியாமல் சோபாசக்தி பாணியில் “மாக்சிய தலைவர்கள் ஒன்றும் புனிதர்கள் கிடையாது. அவர்களும் சாதாரண மனிதர்கள்தான். அவர்களை புனிதர்களாக்குவது தீவிர இடதுசாரித்தனம். அவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் என்றெல்லாம் எம் மீது லேபல்கள் குத்தி கதை எழுதுகிறார். சிறீரங்கனிடம் நான் வேண்டிக்கொள்வது என்னவென்றால் உந்த லேபல் குத்தும் அரசியலை விட்டு உண்மையிலே ஆக்கபூர்வமாக ஏதாவது கருத்துக்களை வைக்க முயற்சி செய்யும்படி என்பதே.

    கால்மாக்ஸ் பற்றி நிறைய ஆதாரங்கள் ஜெர்மன் மொழியில் இருப்பதாக இங்கு சிறீரங்கன் தெரிவிக்கிறார்.அதுபோல் தளபதி என்பவரும் கால்மாக்ஸ் ஜெர்மனியில் வாழ்ந்து மடிந்து போனதாகவும் அதற்கு ஜெர்மன் மொழியில் நிறைய ஆதாரம் இருக்கிறது என்று இதே தேசத்தின் பின்னூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனை சிறீரங்கன் ஏற்றுக்கொள்கிறாரா என்று தெரியவில்லை.எனவே முதலில் தளபதியும் சிறீரங்கனும் ஜெர்மன் மொழியில் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வரட்டும். அதன் பின் அவர்கள் எந்த ஜெர்மன் ஆதாரம் உண்மை என்று கூறட்டும். அதற்கு பின்பு நாம் எமது கருத்துக்களை முன்வைக்கலாம்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    இன்று எந்த நிலையிருந்தாலும் நாடு கண்டம் தாவி-மேவி எல்லோர் கைகளின் கட்டப்பாடுகளையும் மீறி உலகமாக யுத்தம் வந்தே தீரும். இது பஞ்சம் பட்டிணி பற்றாகுறை நோய் சாக்காடு முன்பு எந்தகாலத்திலும் இல்லாதவாறு தலை விரித்தாடும். இதுவே மனிதர்கள் எதிர் நோக்கும் பிரச்சனை.
    ஏதோ! இந்த பூவுலகில் மனிதநேயம் அறவே அழிந்து போனது என்று அர்த்தப்படாது. வியாபாரிகளின் கைகளில்லிருந்து இந்த உலகை மீட்டெடுக்க முடியாமல் இருப்பதே!. இது மாதங்கள் சிலவருடங்கள் கடந்து நடந்தேறியே தீரும். ஏதோ ஒருவழியில் பார்த்தால் ஒவ்வொருவனுக்கும் ஏதோ ஒரு வழியில் ஒரு வைப்பாட்டி இருந்திருக்கிறார்கள்.சரி இல்லையென்று வைத்துக் கொண்டாலும் ஒரு மாபெரும் மேதையை மனிதகுலத்திற்கு மனிநேயத்தை ஒளிபாச்சிய மேதையை அவரின் ஆய்வுகள் கண்டுபிடிப்புகள்(வர்க்கம் உபரிமதிப்பு பாட்டாளிவர்க்க சர்வதிகாரம்) எல்லா வற்றையும் விடுத்து மணைவியையும் வைப்பாட்டியையும் சந்திக்கு இழுத்து வந்து முக்கிய பிரச்சனையாக்கி விமர்சிப்பது பாட்டாளிவர்கத்திற்குரிய போக்கல்ல என்பதை மட்டும் உறுதியாக சொல்லமுடியும்.அது ஒருவகை புளிச்சல் ஏவறையே!.

    Reply
  • thalaphathy
    thalaphathy

    //அதுபோல் தளபதி என்பவரும் கால்மாக்ஸ் ஜெர்மனியில் வாழ்ந்து மடிந்து போனதாகவும் அதற்கு ஜெர்மன் மொழியில் நிறைய ஆதாரம் இருக்கிறது என்று இதே தேசத்தின் பின்னூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்.//-tholar balan on March 12, 2010 12:36 am

    //கார்ல் மார்க்ஸ் ஓரு ஜேர்மனியர், அவர் பின்னர் சிறிதுகாலம் ஜேர்மனியிலிருந்து விரட்டப்பட்டாலும்கூட அவர் மீண்டும் ஜேர்மனிக்கு திரும்ப வந்து வாழ்ந்தவர். அவரின் வாழ்க்கைவரலாற்றைப் பற்றி ஜேர்மனியர்களைவிட இலங்கையர்களுக்கு, குறிப்பாக ஜேர்மன்மொழி வாசிக்கத் தெரியாத தமிழர்களுக்கு, கார்ல் மார்க்ஸை பற்றி எல்லாம் தெரியுமென வாதிடுவது – // -thalaphathy on March 10, 2010 8:52 am

    இப்ப தெரிகிறது தோழர் பாலனின் தமிழறிவு.

    தோழர் பாலன், சும்மா நீங்க நினக்கிறமாதிரியெல்லாம் தமிழை மாற்றி மாற்றி எழுதி மற்றவர்களை வம்பிற்கிழுக்கும் அரைத்தமிழன் நானில்லை. தமிழை முதழில் தமிழாக வாசித்து அர்த்தம் புரிந்து கொள்ளுங்கள்.

    நான் எந்த இடத்திலாவது கார்ல் மார்க்ஸ் ஜேர்மனியில் மடிந்தார் அல்லது இறந்தார் என்று குறிப்பிட்டுல்ளேனா?

    இதற்கும் மேலாக கார்ல் மார்க்ஸின் வாழ்க்கை வரலாற்ரை முதலில் ஜேர்மன் மொழியில் முதல் ஆதாரமாக அதில் இனைத்துள்ளேன். மீண்டும் 5 வது பின்னூட்டத்தையும் இணைய இணைப்பையும் ஒருக்கால் சரி பார்க்கவும்.

    Reply
  • வைஷ்ணவி
    வைஷ்ணவி

    Sri Ranka!
    தத்துவ ஆசான்களை புனிதர்கள் ஆக்க கூடாது என்பதை ஏற்று கொள்ளகிறேன். ஆனால் எல்லாம் தெரிந்தது போல, வரலாற்று ஆவணங்கள் என நீங்கள் கூறும் பதிவுகளின், உள் அடக்கம் எப்படி உன்களால் விளங்கப்பட்டதோ, அவ் விளக்கங்களை உண்மை என இங்கு நிறுவ முயன்ருள்ளிர்கள்.
    இதே போல் பல ஆயிரம் விளக்கங்கள் internett இல் கொட்டிக்கிடகிறது . அவ் விளக்கங்கள் பல உங்கள் கருத்துக்கு முரணானவை.
    அதாவது ஒரே ஆவணங்களை, பலரும் தமது, அறிவு , வர்க்க சிந்தனை, கல்வி , சுஜ தேவை , அனுபவம் போன்றவைகளின் அடிப்படையில் தமது தேவைகேற்ப விளங்குவார்கள். அதைத்தான் நீங்களும், அங்கிடுதத்தி , சூன. சக்தியும் செய்கிறீர்கள். ஆலை இல்லா ஊரில் இலுப்பை பூ சக்கரையாம் ! இதெல்லாம் ஏம் மக்களின் தலை விதி!! பாவம் மார்க்ஸ்!

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    “கார்ல் மார்க்ஸ்” எழுத்துக்களை சுருங்கக் கூறினால், அது ஒரு வரலாற்று எதிர்வு கூறல்!. “Marx argued that capitalism, like previous socioeconomic systems, would inevitably produce internal tensions which would lead to its destruction.”— அதை “குரான்” போன்று ஒரு சித்தாந்தமாக மாற்றியது,கடைசி பாகங்களை எழுதிய பிரட்டிரிக் ஏங்கல்ஸ்தான்!.இதில் “தனிநபர் ஒழுக்கம்” என்பது,அடிப்படைவாதம் போல் வலியுறுத்த முடியாது. இது கார்ல் மார்க்ஸ்சின் நோக்கமும் அல்ல!. கார்ல் மார்ஸ் கிட்டதெட்ட, “பரமஹம்ஸ நித்தியானந்தா” மாதிரி, “ஞான ஒளி” பெற்றாலும் ஐரோப்பிய மெட்டீரியல் சூழல் காரணமாக, ஒரு “எபிஸ்டொமோலெஜி” பின்பற்றி அவர் வாழ்ந்த ஜெர்மானிய சூழலை பிரதிபலித்தார் (தொழில் புரட்சி?). இதில் ஏங்கல்ஸ்தான்,”பிரெட்ரிக் ஹேகலினால்” பாதிக்கப்பட்டு, தற்போதைய கம்யூனிச சித்தாந்தத்தை முழுமை படுத்தினார்!. ஹேகலின் தத்துவம் என்பது “யுனிவர்சல்” என்பதைவிட, “ஐரோப்பிய கண்டத்தின் நலன்” சார்ந்ததாகவே இருந்தது? (இன்டரஸ்ட் பாலிட்டிக்ஸ்). கிரிஸ்தவ மதங்களில், “செலிபசி (பிரம்மச்சாரியம்)” என்ற ஒரு வார்த்தை உள்ளது. கத்தோலிக்க மதத்தில் “பாவ மன்னிப்பு” மற்றும் “போப்பின் அதிகாரம்” காரணமாகவே “மார்ட்டின் லூத்தர்” கிளர்ந்தெழுந்தார். கர்ல் மார்க்ஸ் வாழ்ந்த காலமான,1818-1883 களில்,ஐரோப்பாவின் தனிநபர் ஒழுக்கம்? என்பதை “பழைய ஏற்ப்பாட்டில்” எழுத்ப்பட்டிருந்த சில ஒழுக்க நடைமுறைகள் காரணமாக, தன் “பொருளியியல் திரிபில்” விளக்க முனைந்திருக்கிறார். இதற்கு எதிர் பிரச்சாரங்கள் இருந்துள்ளன. ஏங்கல்ஸ், நடைமுறையானவர். அவரின் பின்ணணி, இங்கிலாந்தில் (1780-1880)துவங்கிய(மான்செஸ்டர்) “தொழிற்புரட்சி? (ஆடை உற்ப்பத்தியில்)யின் பின்ணணியைக் கொண்டது!. தொழிற்ப்புரட்சிக்கு முன் மக்களிடையே கிட்டதெட்ட “பொருளாதார சமநிலை இருந்தது”. இயந்திர உற்ப்பத்தி புருள்களினால் ஏற்ப்பட்ட காலனித்துவ நாடுகளுக்கு கிடைத்த சந்தை இலாபம்தான், ஜெர்மனியரான ஏங்கல்ஸின் “முதலாலித்துவ எதிர்ப்பின்” அடிப்படை(குழந்தை தொழிலாளர்கள்)!. 1842களில் அவர் மார்க்ஸின் எதிர்வி கூறலில் இணைந்தார். அப்போது, தனிநபர் ஒழுக்கம் ஒரு “பழைய ஏற்ப்பாட்டின் அங்கமாகவே” பயணம் செய்தது!. தற்போதைய “ஏகாதிபத்தியம், பில்லினேயர்கள்” என்பது தொழிற்ப்புரட்சி முதலாலித்துவத்தால் உதித்த, “அதிக இலாபம்(சர்ப்ளஸ்)” காரணமாகவே ஏற்ப்பட்டது. தொழிற்ப்புரட்சிக்கு முன்பு இருந்த பொருளாதார சமநிலை தவறி,”ஒழுக்கம்” என்பது மமதையினால்,சிதைந்தது.இதை மார்க்ஸ் எதிர்வு கூறியிருந்தார்?. ஆகையால் ,மார்க்ஸை “ஒழுக்க வாதியாக நிர்பந்திக்க முடியாது”!. அவர் கூறியது “யுனிவர்ஸல்” சிந்தனையின் அடிப்படையில், தொழிற்ப் புரட்சியினால் (ஜெர்மன் குரூப் ஸ்டீல்?) ஏற்ப்பட்ட தாக்கங்களினால், சுற்றுபுரசூழல் சீர்கேடு போல,மற்ற சமுதாய காரணிகளின் பால் ஏற்ப்படும் தாக்கங்களைப் பற்றியதேயாகும்!.

    Reply
  • tholar balan
    tholar balan

    /கார்ல் மார்க்ஸ் ஓரு ஜேர்மனியர்இ அவர் பின்னர் சிறிதுகாலம் ஜேர்மனியிலிருந்து விரட்டப்பட்டாலும்கூட அவர் மீண்டும் ஜேர்மனிக்கு திரும்ப வந்து வாழ்ந்தவர்./தளபதி

    /எங்களுக்கு கிடைத்த அறிவின் படி தரவுகளின் படி !1851 ஆண்டின் பின் “பாட்டாளி மக்களின் தந்தை கால்மாக்ஸ்” ஜேர்மனியில் வாழ்வதற்கு எந்த வித உரிமையோ அனுமதியோ கிடைக்கவில்லை. அவரின் வாழ்வு பெல்ஜியம் பிரான்ஸ் இறுதியில் லண்டன் என சமாதி அடைந்தது./சந்திரன்ராசா

    தளபதி நீங்கள் இணைத்த இணைப்பை நான் பார்வையிட்டேன்.அது எனக்கு புரியவில்லை.அது ஜெர்மன் மொழியாக இருக்கும் என நினைக்கிறேன். எனவே அதில் என்ன இருக்கு என்பதை நீங்கள் ஏன் தமிழில் கொஞ்சம் கூறமுயற்சி செய்யக்கூடாது?

    Reply
  • man
    man

    கொதித்தெழு, புது உலக வாழ்வினை சமைத்திட…!மகிழ்ச்சி என்றால் போராட்டம்
    வக்கீல் வண்டுமுருகனும், COCKtail தேவதைகளும்! porattamtn.wordpress.com/2010/03/10/cocktail2/

    தொடர்ந்து எந்தப் படப்பிடிப்பும், எங்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கா விட்டாலும், எந்தப் படப்பிடிப்புக் குழுவினரும் “பழி நாணும்” அனிச்ச மலர்களைப் பற்றி எதுவும் பேச வேண்டாமென அறிவுறுத்தாத போதிலும், இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்பே படித்து விட்டிருந்த போதிலும், சோபா சக்தியின் ‘சக்தி’ வாய்ந்த கட்டுரைக்கு/விளக்கத்திற்கு/வீராவேசத்திற்கு, இப்பொழுதுதான் பதிலளிக்க நேரம் வாய்த்திருக்கிறது.

    அவரது விளக்கத்தின் அரைப் பகுதி ‘செங்கடலில்’ மூழ்கி எழுந்திருக்கிறது. பின்னர் வினவில் வந்த கட்டுரை குறித்தும், அதனையொட்டி இத்தளத்திலும், வினவிலும் வெளியிடப்பட்ட எனது கவிதை (சோபா சக்தியின் மொழியில் ‘எசப்பாட்டு’) குறித்தும் ஆழமாக ‘விளக்கியிருக்கிறார்’. ‘செங்கடல்’ குறித்தும், வினவு கட்டுரையாளர் இராவணன் எழுதிய கட்டுரை குறித்ததுமான கலகக்காரரின் ‘விளக்கங்களுக்கும்’, குற்றச்சாட்டுகளுக்கும் நான் வழக்குரைஞராக நின்று வாதாடத் தேவையில்லை. வினவு பொருத்தமான பதிலைத் தானே வழங்கும். எனவே, எசப்பாட்டு பாடிய குற்றத்தை செய்தவன் என்ற முறையில், அது தொடர்பாக மட்டும் சில கருத்துக்களை கலகக்காரர்களின் சமூகத்தின் முன்வைக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

    சோபா சக்தியின் கட்டுரையை படித்த பொழுது, எனக்கு முதலில் வியப்பு தான் ஏற்பட்டது. ஏனெனில், வினவு கட்டுரை, எனது கவிதை உட்பட அனைத்தையும் “என் கால் தூசுக்கு கூட கருத முடியாது” என லீனாத் தெள்ளத் தெளிவாகக் கூறிய பின்னாலும், இரு மாதங்களாக ‘கால் தூசாகக் கூட கருத இயலாதவற்றை’ தன் தலை மேல் சுமந்து திரிந்து, தற்பொழுது தீடீரென வக்கீல் வண்டுமுருகனாக அவதரித்து, தனது கட்சிக்காரருக்காக சோபா சக்தி மாய்ந்து மாய்ந்து வாதாடியிருப்பதைப் பார்த்தால், ஆச்சரியம் ஏற்படாதா என்ன? இதனை என்னவென்று புரிந்து கொள்வது? ‘புரட்சிப் பாலியல்’ பெண்ணிய நோக்கில் பார்த்தால், லீனா தன் கவிதைகளின் அரசியலை பகடி செய்யும் எமது கவிதை அல்லது எசப்பாட்டைத் தானே நேரடியாக எதிர் கொள்ளலாமே, அதற்கு ஏன் ஒரு ‘ஆண்’ ஆஜராக வேண்டும்? “பெண்களைப் பேச விடு” என்பது தானே பெண்ணியம்! சரி, அது கட்சிக்காரரின் பாடு, காசு வாங்காத வக்கீலின் பாடு, நாம் வழக்கிற்கு வருவோம்.

    துவக்கத்திலேயே, நெத்தியடியாக “கவித்துவமும் வக்கிரமும் எங்கே வித்தியாசப்படுகிறது எனபதற்கு லீனாவின் கவிதையும் வினவு கட்டுரையாளரின் எசப்பாட்டுட்டும் சிறந்த எடுத்துக்காட்டுகள். லீனாவின் மொழி பாலியல் விடுதலை கோரிய மொழியென்றால் வினவு கட்டுரையாளரின் மொழி பாலியல் உறுப்புகளையும் பாலியல் செயற்பாடுகளையும் உபயோகித்து எதிராளியை வசைபாடும் மொழி.” என ஒரு ‘லா’ பாயிண்டை முன் வைத்திருக்கிறார். வேடிக்கையாக இருக்கிறது, எங்களைப் போன்ற கட்சி ‘மந்தைகள்’ கூட எங்களுக்கு எட்டிய அறிவில், எதிர்கொள்ளும் பிரதியின் மொழி/வடிவம், அரசியல்/உள்ளடக்கம் இரண்டையும் பரிசீலித்து, பிரதி எழுப்பும் விவாதப் புள்ளிகளைத் தொட்டுதான் எழுதுகிறோம். ஆனால், வக்கீல் வண்டுமுருகனோ “எப்படி?” என்ற ஒற்றைக் கேள்விக்குக் எந்தப் பதிலுமின்றி, “வக்கிரம்” என தீர்ப்பு வழங்கியுள்ளார்.

    கவிதைகளுக்கான ISI தர முத்திரைக்கான அதிகாரபூர்வ இலச்சினை சோபா சக்தியிடம்தான் உள்ளது. ஆகையால், அவரது வாதப்படி, லீனா எழுதினால் கவிதை, நாங்கள் எழுதினால் வக்கிரம். லீனாவின் மொழி, பாலியல் விடுதலை கோரிய மொழி என்பது அவரது வாதம். பாலியல் விடுதலை என்ற போர்வையில், மார்க்சியத்தை ஏளனம் செய்யும் குட்டிமுதலாளித்துவக் குப்பை என்பது எமது வாதம். எமது மொழி எதிராளியை வசை பாடும் மொழி என்கிறார். எனது கவிதையில் வசை மொழி எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால், குத்தலான ஏளனம் இருந்தது. ஆனால், லீனா எனும் ஒற்றை நபரை மட்டும் குறி வைத்தல்ல, மாறாக, லீனாவும், இன்னும் பல வண்ணக் ‘கலகக்காரர்களும்’, ‘கலகக்காரிகளும்’ முன்வைக்கும் அரசியலை குறிவைத்து தான் அக்கவிதை எழுதப்பட்டிருந்தது. அதனால் தான், “எல்லா ஆண், பெண் COCKtail தேவதைகள், மர்லின் மன்றோக்கள், கலகப் போராளிகளுக்கும்,அவர்களின் எழுத்துக்களில் பேரின்பமும், சிற்றின்பமும் பெற்று சிலாகிக்கும் ரசிகக் கண்மணிகளுக்கும் சமர்ப்பணம்.” எனப் பால் வேறுபாடின்றி, உள்ளன்போடு நாங்கள் சமர்ப்பணம் செய்திருந்தோம். ஆனால், அதிகாரத்தின் நுண்ணிய அரசியல் உண்மைகளைக் கூட கண் கொண்டு காண முடிந்தஅவரது கண்களுக்கு இந்த உண்மை ஏனோ தட்டுப்படவில்லை… மேலும், அதென்ன “பாலியல் உறுப்புகளையும் பாலியல் செயற்பாடுகளையும் உபயோகித்து “? நீங்கள் பயன்படுத்தும் பொழுது, அது அரசியலை எடுத்தியம்பும் குறியீடாகவும், நாங்கள் பயன்படுத்தும் பொழுது மட்டும் வெறும் பாலியல் குறியீடுகளாகப் புலப்படுகிறது?

    லீனா மார்க்சியத்தை கட்டுடைப்பதாகக் கவிதை எழுதினார். நாங்கள் லீனாவின் பின்நவீனத்துவ, பெண்ணிய வேடமணிந்த அரசியலை கட்டுடைத்தோம். லீனாவுக்கு மார்க்சியம் கட்டுடைக்கப்பட வேண்டிய பிரதி. எமக்கு லீனாவின் அரசியல் கட்டுடைக்கப்பட வேண்டிய பிரதி.

    உண்மையில், பின்நவீனத்துவ கட்டுடைத்தலில் உங்களைப் பின்பற்றியதற்காக நீங்கள் கைதட்டி வரவேற்பீர்கள் என்று தான் நினைத்திருந்தோம். எல்லாக் “கோப்பைகளையும்” கொட்டிக் கவிழ்க்க விரும்பும் நீங்கள், உங்கள் “கோப்பையை”க் கவிழ்த்தால் மட்டும் மொழிக் கோப்பையின் ஒழுங்கு குறித்து கவலைப்பட்டு தீராக் கோபம் கொள்வீர்கள் என்று இப்பொழுதுதானே தெரிகிறது?

    லீனாவின் ‘மாபெரும்’ கவிதைக்கு எழுதப்பட்டிருக்கும் ‘கோனார் தமிழ் உரை’யைக் கண்டு உண்மையிலேயே மெய் சிலிர்த்து விட்டது. “ஒரு கோப்பைத் தண்ணீர் கோட்பாடு” எனும் மானுட குலத்தின் ‘அரிய கண்டுபிடிப்பு’ குறித்து கூட எங்களைப் போன்ற ‘மந்தைகளுக்கு’ ஒன்றும் தெரிந்திருக்காது, அது கூடத் தெரியாமல் தான் நாங்கள் பேசுகிறோம் என சர்வ நிச்சயமாக கருதுகிற உங்கள் மனோபாவம் இருக்கிறதே, அது தான் எல்லாக் கலக்காரர்களின் கவச குண்டலமாகவும் அலங்கரிக்கிறது. ஆனால், லீனாவின் கவிதைக்கு நீங்கள் வழங்கியிருக்கும் ரிஷிமூலம் மற்றும் பொழிப்புரையின்அடிப்படையே கோளாறாக இருக்கிறது.

    1. கொலந்தாயின் ஆதரவாளர்களே கொலந்தாய்தான் ‘ஒரு கோப்பைத் தண்ணீர் கோட்பாட்டை’ முன்வைத்தார் என ஏற்றுக் கொள்வதில்லை.

