குருநாகல் பரந்தர பகுதியில் இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஐ.ம.சு.முன்னணி ஆதரவாளரொருவர் உயிரிழந்துள்ளதாக குருநாகல் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது; ஞாயிற்றுக்கிழமை இரவு தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னர் பிக்கப் வாகனமொன்றில் இவர் வீடுநோக்கி பயணிக்கும் போதே பிக்கப்பின் பின்னாலிருந்து இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இறந்தவரின் பிரேத பரிசோதனைகள் குருணாகல் பொது வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.இறந்தவர் ரிதிகம றம்பொடகமவைச் சேர்ந்தவரெனத் தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலில் படுகாயம் இதேவேளை, குருணாகல் மகாவ பிரதேசசபைத் தலைவர் இனந்தெரியாதோர் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்து குருணாகல் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக குருணாகல் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தலல்ல பகுதியிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதன் போது மகாவ பிரதேசசபைத் தலைவர் எஸ்.எம்.வீ.கே. சேனநாயக்க படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குருணாகல் பொலிஸார் தெரிவித்தனர்.