யூலை ’83 முதல் கருகிய கால்நூற்றாண்டு : ரி சோதிலிங்கம் & த ஜெயபாலன்

Black July 19831983 யூலை இலங்கைத் தமிழ் மக்களின் வரலாற்றில் மிக முக்கியமானதொரு காலகட்டம். இன்றைய முள்ளிவாய்க்காலுக்கு ஒப்பான அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு காலகட்டம். யூலை 23 1983ல் ஸ்தாபன வடிவம் பெற்ற இந்த வன்முறை அரசியல் மே 18 2009 வரை கால்நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தி பாரிய அழிவை ஏற்படுத்தியது. இந்த வகையில் கருப்பு யூலை என்ற குறியீடு 1983 முதல் அடுத்த கால்நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் மக்களது வாழ்வினை இருட்டில் கருமையிலேயே விட்டிருந்தது. இந்த மிகக் கொடிய கால்நூற்றாண்டு வரலாற்றிற்கு நாம் இன்றும் சாட்சியாக வாழந்து கொண்டுள்ளோம்.

இலங்கையின் இரத்தம் தோய்ந்த கால்நூற்றாண்டு வரலாற்றை இன்று திரும்பிப் பார்க்கும் போது, அண்மையில் காலமான தமிழ் – சிங்கள மக்களிடையே உறவுப்பாலமாக இருந்த தோழர் உபாலி குரே அவர்களின் சிந்தனையூடாகப் பார்ப்பது பொருத்தமானதாக இருக்கும் என் நினைக்கின்றோம். அவர் தனது மரணத்திற்கு சில வாரங்களுக்கு முன்பாக தனது பெறாமகன் முறையான உறவுக்கார இளைஞனுக்கு எழுதிய மடலில் இருந்து …..

Upaly Cooray‘‘ அன்புள்ள பெரிய மருமகனுக்கு!

உன்னுடைய பெயரை இங்கு தவிர்த்திருக்கிறேன். ஏனெனில் இந்தக் கடிதத்தின் நோக்கம் உன்னைத் தொல்லைப் படுத்துவதோ அன்றி உன்னைச் சிறுமைப்படுத்துவதோ அல்ல. உன்னுடைய FACEBOOK இல் வெளியாகியிருந்த வீறாப்பும் வெற்றிக் களிப்பும் கொண்ட அபிப்பிராயங்கள் எனது கவனத்தை ஈர்த்தன. அவற்றை மீளவும் நான் இங்கு சொல்ல எண்ணவில்லை. ஆனால், விடுதலைப் புலிகள் மீதான இராணுவரீதியான வெற்றியைத் தொடருகின்ற ஆதிக்க வாதக் காய்ச்சலினால் நீயும் பீடிக்கப்பட்டிருக்கிறாய் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. கடந்த சில மாதங்களாக இலங்கையில் நடந்த நிகழ்வுகள் பற்றி, உன்னைப் போன்ற கல்வியும் அறிவும் கொண்ட ஒரு இளைஞனிடம் இருந்து இதைவிட ஒரு விமர்சனப் பாங்கான பகுப்பாய்வை நான் எதிர்பார்த்திருந்திருக்க வேண்டும்.

உங்களுடைய வெற்றிக் களிப்பு, தமிழ் மக்களில் ஒரு பகுதியினரின் ஆயுதக் கிளர்ச்சிக்கு வித்திட்ட ஆழமான பிரச்சினைகளை எண்ணிப் பார்க்கத் தவறுகிறது. 1977இன் தமிழருக்கெதிரான இனக் கலவரம், 1981இல் மிகவும் பெறுமதி வாய்ந்த யாழ் பொதுநூல்நிலைய எரிப்பு, இவைகளைச் சரித்திரத்தில் இருந்து இது அழித்துவிட முடியாது. 1983இல் அரசினால் ஏவிவிடப்பட்ட இனக்கலவரத்தின் போது நாடு பூராவிலும் இருந்த தமிழர்கள் மீது பரந்தளவில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அப்போது பல தமிழ் செயற்பாட்டாளர்கள் காணாமல் போனார்கள். பலர் கிரமமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டார்கள். இவைகள் எல்லாம் பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்டவை…..’’
சிங்கள சமூகத்தைச் சேர்ந்த, தனது மரணம் வரை இன உறவுகளைக் கட்டியெழுப்ப முயன்ற ஒரு சிந்தனையாளனின் வாக்குமூலம் இது.

1983 யூலை இனக்கலவரம் இனப்படுகொலையின் உச்சமாக அமைந்தது, இந்த இனக்கலவரங்களின் பின்னால் அப்போது ஆட்சியில் இருந்த ஜே ஆர் ஜெயவர்த்தனா தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் கரங்கள் இருந்தமை ஆதாரங்களுடன் வெளிவந்திருந்தது. தங்களுடைய இனவாத நடவடிக்கைகளை பெரும்பான்மை மக்களிடம் வாக்குகளைப் பெறுவதற்கும், அதன்மூலம் ஆட்சி அதிகாரத்தை தமதாக்கிக் கொண்டு தங்கள் குறுகிய நலன்களை பூர்த்தி கொள்வதற்குமாகும்.

எழுபதுகளின் பிற்பகுதியில் உருவான தமிழ் எழுச்சியையும் அரசுக்கெதிரான தமிழ் மக்களின் போக்கையும் கட்டுப்டுத்த சந்தர்ப்பம் பார்த்திருந்த அரசு கிடைத்த சந்தர்ப்பத்தினை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டது. தமிழ் மக்கள் மீது யுத்தப் பிரகடனம் செய்யும் அறிக்கைகளையும் இனவாத பேச்சுக்களையும் பேசி, தமிழ் மக்களின் மீதான 1958க்களில் நடைபெற்ற கலவரங்களை போன்றதொரு கலவரத்தை நினைத்து ஏங்கியவர்களுக்கு 1983 யூலை 23 சம்பவம் வாய்ப்பாக அமைந்தது. அன்று யாழ்ப்பாணம் திருநல்வேலிச் சந்தியில் வெடிக்க வைக்கப்பட்ட நிலக்கண்ணி வெடி 13 இராணுவத்தினரைப் பலியெடுத்தது. தமிழர்கள் மீது தாக்குதல் நடத்த சந்தர்ப்பம் பார்த்து இருந்த ஜே ஆர் ஜெயவர்த்தனா தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசு தமிழர் மீது கலவரத்தை கட்டவிழ்த்துவிட்டது. இதே ஐக்கிய தேசியக் கட்சியும் அதன் தலைவருமான ஜே ஆர் ஜெயவர்த்தனாவே 1958, 1977 இனக்கலவரங்களுக்கும் முக்கிய காரணகர்த்தாவாக இருந்துள்ளார்.

J R Jeyavarthaneதமிழ் மக்களுக்கு எதிரான இனக் கலவரங்களில் முன்னின்ற ஐக்கிய தேசியக் கட்சியுடனும் அதன் தலைவர் ஜே ஆர் ஜெயவர்த்தனே உடனும் தமிழரசுக் கட்சியும் அதன் பின் தமிழர் விடுதலைக் கூட்டணியும் எப்போதும் நெருக்கமான உறவுகளைப் பேணி வந்தனர். இலங்கையில் இடம்பெற்ற தேர்தல் கூட்டுக்களில் தமிழ் அரசியல் தலைமைகளான தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி இத்தனை இனக்கலவரங்களின் பின்னும் பெரும்பாலும் ஐக்கிய தேசியக் கட்சியுடனேயே கூட்டினை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

1983 இனக்கலவரம் பிராந்திய வல்லரசான இந்தியா இலங்கை மீது தலையீடு செய்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தது. பனிப்போரின் உச்சமாக இருந்த அக்காலப்பகுதியில் உலக நாடுகள் இரு அணிகளாக பிரிந்து நின்றன. இந்தியா அணிசேராக் கொள்கையைக் கடைப்பிடித்த போதும் அமெரிக்க வல்லாதிக்கத்திற்கு எதிரான நிலையைக் கொண்டிருந்தது. ஆனால் ஜே ஆர் ஜெயவர்த்தனே தலைமையிலான இலங்கை அரசு அமெரிக்க சார்பு நிலையைக் கொண்டிருந்தது.