    2. லெனினது கருத்துக்களை ‘கடுமையாக’ விமர்சித்து கிளாரா ஜெட்கின் எங்கும் எழுதியிருப்பதாக இது வரை நான் அறியவில்லை.

    3. லெனினுக்கும், கொலந்தாய்க்கும், கிளாராவிற்குமிடையே விவாதத்தின் விளைவான ‘பகைப்புலம்’ இருந்ததாகவும், அந்த பகைப்புலத்தைதான் லீனாவின் கவிதை அடிப்படையாகக் கொண்டிருப்பதாகக் கூறுவதும் பச்சைப் பொய்.

    லெனினுக்கும், கிளாரா ஜெட்கினுக்கும் நடைபெற்ற புகழ் பெற்ற உரையாடலைப் படிக்கும் எவருக்கும் அதில் ‘பகைப் புலம்’ எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. மாறாக, போலி உதாரோ, கலக ஆவேச நடிப்போ இல்லாத, மக்களின் ஊழியர்களாக ஆர்ப்பாட்டமின்றி உழைத்த இரு சிறந்த கம்யூனிசப் புரட்சியாளர்கள் தத்தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் ‘தோழமைப் புலம்’தான் அதில் வெளிப்படுகிறது. மேலும், ஒரு கோப்பைத் தண்ணீர் கோட்பாடு குறித்த லெனினின் கடுமையான விமர்சனங்களை ஆமோதிப்பது மட்டுமல்லாமல், அதே கருத்துக்களை கொண்டிருப்பதால், தானும் ‘பழமைவாதி’ என முத்திரை குத்தப்படுவது குறித்தும் கிளாரா சொல்லிச் செல்கிறார்.

    லெனினுடனான தமது நினைவுகளைத் கிளாரா இவ்வாறு தான் துவங்குகிறார்.

    “(லெனின்) கம்யூனிஸ்டுகளைப் பொருத்தவரை பெண்கள் முழுநிறை சமுதாயச் சமத்துவம் அடைவதானது அடிப்படையானதும், சிறிதும் சர்ச்சைக்கும் இடமில்லாததுமாகும் என்பதைச் சொல்லாமலே விளங்கும் ஒன்றாகக் கொண்டார். இப்பொருள் குறித்த எங்களுடைய முதலாவது நீண்ட உரையாடலை 1920 ஆன் ஆண்டு இலையுதிர் காலத்தில் கிரெம்ளினில் லெனினுடைய பெரிய வேலையறையில் நடத்தினோம். அவருடைய மேஜையின் பின்னால் லெனின் அமர்ந்திருந்தார். அதன் மீது புத்தகங்களும், ஏடுகளும் நிறைய இருந்தன. படிப்பதிலும், வேலைகளிலும் அவருக்கிருந்த அடங்காத ஆர்வத்துக்கும், ஆவலுக்கும் இவை சான்று பகன்றன. அதே போதில், மேதை ஒருவரிடம் சாதாரணமாய் எதிர்பார்க்கப்படும் ஒழுங்கின்மை சிறிதும் காணப்படவில்லை.”
    ஒழுங்கின்மை ‘மேதைகளுக்கே’ உரிய இயல்பு. அதனால், ‘மாபெரும் கலகக்காரர்கள்’ ஒழுங்கின்றி விவாதிப்பதில் ஆச்சர்யம் எதுவுமில்லை. கிளாராவிற்கும், லெனினுக்கும், கொலந்தாய்க்கும் கருத்து வேறுபாடுகளே இல்லை என்பதல்ல எனது வாதம். ஆனால், அவர்கள் உரையாடினார்கள். விவாதித்தார்கள். மார்க்சியத்தையும், லெனினையும் கிளாராவும், கொலந்தாயும் இழிவுபடுத்தவில்லை. கொச்சைப்படுத்தவில்லை. ஏனெனில், அவர்கள் மார்க்சியத்தின் நேர்மையை, லெனினின் நேர்மையை சந்தேகிக்கவில்லை. ஆனால், COCKtail தேவதைகளோ கிளாரா ஜெட்கினை விடவும், கொலந்தாயை விடவும் அல்லும் பகலும் உழைக்கும் பெண்கள் மத்தியில் அயராது பாடுபட்டவர்களைப் போல அலட்டிக் கொள்ளும் பொழுது, எரிச்சல்தான் வருகிறது. எனவே, அவர்கள் “லெனின் ஃப்ராய்டைப் புணர வேண்டும்” என எழுதும் பொழுது, அதில் விவாதமோ, உரையாடலோ அல்ல, மாறாக மார்க்சியத்தின் மீது சிறுநீர் கழிக்கும் வன்மம் மட்டுமே புலப்படுகிறது. அது கவிதையின் குறியீட்டு வடிவத்தினால் நிகழ்ந்த பிழையல்ல. ஏனெனில், உள்ளடக்கம்தான் வடிவத்தை தீர்மானிக்கிறது.

    எனவே, வன்மம் மிகுந்த இழிவுபடுத்தலை எதிர்கொள்ளும் பொழுது ஏற்படும் கோபம், வண்டுமுருகன் சொல்வதைப் போல, “லெனினின் மீது கேள்வியெழுப்பியவரை நோக்கித்” திரும்பவில்லை. கிளாரா ஜெட்கின் உரையாடியது போன்ற கேள்வியாக இருந்தால், அது கோபமாகவும் திரும்பியிருக்கப் போவதில்லை. ஆனால், ‘கேள்வி’ என்ற பெயரில், ‘ஒவ்வொரு மயிராகப் பிடுங்கிப் போடும்’ பின்நவீனத்துவ வாந்தியெடுப்பதன் அரசியலை நோக்கிதான் கோபம் திரும்பியது. ‘கட்டுடைத்தலை கட்டுடைத்து’ எசப்பாட்டாக எழுதப்பட்டது. ஆனால், அந்த எசப்பாட்டு உங்கள் அரசியலின் அடிப்படையைக் கேள்விக்குள்ளாக்குவதால், உடனடியாக எங்களுக்கு ‘ஆணாதிக்கப் பட்டம்’ சூட்டி ஆவேசப்படுகிறீர்கள்.

    வேடிக்கைதான், ‘கமிசார்களை’ மட்டும் நீங்கள் கேள்வி கேட்பாரில்லாமல் கட்டுடைக்கலாம். ‘கலகக்காரர்களை’ கட்டுடைத்தால் மட்டும் ஆணாதிக்கம், வக்கிரம், ஒரு கலாச்சார அடிப்படைவாதியின் குரல் etc., etc., அந்தக் கவிதை கேட்டதெல்லாம் ஒரு எளிய கேள்வி தான் ஐயா. லீனா ஏன் மார்க்சிய டெட்டி பியரை மட்டும் கட்டுடைத்து விளையாடுகிறார்? அவர் ஏன் பெண்களை ஒடுக்கும் இந்து மத டெட்டி பியரை, இதர டெட்டி பியர்களையெல்லாம் கட்டுடைத்து விளையாடக் கூடாது? மேலும், ‘காடு விளஞ்சென்ன மச்சான் நமக்குக் கையும் காலும் தானே மிச்சம்’ என்ற பட்டுக்கோட்டையாரின் வரிகளைப் போல எழுதினால், ஒரு வேளை கவிதையின் மொத்தக் குத்தகைதாரர்களுக்கு புரியாமல் போய் விடுமோ என அஞ்சி தான், அவர்களுக்கு புரியும் விதத்தில், அவர்களே எழுதும் மொழியில், குறி, யோனி எனத் தாராளமாக உபயோகித்து எழுதப்பட்டது. ஆயினும், கவிதை எழுப்பும் அடிப்படை கேள்வி மட்டும் உங்கள் கண்களுக்குத் தட்டுப்படவே இல்லையா? சரி, நேரடியாகவே கேட்கிறேன். ஒரே ஒரு முறை, கட்டுடைத்தலின் விதிமுறைகளை மீறி, பாரத மாதாவை நேரடியாகக் குறிப்பிட்டு COCKtail தேவதைகள் கவிதை எழுதலாமே! அதனை விஜய பாரதத்திற்கு அனுப்பி வைத்து அவர்களிடம் கருத்துக் கேட்கலாம். அவர்கள் எங்களைப் போல ‘எசப்பாட்டு’ எழுத மாட்டார்கள். ‘டீசென்டாக’ நடந்து கொள்வார்கள். நாங்களும் எங்கள் தவறை உணர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கும் இல்லையா? யோசித்துப் பாருங்கள்.

    “கற்பு விபச்சாரம் என்னும் வார்த்தைகள் சுதந்திரமும் சமத்துவமும் கொண்ட வாழ்க்கைக்குச் சிறிதும் தேவையில்லாததாகும். ஜீவ சுபாவங்களுக்கு இவ்விரண்டு வாரத்தைகளும் பொருத்தமற்றதேயாகும்” என்பது மட்டும்தான் தந்தை பெரியாரின் ஒரே கொள்கை முழக்கமோ? “பெண் ஏன் அடிமையானாள்?” என்ற அவரது நூலில், லெனின் ‘ஒரு கோப்பைத் தண்ணீர் கோட்பாட்டை’ ஏற்காததுதான் பெண் விடுதலையைத் தடுக்கும் தடைக்கல்லாக இருக்கிறது என்று எழுதியிருக்கிறாரோ? இன்றும் பெண்களை அடக்கி, ஒடுக்கி வரும் சாதி, சமய நிறுவனங்களை, அவற்றின் கருத்தியல்களைத் தான் பெரியார் ‘கட்டுடைத்தார்’. ஆனால், லீனாக்களுக்கோ கட்டுடைக்க வேண்டுமென்றாலே கம்யூனிசம் மட்டும் தான் கண்ணுக்குத் தெரிகிறது, ஜெயமோகனின் ‘செலக்டிவ்வான’ அறச்சீற்றத்தைப் போல.

    “இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் பாலியல் ஒழுக்கம், சமூக கலாச்சார ஒழுங்குகள் எல்லாவற்றையும் இந்த வரட்டுச் சித்தாந்தவாதிகள் கட்டிக்கொண்டு அழப்போகிறார்கள?” எனக் இறுதியாகக் குமுறியிருக்கிறார் ‘வண்டுமுருகன்’. எனவே, இந்தக் கேள்விக்குப் பதிலளிப்பது அவசியமானதுதான். அதே கிளாரா ஜெட்கினுடனான உரையாடலில், லெனின் பதில் கூறுகிறார்.

    “ஓயாமல் தனது உந்தியை நினைத்துத் தியானம் புரியும் இந்திய ஆண்டியைப் போல எந்நேரமும் பாலுறவுப் பிரச்சினைகளிலேயே முழு நாட்டம் கொண்டுள்ள இவர்களை நான் நம்புவதில்லை. பெரும்பாலும் வெறும் கருதுகோள்களேயான, அதுவும் பல சந்தர்ப்பங்களில் தான் தோன்றித்தனமான ஊகங்களேயான இந்தப் பாலுறவுத் தத்துவங்கள் அபரிமிதமாகியுள்ளதற்குச் சொந்தத் தேவைகளே காரணம் என்பதாகத் தோன்றுகிறது எனக்கு. முறைகேடான அல்லது மட்டுமீறிய தமது பாலுணர்ச்சிக்கு முதலாளித்துவ நெறியின் முன்னால் நியாயம் கற்பிக்க வேண்டும். தாம் கண்டிக்கப்படலாகாதென வாதாட வேண்டுமென்ற விருப்பமே இந்தத் தத்துவங்களுக்குரிய மூல ஊற்றாகும். பாலுறவுப் பிரச்சினைகளில் மூழ்கித் திளைக்கும் போக்கைப் போலவே, முதலாளித்துவ நெறிக்கு மறைமுகமாய் மதிப்பளிக்கும் இந்தப் போக்கையும் நான் வெறுக்கிறேன். இதனைக் கலகத்தன்மை கொண்டதாகவும், புரட்சிகரமானதாகவும் தோன்றச் செய்யும் பொருட்டு எவ்வளவுதான் முயன்ற போதிலும், முடிவில் எப்படியும் இது முற்றிலும் முதலாளித்துவத் தன்மையாகவே இருக்கிறது. “

    “என்னுடைய கண்டன விமர்சனத்தின் மூலம் துறவு மனப்பான்மையை வளர்க்க வேண்டுமென்பதல்ல எனது விருப்பம். அது போன்ற எண்ணம் ஒரு போதும் எனக்கு இருந்ததில்லை. கம்யூனிசம் தன்னுடன் கொண்டு வந்து வழங்க வேண்டியது வாழ்வின் களிப்பும், அன்பும் காதலும் நிறைந்த வாழ்க்கையாலும் மற்றும் பலவற்றாலும் அளிக்கவல்ல ஆரோக்கியமும், ஆனந்தமுமே அன்றி, துறவு மனப்பான்மை அல்ல. ஆனால், இன்று காணக் கூடிய அபரிமிதப் பாலுறவுகள் என்னுடைய அபிப்பிராயத்தில் வாழ்வின் களிப்பையோ, ஆரோக்கியத்தையோ அளிப்பதாய்க் காணோம். அதற்கு மாறாக, அவற்றை ஊறுபடுத்தவே செய்கின்றன.”

    “துறவியும் வேண்டாம், காதற் கோமானான டான் ஜூவானும் வேண்டாம். இரு நிலைக்கும் இடைப்பட்ட ஜெர்மானியக் குட்டி பூர்ஷுவா அற்பனும் வேண்டாம்.”
    லெனினது இக்கருத்துக்களை கடுமையாக விமர்சித்ததாக ‘வண்டுமுருகன்’ கூறும் கிளாரா இதற்கு என்ன பதில் கூறினார் தெரியுமா?

    “தோழர் லெனின், நீங்கள் கூறியவற்றை லட்சக்கணக்கான மக்கள் கேட்கவில்லையே என்று நான் வருத்தப்படுகிறேன்.” என்று நான் வியப்பு தொனிக்கக் கூறினேன்.”நீங்கள் தெளிவுப் பெறச் செய்ய வேண்டியது என்னையல்ல – அது உங்களுக்குத் தெரியும். உங்களுடைய கருத்தை நண்பர்களும் பகைவர்களும் ஒருங்கே கேட்க வேண்டியது எவ்வளவு முக்கியமானது, தெரியுமா!” ***

    கேட்காதது போல் நடிக்கும் காதற் கோமான்களுக்கும், ‘இரு நிலைக்கும் இடைப்பட்ட’ எல்லா நாட்டு குட்டி பூர்ஷுவா அற்பர்களுக்கும் பாலுறவு விடுதலையே அவசர, அவசியக் கடமையாக இருக்கலாம். பெண் விடுதலையாகவும் படலாம். எங்களுக்கோ தனிச்சொத்துடைமையைத் தகர்க்கும் விடுதலைதான் அவசர, அவசியக் கடமையாகப் படுகிறது. அதன் மூலம் தான் பெண்களை உடைமையாகக் கருதும் ஆணாதிக்கத்திலிருந்து, பெண்கள் உண்மையில் விடுதலை பெறுவது சாத்தியம் எனப் படுகிறது. எனவே, கற்றறிந்த கலகக்காரர்களே, கவிதை எழுதும் COCKtail தேவதைகளே, உங்களது மேலான கருத்துக்களை புரிந்து கொள்ளும் அறிவில்லாத லெனினையும், கிளாராவையும், கொலந்தாயையும், எங்களையும் மனமிரங்கி மன்னித்து விடுங்கள். உங்கள் நாமம் பரிசுத்தப்படுவதாக. ஆமென்.

    பி.கு:

    1. வக்கீலய்யா, உங்களுக்கு வக்கிரமாகப் பட்ட கவிதை, தமிழகத்தின் பின்நவீனத்துவப் பாப் ஸ்டார் சாருவுக்கு கவிதையாகப் பட்டிருந்தது. அவர் தமது இணையத் தளத்தில் படித்ததில் பிடித்ததாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாகத் திரைக்கு வந்த, நித்யானந்தரும், சன் டிவியும் இணைந்து எழுதிய ‘காட்சிக் கவிதை’ சாருவுக்கு வக்கிரமாகப் படுகிறது. ஒரு வேளை உங்களுக்கு அது கவிதையாக தென்படுகிறதா?

    2. ஹெலன் டெமூத்திற்காக கண்ணீர் விட்டுக் கதறுகிறீர்கள். நீங்கள் மறந்து விட்டிருக்கலாம். இதில் உங்களுக்கு சீனியர் ஒருவர் இருக்கிறார். அவர் தமது “பின் தொடரும் நிழலின் குரல்” நாவலில் ஹெலன் டெமூத்திற்காக உங்களை விடவும் அதிகமாக கண்ணீர் விட்டார். புகாரினுக்காக சைபீரியப் பனியில் நடுங்கினார். ஆனால், காசியில் கைவிடப்பட்ட விதவைப் பெண்கள் விபச்சாரத்தில் தள்ளப்படுவது பற்றி அவருக்கு கண்ணீர் வருவதில்லை. ஸ்டாலின் கொடுங்கோன்மை பற்றி மூச்சுக்கு முன்னூறு தடவை விசனப்பட்டாலும், மோடி குறித்து அவர் வாய் திறப்பதில்லை. நித்யானந்தரின் ஒழுக்கக் கேட்டினால், அவரை நம்பி ஏமாந்த பல்லாயிரம் மக்களின் வேதனையைக் காணும் பொழுது, ஸ்டாலினின் கொடுங்கோன்மையைக் கண்டு மனம் கொதித்த வீரபத்திரப் பிள்ளைக்கு கம்யூனிசத்தின் மீதே அவநம்பிக்கை தோன்றுவதைப் போல, அவருக்கும் இந்து ஞான மரபின் மீதே அவநம்பிக்கை தோன்றுவதில்லை. மாறாக, எல்லா ஆன்மீகக் குஞ்சுகளும் அவரது செட்டைகளின் அரவணைப்பில் சரணடைய, சரியான விகிதத்தில் இந்து மதக் கலவை கலந்து எடுத்து வைத்து, எது போலி, எது ஒரிஜினல் என கிளாஸ் எடுக்கிறார். ஜெயமோகனும், நீங்களும் ஹெலன் டெமூத்திற்காக கண்ணீர் விடுவதில் ஒன்றுபடும் புள்ளி கவனத்திற்குரியது. அந்தப் புள்ளியில்தான் மெக்கார்த்தி உங்களுக்கு பாராட்டுப் பத்திரம் எழுதிக் கொண்டிருக்கிறார்.

    3. ஹெலன் டெமூத் குறித்த மழுப்பலாக இதனை எடுத்துக் கொண்டு வாதாடும் சிரமத்தை உங்களுக்கு அளிக்க விரும்பவில்லை. மார்க்சின் வாழ்வில் அது ஒரு சிக்கலான புள்ளிதான். இது இன்று நேற்றல்ல, ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக உலா வந்தபடியே இருக்கிறது. ஆனால், ஏங்கெல்ஸ் தனது இறுதிப் படுக்கையில் இதைச் சொன்னார் என்பது தமிழ் சினிமா போல இருக்கிறது. எலியனாரோ மார்க்ஸ் சொன்னார், ஜென்னி தனது கடிதத்தில் மறைமுகமாக சொன்னார் எனப் பலவாறாக இணையம் முழுக்க இறைந்து கிடக்கும் தகவல்கள் அல்லது தகவல்கள் போல தோற்றமளிக்கும் வரலாற்று கிசுகிசுக்களிலிருந்து மார்க்ஸின் மீதோ, ஹெலன் டெமூத் மீதோ சேற்றை வாரி இறைப்பதோ, தீர்ப்பெழுதுவதோ சாத்தியமில்லை. ஏனெனில், உறவு இருந்தது, இல்லை என உறுதியான முடிவெடுக்க விவாதத்திற்கு அப்பாற்பட்ட ஆதாரம் என எதுவும் இல்லை. எனவே, இந்த விவாதம் நான் பிடித்த முயலுக்கு மூணே கால் எனும் இரு பக்கமும் முன்வைக்கும் விவாதமாகத்தான் இருக்குமேயொழிய, அதனால் எந்த முடிவுக்கோ, புரிதலுக்கோ வருவது சாத்தியப்படப் போவதில்லை. இது எனது தனிப்பட்ட கருத்து.

    *** கிளாரா ஜெட்கின் – லெனின் உரையாடல் மேற்கோள்கள், ‘ஒரு கோப்பை தண்ணீர் தத்துவமும், காதலற்ற முத்தங்களும்’ நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளன.

    Reply
  • Kusumpu
    Kusumpu

    ஜெயராஜா! // எங்களுக்கு வலிதான் தெரியும் இந்த வரிகள் தெரியாது//சுப்பர்… சுப்ரோ சுப்பர். இதுதான் உண்மை வரிகள். மாக்சையும் சரி மதத்தையும் சரி முதலில் குப்பையில் போடுங்கள். பசிக்கும் வயிற்றுக்கு முன்னால் எதுவும் முன்னிற்க இயலாது. மதங்களும் சரி மார்க்கங்களும் சரி வாசிப்பதற்கு மிக நன்றாக இருக்கும் பயிற்சிக்கப் படும்போதுதான் உண்மை பிரச்சனை வெளிவரும். தத்துவங்களை யாரும் சரியாகவே கடைப்பிடித்தது கிடையாது. இப்படிப்பட்ட ஒன்றை வைத்துக் கொண்டு காலம் பூரா மக்களையும் எம்மையும் ஏமாற்றுவதை விட நீங்களாக உங்களுக்குத் தெரிந்ததை முடிந்ததை அந்த அப்பாவி மக்களுக்குச் செய்யுங்களேன். சரி சோபாசக்தி ஏதோ செய்ய முயன்றார். சரியோ பிழையே ஏதோ முயன்றிருக்கிறார் அல்லவா. இதைக்கூடச்செய்யாமல் மாக்சையும் அவரையும் இவரையும் சாட்சிக்கு இழுத்து ஏன் நேரத்தை வீணடிக்கிறீர்கள். மாக்சை சாட்சிக்கு இழுப்பதும் கடவுள்களைக் சாட்சிக்கு இழுப்பதும் ஒன்றுதான். பாவம் மாக்ஸ். ஒருவர் சமூகத்துக்கு ஏதோ நல்லதை எழுத முயன்றார். அவரது காலம் முடிந்தபின்பு கூட அந்த மனிதனை தோண்டி எடுத்து ஏன் மீண்டும் மீண்டும் கொல்கிறீர்கள். மாக்சுக்குப்பின் எந்தப் புத்திசாலியும் பிறக்கவில்லையா? ஏன் உங்களில் ஒருவர் மாக்சைவிடப் புத்திசாலியாக இருக்கலாமே. முயற்சியுங்கள். அவர் சொன்னார் இவர் சொன்னார் என்பதை விட்டுவிட்டு நீங்கள் புதிதாகச் சொல்லுங்கள்.

