‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஃகூல் உடனான நேர்காணல்

Prof_Hoole‘சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல ஒரு பெரிய பள்ளிக் கூடமே!’ என்ற தலைப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பான ஒரு நீண்ட விவாதம் தேசம்நெற்றில் தொடர்கிறது. இவ்விவாதம் இதுவரை பேசப்படாத பல விடயங்களை மக்கள் தளத்திற்குக் கொண்டுவந்துள்ளது. மேலும் தமிழ் அறிவியல் சமூகம் – அதன் ஸ்தாபனமான விளங்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பற்றியுமான ஒரு மீள் மதிப்பீட்டின் அவசியத்தை இந்த விவாதம் வலியுறுத்தி இருந்தது. இலக்குகள் மீள்வரைபுக்கு உட்பட்டு தன் சுயாதீனத்தையும் சுய அடையாளத்தையும் உறுதிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தன்னை மீள் நிர்ணயம் செய்ய வேண்டிய அவசரமும் அவசியமும் தற்போது ஏற்பட்டு உள்ளது. (முன்னைய விவாதத்தைப் பார்வையிட: சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன் )

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தராக நியமிக்கப்பட்டு அப்பொறுப்பை ஏற்றுக்கொள்ள முடியாத அரசியல் சூழலில் நாட்டைவிட்டே வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட பேராசிரியர் ரட்னஜீவன் ஃகூல் அவர்களுடனான இந்த நேர்காணல் இந்த விவாதத்தை மற்றுமொரு தளத்திற்கு நகர்த்தும் என நினைக்கின்றேன்.

Prof_Hooleஇலங்கையின் சிறந்த நேர்மையான கல்வியியலாளராக மதிக்கப்படுகின்ற பேராசிரியர் ரட்னஜீவன் ஃகூல் அவர்களுடனான இந்நேர்காணல் மின் அஞ்சலூடாகவே அமைந்தது. அவருடைய பதில்கள் அவர் கைப்பட தமிழில் எழுதி மின் அஞ்சலூடாகவே அனுப்பப்பட்டு சரிபார்க்கப்பட்டு பிரசுரிக்கப்படுகின்றது. அவருடைய தமிழ் மொழிப் பாவனை அறுபதுகளின் இறுதிப் பகுதியுடனேயே மட்டுப்படுத்தப்பட்டு இருந்தாலும் அப்போதைய மொழிநடையிலேயே தனது பதில்களை அவர் பதிவு செய்துள்ளார். இனி நேர்காணலுக்குள் நுழைவோம்…..

._._._._._.

தேசம்நெற்: உங்களைப் பற்றிய ஒரு ஆழமான சுருக்கமான அறிமுகம்…..

பேராசிரியர் ஃகூல்: ஃகூல் குடும்பத்தை ஸ்தாபித்தவர் ஸ்ரீநிவாசன் ஆவார். அவர் பருத்தித்துறையில் ஒரு சைவக் கோவில்மனியக்காரன். ஆனால் 15 ஏப்ரல் 1845 அன்று கனம் பீட்டர் பேசிவல் ஊழியத்தால் ஞானஸ்ஞானம் பெற்று பின்பு பேசிவலோடு மெதடீஸ் திருச்சபையிலிருந்து ஆங்கிலிக்கன் திருச்சபைக்கு 1850 மட்டில் மாறினார். இதிலிருந்து நாம் நல்லூர், சுண்டிக்குழி ஆகிய ஆங்கிலிக்கன் ஸ்தாபனங்களைக் கொண்ட கிராமங்களைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுகிறேம். ஊர் என்பது கிறிஸ்தவர்கள் மத்தியில் சிக்கலானது.

எனது அம்மாவின் தகப்பனார் சாமுவேல் சங்கரப்பிள்ளை சோமசுந்தரம். மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலில் கொடிமர சங்கரர் என்ற பட்டத்தை உடையவர். மாவிட்டபுரம், கொல்லன்கலட்டி, கருகம்பானை ஆகிய ஊர்களைச் சேர்ந்தவர். மாவிட்டபுரம் கோவிலின் மூலஸ்தானத்திலுள்ள மூன்று விக்கிரகங்களில் இடதுபக்கமாகவுள்ளது சோமசுந்தரத்தின் தமயன் முதலியார் பிள்ளையால் திருவிழாவில் கொடியேற்றும் உரிமையைத் தொடர வாரிசு வேண்டி நேத்திக் கடனாகக் கட்டியது.

சோமசுந்தரம் கிறிஸ்தவனாகி பரியோவான் கல்லூரியில் டீன் ஆகவும், சுண்டிக்குழி சோமசுந்தரம் வீதியில் வீடு கட்டி பின் நல்லூரில் 32 வருஷம் குருவாகவும் இயங்கினார். என் அய்யபாவின் தாய் பக்கம் ஏழாலையைச் சேர்ந்தவர்கள்.

Prof_Hoole_and_his_Familyஎன் மனைவி துஷியந்தி ஆசீர்வாதம். ஐந்து பிள்ளைகள். இப்போ நான்கு.

அரசியல் பின்னணி என்றால் தமிழரசுக் கட்சி. செல்வநாயகம், திருச்செல்வம் (தகப்பன் – மகன், -நீலன் திருச்செல்வம்), நாகநாதன், கதிரவேற்பிள்ளை, வன்னியசிங்கம், தர்மலிங்கம் யாவரும் ஏதோ ஒரு விதத்தில் எனக்குச் சொந்தமானவர்கள். அப்பா ஃகூல் போதகர் அவர்கள் TULF மேடைகளில் பேசாமல் உட்கார்ந்து இருப்பார்.

படித்தது நல்லூர் சாதனா பாடசாலை, பரி யோவான் கல்லூரி, பட்டங்கள் D.Sc (Eng) London, Ph.D. Carnegie Mellon, MSc (Distinction) London, BSc (Ceylon / Katubedde), IEEE Fellow, C.Eng.

தேசம்நெற்: உங்கள் இளமைக்காலம் தமிழ்த்தேசிய எழுச்சியுடன் பிண்ணிப் பிணைந்ததாக இருக்கும் என நினைக்கிறேன். அதனை தேசம்நெற் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியுமா?

பேராசிரியர் ஃகூல்: குறிப்பாகப் பெரிதாய் ஒன்றும் இல்லை. அம்மா நல்லூர் பரி யாக்கோபூ ஆலயப் பெண்களுடன் சத்தியாக்கிரகம் இருக்கப் போனபோது நான் துணையாகப் போவேன். சொந்தக்காரர் தமிழரசுக்கட்சி வேட்பாளரான போது நானும் சிறு பெடியனாக அவர்களுடன் ஒரு வால்போல் போனேன். 1970ல் மாணவர் பேரவை ஊர்வலங்களில் ஈடுபட்டிருந்தேன். 1986 வரை இயக்கங்களுக்கு ஆதரவு என் மனதில் இருந்தது. என் அண்ணன் ஒருவர் சத்தியசீலன், தோமஸ் அரியரத்தினம் ஆகியோருடன் சுப்பிரமணியம் பூங்காவில் வகுப்புகளுக்குப் போனவர்.

நியூயோர்க் இலங்கைத் தமிழ் சங்கத்தின் பத்திரிகை ஆசிரியனாகவும் 1983/4 செயல்பட்டு Tamil News என்ற வெளியீட்டை வைத்தியர் நாகேந்திராவின் கீழ் செய்தேன். ஆனால் நாமே எம்மைக் கொல்லத் தொடங்கி, எங்கள் நிறுவனங்கள் யாவும் அக்கொலைகளை ஆதரித்ததுடன் நான் தனியாய் இயங்கி எங்கு மனித உரிமைகளைப் பேண முடியுமோ அங்கு செய்யக் கூடியதைச் செய்து வருகிரேன். மனித உரிமைகள் தமிழரின் மட்டுமல்ல. பெண்கள், பிள்ளைகள், சாதி பெயரில் தாழ்த்தப்படுவோர் போலப் பலரை அடக்கும்.

மேலும் என் பாட்டனுக்கும் அப்பாவுக்கும் குரு உடைகள் (cassock) தைத்தவர் ஒரு இஸ்லாமிய தையலாளர். அவர் மகன்மார் ரஃபிக், ஸசீற் ஆகியோர் பரியோவான் கல்லூரியில் படித்து, என்னையும் என் சகோதரரையும் brother என்று அழைத்து, பிரதான வீதியில் கடை வைத்து, எமது உடுப்புகளைத் தைத்தனர். அவர்களை துரோகிகள் என்று குடியெழுப்ப எல்லாமே எனக்குப் புளித்துவிட்டது. அதை ஆதரித்த என்னுடன் தமிழ் அரசியலில் இயங்கிய அமெரிக்க தமிழ் நண்பர்களை சகிக்க முடியாத நிலையேற்பட்டது.

தேசம்நெற்: மனிதன் ஒரு சமூக விலங்கு என்பார்கள். நீங்கள் சமூகம் பற்றிய ஆழமான அக்கறையுடைய ஒரு மனிதர். அந்த வகையில் சமூக மாற்றம் பற்றிய உங்கள் இளமைக்கால கனவுகள் எதிர்பார்ப்புகளுக்கு உங்கள் கல்வியியல் சாதனைகள் துணைபுரிந்துள்ளனவா?

பேராசிரியர் ஃகூல்: நான் கிறிஸ்தவனாக வளர்க்கப்பட்டேன். குடும்பமாக திருவிவில்லியத்தை வாசித்து வந்தோம். என் கனவுகள் எல்லாம் அந்த அடிப்படையில் அமைந்துள்ளன. கடவுள் கெட்டவர் உட்பட யாவரையும் நேசிக்கிறார். இந்த அடிப்படைக் கூற்றிற்கு அமைய விதவைகளையும் அனாதைகளையும் பேணல், ஊர் பெயரும் தற்காலிக வாசகரை பராமரித்தல், மறியலில் உள்ளோரைப் பார்த்தல், அறுவடை நேரம் ஒரு பங்கை அறுக்காமல் ஏழைகளுக்கு விடல் போன்ற பல கட்டளைகள் வேதவசனத்தில் உள்ளன. இவை யாவும் எம்மத்தியில் சமத்துவத்தை பேணுகின்றன. ஆகவே உங்கள் கேள்விக்குப் பதிலாக என் சமயக் கல்வியே என் கனவுகளை உருவாக்கியுள்ளது. சமயசார்பற்ற கல்வியில் சமத்துவத்திற்கோ மனித உரிமைகளுக்கோ அடிப்படை காண்பது கஷ்டம்.

தேசம்நெற்: சமூக மாற்றத்திற்கு அல்லது சமூகப் பொறியியலுக்கும் அறிவியல் சமூகத்திற்கும் உள்ள உறவுபற்றி குறிப்பிட முடியுமா? பல்கலைக்கழக சமூகத்தை அறிவியல் சமூகமாக வரையறுக்க முடியுமா?

பேராசிரியர் ஃகூல்: மேற்கூறியவாறு சமூகக் கல்வியில் எது சரி, எது பிழை என்பதற்கு அடிப்படையில்லை. நான் Ethics for Engineers என்ற ஒரு பாடம் கற்பிக்கிறேன். பல்கலைக்கழகத்தில் நாம் சமயம் சாராமல் படிப்பிக்கக் கடமைப்பட்டுள்ளோம். ஆனால் புஸ்தகங்களில் இன்னும் ஒரு திருப்தியான அடிப்படையில் சரி – பிழைக்கு வரைவிலக்கணம் இல்லை. ஆகவே சுயநலத்தையே அடிப்படையாக வைத்து பலர் கற்பிக்கிறோம். உதாரணமாக மனித உரிமைக்கு அடிப்படை ‘‘அதிகாரம் வல்லமை உள்ள நாம் இன்று மற்றோரை நசுக்கலாம். ஆனால் நாளை இந்த அதிகாரம் வல்லமை மறுபக்கம் மாறினால் அவர்கள் அதே துன்புறுத்தலை எமக்குச் செய்யலாம். ஆகவே இருவரும் சேர்ந்து உரிமைகளைப் பேணும் ஒரு நிற்பந்தத்திற்கு வருவதே இருவருக்கும் நல்லது.’’ இதில் பல்கலைக்கழகத்திற்கு பெரிய பொறுப்புண்டு. யானைக்கொரு காலம் பூனைக்கொரு காலம் என்பதெல்லாம் சரித்திரத்தில் உண்டென்று காட்டினால் யானை பூனையைப் பராமரிக்கும்.

தேசம்நெற்: இலங்கையிலும் இலங்கைக்கு வெளியே உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களிலும் பட்டப்படிப்பை மேற்கொண்டும் அப்பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகவும் ஆய்வாளராகவும் கடமையாற்றி உள்ளீர்கள். அவற்றின் ஒப்பு நோக்கில் கடந்த ஆறு சகாப்த சுதந்திர இலங்கையில் பல்கலைக்கழகங்கள் நாட்டின் அரசியல் பொருளாதார சமூக கலாச்சார அம்சங்களில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.

பேராசிரியர் ஃகூல்: சிங்களவரும் தான் தமிழரும் தான் மார்க்க ஏகாதிபத்திய சரித்திரம் எழுத வெளிக்கிட்டிருக்கிறார்கள். மெய்யென்றாலும் பரவாய் இல்லை. ஆனால் பல படுபொய்கள். சரித்திரம் என்று பாடப் புஸ்தகங்களில் எப்படி சிறுபான்மையினரைத் தாக்குகிறது என்று யோசியாமல் எழுதுகிறார்கள். எழுதி இலங்கையை நொருக்கிவிட்டார்கள். இலங்கையிலோ மேல்நாட்டிலோ பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு ஆராய்ச்சியே முதற்கடமை – முதல் பட்ட (BA, BSc) படிப்பு அல்ல. இந்த அடிப்படையில் தான் விரிவுரைகள் ஒரு வருடத்திற்கு 9 மாதங்களுக்கும் அதுவும் கிழமைக்கு 4 – 5 மணித்தியாலங்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ளன. இதை எல்லோரும் சரியாயச் செய்தால் எல்லாம் சீராக இருக்கும். அதனால் வரும் கூற்றுகளுக்கு இடையிலான போட்டியும் விவாதமும் இந்த மார்க்க ஏகாதிபத்தியத்தை முறித்திருக்கும். சிலர் சொல்வார்கள் இலங்கையில் வசதிகள் இல்லாமல் ஆராய்ச்சி செய்ய முடியாதென்று. அப்படியென்றால் எப்படி ஒவ்வொரு வருஷமும் சுமார் 150 இலங்கையர் ஜனாதிபதியின் பரிசை தமது ஆராய்ச்சிக்கு வெல்லுகிறார்கள். யாழ்ப்பாணத்தில் மீண்டும் அடிப்படை ஆராய்ச்சி செய்ய பல வாய்ப்புகள் தலைப்புகள் எல்லாத்துறைகளிலும் உள்ளன.

தேசம்நெற்: 19ம் நூற்றாண்டில் இருந்த பல்கலைக்கழகம் பற்றிய கருத்தியலுக்கும் பல்கலைக்கழகம் பற்றிய தற்போதுள்ள கருத்தியலுக்கும் உள்ள வேறுபாடு என்ன? இலங்கைப் பல்கலைக்கழகங்களின் கருத்தியல் என்னவாக உள்ளது.

பேராசிரியர் ஃகூல்: காலப்போக்கில் பல்கலைக்கழகங்கள் மாறி வருகின்றன. பழைய காலத்தில் ஒரு ஆராய்ச்சியாளர் மாணவரை வைத்து தன் ஆராய்ச்சியை நடத்தினால் பல வருஷங்களுக்குப் பின் ஆசிரியருக்கு கலாநிதிப் பட்டம் (DSc., D.Litt.) வழங்கப்பட்டது. பொருளாதார வளர்ச்சியின் நிமித்தம் கூடக் கூட பட்டதாரிகள் தேவைப்பட கல்வி ஜனநாயகப்படுத்தப்பட்டது. இதனுடன் வந்த ஆசிரிய தேவையை பல்கலைக்கழகங்களில் பூர்த்தி செய்ய கலாநிதிப் படிப்பு தனிமையாக பல வருடங்களில் முடிக்கும் நிலையிலிருந்து 2 – 5 வருஷங்களில் ஒரு ஆசிரியரின் மேற்பார்வையின் கீழ் செய்யும் பாடமாக மாற்றப்பட்டது. இதன் தாக்கவிளைவையே இன்று காண்கிறோம். உலகெங்கும் அரசாங்கங்களும் முதல்ஈடு செய்கின்றன. ஆராய்ச்சிக்கு ஆராய்ச்சியாளரே நிதி திரட்டுவார்களென்று எதிர்பார்க்கப்படுகின்றது. வர்த்தக விளைவு தரும் ஆராய்ச்சி மட்டுமே இப்படி மேலோங்குவது துக்கத்திற்குரியது. ஆராய்ச்சிக் கலாசாரம் வேரூண்டாத இலங்கையில் இது ஒரு பேரழிவு. குறிப்பாக எமக்கு வேண்டிய சமூக சரித்திர வட்டாரங்களில் கேடு தரும்.

தேசம்நெற்: இலங்கையில் இனப்பிரச்சினை உக்கிரமாக இருந்த காலகட்டங்களில் பேராதனை பல்கலைக்கழகத்தில் நீங்கள் பேராசிரியராக இருந்துள்ளீர்கள். தென்பகுதி பல்கலைக்கழகங்களில் தமிழ் மாணவர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளை ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியர், தமிழர் என்ற வகையில் எவ்வாறு எதிர்கொண்டீர்கள்?

Prof_Hooleபேராசிரியர் ஃகூல்: பல பிரச்சினைகள். பொலிஸ் மாணவரைப் பிடித்தல், புலிகள் சாராத மாணவர் வாயை மூடவேண்டிய நிலை, ஆங்கில பாடக்கோப்பில் விரிவுரையாளர் சிங்களத்தில் படிப்பித்தல், தொழில் பயிற்சிக்கு, தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி CEB, SLT போன்ற புகழ்வாய்ந்த நிறுவனங்களில் தமிழருக்கு வாய்ப்பு அளிக்கப்படாமை. ஆனையிறவு வீழ்ச்சியைத் தொடர்ந்து சில தமிழ் மாணவர் பட்டாசு கொழுத்த அதைத் தொடர்ந்து சிங்கள மாணவர்கள் தமிழரிடம் இருந்து இறந்த இராணுவத்தினருக்கு நிதி சேர்க்க, ஒரு பதட்டமான நிலையேற்பட்டமை, வன்னி மாணவர் அனுமதிக் கடிதம் பிந்திக் கிடைத்ததால் பிந்தி பீடத்திற்கு வந்ததால் அனுமதி மறுக்கப்பட்டமை. இதில் ஆசிரியராகிய நாம் தலையிடுவது கஷ்டம்.

திறந்த பல்கலைக்கழகத்தில் (Open University, Colombo) சைவ மாணவர்கள் தைப்பொங்கலைக் கொண்டாட முயன்ற போது அரிசி மூட்டைகளை வாசலில் இறக்கி சோதித்த பின் தூக்கி ஒரு கட்டை தூரம் நடக்க வேண்டும் என்றார்கள். மாணவர்கள் சொல்ல என் மனைவி அப்போதைய தமிழ் துணை வேந்தரிடம் இதைப் பற்றிக் கூறிய போது அவர் அன்பாகச் சொன்னது, ’’பிள்ளை, நாங்கள் இங்கு இருப்பதே கஷ்டம். இவற்றை எழுப்பினால் இருக்கவே முடியாமல் போய்விடும்.’’ இதுவே நிலை. 
 
தேசம்நெற்: தமிழ் பேராசிரியர் என்ற வகையில் நீங்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் என்ன? கல்வியியலாளர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் என்ன?

பேராசிரியர் ஃகூல்: பேராதனையில் நான் மாணவர் சார்பாக காவலகம் சென்ற போது பொலிஸார் பேராதனைப் பேராசிரியர் என பெயருக்கு மரியாதை கொடுத்து 24 மணிகளுக்குள் மாணவரை விடுவித்தார்கள். ஆனால் பல்கலைக்கழகத்தினுள்ளே நான் மேற்கூறிய பிரச்சினைகளை எழுப்பிய போது என்னை சிங்களவருக்கு எதிரானவர் என்று கருதி 3 வேறு வேறு விசாரணைகளுக்கு உள்ளாக்கினர்.