இந்தியாவின் பிராந்திய நலன்களும் இந்தியாவின் தேவைகளும் இலங்கை அரசிற்குகெதிராக இந்த இனக்கலவரத்தை இந்தியா பயன்படுத்த முற்பட்டது. இதன் விளைவு இலங்கையில் தமிழ் மக்களுடைய உரிமைப் போராட்டம் இந்தியாவின் ஆசீர்வாதத்துடன் ஆயுத வடிவம்பெற்று மக்கள் சக்தியிலும் ஆயுதங்களின் சக்தியே மகத்தானது என தமிழ் விடுதலை இயக்கங்கள் தமிழ் மக்களைக் கைவிட்டு இந்தியா வழங்கிய ஆயுதங்களை இறுகப் பற்றிக் கொண்டனர். உரிமைப் போராட்டம் பயங்கரவாதப் போராட்டமாக ஆனது.

இந்த போராட்டத்தின் ஆரம்பத்தில் பல சமூக முன்னணியாளர்களும் சமூகநலவாதிகளும் ‘மக்கள் அரசியல் மயப்படுத்தப்படாத போராட்டம் – அரசியல் முன்னிலைப்படுத்தப்படாத போராட்டம் – மக்களின் பங்கு பற்றல் இல்லாத போராட்டம் – தோல்வியிலேயே முடியும்’ என்பதை அறைந்து சொன்ன போது ஆயுதங்கள் மீதான போதை அவர்களது மதியை மயக்கச் செய்தது. இறுதியில் ஆயுதங்கள் மீது காதல் கொண்ட சந்தர்ப்பவாத சக்திகளின் தலைமையில் இந்தப் போராட்டம் நடாத்தப்பட்டு தோல்வியுற்றது.

அரசியல் மயப்படுத்தப்டாத இப்போராட்டம் இலகுவில் வல்லரசுகளின் கைப்பொம்மையாகி அல்லது வல்லரசுகளின் வல்லாதிக்கத்திற்குட்பட்டு இலகுவில் தோல்வியை அடையும் என்பதை அன்றே சுட்டிக்காட்டிய அரசியல் சிந்தனையாளர்கள் இன்று அதன் முடிவையும் தாங்கள் வாழ்நாளிற்குள்ளாகவே கண்டும் உள்ளனர். இந்தச் சிந்தனைகள், அறிவுறுத்தல்கள் இவை எல்லாவற்றையும் மீறி ஆயுதங்களை மட்டுமே நம்பி இந்தப் போராட்டத்தை நடாத்தி இன்று அந்த போராட்டம் ஆரம்பித்த இடத்தில் இருந்து பின்னோக்கி வெகுதொலைவிற்கு மக்களைக் கொண்டு சென்றுள்ளது.

இன்றும் இந்த கடந்த காலம் பற்றிய மதிப்பீடோ அல்லது விமர்சனமோ இல்லாமலேயே அடுத்த நகர்வுக்குத் தயாராகின்றனர். எமது கடந்த காலத்தை மதிப்பீடு செய்து தமிழர்களின் அடுத்த கட்ட நகர்வு பற்றிய எவ்வித விவாதமும் இன்றி ஓடுகிற பஸ்ஸில் ஏற முற்படுகின்றனர். அவ்வாறு செய்யாதவர்களுக்கு துரோகிப் பட்டம். கடந்த போராட்டத்தின் தப்பான பண்புகள் இன்னும் தொடர்வதையே இது காட்டுகின்றது. இராணுவ சாகசங்களையே போராட்டம் என்று அடுத்த சந்ததிகளுக்கு படிப்பித்தும் ஆயிற்று. இதிலிருந்து வெளிவருவதும் மக்கள் அறிவூட்டப்படுதலும் மிகவும் சிக்கலான நிலையாகியும் விட்டது, இந்த சிக்கலிலிருந்து வெளியேற எமது கடந்த போராட்டத்தையும் நமது போராட்டவாதிகளின் போக்குகளையும் முழுமையாக மீள்மதிப்பீடு செய்தாக வேண்டிய அவசியமான காலகட்டம் இது.

Black July 1983இந்த 1983 யூலைக் கலவரத்தின் பின்னரும் மாறி மாறி ஆட்சிக்கு வந்த இலங்கையின் இனவாத அரசுகள் தங்களது இனவாதப் போக்கை மாற்றிக் கொள்ளவில்லை. அல்லது இனவாத அரச இயந்திரம் மாற்றங்களை அனுமதிக்கவில்லை. இனவாத நடவடிக்கைகள் யுத்தத்தின் பின்னணியில் மிகவும் துரிதமாக இடம்பெற்றது. இந்த இனவாத நடவடிக்கைகளை தமிழ் மக்கள் ஸ்தாபனமயப்பட்டு கண்டிக்கவோ அதற்கு எதிராக செயற்ப்படவோ முடியாதபடி தமிழ் மக்களை வலிந்து பிரதிநிதித்துவப்படுத்திய தமிழீழ விடுதலைப் புலிகள் தடைசெய்தனர். இன்னோர் வகையில் இந்த இனவாதத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் நெய்யூற்றி வளர்த்தும் விட்டனர்.

இனமுரண்பாடுகளைக் கூர்மைப்படுத்தி சிங்கள பேரினவாதக் கட்சிகள் எவ்வாறு குறுகிய அரசியல் லாபம் பெற்றனரோ அவ்வாறே தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி அவர்களின் தொடர்ச்சியான தமிழீழ விடுதலைப் புலிகளும் இனவாதத்தைக் கூர்மைப்படுத்தி தங்கள் குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொண்டனர்.

இந்த இனக்கலவரத்தை தூண்டிய காரணங்களில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதும் ஒன்றாக இருக்கலாம். ஆனால் அன்று ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சியும் இலங்கை அரசும் அதற்கான முழுமையான பொறுப்புகளைக் கொண்டுள்ளது. தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது பாதுகாப்பு கொடுக்க வேண்டிய பொலீசாரும் இராணுவத்தினரும் சிங்களக் காடையர்கள் இனவாதிகளுடன் சேர்ந்து தாமும் இணைந்தே இந்த 1983ம் ஆண்டு இனக்கலவரத்தை நடாத்தி தமிழ் மக்களை கொன்று குவித்தனர், இந்த ஈனச்செயலுக்கு பொறுப்பான பலர் இன்றும் பல முக்கிய அரச பொறுப்புக்களில் உள்ளனர். இவர்கள் மீது எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை,

அதேசமயம் இந்த 1983 யூலை கலவரத்திற்கு சற்று முன்னான தமிழ் ஆயுத அமைப்புகளின் நகர்வுகள் இங்கு பதிவு செய்யப்படுவது அவசியம். யூலை 23 1983 திருநெல்வேலிச் சந்தியில் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலின் பின்னால் இருந்த உள்நோக்கத்தையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

TELO_Thangaththuraiதமிழீழ விடுதலை இயக்கம் – ரெலோ வெலிக்கடைச் சிறையில் இருந்த தமது தலைவர்களான குட்டிமணி தங்கத்துரை ஆகியோரை சிறையை உடைத்து வெளிக்கொணர்வதற்காக 24 இளைஞர்களை பயிற்சியளித்து வெலிக்கடைசிறையை தாக்கும் திட்டம் ஒன்றை செய்வதற்கு ஆயத்தமாக இருந்த வேளையிது. ‘இந்த தாக்குதலுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளிடமும் அதன் தலைவர் வே பிரபாகரனிடமும் உதவிகள் கேட்கலாம்’ என்று சில ரெலோ உறுப்பினர்களிடம் அபிப்பிராயம் இருந்தது. ஆனால் இதற்கிடையே சில ரெலோ உறுப்பினர்கள் வே பிரபாகரனே தமது ரெலோ தலைவர்களை காட்டிக் கொடுத்தவர் என்று குற்றம்சாட்டினர். அவர்கள் ‘ரெலோ தலைவர்களை உயிருடன் வெளியே எடுப்பது வே பிரபாகரனுக்கு விருப்பமானதாக இருக்காது’ என்றும் கூறினர். ‘வே பிரபாகரன் இந்த திட்டத்தை குழப்புவார்‘ என்ற பலமான அபிப்பிராயத்தையும் அவர்கள் கொண்டிருந்தனர். இந்த அபிப்பிராயத்தை அன்று கொண்டிருந்தவரில் ரெலோ சுதனும் முக்கியமானவர். இவர் இப்போது லண்டனில் வாழ்கிறார்.

