தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை இணைத்து அரசாங்கத்தை அமைப்பதில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லையென ஜனநாயகத் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜே.வி.பி.யின் சிரேஷ்ட உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
யுத்தம் முடிவடைந்து 11 மாதங்கள் கடந்த நிலையில், இனவாதத்தைத் தோற்கடிக்க மூவின மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் இணைந்து ஆட்சியமைப்பதில் தவறு என்ன இருக்கிறது என்று கேள்வி எழுப்பிய விஜிதஹேரத் தேசிய ஐக்கியத்துக்கு இது மிகவும் முக்கியமான விடயம் என்றும் சுட்டிக்காட்டினார்.
கொழும்பு ராஜகீய மாவத்தையிலுள்ள ஜெனரல்சரத்பொன்சேகாவின் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே விஜித ஹேரத் இதனைத் தெரிவித்தார்.ஜெனரல் பொன்சேகா தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த விஜித ஹேரத் கே.பி.,கருணா ஆகியோரின் தேவைகளை நிறைவேற்றவே அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார்.புலிகள் அழிக்கப்பட்ட நிலையில் எஞ்சியிருக்கும் புலிகளின் தேவைகளை நிறைவேற்றவே அரசு முயற்சிப்பதாக அவர் சாடினார்.
அதேவேளை, ஏப்ரல் 22 இல் பாராளுமன்றம் கூடும் போது ஜெனரல் சரத்பொன்சேகா சமுகமளிப்பாரெனவும் அங்கு தனது கன்னியுரையை ஆற்றுவாரெனவும் விஜிதஹேரத் குறிப்பிட்டார்.