இலங்கை அரசாங்கம் அடுத்து நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தை கிளிநொச்சியில் நடத்த ஏற்பாடு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. அமைச்சரவைக் கூட்டமும், அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடும் கிளிநொச்சியிலேயே நடைபெறும் என அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நடைபெறவுள்ள அமைச்சரவைக்கூட்டத்திற்குச் செல்லும் அமைச்சர்கள் தங்கள் அமைச்சு சார்ந்த அபிவிருத்தித் திட்டங்களை அங்கு பார்வையிடுவார்கள் எனவும் அங்கு மீள்குடியேற்றபட்டுள்ள மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றிற்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பர் எனவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாகாணத்திலும் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்துவதற்கான ஆலோசனையை ஜனாதிபதி முன்வைத்துள்ளதாகவும் அமைச்சரவைக் கூட்டத்திற்கு முதல் நாள் அப்பிரதேசத்தில் நடமாடும் சேவை ஒன்றினை நடத்துவதற்கும் ஜனாதிபதி ஆலோசனை கூறியுள்ளதாகவும், அதன்படி கிளிநொச்சியில் முதலாவதாக இது நடைபெறவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் யூலை 14ம் திகதி அமைச்சரவைக் கூட்டம் கிளிநொச்சியில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவைக்கூட்டத்தின் போது செய்தியாளர்களும் கிளிநொச்சிக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.