TELO_Kuddymani‘தமிழீழ விடுதலைப் புலிகளோ அதன் தலைவர் வே பிரபாகரனோ உதவி செய்யத் தேவையில்லை.உபத்திரவம் இல்லாது இருந்தாலே போதும். இப்போதைக்கு எந்த இராணுவத் தாக்குதலையோ இராணுவத்தினர்க்கு எதிரான சேட்டைகளையோ செய்ய வேண்டாம்’ என புலிகளிடம் கேட்பதாக முடிவாகியது. சிறீசபாரத்தினத்தின் இணக்கத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளை இதே சுதன் சந்தித்து மேற்கூறிய வேண்டுகோளை விடுத்திருந்தார். ரெலோ சுதன் கலட்டி அம்மன் கோவிலடியில் வைத்தே தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் கண்ணனிடம் இவ்வேண்டுகோள் விடுக்கப்பட்டது. (கண்ணன் இன்றும் வெளிநாடு ஒன்றில் வாழ்ந்து வருகிறார்.) ரெலோ தலைவர் தங்கத்துரை பிரபாகரனின் இம்மாதிரியான தாக்குதல்களை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்ததாயும் இத்தகவலை வே பிரபாகரனுக்கு அனுப்பியதாயும் இந்த ரெலோ உறுப்பினர்கள் நம்புகிறார்கள்.

ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது இராணுவ சாகசங்களை நிறுத்தவில்லை. இராணுவத்தினர் மீது மேற்கொள்ளளும் வலிந்த தாக்குதல்களை, துப்பாக்கிப் பிரயோகங்களை நிறுத்தவில்லை. திருநெல்வேலித் தாக்குதலை திட்டமிட்டு நிறைவேற்றினர். இனக்கலவரம் வெடித்தது. வெலிக்டை சிறையில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர்கள் குட்டிமணி, தங்கத்துரை கொல்லப்பட்டனர்.

LTTE Leader V Pirabakaranஇன்றும் லண்டனில் வாழும் முன்னாள் ரெலோ உறுப்பினர்களிடம் இந்த 13 இராணுவத்தினர் மீது தாக்குதல்கள் ரெலோ தலைவர்களை வெளியே வந்துவிடக்கூடாது என்ற நோக்குடனேயே செய்யப்பட்டதாக திடமாக நம்புகிறார்கள். அதேவேளை இந்தக் காலங்களில் சிறையில் இருந்த தங்கத்துரை தனது நீதிமன்ற உரைமூலம் தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு உள்ள நியாயத்தை முக்கியமாக இது சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல என்பதையும் எடுத்து கூறி இருந்தார். இவ்வுரை தங்கத்துரை போராட்டம் பற்றிய சரியான போக்கைக் கொண்டிருந்தார் என்பதைக் கோடிற்று நின்றது. தமிழீழ விடுதலை இயக்கம் தங்கத்துரையை சிறையிலிருந்து மீட்டிருந்தால் வே பிரபாகரனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை நடாத்தியிருந்திருக்க முடியுமா? பின்னாளில் ஏற்பட்ட அரசியல் போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்குமா? என்பது ஆர்வத்திற்குரிய விவாதமாக அமையும்.

அன்று 1983 யூலைக் கலவரத்தில் பாதிக்கப்பட்டு வன்னியில் குடியேறிய மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னிப் பகுதியில் இடம்பெற்ற யுத்தங்களுக்கும் கொடுமைகளுக்கும் அவலங்களுக்கும் உள்ளாகினர். இன்றும் இந்த வன்னி அகதி முகாம்கிளிலிருந்து வெளியேறி தங்க இடம் இல்லாது இருப்பவர்கள் இவர்களே.

இலங்கையில் இடம்பெற்ற இனக்கலவரங்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியே மூல காரணமாக இருந்த போதும் சுதந்திரக் கட்சி இவ்விடயத்தில் தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்க முடியாது. இலங்கை அரச இயந்திரத்தை இனவாத நச்சுச் சுழலில் இருந்து வெளியே கொண்டுவருவதற்கு சுதந்திரக் கட்சி காத்திரமான பங்களிப்பினை இதுவரை மேற்கொள்ளவில்லை. தற்போது ஆட்சியில் உள்ள சுதந்திரக் கட்சிக்கு தற்போது அமைந்துள்ள அரசியல் சூழல் மிகவும் வாய்ப்பானதொன்று. அதனை முழுமையாகப் பயன்படுத்தி அரசு இயந்திரத்தை இனவாதச் சூழற்சிக்கு வெளியே கொண்டுவர ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசினால் முடியும். ஆயினும் அவர்கள் தாம் அதற்குத் தயாரில்லை என்பதனையே அவ்வரசின் இராணுவப் போக்கு உணர்த்துகின்றது. இன்றும் வன்னி முகாம்களில் உள்ள இந்த மக்கள் 1983ம் ஆண்டின் இனவாத நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டு வெளியேறிய அப்பாவி மலையக மக்கள் என்பதை ஆட்சியில் உள்ளவர்கள் அறியாதவர்களா என்ன? இன்றைய அரசின் நடவடிக்கைகள் தம் குறுகிய அரசியல் நலன்களுக்காக நாட்டை மற்றுமொரு இனவாதச் சுழற்சிக்குள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசு தள்ளுகின்றதோ என்ற அச்சம் தமிழ் மக்களிடையெ எழுவது தவிர்க்க முடியாதது.

Rehabilitation_Wanni வன்னி அகதி முகாம்களில் உள்ள மீதமான மக்கள் மட்டுமல்ல பெயரளவில் மீளக் குடியேற்றப்பட்ட மக்களும் தமக்கென வாழ விவசாயம் செய்ய நிலமற்றவர்கள், வீடற்றவர்களாகும். இந்த மக்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமலும் அந்த இளம்பிள்ளைகளின் கல்வியில் அக்கறையில்லாமலும் அரசுக்கு என்ன வெற்றி விழா, ஆண்டுவிழா தேவைப்படுகின்றது. இப்படிப்பட்ட இனவாத போக்கே இலங்கையில் தமிழ் மக்கள் அரசுக்கு எதிராக போராட முற்பட்டதும் இராணுவத்தினரை தாக்கும் எண்ணம் உருவாகக் காரணம் ஆனது என்பதை இன்னும் உணராமல் இருப்பது இவர்களும் வரலாற்றைக் கற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது.
இந்த மக்களின் அவல நிலையை இன்றுள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் கண்டுகொள்வதாக இல்லை. தம் வாக்கு வங்கியைக் காப்பாற்றிக் கொள்ள பத்திரிகைகளுக்கு அறிக்கை விடுவதற்கு அப்பால் இவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காத்திரமாக எதனையும் செய்துவிடவில்லை. அந்த மக்களை வன்னி முகாம்களில் சென்று பார்ப்பதற்குக் கூட அவர்கள் போராடவில்லை. பொறுப்பு வாய்ந்த அரசு ஆட்சியில் உள்ளது எனக் கூறிக்கொள்ளும் சுதந்திரக் கட்சியின் தமிழ் ஆதரவாளர்களும் அமைப்பாளர்களும் தோழமைக் கட்சிகளும் கூடி தமது சுதந்திரக்கட்சி அரசியல் உறவுகளை முழுமையாக இந்த மக்களுக்காக பயன்னபடுத்த முடியாதவர்களாகவே உள்ளனர்.

இக்கட்டுரையை மீண்டும் உபாலி குரேயின் சிந்தனையின் அடிப்படையிலேயே நிறைவுக்குக் கொண்டு வருவது பொருத்தமாக இருக்கும். அவர் மேற்குறிப்பிட்ட கடிதத்தில்…..