    Reply
  • palli
    palli

    இருட்டு வீட்டில் கண்ணாடி தேட எந்த மொழி என்றால் என்ன; யாருக்கோ தெரியவா போகுது, ஆனால் உங்கள் வாதம் முடிய எமது தொகுப்புரை உண்டு,

    Reply
  • karuna
    karuna

    செங்கடல் படப்பிடிப்பின் போது நடந்த நிகழ்வுகள் குறித்து நீண்ட நாட்களுக்குப் பிறகு படப்பிடிப்பு முடிந்த பின்னர் இப்போது லீனாவும் ஷோபா சக்தியும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். வினவு இணையதளம் லீனா எழுதிய கவிதையில் காட்டமாகி எழுதிய பதிவிற்கு பதில் பதிவாக லீனா எழுதிய கட்டுரையில்’’டேப்பை எடுத்துக் கொண்டு ஓடியது குற்றம்’’ என்று எழுதியிருந்தார்.
    வலுவான குரலில் குற்றப்பத்திரிகை வாசித்த லீனா பேட்டா கொடுக்காததை குற்றமாக பார்க்கிறாரா? உழைப்புச் சுரண்டலாகப் பார்க்கிறாரா? என்கிற கேள்விகள் எல்லாம் எழுந்த நிலையில் ஷோபா சக்தி தன் அடுத்தப்பதிவை எழுதியிருக்கிறார். இந்நிலையில் ஷோபா சக்தியிடம் அடி வாங்கியவன் என்ற முறையில் அங்கு என்ன நடந்தது என்பதை நானும் பதிவு செய்திட விரும்புகிறேன்.

    ஷோபா சக்தி மற்றும் லீனா மீதான தனிப்பட்ட தாக்குதல் அல்ல என் பதிவு. அவர்கள் படமெடுத்து ஆயிரம் கூலி உழைப்பாளர்களை ஏமாற்றிவிட்டுப் போனால் கூட சகித்துக் கொள்ளலாம். செங்கடல் என்று படமெடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சேவை செய்கிறோம் என்று போலி வேசம் போட்டுக்கொண்டு அரசியலைப் பாவித்து படம் காட்டுகிறார்கள் படுபாவிகள்.

    உழைப்பையே மூலதனமாகக் கொண்ட எனக்கும் எழுத்துரிமை உண்டு என “தோழர்கள்” ஷோபா சக்தி லீனா போன்றோர் ஒத்துக்கொள்வார்களோ தெரியாது. தமிழ் நாட்டில் நாளாந்தம் ஏமாற்றப்படும் ஆயிரம் சினிமா தொழிலாளர்களுடன் நானும் ஒருவன்.

    பொதுவாக தமிழ் சினிமா 24 சங்கங்களைக் கொண்ட ஒரு கூட்டமைப்பு. ஒவ்வொரு அமைப்பும் தனித்தனியாக செயல்படுவது போன்ற தோற்றம் இருந்தாலும், இவை ஒவ்வொன்றும் சங்கிபோன்ற பின்னலைக் கொண்ட அமைப்புகளே. பேட்டா பிரச்சனை, லேப் பிரச்சனை, சம்பளம் என, எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் தத் தமக்கான சங்கங்களில் போய் புகார் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு பிரச்சனை சரி செய்யப்படும்.

    சரி செய்யப்படாவிட்டால் சம்பந்தப்பட்ட படத்தை இயல்பாகவே முடக்கி விடும் சக்தி இச் சங்கங்களுக்கு உண்டு. இப்படி பல பிரச்சனைகளால் நூற்றுக்கணக்கான படங்கள் வராமால் போனதும் உண்டு.

    பைசல் பண்ணி வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய படங்களும் உண்டு. ஓடாத படங்களும் உண்டு. இது தான் தமிழ் சினிமா. வலுவான சங்க பின்னணியைக் கொண்ட தமிழ் சினிமாவின் இந்தச் சூழலைப் புரிந்து கொண்டே செங்கடல் படப்பிடிப்புத் தளத்தில் நடந்த பிரச்சனையை நீங்கள் புரிந்து கொள்ள முயல வேண்டும்.

    லீனா எனது நண்பர். ஆமாம்! அப்படித்தான் நான் நினைக்கிறேன். ஆனால் நல்லவேளை “தோழராக” இருந்ததில்லை. அவர் என்னை ஷூட்டிங் அழைத்தார் நானும் ஒரு அசிஸ்டெண்டாகச் சென்றேன். குறைவான பட்ஜெட் சிக்கனமான செலவு என்பதால் எல்லாம் எனக்கு எதுவும் பிரச்சனை இருக்கவில்லை. நட்புக்காக, ஆமாம் லீனாவுக்காகச் சென்றேன். இருபது நாள் ஷூட்டிங் நடந்தது. முதல் ஒரு வாரம் பேட்டா எல்லாம் ஒழுங்காக கொடுத்தார்கள். மீதி ஒரு நாளும் பேட்டா தரவில்லை. கேமிரா அசிஸ்டெண்டாக இருந்தாலும் உதவி இயக்குநராக இருந்தாலும் அவர்களுக்கு அன்றாடம் கிடைக்கும் பேட்டா மட்டும்தான் வருமானம்.

    இது லீனாவுக்கும் தெரியும் அவர் என்னைப்போல ஒரு ஏழை அசிஸ்டெண்டாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் உண்மை தெரியாமல் இருக்க வாய்ப்பில்லையே?

    சரவணன் என்பவர்தான் கேமிரா அனுப்பியிருந்தார். அவர் ஹைதராபாத்தில் இருந்து இவர்களின் படத்திற்காக கேமிரா வாடகைக்கு எடுத்துக் கொடுத்ததாகச் சொன்னார்கள்.

    சென்னையில்ருந்து வந்திருந்த கேமிரா அஸிஸ்டன்டுக்குக் கூட பேட்டா கொடுக்கப்படவில்லை. அவர்கள் அதைத் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். பேட்டா இல்லாமல் வாழ்க்கை, தங்குமிடம், உணவு, உடை எல்லாமே கேள்விக்குரியதாகிவிடும்.

    இதில் கேவலம் என்னவென்றால், ஹைதராபாத்திலிருந்து வந்திருந்த உதவியாளர்களுக்கு தமிழ் பேசக் கூடத் தெரியாது, தனி என்ற தமிழ் நாட்டுக்காரர்தான் அவர்களுக்குத் தொடர்பாளர். பேட்டா இல்லாமல் அவர்களும் தெருவிலே அலைய வேண்டியதாயிற்று.

    தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திய லீனா – ஷோபா கூட்டணி அவர்கள் கேட்ட, அவர்களுக்கு உரிய பணத்தைக் குறித்து எந்தப்பதிலும் சொல்லாமல் தொழிலாளர்களைத் தட்டிக்களிதனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், தாங்கள் ஷூட் பண்ணிய பூட்டேஜை எடுத்துக்கொண்டு சென்னைக்குக் கிளம்பிவிட்டார்கள்.

    அதிலும் இறுதி இரண்டு நாள் பூட்டேஸ் மட்டும்தான். இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை அவர்களுக்குப் பூட்டேஜ் கொடுக்க வேண்டும். அதற்கும் முன்னையவை எல்லாம் லீனா குழுவிற்குக் கொடுத்துவிட்டார்கள்.

    இதைத் தான் லீனா டேப்பை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார்கள் என்றார். இதற்கு பேட்டா கொடுக்காததே காரணம்.பேட்டா கொடுக்கப்படாததற்குப் பதிலடியாக அதனைப் பெற்றுக்கொள்ளும் போராட்டமாக டேப்பை எடுத்துக்கொண்டு ஓடியது குற்றமா அல்லது பேட்டாவே கொடுக்காமல் தொழிலாளர்களைத் “தோழர்கள்” ஏமாற்றியது குற்றமா? “தோழர்” லீனா தான் பதில் சொல்லவேண்டும்.

    பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக இவ்வாறு நடைபெறுவது எல்லாப் படப்பிடிப்புகளிலும் ஒரு பொதுவான நடைமுறை என்பது வேறுவிடயம்.

    குறைந்த செலவுப் படம் என்பதால் எல்லா தொழிலாளர்களும் புரிந்துணர்வோடே நடந்து கொண்டார்கள். முதலில் அவர்கள் பல இன்னல்களுக்கு உள்ளான போதும் பெரிதாக வாக்குவாதப்படுவதில்லை. நானும் கூடப் பல தடவைகள் அவர்களைச் சமாதானப்படுத்துவது உண்டு. ஆனல் கேமிரா மறு நாள் ஒரு இடத்திற்குக் கொண்டுபோய் படம் பிடித்துவிட்டுக் திரும்பக் கொண்டுவர வேண்டிய தேவை இருந்ததால். தனி உட்பட்ட ஆசிஸ்டன்கள் லீனா குழுவிடம் 1500 ரூபாவைத் தரவேண்டிய பணத்திலிருந்து கேட்டார்கள் அதைக்கூட அவர்கள் கொடுக்க மறுத்து பல மணி நேரங்களின் பின்னரே கொடுத்ததால், அவர்களுக்கு கடுப்பு அதிகமாகிவிட்டது.

    இவை அனைத்தையும் சேர்த்து கேமிராவை பூட்டேஜுடன் சேர்த்துக் கொண்டுபோய் விட்டார்கள்.

    சரி, இதையெல்லாம் விடுங்கள். என்னில் என்ன குற்றம் கண்டார்கள்?

    நான் என்ன தவறு செய்தேன். டேப்பை எடுத்துச் சென்ற உடன் நானும் லீனாவும் கேமிரா அசிஸ்டெண்டுக்கு போன் பண்னினோம். ஆனால் அவரது போன் ஸ்விட்ச் ஆப்ஃ ஆகியிருந்தது.ஆத்திரம் உச்சிக்கு ஏற லீனா தனது கையில் இருந்த செல்போனை தரையில் வீசி உடைத்தார். இது நடந்தபோது இரவு எட்டு மணியிருக்கும்.

    லீனா கடுமையான டென்ஷனில் இருந்தார். ஷோபா சக்திக்கு அதை விட டென்ஷனாக இருந்தார். ஏதாவது செய்ய வேண்டும், லீனாவுக்கு தனது நம்பிக்கையை வெளிப்படுத்த வேண்டும். அல்லது சமாதானப்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் தவிப்பும் அவருக்கு இருந்தது.

    நான் அங்கிருந்து அகன்று சென்று விட்டேன். இரவு 10.30 மணியிருக்கும் ஷோபாசக்தியும் அவரது இரண்டு நண்பர்களும் வந்து என்னை தனியாக அழைத்தார்.அப்போது என்னுடன் இருந்த எடிட்டரையும்,போட்டோகிராப்பரையும் திரும்பிச் செல்லுமாறு அனுப்பி விட்டு என்னை மட்டும் மீட்டிங் இருக்கிறது என்று அழைத்துச் சென்றார்கள்.

    ஷோபா சக்தி புல் போதையில் இருந்தார். எனக்கு அப்போதே அவர் மீது சந்தேகம் இருந்தது. புரடக்சன் வண்டி டிரைவர் எனக்கு நண்பர் ஆனால் அவர் என்னோடு வருவதை ஷோபாசக்தி அனுமதிக்கவில்லை, ஒரு அறைக்கு அழைத்துச் சென்றார்கள். அந்த அறையில் சுமார் 8 பேர் இருந்தார்கள். ஷோபா சக்தி, அசோசியேட் டைரக்டர் ரமேஷ், மற்றும் ஆர்டிஸ்ட் ( அவர் லீனாவுக்கு வேண்டிய இன்னொரு “தோழர்”) 3 பேரும் இருந்தனர். ஆக மொத்தம் எட்டு பேர்.

    அதில் தலைமை நாட்டாமையாக ஷோபா சக்தி! அவரை அந்தப்பதவிக்கு உள்ளே போயிருந்த குரங்கு உயர்த்திவைத்திருந்தது.

    அவர்கள் என்னை விசாரித்தார்கள். எனக்கு கொஞ்சம் பயம் இருந்தது. நான் ’’ஓனரிடம் பேசி விட்டேன். அவர் லீனாவின் கணவர் சி. ஜெரால்டிடம் கொடுத்து விடுவதாகச் சொல்லி விட்டார். அப்படியே டேப் ஜெரால்டின் கைக்குச் செல்லாவிட்டாலும் கேமிரா அனுப்பிய ஓனரின் கைக்குத்தான் செல்லும். அவரிடமிருந்து ஜெரால்சிற்குச் செல்லும். இதை நான் லீனாவிடமும் சொல்லி விட்டேன்’’ என்று சொல்லி முடிப்பதற்குள் அந்த ஆகச் சிறந்த மார்க்சியவாதியும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தீராத கரிசனமும் மாறாத காதலும் கொண்ட மனித் உரிமை வாதி ஷோபா சக்தி என்னை தாக்கினார்.

    நான் இதை எதிர்பார்த்தாலும் என்னால் அதை எதிர்கொள்ள முடியவில்லை. என் மொபைலை மேனேஜர் தனுஷ் பிடுங்கிக் கொள்ள நான் பயந்து விட்டேன். அலறி என்னைக் காப்பாற்றுமாறு கத்தினேன். கதவை உடைத்து டிரைவர்கள் என்னைக் காப்பாறினார்கள். அப்போது ஒரு வேளை நான் கத்தாமல் அங்கிருந்தால் எது வேண்டுமானாலும் நடந்திருக்கலாம் அவ்வளவு கட்டுங்கடங்காத வெறி ஷோபா சக்தியிடம் இருந்தது.

    ஷோபா சக்தி பெரும்பாலும் படப்பிடிப்பில் குடிபோதையில் தான் இருப்பார். மாலை நேரம் நெருங்கினால் போதும் போதை தலைக்கேறிவிடும். இப்போதெல்லாம் அவர் எழுதுவதைப் பார்த்தால் கார்ல் மார்க்ஸ் கூட குவாட்டர் அடித்துவிட்டுத்தான் எழுத ஆரம்பிப்பார் என்று கூட எழுதினாலும் ஆச்சரியப்பட முடியாது.

    கதாசிரியர் என்ற வகையில் ஷோபாவோடு நான் பேச வேண்டும். ஆனால் ஆரம்பத்திலிருந்தே அவரிடம் பேசுவதில்லை. தொழிலாளர்களை அவர் மதிப்பதில்லை. எங்களை எல்லாம் ஏளனமாகத் தான் அணுகுவார். இவரோடு எப்படி நாங்கள் பழகுவது. அப்படியே உணர்வுகளை அடகுவைத்துவிட்டுப் பேசினாலும் பாதி நேரம் குடி போதையில் தன் உணர்வு இல்லாமல் அலையும் அவருடன் எப்படிப் பேசுவது. இது குறித்து லீனா பல தடவை என்னோடு கடிந்து கொண்டார். இதனால் ஷோபாவிற்கு என் மீது ஆத்திர உணர்வு இருந்தது. அதைத் தீர்த்துக்கொள்ள சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருந்தார்.

    என்னை மீட்டவர்கள் ஷோபாசக்தியை எச்சரித்தார்கள். நள்ளிரவு 12 மணிக்கு அவர்கள் கிளம்பிவிட்டார்கள். நண்பர்கள் என்னை ரூமிற்கு அனுப்பாமல் அவர்களுடனே வைத்துக் கொண்டார்கள். அடி வாங்கிய பிறகு 12.30 மணிக்கு டேப்பை எடுத்துச் சென்ற அசிஸ்டெண்ட் எனக்கு போன் செய்து மதுரையைத் தாண்டிச் செல்வதாகவும் டேப்பை ஓனரிடம் கொடுத்து விடுவதாகவும் தெரிவித்தான். அவனிடம் இங்கு நடந்த அனைத்த விஷயங்களையும் சொன்னேன்.மேலும் லீனாவுக்கு போன் செய்து பேசு எனவும் கூறினேன்.

    நானும் லீனாவின் மொபைலுக்கு அழைத்தேன் அது வேலை செய்யாததால் அறைக்குச் சென்றேன்.அப்போது இரவு இரண்டு மணி இருக்கும். அங்கே ஷோபா சக்தி என்னை அடித்தது பற்றி லீனாவிடம் விவரித்துக் கொண்டிருந்தார்.

    என்னைப் பார்த்து ஷோபா சக்தி ‘‘என்னை திருப்பி அடிக்க வந்தயா? ’’ என்று கேட்டார். நான் டேப்பை எடுத்துச் சென்றவரிடம் பேசியதையும் சொல்லி விட்டு என்னை அடித்தது பற்றியும் லீனாவிடம் சொன்னேன். மேலும் நான் ஒரு அரசு ஊழியன் என்னை அடித்துவிட்டு அவர் எளிதில் பதில் சொல்லாமல் இருக்க முடியாது என்பதையும் நான் லீனாவிடம் தெரிவித்தேன்.

    இப்படத்தின் இயக்குநர் என்ற முறையில் உங்களிடம் சொல்கிறேன் உங்கள் படத்தின், உங்கள் யூனிட்டின் ஒரு ஊழியன் என்ற முறையில் உங்களிடம் சொல்கிறேன், நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினேன். ஷோபா சக்தியை அடிப்பது ஒன்றும் எனக்கு அவ்வளவு பெரிய வேலை இல்லை என்றேன். ஷோபா சக்தியிடம் நீங்கள் செய்தது முட்டாள் தனம் என்று மட்டும் கூறினேன். டேப்பை எடுத்துச் சென்ற சம்பவத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லாத போது எந்த முட்டாளாவது இப்படிச் செய்வானா? என்பதுதான் எனது ஆதங்கம்.

    பிறகு நான் அங்கிருந்து கிளம்பிவிட்டேன். 4 மணியளவில் எனக்கு லீனா எனக்கு போன் செய்தார் எனது போன் ஆப்ஃஆகியிருந்ததால் எனது புரடொக்ஷன் அசிஸ்டண்டிடம் பேசினார்,பிறகு அவர் என்னிடம் போனைக் கொடுத்து பேச சொன்னார் அப்பொழுது லீனா என்னிடம் இந்த விஷயத்தை பெரிது பண்ண வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டார். தனக்கு இந்த விஷயம் நான் சொல்லித்தான் தெரியும் என்றும் கூறினார்.

    எனக்கு பல பத்திரிகையளர்களையும், எழுத்தாளர்களையும் தெரியும் என்பதும் லீனாவிற்கு நன்கு தெரியும், அதனால் தான் விடியகாலையிலேயே எனக்கு போன் செய்தார்கள் மேலும் நான் இருக்கும் இடத்திற்கே வந்து பிரச்சனையை பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

    நான் அவர்களை பார்க்க விரும்பவில்லை என்று கூறிவிட்டேன். எனது வருத்தம் என்னவென்றால் அவர் நான் சொன்னபோதே அங்கிருந்த ஷோபா சக்தியை அவர் கண்டித்திருக்க வேண்டும். பிரச்சனைகள் வேறு, அடித்தது தவறு என்று அந்த இடத்திலேயே அவர் சொல்லியிருந்தால் நான் அவரை மதித்திருப்பேன்.

    இங்கே என மனதை நெருடுவது ஒன்றுதான் ஷோபாவை லீனா தோழர் என்று அழைப்பார். அவர் இவரை தோழர் என்றுதான் அழைப்பார்கள்.தோழர் என்றால் கம்யூனிஸ்டுகள் அல்லவா? இப்படியாக இரண்டு தோழர்களும் சேர்ந்து என்னை இப்படி டீல் செய்கிறார்களே என்பதுதான் எனக்கு நெருடலாகவும் வேதனையாகவும் இருந்தது.

    அவர் காலையில் கண்டிப்பதாகச் சொன்னார் இரவில் கண்டிக்காத தோழர், எப்படி காலையில் காலையில் கண்டிக்க முடியும் என்பதால் எனக்கு அவமானமாக இருந்தது. நான் பெரிதும் மதிக்கும் மு. ராமசாமிக்கு தொலைபேசி எனக்கு நடந்ததைச் சொன்னேன். அவர் தமிழ் நாடு மதிக்கும் மிகப்பெரிய எழுத்தாளர். அவர் திட்டினார். அவர்கள் நேர்மையில்லாதவர்கள் நீ ஏன் போய் அவர்களிடம் வேலை பார்க்கிறாய் என்று என்னை திட்டினார். ஷோபா சக்தி, லீனா பற்றி எல்லாம் அவர் தெரிந்து வைத்திருந்தார். அவர் திட்டினாலும் அதுதான் அப்போது ஆறுதலாக இருந்தது.

    ராமேஸ்வரம் ஸ்டேஷனில் போய் ஷோபா சக்தி மீது புகார் கொடுத்தேன்.நான் புகார் கொடுத்த விஷயம் ஸ்டேஷன் ஏட்டு மூலமாக அந்த ஏரியா கைடுக்கு தெரியவந்து அவர் மூலமாக லீனாவிற்குத் தெரியவந்தது ஆனால் அந்த இடத்தில் லீனாவிற்கு அதிக செல்வாக்கு இருந்தது. அரசியல் ரீதியாகவும் அந்தஸ்து ரீதியாகவும் செல்வாக்கோடு இருந்தார் லீனா. அந்தப் பகுதியில் உள்ள ஒரு இன்ஸ்பெக்டர் லீனாவின் கணவர் ஜெரால்டின் நண்பர் ஆகவே சம்பவ இடத்திற்கு என்னை அழைத்துக் கொண்டு அவர் சமாதானம் பேச வந்தார்.

    அங்கே லீனா கால்மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தார். எஸ் ஐ வந்த பிறகும் அவர் எழுந்திருக்கவும் இல்லை காலை கீழே போடவும் இல்லை. இதில் எஸ் ஐ டார்ச்சர் ஆகி விட்டார்.

    ஷோபா சக்தியை விசாரிக்கவே அவர் அங்கு வந்திருப்பதாகச் சொன்னார். இன்ஸ்பெக்டருடன் லீனா வாக்குவாதப்பட்டார் இதைக் கவனித்த ஏட்டு ஒரு மொபைல் போனில் நடப்பவற்றை படம் பிடித்தார். இதனைப் பார்த்த லீனா மேலும் டென்ஷனாகி பதிவு செய்யக்கூடாது எனவும் கோபப்பட்டார்.

    எரிச்சலான எஸ் ஐ அந்த போனை லீனாவிடமே கொடுத்துவிடுமாறு ஏட்டிடம் கூற லீனா கொடுக்க வந்த ஏட்டை அடிக்க கை ஓங்கினார் இதப் பார்த்த எஸ். ஐ ஷோபாசக்தியை தரதரவென்று இழுத்து ஜீப்பில் ஏற்றினார் ஷோபாசக்தி அப்பொழுது போதையில் இல்லாமல் மிகவும் அமைதியாகவே நின்று கொண்டிருந்தார்.

    அப்போது தன்னைக் கைது செய்ய வேண்டாம் என்று எஸ் ஐ யிடம் கும்பிட்டுக் கெஞ்சினார், ஆனால் அவரை வண்டியினுள் இழுத்துக் கொண்டுபோய் போட்டார்கள்.

    என்னை சமாதானம் செய்ய லீனாவின் தம்பி என்னிடம் பேசினார். நான் என்னை அடித்தற்கு ஷோபாசக்தி பதில் சொல்லியாக வேண்டும் என்று விடாப்பிடியாக கூறி விட்டேன். தவிறவும் தலையில் பலமாக அடிப்பட்டதால் எனக்கு அரசு மருத்துவமனை சிகிச்சையும் அவசியம் என்பதுதான் சட்ட ரீதியாக என் வாதமும் விருப்பமும்.

    கொஞ்ச நேரத்தில் மீண்டும் ஸ்டெஷனில் காட்சிகள் மாறியது. ஸ்டேஷன் ஏட்டு என்னை மிரட்டத் துவங்கினார். லீனாவின் அறைக்குள் இரவு இரண்டு மணிக்கு அத்து மீறி நுழைந்ததாக உன் மீது வழக்குப் பதிவு செய்து விடுவேன் என்றார்.ஒரு வழியாக எனது வாக்குமூலத்தை எழுதி வாங்கி விட்டு சிகிச்சைக்கு என்னை அனுப்பினார்கள்.