இப்பொய் குற்றச்சாட்டுக்கள்
1) பீடத்தில் புள்ளிவிபரப் புஸ்தகத்தை மோசடியாக மாற்றினேன் .
2) பாடத்திற்கு வெளியான கேள்விகளை பரீட்சையில் கேட்டு பீடத்தின் தரத்தை குறைத்தேன்.
3) துறைத் தலைவருடன் ஒத்துழைக்க மறுத்தேன் என்றும் இதன் விளைவால் என் கேள்வித்தாளில் பிழைகள் இருந்தன என்றும். மேலும் நான் விசாரணையின் கீழ் இருந்தேன் என்றும் சொல்லி என்னை உத்தியோகத்தில் நிரந்தரமாக்கவும் சிரேஷ்ட பேராசிரியராக்கவும் மறுத்து என் மனைவியையும் வேலை நீக்கினார்கள். எல்லாம் தாங்க முடிந்தது. ஆனால் முதலாம் குற்றச்சாட்டு நான் ஒரு தமிழ் மாணவனை 2ம் வகுப்பு மேற்பிரிவிலிருந்து முதலாம் வகுப்பு பட்டதாரியாக மாற்றச்செய்ததென்பது என் சிங்கள நண்பர்களையும் என்மேல் சந்தேகம் கொள்ள வைத்தது.

ஒருநாள் விரிவுரை முடித்து வந்த போது ஒரு CID தலைவர் என் வருகைக்கு காத்திருந்து தான் சிகல உருமயவைத் தொடரும் குழுவைச் சேர்ந்தவரென்றும் என் பெயர் பல கூட்டங்களில் கோபமாய் பேசப்பட்டதென்றும் சொல்லி, எச்சரிக்கையாயிருக்க வேண்டி கொழும்பு கண்டி தொலைபேசி இலக்கங்களை அவசரமேற்படின் அழைக்கத் தந்தார். ஒரு தஞ்சத்திற்கு, என்னை வேலை நீக்க முயலும் துணைவேந்தரிடம் ஓட முடியவில்லை. அதிலிருந்து குடும்பத்தை கொழும்புக்கு மாற்றி பகலில் மட்டும் பேராதனைக்கு வந்து சென்றேன்.

மூன்று வருடங்களின் பின் விசாரணைகள் நான் குற்றமற்றவன் என்ற முடிவுக்கு வந்தன. மேலும் நீதிமன்றம் என்னை நிரந்தர பணியாளாக்கி சிரேஷ்ட்ட பேராசிரியராக 3 வருடம் பின் செயலாகச் செய்யும்படி கட்டளையிட்டது. இதைச் செயற்படுத்தவும் நீதிமன்றம் சென்று நீதிமன்றத்தின் எனக்குச் சார்பான முடிவுக்கு பல்கலைக்கழகம் மரியாதையீனமாய் நடந்தது. (Contempt of Court) என்ற மனுவை பதிந்துதான், நீதிமன்றக் கட்டளைகள் அமுல்படுத்தப்பட்டன. இதேபோல் மனித உரிமை ஆணைக்குழு என் மனைவியின் வேலை நீக்கத்தை பிழையானது என்று தீர்த்தது.

மார்ச் 2008ல் யாழ் பல்கலைக்கழகத்திற்கு பேராதனை என்னை 3 வருடத்திற்குக் துணை வேந்தனாக இயங்கக் கொடுத்தது. நான் இந்த 3 வருடம் முடியும் காரணத்தால் டிசம்பர் 19 2008 இலங்கை வந்து என் 7ம் வருட விடுமுறையை எடுப்பேன் என்று எழுதி அங்கு சென்றேன். அதேநாள் துறைத் தலைவருக்கு துணை வேந்தரிடம் இருந்து நான் வேலை நீக்கப்பட்டுள்ளேன் என்ற கடிதம் வந்தது. எனக்கு இன்னும் அந்த கடிதத்தின் பிரதி வரவில்லை.

தமிழராகிய எமக்கு இது சிங்கள வியாதி என்று இப்படிப்பட்ட நடத்தையை தட்டிவிடுவது சுலபம். ஆனால் சிங்களவர், தமிழர் நாம் யாவரும் இப்படியே. எமக்கு எதிராக இயங்கிய தமிழர் ஒருவர் தேவையான ஆராய்ச்சிக் கட்டுரைகள் இல்லாமல் இப்போ பேராசிரியர் ஆக்கப்பட்டுள்ளார். இன்னுமொருவர் தேவையான பேராசிரியர் அனுபவம் அற்று இளைப்பாறச் சற்று முன்பு சிரேஷ்ட பேராசிரியராக்கப்பட்டார். சேர் தொமஸ் மோ சொன்னது போல, ஒரு பட்டத்திற்காக தங்கள் ஆத்மாவைக் கூலியாக வித்துள்ளனர். இதேபோல் நான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு கணணிப் பேராசிரியராக விண்ணப்பித்தேன். என் வயதைச் சேர்ந்தோர் படித்த காலத்தில் கணணியியல் ஒரு துறையாக இருக்கவில்லை. ஆகவே உலகெங்கும் துறையை உருவாக்கியவர்கள் ஒன்றில் என்னைப் போல் மின்-கணணிப் பொறியியலாளர் அல்லது கணிதத்துறை சார்ந்தோர்.

மேலும் என் ஆராய்ச்சிக் கட்டுரைகளில் பெரும்பாலானவை கணணியலை சேர்ந்தவை மட்டும் அல்லாமல், பேராதனை கணணித்துறையை பொறியியல் பீடத்தின் கீழ் ஸ்தாபித்து திறந்த பல்கலைக்கழகத்தில் IT பேராசிரியராகவும் 2 வருஷகாலம் வேலை செய்துள்ளேன். அப்படி இருந்தும் என் விண்ணப்பம் தெரிவுக்குழுவுக்குப் போடப்படவில்லை. நான் வழக்கு வைத்தபோது வேறு விண்ணப்பதாரர்கள் இல்லாத பட்சத்தில் என்னை நியமிக்குமாறு தீர்ப்பு தரப்பட்டது. பல கடிதங்கள் எழுதியும் அமுல்படுத்தப்படவில்லை. மறுமொழியும் தரப்படவில்லை. இந்தத் தமிழ் நிர்வாகம் சிங்கள நிர்வாகம் போன்றதோ அல்லது எமக்கு நியாயத்தோடும் நீதியோடும் நிர்வகிக்க முடியுமா என்பதே தமிழராகிய நம்மை எதிர்நோக்கும் சவால்.

தேசம்நெற்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட காலங்களுக்கு ஒருமுறை பின்நோக்கிப் பயணிப்போம். அப்போதைய உங்கள் மனப்பதிவுகளை எமது வாசகர்களுக்கு வெளிக்கொண்டுவர முடியுமா?

பேராசிரியர் ஃகூல்: இது தரப்படுத்தலின் உச்சத்தில் ஸ்தாபிக்கப்பட்டது. ஸ்ரீமா என்றாலே மாணவர் மத்தியில் வயிற்றெரிச்சல். பரமேஸ்வரா, யாழ்ப்பாணக் கல்லூரி ஆகிய இரு கல்லூரிகளை அரசாங்கம் எடுத்து ஒரு சதம் செலவழியாமல் எமக்குப் பல்கலைக்கழகம் தருவதாக செய்ததை ஒரு நாடகமாய் கருதி மாணவர் பேரவையும் தமிழரசுக்கட்சியும் திறப்பு விழாவை பகிஷ்கரித்தோம். ஆனால் 1979 மட்டிலான கண்ணோட்டத்தில் அது ஒரு பெரிய காரியமாகும். 1974ல் நாம் மாட்டுக்கொட்டிலாகக் கருதியது 1979ல் நாட்டின் ஒரு பிரதான பல்கலைக்கழகமானது. இது எடுத்துக்காட்டுவது என்னவென்றால். சின்னக் காரியங்களிலும் சுயநிர்ணய உரிமையை எடுத்தால் அதைக் கட்டி எழுப்பலாம் என்பதே. 1987ல் 2000ம் ஆண்டும் பின் 2004இலும் கிடைத்த தருணங்களை ‘‘எல்லாம் அல்லது பூச்சியம்’’ என்ற கொள்கையின் கீழ் கைவிட்டது எனக்கு பெரிய கவலை. 

தேசம்நெற்: 2006ல் நீங்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு உபவேந்தராக நியமிக்கப்பட்ட போது உங்கள் உணர்வு எப்படி இருந்து? நீங்கள் அப்பதவியைத் தொடர்ந்தால் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்க்கும் உயிராபத்து விளையும் என்ற நிலையேற்பட்ட போது உங்கள் மனநிலை என்ன?

Prof_Hoole_with_his_Wifeபேராசிரியர் ஃகூல்: என்னத்தைச் சொல்வது. மனம் மிகத் தளர்ந்திருந்தேன். அமெரிக்காவில் இருந்து கூட்டி வந்த பிள்ளைகள் ‘‘அப்பா, இதுவா உங்கள் யாழ்ப்பாணம்?’’ என்று கேட்டனர். ஒரு சில தமிழரை வைத்து எல்லாத் தமிழரையும் மறியலில் அடைக்கக் கூடாதென்று வாதாடும் நாம், அதேபோல் ஒரு சில தமிழரின் கோழைத்தனத்தை வைத்து முழு சமுதாயத்தையும் குறைத்துப் பேசக்கூடாது.

துரோகி என்றும் சைவக் கோவில் உள்ள பல்கலைக்கழகத்தில் எப்படி என்னை நடமாடவிட முடியும் என்றும் வேறும் கிறிஸ்தவரை தாழ்த்தி ஒரு பேப்பர் என்ற பத்திரிகையில் சிலர் ஆசிரியர் கட்டுரை எழுதினார்கள். இதற்கும் நான் என் பிள்ளைகளுக்கு நினைவூட்டுவது 25 பேர் கொண்ட பேரவையில் 15 பேர் எனக்கு வாக்களித்தார்கள். மீதிப் பத்துப் பேரில் பலர் மதம் சாரா காரணங்களுக்காக தம் வாக்கை அளியாமல்விட்டிருப்பர். ஆகவே மதவெறி கொண்டவர்களை ஒரு மிகச் சிறுபான்மையானவரென்றே நாம் கருத வேண்டும் என்பதே.

என்னை அந்த நேரம் பேணிய மாணவர், MP மார், குருமார் பொது மக்களை நான் ஒரு போதும் மறக்க மாட்டேன்.

மேலும் நான் தமிழருக்கு குறிப்பாக வடமாகாணத்தாருக்கு செய்த காரியங்களில் சிலவற்றை (என் செயல்களை நானே எடுத்துச் சொல்வது அழகற்றதாக இருந்தாலும்) இந்தக் கேள்வியின் பட்சத்தில் கூறுவதற்கு கடமைப்பட்டுள்ளேன்.
1) 1977 – 1980 காலத்தில் சுமார் 600 உபாத்தியாளர் நியமனக் கடிதங்களை நைஜீரியாவில் இலவசமாக தமிழருக்கு எடுத்துக் கொடுத்தேன். இவற்றில் பல யாழ் பல்கலைக்கழகத்தின் புதுப் பட்டதாரிகளுக்கு.
2) இலங்கையில் கஷ்டத்துக்குள்ளாகியோர் பலரை என் பட்டதாரி மாணவராய் அமெரிக்காவுக்கு எடுத்து இன்று பெரிய உத்தியோகங்களில் வாழ வைத்துள்ளேன். சிலரை நான் என் பரிட்சைக் கூடத்திலேயே பட்டப்படிப்பு முடித்தும் உத்தியோகஸ்தராக்கி Green Card எடுத்துக் கொடுத்துள்ளேன். மேலும் என் எழுத்துக்கள் காரணத்தால் அமெரிக்க மத்திய அரசின் உள்குடியேற்ற நீதிமன்றம் என்னை இலங்கையைப் பற்றிய வல்லுனர் என்று ஏற்றதன் நிமித்தம் பலர் சார்பில் இலவசமாகச் சாட்சியமளித்து தஞ்சம் எடுக்க உதவியுள்ளேன்.
3) மானியங்கள் ஆணைக்குழுவில் சேர்ந்த சமயம் யாழ்பாணத்தில் ஒரு வருஷத்தில் ஒரு மாணவனிற்கு 44 000 ரூபாயும் ஏனைய பல்கலைக்கழகங்களில் சுமார் 80 000 ரூபாயும் (2004ம் ஆண்டுக் கணக்கு) ஒதுக்கி வந்தது. நான் இது பெரும் பிழை என்று சுட்டிக்காட்டியதும், 2005ம் ஆண்டு யாழ் மாணவனுக்கு ஒதுக்கப்பட்டது  ரூபாய் 90 000. நான் எழுதிய முன்மொழிவின்படி  வவுனியா வளாகத்திற்கு 200 மில்லியன் கட்டிட நிதி ஒதுக்கப்பட்டு கணணித் தொழில்நுட்ப பீடம் ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இருக்கும் கணணித்துறை பெருப்பிக்கப்பட்டது.

திருகோணமலை வளாகத்தை கந்தளாயிற்கு மாற்றும் திட்டம் நான் எதிர்த்ததும் கைவிடப்பட்டது.

இப்படியே நான் எழுதிக்கொண்டே போகலாம். ஆனால் நான் சொல்ல வருவது என்ன? ஏன் இதைச் செய்கிறேன்? சைவ மக்கள் மேல் பகையென்றால் ஏன் இவற்றை செய்வேன். நான் சைவ மக்களின் பகைவன் என்பவர்கள் சைவ மக்களுக்கு என்ன செய்திருக்கிறார்கள்?

தேசம்நெற்: உங்கள் பதவியை ஏற்கவிடாமல் நீங்கள் நாட்டைவிட்டு வெளியேற யார் காரணமாக இருந்தார்களோ அவர்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளனர். மிக அவலமாகவும் கோரமாகவும் முடிவுக்கு வந்த வன்னி யுத்தம் பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்?

பேராசிரியர் ஃகூல்: நீங்கள் சொல்வது போல ஒரு நாளும் ஒரு இயக்கத்தை முற்றாக அழிக்க முடியாது. அவ்வியக்கத்தை எழுப்பிய காரணங்கள் நீங்கினால் மட்டுமே அவ்வியக்கம் அழியும். புலிகளின் ஆதரவாளர் பலர் மிஞ்சவில்லை என்பது முட்டாள்தனம். மேலும் புலிகளினால் அழிக்கப்பட்டவர்களின் சொந்தக்காரர் அப்படிக் கொன்று தமிழர் மத்தியில் புலிகள் ஏற்படுத்திய பகை என்பவையே பல தமிழரை இராணுவத்துடன் இயங்க வைத்தது புலிகளின் அழிவுக்கான காரணங்களில் ஒன்றானது. இன்று இராணுவத்தின் கையில் இறந்தவர்களின் சொந்தங்கள் அதேபோல் சந்தர்ப்பம் கிடைத்தால் இராணுவத்திற்கெதிராக இயக்குவார்கள் என்பது எதிர்பார்க்க வேண்டியது.

என்னைப் பொறுத்தவரை இந்தக் கொலை – மீள்கொலை வட்டம் நிறுத்தப்பட வேண்டும். அதைச் செய்வதற்கான ஞானம் அரசாங்கத்திற்கு வரவேண்டும் என்பதே என் பிரார்த்தனை.

யாருடைய மரணத்தையும் வைத்து நாம் மகிழ முடியாது. குறிப்பாக வன்முறையினால் கட்டாயப்படத்தப்பட்டு ஆயுதம் தாங்கிய பிள்ளைகளை நாம் தீவிரவாதிகளென்று சொல்வது பெரிய தவறு. அரசாங்கம் இப்பிள்ளைகளைச் சமூகச் சீர்திருத்தும் முயற்சிகள் வெற்றிபெற வேண்டும்.

தேசம்நெற்: இலங்கைத் தமிழ் மக்களின் வரலாற்றில் இடம்பெற்ற மிகக் கோரமான அவலத்திற்கு நாங்கள் சாட்சியாக இருந்திருக்கின்றோம். தமிழ் அரசியல் தலைமைகள் அல்லது தமிழ் அறிவியல் சமூகம் இந்த அவலமான அல்லது கோரமான முடிவை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்புகள் இருந்ததா?

பேராசிரியர் ஃகூல்: மேல் கூறியவாறு ‘‘எல்லாம் அல்லது பூச்சியம்’’ என்ற கொள்கை எம்மை கை விட்டுள்ளது. 1987, 2000, 2002 – 4 ஆகிய ஆண்டுகளில் வந்த எல்லா வாய்ப்புகளையும் இழந்துவிட்டோம். எமது தலைமைகள் மந்திரி பதவியை எடுத்தாலே மக்களுக்கு உதவுவதற்கு பல வாய்ப்புகள் வரும். அதிகாரம் அரசாங்கக் கையில் உள்ள போது தூர விலத்தி ‘‘நீங்கள் எங்கள் நன்மையை கருதுகிறீர்கள் என்று நிரூபியுங்கள்’’ என்று சொல்வது 1965ல் பலிக்கவில்லை. இன்றும் பலிக்காது. தமிழ் மந்திரிமாருக்கே தமிழரின் தேவைகள் சரியாய் தெரியும். தமிழராகிய நாம் இப்படி என்றாலும் எடுக்கக் கூடிய அதிகாரத்தை எடுக்க வேண்டும். கூட்டுறவே ஒரே வழியாகியுள்ளது.

தேசம்நெற்: கடந்த மூன்று தசாப்தகால தமிழீழ விடுதலைப் போராட்டம் அல்லது தமிழ் இளைஞர்களின் ஆயுத வன்முறை மிகவும் அவலமான முடிவுக்கு வந்துள்ளது. இதிலிருந்து தமிழ் சமூகம் குறிப்பாக தமிழ் அறிவியல் சமூகம் எதனைக் கற்றுகொள்ளலாம் என நீங்கள் நினைக்கின்றீர்கள்.

பேராசிரியர் ஃகூல்: ஞானம், அனுபவம் என்பன முதிந்தோர் மத்தியிலேயே கூட உள்ளன. ஆனால் எமது முதிர்ந்தோர் வழிகாட்டாமல் வாலிபருக்கு வால் பிடித்து அவர்களை ஏமாற்றி தத்தம் காரியங்களைப் பார்த்தார்கள்.

உதாரணமாக மேடையேறி போர் உற்சாகத்தை ஊட்டி, அதேவேளையில் தம் பிள்ளைகளுக்கு வெளியேற அனுமதி பெற்றார்கள். எனக்குத் தெரிந்த வெள்ளாளப் பூசாரி ஒருவர் கலிபோனியாவிலிருந்து பகவத்கீதையின்படி இலங்கையிலுள்ள வாலிபர்களின் தர்மம் போர் புரிவதும், தனது தர்மம் அவர்களுக்கு ஆதரவளிப்பதும் என்று எனக்குப் புழுகினார்.

அறிவியல் சமூகத்தினர் பலர் நிலமை எல்லாம் விளங்கியும் தம் மௌனத்தை கைவிடவில்லை. அம்மௌனமே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. பல அரசியல் தலைவர்களும் நீண்ட காலம் வீரத்தோடு தம் தனித்துவத்தைப் பேணியும், கடைசியில் தலைகுனிந்த நிர்ப்பந்தம் இனி ஒருபோதும் ஏற்படக் கூடாது.

தேசம்நெற்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36 ஆண்டுகால வரலாறு தமிழீழ விடுதலைப் போராட்டத்துடனும் பிண்ணிப் பிணைந்ததாகவே உள்ளது. நடந்து முடிந்தள்ள மூன்று தசாப்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தியது?

பேராசிரியர் ஃகூல்: ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம். இதுவே பிளேற்றோ கூறியபடி பல்கலைக்கழகங்கள் – நாட்டு ஆளுமைக்கு ஆதாரம் என்ற நோக்குடன் கல்வியில் ஈடுபட வேண்டும். – அரசியலுக்கோ எம் மார்க்கத்திற்கோ காரணம் வைத்து எம் ஆராய்ச்சிப் பணியைச் செய்ய முடியாது. இந்த உண்மையை மறந்ததால் தான் யாழ் பல்கலைக்கழகத்திற்கு இந்த கடைசி 30 வருஷங்களாகக் கவலைக்கிடமான பல தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

சிங்களவரும் அப்படிச் செய்கின்றனர், ஏன் நாமும் அப்படிச் செய்யக் கூடாது என்று கேக்கிறவர்கள் சிலர். அதற்கு என் பதில் அவர்களுடைய மாதிரிப் பல்கலைக்கழகமா எங்களுக்கு வேண்டும்.