‘‘இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என்றால், எங்களுக்கு இன்று தேவையானது வெற்றி குறித்த பெருந்தன்மையே அல்லாமல் வெற்றிக் களிப்பல்ல. நாங்கள் அவர்களோடு உடன்பாடு கொள்ள வேண்டிய தேவை இல்லாவிடினும் அவர்களை நோக்கி நாங்கள் நட்புக்கரம் நீட்ட வேண்டும். நாங்கள் அவர்களுக்கு ஆறுதலாக இருக்க வேண்டுமேயன்றி இனிமேலும் சண்டைக்குப் போகக்கூடாது. அவர்களுடைய குறைகளை நாங்கள் கேட்க வேண்டும். அவர்களுடைய கோரிக்கைகளை அடைவதற்கு நாங்கள் அவர்களை நோக்கிச் செல்ல வேண்டும். இன்னும் உங்கள் வெற்றிக் களிப்பு எங்களுடைய கலாச்சாரத்திற்கு அந்நியமானது. உதாரணத்திற்கு, துட்டகைமுனு, எல்லாளனை வெற்றி கொண்டபின், எல்லாளனுடைய சமாதிக்குச் சென்றபோது எல்லாளனுக்கு மரியாதை செலுத்துமுகமாக ஒவ்வொரு குதிரைவீரனும் அந்தச் சமாதிக்கு மண்டியிட வேண்டும் என்று கட்டளை பிறப்பித்தான். இந்த உயர்நிலையின் வழிநின்றுதான் நாங்கள் இலங்கையின் இனப்பிரச்சினையை அணுகவேண்டும்.’’

இந்த மனமாற்றம் பேரினவாதத் தலைமைகள் மத்தியில் ஏற்பட்டாக வேண்டும். அதற்கு முதல் நிபந்தனை இந்த மனமாற்றம் பரந்துபட்ட சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட வேண்டும். கடந்த கால்நூற்றாண்டு கால ஆயுதப் போருக்கு செலவழித்து ஆயிரக்கணக்கான லட்சக்கணக்காண கோடிக்கணக்கான பணத்தை சிங்கள மக்களின் மனங்களை வென்றெடுக்க அதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுக்கப் பயன்படுத்தி இருந்தால் எமது நியாயமான உரிமைகளை வென்றெடுக்க சிங்கள, முஸ்லீம் மக்கள் தோளோடு தோள் நின்றிருப்பார்கள். உபாலி குரேயின் கடிதத்திற்கு அந்த உறவுக்கார இளைஞன் வருமாறு பதிலளிக்கிறான்…..

”என் அன்புக்குரிய பெரிய அங்கிள்,

உங்களுடைய இந்தக் கட்டுரையை என்னுடைய FACEBOOK இலும், சில இலங்கையரின் FACEBOOK இலும் பிரசுரித்தேன். என்னுடைய நண்பர்களில் 20 பேருக்கும் அதிகமானவர்கள் யுத்தம் பற்றிய தங்கள் அபிப்பிராயத்தை இதற்குப் பின் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். உங்களுடைய கட்டுரை மூலமாக அவர்களுடைய அபிப்பிராயங்ளை மாற்ற முடிந்தததையிட்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் இதைக் கட்டாயம் ஒரு பத்திரிகையில் பிரசுரிக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.

தயவுசெய்து இதுபற்றி யோசியுங்கள். இந்தக் கட்டுரையை நீங்கள் எனக்கு அனுப்பி வைத்ததற்காக நான் உங்களுக்கு மீண்டும் மீண்டும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரியமுடன்”

இலங்கை இந்த இனவன்முறை என்கிற நச்சு வட்டத்தில் இருந்து வெளியேற தமிழ் – சிங்கள – முஸ்லீம் சமூகங்களில் இருந்து பல உபாலி குரேக்கள் தோன்ற வேண்டும். தமிழ் இளைஞர்கள் ஏந்திய ஆயுதங்களிலும் பார்க்க உபாலி குரே போன்றவர்களின் சிந்தனையும் எழுத்தும் இன மத பேதங்களைக் கடந்து அவர்களின் இதயங்களையும் சிந்தையையும் வெற்றிகொள்ளும். உபாலி குரேயின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு அதன் முடிவில் இசைக்கப்பட்ட பொப் மாலியின் பாடல் இன்னும் மெல்லியதாக காதோரம் ஒலித்துக் கொண்டுள்ளது…..

Get up, stand up!
Stand up for your rights!
Get up, stand up!
Don’t give up the fight!

Show More
Leave a Reply to sangara sasthri Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

15 Comments

  • thevan
    thevan

    ஒவ்வொரு ஆண்டும் யூலை மாதம் வந்துவிட்டால் 83ம் ஆண்டு நடந்த இனப் படுகொலைகள் குறித்து பலரும் கட்டுரை எழுதுவது ஒரு சம்பிரதாயம் போல் ஆகிவிட்டது. ஆனால் இதில் எத்தனை பேர் இத்தனை ஆண்டுகள் கழிந்துவிட்டபோதும் நடந்த விடயங்கள் குறித்து சரியாக எடைபோடுகின்றனர் என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி அரைத்த மாவையையே தொடர்ந்து அரைக்கப் போகிறார்களோ தெரியவில்லை?

    இவ்வாறான ஒரு சலிப்பிற்கு மத்தியில் தேசம் ஆசிரியர்கள் ஜெயபாலன் மற்றும் சோதிலிங்கம் ஆகியோர் எழுதிய இந்த கட்டுரை சிறிது நம்பிக்கையைக் கொடுக்கிறது. அவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இவர்கள் கொஞ்சம் ஆரோக்கியமான முறையில் பிரச்சனையை அணுகியிருந்தாலும் துரதிருஸ்டவசமாக முடிவுகளை தலைகீழாகவே கொடுத்துள்ளனர். அல்லது வாசகர்களை தலைகீழாக படிக்க நிர்ப்பந்திக்கின்றனர்.

    முதலாவதாக தமிழ் சிங்கள மக்களின் ஜக்கியத்தையே கட்டுரையின் சாரம்சம் முக்கியமாக வலியுறுத்துகிறது. இது ஒரு வரவேற்கத்தக்க நல்ல அம்சம். 1983ல் இந்த ஜக்கியம் பற்றி பேசியவர்களை துரோகிகள் என்றும் ஜே.ஆர் ன் கைக்கூலிகள் என்றும் நெல்லியடி சந்தைச் சுவரில் எழுதினார்கள். ஆனால் இன்று அதே உண்மை மறுக்க முடியாதவாறு எற்றுக்கொள்ளும் வண்ணம் “தேசத்தில்” சுட்டிக்காட்ப்பட்டது மன நிறைவு தருகிறது. ஆனால் இந்த ஜக்கியத்திற்கு தடையாக “தமிழீழம்” என்னும் பிரிவினை உள்ளதை இந்த கட்டுரை ஆசிரியர்கள் ஏன் சுட்டிக்காட்ட தவறியுள்ளனர்?அல்லது தமிழீழத்தை முன்வைத்துக்கொண்டே தமிழ் சிங்கள ஜக்கியத்தை கட்ட முடியும் என நம்புகிறார்களா? இங்கு நான் அறிய விரும்புவது என்னவெனில் இந்த கட்டுரை ஆசிரியர்கள் தமிழீழம் என்னும் விடயத்தை தவறுதலாக விட்டு விட்டனரா அல்லது வழக்கம் போல் வேண்டுமென்றே தவிர்த்துவிட்டனரா என்பதே?

    இரண்டாவதாக “புலிகள் ஆயுதங்களை நம்பினார்கள் ஆனால் மக்களை நம்பவில்லை. அதனால் தோல்வியை தழுவினார்கள்” என்று எழுதப்பட்டுள்ளது. புலிகள் அமெரிக்காவை நம்பினார்கள். நோர்வேயை நம்பினார்கள். இந்தியாவை நம்பினார்கள். இறுதியில் கனிமொழி கஸ்பார் கூட்டத்தைக்கூட நம்பினார்கள். ஆனால் அவர்கள் ஒருபோதும் கூட இருந்த மக்களை நம்பவில்லை என்பது உண்மைதான். நூற்றுக்கு நூறு எற்றுக்கொள்ள வேண்டிய உண்மை. ஆனால் இதன்படி பார்த்தால் புலிகள் மக்களை நம்பியிருந்தால் “தமிழீழம்” கிடைத்திருக்கும் என்றல்லவா நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் தமிழீழம் எதை நம்பினாலும் அடைய முடியாது என்றல்லவா அறிவு புகட்டுகிறது. அடைய முடியாத தீர்வு மட்டுமல்ல தமிழீழம் ஒரு சிறந்த தீர்வு அல்ல என்பதையும் நாம் கண்டோம் அல்லவா. எனவே புலிகள் மக்களை நம்பவில்லை என்பது உண்மைதான் என்றாலும் சாத்தியப்படாத தமிழீழ கோரிக்கையை அவர்கள் முன்வைத்ததே அது வெற்றியளிக்காமைக்கு முக்கிய காரணியாகும் என்றல்லவா கட்டுரையாளர்கள் இங்கு சுட்டிக்காட்டியிருக்க வேண்டும்.