    நான் சிகிச்சைக்குச் சென்றேன் லீனாவும் ஷோபா சக்தியும் ஸ்டேஷனில் இருந்து வெளிவந்து சென்னைக்குக் கிளம்பிவிட்டார்கள்.லீனாவின் வலைக்குள் இருந்த கைடும் என்னை மிரட்ட ஆரம்பித்தார். லீனாவும் அதைத் தட்டிக் கேட்கவில்லை. “தோழர்கள்” இருவரும் ஸ்டெஷனில் இருந்தும் வெளிவந்து விட்டார்கள். சாதாரணமாக இம்மாதிரி தாக்குதல் வழக்குகளில் ஸ்பாட் பைன் என்கிற மாதிரியான நடைமுறைகள் எதுவும் கடைபிடிக்கப்படுவதில்லை.

    ஆனால் அதிகார பீடங்கள் எனும் மந்திரக் கோல்கள் தட்டினால் எப்படியான காக்கிக் கதவுகள் கூட திறந்து விடும் இல்லையா?அப்படியாகத்தான் தோழர்கள் தங்களின் மேல்மட்டத் தொடர்புகளைப் பயன்படுத்தி வெளிவந்தார்கள். எவ்வித அதிகாரமும் அற்ற நான் இன்று வரை ஷோபா சக்தியிடம் உதையும் வாங்கி விட்டு அதற்கான நீதியோ, அறத்தின் பார்பட்ட கரிசனமோ கூட இன்றி கிடக்கிறேன். இப்போது அவர்கள் பல் வேறு சமூக பிரச்சனைகளுக்காவும் எழுதத் துவங்கி விட்டார்கள்.

    இச்சம்பவம் தொடர்பாக நான் பத்திரிகைகளுக்கு மற்றி மாற்றி சொன்னதாக ஷோபாசக்தி கூறியுள்ளார் நான் தமிழ்க அரசியல் பத்திரிகைக்கு என்ன கூறினேனோ அதையேதான் நம் தேசத்திற்கும் கூறினேன் ஆனால் நம் தேசத்தின் ஆசிரியருக்கு லீனா மீது ஏற்கனவே கோபம் உண்டு. லீனா அவரை ஏமாற்றியிருக்கிறார்.

    அதனால் அவரை பழி வாங்க வேண்டும் என்பதற்காக அவர் நான் கூறியதை திருத்தி எழுதி, நான் சொல்லாத சில விடயங்களையும் எழுதியுள்ளார். சேர்த்து எழுதியதை ஷோபாசக்தி இப்பொழுது சுட்டி காட்டியுள்ளார் நான் அப்பொழுதே அந்த ஆசிரியரிடம் கூறினேன். நான் நினைத்தது போல் நடந்து விட்டது..

    இப்போது விரிவாக பத்திரிகைகளில் இது பற்றி பேச விரும்பினேன் அதுதான் இந்தப் பதிவு. இனியொரு இதனை வெளியிட்டு உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் என நம்புகிறேன். நான் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு இருக்கும் போது இனியொருவில் வெளியான செய்தியை எனது மாமா பிரதியெடுத்து வந்து காண்பித்தார்.

    செங்கடல் அல்ல சுரண்டல் கடல்.

    பணம் இல்லாமல் கூட பலர் சினிமா எடுக்கிறார்கள். ஆனால் அதைச் செய்வதற்கும் சில நட்பு சக்திகளும் தொழில் நுட்பக்கலைஞர்களும் உண்டு.ஆனால் லீனா நினைப்பதோ வெறுங்கையாலே முழம் போடுவது என்பார்கள் அல்லவா? அப்படித்தான். அவர்கள் இருவருக்குமே தொழிலாளர்கள் பற்றிய சிந்தனையே கிடையாது. பத்து ரூபாய் செலவு செய்ய வேண்டிய இடத்தில் எட்டு ரூபாய் செலவு செய்வார்.

    ஆனால் லீனா அளவிற்குக் கூட வசதியில்லாத சிலர் ஊதியம் கொடுக்காவிட்டாலும் தொழிளார்களை மரியாதையாக பிரெண்லியாக நடத்துவார்கள். ஆனால் இவர்கள்?எனக்கு மொத்தம் 35,000 சம்பளம் என்று பேசப்பட்டது ஆனால் இதுவரை நான் 10,800ரூபாய் தான் ஊதியம் பெற்றிருக்கிறேன் மீதி பணத்தை நானே வேண்டாம் என்று கூறிவிட்டேன்.எனக்கு பணம் ஒரு விஷயம் அல்ல ஆனாம் மான அவமானம்,

    நான் லீனாவிடம் கொண்ட நட்பின் காரணமாக மட்டுமே ஷோபா சக்தியை மதித்தேன். மற்றபடி அவர் மீது எனக்கு எந்த மரியாதையும் கிடையாது. அவரை அடிப்பதும் பெரிய விஷயம் அல்ல. ஆனால் மூச்சுக்கு முன்னூறு தடவை தோழர், தோழர் என்று சொல்லும் ஒரு “முற்போக்கு வாதி” இப்படி கீழ்த்தரமான ஆளாக இருப்பார் என்று நான் நினைக்கவில்லை. லீனாவுக்கு உலக அளவில் புகழ் பெற வேண்டும் என்ற ஆசை. ஆனால் அதற்கு அவரும் அவர் “தோழர்களும்” தொழிலாளர்களை அல்லவா விலை பேசுகிறார்கள்!

    நான் மு.ராமசாமி அவர்கள் போலெல்லாம் எழுத்தாளர் இல்லை. ஆனால் என்மீது தொழிலாளர்களை ஏமாற்றியவர்கள் சேறு பூசினால் எனது நியாயத்தையும் நான் சொல்வேன்.
    inioru.com/?p=11321

    Reply
  • BC
    BC

    //குசும்பு- மாக்சுக்குப்பின் எந்தப் புத்திசாலியும் பிறக்கவில்லையா?//
    குசும்பு உங்கள் கேள்வி பெறுமதிமிக்கது.
    //மாக்சையும் சரி மதத்தையும் சரி முதலில் குப்பையில் போடுங்கள்.//
    வழிமொழிகிறேன்.

    Reply
  • palli
    palli

    //ஷோபா சக்தி பெரும்பாலும் படப்பிடிப்பில் குடிபோதையில் தான் இருப்பார். மாலை நேரம் நெருங்கினால் போதும் போதை தலைக்கேறிவிடும்.//
    இது அவர் பலகாலம் படித்து பாடுபட்டு பெற்ற பட்டம்; அதை இப்படி கேலி செய்யபடாது; சோபா நீங்க கார்ல் மார்க்சை கவிக்க புறப்பட்டியள் ஆனால் நீங்களோ கட்டணம் இல்லாத விளம்பரத்தால் அம்பலபடுத்த படுறியள்?
    சோபா நீங்கள் சுயசரிதை எழுதினாலே பலபாகம் ஓடும்; பல்லியின் பாணியில் சொல்வதானால் எந்த விக்கட்டும் இழக்காமல் நூறு ரண் எடுத்தாச்சு, இதில் வேடிக்கை உங்கள் கணக்கின்படி ஆரம்ப ஆட்டகாரர் ஆன பல்லி பூச்சி பூரான் என்னும் ஆடவே தொடங்கவில்லை, அவர்கள் ஆட தொடங்கினால் எப்படியும் முன்னூறை தாண்டும்போல் உள்ளது ரண் அல்ல உங்கள் கேவலம் பற்றிய முன்னோட்டம்;

    Reply
  • Jeyarajah
    Jeyarajah

    கொஞ்சம் பொறுங்கோ நம்ம தலை இப்பத்தான் படிக்கிறார். எல்லாருக்கும் இருக்கு ஆப்பு.

    Reply
  • Rohan
    Rohan

    கருணா// இரவு 10.30 மணியிருக்கும் ஷோபாசக்தியும் அவரது இரண்டு நண்பர்களும் வந்து என்னை தனியாக அழைத்தார்.அப்போது என்னுடன் இருந்த எடிட்டரையும்,போட்டோகிராப்பரையும் திரும்பிச் செல்லுமாறு அனுப்பி விட்டு என்னை மட்டும் மீட்டிங் இருக்கிறது என்று அழைத்துச் சென்றார்கள்.

    புரடக்சன் வண்டி டிரைவர் எனக்கு நண்பர் ஆனால் அவர் என்னோடு வருவதை ஷோபாசக்தி அனுமதிக்கவில்லை, ஒரு அறைக்கு அழைத்துச் சென்றார்கள். அந்த அறையில் சுமார் 8 பேர் இருந்தார்கள்.

    அவர்கள் என்னை விசாரித்தார்கள். சொல்லி முடிப்பதற்குள் அந்த ஆகச் சிறந்த மார்க்சியவாதியும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தீராத கரிசனமும் மாறாத காதலும் கொண்ட மனித் உரிமை வாதி ஷோபா சக்தி என்னை தாக்கினார். //

    ஷோபாசக்தி // ‘உள்ளுக்க வரவிட்டு அடிக்கப் போறிங்க’ என்று நினைக்கிறேன்…செய்யுங்க! வாழ்த்துகள்!! //

    ‘உள்ளுக்க வரவிட்டு அடித்தலுக்குப்’ புது இலக்கணமே வகுத்திருக்கிறீர்கள், தோழர்! வாழ்த்துக்கள் ஷோபாசக்தி

    Reply
  • man
    man

    சரியாக சொன்னீர்கள் சந்திரன் ராஜா. “ஒரு மாபெரும் மேதையை மனிதகுலத்திற்கு மனிநேயத்தை ஒளிபாச்சிய மேதையை அவரின் ஆய்வுகள் கண்டுபிடிப்புகள்(வர்க்கம் உபரிமதிப்பு பாட்டாளிவர்க்க சர்வதிகாரம்) எல்லா வற்றையும் விடுத்து மணைவியையும் வைப்பாட்டியையும் சந்திக்கு இழுத்து வந்து முக்கிய பிரச்சனையாக்கி விமர்சிப்பது பாட்டாளிவர்கத்திற்குரிய போக்கல்ல என்பதை மட்டும் உறுதியாக சொல்லமுடியும்.அது ஒருவகை புளிச்சல் ஏவறையே!.” தீபக் என்ற தொழிலாளி மீது நடந்த அவலலத்தை மறைக்க இப்படி ஒரு கவர்ச்சிர எழுத்து. இதில் மறைக்கப்பட்டது தொழிலாளியின் மீதான சுரண்டல்.
    ஆசான் மார்க்ஸை எந்தச் சக்தியாலும் மனித குலத்தில் இருந்து அன்னிய்படுத்த முடியாது. சோபா போன்றவர்கள் எல்லாம் வெறும் சருகுகள் தான். இவர்கள் வரலாற்றில் குப்பைத் தொட்டிக்குள் தான் போவார்கள்.

    Reply
  • Suban
    Suban

    சோபாசக்தி என்ன இவ்வளவு முக்கியமான நபரா? ஒருவிசயம் மட்டும் விளங்குகிறது. எல்லோருடைய மண்டைக்குள்ளும் இருப்பது ஒரே பிரச்சினைதான். பாலியல் ஈடுபாடு என்கிறது இயல்பே. தன்னை வெளிப்படையாக காட்டும் சோபாசக்தியை போட்டுத்தாக்கும் அத்தனை பேரிடமும் தங்கள் ஒழுக்கத்தை நிறுவும் பேரவா ஒளிந்து கிடக்கிறது. ஆனால் உண்மை அவரவருக்கே வெளிச்சம்.

    சேபாசக்தியின் பழிநாணுவார் கட்டுரையிலுள்ள மற்றய எந்த விடயங்களும் பின்னூட்டக்காரரின் கண்களில் ஏன் படவில்லை. எல்லோருமே தாங்களும் தப்பித்துக்கொண்டு தங்களைச் சார்ந்தவர்களைக் காப்பாற்றிக் கொண்டும் ஓடுகிறீர்கள். இது நியாயமான போக்கே அல்ல. அநேக பின்னூட்டக்காரர்களில் பழிவாங்கும் உணர்வும் புலிக்கு நிகரான கொலைவெறியும் தாண்டவமாடுகிறது. சோபாசக்தியின் எழுத்துக்களிலும் கூட.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    //செங்கடல் அல்ல சுரண்டல் கடல்.
    பணம் இல்லாமல் கூட பலர் சினிமா எடுக்கிறார்கள். ஆனால் அதைச் செய்வதற்கும் சில நட்பு சக்திகளும் தொழில் நுட்பக்கலைஞர்களும் உண்டு.ஆனால் லீனா நினைப்பதோ வெறுங்கையாலே முழம் போடுவது என்பார்கள் அல்லவா? அப்படித்தான். அவர்கள் இருவருக்குமே தொழிலாளர்கள் பற்றிய சிந்தனையே கிடையாது. //

    மேலே உள்ளவை அருமையான வரிகள் மட்டுமல்ல , உண்மையான வரிகள். லீனா வெறும் கையால் முழம் போட்டுத்தான் மீடியா கிராப்ட் எனும் நிறுவனம் உருவானது. இதன் பணம் ஒரு சுவிஸ் தமிழருடையது. அதை சுத்த லீனா , லீனாவின் கணவன் ஜெரால்ட் மற்றும் சிவக்குமார் ஆகியோர் எடுத்த முயற்சிகளை ஏகப்பட்ட சென்னை அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் அறிவர். இருந்தாலும் அவர்களாலோ, அவர்களது அரசியல் செல்வாக்காலோ தப்ப முடியவில்லை. அந்த அளவு டோச்சர் மற்றும் பிரச்சனைகளை அந்த சுவிஸ் தமிழர் , சென்னை செல்லாமலே கொடுத்தார். லீனாவும் ஜெரால்டும் அழுது பார்த்தனர், அனைத்து பார்த்தனர். ஆள் அசையவே இல்லை. கொடுத்த பணம் திரும்பி வர பிரச்சனைகளைக் கொடுத்தார். லீனாவை ஏலம் போடாத குறையாக நடத்தினர்.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    /லீனாவின் கணவன் ஜெரால்ட் மற்றும் சிவக்குமார் ஆகியோர் எடுத்த முயற்சிகளை ஏகப்பட்ட சென்னை அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் அறிவர். இருந்தாலும் அவர்களாலோ, அவர்களது அரசியல் செல்வாக்காலோ தப்ப முடியவில்லை. அந்த அளவு டோச்சர் மற்றும் பிரச்சனைகளை அந்த சுவிஸ் தமிழர் , சென்னை செல்லாமலே கொடுத்தார்./-நண்பன்?
    அப்போது இலங்கைத்தமிழர்கள்,பெரிய “மாஃபியா கும்பல்”,”கொள்ளைக் கூட்ட பாஸ்” என்கிறீர்கள்!?.
    மேலே குறிப்பிட்ட வரிகளில்,எங்கேயாவது,இலங்கைத் தமிழரது “இனப்பிரச்சனைக்கான தீர்வின்” “அரசியல்” எங்கேயாவது இருக்கிறதா?.இப்படி ஒரு “சிங்கள பெண் படத்தயாரிப்பாளரைப் பற்றி”,கொழும்பில் நடந்த விஷயங்களை,”தமிழ்? இணைய தளங்களில்” தற்போது எழுத முடியுமா?!.

    Reply
  • palli
    palli

    சோபாவின் மார்க்ச்சிய சிந்தனைகள்.
    ஆரம்பம் அடிதடி ஊடகம்’ எழுத்து இன்னும் சில;
    ரயாகரனுக்கு கல்வெட்டு,
    தேனீர் கடை உடைப்பு;
    தோழர் ஒருவரின் (இறந்த) நினைவு நோட்டீஸ் கிழிப்பு;
    தேசத்த்குக்கு தடாவுக்காய் இரவு பகல் உழைப்பு;
    தமிழிச்சி இனையதளம் உடைப்பு;
    இடைக்கிடை சக எழுதாளர்களை மிரட்டல்;
    செங்கடலில் அடிஉதை;
    இத்தனையையும் மப்புமந்தாரத்துடந்தான் செய்தாராம்;

    இவர்தான் மார்க்ச்சியம் பேசுகிறார், இதில் கார்ல்மார்க்ஸ் பற்றி விமர்சனம் வேறு, இதை இப்படியே விட்டால் இன்னும் சில நூற்றாண்டில் மார்க்ச்சிய தந்தையில் ஒருவரான தோழர் சோபாசத்திஸ் அம்மயாருக்கு எழுதிய மடல் என சிலர் ஆதாரம் காட்ட நேரிடலாம்; என்னும் சோபாக்கள் வரத்தான் செய்வார்கள்? நல்லவேளை சோபா நம்மை விட சிறியவராய் இருப்பது இல்லையேல் இது நான் 1844ல் எனது பாலிய நண்பருடன் மாலை பொழுதில் பேசும்போது ‘(அப்பதான் அவருக்கு பேச்சு வரும்)இப்படி சொன்னார் என சொல்லுவார்; இவருக்கு எப்படி இந்த சிந்தனை வந்தது? இன்றய தோழியுடன் பேசும்போது இது தடக்குபட்டதா? அல்லது இன்ய சினிமா துறையினர் போல் கிசுகிசு சோபாவுக்கு பிடிக்குதா?? எல்லாம் சரிதான் சோபா அதென்ன கை நீட்டிற பழக்கம்; பேச்சு பேச்சாய் இருக்க வேண்டும் இப்படி எல்லாம் குழந்தை போராழிதான் சோபாசத்தி என்பதை நிருபிக்க வேண்டுமா??

    Reply
  • நண்பன்
    நண்பன்

    //DEMOCRACY on March 13, 2010 4:48 pm அப்போது இலங்கைத்தமிழர்கள்,பெரிய “மாஃபியா கும்பல்”,”கொள்ளைக் கூட்ட பாஸ்” என்கிறீர்கள்!?.
    மேலே குறிப்பிட்ட வரிகளில்,எங்கேயாவது,இலங்கைத் தமிழரது “இனப்பிரச்சனைக்கான தீர்வின்” “அரசியல்” எங்கேயாவது இருக்கிறதா?.இப்படி ஒரு “சிங்கள பெண் படத்தயாரிப்பாளரைப் பற்றி”,கொழும்பில் நடந்த விஷயங்களை,”தமிழ்? இணைய தளங்களில்” தற்போது எழுத முடியுமா?!.//

    இல்லை DEMOCRACY, அனைத்து இலங்கை தமிழர்களும் மாபியாவும் இல்லை, அப்பாவியுமில்லை. லீனா , ஐரோப்பா வந்து நடுத் தெருவில் ஆறுதலற்று நின்ற போது , உடனடியாக உதவியவர் மேற்படி இலங்கை தமிழர். அவர் பல காலமாக இந்தியாவில் இருந்தவர். லீனா , ஜெரால்டு மற்றும் சிவகுமார் ஆகியோரோடு எடிடிங் நிறுவனம் ஒன்றை உருவாக்க லீனா திட்டம் ஒன்றை முன் வைத்துள்ளார். லீனாவுக்கு அவரது பின்னணியும் தெரியாது. அவருக்கு லீனாவின் பின்னணியும் தெரியாது. லீனா , பாதிக்கப்பட்டவர்களுக்காக படம் எடுப்பவர் என இவர் நினைத்து , அவர் கணவரோடு இணைந்து மீடியா கிராப்டுக்கான (கொம்பனிக்கான)பணத்தைக் கொடுத்துள்ளார். அதற்கான ஆவணங்கள் முழுவதையும் , லீனாவின் சிவக்குமாரின் தந்தையான வக்கீலே செய்துள்ளார். ஆனாலும் அது செல்லுபடி ஆகாத விதத்திலேயே போடப்பட்டுள்ளது. கொடுத்த பணத்துக்கு மதிப்பான முத்திரைகள் ஆவணத்தில் ஒட்டப்பட வேண்டும். ஆனால் 20 ரூபாய் ஸ்டாம் பேப்பரில், பல லட்சம் இந்திய ரூபாய்க்கான ஆவணம் எழுதப்பட்டுள்ளது. அதுவே கோட்டுக்கு போகும் போது கிரிமினல் ஆகி, பணம் கொடுத்தவர் உள்ளே போகும் நிலை உருவாகும்.

    பணம் கொடுத்தவர் சென்னை போகும் போது , வாடகைக்கு வாங்கிய பொருட்ளை வைத்து சினிமா செட்டப் போல, நிறுவனத்தை கொண்டு சென்று காட்டியிருக்கிறார்கள். அதன் பின்னர் அவரை அப் பக்கமே போக விடாமல் பார்த்துள்ளார்கள். இலங்கை தமிழர், அடுத்த நாள் , வேறு ஒரு ஆளை விட்டுப் பார்த்தால் மீடியா கிராப்ட் , கனவுப் பட்டறையாக மாறியிருந்ததாம். உடனே தனது இந்திய நண்பர்களை அணுகியிருக்கிறார். அவர்கள் லீனா குழு குறித்து விபரங்களை சொல்லும் போது , பணம் லீனா குழுவுக்கு போய் விட்டதாம்.
    பணத்தை திருப்பிக் கேட்ட போது, கொடுத்தது கவால பணம் ( கறுப்பு பணம்) புலி என்று உள்ளே தள்ளிடுவோம் என லீனாவும், ஜெரால்டும் கத்தியிருக்கிறார்கள். அன்றிரவே ஒரு குழு லீனா விட்டை சுற்றி வளைத்ததாம். இவர்களை தமிழ் நாட்டில் அண்ணாச்சி என்பார்கள். நான் மதுரைக்காரன் , நாங்க நினைச்சா உங்க கதையே கந்தல் என்றெல்லாம் வாய் வால் விட்டாராம் ஜெரால்டு. அடுத்த நாள் எனக்கு நீங்க அண்ண மாதிரி என்றாராம். லீனாவோ, உங்க கூட தனியா பேசணும் என்றாராம். அதற்கு முதல் நாள் எனக்கிட்ட என்ன பேச்சு வேண்டிக் கிடக்கு, ஜெரால்டோடு பேசிக்கோ என்று பப்ளிக்கில் கத்தினாராம். வேணுமென்றால் ஆபீசை எடுத்துக்கோ என்றாராம். காரியாலயம் போய்ப் பார்த்தால் ,அங்கே இருந்தது வாடகைக்கு வாங்கிய அறை மட்டுமே. முதலில் காட்டியவை அனைத்தும் அப்போது இல்லை. பெண்ணென்றால் , பேயும் இரங்கும் நாடு தமிழகம். எனவே சாதுரியமாக திட்டம் போடப்பட்டதாம். ஜெரால்டு ஆந்திரா போனதாக சொல்லி சென்னையில் வைத்து மாட்டுப்பட்டுள்ளார். வக்கீலிடம் அழைத்துப் போய் பத்திரத்தை மாத்த கையெழுத்து போடச் சொன்னால், நேரம் நல்லாயில்லை என்று கம்யூனிசம் பேசியோர் கதைத்தனராம். கடைசியில் தாதா டைப்பில்தான் கையெழுத்தும் செக்கும் பெறப்பட்டுள்ளன.

    இவை குறித்து கேட்டு எழுதப்படுவது கூட, மாபியா எனக் காட்டப்படுவதற்காக அல்ல. மாபியாக்கள் வலையில் அடுத்தவர் மாபியாக்களிடம் மாட்டாமல் இருப்பதற்காகவே. இந்தியா தெரியாமல் பல தமிழர்கள் போய் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். சிலர் சாதுர்யமாகவும் , நண்பர்கள் இருப்பதாலும் தப்பியிருக்கின்றனர். இது மாபியாவா?