அல்லது உதாரணமாக புதிய பொறியியல் பீடத்தை அரசியல் காரணங்களுக்கு கிளிநொச்சியில் போட வேண்டும் என்கிறார்கள் பலர். அப்படி நடப்பின் ரஜரட்டை பல்கலைக்கழகம் போல், இளம் பிள்ளைகள் உடைய விரிவுரையாளர் (அதாவது அநேகர்) யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து திங்கள் பின்நேரம் அல்லது செவ்வாய் வேலைக்கு வந்து வியாளன் அல்லது வெள்ளி காலை யாழ்ப்பாணம் செல்வார்கள். செனட் பேரவை கூடும் நாட்களில் ஒரு அதிகாரியும் வளாகத்தில் இருக்க மாட்டார். இது எமது சமூகத்தின் போலித்தனத்தை மீண்டும் காட்டுகிறது. யாழ்ப்பாணத்தில் வசதியாய் வாழும் நாம், எம் வாலிப விரிவுரையாளர்கள் தமிழ் சமூகத்திற்காக தங்கள் குடும்பங்களுடன் கிளிநொச்சியில் வாழ வேண்டும் என்கிறோம். ஆனால் சரித்திரத்தில் அப்படி நடப்பதில்லை. ஒருவர் தன் குடும்பத்திற்கு முதலிடம் கொடுப்பதே இயற்கை, வழக்கம்.

அறிவைப் பேணி அரசியல் நோக்கங்களுக்கு பல்கலைக்கழகத்தை அடியாக்க முன்வரும் சக்திகளை எதிர்க்கும் பலம் பல்கலைக்கழக நிர்வாகிகளுக்கு வேண்டும். இப்பலம் இல்லாமல் இருந்ததே கடைசி 30 வருடங்களின் குறை.  

தேசம்நெற்: யாழ்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக உங்களை நியமிக்க பல்வேறு தரப்பினராலும் அழுத்தங்கள் வழங்கப்பட்டு வருவதை தேசம்நெற் அறிகின்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராகப் பணியாற்றுவதற்கான வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்தால் தற்போது அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் உள்ள பதவிகளைத் துறந்து யாழ் செல்வீர்களா? அதற்கான தயாரிப்பில் நீங்கள் உள்ளீர்களா?

பேராசிரியர் ஃகூல்: அந்த அழுத்தங்கள் ஜனநாயகமுறையில் வந்தால் அவற்றை நாம் வரவேற்க வேண்டும். நான் செல்வேனா என்பது இப்போது ஒரு கேள்வியாக அமையாது. ஏனெனில் நான் அமெரிக்காவில் என் பதவியை ஏற்கனவே ராஜினாமாச் செய்து ஓகஸ்டில் நாடு திரும்புகிறேன்.

பேராசிரியர் துரைராஜா 1989ல் என்னை மின்பொறியியல் துறைக்குத் தலைவராக வரவேண்டும்  என்று கேட்டபோது என் மனைவியின் Ph.D. பட்டப்படிப்பு முடிந்ததும் என் 7ம் வருஷ விடுமுறையை எடுத்துக்கொண்டு 1993ல் வருவேன் என்று வாக்களித்திருந்தேன். யுத்த காரணத்தால் அவர் பொறியியல் பீடத் திட்டங்கள் பலிக்கவில்லை. 1995ல் என் நீண்ட காலத் திட்டங்களுக்கமைய ஊர் சென்றேன். ஆனால் யாழ்ப்பாணத்தில் உஸ்தியோகம் கிடைக்கவில்லை. நான் பொறியியல் பீடத்தை அமைக்க உதவுவேன் என்று சொல்லியும் சிவில் பொறியியல் பதவியையே விளம்பரப்படுத்தினர். தகுந்த விண்ணப்பதாரி இல்லையென்று தெரிந்தும் மீண்டும் சிவிலையே விளம்பரப்படுத்தினர். மின்துறையைச் சேர்ந்த நான் விண்ணப்பிக்க முடியவில்லை.

Prof_Hoole_with_his_Wifeசரி கணணித்துறைக்குச் செல்வோம் என்று வெளிக்கிட்டதும் நடந்தது தெரிந்ததே. சரி மனைவி பிள்ளைகளை ஆகிலும் அனுப்புவோமென்று அவர்கள் இரசாயணப் பதவியை விளம்பரப்படுத்திய போது என் மனைவி விண்ணப்பம் அனுப்பினார். பல மாதங்கள் பின் அதையே நாம் மறந்த கட்டத்தில் அடுத்தநாள் நேர்முகப்பரீட்சைக்கு யாழ்ப்பாணம் வருமாறு கொழும்பில் இருந்த அவருக்கு ஒரு கடிதம் வந்தது. அவர் உடனடியாகத் தொலைபேசியில் தனக்கு விரும்பினாலும் வரமுடியாதென்று முறைப்பட்ட போது, ‘‘பரவாயில்லை அடுத்தமுறை விளம்பரம் வரும் போது விண்ணப்பியுங்கள்’’ என்றார்கள். மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முறைப்பட்ட போது, அவர் விண்ணப்பதாரிகள் இல்லாதபட்சத்தில் மீண்டும் தெரிவுக்குழுவைக் கூட கட்டளையிட்டனர். அதற்கிணங்க தெரிவுக்குழு கூடி, ”வெற்றிடம் இல்லை’’ என்று முடிவெடுத்தது! உடனடியாக வழக்கு வைத்தோம். ஆனால் நாட்டைவிட்டு வெளியேறியதால் வழக்கைத் தொடர முடியவில்லை.

நான் 1993இல் இருந்து யாழ் வளாகத்துட் செல்லத் திட்டமிட்டும் ஓரிருவரால் தடுக்கப்பட்டுள்ளேன். எம் கடிதங்களுக்கு பதிலே வருவதில்லை. வழக்கு தொடர்ந்தால் ஒரு வருடமென்றாலும் எடுக்கும். இங்கே (அமெரிக்காவில்) இருந்தால் அங்கு போவது ஒருபோதும் நடவாதென்ற முடிவில்தான் என் பதவியை ராஜினாமாச் செய்தேன். கிடைத்தால் உபவேந்தர் பதவியை ஏற்பேன்.

தேசம்நெற்: பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்களின் நியமனங்கள் அரசியல் நியமனங்களாக அமைந்துவிடுவது பல்கலைக்கழகத்தின் சுயாதீனத்தை மட்டுப்படுத்துகின்றது என்ற குற்றச்சாட்டு பலவலாக உள்ளது. இக்குற்றச்சாட்டுப் பற்றியும் உபவேந்தர்களின் நியமனம் பற்றியும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவை பற்றியும் சற்று கூறமுடியுமா?

பேராசிரியர் ஃகூல்: இந்தக் குற்றச்சாட்டு தவறானது. பல்கலைக்கழகங்கள் யாவும் பல்கலைக்கழக 1987 சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன. அந்தச் சட்டம் மிகக் கவனமாக எழுதப்பட்டது. ஆளும் பேரவையில் துணைவேந்தர், பீடத் தலைவர் போன்ற பலர் தம் உத்தியோகஸ்தின் நிமித்தம் அங்கத்தவர்கள். இவர்களை மட்டுமே தீர்மானங்கள் எடுக்கவிடுவது நல்லதல்ல என்ற காரணத்தால் கூடவே சுற்றிய சமூகத்தில் இருந்து உள் அங்கத்தவர் எண்ணிக்கை சக ஒரு வெளிப் பெரியோர்கள் அரசாங்கத்தால் நியமிக்கப்படுவர். இதற்கமைய யாழ் பேரவையில் 12 உள்ளங்கத்தாரும் 13 வெளியங்கத்தாரும் 2006ல் இருந்தனர். இவர்கள் அதிபர்மார், கணக்காளர், GAமார், குருமார், இளைப்பாறிய பேராசிரியர்மார் போன்ற சமூகப் பெரியோர்களும் உள்ளனர். இப்படியிருந்தும் உள் அங்கத்தவரே அதிகாரம் கூடியவர்கள். ஏனெனில் வெளி அங்கத்தவர் வழமையில் ஒரு பெரிய தப்பைக் கண்டாலே ஒழிய தலையிடுவதில்லை. இந்தப் பேரவை மாதாந்தம் கூடுவதாலும் அடிக்கடி தெரிவுக்குழு, நாணயக்குழு போன்றவற்றில் சந்திப்பதாலும் அவர்களுக்குள் நட்புகள் ஏற்பட்டு பீடத் தலைவர் அல்லது தொடர விரும்பும் துணைவேந்தர் பேரவையின் வாக்கை துணைவேந்தர் பதவித் தேர்தலில் கேட்கும் போது ஒரு வெளியாள் வருவது மிகவும் கஷ்டம்.

சட்டத்தை எழுதியவர்கள் இப்படி ஒரு நெருங்கிய பேரவையில் திறமை நட்புக்கு இலக்காகும் என்பதையும் மனதில் கொண்டு பேரவையின் பொறுப்பு 3 பேரைத் தேர்ந்து ஜனாதிபதியிடம் அனுப்புவது மட்டும் என்றும், இறுதித் தெரிவு மானியக் குழுவின் ஆலோசனையோடு ஜனாதிபதியுடையதென்றும் அமைந்தது. எனக்குத் தெரிந்த அளவு நானும் துரைராஜாவும் மட்டுமே வெளியாட்களாகப் பேரவையால் தெரிவு செய்யப்பட்டுள்ளோம்.

இந்த அமைப்பில் பிழை காணலாம். ஆனால் இது பொதுவாக வேலை செய்கிறது. பேரவையில் பெரும்பான்மை வெளி அங்கத்தவர்களிடம் இருந்தாலும், நட்புகள், இளைப்பாறிய பேராசிரியர்மாரால் உள்அங்கத்தவரிடமே அதிகாரம் உள்ளது. அவர்கள் தெரிவு செய்யாத ஒருவரை ஜனாதிபதி நியமிக்க முடியாது. தாம் ஏற்கத்தக்க 3 பேரை ஜனாதிபதியிடம் அனுப்புவது பேரவையின் கடமை. அனுப்பிய பின் தாம் விரும்பாதவர் நியமிக்கப்பட்டார் என்பது பொறுப்பற்ற நடத்தையே.

தேசம்நெற்: யாழ்-சைவ-வேளாள-ஆணாதிக்க கருத்தியலின் ஆதிக்கத்திலேயே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்ந்தும் உள்ளது. இதுவரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர்களாக இருந்தவர்கள் இந்தக் கருத்தியலுடன் உடன்படாவிட்டாலும் சைவ-வேளாள சமூகப் பின்னணியில் இருந்தே வந்துள்ளனர். யாழ்-சைவ-வேளாள-ஆணாதிக்க கருத்தியலை எதிர்த்து நிற்கவில்லை. அதனுடன் சமரசம் செய்துகொண்டனர். ஆனால் நீங்கள் கத்தோலிக்க மதத்தை இறுக்கமாகப் பின்பற்றுபவர். சைவ-வேளாள கருத்தியலை தீவிரமாகவும் கடுமையாகவும் விமர்சிப்பவர். 2006ல் உங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரங்களில் நீங்கள் இந்துக்களுக்கு எதிரானவர் (கத்தோலிக்கர்) என்றும் பிரச்சாரப்படுத்தப்பட்டது. இந்த முரண்நிலையை நீங்கள் எவ்வாறு எதிர்கொள்வீர்கள்?

பேராசிரியர் ஃகூல்: நான் கத்தோலிக்கன் தான், ஆனால் ஆங்லோ கத்தோலிக்கன். உரோமன் கத்தோலிக்கன் அல்ல, ஆனால் பாப்பரசரை அத்தியட்சர் மாரில் (அதாவது Bishop மாரில்) முதல்வர் எனக் கருதுபவர்.

நான் சைவ சமயத்தவன் அல்ல. ஆனால் சைவ சமயத்தவருக்கு எதிரானவன் அல்ல. இதை என்னுடன் பழகிய மாணவர். நைஜீரியாவில் வேலை வாய்ப்பு எடுத்துக் கொடுத்த 600 வாத்தியார்மார் சொல்ல வேண்டும், நான் இல்லை. எனது எழுத்துகளின் போது என் அறிவியல் கடமையையே செய்கிறேன்.

மேற்கூறியவாறு பற்பல கட்டுக்கதைகள், பொய்ப் பிரச்சாரங்கள் பாடப் புஸ்தகங்களில் வெள்ளாளரால் எழுதப்பட்டு வருகின்றன. உதரணமாக ‘குலத்தாலவே ஆகுமாம் குணம்’ அல்லது ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்’ ஏன் இவற்றைப் பற்றி யாரும் கேள்வி கேட்பதில்லை? கேட்கக் கூடாதா? கேட்பது வெள்ளாளரைப் பகைப்பதா? இக்கட்டுக்கதைகளை எம்மை வரைவிலக்கணம் கூறும் கதைகள் என்பர். இவற்றை தாக்கும் போது அவர்களில் சிலருக்கு அது ஏதோ கத்தியைப் போட்டு திருப்புவது போல் இருக்கிறது. ஆகவே என் கேள்வியை வேறு விதத்தில் கேட்கிறேன்:

இலங்கை அரசின் பாடப் புஸ்தகங்கள் கற்பிக்கின்றன சிங்களவர் குடியமர்ந்து இலங்கையைக் கட்டியெழுப்பவும், தமிழர் ஆக்கிரமிப்புக்காரராயும் வந்தார்களென்று. இதை வினவுவது சிங்களவரைப் பகைப்பதா? இதுக்கு விடையைக் கூறிய பின்,

தாமோதரம் பிள்ளையின் சரித்திரத்தை எடுப்போம். என் மூதாதையரான சி வை தாமோதரம் பிள்ளையின் திருச்சபைப் பதிவுகளின் படி அவர் பிறந்த ஒரு சில நாட்களில் சிறுபிள்ளை ஞர்னஸ்ஞானம் பெற்றார். தகப்பன் வைரவி தாய் பெரியாய். இவர்கள் ஏற்கனவே ஞானஸ்ஞானம் பெற்று அந்நேரத்தில் சைரஸ் கிங்ஸ்பெரி, மேரி கிங்ஸ்பெரி என்ற பெயர்களில் இயங்கினர். ஆனால் ஆறாம் வகுப்புத் தமிழ் பாடப் புஸ்தகமோ அவர் பெற்றார் வைரவநாதர், பெரும்தேவி என்ற (இன்றைய வெள்ளாளப்) பெயர் உடையவர் என்றும் சலுகைகளுக்காக கிறிஸ்தவனாய் தாமோதரம் பிள்ளை நடித்தார் என்றும் கற்பிக்கின்றது. என் மதத்தாரைப் பற்றிய பிழையான கற்பிப்பைப் பற்றி கேள்வி எழுப்புவது சைவ மக்களுக்கு எதிரியாய் இருப்பதா? இல்லை! ஆனால் நான் இப்படிப் பொய் கதைகளை உருவாக்கி நஞ்சை பிள்ளைகளுக்கு ஊட்டபவர்களை எப்போதும் எதிர்ப்பேன். இதில் சிந்திக்கும் வைச மக்கள் என்னுடன் தோளோடு தோள் நின்று ஐக்கியநாட்டு பிள்ளைகள் உரிமைக் கோட்பாட்டைப் பேணுவர். அக்கோட்பாட்டுக்கு விரோதமாய் சிறுபிள்ளைகளுக்கு சாதி சமய நச்சூட்டுவதை எதிர்ப்பார்கள் என்று உறுதியாய் நம்புகிறேன்.

தேசம்நெற்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் நிர்வாக ஒழுங்கீனம் முதல் அறிவியல் தகமை வரை பல்வேறு பிரச்சினைகளைக் கொண்டதாக உள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சுயாதீனம் தனித்துவம் அடையாளம் அனைத்துமே கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. இந்நிலையில் நீங்கள் இதனை குறுகிய உங்கள் பதவிக்காலத்தில் சீர்செய்ய முடியும் என நினைக்கின்றீர்களா? எவ்வாறு இந்த சீராக்கத்தை செய்ய உள்ளீர்கள்?

Prof_Hooleபேராசிரியர் ஃகூல்: ஏற்கனவே இதை தொட்டுள்ளேன். இவற்றைச் செய்ய ஓரேயொரு வழி மட்டுமே. குட்டப்பட்டும் குனிந்து நிற்கும் ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுத்து தலைநிமிரப் பண்ணுவதே. ஒரு சின்ன உதாரணம் – என் மனைவியை யாழ் கழகம் அடுத்தமுறை விண்ணப்பியுங்கள் என்றது. மனிதரை மனிதராக பாவிக்க மறுப்பதற்கு அது ஒரு உதாரணம். அவர் முறைப்பட்டது குட்டக் குட்டக் குனிய மறுப்பதற்கு உதாரணம். 3 வருடத்தில் சீர் திருத்தம் செய்ய முடியாது. ஆனால் மனிதரை மரியாதையுடன் பாவிக்கத் தொடங்கினால் அந்தச் சீர்திருத்தம் தொடரும்.

தேசம்நெற்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பற்றிய விவாதத்தில் அந்த இறுக்கமாக மூடப்பட்ட அறிவியல் சமூகத்தில் நடைபெறுகின்ற பாலியல் துஸ்பிரயோகம் மிக முக்கியமான விவாதப் பொருளாகவும் அமைகின்றது. பல்கலைக்கழக சமூகத்திற்கு இந்தப் பாலியல் துஸ்பிரயோகம் (அதிகாரப் படிநிலையில் மேலுள்ளவர்கள் தமக்குக் கீழுள்ளவர்களை தமது பாலியல் விருப்புக்கு பயன்படுத்துவது. கீழுள்ளவர் அதற்கு சம்மதித்தாலுமே அது துஸ்பிரயோகம்.) பொதுவான விடயமா? அல்லது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மட்டுமே எதிர்நோக்குகின்ற ஒரு பிரச்சினையா? இதனை எவ்வாறு கையாள முடியும்?

Prof_Hooleபேராசிரியர் ஃகூல்: நான் பாலியல் துஸ்பிரயோகம் யாழ் பல்கலைக்கழகத்தில் உண்டென்று கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் எனக்கு நேரடியாகத் தெரியாது. ஆனால் என் மனைவி திறந்த பல்கலைக்கழகத்தில் துறைத்தலைவரின் பாலியல் இம்சைக்கு (sexual harassment) இலக்கான போது அவர் முறையிட்டு, அவ்வாறு சம்பவம் நடக்கும் போது என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று ஒரு கொள்கைப் பத்திரம் இருக்க வேண்டுமென்று கேட்ட போது ஏற்பட்ட எதிர்ச்சி பெண்களின் தாழ்ந்த நிலையைக் காட்டுகின்றது.

‘‘பொய் சொல்லாதே’’ என்று திட்டினார் பீடத்தலைவர். ‘‘இது அமெரிக்காவில்லை’’ என்றார் ஒரு பேராசிரியர். ‘‘அவர் மார்பைப் பிடிக்காவிட்டால் அது பாலியல் துஸ்பிரயோகம் இல்லை’’ என்றார் இன்னுமொரு பேராசிரியர். ‘‘அது சீலை உடுக்காமல் சட்டை போடுவதால் தான்’’ என்று இன்னுமொருவர். ‘‘அது தனக்கு ஏன் நடப்பதில்லை’’ என்றும் கேட்டார் அவவிலும் ஒரு 28 வயது கூடிய ஒரு பெண் பேராசிரியர்.

நான் உப வேந்தராய் நியமிக்கப்பட்டு ஏதாவது காண நேரிட்டால் என்னைப் பொறுத்தவரை நான் சட்டத்தின் கீழ் மிகக் கடுமையான நடவடிக்கை எடுப்பேன். என் மனைவி இதை ஜனாதிபதியிடம் எழுப்பியதை தொடர்ந்து ஜனாதிபதி உயர்கல்விக் காரியதரிசிக்கு எழுதி, புதிய மாணவர் இம்சை தடைச்சட்டத்தின் கீழ் பாலியல் துஸ்பிரயோகமும் தடைப்பட்டு உள்ளது.

தேசம்நெற்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை உருவாக்கியதில் முன்னின்ற பேராசிரியர் கெ கைலாசபதி அதனை ஆசியாவிலேயே சிறந்த பல்கலைக்கழகமாக்க கனவுகண்டார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு நீங்கள் உபவேந்தராக 2006ல் நியமிக்கப்பட்ட பின் பல்கலைக்கழக அபிவிருத்தி தொடர்பாக உங்கள் வேலைத்திட்டங்களை வெளியிட்டு இருந்தீர்கள். தற்போது மீண்டும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவி உங்களை நெருங்கி வந்துகொண்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பற்றிய உங்களுடைய தொலைநோக்குப் பார்வை இலக்கு என்ன?

பேராசிரியர் ஃகூல்: இலக்குகள் பிரதானமாக 3.
1) பொறியியல் பீடத்தை அமைப்பது.
2) வவுனிய வளாகத்தை பல்கலைக்கழகமாக்குவது. (ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் ஒரு சுதந்திரப் பல்கலைக்கழகமாக்கும் பொறுப்புடன் ஒரு வளாகம் கொடுக்கப்பட்டது. இரு தமிழ் பிரதேச வளாகங்கள் மட்டுமே இன்னும் வளாகங்களாக உள்ளன. ஏனைய வளாகங்கள் பல்கலைக்கழகங்களாகி இப்போ பல வருஷங்கள்.)
3) யாழ் பல்கலைக்கழகத்தை இலங்கையில் நியாய, நீதியான, நிர்வாக வழிகாட்டியாக அமைப்பது.

(யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பேராசிரியர் ரட்னஜீவன் ஃகூல் அவர்களின் இலக்குகளை அடையும் தன் சுயாதீனத்தையும் சுய அடையாளத்தையும் மீளுறுதி செய்துகொள்ளும் என்ற நம்பிக்கையுடன் இந்நேர்காணலை முடிவுக்கு கொண்டு வருகின்றேன்.)

Show More
Leave a Reply to Kandaswamy Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

51 Comments

  • accu
    accu

    கல்வித்தகமையும் மனிதநேயமும் தாய்நாட்டுப்பற்றும் அஞ்சாமையும் நிறைந்த பேராசிரியர் ரட்னஜீவன் ஃகூல் அவர்கள் உபவேந்தர் மட்டுமல்ல இலங்கையின் எந்த அதிஉயர் பதவிக்கும் தகமையும் தகுதியும் உடையவராவார்.

    Reply
  • Aaivu
    Aaivu

    I don’t know why Jeyabalan is entertaining religious identity here. Since, as you know that; the religion is the opium for a society.

    I kindly request any body who come to the Chair refrain form their religious identity.

    Reply
  • ராஜதுரை
    ராஜதுரை

    நண்பர் ‘ஆய்வு’ அவர்களின் கருத்தை ஏற்றுக் கொள்கின்றேன். ‘அரசியல்’, ‘அதனோடியைந்ததாகக் கையாளப்பட்டு வந்திருக்கின்றதான சமயவெறி’ என்கின்ற இரு லாகிரிப் பொருட்களும் பல்கலைக்கழகமென்கின்ற சுதந்திரப் பறவையின் முன்னேற்றப் போக்கினை மழுங்கடிக்கக்கூடாது.

    பல்கலைக்கழகம் என்பது தனிமனிதர்களுக்கானதல்லவே! அது ஒரு பொது சமூக சொத்து.

    பேராசிரியர் ஹூலின் வெளிப்படையான கருத்துக்களுக்கும், தனது குறை நிறைகளை ஏற்றுக் கொள்வதற்குத் தயாராகவிருக்கின்ற மனப்பாங்குக்கும் எனது பாராட்டுக்கள். பேராசிரியர் ஹூல், தனது கல்வியாள வாழ்க்கையில் தான் அறிந்தும் அறியாமலும் தவறியிருக்கின்ற விடயங்களைப் பற்றியும் தனது ஒழுக்காற்றவியல் பார்வையில் அலசுவாரானால் மிகவும் நன்றாயிருக்கும். அந்தப் படிப்பினைகள் எமது சமூகத்துக்குப் பயனளிக்கும்.

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    ஆய்வு நான் சமய அடையாளத்தை முதன்மைப்படுத்தவோ அல்லது சமய அடையாளத்தை மகிழ்விக்கவோ இல்லை. ஆனால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கடந்த 36 வருடங்களாக யாழ்-சைவ-வேளாள-ஆண் ஒருவரே பதவியில் இருந்துள்ளார். மேலும் பேராசிரியல் ஃகூல் அவர்கள் உபவேந்தராக நியமிக்கப்பட்ட போது அவருடைய சமய அடையாளம் அவருக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டது. இந்தப் பின்னணியிலேயே சமய அடையாளம் பற்றிய கேள்விகள் அமைந்தன.

    மற்றும்படி உபவேந்தராக மட்டுமல்ல எந்தப் பொறுப்புக்கும் வருபவர்களும் தங்கள் பொறுப்பில் இருந்து தங்கள் மத அடையாளங்களை அந்நியப்படுத்துவதே நன்று. பேராசிரியர் ஃகூல் அவர்களும் அதனையே சுட்டிக்காட்டியும் உள்ளார்.

    Reply
  • BC
    BC

    //சமயசார்பற்ற கல்வியில் சமத்துவத்திற்கோ மனித உரிமைகளுக்கோ அடிப்படை காண்பது கஷ்டம்.//
    இந்தியா, பாகிஸ்தான், பங்கலாதேஷ், இலங்கை தொடக்கம் ஆப்பிரிக்காவிலும் சமயக் கல்வியை கட்டாயமாக்கி அதி முக்கியம் கொடுத்து நடத்தப்படுகிறதே!

    Reply
  • Yalpanan
    Yalpanan

    I wish to congratulate T. Jeyapalan for his gallant efforts towards chaneling critical thinking to focus on the re-vitalisation of the University of Jaffna. It is obvious that Prof. Hoole is the only choice if we as the united Tamil nation are to do whatever we can for re-engineering the University of Jaffna as a cultural icon and a strong academic entity. I appreciate Prof. Hoole’s open and liberal ideas and respect his perspectives on the exploitations by ‘hindu vellala males’in the past 36 years of the University of Jaffna’s history.

    Considering that a few questions regarding a particular PhD degree has arisen in the other debate aboute this university. I request Mr. Jeyapalan to communicate with Prof. Hoole to findout about the logical and illogical elements hiding behing S. Kanaganathan’s allegedly illegal PhD degree. My friends in the UK, where I live – confirm that S. Kanaganathan is also a part of the corruptive group identified as the ‘hindu vellala males’. Moreover, as I have gathered from past-students of the Eastern University, it is also evident that S. Kanaganathan had previously been involved in a host of un-ethical and un-foresighted activities in the East.

    I sincerely think that people like S. Kanaganathan are the ‘threats’ or ‘blockages’ that Prof. Hoole as an academic-administrator needs to weed out from the University of Jaffna. You can trust an enemy who is openly against you. But, you can never understand the movements or the motives of selfishly inclined people like Kanaganathan, who can take many shapes and forms to accomplish their personal interests.

    I have not met Kanaganathan, but I am sure that he fails to fit into the description of an ‘ethical scientist’. I am surprised to know that these people are the ones who are teaching our younger generation in the north eastern universities.

    It is good that Prof. Hoole is extremely transparent about his religious background and is extremely responsive of other religious communities. Ideologically, those who speak Tamil and think in Tamil are Tamils. As such, Prof. Hoole’s statement: “மேலும் என் பாட்டனுக்கும் அப்பாவுக்கும் குரு உடைகள் (cassock) தைத்தவர் ஒரு இஸ்லாமிய தையலாளர். அவர் மகன்மார் ரஃபிக், ஸசீற் ஆகியோர் பரியோவான் கல்லூரியில் படித்து, என்னையும் என் சகோதரரையும் brother என்று அழைத்து, பிரதான வீதியில் கடை வைத்து, எமது உடுப்புகளைத் தைத்தனர். அவர்களை துரோகிகள் என்று குடியெழுப்ப எல்லாமே எனக்குப் புளித்துவிட்டது. அதை ஆதரித்த என்னுடன் தமிழ் அரசியலில் இயங்கிய அமெரிக்க தமிழ் நண்பர்களை சகிக்க முடியாத நிலையேற்பட்டது” is appreciated.

    As the Tamil community, we have to learn a lot about being humane and being part of the global human society. I think Prof. Hoole has the correct ideological perspective to re-engineer the vision of the University of Jaffna in the right path.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…இந்தியா, பாகிஸ்தான், பங்கலாதேஷ், இலங்கை தொடக்கம் ஆப்பிரிக்காவிலும் சமயக் கல்வியை கட்டாயமாக்கி அதி முக்கியம் கொடுத்து நடத்தப்படுகிறதே!….//

    இந்தியாவில் சமயக்கல்வி ‘கட்டாயம்’ அல்ல.
    அதுதான் பாகிஸ்தான், பங்களதேஷ், இலங்கை (ஸ்ரீலங்கா), ஆபிரிக்கா இவ்வளவு அரசியல் கலாச்சார நாற்றம் நாறுதோ?

    Reply
  • Kandaswamy
    Kandaswamy

    //தமிழ் அரசியலில் இயங்கிய அமெரிக்க தமிழ் நண்பர்களை சகிக்க முடியாத நிலையேற்பட்டது//

    அப்ப எப்படி யாழ் பல்கலைகழகத்தை சகித்து கொள்ள போகிறீர்கள்? இதுவும் உங்களுக்கு புளித்து போக நிறைய வாய்ப்புகள் உண்டு.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…கடந்த 36 வருடங்களாக யாழ்-சைவ-வேளாள-ஆண் ஒருவரே பதவியில் இருந்துள்ளார்….//

    யாழ்ப்பாணத்தில் (இலங்கைத்தமிழரில்) பெரும்பான்மையானவர்கள் சைவ வேளாளர்கள். மேலும் உயர் கல்விகற்றவர்களில் பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு தகுதியுள்ளவர்களில் பெண்கள் இருக்கவில்லை. காரணம் 50, 60 வருடங்களின் முன்னர் பெண்கள் கல்வி என்பது அவ்வளவு இல்லை, சிங்கள முஸ்லிம்களிடையே அது மிகக்குறைவு. எனவே உங்கள் குற்றச்சாட்டு தவறானது. இல்லை எனில் யாழ்பல்கலைக்கழக உபவேந்தராக நியமிக்கத் தகுதி பெற்றிருந்தும் நிராகரிக்கப்பட்ட சைவவேளாளரல்லாத பெண்கள் பெயர்களை சொல்லுங்கள். அதுபற்றி பேராசிரியர் ஹூலின் கருத்துக்களையும் கேளுங்கள்.

    //…மேலும் பேராசிரியல் ஃகூல் அவர்கள் உபவேந்தராக நியமிக்கப்பட்ட போது அவருடைய சமய அடையாளம் அவருக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டது…//

    ஆனால் அச்சமய அடையாளம் அவரின் நியமனந்துக்கு எவ்வித இடையூறும் செய்யவில்லை. நீங்கள் எப்போதும் வலியுறித்திவரும் ‘கருத்துச் சுதந்திரம்’ இவ்வாறான எதிர்க்கருத்துகளை சொல்வதற்குரிய உரிய உரிமையை வழங்குகிறது. ஆனால் அக்கருத்துகள் திரு.ஹூலின் நியமனத்தில கவனத்தில் எடுக்கப்படவில்லை என்பதே உண்மை. உங்கள் குற்றச்சாட்டு எவ்வித அடிப்படையுமற்றது!

    கீழே ஹூலின் கூற்று…

    ‘…25 பேர் கொண்ட பேரவையில் 15 பேர் எனக்கு வாக்களித்தார்கள். மீதிப் பத்துப் பேரில் பலர் மதம் சாரா காரணங்களுக்காக தம் வாக்கை அளியாமல்விட்டிருப்பர். ஆகவே மதவெறி கொண்டவர்களை ஒரு மிகச் சிறுபான்மையானவரென்றே நாம் கருத வேண்டும் என்பதே…..’
    அதாவது தனக்கு வாக்களிக்காத அங்கத்தினர் கூட ‘மதம் சாரா’ காரணங்களினாலேயே வாக்களிக்காமல் விட்டிருப்பர் என்கிறார்.
    அதனை அமெரிக்காவில் வெளியாகும் ஆங்கில ஊடகத்துக்கும் 11/17/06 இல் சொல்லி இருந்தார்.
    ‘..”Out of the 25 members on the council, 23 were Hindus, and they voted for me, but the LTTE still had a problem.”

    ”பேரவையின் 25 அங்கத்தினரில் 23பேர் இந்துக்கள் அவர்கள் எனக்கு வாக்களித்தனர், ஆனால் எல்.ரி.ரி க்கு பிரச்சினையாக இருந்தது” என

    Reply
  • கரவை ஜெயம்
    கரவை ஜெயம்

    …முதல் துணைவேந்தராக நியமிக்கப் பட்டதும் அதை ஒரு தலை சிறந்த ஆய்வுப் பல்கலைக் கழகமாக வளர்க்கத் திட்டமிட்டார்…

    …அப் பல்கலைக் கழகம் ஆய்வுப் பல்கலைக் கழகமாக, உலகளாவிய நிலையில் ஒரு சிறந்த பல்கலைக் கழகமாக விளங்க, ஆய்வாளர்களிடமும் அறிஞர்களிடமும் ஒழுக்கம், நேர்மை, தீராத அறிவுத் தேடல், கடப்பாடுடைய உழைப்பு ஆகியவற்றை எதிர்பார்த்தார். அத்தகைய பண்புகளைக் கொண்டிராதவர்கள் எனத் தான் கருதியவர்களைப் பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேற்றினார்.

    தனது ராஜினாமாக் கடிதத்தை முகவரியிட்டுக் கைவசம் வைத்திருந்தார். தன் செயல்பாடுகள் பிடிக்கவில்லையென எவர் ஒருவர் எண்ணினாலும் அக்கடிதத்தை தேதியிட்டு தபாலில் சேர்க்கத் தயாராக இருந்தார். தான் வரும் போது அலுவலர்கள் எழுந்து நிற்கக் கூடாது, அவரவர் பணியைக் கவனிக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு முன்மாதிரியான நடைமுறைகளைச் செயற்படுத்திய ஆளுமை அவருக்குண்டு…

    (….தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தர் அறிஞர் வ. அய். சுப்பிரமணியம் அவர்கள் மறைந்தபோது காலச்சுவடு இதழில் ( இதழ் 116) வெளியான கட்டுரையிலிருந்து….)

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    நட்புடன் சாந்தன்,

    //யாழ்ப்பாணத்தில் (இலங்கைத் தமிழரில்) பெரும்பான்மையானவர்கள் சைவ வேளாளர்கள். மேலும் உயர் கல்விகற்றவர்களில் பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு தகுதியுள்ளவர்களில் பெண்கள் இருக்கவில்லை.// சாந்தன்

    சாந்தன் நீங்கள் இங்கு எழுதிய விடயம் உள்ளதே, இதுதான் யாழ்-சைவ-வேளாள-ஆண் ஆதிக்க கருத்தியல். இலங்கைத் தமிழரில் பெரும்பான்மையானவர்கள் சைவ வேளாளர் என்பது மிக மோசமான பொய். முஸ்லீம்களை தற்போது தனி இனமாகக் கொள்வதால் (அப்போது அப்படியிருக்கவில்லை.) அவர்களை விட்டால் இலங்கையில் உள்ள தமிழர்களில் வடக்கு கிழக்குத் தமிழர்கள் மலையகத் தமிழர்கள் அடங்குவார்கள். யாழ்ப்பாணம் தவிர்ந்த இலங்கையின் ஏனைய பாகங்களில் வெள்ளாள ஆதிக்கம் கிடையாது. காரணம் அவர்கள் எண்ணிக்கையிலும் குறைவு. அதனால் தான் அவர்கள் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் பிரதேச ரீதியான பாரபட்சத்தை கைக்கொள்கின்றனர். மேலும் இத்தமிழர்களில் குறிப்பிடத்தக்க அளவான கிறிஸ்தவர்களும் உள்ளனர்.

    இலங்கைத் தமிழரில் பெரும்பான்மையானவர்கள் சைவ வேளாளர் என்ற கருத்தாக்கம் இலங்கைத் தமிழர் என்பவர்கள் யாழ்ப்பாணத் தமிழரே என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் இருந்தே வருகின்றது. இதற்கு ஆர் புதியவனின் ‘ஊரில் எவ்விடம்?’ என்ற கட்டுரை சிறந்த எடுத்துக்காட்டு. வெளிநாட்டில் உள்ள தமிழர் இன்னொரு தமிழரைச் சந்தித்து உரையாடும் போது ஊரில் எவ்விடம் என்ற கேள்வியைக் கேட்டுக் கொள்வார்கள். கேள்வி கேட்பவரைப் பொறுத்தவரை இலங்கை என்பது யாழ்ப்பாணம். கொம்பன்விழுந்தமடு என்ற வன்னிக் கிராமப் பெயரைச் சொன்னால் அதனை அவர் யாழ்ப்பாணத்திலேயே தேடுவார்.

    சாந்தனின் கருத்தும் இதையே காட்டுகின்றது.

    //உயர் கல்விகற்றவர்களில் பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு தகுதியுள்ளவர்களில் பெண்கள் இருக்கவில்லை. காரணம் 50, 60 வருடங்களின் முன்னர் பெண்கள் கல்வி என்பது அவ்வளவு இல்லை// சாந்தன்

    இது யாழ்-சைவ-வேளாள-ஆண் ஆதிக்க சிந்தனையின் மற்றுமொரு வெளிப்பாடு.

    செல்வி றோஸ்மேரி சின்னையா இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னதாக பிஏ கலைப்பட்டதாரிப் படிப்பை முடித்து லண்டன் சென்று பட்டப்படிப்பின் பட்டப்படிப்பை முடித்தவர். இவரின் மாணவி –
    செல்வி திலகவதி பெரியதம்பி – வடகிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர். – இலங்கையில் கல்வித்துறையில் அதியுயர் பதவி வகித்த பெண்.
    கலாநிதி செல்வி இவாஞ்சலின் முத்தம்மா தில்லையம்பலம் – இலங்கை முழுவதிலும் விஞ்ஞானத்தில் கலாநிதிப் பட்டம்பெற்ற முதலாவது பெண். 1906ல் தனது ஆறு வயதில் கல்விகற்க ஆரம்பித்த முத்தம்மா பி.எஸ்சி. எம்.எஸ்சி பட்டங்களை இந்தியா அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பெற்றார். எம்.ஏ எம்.எஸ்சி. பிஎச்.டி பட்டங்களை அமெரிக்க கொலம்பிய பல்கலைக்கழகத்தில் பெற்றார்.
    திருமதி இரத்தினா நவரத்தினம் வட மாநில கல்விப் பணிப்பாளர் பதவியை வகித்த முதலாவது பெண். ஆங்கிலத்தில் சிறப்புப் பட்டம் (இந்தியா) இலக்கிய முதுகலைப் பட்டம் (எம்.லிற்) அண்ணாமலைப் பல்கலைக்கழகம் லண்டனில் கல்வியியலில் கலாநிதிப்பட்டம் பெற்றவர்.யாழ் பல்கலைக்கழகம் தனது 25வது வெள்ளிவிழா பட்டமளிப்பில் இவருக்கு இலக்கிய கலாநிதிப்பட்டம் அளித்தது.
    (ஆதாரம்: யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்கல்வி ஓர் ஆய்வு – வள்ளிநாயகி இராமலிங்கம்)

    சாந்தன் 50, 60 வருடங்களுக்கு முன் பெண்கல்வி என்பது அவ்வளவு இல்லை என்கிறீர்கள் சாந்தன். ஆண்களது கல்வியும் அவ்வளவாக இருக்கவில்லை. ஆங்கிலேயர் காலத்தில் பெண்களின் கல்விஆர்வம் தீவிரமாக இருந்தது. ஆனால் சுதந்திரம் வழங்கப்படுவதை நோக்கிச் சென்றுகொண்டிருக்கையில் கிறிஸ்தவ அமைப்புகளின் கையில் இருந்த கல்வி நிறுவனங்கள் அரசுடமையாக யாழ்-சைவ-வேளாள-ஆண் ஆதிக்க சிந்தனை தலைதூக்கியது. பெண்களைப் பொறுத்தவரை அவர்களது வேகம் மட்டுப்படுத்தப்பட்டது. இதுவே நடந்தது. தகுதியானவர்கள் இல்லையென்பது முழுப் பூசனிக்காயை சோற்றினுள் புதைக்கும் முயற்சி.

    யாழ்ப்பாணத்து சைவ வேளாளருக்கும் மட்டுமே அறிவு உள்ளதென்ற மமதை தான் எமது இனத்தின் சீரழிவுக்குக்காரணம். மட்டக்களப்பார் பாயொட்டிகள் பழஞ்சோறுகள் வன்னியாரை ஒரு கத்தை வைக்கோலுடன் சமாளிக்கலாம் சோனி தொப்பி பிரட்டி சிங்களவன் மொக்கன் இவைதான் யாழ்-சைவ-வேளாள-ஆண் ஆதிக்க கருத்துக்கள்.

    //ஆனால் அச்சமய அடையாளம் அவரின் நியமனந்துக்கு எவ்வித இடையூறும் செய்யவில்லை. நீங்கள் எப்போதும் வலியுறித்திவரும் ‘கருத்துச் சுதந்திரம்’ இவ்வாறான எதிர்க்கருத்துகளை சொல்வதற்குரிய உரிய உரிமையை வழங்குகிறது.// சாந்தன்

    சமய அடையாளம் அவரது நியமனத்திற்கு தடையாக இருந்தது என்று நான் எங்கும் சொல்லவில்லை. இவருக்கு எதிராக இவரது சமய அடையாளத்தையும் பயன்படுத்தினர் என்றே சொல்லியுள்ளேன். ஒபாமா அமெரிக்க ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட்ட போது இவர் ஒரு ஆபிரிக்க கறுப்பினத்தவர் என்ற எதிர்ப்பிரச்சாரத்தை கருத்துச் சுதந்திரத்தின் கீழ் செய்திருக்க முடியுமா சாந்தன்?