    மூன்றாவதாக புலிகள் ஆயுதங்களை நம்பினார்கள் என்பது உண்மைதான். அதனால் இன்று புலிகள் தோத்து விட்டார்கள் என்பதற்காக ஆயுதப்போராட்ட பாதை தவறு என்று அர்த்தப் படுத்திக் கொள்ளக்கூடாது. அத்தோடு ஒரு விடுதலை இயக்கம் அல்லது புரட்சிகர இயக்கம் என்ன பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை பெரும்பாலும் அதன் எதிரியே தீர்மானிக்கின்றான். எமது இலங்கை வரலாற்றிலும்கூட முதலில் தமிழ்மக்கள் அகிம்சை வழியிலேயே போராடினார்கள். அது ஆயுதம் கொண்டு நசுக்கப்படும்போது தவிர்க்க முடியாதவாறு இயக்கங்களும் அதே ஆயுதம் தாங்கி பதில் கொடுக்க தள்ளப்படுகின்றனர். அத்துடன் இந்த ஆயுதங்கள் எதிரியிடமிருந்தே பெரும்பாலும் கைப்பற்றப்பட்டு அது பின்னர் எதிரிக்கு எதிராக பயன் படுத்தப்படுகிறது. இதனையே தோழர் மாசேதுங் “துப்பாக்கி ஒரு தோளில் இருந்து இன்னொரு தோளுக்கு மாறுகிறது” என்று எளிமையாக சொன்னார்.

    நான்காவதாக இயக்கங்கள் மக்கள் சக்தியை நம்பாமல் இந்தியா கொடுத்த ஆயுதங்களை இறுகப் பற்றிக்கொண்டன என்று கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது உண்மைதான் என்றாலும் இதில் இருந்து நாம் புரிந்து கொள்ளத் தவறும் முக்கிய அம்சம் என்னவெனில் இந்திய ஆயுதத்தை நம்பியதல்ல மாறாக ஆயுதம் கொடுத்த இந்தியாவை நம்பியதே பாரிய தவறாகும் என்பதே. அதாவது எமது எதிரியான இந்தியாவை நட்பு சக்தியாக நம்பியதே போராட்டம் இந்தளவு பின்னடைவுக்கு முக்கியகாரணமாகும். எனவே இந்த இந்திய எதிரி என்னும் விடயம் கட்டுரையாளர்களின் பார்வைக்கு எட்டாதது தற்செயலானதா அல்லது வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டதா?

    ஜந்தவதாக ஒரு விடயத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். குட்டிமணி தங்கத்துரை ஆகியோரின் விடுதலையைக் குழப்புவதற்காகவே பிரபாகரனால் 13 இராணுவத்தினருக்கு எதிரான தாக்குதல் நடத்தப்பட்டது என்ற கதைபோல் பல கதைகள் இயக்கங்களுக்குள் கதைக்கப்பட்டிருக்கின்றன. அப்போது தலைமைகளில் இருந்த கட்டற்ற விசுவாசம் இப்படியான கதைகளை எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி நம்பவைத்தன. ஆனால் அவற்றை இப்போதும் நம்பிக் கதைப்பதுதான் வேடிக்கையும் வேதனையும் ஆகும். இராணுவத்தாக்குதல் நடந்தால் கலவரம் வரும். அதனால் சிறையில் குட்டிமணி தங்கத்துரை கொல்லப்படுவார்கள் என யாருமே அன்று நினைக்கவில்லை. இந்நிலையில் பிரபாகரன் அவ்வாறு கணித்தார் என்பது அவரை இன்னொரு புறத்தில் அதிமேதாவியாக காட்டுகிறது என்பதை இவர்கள் கவனிக்க தவறிவிட்டனர்.

    உண்மையில் அன்றைய காலகட்டத்தில் புலிகளைவிட மற்றைய இயக்கங்களே அதிக தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்தனர். புலிகளின் தாக்குதல் பாதை பிழை என்றும் மக்கள் அமைப்புகளை கட்ட வேண்டும் என புலிகளில் இருந்து பிரிந்து “புதிய பாதை” அமைத்தவர்களே முதலில் வட்டுக்கோட்டை தபால் நிலையத்தில் பணத்தை கொள்ளையடித்தனர். அவர்களே அதன் பின் குறிக்கட்டுவானில் இரு ராணுத்தினரை சுட்டு ஆயுத்தைப் பறித்தனர். அதன் பின் நாச்சிமார் கோவிலடியில் தேர்தல் கூட்டத்திற்கு பாதுகாப்பிற்கு வந்த பொலிசாரை சுட்டனர். அதன் பின் ஆனையிறவு போலிஸ் நிலையத்தை தாக்கி ஆயுதங்களைக் கொள்ளையிட்டனர். பின்னர் கிளிநொச்சி வங்கியை கொள்ளையடித்தனர். இதன் பின்னரே புலிகள் தாக்குதலை ஆரம்பித்தனர். அதுவும் முதலில் காரைநகர் கடற்படையினருக்கு பண்ணைபாலத்தில் குண்டு வைத்தனர். ஆனால் அதைக் கடற்படையினர் நடந்து வந்து அப்புறப்படுத்திவிட்டனர். இந்த செய்தி அனைத்து பத்திரிகைகளிலும் வந்தது. இதை புலிகளே செய்தனர் என்பது அனைத்து இயக்கத்தினருக்கும் அப்போது தெரியும். இதன் பின்னரே திருநெல்வேலியில் இராணுவத்தினருக்கு குண்டுவைத்தனர் புலிகள்.

    அடுத்து குட்டிமணி தஙகத்துரையை பிரபாகரனே காட்டிக் கொடுத்தார் என்பதும் நம்பமுடியாதது. ஏனெனில் குட்டிமணி தங்கத்துரை கைது செய்யப்பட்டு முதலில் பருத்தித்துறை பொலிஸ் நியைத்திலேயே வைக்கப்பட்டிருந்தனர். அப்போது இவர்கள் கடத்தல் கும்பல் என்றே பொலிஸ் நினைத்தது. அதன் பின்னரே தாங்கள் கைது செய்தவர்கள் குட்டிமணி தங்கத்துரை என்று பொலிசுக்கு தெரியவந்தது. அதன் பின்னரே அவர்கள் பலத்த காவலுடன் ஆனையிறவு முகாமுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

    எனவே இங்கு நான் இறுதியாக சுருக்கமாக சில விடயங்களை முன்வைக்க விரும்புகிறேன்.
    (1)தீர்வு- தமிழீழம் சாத்தியமற்ற தீர்வு மட்டுமல்ல. அது தமிழ் மக்களுக்கு ஒரு சிறந்த தீர்வும் அல்ல.
    (2)எதிரி- இந்தியா எமது நட்பு சக்தி அல்ல. அதுவும் எமது எதிரியே.
    (3)பாதை- ஆயுதப் போராட்டப்பாதை தவறு அல்ல. ஆனால் மக்களை ஆயுதம் ஏந்தி போராட வைக்க வேண்டும்.
    (4)ஜக்கியம்- தமிழ் சிங்கள உழைக்கும் மக்களின் ஜக்கியம் மட்டுமல்ல இலங்கை இந்திய புரட்சிகர சக்திகளின் ஜக்கியமும் அவசியமாகின்றது.