    Reply
  • Anonymous
    Anonymous

    சோபாசக்தியை பலர் பலவிதமாக எழுதிவிட்டார்கள். எல்லாமே அவர் வலிந்துகொண்ட அல்லது சோ காட்ட நினைக்கும் கொள்கைக்கு ஆதரவாகத்தான் இருக்கிறது. பின்னூட்டம் விடுகிறவர்களுக்க இது புரியப்போவதில்லை. அடுத்த நாவல்வர இந்த விமர்சனங்களெல்லாம் அவுட்.
    பின்னூட்டக்காரர் ஆரைத்தான் விட்டுவைக்கவில்லை! நாவலன் அசோக் ரயாகரன் ஜெயபாலன் கீரன் ராகவன் யென்னி…..

    இப்ப செங்கடலுக்கு விளம்பரம். சோபாசக்தி புத்திசாலித்தனமாக கிளறிவிட்டு வீட்டுக்குள் இருந்து ரசித்துக்கொணடிருப்பார் என நினைக்கிறேன்.

    Reply
  • மாயா
    மாயா

    //இப்ப செங்கடலுக்கு விளம்பரம். சோபாசக்தி புத்திசாலித்தனமாக கிளறிவிட்டு வீட்டுக்குள் இருந்து ரசித்துக்கொணடிருப்பார் என நினைக்கிறேன்.//

    அப்படி ரசித்தால் அது போத்தாலாகத்தான் இருக்கும். நாவல் எழுதுவதால் மட்டும் நல்லவராக முடியாது. நல்லவராக நடந்து கொண்டால் மட்டுமே அது முடியும். அட….. நம்ம தேசியத் தலைவரையே சனம் மறந்திட்டுதாம். கெட்டதைத்தான் சொல்லுதாம்? சோபா கதை எழுதினால் மட்டும் கெட்டதை மறந்திடுமா சனம்?

    இதுவரை தமிழ் நாட்டில் இருந்த மதிப்பு குறைந்து போச்சு. புலத்தில் , எவரும் சண்டித்தனம் காட்டுவதில்லை. ஊரில்தான் உருப்படாமல் இருந்தார்கள் என்றால், இங்கு வந்துமா உருப்படவில்லை? ஊருக்குத்தான் உபதேசம் , எனக்கில்லை கண்ணே என்பது போல் சமாச்சாரங்கள் இருக்கின்றன. அடி வாங்கியவரது எழுத்துக்கள் பார தூரமான விளைவுகளை ஏற்படுத்தும் போல் தெரிகிறது. உள்ளுக்கு விட்டு அடிக்கிற தர்பார் தோத்து போச்சு. இப்ப உள்ளே போய் அடிக்கிற அல்லது தூர நின்று அடிக்கிற தர்பார் நடக்குது?

    Reply
  • man
    man

    இன்றைய உலகில் பல்கலைக் கழகங்கள கூந்தலுக்கு இயற்கையில் மணம் இருக்கின்றதா? இல்லையா என்பது பற்றி பட்டம் பெற உங்களை ஏதாவது பாடத்தை எழுதத் சொல்லும் அதற்கு எழுதி எவருமட பட்டம் பெறலாம். இவ்வேளையில் பல்கலைக்கழக மார்க்சீயம் என்பது வேறு புரட்சிகர மார்க்சீயம் என்பது வேறு. இதில் எது மார்க்சீயம் என்பது பற்றி குழப்பம் இன்று இருக்கின்றது.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    /இவை குறித்து கேட்டு எழுதப்படுவது கூட, மாபியா எனக் காட்டப்படுவதற்காக அல்ல. மாபியாக்கள் வலையில் அடுத்தவர் மாபியாக்களிடம் மாட்டாமல் இருப்பதற்காகவே. இந்தியா தெரியாமல் பல தமிழர்கள் போய் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். சிலர் சாதுர்யமாகவும் , நண்பர்கள் இருப்பதாலும் தப்பியிருக்கின்றனர். இது மாபியாவா?/–நண்பன்
    சோபாசக்தி? யின் அடி, அஜீவனின் மிரட்டல், இது 1980களில் “பிளொட்” இயக்கம் ஒரத்தநாட்டில் பண்ணையாரை சுட்டு கொன்ற காலத்திலிருந்து தொடருகிறது. வெளிநாடு வரும் தமிழக தமிழர்களுடன், இலங்கைத்தமிழரின் தொடர்புகள் “அரசியலாக்கி கொச்சைப் படுத்தப்படும்” என்று “தெரவாடா புத்தமத?” ஸ்டைலிலும்,மலேஷியாவில் இந்து ஆலயங்களில் “ஐ.டி(இண்டியன் டமில்),சி.டி.(சிலோன் டமில்) என்று பிரித்துவைக்கப்பட்டு வரிசையில் எதிரெதிரே நிறுத்திவைக்கப்படும் ஸ்டைலிலும் நிறுவனப்படும் என்று எதிர்வு கூறலாமா?.

    “முள்ளிய வாய்க்காலில்”, “வன்னி மக்கள்” படுகொலையில் இந்தியா உதவியிருக்கிறது என்று இலங்கைத் தமிழர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது பாரிய குற்றச்சாட்டு!. இத்தகைய நிலையில், இலங்கைத் தமிழர்களை இந்தியாவில் யாரும் வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவில்லை!. பல விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களும், தற்போது இந்தியாவில் சொத்து வாங்கியுள்ளனர். இந்த தனிநபர்களின் போக்கை “ஒரு அரசியலில் சிக்கவைப்பது” மிகவும் கடினமாக உள்ளது! .இதனால் பல அப்பாவி மக்களின் எதிகாலம் பாதிக்கப்படுகிறது. தனிநபர்களின் “இயங்கியலை” ஒன்றுசேர்த்து, “புள்ளியியல் முறையில்” “சமூக இயங்கியலை” கோர்வைபடுத்தினால், இன்னொரு “உள்குத்துக்கே” வழிகோருகிறது!. தலை வலிக்கிறது…..

    லீனா தன்பக்க நியாயமாக,சிலவற்றை வெளியிட்டுள்ளார்…..
    அவதூறு என்பது மோசமான பலவீனர்களின் கடைசியும், முதலுமான ஆயுதம்
    2005ல், அஜீவன் என்பவர், மாற்று சினிமா வட்டாரத்தில் செயல்பட்டுவந்தவராக இருந்ததால் நண்பரானார். தோழர்கள் பிரகலாதன், வசந்தி மூலம் தான் அஜீவன் எனக்கும், ஜெரால்டுக்கும் தெரியவந்தார். 2005ல் EU Media ஸ்காலராக(BBC, Thomson Media Foundation) இந்திய ஐரோப்பிய கலாச்சாரப் பகிர்வை பிரதிபலிக்கும் ஆவணப்படத்தை தயாரிப்பதற்காக ஜெர்மனி வந்திருந்தபோது ரவி மற்றும் ரஞ்சி தோழர்கள் அழைப்பில் ஸ்விஸ்ஸிற்கும், கி.பி.அரவிந்தன், பிரகலாதன், வசந்தி தோழர்கள் அழைப்பில் பாரிஸிற்கும், ஓவியர் ராஜா, மற்றும் லண்டன் விம்பம் அமைப்பு தோழர்கள் அழைப்பில் லண்டனுக்கும் திரையிடலுக்கும், கவிதை விமர்சனக்கூட்டத்திற்கும் வந்திருந்தேன். அப்போது தொடர்பில் வந்த அஜீவன், ஜெரால்ட், ஏற்கெனவே தொலைக்காட்சி தயாரிப்பு வேலைகளில் இருந்ததால், தனக்கு எடிட்டிங் ஸ்டூடியோ வைத்து தர வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். நட்பு, நம்பிக்கை அடிப்படையில் தான் ஜெரால்டும் இடம் பார்த்து, மெஷின் வாங்கி எல்லாம் செய்தார். இந்தியாவுக்கு வந்த அஜீவன் மனம் மாறி, தனக்கு அதில் விருப்பமில்லை என்றும், ஜெரால்டையே எடுத்து நடத்துங்கள் என்றும் சொன்னதற்கு, ஜெரால்டு மறுத்துவிட்டார். கிரடிட்டுக்கு வரவைக்கப்பட்ட மெஷின்கள் மற்றும் தரவுகளின் மதிப்பான பதினைந்து லட்சத்தின் பொறுப்பேற்கும் சக்தி யில்லை என்றும் தன் நிகழ்ச்சிகளையும், தன் நண்பர்கள் நிகழ்ச்சிகளையும் எடிட்டிங் வேலைகளுக்கு தருவிக்க முடியுமே தவிர, பிஸினசை எடுத்து நடத்த முடியாது என்றும் கருதினார். தவறான வழிகாட்டுதல்களின் பேரில், கட்சி சார்ந்த ஆட்கள் மூலமாகவும், வேறு குண்டர்கள் மூலமும் அஜீவன் இந்த விசயத்தை கையாள முயன்றதால் தான் ஜெரால்டு வழக்கறிஞர் வைத்துக் கொண்டார். நட்புக்கும் நம்பிக்கைக்கும் அஜீவன் செய்த அவமரியாதையால் ஜெரால்டு பதினைந்து லட்சம் கடன்பட்டு அதை அடைத்தார். அதற்கான காசோலைகளும் பேங்க் ரசீதுகளும், பில்களும் அஜீவனிடமும் உளள்து, ஜெரால்டிடமும் உள்ளது. இதற்கு மேலும், தவறான பரப்புரைகள் செய்தால் சட்டப்படி தான் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்.

    ஈழத்தமிழர்களிடம் காசு பெற்றுக் கொண்டதாக யார் எழுதினாலும், எனக்கு தரவுகளையும், யார், என்ன என்ற விவரங்களுடன், தர வேண்டும். போகிற போக்கில் எழுதினால் எழுதுபவர்களும், வெளியிடும் இணையதளங்களும் அவதூறு வழக்கை சந்திக்க வேண்டி வரும்.

    ஒரு படைப்பை, படைப்பாளியை அணுகுவதற்கான தார்மீகத்தில், வெறும் அவதூறுகளை பயன்படுத்துபவர்கள் மிக மோசமான பலவீனர்கள். அவர்களுக்கு என் ஆழந்த அனுதாபங்கள்.

    தமிழச்சி, பெரியாரின் எழுத்துக்களை இணையத்தில் தகவேற்றும் போதே, கொஞ்சம் ஆழமாக உள்வாங்கி படிக்கவும், புரிந்துக் கொள்ளவும் முயற்சி செய்திருக்கலாம். நான் யாரோடும் கள்ளக் காதல்(காதலில் என்ன நல்ல காதல், கள்ளக் காதல்?) வைத்துக் கொண்டால் தான் உங்களுக்கென்ன? பெரியார் வழி, நூறு காதலர்களையாவது வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே என் அவா. கடைந்தெடுத்த பிற்போக்கு கருத்துக்களை சொல்வதற்கும், பின்பற்றுவதற்கும் அடாவடி எதற்கு, ஆர்ப்பாட்டம் எதற்கு?

    மரபை மீறும் ஆணுக்கு அயோக்கியப் பட்டம், பெண்ணுக்கு விபச்சாரி பட்டம். ஒழுக்கம் என்பதே தமக்குப் பிடிக்காதவர்களின் மீது ஒருவர் ஏவும் அஸ்திரமே, தம் இருப்பின் மீது, பலத்தின் மீது உறுதியில்லாதவர்கள் பற்றிக் கொள்ளும் மனப்பிரம்மையே!

    லீனா மணிமேகலை

    Reply
  • அஜீவன்
    அஜீவன்

    லீனா , பொய்களை இங்கே எழுதியுள்ளார். நான் உண்மைகளை வீடு வந்ததும் எழுதுகிறேன். வெளியே நிற்பதால் , உடனடியாக எழுத முடியவில்லை. லீனாவின் வழக்குக்காக நான் காத்திருக்கிறேன். அதுவே எனது தேவையுமாகும்.

    லீனாவுக்கு , பிரகலாதன் – வசந்தி ஆகியோரைத் தெரியாது. என்னால்தான் ஐரோப்பாவில் பலர், லீனாவுக்கு அறிமுகமானார்கள். லீனா , ஒரு எடிட்டிங் ரூம் உருவாக்கலாம் என்று எழுதிய முதல் ஈமெயில் முதல் அவர் அடாவடித்தனமாக எழுதிய அத்தனை மெயில்களையும் வெளியிட என்னால் முடியும். அத்தனையும் என்னிடம் உள்ளது.

    விரைவில் வெளியே வராத லீனாவின் உண்மை முகத்தை எழுதுகிறேன்.

    http://www.ajeevan.com

    Reply
  • Anonymous
    Anonymous

    ‘நாவல் எழுதுவதால் மட்டும் நல்லவராக முடியாது’
    உண்மை. அவர் நல்லவரா கெட்டவரா என்பதல்ல இங்க பிரச்சினை. கொசிப்புகள் நிலைக்காது. நல்ல படைப்புக்கள்தான் நிலைக்கும்.
    யாரைப்பற்றித்தான் அவதூறு இல்லை. அதுவும் புனைபெயர்களில். சொந்தப்பெயர்களில் வந்தால் அவர்களும் தப்பமுடியாது.

    Reply
  • palli
    palli

    // இது 1980களில் “பிளொட்” இயக்கம் ஒரத்தநாட்டில் பண்ணையாரை சுட்டு கொன்ற காலத்திலிருந்து தொடருகிறது. வெளிநாடு வரும் தமிழக தமிழர்களுடன், இலங்கைத்தமிழரின் தொடர்புகள் //
    என்னதான் சொல்ல வருகிறியள்;

    Reply
  • Alex Eravi
    Alex Eravi

    அஜீவன்,
    Is it this பிரகலாதன் from Point Pedro? studied in Royal College, Colombo? clesed to Kittu?

    Reply
  • அஜீவன்
    அஜீவன்

    //Alex Eravi on March 14, 2010 10:05 pm அஜீவன்,
    Is it this பிரகலாதன் from Point Pedro? studied in Royal College, Colombo? clesed to Kittu?//
    இருக்கலாம். இருக்காமலும் இருக்கலாம். பிரகலாதன், எனது நெருங்கிய நண்பர். எனவே மேலதிக தகவல்களை எழுத முடியவில்லை. மன்னிக்கவும். உங்கள் மின் அஞ்சல் வழி , என்னோடு தொடர்பு கொண்டால் , அதை அவருக்கு தெரிவித்து தொடர்பு கொள்ள வழி செய்யலாம். என் மின் அஞ்சல் info@ajeevan.com

    Reply
  • அஜீவன்
    அஜீவன்

    DEMOCRACY on March 14, 2010 2:46 am இணைத்துள்ள லீனாவின் மடலுக்கான எனது சிறு விளக்கம் இது:-

    2003ம் ஆண்டு சுவிஸில் நடைபெற்ற ஐரோப்பிய குறும்பட விழாவுக்கு, மாத்தம்மாவை அனுப்பிய சமயத்தில் , நிழல் ஆசிரியர் திருநாவுக்கரசுவிடம் எனது தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டு லீனா முதன் முதலாக தொடர்பு கொண்டார். அதன் பின்னர் , தொடர்ந்து வாரம் ஒரு முறை தொடர்பு கொண்டதோடு , தனக்கு விழாவில் கலந்து கொள்ள விருப்பம் எனவும் , அழைப்பிதழ் அனுப்புமாறும் , தனது படத்துக்கு விருது ஒன்றை கிடைக்கப் பண்ணுமாறும் வேண்டி நின்றார். நான் , அது எனது வேலையில்லை. அது தேர்வுக் குழுவின் பணி என்று அவருக்கு தெளிவுபடுத்தினேன்.

    குறும்பட தேர்வில் எனது தலையீடு இருக்காததால், சுவிஸ் திரைத் துறையினர் , நேர்மையான முறையில் தேர்வுகளை நடத்தினர். இதோ விபரங்கள்:
    http://www.thinnai.com/?module=displaystory&story_id=203030211&format=print
    http://www.yarl.com/articles/node/290

    இது இப்படி இருக்க, லீனா // 2005ல், அஜீவன் என்பவர், மாற்று சினிமா வட்டாரத்தில் செயல்பட்டுவந்தவராக இருந்ததால் நண்பரானார். தோழர்கள் பிரகலாதன், வசந்தி மூலம் தான் அஜீவன் எனக்கும், ஜெரால்டுக்கும் தெரியவந்தார். 2005ல் EU Media ஸ்காலராக(BBC, Thomson Media Foundation) இந்திய ஐரோப்பிய கலாச்சாரப் பகிர்வை பிரதிபலிக்கும் ஆவணப்படத்தை தயாரிப்பதற்காக ஜெர்மனி வந்திருந்தபோது ரவி மற்றும் ரஞ்சி தோழர்கள் அழைப்பில் ஸ்விஸ்ஸிற்கும், கி.பி.அரவிந்தன், பிரகலாதன், வசந்தி தோழர்கள் அழைப்பில் பாரிஸிற்கும், ஓவியர் ராஜா, மற்றும் லண்டன் விம்பம் அமைப்பு தோழர்கள் அழைப்பில் லண்டனுக்கும் திரையிடலுக்கும், கவிதை விமர்சனக் கூட்டத்திற்கும் வந்திருந்தேன். // என்கிறார்.

    2003ல் அவரது மாத்தம்மாவை, ஐரோப்பிய குறும்பட விழாவுக்கு அனுப்பியது, அதற்கான ஒரு பரிசு கிடைத்தது, நிழல் ஆசிரியர் , திருநாவுக்கரசுவால் அறிமுகமானது என்பவற்றைக் கூட லீனா மறந்து விட்டார். நான் மறக்கவில்லை. இணையத்தில் ஆவணங்களை தேடி யாரும் எடுக்கலாம். எனவே மேலே இணைத்த இணைப்பு இணையத்தில் அக் காலத்தில் இடப்பட்ட இணைப்புகளேயாகும். இக் குறும்பட விழா கூட ஜெயபாலனின் தேசத்தோடு இணைந்து சுவிஸ் – லண்டன் நடத்துவதாகவே இருந்து, பின்னர் சுவிஸில் மட்டுமே நடைபெற்றது. அதற்கு முன்னர் லீனா குறித்து நான் அறிந்திருக்கவில்லை. லீனா , திருநாவுக்கரசுவிடம் என் தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டு, தனது மாத்தம்மாவுக்கு முதல் பரிசை வாங்கித் தர வேண்டும் என, பல முறை கேட்டுக் கொண்டார். இதே போல இன்னொரு முக்கியமான ஒருவரது குறும்படத்துக்கு முதல் பரிசை கொடுக்குமாறு திருநாவுக்கரசுவும் சொன்னார். நான் இவற்றை என்னோடு பேச வேண்டாம் என்று நேரடியாகவே சொன்னேன். இப்படியான விடயங்களில் பலர் மனவருத்தத்துக்கு உள்ளாவதுண்டு. இருந்தாலும் தீர்ப்புகள் சரியாக கொடுக்கப்பட வேண்டும் என்பதில் கரிசனையாக இருந்ததால், சுவிஸ் திரைப்பட சம்மேளனத்தின் நடுவர் தீர்ப்பில் எந்த மாற்றத்தையும் கொண்டு வர நான் தலையீடு செய்யவில்லை. அதனால் பொதுவாக அனைவரும் மகிழ்ந்தனர் என்றே சொல்ல வேண்டும். எமது விழாவில் சிறந்த நடிகராக தேர்வான ஒரு இளைஞன் ராம், இன்று தெலுங்கு சினிமாவில் முக்கிய கதாநாயகனாக திகழ்கிறார். எம்மால் கிடைத்த விருதை மறக்காமல் சொல்வதோடு , திரைப்பட படப்பிடிப்புக்காக சுவிஸ் வரும் போது , என்னை சந்திக்காமல் செல்வதில்லை. ஏதாவது இந்தியாவிலிருந்து கொண்டு வருவார். அதேபோல இந்தியா போகும் போதும் , அவர் குடும்பம் என்னை மறக்காமல் வீட்டுக்கு , அழைத்துச் செல்லவார்கள். அவர் பேட்டிகளில் எமது விழா குறித்து குறிப்பிட்டாமல் இருப்பதில்லை. http://telugustarsprofile.blogspot.com/2008/07/telugu-actor-ram-interview.html
    அவரது போட்டோ கலரி: http://images.google.de/images?hl=de&q=telugu%20actor%20Ram&aql=&oq=&gs_rfai=&um=1&ie=UTF-8&sa=N&tab=wi

    அடுத்து சிறந்த ஒளிப்பதிவாளராக தேர்வான அன்டோனியோ டெர்சியோ , சில தமிழ் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். அவர்தான் லீனாவின் , காவேரி நதி குறித்த ஆவணப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்யப் போய் , தூக்கி எறிந்து விட்டு வந்ததிருந்தார். என் பிரச்சனையை கேள்விப்பட்டு , கோபமாக இருந்தார். நான் சென்னைக்கு லீனா பண விடயமாக போன போது , தனசரி என்னை சந்தித்தவர்களில் இவரும் , ஒளிப்பதிவாளர் கருப்பையா ஆகியோர் முக்கியமானவர்கள். ஏனையோர் எனது பழைய இந்திய நண்பர்கள். இலங்கையர் எவரும் இங்கே இல்லை. எனவே பண்ணையார் கதை இங்கே தேவையற்றது.

    இந்த விழா மூலமே லீனாவுக்கு என்னைத் தெரியும். வேறு எவரும் என்னை , அவருக்கோ அல்லது அவரை எனக்கோ அறிமுகம் செய்து வைக்கவில்லை. பாட்டாளி மக்களுக்கான ஒரு பெண் படைப்பாளியாக , இவர் மேல் மரியாதை ஏற்பட்டது. இக் காலத்தில்தான் லீனா , ஜெர்மனிக்கு ஒரு தொலைக் காட்சி ஆவணப்படத்தில் பணியாற்ற வருவதாகவும் , வரும்போது சுவிஸ் வர விரும்புவதாகவும் சொன்னார். சிறிது காலத்தில் இவர் ஜெர்மனிக்கு வர விருப்பதாகவும் , எனக்கு ஒரு ஸ்பொன்சர் கடிதம் ஒன்று அனுப்புமாறும் கேட்டு தொடர்பு கொண்டார். நான் அப்போது ஜெர்மன் குழுவொன்றுடன் படப்பிடிப்பில் இருந்ததால், உடனடியாக மடலை அனுப்ப முடியவில்லை. ஆனால் ஐரோப்பாவில் சிலரை சந்திக்க வேண்டுமென்பதால் சில தொலைபேசி எண்களைக் கொடுத்தேன். அவர் அதனூடாக பலரை தொடர்பு கொண்டிருந்தார்.

    ஜெர்மனியில் அவரது படப்பிடிப்பு முடிந்ததும் , அவர் சென்னைக்கு வெளியேற வேண்டும். லீனாவோ , பல இடங்களுக்கு செல்ல திட்டமிட்டு வந்திருந்ததால், ஜெர்மன் படப்பிடிப்பு குழுவுக்குள் பல பிரச்சனைகளை உருவாக்கியிருந்தது. எனவே கடைசி தினத்தில் லீனா , தங்கியிருந்த விடுதியை விட்டு வெளியேற்றியிருந்தார்கள். இவர் ரிசப்சனில் இருந்து அழுதவாறே என்னை தொடர்பு கொண்டார். இந்நிலையில் உதவ வேண்டும் எனும் மனநிலையில் உடனடியாக அவர் இருந்த இடத்துக்குச் சென்றேன். கையில் பெரிதாக பணமும் இல்லை என்றார். நான் 4-5 மணி நேரத்தில் வருகிறேன். அதுவரை காத்திருங்கள் என்று சொல்லிவிட்டு அவர் இருந்த விடுதிக்கு சென்றேன். கவிஞர் அறிவுமதி , இவருக்கு உதவ ஒரு இலங்கையரை கேட்டிருந்தார். இவரது குணாதிசயத்தை பார்த்து விட்டு உதவ மனம் வரவில்லை என்று பின்னர் என்னிடம் சொன்னார்.