    சாந்தன் உங்களைப் போன்றவர்களது இந்த யாழ்-சைவ-வேளாள-ஆண் ஆதிக்கச் சிந்தனைக்கு இலங்கைத் தமிழர்கள் கொடுத்த விலை மிக உச்சம். நீங்கள் சொல்கின்ற ”யாழ்ப்பாணத்தில் (இலங்கைத்தமிழரில்) பெரும்பான்மையானவர்கள் சைவ வேளாளர்கள்.” என்பது யாழ்ப்பாணத்திலும் இப்போது பெரும்பான்மை இல்லை என்பதே உண்மை. வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்த ஒரு மில்லியன் வரையான தமிழர்களில் 90 வீதமானவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்தும் ஏனைய பாகங்களில் இருந்தும் புலம்பெயர்ந்த யாழ்-சைவ-வேளாளரே.

    த ஜெயபாலன்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    நட்புடன் ஜெயபாலன்,
    இங்கே எனது கேள்வி இலங்கையின் சுதந்திரத்துக்கு அண்மையான முன்னர்/பின்னரான சமுகவியல் பற்றியது. வெறும் பொலிற்றிக்கல் கரெக்ட்னஸ் பற்றியதல்ல. இலங்கையில் சுதந்திரத்துக்கு முன்னர்/பின்னர் பல பெண்கள், முஸ்லிம்கள் கல்விகேள்விகளில் சிறந்து விளங்கினர். ஆனால் அவர்களில் யார் யார் யாழ் பல்கலைக்கழகத்துக்கு விண்னப்பித்தனர்? சொல்லுங்கள் பார்ப்போம். எனக்கும் படித்த பெண்களின் லிஸ்ற் எடுத்து விடத்தெரியும் ஆனால் என்கேள்வியை மறுபடியும் சென்று படியுங்கள். எத்தனை சைவவெள்ளாளரல்லாத பெண்கள் நிராகரிக்கப்பட்டனர். தயவு செய்து சொல்லவும். அவ்வாறிருக்கும் பட்சத்தைல் அவர்கள் சாதி சமய அடிப்படையில் நிராகரிக்கப்பட்ட சான்று உண்டா?
    சும்மா ஆணாதிக்கம், யாழ்ப்பாண மையவாதம் என பொலிற்றிக்கல் கரெக்ட்னஸ் கதை விட்டு ஒளிக்கவேண்டாம். போகிறபோக்கில் போட்டுத்தள்ளுவதில் நீங்களும் புலிகளுக்கு குறைந்தவரல்ல. என் கேள்விக்குப்பதில் சொல்லவும். எனது நண்பர்கள் கூலின் மாணவர்கள், மற்றும் அவர் வேலை எடுத்துக்கொடுத்த 600 பேரில் அடங்குவர். எனக்கு அவரைத்தெரியும் ஆனால் அவர் ஒருநாளும் யாழ்பல்கலைக்கழகம் தனது உபவேந்தர் தெரிவில் சாதி/சமய/பால் வேறுபாடுகாட்டியதாக சொன்ன ஞாபகமில்லை. நீங்கள் வலிந்து அவர் மனதில் கருத்துக்களை விதைக்க முனைந்து தோற்றதனை அவர் பதில்களில் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது!

    //.. இலங்கைத் தமிழரில் பெரும்பான்மையானவர்கள் சைவ வேளாளர் என்பது மிக மோசமான பொய்…//
    ஓ..பொய்யா. அப்போ ஏன் சிறுபான்மை இனத்தை ‘சைவ-வேளாலர்’ ஒடுக்குகிறார்கள் என்ற கோசம். இலெக்சனில் ஏன் சைவர் அல்லாத, வேளாலர் அல்லாத, ஆண் அல்லாத ஒருவர் வெல்ல முடியவில்லை. யாழ்மையவாத ஆணாதிக்கம் மட்டுமல்ல அதனுடன் சேர்த்து ‘பன்றி’ (male chauvinistic PIG) எனவும் ஒன்றிருக்கிறது சேர்த்து தாக்குங்கள்!
    //… இதற்கு ஆர் புதியவனின் ‘ஊரில் எவ்விடம்?’ என்ற கட்டுரை சிறந்த எடுத்துக்காட்டு. வெளிநாட்டில் உள்ள தமிழர் இன்னொரு தமிழரைச் சந்தித்து உரையாடும் போது ஊரில் எவ்விடம் என்ற கேள்வியைக் கேட்டுக் கொள்வார்கள்….//
    எல்லாவற்றுக்கும் உட்கருத்து வைத்து ’புழுவை’ கண்டுபிடிக்கலாம் ஜெயபாலன்.

    //…கொம்பன்விழுந்தமடு என்ற வன்னிக் கிராமப் பெயரைச் சொன்னால் அதனை அவர் யாழ்ப்பாணத்திலேயே தேடுவார்…//
    அதற்குள் என்னையும் அடக்குவது உங்கள் ‘கருத்துச் சுதந்திரம்’ நான் மறுக்கமாட்டேன்!
    //உயர் கல்விகற்றவர்களில் பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு தகுதியுள்ளவர்களில் பெண்கள் இருக்கவில்லை. காரணம் 50, 60 வருடங்களின் முன்னர் பெண்கள் கல்வி என்பது அவ்வளவு இல்லை// சாந்தன்
    //….செல்வி றோஸ்மேரி சின்னையா இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னதாக பிஏ கலைப்பட்டதாரிப் படிப்பை முடித்து லண்டன் சென்று பட்டப்படிப்பின் பட்டப்படிப்பை முடித்தவர். இவரின் மாணவி –
    செல்வி திலகவதி பெரியதம்பி – வடகிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர். – இலங்கையில் கல்வித்துறையில் அதியுயர் பதவி வகித்த பெண்.
    கலாநிதி செல்வி இவாஞ்சலின் முத்தம்மா தில்லையம்பலம் – இலங்கை முழுவதிலும் விஞ்ஞானத்தில் கலாநிதிப் பட்டம்பெற்ற முதலாவது பெண். 1906ல் தனது ஆறு வயதில் கல்விகற்க ஆரம்பித்த முத்தம்மா பி.எஸ்சி. எம்.எஸ்சி பட்டங்களை இந்தியா அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பெற்றார். எம்.ஏ எம்.எஸ்சி. பிஎச்.டி பட்டங்களை அமெரிக்க கொலம்பிய பல்கலைக்கழகத்தில் பெற்றார்.
    திருமதி இரத்தினா நவரத்தினம் வட மாநில கல்விப் பணிப்பாளர் பதவியை வகித்த முதலாவது பெண். ஆங்கிலத்தில் சிறப்புப் பட்டம் (இந்தியா) இலக்கிய முதுகலைப் பட்டம் (எம்.லிற்) அண்ணாமலைப் பல்கலைக்கழகம் லண்டனில் கல்வியியலில் கலாநிதிப்பட்டம் பெற்றவர்.யாழ் பல்கலைக்கழகம் தனது 25வது வெள்ளிவிழா பட்டமளிப்பில் இவருக்கு இலக்கிய கலாநிதிப்பட்டம் அளித்தது.
    (ஆதாரம்: யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்கல்வி ஓர் ஆய்வு – வள்ளிநாயகி இராமலிங்கம்) …////

    இவர்களில் யார் யாழ்பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தது? சொல்லுங்கள் ஜெயபாலன்.

    //…..சாந்தன் 50, 60 வருடங்களுக்கு முன் பெண்கல்வி என்பது அவ்வளவு இல்லை என்கிறீர்கள் சாந்தன். ஆண்களது கல்வியும் அவ்வளவாக இருக்கவில்லை.///…
    ஒப்பீட்டளவில் அதிகம் இருந்ததா இல்லையா?
    //….ஆங்கிலேயர் காலத்தில் பெண்களின் கல்விஆர்வம் தீவிரமாக இருந்தது. ஆனால் சுதந்திரம் வழங்கப்படுவதை நோக்கிச் சென்றுகொண்டிருக்கையில் கிறிஸ்தவ அமைப்புகளின் கையில் இருந்த கல்வி நிறுவனங்கள் அரசுடமையாக யாழ்-சைவ-வேளாள-ஆண் ஆதிக்க சிந்தனை தலைதூக்கியது. பெண்களைப் பொறுத்தவரை அவர்களது வேகம் மட்டுப்படுத்தப்பட்டது. இதுவே நடந்தது. தகுதியானவர்கள் இல்லையென்பது முழுப் பூசனிக்காயை சோற்றினுள் புதைக்கும் முயற்சி. ….//
    ஜெயபாலன், அப்போ சுதந்திரம் கிடைத்தவுடன் யாழ்ப்பாண பெண்கள் பாடசாலைகள் இழுத்துமூடப்பட்டன, பெண்களுக்கு முக்காடு போட்டு வீட்டில் வைத்தனர் என்கிறீர்கள். இது எனக்குப் புதிதுதான்!

    //….யாழ்ப்பாணத்து சைவ வேளாளருக்கும் மட்டுமே அறிவு உள்ளதென்ற மமதை தான் எமது இனத்தின் சீரழிவுக்குக்காரணம். மட்டக்களப்பார் பாயொட்டிகள் பழஞ்சோறுகள் வன்னியாரை ஒரு கத்தை வைக்கோலுடன் சமாளிக்கலாம் சோனி தொப்பி பிரட்டி சிங்களவன் மொக்கன் இவைதான் யாழ்-சைவ-வேளாள-ஆண் ஆதிக்க கருத்துக்கள்….//
    ஜெயபாலன் திரு.ஹூல் சொல்லிய கருத்துகளுக்கு (மதசார்பு தனது பதவி வாக்களிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை எனக்கூறிய) பதில் அளிக்க கேட்டால் அங்கே இருந்து வெளியேறி போட்டுத்தாக்குகிறீர்கள்.
    //…சமய அடையாளம் அவரது நியமனத்திற்கு தடையாக இருந்தது என்று நான் எங்கும் சொல்லவில்லை. இவருக்கு எதிராக இவரது சமய அடையாளத்தையும் பயன்படுத்தினர் என்றே சொல்லியுள்ளேன்…//
    ஆனால் அவரே தனக்கு வாக்களிக்காதவர்கள் கூட சமயம் சாராக் காரணங்களுக்காகவே வாக்களிக்கவில்லை எனச்சொல்லி இருக்கிறார். என்ன செய்ய You tried to put words into his mouth, but no use!
    /…..ஒபாமா அமெரிக்க ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட்ட போது இவர் ஒரு ஆபிரிக்க கறுப்பினத்தவர் என்ற எதிர்ப்பிரச்சாரத்தை கருத்துச் சுதந்திரத்தின் கீழ் செய்திருக்க முடியுமா சாந்தன்? ….//
    என்னப்பா இது புதுக்கதை. அதைத்தானே பலர் செய்தனர். இன்னும் செய்து கொண்டிருக்கின்றனர். இன்னும் அவரை எதிர்க்கும் மூட்டங்கலில் கறுப்பினத்தவருக்கே உரிய இயல்புகளை வைத்து படங்களும் பேச்சுகளும் இடம்பெறுவதை யாரும் தடுக்க முடியாது! என்ன ஜெயபாலன் TeaParty Express, Glen Beck, Rush Limbaugh பற்றி அறியவில்லையா? கூகிள் பண்ணிப்பாருங்கள். அமெரிக்க கருத்துச் சுதந்திரம் பற்றி தனி தலைப்பில் வாதிப்போமே. நான் கட்டாயம் வருவேன்.
    எல்லாம் சரி திரு.கூல் அவர்களின் கருத்துகள் பற்றி நான் சொன்னதற்குப் பதிலளியுங்கள்.
    1)எத்தனை சைவ/வேளாளரல்லாத/பெண்கள் அப்பதவிக்கு விண்ணப்பித்து அதேகாரணங்களுக்காக மறுக்கப்பட்டனர்.
    2)கூல் அவர்களே ஏற்றுக்கொண்ட ‘சமயசாரா’ நிலைக்கு நீங்கள் ஏன் வலிந்து உங்கள் சிந்தனையைத் திணிக்க முயல்கிறீர்கள்.
    3)முன்னைநாள் உபவேந்தரது போதைப்பழக்கம் பற்றி ஏன் கேட்கவில்லை?
    4)பாலியல் துஷ்பிரயோகமும் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் அதன் தாக்கமும் பற்றியும் கேட்டிருக்கலாமே. திரு ஹூல் நல்ல பதில் சொல்லி இருப்பார். அவரின் மனைவிக்கு பேராதனை/கொழும்பில் நடந்த பாலியல் சேட்டைகள் பற்றிச் சொன்னவர் நிச்சயம் இதைச் சொல்வார். மேலும் இனிமேல் யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தில் மட்டும்தான் சைவவேளாள ஆணாதிக்கர்களால் இது செய்யப்படுகிறது என்கின்ற உங்கள் வலிந்த கருதிலும் உங்களுக்கு அடிதான் விழுந்திருக்கிறது!

    கீழே திரு.ஹூலின் கருத்து..
    ”..ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்”
    பொலிற்றிக்கல் கரெக்ட்னசுக்கு அல்ல

    //…ஆனால் சுதந்திரம் வழங்கப்படுவதை நோக்கிச் சென்றுகொண்டிருக்கையில் கிறிஸ்தவ அமைப்புகளின் கையில் இருந்த கல்வி நிறுவனங்கள் அரசுடமையாக யாழ்-சைவ-வேளாள-ஆண் ஆதிக்க சிந்தனை தலைதூக்கியது. பெண்களைப் பொறுத்தவரை அவர்களது வேகம் மட்டுப்படுத்தப்பட்டது…..//

    அப்போ கிறிஸ்தவராக இருந்து (மதம் மாறி) கல்விகற்றவர்கள் சுதந்திரத்தின் பின்னர் தங்கள் பழைய சைவ வேளாள கொள்கைகளை தூக்கிப்பிடித்து பெண்களை அடக்கத் தொடங்கினர் எனச் சொல்கிறீர்கள் போல் உள்ளது.

    Reply
  • Anonymous
    Anonymous

    முதலில், ”தொப்புள் கொடி உறவு”, தமிழ் இனப்பாசம் போன்றவற்றின் அடிப்படையில் “இலங்கைத் தமிழருக்கும்(புலம்பெயர்?), தமிழ்நாட்டுத் தமிழருக்கும்” உறவுகள் இல்லை. ”தேவைக்கேற்ற உறவாகத்தான் இருந்திருக்கிறதே தவிர தேவையான உறவாக இருந்ததில்லை”!. மேலும்..
    சிங்களவர்களுக்கு இருக்கும் தலைவலியே இந்த போலி “உறவுதான்”!. இலங்கைத் தமிழரது பல “உள்நாட்டுப் பிரச்சனைகள்”, போலியாக “தமிழினப் பிரச்சனையாக (சுயநலத்திற்கு)” முன்வைக்கப்படும் போது, அதற்கு, ”வினோதமான முறையில்” ஆதரவென்று “உலக செந்தமிழ்!”? என்ற தலைப்பின் கீழ் இதை “இந்த யாழ்-சைவ-வேளாள-ஆண் ஆதிக்கச் சிந்தனைக்கு இலங்கைத் தமிழர்கள் கொடுத்த விலை மிக உச்சம்” என்பதை அங்கீகரித்து, அதற்கான(அந்த விலையின்) பழியை வினோதமான முறையில் ஒரு “குறிப்பிட்ட சாரார்” மீது போடுவது தற்போது நடைபெறுகிறது.

    …அதாவது நானும் மியூசிக் (புலம்பெயர்ந்த ஒரு மில்லியன் வரையான தமிழர்களில் 90 வீதமானவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்தும் ஏனைய பாகங்களில் இருந்தும் புலம்பெயர்ந்த யாழ்-சைவ-வேளாளரே.) உங்கள் ஆள்தான், ”புலம்பெயர் நம்ம ஆட்களை”, நமக்கு ஆதரவாக இருக்கச் சொல்லுங்கள், நீங்கள் “இந்த யாழ்-சைவ-வேளாள-ஆண் ஆதிக்கச் சிந்தனைக்கு இலங்கைத் தமிழர்கள் கொடுத்த விலை மிக உச்சம்” இத்தகைய விலை கொடுத்து விட்டீர்கள், பரவாயில்லை, ”அதற்கான வக்கீல் பீஸ்” கொடுத்துவிடுங்கள், சரிகட்டிவிடலாம்!. கொலை செய்தாலே பாவமன்னிப்பு(தட்சனையுடன்)கொடுத்து சர்க்கட்டி விடுகிறோம், இது என்ன ஜூஜுப்பி!.

    Reply
  • nantha
    nantha

    பேராசிரியர் ரத்னஜீவன் கூலின் கல்வித் தராதரங்கள் அவரை துணைவேந்தராக்க தாராளமானவை. அவரை அந்தப் பதவிக்கு நியமிப்பது காலத்தின் தேவை என்றே கருதுகிறேன்.

    யாழ்ப்பாண வெள்ளாள ஆதிக்கம் என்பதை விட “வெள்ளையர்களின் கீழ் வேலை செய்து சலுகை பெற்ற பரம்பரைகள்” என்ற பிரயோகம் பொருத்தமானது. யாழ்ப்பாணத்து தமிழ் அரசியலில் முனைப்பாக இருந்தவர்கள் என்ற வகையில் கூலின் உறவினர்கள் அனைவரும் அடங்குகிறார்கள். ஆயினும் அவர்கள் “தமிழ் மொழி”யின் வளர்ச்சிக்காகவே என்பது சந்தேகமே!

    பாடசாலைகள் தேசியமயமாக்கப்பட்டதை எதிர்த்தவர்களுள் முக்கியமான பிரிவினர் “கிறிஸ்தவ/ கத்தோலிக்க” பிரிவினரே. அவர்களின் பிரச்சனை அவர்களது “ஆட்களின்” வருமானம், வேலை வாய்ப்பு என்பன போய்விட்டன என்பதே ஆகும். தமிழ் மொழி மூலமான கல்வியை ஆதரிக்க மறுத்தவர்கள் பின்னர் தமிழ் உரிமை பற்றி சவடால் அடித்தது வெறும் வெளி வேஷம்!

    1830 ஆண்டில் செய்யப்பட்ட சனத்தொகை கணிப்பீட்டின்படி இரண்டு சதவீதமான வெள்ளாளர்கள் எப்படிப் பெரும்பான்மையினராகினார் என்பது “யாழ்” கள்ள உறுதி விளையாட்டு என்பது தெளிவானது. பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள் எதோ ஒரு வகையில் தங்களை “உயர்சாதி”யாகவே காட்டிக் கொள்ளுகிறார்கள். சைமன் காசிச் செட்டியின் ஆவணத்தில் காணப்படும் “சாதிகள்” பல இன்று காணாமல் போயுள்ளன.

    போர்த்துகீசரோடு வந்த “மலையாளிகள்” யாரென்று இப்போது கண்டு பிடிக்கவே முடியவில்லை. தவிர “நீர் வளம்” இல்லாத தீவுப்பகுதிகளில் “வெள்ளாளர்” எப்படித் தோன்றினார்கள் என்பது கேள்விக்கும், ஆய்வுக்கும் உரிய விடயங்களே ஆகும்!

    எனவே கடந்த 200 வருடங்களில் யாழ்ப்பாணிகள் பல சுத்துமாத்துக்கள் செய்து தங்கள் சொந்த வரலாறுகளையே தொலைத்திருக்கிறார்கள்.

    யாழ்ப்பாணத்தில் வேளாள ஆதிக்கம் இருக்கிறதோ இல்லையோ “வெள்ளையருக்கு” துதிபாடும் கூட்டம் இன்றும் பலமாகவே உள்ளது.

    யாழ் பல்கலைக் கழகம் “உண்மைகளை” வெளிக்கொணர்ந்து “கற்பனைக் கதைகளை” முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பது எனது அவா. அது நிறைவேறுமா?

    Reply
  • thurai
    thurai

    //எத்தனை சைவவெள்ளாளரல்லாத பெண்கள் நிராகரிக்கப்பட்டனர். தயவு செய்து சொல்லவும். அவ்வாறிருக்கும் பட்சத்தைல் அவர்கள் சாதி சமய அடிப்படையில் நிராகரிக்கப்பட்ட சான்று உண்டா?//சாந்தன்

    சைவ வெள்ளாளரல்லாதா பெண்களா? சைவவெள்ளாளரல்லாதோர் ஆண்களே சாதாரண பாடசாலை தொடக்கம், உயர் வகுப்பு படிக்கும்வரை பட்ட துன்பம் சொல்லிலடங்காது. தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவர் பெயர் பெற்ர கத்தோலிக்க கல்லூரியொன்றில் அவ்ரின் திறமையை பொறுக்க முடியாமல் விசமூட்டி கொல்லப்பட்ட சம்பவமும் உண்டு.