    Reply
  • T Sothilingam
    T Sothilingam

    உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள் தமிழீழம் பற்றி பல முறை எமது கருத்துக்கள் வெளிவந்துள்ளன. தேவன் உங்கள் விமர்சனங்கள் வரவேற்கிறோம் தொடர்ந்தும் விமர்சியுங்கள் எழுதுங்கள்

    //புலிகளில் இருந்து பிரிந்து “புதிய பாதை” அமைத்தவர்களே முதலில் வட்டுக்கோட்டை தபால் நிலையத்தில் பணத்தை கொள்ளையடித்தனர். அவர்களே அதன் பின் குறிக்கட்டுவானில் இரு ராணுத்தினரை சுட்டு ஆயுத்தைப் பறித்தனர். அதன் பின் நாச்சிமார் கோவிலடியில் தேர்தல் கூட்டத்திற்கு பாதுகாப்பிற்கு வந்த பொலிசாரை சுட்டனர். அதன் பின் ஆனையிறவு போலிஸ் நிலையத்தை தாக்கி ஆயுதங்களைக் கொள்ளையிட்டனர். பின்னர் கிளிநொச்சி வங்கியை கொள்ளையடித்தனர்//ஆனையிறவு அல்ல ஆனைக்கோட்டை(யாழ்ப்பாணம்)//

    //இதன் பின்னரே புலிகள் தாக்குதலை ஆரம்பித்தனர். அதுவும் முதலில் காரைநகர் கடற்படையினருக்கு பண்ணைபாலத்தில் குண்டு வைத்தனர். ஆனால் அதைக் கடற்படையினர் நடந்து வந்து அப்புறப்படுத்திவிட்டனர்.// அப்படி அல்ல சரியான கருத்து இதுதான்-

    காரைநகர் புன்னாலைப் பாலம் நீண்ட பாலம் இரவு ஜெனரேற்றர் கொண்டுவந்த றில்லர் கொண்டு தெருவில்(பாலத்துறோட்)துளைகள் போட்டு அதில் கை நிறைந்த அளவு மட்டுமே வெடிமருந்து(சக்கை) நிரப்பி அதிலிருந்து வயர்கள் எடுத்துப்போய் கடலின் நடுவே உள்ள பற்றைகளுக்கு ஒளித்திருந்து இந்த வயர்களுக்கு ஜெனரேற்றர் மூலம் மின் வழங்கி வெடிக்க வைத்தனர் இப்படி வைக்கப்பட்ட 6 குண்டுகளில் 4மட்டுமே வெடித்தது (இவை பாரிய குண்டுகள் அல்ல)இதுவும் காலை வேளை 7 மணியளவில் கடற்படையினர் வரும்போது வெடிக்கவைக்கப்டடது கடற்படையினர் மூன்று ஜீப்புக்களில் ஒவ்வொரு ஜீப்புக்களுக்கும் இடையில் 100 மீற்றர் தூரம் இடைவெளி விட்டே போவது வழக்கம் இதில் முதலாவது ஜீப் அகப்பட்டது அதில் எந்த இராணுவத்தினரும் கொல்லப்படவில்லை உடனடியாக இந்த ஜீப்புக்கள் உடனடியாக பாதையைவிட்டு விலகி சதுப்பு நிலத்திக்கு இறங்கி இந்த ஜீப்புக்கள் தப்பியோடினர் பின்னர் இராணுவத்தினர் வந்து எல்லாவற்றையும் துப்பரவு பண்ணினர். கடற்படையினர் தப்பியோடும்போது புலிகளும் பற்றையில் இருந்து சதுப்பு கடலுடாக நடந்த தப்பியோடினர் – அவ்வளவு முட்டாள்தனமான இராணுவ நடவடிக்கையை செய்திருந்தனர்

    அன்று கடற்படையினர் தமது கட்டுப்பாட்டடிலுள்ள காரைநகரில் எந்த அடாவடித்தனங்களும் செய்யாமல் பார்த்துக்கொண்டனர்.

    //இராணுவத்தாக்குதல் நடந்தால் கலவரம் வரும். அதனால் சிறையில் குட்டிமணி தங்கத்துரை கொல்லப்படுவார்கள் என யாருமே அன்று நினைக்கவில்லை. இந்நிலையில் பிரபாகரன் அவ்வாறு கணித்தார் என்பது அவரை இன்னொரு புறத்தில் அதிமேதாவியாக காட்டுகிறது என்பதை இவர்கள் கவனிக்க தவறிவிட்டனர்.//

    பிரபாகரன் பற்றியும் புலிகள் பற்றியும் அபிப்பிராயத்தை இன்றும் ரெலோவினர் கொண்டுள்ளனர்: புலிகள் குழப்புவார்கள் இதன் காரணமாக நாட்டில் கலவரம் உருவாக்கும் நோக்கம் இருந்தது இதன் காரணமாக அரசுக்கு எதிரான செயல்களை ஆரம்பிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு புலிகளிடம் இருந்தது – இப்படி நாடு குழம்பினால் சிறையுடைப்பு நடத்த முடியாது என்பதிலிருந்து இந்த கருத்து எழுகின்றது எனவும் எதிர்பார்க்கலாம் அதைவிட பிரபாகரனும் புலிகளும் கொலை செய்வதிலும் கொலைகள் ஏற்ப்படுத்துவதிலும் கொலைக்கான காரணங்களை இயக்கிவைப்பதிலும் கெட்டிக்காரராகவே இருந்துள்ளார்.

    //பாதை- ஆயுதப் போராட்டப்பாதை தவறு அல்ல. ஆனால் மக்களை ஆயுதம் ஏந்தி போராட வைக்க வேண்டும்.// ஆயுதப்போராட்டம் அல்லது போராட்ட வழிமுறைகள் பற்றி பேச முன்பு அமைப்பும் அதன் கட்டுமானம் பற்றியே பேச வேண்டும்.

    Reply
  • thevan
    thevan

    ஆனைக்கோட்டையை நினைத்துக்கொண்டு தவறுதலாக ஆனையிறவு என்று எழுதிவிட்டேன். மன்னிக்கவும். தவறை சுட்டிக்காட்டிய சோதிலிங்கத்திற்கு என் நன்றிகள்.

    அதேபோல் காரைநகர் பாலத்திற்கு பதிலாக பண்ணைப்பாலம் என குறிப்பிட்டுவிட்டேன். நன்றி சோதிலிங்கம்.

    /ஆயுதப்போராட்டம் அல்லது போராட்ட வழிமுறைகள் பற்றி பேச முன்பு அமைப்பும் அதன் கட்டுமானம் பற்றியே பேச வேண்டும்./கட்சி கட்டுவதற்கு ஒரு திட்டம் தேவை. அந்த திட்டத்தில் இலட்சியம் நண்பர் எதிரி பற்றி மட்டுமல்ல அதனை அடைவதற்கான பாதை பற்றியும் பேசவேண்டும். எனவே போராட்ட பாதை பற்றி பேசாமல் ஒரு கட்சி கட்ட முடியாது என்பதே என் கருத்தாகும்.

    Reply
  • APPU HAMMY
    APPU HAMMY

    GOOD WORDS & GOOD THINKING TOO WHAT ABOUT OUR FUTURE FOR TAMILS??

    ஒரு விடுதலை இயக்கம் அல்லது புரட்சிகர இயக்கம் என்ன பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை பெரும்பாலும் அதன் எதிரியே தீர்மானிக்கின்றான். எமது இலங்கை வரலாற்றிலும்கூட முதலில் தமிழ்மக்கள் அகிம்சை வழியிலேயே போராடினார்கள். அது ஆயுதம் கொண்டு நசுக்கப்படும்போது தவிர்க்க முடியாதவாறு இயக்கங்களும் அதே ஆயுதம் தாங்கி பதில் கொடுக்க தள்ளப்படுகின்றனர். அத்துடன் இந்த ஆயுதங்கள் எதிரியிடமிருந்தே பெரும்பாலும் கைப்பற்றப்பட்டு அது பின்னர் எதிரிக்கு எதிராக பயன் படுத்தப்படுகிறது. இதனையே தோழர் மாசேதுங் “துப்பாக்கி ஒரு தோளில் இருந்து இன்னொரு தோளுக்கு மாறுகிறது” என்று எளிமையாக சொன்னார்.

    Reply
  • T Sothilingam
    T Sothilingam

    “நாம் வன்முறைமீது காதல் கொண்ட வன்முறையாளர்கள் அல்ல அன்றி அது போன்ற நோயால் பீடிக்கப்பட்ட மநோயாளிகளோ அல்ல” இந்த தங்கத்தரையின் நீதி மன்ற உரை தேசத்தில் வெளிவந்திருந்தது.

    Reply
  • sangara sasthri
    sangara sasthri

    இங்கு தேவன் என்பவர் சொன்ன விடயங்கள் பெரும்பாலும் ஒன்றும் புதுவிடயங்கள் அல்ல. மாறாக அந்தத் காலத்தில் கம்யுனிஸ்ட்கட்சி தலைவர் சண்முகதாசன் கூறிய விடயங்களைத்தான் இவர் இங்கு கூறியிருக்கிறார். ஆனால் ஒன்றை இங்கு தேவன் முக்கியமாக கவனிக்க வேண்டும். அந்த சண்முகதாசனே தான் கூறியவற்றில் எதையும் நிறைவேற்ற முடியாமல் இறுதியில் இலங்கையில் அல்ல லண்டனில் சென்று மரணமடைந்தார். எனவே இவற்றை நம்பினால் கடைசியில் நாங்களும் வேறு எங்கேயாவது செல்ல வேண்டியேற்படும்.