    இருந்தாலும் நான் லீனாவை வீஸா இல்லாமல் சுவிஸுக்கு அழைத்து வந்தேன். அந்நேரம் ஐரோப்பாவோடு சுவிஸ் இணைந்திருக்கவில்லை. எனவே லண்டன் , சுவீஸ் ஆகிய நாடுகளுக்கு வீஸா தேவை. லண்டன் வீஸா ஏற்கனவே பெற்றிருந்தார். சுவிஸில் , என் வீட்டிலேயேதான் தங்கினார். நான் கிடைத்த நேரத்தில் சுவிஸை பார்க்க வழி செய்தேன். ஒருநாள் ரஞ்சி – ரவி வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். அடுத்த நாள் சூரிச்சில் அவரது குறும்பட திரையிடல் மற்றும் சந்திப்பு ஆகியவை ரஞ்சி – ரவி நண்பர்கள் ஒழுங்கில் இடம் பெற்றது. இதன் போது புலிகள் மற்றும் புலிகள் சாராத அனைவரும் கலந்து கொண்டனர். நான் அப்போது ஐரோப்பிய திரைப்பட சம்மேளனம் சார்பாக ஒரு நினைவு பரிசை வழங்கினேன். இதையே குமுதம் ஒளிப் பேட்டியில் விருதாக காட்டினார்.

    அதன் பின்னர் லண்டன் செல்வதற்கான விமானச் சீட்டைக் கூட எடுத்து பாசல் விமான நிலையம் ஊடாக லண்டன் அனுப்பி வைத்தேன். அங்கே ஓவீயர் ராஜா, இவரை அழைத்துச் சென்று தங்க வைத்தார். சுவிஸில் கிடைத்த சொகுசு லண்டனில் கிடைக்கவில்லை எனச் சொன்னதோடு , ராஜா தன்னை பஸ்ஸிலும் , ரெயிலிலும் அழைத்துச் சென்றதாகவும், தனது குறும்பட கருத்தரங்கு மண்டபத்தில் இருந்த குளிர் காரணமாக பிரச்சனைப் பட்டதாகவும் என்னோடு சொன்னார். அதை லண்டன் நண்பர்கள்தான் எழுத வேண்டும்.

    பிரான்ஸில் , என் நண்பர் பிரகலாதன் வீட்டில் தங்க ஏற்பாடு செய்திருந்தேன். அவர்கள் தமக்கு லீனாவை தெரியாது , நீங்களும் வாருங்கள் என்றார். நான் பாரீஸ் சென்று பிரகலாதனோடு , விமான நிலையத்தில் வந்திறங்கிய லீனாவை கருத்தரங்கு நடந்த இடத்துக்கு , அழைத்துச் சென்றோம். அங்கே புரோஜக்டரில் ஒலி போதவில்லை என , அதை இயக்கிய இளைஞர்களுக்கு லீனா சத்தம் போட்டார். அதனால் கோபமடைந்த நான், லீனாவை அனைவர் முன்னிலையிலும் திட்டித் தீர்த்தேன். இது ஒன்றும் இந்தியா இல்லை. இங்கே எல்லோருக்கும் காது நல்லா கேக்கும் என்றேன். அவங்க உதவத்தான் வந்திருக்காங்களே தவிர, உங்க பேச்சு கேட்க வரல்ல என்றேன். இக் காலத்தில் இறந்த நண்பன் கலைச் செல்வனும் வந்திருந்தார். சோபாவை , லீனா பார்த்தது அப்போதுதான்.

    இந்த நிகழ்வு முடிந்து வரும் போது ” ஒற்றையிலை ” குறித்து விமர்சித்த , கிபீ. அரவிந்தன் அவர்களோடு , காரில் பெரிய விவாதம் ஒன்றை நடத்தி விட்டு, அவருக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரம் என்றார். மற்றவர்களது விமர்சனங்களை ஏற்கும் பக்குவம் லீனாவிடம் இல்லாதது குறை என்றேன்.

    பிரகலாதன் வீட்டில் ஒரு நாள் தங்கி , பாரீஸும் பார்த்துவிட்டு ஜெர்மன் போய் , விமான நிலையத்தில் அனுப்பும் போது , அவர் கையில் வைத்திருந்த பொதிகளின் பாரம் அதிகம் எனவே , நான் அனுப்பி வைக்கிறேன். நீங்கள் 25 கிலோவோடு போங்கள் என்றால் , இல்லை அது எனக்குத் தெரியும், நான் எப்படியும் கொண்டு போவேன் என விமான நிலையத்துள் போனவரை விமானத்தில் ஏறவிடாது, இறக்கி விட்டு விமானம் போய் விட்டது. நானும் , ஜேர்மன் பெண் இயக்குனரும் இவரை வழியனுப்பி விட்டு வந்து கொண்டிருக்கும் போது, லீனா மொபைலுக்கு அழைத்தார். ” என்னை விட்டுட்டு போயிட்டாங்க ” என்று பேச முடியாமல் பேசுவது கேட்டது. நானும் , ஜேர்மன் இயக்குனரும் திரும்பி விமான நிலையம் சென்றோம். விமான நிலைய அதிகாரிகளோடு பேசினோம். ” நாங்கள், ஏற்கனவே இவற்றைக் கொண்டு போக முடியாது என சொன்னோம். இவரோ , வந்தவர்களிடம் கொடுத்து விட்டு வருவதாக சொல்லி விட்டு அதைக் மீண்டும் கொண்டு வந்தார். எனவே இந்த நிலை” என்றனர்.

    சரியென மீண்டும் , அழைத்துச் சென்று அந்த பெண் இயக்குனர் வீட்டில் தங்க வைத்து விட்டு, டிக்கட்டுக்கு கட்ட மேலதிக பணமும் , தங்க பணமும் கொடுத்து விட்டு சுவிஸ் வந்தேன். 7 நாள் கழித்தே லீனா இந்தியா திரும்பினார். மேலதிக பொருட்களைக் கூட , நான் தபாலில் அனுப்பி வைத்தேன்.

    இந்த நன்றிக்காக என லீனாவும் , ஜெரால்டும் தொலைபேசியில் சகோதரர்கள் போல பேசி வந்தார்கள். இதன் போதுதான் லீனா , ஒரு எடிடிங் ரூம் போட்டால் நல்லாயிருக்கும். எவராவது இருக்காங்களாண்ணு பாருங்க என்றார்கள். இதற்கெல்லாம் யாரையும் கேட்க முடியாது. இது நம்ம ஜனங்களது பிஸ்னஸ் கிடையாது என சொன்னாலும் , லீனா தொடர்ந்து மெயிலில் , அது குறித்த புரொஜக்ட்களை மின் அஞ்சல் வழி எழுதியும் , தொலைபேசியில் பேசியும் , அஜீவன் கூட பண்ணலாம். நாங்க இருக்கிறோம் என்றார்கள். இக் காலத்தில் சுனாமியும் வந்தது , நானும் அங்கு பணிகளுக்காக போனேன்.

    அடுத்து தொடரும்…………

    Reply
  • அஜீவன்
    அஜீவன்

    இந்த நன்றிக்காக என லீனாவும் , ஜெரால்டும் தொலைபேசியில் சகோதரர்கள் போல பேசி வந்தார்கள். இதன் போதுதான் லீனா , ஒரு எடிடிங் ரூம் போட்டால் நல்லாயிருக்கும். எவராவது இருக்காங்களாண்ணு பாருங்க என்றார்கள். இதற்கெல்லாம் யாரையும் கேட்க முடியாது. இது நம்ம ஜனங்களது பிஸ்னஸ் கிடையாது என சொன்னாலும் , லீனா தொடர்ந்து மெயிலில் , அது குறித்த புரொஜக்ட்களை மின் அஞ்சல் வழி எழுதியும் , தொலைபேசியில் பேசியும் , அஜீவன் கூட பண்ணலாம். நாங்க இருக்கிறோம் என்றார்கள்………

    இக் காலத்தில் இலங்கையில் படம் பண்ணும் நோக்கத்தோடு, எனது நண்பர்களோடு பேசி வந்ததால் , படத்தின் பிரின்டிங் எல்லாம் சென்னையில் செய்ய வேண்டி வரலாம் எனும் நிலையில், லீனா – ஜெரால்டு சொன்ன எடிடிங் விடயத்தை செய்யலாம் என எண்ணினேன். இவ்வளவு உதவி செய்த எனக்கு , இவர்கள் ஒரு போதும் துரோகம் இழைக்க மாட்டார்கள் என்பது எனது நம்பிக்கையாக இருந்தது. என்னைப் போல , அவர்களையும் நம்பினேன். பேசும் விதத்தில் இருவரும் மிக கண்ணியமாக நடந்து கொண்டனர். யாருடைய பணத்தையாவது வாங்கிக் கொடுத்து செய்யும் தொழிலல்ல இது. நிலைக்க சில காலம் எடுக்கும். சில வேளை நஸ்டமும் வரலாம். எனவே நானே முதலிடுவதென எண்ணினேன். அதைச் சொன்ன போது அஜீவன் சார்பில் நானே இருக்கிறேன் என லீனா சொன்னார். அதற்கான ஆரம்ப கட்ட வேலைகளுக்காக சிறிது பணம் வங்கி மூலம் அனுப்பினேன். அதைக் கொண்டு கட்டிடம் ஒன்றை வாடகைக்கு எடுக்கவிருப்பதாக சொன்னார்கள். பின்னர் கட்டிடம் எடுக்கப்பட்டு விட்டது. நடிகர் நாஸரிடம் , ஒரு எடிடிங்குக்கான பொருட்கள் இருக்கின்றன. அவற்றை குறைந்த விலைக்கு எடுக்கலாம் என்றார்கள். அது குறித்த தகவல்களை தருமாறு கேட்டேன். பணத்தைப் பற்றி சொன்னார்களே தவிர , விபரம் கிடைக்கவில்லை.

    நான் இந்தியா வருவதாக சொல்லி, வந்து ஏனைய பொருட்களை வாங்கலாம் என சொன்னேன். அதுவரை நாஸரிடம் எடிடிங் பொருட்கள் இருக்காது , அதை எப்படியாவது வாங்கியாக வேண்டும் என்றார் லீனா. எப்படியாவது வாங்குங்கள், நான் வந்து பணம் தருகிறேன் என்றேன். பின்னர் யாரிடமோ கடன் வாங்கி, பொருட்களை வாங்கி விட்டதாக லீனா சொன்னார். நான் சென்னை சென்றேன். விமான நிலையத்தில் வரவேற்ற லீனாவும் , ஜெரால்டும் , நேராக வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். பேசிக் கொண்டேயிருந்தோமே தவிர , என்னைக் காரியாலத்துக்கு அழைத்துச் செல்லவில்லை.

    எனக்குள் சற்று உறுத்தலாக இருந்தது. சாதாரணமாக சென்னை சென்றதும் , அதைக் காண்பித்திருக்க வேண்டும். இரு நாட்கள் லீனா வீட்டில் தங்கினேன். அதன் பின்னர் எனது நண்பர்கள் வரத் தொடங்கியதும், நான் வெளியில் தங்க விரும்புவதாக சொன்னேன். எனக்கு விஜயகாந்தின் விடுதியில் அறை எடுத்து தந்தார்கள். அதிகம் என்னோடே இருக்க , இயக்குனர் சிவகுமார் இருக்குமாறு லீனா , ஏற்பாடு செய்திருந்தார். அவரும் நான் வரும் வரை , நெருக்கமான தன்னுடன் கூட சொல்லவில்லை எனத் தெரிவித்ததும் , எமது வியாபார விடயத்தைப் பற்றி அவரிடம் சொன்னேன். அவரோ , பார்த்து செய்யுங்க என்றார். எனக்குள் உறுத்தத் தொடங்கியது. ஒரு தொகை பணம் , எதுவித பத்திரமும் இல்லாமல் அனுப்பப்பட்டிருந்தது. நான் சிவகுமாரிடம், நான் வந்து சில நாட்களாகியும் காரியாலயத்தை , இவர்கள் காட்டவில்லை. எனவே இத்தோடு இதைக் கைவிடலாம் என நினைப்பதாக சொன்னேன்.

    அடுத்த நாளே அவர் லீனாவுக்கு அதைச் சொல்லியிருக்கிறார். இரு நாட்களுக்கு பின்னர் , காரியாலயத்தைக் காட்ட அழைத்துச் சென்றார்கள். தடபுடலாக ஏதோ நடந்திருப்பதை உணர முடிந்தது. போனதோடு நிறுத்திடலாம் என நினைக்கிறேன் என சிவக்குமாரிடம் சொன்னேன். இப்போது சிவக்குமார் , என் பக்கமாக பேசத் தொடங்கினார். கொடுத்த ஒரு பெருந் தொகை அநியாயமாகி விடும். அவர்களும் , உங்களை நம்பி ஏதோ செய்திருக்கிறார்கள். பத்திரம் எழுதிக் கொண்டு கொடுங்கள். உங்கள் சார்பில் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். சிவகுமாரின் தந்தை ஒரு கிரிமினல் வக்கீல். அவர் மூலமாகவே பத்திரம் எமக்கு வந்தது. நான் இரண்டாவது தொகை 8 லட்சத்தை கொடுத்து, லீனாவிடம் கையெழுத்து வாங்கினேன். முழுத் தொகைக்குமான பத்திரம் ரெடியாகும் வரை…….. அதுவும் சில நாட்களில் ரெடியானது. மிகுதியாக சிறிது பணம் அனுப்ப வேண்டியிருந்தது. அதை சுவிஸ் போய் அனுப்புவதாக சொல்லி விட்டு வந்தேன்.

    தொடரும்…………

    Reply
  • palli
    palli

    அட கொக்காமக்கா இத்தனைக்கும் இடையில் தான் குறிகவி பாடினாரோ??

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    /இலங்கையர் எவரும் இங்கே இல்லை. எனவே பண்ணையார் கதை இங்கே தேவையற்றது.விமான நிலையத்தில் வந்திறங்கிய லீனாவை கருத்தரங்கு நடந்த இடத்துக்கு , அழைத்துச் சென்றோம். அங்கே புரோஜக்டரில் ஒலி போதவில்லை என , அதை இயக்கிய இளைஞர்களுக்கு லீனா சத்தம் போட்டார். அதனால் கோபமடைந்த நான், லீனாவை அனைவர் முன்னிலையிலும் திட்டித் தீர்த்தேன். இது ஒன்றும் இந்தியா இல்லை. இங்கே எல்லோருக்கும் காது நல்லா கேக்கும் என்றேன். அவங்க உதவத்தான் வந்திருக்காங்களே தவிர, உங்க பேச்சு கேட்க வரல்ல என்றேன்./–அஜீவன்.

    சினிமா உலகம் என்பது தமிழ் நடுத்தர வர்கத்தினரின் ஆடுகளம். பெரும்பாலான இலங்கைத் தமிழர்கள் அகதிகளாகவே வெளிநாடுகளுக்கு வந்தார்கள். அதில் சிலர் தங்களின் “குட்டி பூர்ஷ்வாதனத்தை” வெளிப்படுத்தி நின்றாலும், ஒட்டு மொத்தமாக நடுத்தர வர்கத்தினரிடையேயான உறவுகள் எப்படியிருக்கும் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு. தமிழகத்தைப் பொறுத்தவரையில், சினிமா உலகமும் அரசியல் உலகமும்,இரண்டரக் கலந்திருப்பதால், இணையத்தளங்களின் ஆதாரத்தின்படி, இலங்கைத்தமிழரின்? பணம் கிட்டதெட்ட 350 கோடி, ரூபாய்கள் கோடம்பாக்கத்தில் புழங்குவதால் “இங்கே இலண்டனில் கணவனால் பாதிக்கப்பட்ட அபலைப் பெண்” கூறியிருப்பது போல, “அவர் அரசியலில் வசூல் செய்த பணம் மில்லியன் கணக்கில் இருக்கிறது, அதை அவர் நாய்க்கு எலும்புத் துண்டு போடுவதுபோல போடுவார் அவரை எதிர்க்க ஆளே இல்லை என்பார்”, இத்தகைய போக்கு அரசியலிலும் நுழைகிறது!. வேறு எங்கும் செல்லமுடியாது, தற்போது இந்தியாவுக்கு படையெடுக்கும் இலங்கைத்தமிழ் அரசியல் அலை, “பண்ணையார் கதைப்போல்” மாறிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் சினிமா உலகத்தில் முன்பு ஆக்கிரமித்திருந்த திராவிட கருத்தியல்கள் மாறி, தற்போது இடதுசாரி(பண்ணையார் எதிர்ப்பு!!?) கருத்தியல் போல், “மக்கள் கலை இலக்கிய கழகம்”, “சிறுத்தை தலித்தியம்” “சைவ தமிழ் தேசியம் (எனக்கு தெரிந்து, இந்தியாவில் சைவம், வைணவ வித்தியாசம் இல்லை)” போன்ற இடதுசாரி? தமிழ்தேசியம் எலும்புத்துண்டுகளாக வீசப்படுவதாக தெரிகிறது. சைவர்கள்தான் தலித்திய நந்தனை, நாகரீகமாக்கி கோவிலில் நுழைய வைத்து கவுரவித்தார்கள் என்கிறார்கள்!. இந்த நடுத்தர வர்கத்து முரண்பாடுகளுக்குப் பின்னால், பிந்தரன்வாலேயைக் கொன்று, பஞ்சாப் அகாலிதளத்தை உடைத்து, “ஆப்பரேஷன் புளுஸ்டாரை நடத்தி”, இலங்கை இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சியளித்து, முள்ளியவாய்க்காலை நடத்தி? ,தற்போது நடுத்தர வர்க குணாம்சியங்களால், தங்கள் கைகளினாலேயே தங்கள் முகத்தில் சேறு பூசிக்கொள்ள வைக்கப்படுகிறது, என்பதாகப் படுகிறது!.

    Reply
  • jo
    jo

    லீனா புலம் பெயர் மக்களின் பணத்தில் உல்லாசம் புரிய நினைத்தார் சோபா போன்றவர்கள் இருக்கும் வரை அதை நிறைவேற்றியருப்பார். தேசம் அதை கெடுத்துவிட்டது.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    /லீனா புலம் பெயர் மக்களின் பணத்தில் உல்லாசம் புரிய நினைத்தார் சோபா போன்றவர்கள் இருக்கும் வரை அதை நிறைவேற்றியருப்பார். தேசம் அதை கெடுத்துவிட்டது./–ஜோ
    புலம் பெயர்ந்த உடனேயே அது உங்களுடைய பணம் இல்லை!. ஏதாவது அரசியல் காரணம் இருந்தால் மட்டுமே, அதை பொது இணையதளங்களில் விமர்ச்சிக்க வேண்டும். “உலகத் தமிழினம்” என்று இலங்கைத்தமிழர்கள் உபயோகிக்கும் “பதத்திற்கும் கூட” ஒவ்வொரு தமிழ்நாட்டு தமிழனுக்கும், “ராயல்டி” கொடுக்கவேண்டும். அரசியல் பிரச்சனை காரணமாக இலங்கையில் கொல்லப்பட்ட மக்களின் பேரழிவை தடுக்க உங்களைப்போன்றவர்கள், உணர்வு பூர்வமாக என்ன செய்தீர்கள்!. அழிவு நடந்தபிறகு அதை வைத்து உண்டியல் குலுக்குகிறீர்கள்!.

    Reply
  • palli
    palli

    //இலங்கையர் எவரும் இங்கே இல்லை. எனவே பண்ணையார் கதை இங்கே தேவையற்றது.//
    நீங்களாய் தூக்கி வந்துவிட்டு அது தேவையில்லை என்பது நியாயமா?? இனிமேல் பார்த்து தூக்கிவாங்கோ;

    //புலம் பெயர்ந்த உடனேயே அது உங்களுடைய பணம் இல்லை!. //அப்போ குடியுரிமை பெற்றபின்பா எமது பணமாகிறது, தங்காபச்சனில் இருந்து பெரியார்தாசன் வரை ஜரோப்பாவில் கும்மாளம் போட்டது இந்த பணத்தில்தான்; பெரியார் தாசன் வேட்டியில்லாமல் நின்ற சம்பவங்களும் உண்டு,

    // அரசியல் பிரச்சனை காரணமாக இலங்கையில் கொல்லப்பட்ட மக்களின் பேரழிவை தடுக்க உங்களைப்போன்றவர்கள், உணர்வு பூர்வமாக என்ன செய்தீர்கள்!. //
    சத்தியமாய் அழிவுக்கு உதவியாகவோ அல்லது ஆதரவாகவோ இருக்கவில்லை; சரி நீங்கள் என்ன செய்தீர்கள்?? இது இங்கு தேவையில்லை என பதில் சொல்லுவீர்களா??
    //அழிவு நடந்தபிறகு அதை வைத்து உண்டியல் குலுக்குகிறீர்கள்!.// அது நான் இல்லை;

    Reply
  • தமிழ்வாதம்
    தமிழ்வாதம்

    /“உலகத் தமிழினம்” என்று இலங்கைத்தமிழர்கள் உபயோகிக்கும் “பதத்திற்கும் கூட” ஒவ்வொரு தமிழ்நாட்டு தமிழனுக்கும், “ராயல்டி” கொடுக்கவேண்டும்./ DEMOCRACY on March 18, 2010 9:34 am

    டெமொகிரசி!
    சாதி போட்டுக் கிளப்பினம்,
    மதம் பிடிச்சு அலைஞ்சம்,
    இலங்கை,இந்திய,மலேசிய,…..தமிழனையும் பிரிச்சு கிழிச்சா,
    நாமெல்லாம் ‘பிறவிப் பெரும்பயன்’ அடைஞ்சிரலாமா!

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    புலம் பெயர்ந்த உடனேயே அது உங்களுடைய பணம் இல்லை!. //அப்போ குடியுரிமை பெற்றபின்பா எமது பணமாகிறது, தங்காபச்சனில் இருந்து பெரியார்தாசன் வரை ஜரோப்பாவில் கும்மாளம் போட்டது இந்த பணத்தில்தான்; பெரியார் தாசன் வேட்டியில்லாமல் நின்ற சம்பவங்களும் உண்டு/,சரி நீங்கள் என்ன செய்தீர்கள்??- பல்லி.
    என்னை உங்கள் வீட்டுக்கு கூப்பிட்டு பாருங்கள்,நான் கூட இருந்து சென்னை கல்லூரியில்… பெரியார் தாஸனைவிட ஆட்டம் போடுவேன்!.அரசியல் பதவி வகித்திருக்கிறேன்,அதற்கான தழும்புகளை ஏற்றிருக்கிறேன்….ஆனால்,இதெல்லாம் கேவலமாக பார்க்கப்படும் வெளிநாட்டு வட்டத்தில் கோமணத்தை அவிழ்த்துவிடுகிறேன் போதுமா?.இப்போது நானும் நீங்களும் ஒன்று “கிரீச்”!.நிர்வாண உலகம் நமக்கே சொந்தம் தையட…தையட..தையடா….சுபம்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…..(எனக்கு தெரிந்து, இந்தியாவில் சைவம், வைணவ வித்தியாசம் இல்லை…//

    என்ன டெமோகிரசி ஜோக் அடிக்கிறியளா? சைவம் , வைணவ வித்தியாசம் மட்டுமல்ல வைணவத்துக்குள்ளேயே வடகலை தென்கலை என புடுங்குப்பாடுகள் உண்டு. அதாவது நெற்றியில் போடும் நாமத்தில் அடியே ஒரு கோடு (கால்) வைப்பது தான் வேறுபாடு.
    25 வருடங்களுக்கு முன்னர் ஸ்ரீரங்கம் கோவில் யானைக்கு வடகலை நாமமா தென்கலை நாமமா போடவேண்டும் என வழக்கு கூட நடந்தது !