    தாழ்த்தப்பட்ட சமூகத்தைச்சேர்ந்த பெண்கள் மேலங்கி அணியக்கூடாது என்று தடை செய்த சைவ வேளாளர் எப்படி பாடசாலையில் படிக்க விட்டிருப்பார்கள்? இதே நிலமைதான் யாழ் முஸ்லிம்களிற்கும் இருந்தது.

    இலங்கைத் தமிழரின் ஒடுக்கு முறைக்கும்,அதன் ஏற்பட்ட அழிவுகளிற்கும் சிங்களவர்களை விட முதற்காரணம் மேலாதிக சைவ வேளாளர்களே. இவர்களின் ஆதிக்கம் இப்போ யாழ்ப்பாண்த்தில் சரிந்து கொண்டு போகின்றது. இதனை எப்படியாவது காக்கவேண்டுமென்பதே நாடு கடந்த அரசும், உலகத் தமிழர் பேரவைகழும்.

    புலம் பெயர்நாடுகளிலும் தமிழினத்தை வாழும்நாட்டின் பற்ரில்லாதவர்களாக்கி, தங்களின் சுயநலஙளிற்காக தமிழின வெறியூட்டி சுயநலமடைகின்றார்கள்.

    துரை

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    நட்புடன் சாந்தன் உங்கள் சொற்சிலம்பத்திற்கு முன் தமிழர் விடுதலைக் கூட்டணியும் அவர்கள் வழிவந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பும் கூட நின்று பிடிக்க முடியாது. துரையப்பாவிற்கு இயற்கை மரணம் இல்லையென்று கூட்டணி சொல்ல தம்பி கச்சிதமாய் கொலை செய்துவிட்டார். இப்ப சம்பந்தன் ஐயாவை கேட்டால் நாங்களோ சுடச்சொன்னனாங்கள். நாங்கள் சுடச் சொன்னதற்கு ஆதாரம் கேட்கிறார்கள். சாந்தன் உங்களின் விவாதமும் அப்படித்தான் உள்ளது. இதற்கெல்லாம் போய் கூகிளில் சேர்ச் பண்ணுவதில் பயனில்லை.

    உங்களுடைய கேள்விகள் அத்தனைக்கும் தெளிவான பதில் ஏற்கனவே தரப்பட்டு உள்ளது. ஆனால் உங்களிடம் இருக்கின்ற யாழ்மையவாத-சைவ-வேளாள-ஆண் ஆதிக்கச் சிந்தனையால் அப்பதிலை ஏற்கமுடியாதுள்ளது. அதனால் உங்கள் கேள்விகளில் உள்ள சொற்களில் சிலம்பாடி எதையோ சாதித்துவிட்டதாக உங்களுக்கு நீங்களே திருப்திப்பட்டுக் கொள்கிறீர்கள். அதுவும் முடியாத பட்சத்தில் அப்படிக் கேட்டு இருக்கலாம் இப்படிக் கேட்டு இருக்கலாம் என்று அளக்கின்றீர்கள்.

    //1)எத்தனை சைவ/வேளாளரல்லாத/பெண்கள் அப்பதவிக்கு விண்ணப்பித்து அதேகாரணங்களுக்காக மறுக்கப்பட்டனர்.// சாந்தன்
    இதற்கு முன் சாந்தன் எழுதியது //மேலும் உயர் கல்விகற்றவர்களில் பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு தகுதியுள்ளவர்களில் பெண்கள் இருக்கவில்லை. //
    தகுதியான பெண்கள் இல்லை என்று சொன்ன சாந்தன் பல்டி அடித்து கேள்வியை மாற்றி உங்கள் கேள்விக்கு நான் தவறாகப் பதில் அளித்துவிட்டதாக உருட்டுகிறீர்கள் தமிழசுக் கட்சியில் இருந்து உந்த உருட்டல்களைத்தான் அரசியல் சாணக்கியம் என்று சொல்லி ரீல் விடுகின்றனர்.

    //2)கூல் அவர்களே ஏற்றுக்கொண்ட ‘சமயசாரா’ நிலைக்கு நீங்கள் ஏன் வலிந்து உங்கள் சிந்தனையைத் திணிக்க முயல்கிறீர்கள்.// சாந்தன்
    சிண்டு முடிகிற தத்துக்குட்டி விளையாட்டுக்கு நான் வரவில்லை சாந்தன். கூல் அவர்களுக்கு எதிராக அவரது மதம் பயன்படுத்தப்பட்டது. அதனை கேள்வியாக்குவது அவருக்கு என் கருத்தை திணிப்பது ஆகாது. நான் அவருக்கு கருத்தைத் திணிக்கின்ற அளவுக்கு ஆளுமையுடையவனும் அல்ல. அவரது சமய அடிப்படையில் அவருக்கு நியமனம் மறுக்கப்பட்டது என்பது எனது கேள்வியோ அல்லது குற்றச்சாட்டோ அல்ல. அது உங்கள் சொற்சிலம்பத்திற்கு வசதியாக போட்டுக்கொண்ட இன்னுமொரு உருட்டல். பிரட்டல்.
    கீழுள்ள விடயத்தை ஒரு தடவை வாசிக்கவும்
    //துரோகி என்றும் சைவக் கோவில் உள்ள பல்கலைக்கழகத்தில் எப்படி என்னை நடமாடவிட முடியும் என்றும் வேறும் கிறிஸ்தவரை தாழ்த்தி ஒரு பேப்பர் என்ற பத்திரிகையில் சிலர் ஆசிரியர் கட்டுரை எழுதினார்கள். // பேராசிரியர் ஃகூல்:

    //3)முன்னைநாள் உபவேந்தரது போதைப்பழக்கம் பற்றி ஏன் கேட்கவில்லை?// சாந்தன்
    எனது நேர்காணல் முற்றிலும் தமிழ் மக்களின் அறிவியல் ஸ்தாபனத்தை அதன் உயரிய நிலைக்கு கொண்டு செல்வது தொடர்பாகவும் அதற்குள்ள தடைகள் தொடர்பாகவுமே அமைந்தது. சில தனிநபர்களுடைய நடவடிக்கைகள் பல்கலைக்கழகத்தை வெகுவாக பாதித்துள்ளது என்பது முற்றிலும் உண்மை. ஆனால் யாழ்பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரை அவை ஸ்தாபனமயப்படுத்தப்பட்டே உள்ளது. இளம்பெண் விரிவுரையாளர்களே உப வேந்தருடைய அலுவலக அறைக்கு தனியாகச் செல்ல அஞ்சுகின்ற ஒரு பல்கலைக்கழகமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உள்ளது. குறிப்பிட்ட உப வேந்தர் பற்றி எழுதுவதானால் கேள்வியைத் தொடுப்பதானால் முறையான ஆதாரங்கள் வேண்டும். ஆகவே தனிநபர் பற்றிய விடயங்களை முழுமையாக நீக்கி உள்ளேன்.

    //4)பாலியல் துஷ்பிரயோகமும் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் அதன் தாக்கமும் பற்றியும் கேட்டிருக்கலாமே.// சாந்தன்
    அதற்கான தேவையும் அவசியமும் எனக்கு இருக்கவில்லை. அமெரிக்க பல்கலைக்கழகத்தில் சீனப் பல்கலைக்கழகங்களில் ஜப்பான் பல்கலைக்கழகங்களில் பாலியல் துஸ்பிரயோகம் பற்றிய சீரியஸான ஆய்வை பெண்ணிலை வாதிகளிடமே விட்டுவிடுவோம். உங்களுக்கு ஆர்வம் இருந்தால் ஆய்வை மேற்கொள்ளுங்கள். தேசம்நெற் இல் அதனை பிரசுரிக்கலாம்.

    //ஓ..பொய்யா. அப்போ ஏன் சிறுபான்மை இனத்தை ‘சைவ-வேளாலர்’ ஒடுக்குகிறார்கள் என்ற கோசம். இலெக்சனில் ஏன் சைவர் அல்லாத, வேளாலர் அல்லாத, ஆண் அல்லாத ஒருவர் வெல்ல முடியவில்லை.// சாந்தன்
    என்னே அற்புதமான பதில். இலங்கைப் பாராளுமன்றத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களில் எத்தனை பேர் பெண்கள் என்று சொல்ல முடியுமா சாந்தன். யாழ்-சைவவேளாள-ஆண் ஆதிக்கத்தின் ஸ்தாபனமான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 13 பாராளுமன்ற உறுப்பினர்களில் எத்தனைபேர் பெண்கள். ஐக்கிய தேசியக்கட்சி மட்டுமே ஒரே ஒரு பெண் பிரதிநிதியை அவரது கணவர் இறந்ததால் பாராளுமன்றம் அனுப்பி உள்ளது.

    சிவமும் சக்தியும் பாதி பாதி பெண்ணை தாயென்று மதிக்கிறோம் றீல் எல்லாம் இப்படித்தான். ஏன் சாந்தன் வடக்கு கிழக்கில் இருந்த தமிழ் பெண்கள் எல்லாம் வடக்கு கிழக்கை விட்டு வெளியேறிவிட்டார்களோ? அல்லது அத்தனை பெண்களையுமே இலங்கை இராணுவம் கொன்று குவித்துவிட்டதோ? சமையல் கட்டுமுதல் பாராளுமன்றம் வரை ஆண்கள் மட்டும் தான் வாழ்கிறார்களா? யாரும் சொல்லவே இல்லை.

    சாந்தன் கடைசி குறிப்பை சரியாகவே விளங்கிக் கொண்டு இருக்கிறீர்கள். //அப்போ கிறிஸ்தவராக இருந்து (மதம் மாறி) கல்விகற்றவர்கள் சுதந்திரத்தின் பின்னர் தங்கள் பழைய சைவ வேளாள கொள்கைகளை தூக்கிப்பிடித்து பெண்களை அடக்கத் தொடங்கினர் எனச் சொல்கிறீர்கள் போல் உள்ளது.//
    உண்மையான விடயம்.

    த ஜெயபாலன்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //..தகுதியான பெண்கள் இல்லை என்று சொன்ன சாந்தன் பல்டி அடித்து கேள்வியை மாற்றி உங்கள் கேள்விக்கு நான் தவறாகப் பதில் அளித்துவிட்டதாக உருட்டுகிறீர்கள் தமிழசுக் கட்சியில் இருந்து உந்த உருட்டல்களைத்தான் அரசியல் சாணக்கியம் என்று சொல்லி ரீல் விடுகின்றனர். ..//
    ஜெயபாலன் கேள்வி இன்னும் உண்மைதானே? இதே ஹூல் உபவேந்தராக இருக்குமிடத்து விண்ணப்பிக்காத ஒருவரை வேலைகு எடுப்பாரா? அத்துடன் நீங்கள் சொன்ன பெண்கள் வாழ்ந்த போது இருந்த பல்கலைக்கழகங்களுக்காவது விண்னப்பித்தைருந்தனரா?

    //….எனது நேர்காணல் முற்றிலும் தமிழ் மக்களின் அறிவியல் ஸ்தாபனத்தை அதன் உயரிய நிலைக்கு கொண்டு செல்வது தொடர்பாகவும் அதற்குள்ள தடைகள் தொடர்பாகவுமே அமைந்தது…./
    அப்போ ஏன் முன்னைய கட்டுரையில் நீங்கள் போதைபழக்கம் பற்றி ச்சொன்னீர்கள். அது யாழ் பல்கலைக்கழகத்தை ‘அறிவியல் ஸ்தாபன’ ஆகியூமற்றுக்குள் வரவில்லையா?

    //…குறிப்பிட்ட உப வேந்தர் பற்றி எழுதுவதானால் கேள்வியைத் தொடுப்பதானால் முறையான ஆதாரங்கள் வேண்டும். ஆகவே தனிநபர் பற்றிய விடயங்களை முழுமையாக நீக்கி உள்ளேன்…//
    உங்களிடம் ஆதாரம் இல்லையா? அப்போ “இதற்கு மற்றுமொரு காரணம் போதைப் பழக்கத்திற்கு அடிமையான பேராசிரியர் வித்தியானந்தனின் சில நடவடிக்கைகள்” (http://thesamnet.co.uk/?p=20929) என நீங்கள் எழுதவில்லையா? //

    //…சாந்தன் கடைசி குறிப்பை சரியாகவே விளங்கிக் கொண்டு இருக்கிறீர்கள். //அப்போ கிறிஸ்தவராக இருந்து (மதம் மாறி) கல்விகற்றவர்கள் சுதந்திரத்தின் பின்னர் தங்கள் பழைய சைவ வேளாள கொள்கைகளை தூக்கிப்பிடித்து பெண்களை அடக்கத் தொடங்கினர் எனச் சொல்கிறீர்கள் போல் உள்ளது.//
    உண்மையான விடயம்….//
    அப்போ யாழ்சைவ வேளாள ஆணாதிக்க காரர் சொல்வது போல் திரு.கூல் அவர்களைப்போன்ற மதம் மாறியவர்கள் நந்தா சொல்வதுபோல் (nantha on July 23, 2010 7:23 am ) “யாழ்ப்பாண வெள்ளாள ஆதிக்கம் என்பதை விட “வெள்ளையர்களின் கீழ் வேலை செய்து சலுகை பெற்ற பரம்பரைகள்” என்ற பிரயோகம் பொருத்தமானது. யாழ்ப்பாணத்து தமிழ் அரசியலில் முனைப்பாக இருந்தவர்கள் என்ற வகையில் கூலின் உறவினர்கள் அனைவரும் அடங்குகிறார்கள். ஆயினும் அவர்கள் “தமிழ் மொழி”யின் வளர்ச்சிக்காகவே என்பது சந்தேகமே!…” என்கிறீர்களா?

    ஜெயபாலன் நீங்கள் இன்னும் என்கேள்வியான ‘மதம்சாரா’ காரணங்களுக்காக வாக்களிக்காத பேரவை உறுப்பினர்கள் என திரு ஹூல் சொல்லியும் ஏன் மதத்தை இழுத்தீர்கள் என்பதற்கோ அன்றி விண்னப்பித்து நிராகரிக்கப்பட்ட பெண்கள் -பேராதனை/கொழும்பு பல்கலைக்கழகம் என்றால் கூட பரவாயில்லை- சொல்லும்படி கேட்டேனே? சொல்லுங்கள்.

    Reply
  • Suppan
    Suppan

    K. Premkumar, Dean, Agriculture, EUSL after the Tsunami said that “the coastal community is only a very small in Batticaloa and, even if they can not revive their marine fishing livelihood, the farmers can farm fish in irrigation tanks and paddy fields. The fisher folk should be taught to lead Inland lives”.

    What is the logic behind this statement? Has Premkumar been socially responsible? Can he be holding the chair of the Dean?

    Prominent people like Sitralega Mounaguru of Eastern origins have been propagandizing for “Batticalonianism” similar to “Yalpaniyam”. They have been using the negative elements/strategies projected by the ‘Jaffna Hindu Vellala Males’ for ensuirng power and control within the EUSL.

    The truth is that no body really cares for the society. “Batticalonianism” is also a mask or a strategy to wield control and manipulate the system for personal benefits within the EUSL system.

    P. Jeyakumar a typical example for ‘Jaffna Hindu Vellala Males’ exercised, supreme power and control in the EUSL. He was so powerful, even the vice-chancellor could not question him if he did not turn up for work at Vantharumoolai for weeks and weeks. Jeyakumar’s MPhil was obtained in a similar manner comparable to S. Kanaganathan. Now Jeyakumar is in Australia – trying to finish his so called PhD. The PhD opportunity was seized by Jeyakumar after completely spoiled/crushed the opportunities of youngster who were to be awarded with the opportunities.

    Jeyakumar even though a typical ‘Jaffna Hindu Vellala Male’ was never affected by the group campaigning for “Batticalonianism”. They had inside agreements. What they needed was complete control of the system for their personal benefits!

    Similar case to Jeyakumar is currently being taken up by Vathani Devadasan, Dean of the Faculty of Science, EUSL. She is an excellent example of how an unethical person can control a faculty. She has also applied for her Associate Professorship, despite having a ambiguous MPhil. Devadasan is notorious for her annoying arrogant behavior. She continoulsy denies academic freedom and has no idea about ‘free and independent creativity and knowledge”.

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    இந்நேர்காணலில் பேராசிரியர் ஃகூல்: குறிப்பிடும் ‘‘எல்லாம் அல்லது பூச்சியம்’’ என்ற கொள்கை எம்மை கை விட்டுள்ளது. 1987, 2000, 2002 – 4 ஆகிய ஆண்டுகளில் வந்த எல்லா வாய்ப்புகளையும் இழந்துவிட்டோம். எமது தலைமைகள் மந்திரி பதவியை எடுத்தாலே மக்களுக்கு உதவுவதற்கு பல வாய்ப்புகள் வரும்.” என்ற கருத்து தொடர்பாகவும் கருத்தாளர்கள் தம் கருத்துக்களைப் பதிவு செய்வது பயனுள்ளதாய் இருக்கும். இதற்கு போராசிரியர் ஃகூல்: 1974ல் மாட்டுக் கொட்டிலாகப் பார்க்கப்பட்ட பல்கலைக்கழகம் 1979ல் இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கு ஒப்பாகியது என்ற உதாரணத்தையும் வழங்கி இருக்கிறார்.

    சுப்பன் புதிய ஒரு விடயத்தை தொட்டு இருக்கின்றார். விரிவுரைகளுக்கு ஆசிரியர்கள் செல்லாமல் இருப்பது பற்றி. அது பற்றி நான் அறிந்தவரை விரிவுரையாளர்கள் வகுப்பெடுக்கவில்லை என்றால் அவர்களை கட்டுப்படுத்துவதற்கு விதிமுறைகள் இல்லை என்று அறிந்தேன். இது பற்றி பேராசிரியர் கூல் அவர்களும் சுட்டிக்காட்டி உள்ளார். ராரட்டை பல்கலைக்கழகத்திற்கு இளம் விரிவுரையாளர்கள் செவ்வாய் வந்து வியாழன் ஊருக்குப் போய்விடுவார்களாம். அவர்கள் 3 நாட்கள் மட்டுமே விரிவுரைக்கு சமூகமளிக்கின்றனர். இது போல் கிளிநாச்சியில் பொறியியல் பீடம் அமைக்கப்பட்டாலும் இந்நிலை ஏற்படலாம் என பேராசிரியர் கூல் சுட்டிக்காட்டி உள்ளார்.

    பெரும்பாலும் பிற மாவட்டங்களில் (குறிப்பாக மலையகம் மட்டக்களப்பு) கற்பிக்கின்ற யாழ் ஆசிரியர்கள் செவாய் சென்று வியாழன் ஊர் திரும்புவது வழமை. ஒன்று அவர்கள் தங்கள் வீட்டு வேலைகளைக் கவனிக்க அல்லது தனியார் கல்வி நிறுவனங்களில் கற்பிக்க.

    நட்புடன் சாந்தன் இது ஒரு விவாதக் களம். உங்கள் கேள்விக்கு இருமுறை பதில் அளிக்கப்பட்டு உள்ளது. உங்களுக்கான பதில் ஏற்கனவே தரப்பட்டு உள்ளது. அதனை ஏற்பதும் நிராகரிப்பதும் உங்கள் விருப்பம்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //..எமது தலைமைகள் மந்திரி பதவியை எடுத்தாலே மக்களுக்கு உதவுவதற்கு பல வாய்ப்புகள் வரும்.” ..//
    இக்கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஆனானப்பட்ட டக்ளஸ் தேவாநந்தா கூட அகதிகள் முகாமுக்குச் செல்ல முடியாது. அதிகம் ஏன் சொந்தக்கட்சிச் சின்னத்தில் இலெக்சனில் நிற்கமுடியாமல் இருக்கிறார்! மந்திரிப்பதவி எடுப்பதிலும் விட நடிகை ஆகினால் நல்ல உதவிகள் கிடைக்கலாம்!