    தேவன் “தமிழீழம் சாத்தியமில்லை. சிறந்த தீர்வு இல்லை” என்கிறார். இதையே அன்று சண்முகதாசனும் கூறினார். உண்மைதான். சேர்ந்து வாழ முடியவில்லை என்ற படியால்தானே தந்தை செல்வா தமிழீழம் கேட்டார். சரி தமிழீழம் தவறானது என்றால் நல்ல தீர்வு எது என்று இவர்களிடம் கேட்டால் பிரதேச சுயாட்சி என்கின்றனர். சிங்கள அரசு மாவட்ட சுயாட்சியே தர மறுக்கிறது. ஆனால் இவர்களோ அதை விடப் பெரிய பிரதேச சுயாட்சியைக் கோருகின்றனர். இந்த வேடிக்கையை எங்கேபோய் சொல்லி அழுறது?

    அடுத்து தேவன் கேட்கிறார் “ஏன் இந்தியாவை மறந்தீர்கள்” என்று. அதே பாணியில் நான் தேவனிடம் கேட்கிறேன் “ நீங்கள் ஏன் சீனாவை எதிரி என்று குறிப்பிட மறந்தீர்கள். இது தற்செயலானதா அல்லது வேண்டும் என்றே தவிர்க்கப்பட்டதா?” இப்படி மாறி மாறி கேள்வி கேட்கிற விளையாட்டை விட்டிட்டு நான் நேரிடையாக விடயத்திற்கு வருகிறேன். இந்தியாவை எதிர்த்து எம்மால் ஒரு விடுதலையைப் பெறமுடியுமா? அத்தோடு இன்று இலங்கையில் சீனா அதிக நாட்டம் கொள்வதால் இந்தியா தவிர்க்க முடியாமல் தமிழர் பக்கம் வருகிறது. இதனையே அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் செய்த செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரின் பேட்டிகள் குறிப்பிடுகின்றன.

    ஒருமுறை இந்திய தலையீடு குறித்து அறிஞர் ஒருவரிடம் கேட்கப்பட்டபோது அவர் தனது வழக்கமான நக்கல்பாணியில் “இந்தியா தலையீடு செய்யாமல் இருக்க வேண்டுமானால் ஒரு மண்வெட்டியால் இலங்கையை தோண்டி எடுத்து இந்தியாவுக்கு அதிக தூரத்தில் ஆபிரிக்காவிலோ அல்லது ஜரோப்பாவிலோ கொண்டு சென்று வைக்கவேண்டும்”என்றார். இது எதனைக் காட்டுகிறது? இந்திய தலையீடு என்பது தவிர்க்க முடியாதது. எனவே அதற்கு எதிராக எதுவும் செய்ய முடியாது. ஆனால் தந்திரோபாயமாக நாம் இந்தியாவை பயன்படுத்த வேண்டும். இதனையே இன்று இந்த ஒரு சில கம்யுனிஸ்டுக்களைவிட மற்ற அனைத்து தலைவர்களும் கூறுகிறார்கள். புலிகள் கூட இறுதியில் இதனை உணர்ந்தனர்.

    இறுதியாக கட்டுரைக்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும் கூட இந்த கம்யுனிஸ்ட்டுக்கள் மாக்சியத்தை பின்பற்றுவதால் அது குறித்து சில கருத்துக்களை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

    (1)மாக்சியம் ஒரு நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானம் என்கிறார்கள். அப்படியானால் மாக்ஸ் எந்த பரிசோதனைக் கூடத்தில் எத்தனை தொழிலாளர்களை வைத்து எப்படி கூலி முறை பற்றி ஆராய்ந்தார் என்பதை யாராவது மாக்சியவாதிகள் கூறமுடியுமா?

    (2)தன் வாழ்நாளில் ஒருபோதும் வேலைக்கு போகாதவர் மாக்ஸ். அதுமட்டுமல்ல தன் வீட்டு வேலைக்காரிக்கு ஒரு நாளும் சம்பளம் வழங்கியவர் அல்ல. இவர் கூலி பற்றி ஆராய்ந்தது எப்படி விஞ்ஞானம் ஆகும்? மாக்சியவாதிகளே விளக்கம் தருவீர்களா?

    (3)மாக்ஸ் எழுதிய விடயங்கள் யாவும் புத்தகங்களாக வெளிவரவில்லை. வெளிவந்த அவரின் எழுத்துக்கள் எல்லாவற்றையும் படித்தவர்கள் உலகத்தில் ஒருவர் கூட இல்லை. அப்படியிருக்க மாக்சியமே சரியானது. மாக்சியம் மூலமே அனைத்தும் பார்க்கப்பட வேண்டும் என எப்படி மாக்சியவாதிகளால் கூற முடிகிறது?

    (4)இப்பொழுது ஒரு அமைப்பு மாக்சின் எழுத்துக்கள் எல்லாவற்றையும் நூல்களாக தொகுத்து வெளியிடும் பாரிய பணியை செய்து கொண்டிருக்கிறது. அவை யாவும் வெளிவரும்போது மாக்சியம் குறித்த தற்போதைய கருத்துக்கள் பெருமளவில் மாறும் நிலை ஏற்படும் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டுகிறது. இது உண்மையாயின் அப்போது இந்த மாக்சியவாதிகள் என்ன கூறப்போகின்றனர்?

    (5)மாக்ஸ் தனது “மூலதனம்” புத்தகத்தில் சுட்டிக்காட்டிய சில எடுகோள்கள் திரித்தும் தனது கருத்துக்களுக்கு ஏற்றவாறு மாற்றியும் பயன்படுத்தியுள்ளார். இவ்வாறு தவறுகளைக் கொண்ட ஒரு நூல் எப்படி சிறந்த விஞ்ஞானமாக இருக்கமுடியும்?

    (6)மாக்ஸ் மனம் பற்றி கூறுகையில் அது உடலுக்கு வெளியே இருக்கிறது என்றார். அதாவது வெளியில் இருக்கும் சமூகத்தின் கருத்துக்களே மனதில் தாக்கம் கொடுக்கிறது என்றார். அப்படியாயின் ஒரே சமூகத்தில் வாழும் அனைவருக்கும் ஒரே மாதிரியான மனம் அல்லவா இருக்க வேண்டும். ஆனால் உண்மை அப்படி இல்லையே. ஒரே சமூகத்தில் மட்டுமல்ல ஒரே வீட்டில் ஒரே தாய் தந்தைக்கு பிறந்து வளரும் குழந்தைகள் எல்லோருக்கும் ஒரே மனம் இல்லாமல் ஒவ்வொன்றும் வௌ;வேறானதாக இருக்கிறது. எனவே இங்கு மாக்சின் கருத்து தவறாகிறது அல்லவா? மனம் உடலுக்குள் இருக்கிறது. அது ஒவ்வொருவருக்கும் வித்தியாசமாக இருக்கிறது என்றார் பிராய்ட் என்பவர். மனம் குறித்த இவருடைய கருத்துக்களையே இன்று மேற்குலகம் பின்பற்றுகிறது. ஆனால் பிராய்ட் அவர்களிடமும் மனம் குறித்த அனைத்து வினாக்களுக்கும் பதில் இல்லை.

    இந்த மனம் குறித்த விடயங்கள் இந்து மதம் போல் ஆராய்ந்தது உலகில் வேறு எதுவும் இல்லை. மனம் என்பது மட்டுமல்ல அதற்குமேலாக “ஆத்மா” என்னும் ஒரு விடயம் குறித்தும் இந்து மதத்தில் குறிப்பாக சுவாமி விவேகானந்தர் அதிகம் பேசியுள்ளார்.