    //…இணையத்தளங்களின் ஆதாரத்தின்படி, இலங்கைத்தமிழரின்? பணம் கிட்டதெட்ட 350 கோடி, ரூபாய்கள் கோடம்பாக்கத்தில் புழங்குவதால் “இங்கே இலண்டனில் கணவனால் பாதிக்கப்பட்ட அபலைப் பெண்” கூறியிருப்பது போல,…./இது அடுத்த ஜோக்!
    இனையத்தளங்களில் யார் என்ன வேண்டுமானாலும் எழுதிவைக்கலாம். ஏன் 350 கோடி என சொல்கிறீர்கள் சும்மா ஒரு 1000 கோடி எனச் சொல்ல வேண்டியதுதானே? இந்த ஜோக்கை அடிச்சது தமிழ்நாட்டு காங்கிரஸ் கோஷ்டிச்சணடை புகழ் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் என நினைக்கிறேன்!

    Reply
  • மாயா
    மாயா

    டேமோகிரசி, பயங்கரமாத்தான் ஜோக் அடிக்கிறியள். நீங்கள் லீனா மேட்டரை கொண்டு வந்து போட்ட பிறகு குழம்பி ஏதேதோ எழுதிறுயள். தொடர் முடியும் வரை பாத்திருக்கிறன்?

    Reply
  • palli
    palli

    Democracy//என்னை உங்கள் வீட்டுக்கு கூப்பிட்டு பாருங்கள்,நான் கூட இருந்து சென்னை கல்லூரியில்… பெரியார் தாஸனைவிட ஆட்டம் போடுவேன்!.// பல்லி அப்படி முட்டாள்தனம் எல்லாம் செய்யமாட்டேன்; அதுவும் நீங்கள் லீனாவின் நண்பர் போல் உள்ளது; அப்புறம் சொல்லவும் வேண்டுமா??

    //இப்போது நானும் நீங்களும் ஒன்று “கிரீச்”!.நிர்வாண உலகம் நமக்கே சொந்தம் தையட…தையட..தையடா….சுபம்//
    மீண்டும் ஒரு திருத்தம் நீங்களும் லீனாவும் ஒன்று,

    //,சரி நீங்கள் என்ன செய்தீர்கள்??- பல்லி.// இதை அம்பலபடுத்தும் நாளை எதிர்பார்த்து கனவு கண்டு கொண்டு இருந்தேன்;

    Reply
  • அஜீவன்
    அஜீவன்

    மிகுதியாக சிறிது பணம் அனுப்ப வேண்டியிருந்தது. அதை சுவிஸ் போய் அனுப்புவதாக சொல்லி விட்டு வந்தேன்…….

    நான் சுவிஸ் வரும் போதே , எனது நண்பர்கள் சிலரிடமும் AVM ஸ்டூடியோவில் இருந்த காரைக்குடியைச் சேர்ந்த உறவுக்காரர் ஒருவரிடமும் , என்ன நடக்கிறது என்று சற்று பாருங்கள் என்று சொல்லி விட்டு வந்தேன்.

    நான் வந்து 3-4 நாட்களில் மிகுதயாக கொடுப்பதாக இருந்த பணத்தை வங்கி மூலம் அனுப்பினேன். அதை பெற்றுக் கொண்ட பின் , தகவல் தரும்படி லீனாவிடம் சொன்னேன். பணத்தை பெற்றுக் கொண்ட லீனாவிடம் பணம் கிடைத்ததா? எனக் கேட்டேன். “பணம் வந்திருக்கு , எவ்வளவு அனுப்பினீர்கள்?” என கேள்வியோடு SMS வந்தது. நான் மீண்டும் எவ்வளவு கிடைத்தது என சொல்லுங்கள் என மீண்டும் SMS எழுதினேன். “F…. U ,do you know how much you send?” (பக் யூ , நீ அனுப்பியது எவ்வளவு என உனக்கு தெரியும்தானே?) என பதில் வந்தது. இந்த எழுத்து நடைமுறை லீனாவுக்கு பழக்கப்பட்டதாக இருக்கலாம். எனக்கு இது உடன்பாடற்றது. கோபத்தில் தொலைபேசியில் , கத்தோ கத்தென கத்தினேன். இதை லீனாவோ , ஜெரால்டோ எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

    இனி இந்த வியாபாரம் எல்லாம் தேவையில்லை என பேசியதும் , சிவக்குமார் என்னோடு தொடர்பு கொண்டார். அவர்களுக்காக பணம் கொடுத்து , F U என்றெல்லாம் பேச்சு வாங்க வேண்டிய அவசியமில்லை. என்னைப் பற்றி லீனா அறியவில்லை. அவர்கள் செயல் என்னை ஏமாற்ற முயல்வதாக இருக்கிறது என்றறதும் , சிவகுமார் எனது கோபம் நியாயமானது என்றார். ஆனால் பின்னர் F U என்பதற்கு if you என அர்த்தம் என லீனா சொல்வதாக சொன்னார். “F U know how much you send?” என வந்திருந்தால் லீனா சொல்வது சரி, அவர் எனக்கு எழுதியது “F U ,do you know how much you send?” என்பதாக என லீனாவின் SMSயை அவருக்கு போர்வர்ட் செய்தேன். சிவகுமார் , அவர்களுக்காக இப்போது வாதாடினார். பின்னர் லீனா , தவறுதலான புரிதல் என பேசினார். இப்படியான செயல்பாடுகள் இனி வேண்டாம் என்று சொல்லி விட்டு விட்டேன்.

    இக்காலத்தில் சுனாமி வந்து , உதவிப் பணிகளுக்காக இலங்கை சென்றேன். அங்கு நடப்பவற்றை ஒளிப்பதிவு செய்து இங்குள்ள தொலைக் காட்சிகளுக்கு அனுனுப்பிக் கொண்டே , உதவி நிறுவன பணிகளில் ஈடுபட்டேன். அப்போது , சுனாமி குறித்து ஒரு ஆவணப்படம் செய்யலாம் எனவும் ,அது திரைப்படம் ஒன்று போல் செய்யலாம் என முடிவு செய்து , ஒரு தமிழ்பெண் மற்றும் ஐரோப்பியர்கள் நடிப்பது போல் , உருவாக்க திட்டமிட்டுக் கொண்டிருந்தேன். இதை லீனாவிடம் சொன்ன போது தானே நடிக்க விரும்புவதாகவும் , இலங்கை வர ஆசையாக இருப்பதாகவும் சொன்னார். நானும் பரவாயில்லை என பில்ம் யுனிட்டோடு பேசி , வரச் சொன்னேன். இலங்கை வந்தவர் , ஏதோ ஐஸ்வரியா ராய் லெவலில் வந்திறங்கினார். நானும் , வாகனத்தை ஓட்டிய சிங்கள நண்பனும் வெகு நேரம் எயார்போட்டில் காத்திருந்தோம். இவர் உள்ளே எல்லா கடைகளிலும் சுற்றி விட்டு, மெதுவாக வெளீயே வந்து கஸ்ட்டம் தன்னை , கடும் உபாதைக்கு உட்படுத்தியதாக கதை விட்டார். ஆனால் போகும் போது , உள்ளே கடைகளில் சில பொருட்களை பார்த்ததாகவும் , அவற்றை போகும் போது வாங்கிச் செல்ல வேண்டும் என்ற போது , லீனா , உள்ளே கடைகளில் சுற்றி விட்டு வந்திருக்கிறார் என புரிந்து கொள்ள முடிந்தது. அவற்றை வெளியே குறைந்த விலையில் வாங்க முடியும் என்ற போது , “அநியாயமாக ரொம்ப நேரம் , ஏயார் போட்டுக்குள் சுற்றி விட்டேன்” என்றார். நான் மனதுக்குள் சிரித்துக் கொண்டேன். ஐரோப்பாவில் அநாதையாக பரிதவித்த லீனாவையோ, இந்தியாவில் என்னை வரவேற்ற லீனாவையோ இங்கே காண முடியவில்லை. ஏதோ ஏழ்மை நிலையை காணாதவராக பண்ணையார் மகள் போல நடந்து கொண்டார்.

    அடுத்த நாள் சுனாமி பகுதிகளில் படப்பிடிப்பு தொடங்கிய போது , லீனா கீழறங்கி வந்தார். நான் அவரது தினாவட்டை இல்லாமல் செய்வதற்கு , ஐரோப்பியர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தேன். ஐரோப்பியர்களும் , எமது பில்ம் யுனிட்டும் , எனது திரைப்பட ஆசானும் என்னோடு பழகுவதைப் பார்த்து வியப்பதாகவும், இப்படி இந்தியாவில் பார்க்க முடியாது என்றார். சர்வதேச விருதுகள் பல பெற்ற, எனது திரைப்பட ஆசான் அன்றூ ஜயமான்ன அவர்கள் என்னைப் பற்றி சொன்ன போது லீனாவுக்கே ஆச்சரியமாக இருந்ததாகவும் , அஜீவனைப் பார்த்தால் அப்படி இல்லை என்றும் சொன்னார். அவர் வீட்டுக்கு அழைத்துப் போன போது அஜீவன் நினைப்பதற்கு மேலே பேசதவராக உங்கள் குரு மதிப்பளிக்கிறார் என்றார். இல்லை, அவர் நிழலாகத்தான் நாங்கள் இருக்கிறோம். எனது எண்ணங்கள் அவர் தந்த கல்வி , எனவே பெரிதாக முரண்பாடு வராது என்றேன்.

    படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது , யாழ்பாணம் போக வேண்டும் ,அங்கு தான் கொண்டு வந்துள்ள புத்தகங்களையும் , சீடிகளையும் கொண்டு சென்று கவிஞர் சேரன் , சேரனது உறவினர்கள் வழி, ஏதோ செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் , அதற்கான பயண ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என்றார். எனக்கு எரிச்சலாக வந்தது. நீங்கள் வந்தது நடிக்கவே அன்றி , உங்கள் வியாபாரத்துக்கு அல்ல, அங்கு போவதும் போகாததும் உங்கள் பிரச்சனை. என்னால் உங்கள் உயிருக்கு கூட உத்தரவாதம் அளிக்க முடியாது என் சொல்லி விட்டு , ஜெராடுக்கு போண் பண்ணி, இவரது விசப்பரீட்சை பயணத்தின் கடினத்தை சொன்னேன். இல்லை, சேரனின் சகோதரி அங்கு இருக்கிறார் என்றார். சூட்டிங் முடிந்த பின் , நீங்கள் எங்கு வேண்டுமானாலும் போகலாம் என்றேன். எனக்கும் , உங்கள் பயணத்துக்கும் பொறுப்பு ஏற்க முடியாது என்றேன்.

    லீனா , அதன் பின்னர் எனது தொலைபேசியை காரில் இருந்து எடுத்து, எனக்குத் தெரியாமல் சிவகுமாரோடு மணிக் கணக்கில் பேசி விட்டு, ஸிம்மை கழட்டி எண் தெரியாமல் அழித்திருந்தார். தான் ஏதோ SMS பண்ண போண் வேலை செய்யவில்லை என்றார். நான் சுவிஸ் வந்த போது அவர் பேசிய பில் கணக்கு 800 சுவிஸ் பிராங்கை தாண்டி இருந்தது. ரோமிங் கைத்தொலைபேசியில் இலங்கையிலிருந்து சிவகுமாரது எண்ணுக்கு லீனா பேசிய கட்டணம் குறித்த பில் வந்த போது லீனாவின் கபடம் புரிந்தது. எல்லாம் டூ லேட்……

    இன்னும் வரும்…..

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    எபபோதும் பிரைச்சினைகளில் சிக்குபவர் இந்த லீனா. அந்த வகையீல் தற்போதைய இவர் பற்றிய பிரைச்சினையொன்று விகடனில் வந்துள்ளது . அதனை இங்கே இணைக்கின்றேன்.

    போலீஸுக்குப் போன புகார்

    ஆபாசத்தின் எல்லை எது?

    ”எழுத்தாளர் லீனா மணிமேகலை ஆபாசக் கருத்துகளை புத்தகங்களிலும் இணையதளத்திலும் எழுதி வருகிறார். அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுங்கள்!” என சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந் திரனிடம் கடந்த வாரம் ‘இந்து மக்கள் கட்சி’ அமைப்புச் செயலாளர் கண்ணன் புகார் கொடுக்க… அதை சட்டப் பிரிவின் பார்வைக்கு அனுப்பி இருக்கிறார் ராஜேந்திரன். இலக்கிய வட்டாரத்தில் இந்த விவகாரம் விவாதக் கனலை சூடாக்கி இருக்கிறது.

    புகார் கொடுத்த கண்ணன் என்ன சொல்கிறார்?

    ”ஆபாசப் புத்தகங்கள் விற்பது சட்டப்படி தவறு. இலக்கியவாதி என்கிற போர்வையில் உடலுறவு நிகழ்வுகளையும், அந்தரங்க உறுப்புகளையும் பற்றி லீனா மணிமேகலை எழுதுவதும் ஆபாசம்தான். ‘உலகின் அழகிய முதல் பெண்’ என்கிற புத்தகத்திலும், இணையதளத்திலும் அவர் எழுதியிருக்கும் ஆபாசக் குப்பைகள் கொஞ்சநஞ்சமல்ல. புணர்ச்சி, விந்து, முலை, யோனி என அவர் எழுதி இருப்பதை எப்படி எழுத்துச் சுதந்திரமாக ஏற்றுக்கொள்ள முடியும்? புத்தகங்களை விற்பதற்காகவும், பப்ளிசிட்டிக்காகவும் கலாசாரத்தை சீரழிக்கும் லீனா மீது சட்டப் பிரிவுகள் 292, 293-ன் படியும், தகவல் தொழில்நுட்பச் சட்டம் 67-ன் படியும் போலீஸ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருடைய சொத்துகளையும் பறிமுதல் செய்ய வேண்டும்!” என்றார் கண்ணன்.

    லீனா மணிமேகலையின் பதில்?

    ”இலக்கியத்துக்கும் இந்து மக்கள் கட்சிக்கும் என்ன சம்பந்தம்? என் எழுத்துகளைப்பற்றிப் பேச இவர்கள் யார்? இது பெரியார் பிறந்த மண் என்பதே இவர்களுக்கு மறந்துபோய்விட்டது. ‘இதைத்தான் எழுத வேண்டும்’ என்று என்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது. பெண் களுக்கு நிகழும் பாலியல் அத்துமீறல்களைப் பற்றி குரல் கொடுக்க எவருக்கும் உரிமை உண்டு. எந்தக் கலாசாரக் காவலர்களாலும் இதையெல்லாம் தடுக்க முடியாது. இது தனியரு படைப்பாளியாக எனக்கு மட்டும் வந்திருக்கும் பிரச்னை கிடையாது. ஒட்டுமொத்தப் படைப்பாளர்களையும் சீண்டிப்பார்க்கும் வேலை இது. ஒரு சட்டத்துக்குள் இருந்துகொண்டு வாழச் சொல்லும் இவர்களின் அடக்குமுறை என்னிடம் எடுபடாது. பெண்ணிய வேதனைகளைப் பிரதிபலிக்கும் என் எழுத்துகள் தொடர்ந்து இதே வீச்சோடுதான் இருக்கும். இந்து மக்கள் கட்சி இனியும் இத்தகைய பிரச்னைகளை வளர்த்தால், தமிழகமே கொந்தளிக்கும்!” என்கிறார்.

    சரி… இந்த விவகாரத்தில் படைப்பாளர்களின் பார்வை என்ன?

    நீல பத்மனாபன், சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த படைப்பாளர்:

    ”உடல் உறுப்புகளின் பெயர்களைக் குறிப்பிட்டு எழுதுவதை தவறு சொல்ல முடியாது. ஆனால், அந்தச் சொற்களின் பயன்பாடு வேண்டுமென்றே திணிக்கப்பட்டால், அது பெண்மையை இழிவுபடுத்தும் விஷயமாகவே இருக்கும். எழுத்தாளனுக்கு சமூகப் பொறுப்பு உண்டு. இந்து புராணங்களிலேயே நாகரிகமாகவும் மறைமுகமாகவும் பாலியல் விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. அதேவேளை, இந்த விஷயத்தை சட்டரீதியாக அணுகுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. போலீஸ் அதிகாரிகளுக்கு இலக்கிய ஆராய்ச்சி நடத்துவதற்கான அனுபவமோ, நேரமோ இருக்குமா என்பதும் சந்தேகமே. அதனால், சர்ச்சைக்குரிய படைப்பு குறித்து வெளிப் படையான விவாதங்கள் நடத்தித் தெளிவு பெற வேண்டும் என்பதே என் கோரிக்கை!”

    சாரு நிவேதிதா, எழுத்தாளர்:

    ”எழுத்துக்கும் பேச்சுக்கும் தடை போட இது ஒன்றும் ஆப்கான் மண் அல்ல. விபூதி பூசவும் தொழுகை நடத்தவும் எப்படி உரிமை இருக்கிறதோ அதுபோலத்தான் எழுதவும் உரிமை இருக்கிறது. பாலியல், அந்தரங்கம் குறித்த படைப்புகளை ஓர் ஆண் எழுதி இருந்தால் இந்த அளவு பிரச்னையாக வெடித்திருக்காது. யோனி, முலை எனக் குறிப்பிட்டு எழுதுவதால் பாலுணர்வு தூண்டப்படுகிறது என்பதெல்லாம் சுத்த கப்ஸா. இதை தடுக்க இந்து மக்கள் கட்சி என்ன இலக்கிய போலீஸா? சமீபத்தில் பார்த்த ஒரு தமிழ்ப் படத்தில் க்ரூப் செக்ஸை மிஞ்சக்கூடிய அளவுக்கு ஆபாசமான காட்சிகள் இடம் பெற்று இருந்தன. ஆபாசத்துக்கு எதிரானவர்கள் சினிமாவையும் சின்னத் திரையையும் விட்டுவிட்டு எழுத்தாளர்கள் மீது பாய்வது எந்த விதத்தில் நியாயம்? லீனாவின் தோழராக என்னை எண்ண வேண்டாம். எழுத்துச் சுதந்திரத்தின் மீது கொடூரக் கரங்கள் பாயக் கூடாது என்பதே என் வேண்டுகோள்!”

    வசந்தி ஸ்டான்லி, தி.மு.க. ராஜ்யசபா எம்.பி:

    ”ஆண்டாளின் நாச்சியார் திருமொழியிலேயே, ‘என் தட முலைகள் மானிடவர்க்கென்று பேச்சுப்படில்…’ என்கிற வரிகள் எல்லாம் உண்டு. சங்க கால இலக் கியங்களில் தலைவனின் பிரிவு தொடங்கி, ஊடல், கூடல் விஷயங்களை சாலச்சிறந்த வரிகளால் சொல்லி இருப்பார்கள். நம் மனக் கருத்தை அதே அதிர்வுகளுடன் படைப்பாக்குவதுதான் எழுத்துச் சுதந்திரம். ஆனால், சலசலப்பு உண்டாக்க வேண்டும் என்பதற்காகவே பெண் உறுப்புகளின் பெயர்களை யாரேனும் எழுதினாலோ, அந்தரங்க செய்கைகள் – உணர்வுகள் குறித்து அதிகபட்சமான வார்த்தைகளில் குறிப்பிட்டாலோ… அது தவறுதான். எழுத்தில் முற்போக்குத்தனம் கொடிகட்டிப் பறக்கும் இந்தக் காலத்தில் ‘அதை இதை எழுதக் கூடாது’ என்பதெல் லாம் அடக்குமுறையின் இன்னோர் அங்கம்தான்!”

    மதுமிதா, திரைப்பட இயக்குநர்:

    ”எழுதுவதற்கு சுதந்திரம் இருக்கிறது. அதற்காக எதையும் எழுதிக் குவிக்கலாம் என்பது சரியாகிவிடுமா? அமெரிக்காவில் திரைப்படங்கள் போலவே புத்தகங்களையும் வயதுவாரியாக வகுத்துக்கொண்டு படிக்கும் வழக்கம் இருக்கிறது. ஆனால், இந்தியாவில் அப்படியான வரையறைகள் கிடையாது. அதனால் அந்தரங்கம் குறித்த எழுத்துகள் குழந்தைகளின் பார்வைக்கும் சென்றுவிட வாய்ப்பு இருக்கிறது. சமூகத்தின் மீது நமக்கு இருக்கும் பொறுப்போடு நாகரிகத்துடன் நம் படைப்புகளைக் கொண்டுபோய் சேர்ப்பதுதான் நியாயம் என்பது என் கருத்து!”

    அப்துல்லா, வலைப்பதிவாளர்:

    ”பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு பெண் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தால், அதைப் படிக்கும் ஆய்வாளர் தவறு செய்தவன் மேல் நடவடிக்கை எடுப்பாரா… இல்லை ‘புகாரில் விவரிக்கப்பட்டுள்ள சம்பவங்கள் இவ்வளவு ஆபாசமாக இருக்கிறதே’ எனச் சொல்லி அந்தப் பெண் மீதே நடவடிக்கை எடுப்பாரா? லீனாவின் எழுத்துகளை காலம் காலமாக அடக்கப்பட்ட பெண் வர்க்கத்தின் கூக்குரல் – உரிமைக் குரல் – போர்க் குரலாகத்தான் கருதத் தோன்றுகிறது. அதேநேரத்தில், யோனி, முலை போன்ற வார்த்தைகளை அடிக்கடி தன் கவிதைகளில் அவர் இடம்பெறச் செய்வது கவனத்தை ஈர்க்கும் உத்தியாகவே எண்ணத் தோன்றுகிறது!”

    தமிழச்சி, வலைப்பதிவாளர், ஃபிரான்ஸ்:

    ”இளைய சமூகத்தினரை தவறான திசைக்குக் கொண்டுசெல்லக் கூடாது என்கிற கவனத்தினாலேயே லீனாவின் எழுத்துகளை நான் விமர்சிக்கிறேன். இணையத்தில் பாலியல் கருத்துகள் குறித்து வெளியிட்ட அறிக்கைகளை வெகுஜன ஊடகத்தில் வெளியிட லீனாவுக்கு தைரியம் இருக்கிறதா? வக்கிரமான ஒரு ஆண்மகனைப் பற்றி விவரிக்கும் அதிர்ச்சிகரமான வார்த்தைகள் கொண்ட கவிதையில், கார்ல் மார்க்ஸ், லெனின் ஆகிய தலைவர்களின் பெயர்களை அந்த ஆண்மகன் உச்சரிப் பதுபோல் கூறியிருப்பதேகூட அதிர்ச்சியைத்தான் ஏற்படுத்துகிறது! இதேபோன்ற ஒரு கவிதையில் இதே லீனா, தமிழகத்தின் மதிப்பிற்குரிய தலைவர் எவருடைய பெயரையேனும் போகிற போக்கில் பயன்படுத்த முடியுமா? எதிர்வாதங்கள் கிளம்பும்போதெல்லாம், ‘ஆணாதிக்கம்… பெண்ணியப் படைப்பாளிகளை முடக்கும் முயற்சி’ என்று லீனா அறிக்கைவிடுகிறார். வெறும் பாலியல் சுதந்திரம்தான் பெண் விடுதலைக்கு முதன்மையானது எனும் கருத்தை முன்வைத்தால், அது எவ்வளவு அபத்தமானதாக இருக்கும்? ‘இருபாலுமை என்பது என் தேர்வு உரிமை’ என்பதும், ‘100 ஆசை நாயகர்களை வைத்துக்கொள்வேன்’ என்பதும்தான் பெண்ணிய உரிமையா? சமூகத்தில் விபசாரம் செய் வோர் உருவாக்கப்பட இலக்கியங்கள் காரணமாகும் நிலை வந்தால், அந்த சமூகம் உருப்படுமா என்பதை சம்பந்தப்பட்டவர்கள் யோசிக்க வேண்டும்.”