    //….ராரட்டை பல்கலைக்கழகத்திற்கு இளம் விரிவுரையாளர்கள் செவ்வாய் வந்து வியாழன் ஊருக்குப் போய்விடுவார்களாம். அவர்கள் 3 நாட்கள் மட்டுமே விரிவுரைக்கு சமூகமளிக்கின்றனர்…//
    விரிவுரையாளர்களாக நியமனம் பெறும்போதே அவர்கள் வாரத்தில் அதிக நாட்கள் பல்கலைக்கழகத்தில் இருக்க வேண்டும் என கேட்கப்படலாம். அல்லது அவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப்படலாம். நான் கற்ற கல்லூரியில் விடுதி வசதி இல்லை. அதனால் விரிவுரையாளர்களை தமது வகுப்பு நேரம் தவிர்ந்த நேரங்களில் காண்பது அரிது. அதனால் கல்லூரியில் ஆராய்ச்சி செய்யும் மானவர்களுக்கு கடினம். எனவே இப்போது விடுதி கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

    //…இது போல் கிளிநாச்சியில் பொறியியல் பீடம் அமைக்கப்பட்டாலும் இந்நிலை ஏற்படலாம் என பேராசிரியர் கூல் சுட்டிக்காட்டி உள்ளார்…..//
    அதனால் யாழ்ப்பாணத்தில் அமைக்கலாம் பின்னர் அதனையே ‘யாழ்மையவாதம்’ எனவும் வசதி கருதிச் சொல்லவும் வாய்ப்பாக இருக்கும் தானே. என்னைப்பொறுத்தவரை பொறியியல் பீடம் கிளிநொச்சிக்கு கொண்டு செல்லப்படுவது உசிதமானது.

    Reply
  • பல்லி
    பல்லி

    அட பாவிகளா கல்வி என்பதே பகுத்தறிவுதானே, ஆனால் கல்வியின் மகுடமான பல்கலைகளகத்திலுமா புடுங்குபாடு; சாந்தனின் வாதம் ஒரு தெளிவு இல்லாவிட்டாலும் அதில் பல உன்மைகள் இருப்பதை மறுப்பதுக்கில்லை; 1980களுக்கு முன்பு கல்விகூட சில சமூகத்துக்கு மட்டுமே தலை சாய்த்தது என்பது மறுக்கமுடியாத உன்மை; அது பின்பும் கூட சமூக அந்தஸ்த்து பற்றி ஆளுக்காள் பேசியதால் கல்வி பற்றி கவனிக்க தவறியதும் உன்மைதான்; கல்வி சார்ந்த போராட்டம் என்றாலும் சரி சமூக போராட்டமானாலும் சரி எதுவுமே மக்கள் சார்ந்து இல்லாமல் போராட்ட நாயகர்கள் சார்ந்து இருந்ததால் அனைத்தும் தோல்வி கண்டன; பிரபாகரனுக்கு ஒரு பாலா அண்ணன் போல் அனைத்து சமூகத்திலும் பல கல்வியாளர்கள் முட்டாள்தனமான சமூக வியாபாரிகளுக்கு உறுதுணையாகவே இருந்துள்ளனர் என்பது கடந்தகால அனுபவம், உதாரனத்துக்கு ரயாகரனை எடுத்து கொள்ளலாம் ; இப்படி அரசியல் பேசுவதுக்கோ அல்லது சமூகம் பற்றி சிந்திகவோ எதுக்கு பல்கலைகளகம்?? எனக்கும் சிலவிரிவுரையாளர்களை தெரியும்; ஆனால் அவர்கள் பற்றி பேசும் அளவுக்கு அவர்கள் சமூக சிந்தனையாளர்கள் அல்ல;கல்வி பற்றிபேசும் போது வரதராஜபெருமாள் பற்றி கண்டிப்பாக பேசலாம்; ஆனால் அவரது அரசியல் சமூக சிந்தனை எப்படி உள்ளது; எட்டாம் வகுப்பே முடிக்காத ஒருவர் எமது இனத்தையே நாசம் செய்துவிட்டார் எனில் எமது கல்வியாளர்கள் தூங்கி விட்டார்கள் என்பதே என் கருத்து;அதில் உபவேந்தரும் அடங்குவார்;

    Reply
  • Nirthanan
    Nirthanan

    நானும் சாந்தனின் வாதத்துடன் ஒத்து கொள்கிறேன். கூல் அவர்கள் பேரேதெனியா பல்கலை கழகத்துக்கு துணை வேந்தராக அவரின் தகுதிகளையும், பட்டங்களையும் வைத்து நேர்மையாக வரட்டும், பின்பு யாழ் பழ்கலை கழகத்தை பற்றி யோசிக்கட்டும்.

    Reply
  • Aaivu
    Aaivu

    Vantharumoolai on July 24, 2010 6:47 am quoted a phenomena as follows

    “Even the eastern Tamil’s try to fit into the model of the northern (Jaffna) ‘high caste hindu vellala males’, and try to give their own improvisation to their persona. All this is done to control the system, for personal benefits.”

    It may be the social changes, i.e., switching to the capitalized society from feudal society, not in the original form but some kind of transformations. Similarly, the so called Jaffna people try to fit into the model of Colombo or Western. But it may not amount to be a positive change in their livelihood.

    I hope that these kind of phenomena should be understood in different perspective and further research is needed.

    This is my humble request.

    Reply
  • Suppan
    Suppan

    I wish point out a fact that the religion was used against to Prof. Ratnajevan Hoole in order to prevent from assuming the Office of the Vice-Chancellor, University of Jaffna.

    But, in my opinion the religion was used as an instrument at that time because there were other hidden reasons.

    1. At that time Prof Hoole was in the UGC and there were some criticism against to Hoole regarding his action in the UGC.

    2. It was said that Prof Hoole was an close associate of Late Mr. Laksman Kathirkamar.

    3. Prof Hoole political stand is the main reason.

    3. During the period Prof. R.Kumaravadivel was considered as a best candidate for the position. Since, he served for more than 30 years there.

    Prof. R.Kumaravadivel could have been appointed for the period of 2003-2006 but for the political reasons (over the back door) S.Mohanthas was appointed. Since, everybody know that he was an incapable person for that position. Again the same methodology was followed, i.e., Hoole was on the 3rd rank as it was for Mohanathas.

    As everybody know that it was not the procedure followed in previous appointment. Please kindly review the situation in Prof. Vithiyananthan case in the previous article.

    So that, the University Community was aggressive against to this appointment. But now the situation is entirely different.

    Reply
  • Suppan
    Suppan

    “பேரேதெனியா பல்கலை கழகத்துக்கு துணை வேந்தராக அவரின் தகுதிகளையும், பட்டங்களையும் வைத்து நேர்மையாக வரட்டும், பின்பு யாழ் பழ்கலை கழகத்தை பற்றி யோசிக்கட்டும்.”

    Please kindly note that the appointment of a Vice-Chancellor to University is depend on two factors, however, all together politics not by merit.

    1. The council should elect the person as a candidate in one of three. There is a little bit of politics as an example during the period of Vithiyananthan this kind of politics played by our TULF, in order to retain him on the Chair.

    2. The second one is open. Now days our so called minister Devananda is the deciding factor. That is the reason Mohanthas and Shnmugalingan were apponted to the Chair. Clearly both of them were not appointed by their merit in academic or administrative norm.

    Apart from the above, both of them were appointed to the position Senior Lecturer and Lecturer by the administrative irregularities not by their merits and similarly their professorship were also granted by Balasuntharmpillai in the same methodology.

    That is the reason, Jeyapalan says that the irregularities are Institutionalized.

    Reply
  • Suppan
    Suppan

    It is surprise to read the fact that Balasuntharmpillai did not publish not even a single publication in any journal, but he was appointed to the position of professor and then he was granted with professor emeritus. How is it possible?

    In my opinion those who were appointed to the position of professor do have a strong contribution in research in their respective field. In other words the do have some PROMINENT RESULTS. But, these people do not have even a single international refereed publication in their possession.

    Further, anybody can publish in JSA or in some other Universities’ Annual Research Sessions (ARS). The fact is that ARS committees (the respective University) do not validate their paper with their findings rather they validate the person. Now this is a controversial issue in Sri Lankan Universities. Now these ARS proceedings has been referred as House Journals by the Senior Academics. Since, these House Journals do not contain any valuable results rather it is a kind of (specifically a vehicle for) plagiarism.

    Reply
  • Information
    Information

    நிர்த்தனன்//“பேரேதெனியா பல்கலை கழகத்துக்கு துணை வேந்தராக அவரின் தகுதிகளையும் பட்டங்களையும் வைத்து நேர்மையாக வரட்டும் பின்பு யாழ் பழ்கலை கழகத்தை பற்றி யோசிக்கட்டும்.”//

    CURRICULUM VITAE—SUMMARY

    S. RATNAJEEVAN H. HOOLE

    Rensselaer Polytechnic Institute, 275 Windsor Street, Hartford, CT 06120 (since May 2008)

    Qualifications: D.Sc. (Eng.) London, Ph.D. Carnegie Mellon, IEEE Fellow, Chartered Engineer

    Present Position: Professor of Engineering and Science, Rensselaer;
    IIE Scholar Rescue Fund Fellow, Institute. of International Education, UN Plaza, NY
    10017.
    Member, Lecture Series Panel, Scholars at Risk Network, NY

    Experience:
    Academe: 27 years; Full Prof. from 1992; 12 years at Harvey Mudd College, CA (1987-99); 5 at Drexel
    University, Philadelphia, PA (1984-87; 2006-8). University of Peradeniya (1999-)

    Administration: University Grants Commission Member, Vice Chancellor, Department Head,
    Accreditation Body Member in Sri Lanka

    Research: Approx. 1980s/90s $ 1 million in outside grants. Also see Publications

    Teaching: Computation, Power, Computer Science, Electromagnetics, Telecommunications, Systems,
    Engineering Ethics, Political Economy of South Asia

    Institution Building: Individually: New Computer Science Program, New M.S. in Magnetics, First
    web-course, university EMIS and campus-wide LAN in Sri Lanka. Collectively on 7-member
    University Grants Commission: Two new Universities, New IT Faculty, New Engineering Faculty,
    New Medical Faculty

    International: twenty years in the US, Ten years in Sri Lanka, 3 years in Nigeria, 2 years in Singapore,
    a year each in Canada and the UK, a Summer in France

    Industrial: Two years in the full-time consulting industry, mostly in the US. Continuing from
    academe. Managed the West Coast operations of MAGSOFT Corp. Developed and maintained a
    commercial Finite Element Analysis Package for PRUTEC (Prudential Insurance).

    Professional: Editor-in-Chief: Int. J. of Electronic Networks, Devices and Fields. IEEE: CEFC Conf.
    General Chairman, Advisory Committee Chairman, IEEMagnetics Society Local Chairman, Three
    Special Issues Editor for Transactions; Inst. of Eng. Sri Lanka: Editor

    Publications: Over 100 journal papers (83 in ISI Web of Science). Several conference articles. 448 listings
    in Google Scholar. Four books and several book chapters (besides books from the social sciences)

    References: (Sri Lankan references: On request)
    * Dr. M. V. K. Chari,
    IEEE Fellow, IEEE Nikola Tesla Medallist

    * Professor Satish Udpa, Fellow IEEE
    Dean, College of Engineering

    * Prof. Shep Salon,

    * Professor Samuel B. Tanenbaum
    Dean, 1975-1993,
    Department of Engineering
    Harvey Mudd College, Claremont, Ca 91711.

    Reply
  • தமிழ்வாதம்
    தமிழ்வாதம்

    ஒரே இனம்,ஒரே மதம் என்பற்காக Don Stephen, Dudley, Solomon, Richard எல்லோரும் பவுத்த சிங்களத்தை தூக்கி நிறுத்திய போது, தன் மதத்தாரைப் பற்றி கேள்வி எழுப்பாத கூல், தமிழர்களுக்கான அகமுரண்பாடுகளை மீண்டும் வளர்க்க, முன்பு வெள்ளைக்காரனுக்கு கங்காணியாக இருந்த பரம்பரையிலிருந்து மாறி, இப்போது சிங்கள பவுத்தத்தின் கங்காணியாக வருகிறார்.

    இந்தப் பரமார்த்த குருவிற்காகாவா ஒரு பல்கலைக்கழகம் பள்ளிக் கூடமாக்கப்பட்டது?

    Reply
  • Nadchathiran chevinthian.
    Nadchathiran chevinthian.

    Prof. Ratnajeevan Hoole is the man for the job. Following is a fine introduction to the man from his book ” The exile returned: A self portrait of the Tamil Vellahlahs of Jaffna, Sri Lanka.

    “S.Ratnajeevan H. Hoole is a Professor of Engineering and Adjunct Professor of the Humanities and social sciences at Harvey Mudd College, California, where he periodically teaches a course on South Asia. He has contributed articles on Sri Lanka to the opinion columns of the Los Angeles Times, The Claremont Courier, and other news papers,Periodicals and peer-reviewed journals.
    For his technical work, Mr.Hoole has been bestowed some of the highest academic honours in The British and American Systems. He was THE FIRST ENGINEER FROM THE UNIVERSITY OF CEYLON OR ITS SUCCESSORS TO BE AWARDED THE D.Sc(eng.)DEGREE THE HIGHER DOCTORATE, BY THE UNIVERSITY OF LONDON, and to be invited to be a Fellow of the Institution of Electrical and Electronic Engineers, USA.
    Mr.Hoole and his wife Dushyanthi have three daughters and a son.”

    Elite Family members like Jawarkarlal and Mothilal Nehrus in India and Jose Ramos Horta in East Timor have done impeccable services to their countries. Likiewise Hoole a member of Jaffna elite, as a vice chancellor of Jaffna uni will make an exceptional contribution to the society. His Brother Rajan Hoole has already done his best as a human rights activist.( It appears still a lot of people confuse Prof. Ratnajeevan Hoole with his UTHR(J) brother Rajan Hoole. At one time even the LTTE intelligence dept had the confusion)

    -Nadchathran chev-inthian.

    Reply
  • Nirthanan
    Nirthanan

    திருப்பியும் சொல்கிறேன், கூல் அவர்கள் பேரேதெனியா பல்கலை கழகத்துக்கு துணை வேந்தராக அவரின் தகுதிகளையும், பட்டங்களையும் வைத்து நேர்மையாக வரட்டும், பின்பு யாழ் பழ்கலை கழகத்தை பற்றி யோசிக்கட்டும். இந்த CV பிரபாகரனுக்கும், நிறைய பேருக்கும் செய்யலாம்.

    கந்தசாமி கேட்டது போல்.. //தமிழ் அரசியலில் இயங்கிய அமெரிக்க தமிழ் நண்பர்களை சகிக்க முடியாத நிலையேற்பட்டது//
    அப்ப எப்படி யாழ் பல்கலைகழகத்தை சகித்து கொள்ள போகிறீர்கள்? இதுவும் உங்களுக்கு புளித்து போக நிறைய வாய்ப்புகள் உண்டு. இதுக்கு என்ன பதில் யாழ் பழ்கலை கழகத்துக்கு துணை வேந்தராக வர முதல்?

    Reply
  • Kandeepan
    Kandeepan

    //ஹூல் என்கின்ற, இந்தப் பரமார்த்த குருவிற்காகாவா ஒரு பல்கலைக்கழகம் பள்ளிக் கூடமாக்கப்பட்டது?// (posted by தமிழ்வாதம் on July 25, 2010 8:56 pm )

    Well, well, well! Can the present or the previous vice-chancellor surpass the qualifications of Professor Hoole (refer facts submitted by ‘Information’ on July 25, 2010 3:07 pm) ? If they can do so, then they can consider Prof. Hoole to be a பரமார்த்த குரு!

    It is obvious that all the unqualified, unethically inclined பரமார்த்த குரு like people trying to keep their chairs for their personal benefits are afraid that they will have no stake or profit if someone like Prof. Hoole walks into the system.

    This is an example of the list of people who are strong candidates for the ‘பரமார்த்த குரு award’:

    1. Prof. Kandasamy who has no vison or mission or any purpose. All he wants is power and his share of the cake! (quote: //கந்தசாமியார் தமிழில் கவிதையெழுதுவாரா? யாழ் பல்கலை தொடர்பாக இற்றை வரை அவர் ஏதாவது ஆக்கபூர்வமான சிந்தனைகளை எடுத்தியம்பியுள்ளாரா? அவர் ஒரு பேராசிரியர் என்கின்ற வகையில் யாழ் பல்கலையில் கட்டமைப்புச்சார்ந்தும், கொள்கை சார்ந்தும் செய்த முன்னேற்றங்கள் தான் யாதோ?//)
    2. The unethically motivated Mohandas (who has been described as a ‘permanent headache to the Tamil universities’)
    3.S. Rajadurai Associate Professor, now Retd. from Faculty of Agriculture and is a well known பரமார்த்த குரு!
    4. Associate Prof. Ilangkumaran, who got his PhD by finding out the ground breaking truth which is: Poor People getting Samurdhi grants are financially well-off than poor people who are not receiving it! This seemingly is the biggest joke that has happened in the history of statistics as a research discipline.

    The list for probable strong candidates for the ‘பரமார்த்த குரு award’is endless. It is upto the forum to explore the other possibilities for the ‘பரமார்த்த குரு award’!

    I think that everyone should stop arguing over strengths and weaknesses of individuals. It is about time that the academics of the University of Jaffna started to think about the community and social welfare.

    Reply
  • Vantharumoolai
    Vantharumoolai

    Associate Professor Selvarajah at the Eastern University can also be considered for the ‘பரமார்த்த குரு award’! This man thinks that getting a professorship is as simple as buying a pound of bread at the bakery.

    Reply
  • nantha
    nantha

    என்னமோ பேராதனைப் பல்கலைக் கழகத்துக்கு துணை வேந்தராக வந்தால்த்தான் யாழ் பல்கலை கழகத்துக்கு துணை வேந்தராக வர முடியும் என்று சிலர் பாமரத்தனமாக கூறுகிறார்கள். இது என்ன கூத்து என்று யாருக்காவது புரிகிறதா? யாழ் பல்கலைக் கழக துணை வேந்தர்கள் எல்லோரும் பேராதனை பல்கலைக் கழக துணை வேந்தர்களாக இருந்தார்களா என்று “விஷயம்” தெரிந்தவர்கள் சொன்னால் நல்லது.

    படிப்பறிவில்லாத புலிக் கும்பல்களின் காடைத்தனங்களின் கோட்டையாக யாழ் பல்கலைக் கழகம் இருக்க வேண்டும் என்றும் குதிரை கஜேந்திரன் போன்றவர்கள் அங்கு “அரச” செலவில் உண்டு உறங்க வேண்டும் என்றும் பொங்கு தமிழ் கணேசலிங்கம் போன்றவர்கள் ஆட்சி செலுத்தினாலே தமிழர்கள் கடைத்தேறுவார்கள் என்றும் இப்போதும் சிலர் நம்புவது தெரிகிறது.

    தமிழர்கள் கல்வி பற்றி அதிகம் கதைப்பது வழக்கம். ஆனால் படிப்பறிவில்லாதவர்கள் “அந்நியர்களின்” துவக்குகளை ஏந்திய பொழுது “தலைவா” என்று அவர்களின் காலடிகளில் விழுந்தவர்கள் தமிழர்களின் “கல்வி” பற்றி கதைப்பது வேடிக்கையான விடயம்.

    ஹூல் கிறிஸ்தவன் என்று கூறும் புலி வால்கள், புலிகள் கத்தோலிக்க பாதிரிகளின் அடியாட்கள் என்பதைக் கண்டு பிடிக்கவில்லையோ? புலிகள் எட்டு இந்துக் குருமாரைக் கொலை செய்தபோது கதைக்காத இந்த “சைவ” செம்மல்கள் இப்போது ஹூல் பற்றி கதைப்பது படு சோகம்!

    Reply
  • Vantharumoolai
    Vantharumoolai

    //என்னமோ பேராதனைப் பல்கலைக் கழகத்துக்கு துணை வேந்தராக வந்தால்த்தான் யாழ் பல்கலை கழகத்துக்கு துணை வேந்தராக வர முடியும் என்று சிலர் பாமரத்தனமாக கூறுகிறார்கள். இது என்ன கூத்து என்று யாருக்காவது புரிகிறதா? யாழ் பல்கலைக் கழக துணை வேந்தர்கள் எல்லோரும் பேராதனை பல்கலைக் கழக துணை வேந்தர்களாக இருந்தார்களா என்று “விஷயம்” தெரிந்தவர்கள் சொன்னால் நல்லது.// (Quoted by Nantha on July 26, 2010 8:50 pm)

    All Jaffna University Vice Chancellors have super powers given to them by the பரமார்த்த குரு! These people are capable of becoming GOD the almighty as well. At present, Shanmugalingan who has 12 hands and six faces and uses a peacock as his vehicle is ruling the Jaffna University!

    Reply
  • Suppan
    Suppan

    With the scheme of recruitment (before November 2009) for professors most of the Arts Faculty பரமார்த்த குருகள் became professors. Now these பரமார்த்த குருகள் act like a shield to Shanmugalingan. So that, I don’t know whether the climate would be conducive for Prof. Hoole if he is appointed to the position of Vice Chancellor in future. Since, these பரமார்த்த குருகள் would make trouble as it was during the period of Prof. Kumaravadivel at the office of the Vice Chancellor. Also, owing to this situation in the council Prof. Kumaravadivel given-up his fight with Shanmugalingan. As it was mentioned earlier Prof. Kumaravadivel always bound to law and ethics, but these பரமார்த்த குருகள் never bind to anything. On the whole what I say situation is grave danger rather than Mulivaikal.

    What I wish to summarize here is that the University has been demolished to the ground (academically) by Balasuntharampillai and by the successors (except Prof Kumaravadivel).

    I wish to point out that these are the facts without any bias.

    Reply
  • Yalpanan
    Yalpanan

    //What I wish to summarize here is that the University has been demolished to the ground (academically) by Balasuntharampillai and by the successors (except Prof Kumaravadivel).// QUOTED by Suppan.

    I think it is high time that this forum explored the elements behind the reasons as to why Prof. Kumaravadivel had to give up his ethically justifiable standing.

    If we can understand the dynamics behind the case that might help the forum to understand the ‘threats’ a new administrator like Prof. Hoole might face in this university system.

    Reply
  • K. Rushangan
    K. Rushangan

    ஜெயபாலனுக்கு முதற்கண் எனது நன்றிகள். பேராசிரியர் கூலின் அறிவியல் புலமைக்கு வணக்கங்கள்.

    பல்கலைக்கழகம் ஒரு அறிவியல்கூடமாக இருக்கவேண்டும். அது மக்களின் கல்விப் பொக்கிஷமாக இருக்கவேண்டும். சமுதாயத்துக்கு வழிகாட்டும் அறிவியல்கூடமாக இருக்கவேண்டும்.

    இந்தத் தராதரங்கள் அனைத்தையும் யாழ் பல்கலைக்கழகம் இழந்துவிட்டது. அது புத்திஜீவிகள் எனத் தம்மைத்தாமே நாமகரணம் சூட்டிக்கொண்டுள்ள ஒரு சில தனிமனிதர்களின் தர்பாராகியுள்ளது. அரைகுறைகளின் இந்தச் சாம்ராஜ்யத்தில் எங்கே புத்தியுள்ளவன் வந்து குழப்பம் விளைவித்து விடுவானோ என்ற அச்சத்தில், அறிவுள்ளவர்கள் எவரையும் அடுக்காமல் இருந்துவரும் ஒரு இடம் அது.

    இந்த நிலை, தமிழ் சமூகத்துக்குச் சாபக்கேடு. அதை மாற்றியே ஆகவேண்டும்.

    யாழ் பல்கலைக்கழகம் ஒரு சிலரின் தனிச்சொத்தல்ல. அது சமூகத்தின் அறிவியல் சொத்து. அதை ஒருசிலர் சூறையாட இனியும் அனுமதிக்க முடியாது.

    எனக்குத் தெரிந்தவரையில், கூலைவிடத் தகுதியான எவரும் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தராக பதவியேற்க இல்லையென்றே கூறுவேன். ஆகவே, வாருங்கள் கூல்! யாழ் பல்கலைக்கழகத்தை மீண்டும் அறிவியல்கூடம் ஆக்கித் தாருங்கள் கூல்!!!

    Reply
  • Varathan
    Varathan

    Academic qualification is not the sole requirement to decorate the VC post. Administration is a different skill. So, there’s no point to argue whether Hoole is not fit or not. Hoole is one of the the political scapegoats in this issue. That’s the different story all we know. However, he’s not a flexible person (based on his past records) to run the administration smoothly at that time or even now. Further, his strong religious views (based on his books – more critic) will not be entertained in public life.

    Reply
  • Yalpanan
    Yalpanan

    //Academic qualification is not the sole requirement to decorate the VC post. Administration is a different skill// (Stated by Varathan on July 28, 2010 10:57 pm )

    I almost agree with you Varathan. However you should have stated that:
    “Academic qualification is not the ONLY requirement to decorate the VC post. Administration is a different skill. A skilled academic administrator will have a STRONG ACADEMIC BACKGROUND as his backbone, enhanced by efficient managment and planning skills! He/She will have a foresighted and holistic approach which will address the needs of the academic community as well as the needs of the nation.”

    THEREFORE, considering the above refined statement – the foll questions arise:
    1. Has Shanmugalingan, the present incumbent of the seat of Vice-Chancellor of the University of Jaffna got a strong academic background? Has he proved meticulously that he is an efficient administrator in the past 2 years and 8 months of his tenure as VC? It is a common fact that Shanmugalingan is a puppet of many many shady characters within the University of Jaffna. He does not do anything on his own. What his ‘informal bosses’ tell him – he executes. That is it.
    2. Had Mohanathas or Balasuntharampillai who were VCs previosuly been good adminsitrators? Obviously everyone agrees and know that these two are very weak on the academic side (Quote: //It is surprise to read the fact that Balasuntharmpillai did not publish not even a single publication in any journal, but he was appointed to the position of professor and then he was granted with professor emeritus. How is it possible?// by Suppan on July 25, 2010 12:27 pm)
    3. Has anyone of the previous vice-chancellors taken the University of Jaffna into a new developmental dimension? All we have now is the SAME OLD STORY repeated again and again is it NOT?

    Mr. Varathan, you have all the rights to express your thoughts. But, your thoughts should address the needs of the community, rather than focusing on criticising Hoole or given as defending. What the university of Jaffna needs now is a good leader, it does not matter whether it is Hoole, Suppan or Kuppan or Suppamma. He/She who comes to the seat of the VC has to face a lot of hurdles and obstacles and should be prepared to work hard to take the Jaffna University out of the hell-hole it has fallen into.

    Considering the facts this forum has discussed and the situations prevailing, the strongest contender for the post of Vc of the University of Jaffna is Prof. Hoole. This is not my own opinion, but is based on the facts that are floating around. At this time and period, there seems to be no other option. Unless, the God almighty (himself or herself) decides to come to the seat of the VC of the University of Jaffna. Then that will be a different case!

    Reply
  • Philosopher
    Philosopher

    Well Mr. Yalpanan. Don’t you know that all the Professors in the University of Jaffna are GODs, and, all the lecturers are Semi-GODs?!

    They are GODs, and that is why they have indemnity from everything, even if they go on committing fraud after fraud!

    Reply
  • Kandeepan
    Kandeepan

    //Shanmugalingan who has 12 hands and six faces and uses a peacock as his vehicle is ruling the Jaffna University!// >> Vantharumoolai on July 27, 2010 8:22 am

    As Mr. Vantharumoolai has highlighted, Shanmugalingan is becoming notorius for his anti-social decisions nowadays. Shanmugalingan thinks that he is a divine entity, and, as such he is happy to please the other divine beings of the Council of the University of Jaffna by deciding on extremely corruptive actions.

    Shamugalingan is trying very hard to award professorships to his fellow gods (that is, those who are not qualified and lacking the necessary research/publication background). Of particular mention in these regards is the Professorship that has been awarded to the much corrupted Mr. Ilangkumaran.

    As it has been highlighted in the forum debating the article titled ‘சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே’by Jeyapalan, a lot of unqualified and thirgrade people are going to become professors in the Jaffna University system when Shanmugalingan’s term as VC ends. This will further degrade the university’s quality towards the poit of no return.

    Therefore, we can consider the un-foresighted and unlawful activities of Shanmugalingan as the ‘final icing on the cake’for totally destructing the University of Jaffna!

    It should be pointed out that Shanmugalingan was assigned the task of ‘quality review’ of the University of Jaffna (under the IRQUE project taken up by the UGC). This happened during the period when Prof. Kumaravadivel was acting VC. Shanmugalingan did not complete the task. He could not do it, because he has no knowledge or awarness about quality of actions/reactions in academic processes. Therefore, can Shanmugalingan who does not know a single thing about ‘quality’ be allowed to be the chief executive of the university of Jaffna and be allowed to decorate the seat of the Vice-Chancellor?

    Managing the university is the job of a visionary cum wiseman, and it should NOT be given to people like Shanmugalingan who hide behind the “powerful skirts” of the so-called ‘powerful spin doctors’ in the Jaffna University!

    This is the time for a change in leadership, and, a dynamic revolution in academic thinking! I endorse Mr. Jeyapalan’s views and support the campaign for bringing Prof. Hoole to lead this institution! Obvioulsy Hoole, being an ardent thinker and a man who teaches ‘ethics for engineers’ will have an ethical approach that will be beneficial for the university of Jaffna. This is a time to change. And, the change (in a positive manner) should be implemented without fail!

    Reply
  • Vantharumoolai
    Vantharumoolai

    Can anyone explain clearly what a ‘spin-doctor’ in a university is please?

    Reply
  • Suppan
    Suppan

    I wish to recall the following from ரவி சுந்தரலிங்கம் [1], as it is much more appropriate hypothesis/quotation in this forum. Since this is the theme of this analysis set by Jeyabalan.

    “கல்வி எமது சமுதாயங்களது அபிலாசைகளுள் பிரதானமாக இருக்கும்போது, புத்திஜீவிகளுக்கு எதிரான கீச்சுக் குரல்கள் ஏன் பிறக்கின்றன?

    இலங்கைத் தமிழர்களிடையே கல்வி என்பது எங்ஙனம் அமைகிறது? பொதுவாக அது தனிமனிதனது, அதனால் அவனது உற்றாரது, பொருளாதார முன்னேற்றத்தையும், அவை பேரில் அவரது சமுதாய – முன்நகர்வையுமே குறித்து நிற்கிறது.
    அதாவது, வேலை வாய்ப்பாக, பணக் குகை – வாயிலாக, சமுதாயத் தட்டுகள் இடையேயான ஏணியாகவுமே கல்வி கருதப்படுகிறது.

    இவற்றிக்கு அப்பால் கல்வி என்பதை அறிவை-வளர்க்கும் துறையாக, ஆய்வுகளை அடிகோலும் வகையாக, ஆய்வு-தேடல் என்ற ரீதியில் அமையும் புத்திஜீவிதத் தளமோ கலாச்சாரமோ (intellectual base / tradition) என்றும் இருக்கவில்லை, அவ் வளர்ச்சிக்கான அறிகுறிகள் இன்றும் இல்லை.

    போர்காலத்தின் முன்னர், கல்விமான்கள் நிறைந்த இடம் யாழ்ப்பாணம் என்ற சுயவிளம்பரப் பிம்ப-நிலை (self-image) படர்ந்திருந்த போதிலும், சர்வதேசிய எதிர்பாரப்புகளுக்கு இணைவான தரத்தில் ஆய்வுகள் கண்டுபிடிப்புகள் எம்மிடம் இருக்கவில்லை.”

    From the above hypothesis and the facts gathered from various sources we can conclude that what had the University of Jaffna done for our society with regard to its responsibilities and duties.

    In fact, it totally demolished our education as well our future.

    For further details please see [1] and the references therein.

    Reference

    [1] ரவி சுந்தரலிங்கம், (25 ஆவணி 2009), இலங்கைத் தமிழர்களது எதிர்காலம், http://thesamnet.co.uk/?p=15206.

    Reply
  • Philosopher
    Philosopher

    Mr. Vantharumoolai, a ‘SPIN DOCTOR’ is someone who manipulates the system by unethical use of powers/contacts for his/her personal benefits of gains. In the University of Jaffna, the corrupted group identified as the ‘saiva vellala male chauvinists’ can be considered as good contenders for being called SPIN DOCTORS.

    I think that Mr. DEMOCRACY can explain about this further. MR. DEMOCRACY over to you please.

    Reply
  • N. ஞானகுமாரன்
    N. ஞானகுமாரன்

    பிலோசஃபர் கூறிய கூற்று //a ‘SPIN DOCTOR’ is someone who manipulates the system by unethical use of powers/contacts for his/her personal benefits of gains. In the University of Jaffna, the corrupted group identified as the ’saiva vellala male chauvinists’ can be considered as good contenders for being called SPIN DOCTORS.//

    ஸ்பின் டாக்டருக்கு சிறந்த உதாரணம் யாழ் பல்கலையின் பதிவாளராகக் கடமையாற்றும் திரு. காண்டீபன் என்பவர். இவர் தனது நியமன நிரந்தரமாக்கலுக்கு (confirmation of post) தானே தன் கைப்பட கடிதம் எழுதி தன்னைத் தானே நிரந்தரமாக்கிக் கொண்டவர். இங்கு ஒரு இண்டர்-வியூ போர்ட்டும் கூடி முடிவெடுக்கவில்லை. அது தனக்கு தானே காண்டீபன் குடுத்துக் கொண்ட நியமனம். யாழ் பல்கலைக்களக பிஹெச்டி பட்டங்களை பற்றி அவை ‘சுயம்புவானவை’ என்று விமர்சிக்கிற இந்த மன்றம், காண்டீபன் எந்தமாதிரி நிருவாகத்தை குளப்பி வருகிறார் என்பதனையும் விளங்கிக்கொள்ள வேணும்.

    காண்டீபனுடன் அன்பானந்தன் என்ற சிரேஸ்ட உப-பதிவாளரும் சேர்ந்து அதிகாரம் துஸ்பிரயோகம் செய்கிறார்கள். இவர்கள் சைவ வேளாண்மை மரபு ஆணாதிக்க கல்விமான்கள் என்ற விளக்கத்துக்குள் வரமாட்டார்கள். இவர்கள் விரிவுரையாளரோ, பேராசிரியரோ அல்லது பீடாதிபதியோ, உபவேந்தரோ அல்ல.

    ஆனால், இவர்கள் தீர்மானிக்கிற முடிவுதான் உபவேந்தர் திரு. சண்முகலிங்கத்தாலும் உடனடியாக ஏற்கப்பட்டு நடைமுறைக்கு வருகிறது. இவர்கள் பதவியை நேரடியாக வகிக்காமலே சகலதையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள்.

    இங்கு அன்பானந்தன் என்பவர்தான் 2006ம் ஆண்டுக் காலத்தில் பேராசிரியர். கூலின் உபவேந்தர் நியமனத்தின் கடித ஆவண வேலைகளில் குழறுபடி செய்தவர், கூல் அவர்களின் வருகைக்கு எதிராய் இருந்தவர்.

    யாழ்ப்பாணப் பல்கலைக்களகத்தில் உபவேந்தருக்கும் பார்க்க மேலான பதவியில் மறைமுகமாக இருப்பவர்கள் எண்றால் அது திரு. காண்டீபன், திரு. அன்பானந்தன் இருவரும். சண்முகலிங்கத்துக்கு கட்டளையிடும் அதிகாரிகள் இவர்கள்தான்.

    இந்த விவாதம் இப்படியான ஸ்பின் டாக்டர்கள் பற்றியும் கவனம் செலுத்த வேண்டும்.

    Reply
  • seyon
    seyon

    ஆரோக்கியமான கருத்துப்பகிர்வு. வரவேற்கத்தக்கது.

    Reply
  • kamali
    kamali

    இத்தகைய ஒரு அலசலும் விவாதமும் கண்டிப்பாக அவசியம்.
    இதனைச் செய்யும் போது நாங்கள் எங்கள் கருத்துக்களை மீளாய்வு செய்யவும் பொது நியாயத்தை ஏற்றுக் கொள்ளவும் தயாராக்கிக் கொள்வதும் அவசியம்.
    யாழ்ப்பாணத்தில் சைவர் வேளாளர் எனக் குறிப்பிடுவோரில் எத்தானை பேர் உண்மையான சைவராகவும் வேளாளராகவும் உள்ளனர்.
    சைவ-வேளாள கருத்து யாரால் எப்படி? ஏன் பயன்படுத்தப்படுகிறது.?
    இங்கு நடந்து வந்த அரசியலின் நோக்கங்கள் பெறுபேறுகள் எவை?
    கல்வி பற்றிய எமது நோக்கமும் நிலைப்பாடும் சரியானதா?
    பெண்கள் பெற்றுக் கொள்ளும் கல்வி பெண்களுக்குச் சுமையா?சுகமா?
    இறுதியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அண்மைக்கால நிலைஎன்ன? இதைத் திருத்த முடியுமா?
    பல்கலைக்கழகத்தை சீர்திருத்துவது என்பது காலம் கடந்த கனவு ஆகிவிட்டது முடியுமானால் புரட்சி

    Reply
  • கனகரெத்தினம்
    கனகரெத்தினம்

    //இத்தகைய ஒரு அலசலும் விவாதமும் கண்டிப்பாக அவசியம்.
    இதனைச் செய்யும் போது நாங்கள் எங்கள் கருத்துக்களை மீளாய்வு செய்யவும் பொது நியாயத்தை ஏற்றுக் கொள்ளவும் தயாராக்கிக் கொள்வதும் அவசியம்.//

    Are we really prepared to accept the TRUTH for all its extremities?

    Reply
  • அன்புடயன்
    அன்புடயன்

    முன்னூறு வருடங்களுக்கு முதல் இந்தியாவிலிருந்து வந்த தமிழர்களை இன்றும் இந்தியர்கள் என அழைக்கும் நிலைமை உள்ள நாட்டில் எவ்வாறு சாதி ஒழிப்பு சாத்தியம்?? சாதி முறையின் கட்டமைப்புகள் சீர் குலைக்கப்பட்டதனால் தான் நம் சமூகம் இவ்வாறு உருக்குலைந்து சின்னா பின்னமாகியுள்ளதென ஒரு கருத்து உலாவுகின்றது. அதனால் தானுமோ ஆதி காலத்தில் மன்னர்கள் மிகவும் கடுமையாக சாதிப்பிரிவை அமுல் படுத்தினார்கள்

    Reply
  • தேவராசா
    தேவராசா

    //சாதி முறையின் கட்டமைப்புகள் சீர் குலைக்கப்பட்டதனால் தான் நம் சமூகம் இவ்வாறு உருக்குலைந்து சின்னா பின்னமாகியுள்ளதென ஒரு கருத்து உலாவுகின்றது. அதனால் தானுமோ ஆதி காலத்தில் மன்னர்கள் மிகவும் கடுமையாக சாதிப்பிரிவை அமுல் படுத்தினார்கள்// (அன்புடயன் on August 27, 2010 7:54 pm )

    ஆம், எமது சமூகம் சின்னாபின்னமாகித் தான் போயுள்ளது. சாதியை ஒழிக்கவென்று சபதமிட்டுக்கொண்டு களத்தில் குதித்தவர்களே – சாதியின் அடிப்படையில் தமது செயற்பாடுகளை நிரற்படுத்த, மேலும் மேலும்… சாதியும், மூடத்தனமும், மூர்க்கமும், சுயநலமும், கயமையும் ஒன்றுடனொன்று பின்னிப் பிணைந்ததான நாசகார வலைக்குள் தமிழ் சமூகம் நிரந்தரமாகவே விழுத்தப்பட்டுள்ளது.

    இப்படியான நாசகார வலைக்கு அதி சிறந்த உதாரணம்தான் யாழ் பல்கலைக்கழகம்!

    நாளை பேராசிரியர் ஹூல் தனது மாபெரும் சந்திப்பை நிகழ்த்தவிருக்கிறார்… அவரால் என்னதான் செய்ய முடிகிறது…. பொறுத்துத்தான் பார்ப்போமே!
    “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்திலிருந்தே ஊழலில் ஊறிப்போய்விட்ட மலினமானதொரு மனப்பாங்கு” எப்போது மறைகின்றதோ, அன்றுதான் எல்லாமே சாத்தியமாகும்.

    இந்த விவாதக்களம் முன்வைத்துள்ள சான்றுகளின் அடிப்படையில், யாழ் பல்கலையின் துணைவேந்தராக பேராசிரியர் ஹூலினால் ஒன்றுமே சாதிக்க முடியாது என்றுதான் நான் நினைக்கிறேன்.

    யாழ்ப்பாணன் என்பவர் சுட்டிக்காட்டியது போல… ‘திரிசங்கு சொர்க்கம்’ என்கின்ற போலியான நிலையைத்தான் அனைவரும் சேர்ந்து எமக்கு வழங்கப் போகின்றார்கள். எப்போதுமே மாயவலைகளினுள் சிக்குண்டு மலினப்படுவது மட்டுமேயேதான் தமிழ் பேசும் சமூகத்தின் ஒரேயொரு தொழிலாக இருக்கின்றது. நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கின்றோம். அவ்வளவுதான்!

    நாம் சிந்தனாசக்தியற்ற முதுகெலும்பற்றவர்களாக இருந்து கொண்டே இருப்போம்… அவர்கள் அனைவரும் கூட்டகச் சேர்ந்து எம்மை ஏமாற்றிச் சுயலாபம் கண்டுகொண்டே இருப்பர்கள்…. எமக்காக நாமே வருந்தித் திருந்துவதுதான் எப்போது??

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    தேசம் நெற்றில் வெளியான பேராசிரியர் ரட்ண ஜீவன் கூலின் பேட்டி 29-08-2010 உதயனில் மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளது.

    Reply