    சி.திலகவதி, வழக்கறிஞர்:

    ”சமீப காலமாக பிரபலமான பெண் கவிஞர்கள்கூட பாலுறுப்புப் பெயர்களை பகிரங்கமாகப் பயன்படுத்துகிறார்கள். சினிமாவுக்கு எப்படி தணிக்கை இருக்கிறதோ… அதேபோல் எழுத்துக்கும் தணிக்கை ஏற்படுத்த வேண்டும் என்கிற போராட்டங்கள் எதிர்காலத்தில் தீவிரமாகும். அத்தகைய போராட்டங்களுக்கான காரண கர்த்தாக்களில் லீனாவும் இருப்பார்!”

    ‘மண்மொழி’ இ.ராசேந்திர சோழன், மூத்த படைப் பாளர்:

    ”உயிர் உறுப்புகளின் பெயர்களைப் பயன்படுத் துவது மரபு மீறல் ஆகாது. கண், காது, மூக்குபோல அவையும் உடல் உறுப்புகள்தானே. சமூக அவலங்களைச் சுட்டிக்காட்டவும், தனிப்பட்ட வேதனைகளை இறக்கிவைக்கவும் யாரும் எத்தகைய வார்த்தைகளையும், பாணிகளையும் பின்பற்றலாம். ஆனால், தனிப்பட்ட பப்ளிசிட்டிக்காக ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்துவது சம்பந்தப்பட்ட படைப்பாளருக்கே இழுக்கை ஏற்படுத்தும். அதேவேளை, இத்தகைய விஷயங்களை மிகப் பெரிய அபாயங்களாகச் சித்திரித்து பொது நல வழக்குப் போடுவதும், புகார் கொடுப்பதும் பப்ளிசிட்டிக்கான வேலைகள்தான்!”

    எம்.கோபால், உதவி இயக்குநர்:

    ”பாலியல் கொடுமைகளை பொட்டில் அடித்தாற்போல் புரிய வைப்பதற்காக எழுதப்படும் எழுத்துகளை யாரும் அடக்கக் கூடாது. ஆனால், பலருடைய கவனத்தையும் திருப்ப வேண்டும் என்கிற சுய ஆதாயத்துக்காக, ஒரு ‘ஷாக் வேல்யூ’ கருதியே ஆபாச வார்த்தைகளையும் நிகழ்வுகளையும் பதிப்புக்குக் கொண்டு வருவது வன்மை யாகக் கண்டிக்கத்தக்கது. பாதிக்கப்பட்ட பெண் இனத்தின் வேதனையை மட்டுமல்ல… ஒடுக்கப்படும் வேறு யாருடைய உணர்வுகளையும் இன்னும் மிக அழுத்தமாக பிரதிபலிக்கவும், புரிய வைக்கவும் தமிழில் வலுவான வார்த்தைகளும், பாணிகளும் இருக்கின்றன. அதைவிடுத்து, அந்தரங்கத்தை வைத்தே அந்த அவலத்தைச் சொன்னால்தான் நிஜமான பாதிப்பைப் புரியவைக்க முடியும் என்பது பொய்! அத்தகைய படைப்புகளைக் கண்டுகொள்ளாமல் தவிர்ப்பதுதான் நல்லது. அதுபற்றி விவாதம் நடத்தினால் அதையும் மிகப்பெரிய விளம்பரமாகவே சம்பந்தப்பட்டவர்கள் எடுத்துக் கொள்வார்கள்!”

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    பொருளாதார காரணங்களுக்காக நாம் பாய்ந்து விழுந்து வணங்கும் “மேற்குலகத்தின் கோணத்தில்” பார்த்தால், அங்கு கோலோச்சும் மதக்கருத்து சொல்கிறது, “பெண் என்பவள் ஆணின் விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டவள் என்று!”. அவளே பிறப்பின் வலியையும் சுமக்க வேண்டும் என்று!. மாதத்திற்கு மூன்று முறை, முடங்க வேண்டுமென்று!. ஆகையால் பெண்ணுக்கு “பாசிச கடவுளின் படைப்பு முறை மீது” ஒவ்வாமை வருவது, இயற்கையே…

    Reply
  • palli
    palli

    //இருபாலுமை என்பது என் தேர்வு உரிமை’ என்பதும், ‘100 ஆசை நாயகர்களை வைத்துக்கொள்வேன்’ என்பதும்தான் பெண்ணிய உரிமையா? சமூகத்தில் விபசாரம் செய் வோர் உருவாக்கப்பட இலக்கியங்கள் காரணமாகும் நிலை வந்தால், அந்த சமூகம் உருப்படுமா என்பதை சம்பந்தப்பட்டவர்கள் யோசிக்க வேண்டும்.”//
    இதை ஒரு பெண்ணாய் தமிழிச்சி சொல்லும்போது அதில் கவனம் செலுத்த வேண்டியது தவிர்க்க முடியாது;

    அஜீவன் உங்கள் கதையை (லீனா சம்பந்தபட்டது) படமாய் எடுங்கள் வெற்றி விழா நிட்ச்சயம் உண்டு; ஆனால் வில்லனாய் சோபாவையும் பின்னோட்ட நபராய் பல்லியையும் போட மறக்க கூடாது,

    Reply
  • jo
    jo

    லீனாவுக்கும் பெண்ணியத்துக்கும் என்ன சம்பந்தம்? பெண் அடக்குமுறையின் முதல் அம்சாக பொதுவாக குறிப்பிடப்படுவது திருமணம்.

    லீனாவின் கவிதைகளை மற்றைய பெண்ணிய கவிதைகளுடன் ஒப்பிட்டால் இவரது பாலியல் வக்கிரம் புரியும். இது ஒரு வகை மனோவியாதி.

    Reply
  • அஜீவன்
    அஜீவன்

    palli on March 20, 2010 10:18 pm //
    அஜீவன் உங்கள் கதையை (லீனா சம்பந்தபட்டது) படமாய் எடுங்கள் வெற்றி விழா நிட்ச்சயம் உண்டு; ஆனால் வில்லனாய் சோபாவையும் பின்னோட்ட நபராய் பல்லியையும் போட மறக்க கூடாது,//

    பல்லி , அதையும் தனக்கு விளம்பரமாக்கி காசு பார்க்க லீனாவால் முடியும். பணத்துக்காக எதுவும் செய்யக் கூடியவர் லீனா. அதை அவரோடு நெருங்கிப் பழகினால் புரிந்து கொள்ள முடியும். இவர் செய்த நம்பிக்கைத் துரோகத்தால் , இவரை நடிக்க வைத்து தயாரித்த சுனாமி படத்தை , அப்படியே தூக்கி மூலையில் போட்டு விட்டேன். அதை வைத்தும் ஏகப்பட்டவர்களது பணத்தை கறந்து விடுவார். எனது பிரச்சனையை எழுதுவதற்கு லீனாவே காரணமாகியுள்ளார். அவர் வழக்கு தொடுப்பேன் என்ற தினா வட்டான பேச்சு , அவரது உண்மை முகத்தின் சில துளிகளை இங்கே கொண்டு வர முடிகிறது. இப்படியானவர்களை நம்பி யாரும் ஏமாறக் கூடாது.

    http://www.youtube.com/user/ajeevan#p/u/26/IwKhGiMlNvs

    palli on March 20, 2010 10:18 pm //இதை ஒரு பெண்ணாய் தமிழிச்சி சொல்லும்போது அதில் கவனம் செலுத்த வேண்டியது தவிர்க்க முடியாது;//

    பெண்களுக்கான வன்முறைகளை , குழந்தைகளையே கெடுக்கும் விதத்தில் கொண்டு வருவது லீனா போன்றவர்களதும் , அவருக்கு வக்காலத்து வாங்குவோரதும் எண்ணமாக இருந்தால் , அம்மணமாக திரியக் கூடிய மேற்கத்திய நாடுகளையாவது பின் பற்றுவது மேலானது. வயது வந்தவர்களுக்கான திரைப்படங்கள் , தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் ஆகியன கூட , குழந்தைகள் தூங்கிய பின் , இரவு 10 மணிக்கு பின்னரே காட்டப்படுகின்றன. 18 வயதுக்கு குறைந்தவர்களுக்கு கடைகளில் சிகரட் மற்றும் மதுபானம் விற்க தடை செய்யப்பட்டுள்ள சட்டம் நடைமுறையாகி பின் பற்றப்படுகின்றன. இவற்றை வாங்க தமது அடையாள அட்டையில் 18 வயது பூர்த்தியாகி விட்டதென்ற பின்னரே முடிகிறது. இவை இப்படியிருக்கு வயதுக்கு வந்ததாக கருதாத குழந்தைகளும் படிக்கும் விதத்தில் வெளியாகும் , இவரது கவிதைகள் சட்டத்தால் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

    //அப்துல்லா, வலைப்பதிவாளர்:

    ”பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு பெண் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தால், அதைப் படிக்கும் ஆய்வாளர் தவறு செய்தவன் மேல் நடவடிக்கை எடுப்பாரா… இல்லை ‘புகாரில் விவரிக்கப்பட்டுள்ள சம்பவங்கள் இவ்வளவு ஆபாசமாக இருக்கிறதே’ எனச் சொல்லி அந்தப் பெண் மீதே நடவடிக்கை எடுப்பாரா? லீனாவின் எழுத்துகளை காலம் காலமாக அடக்கப்பட்ட பெண் வர்க்கத்தின் கூக்குரல் – உரிமைக் குரல் – போர்க் குரலாகத்தான் கருதத் தோன்றுகிறது. //

    போலீஸில் கொடுக்கப்படும் புகார், எழுதப்படுவது என்பதும் , அது ஆபாசமாக ஊடகங்களில் வெளிவருவது என்பதும் இரண்டு வடிவங்கள். நிர்வாணமாக செத்துக் கிடக்கும் பிணத்தை போலீஸ் துணி கொண்டு மூடுகிறது. இது இறந்த மனிதனுக்கும் , அதை பார்ப்போருக்கும் இடையே வெறுப்பு ஏற்படக் கூடாது என்பதற்காகவும் , இறந்த பிணத்துக்கான மரியாதையாகவுமேயாகும். இது உயிரற்ற பிணம்தானே என போலீஸ் அசட்டையாக நிர்வாணமாக்கி விட்டு இருப்பதில்லை. இது போர்க் குரல் என்றால் , பெண்களை பர்தா (உடல் முழுவதும் மறைக்கும் கறுப்பு அங்கி)அணியச் சொல்வது குறித்து இவரது கருத்து எதுவாக இருக்கும்?

    Reply
  • senthuran
    senthuran

    சோபா சக்தி தனக்கு தமிழ் தவிர வேறு மொழிகள் தொpயாது என்று தீராநதிக்கு வழங்கிய நோ;காணலில் குறிப்பிட்டுள்ளார். எனவே ஹெலன் டெமூத் பற்றி அவா; கூறுவதை யாரும் பொருட்படுத்த வேண்டாம். அமா;க்ஸ் தின்று மென்னுவதை எழுதுவது மட்டுமே அவரது வேலை. பின்னனவீத்தவத்தை சாடி எழுத்ப்பட்ட ஒரு கட்டுரையை பின்நவீனத்துவத்தை போற்றும் கட்டுரையாக நினைத்து மொழிபெயாத்து வரலாறு படைத்த (அகாலச்சுவட்டில் கண்ணன் அதை கட்டுடைத்திருந்தார்.) அமார்க்ஸ் சின் சீடாpடம் இந்த கோணங்கித்தனங்கள் எதிர்பார்க்கக்கூடியதே .. பாவம் அவரை விடடுவிடுங்கள்

    Reply
  • itam
    itam

    பாவம் அவரை விடடுவிடுங்கள்

    Reply
  • அஜீவன்
    அஜீவன்

    படப்பிடிப்பு முடிந்ததும் இலங்கையில் லீனா கடைகளுக்கு போக வேண்டும் என்றார். இறுதி நாளில் எழுத்தாளர் ஜீவாவையும் சந்திக்க ஒழுங்கு செய்து விட்டு , ஒரு புத்தக கடைக்கும் அழைத்துச் சென்று , தனக்கு தேவையான பொருட்கள் வாங்க வசதியும் செய்து , இந்தியாவுக்கு அனுப்பி வைத்தேன்.

    நான் என் பணிகள் முடிந்து , சுவிஸ் வந்ததும் , எனது நண்பன் ஒருவன் தொலைபேசியில் அழைத்து , உங்க பணத்தில கனவு பட்டறை போட் தொங்குது என்றான். நான் லீனாவை தொடர்பு கொள்ள முயன்றேன். முடியவில்லை. ஜெரால்டை தொடர்பு கொள்ள முயன்றேன் . முடியவில்லை. சிவகுமாரை தொடர்பு கொண்டேன். சிவகுமார் பார்க்கிறேன் என்றாரே தவிர , சரியான தகவல்களை வழங்காமல் மழுப்பினார்.

    என் நண்பர்களை தொடர்பு கொண்டேன். அவர்கள் காரியாலயத்தை பார்த்து விட்டு , என்ன செய்யலாம் என்று அறிவிப்பதாகவும் , எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என்றார்கள். அடுத்த நாள் , உங்களை ஏமாத்த பார்க்கிறாங்க. யாருக்கும் சொல்லாம வந்து இறங்குங்க. அடுத்ததை அப்புறமா பாத்துக்கலாம் என்றார்கள்.

    சென்னை போய் இறங்கியதும் , சிலரோடு காரியாலயத்துக்கு நேராக சென்றேன். லீனாவும் , இன்னும் சிலரும் இருந்தார்கள். கனவுப்பட்டறை பெயர் பலகை தொங்கியது. என்ன நடக்குது? நான் போண் பண்ணினா ஏன் எடுக்கவில்லை என்று லீனாவிடம் கேட்டேன். லீனா , பிஸியா இருந்தால முடியல்ல என்றார். இது சரி வராது என சொல்லி விட்டு, காரியாலயத்தில் இருந்த பொருட்களோடு போட்டோக்கள் சிலவற்றை எடுத்தேன். லீனா வேலை செய்வோருக்கு சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். எல்லா விபரமும் பில்களும் எனக்கு வேணும் என்றேன். ஜெரால்டோடு பேசிக்கிங்க என்றார் லீனா. என் நண்பர்கள் ” பிரச்சனை பண்ணாதீங்க. எல்லாத்தையும் பார்த்துக்கலாம் ” என்றார்கள் காதுக்குள். ஜெரால்ட எங்கே என்று கேட்டேன். ஆந்திரா போயிருக்கிறார் என்றார் லீனா. வந்ததும் எனக்கு போண் பண்ணுங்க என்று சொல்லி விட்டு வெளியேறினேன்.

    அன்று மாலை ஜெரால்ட் சென்னையில் ஓரிடத்தில் சூட்டிங்கில் இருப்பது தெரிய வந்தது. அந்த இடத்துக்கு போன போது , ஜெரால்டால் சரியாக முகம் கொடுக்க முடியவில்லை. தனியாக பேச வேணும் என்றேன். சூட்டிங் முடிந்ததும் வருகிறேன் என்றார். அடுத்த நாள் வரை ஜெரால்ட் வரவில்லை. சிவகுமாருக்கு இனி என்ன நடக்கும் என்பதை , விடுதிக்கு அழைத்து விளக்கினேன். அதற்கு அடுத்த நாள் காலையில் ஜெரால்ட் , சிவகுமார், லீனா ஆகியோர் நான் இருந்த விடுதிக்கு வந்தார்கள். விவாதம் தொடங்கியது. கடுமையாகிய போது , “என் கூட , என்ன பேச்சு வேண்டிக் கிடக்கு , நீ ஜெரால்டோடு பேசிக்கோ” என்று கத்தினார் லீனா. இந்தியாவில் பெண்களோடு முரண்படுவது ஆபத்து. “சரி, இனி உனக்கும் , எனக்கும் பேச்சு கிடையாது. அதை ஜெராடோட பாத்துக்கிறேன். நீ வாயை மூடிக்க” என்று சொல்லி விட்டு அவர்களது மேசையை விட்டு எழுந்தேன்.

    அடுத்த மேசைகளில் இருந்த நண்பர்கள் என் பின்னால் வந்தார்கள். வெளியே இருந்த சிலர் உள்ளே வந்தார்கள். அப்போதுதான் ஜெராடுக்கு பிரச்சனை விளங்கியது. ” அஜீவன் அண்ண…. பொறுங்க” என்று சொல்லிக் கொண்டு என் பின்னால் வந்தார். “ஆபிசை நீங்களே , எடுத்துக்கிங்க. உங்க கூட இருக்கவங்க ரொம்ப மோசமானவங்க, தெரியுமா?” என்றார். என் நண்பர்கள் இப்போது கத்தி ” உனக்கு அஜீவனை இப்பதான் தெரியும். எங்களுக்கு 15 வருசத்துக்கு முன்னாடியே தெரியும். உன்னை என்ன செய்வோம் தெரியுமா?” என்று பேசத் தொடங்கினார்கள். ” கொடுத்த பணத்தில் பாதிக்குக் கூட , உள்ள பொருட்கள் மதிப்பில்லை. நீ பணத்தை திருப்பிக் கொடுக்கணும் ” என்றார்கள்.

    ஏதாவது செய்கிறேன் என்று ஜெரால்ட் வெளியேறினார்……..

    தொடரும்

    Reply
  • அஜீவன்
    அஜீவன்

    ஜெரால்ட் வெளியேறிய அடுத்த நாள் காலையில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு , “லீனா , இரவிலிருந்து அழுது கொண்டு இருக்கிறார். பேசிறீங்களா?” என்றார். “எனக்கும் உங்களுக்கும்தான் இப்போ பேச்சு. லீனாவோடு பேசத் தேவையில்லை” என்றேன். “இல்லை, நான் பணத்தை எப்படியாவது தருகிறேன். அவளோடு ஒரு முறை பேசுங்கள்” என்றார் ஜெரால்ட். சரி கொடுங்கள் என்றேன். லீனா , பேசினார். ” நான் மனசு உடைஞ்சு , அப்படி பேசிட்டேன். ஒரு முறை வீட்டுக்கு வாங்க. தனியா பேசனும் ” என்றார். இனி எந்த பேச்சும் உங்க கூட கிடையாது. அது நேத்தோடு முடிஞ்சுது என்று போணை வைத்து விட்டேன்.

    விடயத்தை என்னோடு இருந்த நண்பர்கள் அவதானித்துக் கொண்டே இருந்தார்கள். “லீனா, அஜீவனை வம்பில மாட்ட வைக்க பார்க்கிறா? கவனமா இருங்க” என்றார்கள். எனக்கு அது புரியுது. அதனாலதான் ஜெரால்டு கூட பேசிறேன் என்றேன்.

    அதன் பின்னர் ஜெரால்ட் கிடைக்கவில்லை. நண்பர்கள் தேடினார்கள். வக்கீலிடம் போக வரல்லைண்ணா , பிரச்சனை மோசமாகும் என்று நண்பர்கள் சிவகுமார் மூலம் தகவல் கொடுத்தார்கள். தனது பெற்றோரிடமும் , லீனாவின் தாயிடமும் பணம் வாங்கி எனக்குத் தர திரிந்ததாக ஜெரால்டு கதை விட்டு , நான் போகும் வரை இழுத்தடிக்க முயற்சி செய்வது தெரிந்தது. கடும் பிரயத்தம் செய்து நண்பர்கள் ஜெரால்டையும் , சிவகுமாரையும் எனக்கு தெரிந்த ஒரு வக்கீலிடம் அழைத்து வந்தார்கள். வந்தவர்கள் பணம் கொடுப்பதாக இல்லை. எனது பணம் கறுப்பு பணம் என்று ” அஜீவனோட பணம் கவாலா பணம். இதற்கெல்லாம் இவரால கணக்கு காட்ட முடியுமா?” என்று ஜெரால்ட வக்கீலோடு விவாதம் செய்யத் தொடங்கினார். ” நீங்க, பணம் கொடுக்க முயற்சி செய்யிற மாதிரி தெரியல்ல. கொடுக்க விருப்பமா இருந்தா இந்த பத்திரத்தில கையெழுத்திடுங்க” என்றார். ” இதில போட முடியாது. இன்னைக்கு நாள் நல்லாயில்ல. நாங்களா எழுதிக் கிட்டு வாறோம்” என்றார்கள் ஜெரால்டும், சிவகுமாரும். ” அதையாவது பண்ணுங்க ” என்றார் வக்கீல்.

    நாட்கள் நகர்ந்தன. எதுவும் நடப்பதாக இல்லை. இனி இந்த வழி சரி வராது. “அஜீவன், பவர் ஒப் அட்டாணியை , உங்க நண்பன் பேரில எழுதிட்டு. ஊருக்கு போங்க. இல்லேண்ணா, உங்களுக்கு பிரச்சனை வரலாம்” என்றார்கள். நான் தேவையானதை வக்கீலைக் கொண்டு எழுதிக் கொடுத்து விட்டு , பெரிசா பிரச்சனை தேவையில்ல. கொடுத்த பணம் மட்டும் வந்தா போதும் என்று சொல்லி விட்டு விமானம் ஏறினேன். அடுத்த நாள் முதல் ஒரு மாதமாக இந்தா, அந்தா என்று ஜெரால்ட் இழுத்தடித்தார். அதன் பிறகுதான் என் நண்பர்கள் கடும் போக்கை கடைப்பிடித்தனர். இறுதியில் 3 வருடத்துக்குள் மூன்று பிரிவாக கொடுத்த தொகையை செக் போட்டு எழுதி , பத்திரத்திரத்திலும் கையெழுத்து வாங்கினர். அதுவே பலனளித்தது.

    ஏகப்பட்ட மோசமான விடயங்கைள தவிர்த்து எழுதியுள்ளேன். ஆனால் , லீனா வெளியூர்களில் ஆட்களின் நட்பை வளர்த்து ஜெரால்ட் மூலம் பணத்தை வாங்குவதும் , பின்னர் தனக்கும் அதற்கும் தொடர்பில்லை என்பதும் வழக்கமாக இருக்கிறது. அது தெரியாமல் மாட்டினால் லீனா , எப்போதும் நல்லவராக நடிக்கத் தொடங்கி விடுவார். இவை அடுத்தவர்கள் இவர்களது வலையில் வீழாமல் இருப்பதற்காகவே எழுதுகிறேன்.

    இனி இதைக் கொண்டு லீனா வழக்கு தொடரலாம்.

    நன்றி!

    Reply
  • palli
    palli

    அஜீவன் தொடரை படித்து முடித்த பின்பு ஒரு விடயம் நிதானமாக புரிகிறது, சோபா லீணாவுக்கு மிக சரியான தோழர்தான்;

    Reply