    Reply
  • கந்தையா
    கந்தையா

    இலங்கை(சிங்களவர் தமிழர்)விரும்பியோ விரும்பாமலோ இந்தியா தனது அரசியலை அங்கு பிரயோகிக்கத்தான் போகிறது. இந்தியப் பிராந்தியத்துக்குள் இருந்துகொண்டு இந்தியா நமக்கு(இலங்கைத் தமிழருக்கு)எதிரியா நண்பனா என்று ஆராய்ச்சி செய்வது மடமைத்தனம். அதுசரி தமிழனுக்கு தமிழன் தான் எதிரி என்றொரு எழுதாத விதி இருக்கே. அதை எப்படித் தீர்க்கப் போறீங்கள். அத்திவாரமே இல்லாயாம் வீடுகட்டுவதைப் பற்றிக் கதைச்சு என்ன பிரயோசனம்..

    Reply
  • BC
    BC

    //இங்கு தேவன் என்பவர் சொன்ன விடயங்கள் பெரும்பாலும் ஒன்றும் புதுவிடயங்கள் அல்ல. //
    ஆனாலும் தேவன் சொன்ன தமிழீழம் ஒரு சிறந்த தீர்வு அல்ல. அடைய முடியாத தீர்வு என்பது உண்மை. இதைவைத்து தானே எவ்வளவு சுத்துமாத்துகள்.

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    நட்புடன் கருத்தாளர்களுக்கு நன்றி.

    தேவனுக்கு
    1. //ஆனால் இந்த ஜக்கியத்திற்கு தடையாக “தமிழீழம்” என்னும் பிரிவினை உள்ளதை இந்த கட்டுரை ஆசிரியர்கள் ஏன் சுட்டிக்காட்ட தவறியுள்ளனர்?//
    மே 18 2009க்கு முன்பிருந்தே நான் தமிழீழத்தை ஒரு தீர்வாகக் கருதவில்லை. அவ்வாறான ஒரு தமிழீழம் உருவாகும் என்ற நம்பிக்கையும் எனக்கிருக்கவில்லை. இக்கருத்து எமது கட்டுரைகளில் பல தடவை வெளிப்பட்டும் இருந்தது.

    2. //புலிகள் மக்களை நம்பியிருந்தால் “தமிழீழம்” கிடைத்திருக்கும் என்றல்லவா நினைக்கத் தோன்றுகிறது.//
    புலிகள் மக்களை நம்பிப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தால் தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளை வென்றெடுத்திருக்க முடியும். தமிழீழம் என்ற கனவை அடைந்திருக்க முடியாது. அதற்காக கனவு காணும் உரிமையை நாம் பறிக்கவும் முடியாது.

    3. //ஒரு விடுதலை இயக்கம் அல்லது புரட்சிகர இயக்கம் என்ன பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை பெரும்பாலும் அதன் எதிரியே தீர்மானிக்கின்றான்.//
    இந்தக் கூற்று பெரும்பாலும் பல புரட்சிகர இடதுசாரி சிந்தனையாளர்களால் மேற்கோள்காட்டப்படுகிறது. இவ்வாதத்தின் அடிப்படையை விளங்கிக் கொண்டாலும் மறுபக்கத்தில் புரட்சிகர இயக்கத்தின் பாதையை எதிரியே தீர்மானிக்க (அதாவது எதிரியின் நடவடிக்கைகள் தீர்மானிக்க) அனுமதிப்பது சரியா? ஏன் விடுதலை இயக்கம் அல்லது புரட்சிகர இயக்கம் புரோஅக்ரிவாக ஒடுக்குமுறையாளரிலும் ஒருபடி மேலே சென்று தன்னுடைய அரசியலையும் நடவடிக்கைகளையும் முன்கூட்டியே தீர்மானிக்க முடியாது. அதில் என்ன தவறு உள்ளது.

    இதனால் தான் விடுதலைப் போராட்டங்கள் பெரும்பாலும் தங்களை தக்க வைக்க முடியாமல் உள்ளனர். ஏனெனில் விடுதலை அமைப்புகள் ஒடுக்குமுறையாளனின் அரசியல் இராணுவ நடவடிக்கைக்கு பதில் நடவடிக்கை எடுப்பவர்களாகவே உள்ளனர்.

    இது பற்றி கருத்தாளர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்தால் பயனுள்ளதாக அமையும்.

    4. //இந்திய ஆயுதத்தை நம்பியதல்ல மாறாக ஆயுதம் கொடுத்த இந்தியாவை நம்பியதே பாரிய தவறாகும் என்பதே.//
    கட்டுரையில் இந்தியாவின் ஆயுதம் என்பது இந்தியாவையே குறிக்கின்றது. இந்தியாவை நம்பியதே பெரிய தவறு.
    இந்தியா தொடர்பாக சங்கர சாஸ்திரிகளின் கூற்று சரியானது என்றே நினைக்கிறேன். //இந்திய தலையீடு என்பது தவிர்க்க முடியாதது. எனவே அதற்கு எதிராக எதுவும் செய்ய முடியாது. ஆனால் தந்திரோபாயமாக நாம் இந்தியாவை பயன்படுத்த வேண்டும். இதனையே இன்று இந்த ஒரு சில கம்யுனிஸ்டுக்களைவிட மற்ற அனைத்து தலைவர்களும் கூறுகிறார்கள்.//

    5. விடுதலை அமைப்புகளிடையே பல்வேறு தகவல்கள் உலாவருகின்றது. அவற்றுள் சில உண்மைகளும் சில வதந்திகளும் உண்டு. உண்மைகளைக் கண்டு உறுதிப்படுத்துவதே உண்மையைத் தேடுவோரின் கடமை. எமது அண்மைய கடந்தகாலத்தின் வரலாறுகள் செவிவழியான தகவல்களாகவே உள்ளது. அதனை உறுத்திப்படுத்துவதற்கு இவ்வாறான தளங்களும் அதில் வரும் உங்கள் கருத்தக்களும் உதவும்.

    தேவன் உங்கள் கருத்தின் இறுதியில் உள்ள
    //(1)தீர்வு- தமிழீழம் சாத்தியமற்ற தீர்வு மட்டுமல்ல. அது தமிழ் மக்களுக்கு ஒரு சிறந்த தீர்வும் அல்ல.
    (2)எதிரி- இந்தியா எமது நட்பு சக்தி அல்ல. அதுவும் எமது எதிரியே.
    (3)பாதை- ஆயுதப் போராட்டப்பாதை தவறு அல்ல.
    (4)ஜக்கியம்- தமிழ் சிங்கள உழைக்கும் மக்களின் ஜக்கியம் மட்டுமல்ல இலங்கை இந்திய புரட்சிகர சக்திகளின் ஜக்கியமும் அவசியமாகின்றது.//
    உடன்படுவதற்கு எனக்கு எவ்வித தடையுமில்லை. ஆனால் மக்களை ஆயுதம் ஏந்திப் போராட வைக்கும் போது பல்வேறு தளங்களிலும் விளைவுகளை மதிப்பீடு செய்த பின்னர் மட்டுமே அந்த முடிவுக்கு வர முடியும். அரசியல் ரீதியாக சரி என்பதற்காக ஆயுதப் போராட்டத்தையோ மக்களை ஆயுதம் ஏந்தவதை சரியென்று கூறிவிட முடியாது.

    சங்கர சாஸ்திரி//சேர்ந்து வாழ முடியவில்லை என்றபடியால்தானே தந்தை செல்வா தமிழீழம் கேட்டார்.//
    அப்படி நான் கருதவில்லை. எழுபதக்களில் வீழ்ந்த தங்கள் வாக்கு வங்கியை மிண்டும் தூக்கி நிமிர்த்தவே வட்டுக்கோட்டைப் பிரகடனமும் தமிழீழக் கோரிக்கையும். பாவம் தம்பி இவர்களை நம்பி மோசம் போய்விட்டார். மிஞ்சிய சம்பந்தர் இன்னும் றீல் விடகிறார்.

    சங்கர சாஸ்திரிகளின் மார்க்ஸியம் தொடர்பான கேள்விகள் எனது அறிவுக்கு அப்பாற்பட்டவை. அவற்றுக்கு பழம்பெரும் கீபோட் மார்க்ஸிட்டுக்களையே பதிலளிக்க விடுவது தான் பொருத்தமானது.

    ஆனால் ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்த ஒரு தத்துவமாக அதனை எனது அறிவுக்கு எட்டியவரை நம்புகின்றேன்.

    Reply
  • thevan
    thevan

    நான் சுட்டிக்காட்டிய விடயங்கள் தொடர்பாக தங்களின் கருத்துக்களை பரிமாறிக்கொண்ட தேசம் ஆசிரியர்கள் ஜெயபாலன் சோதிலிங்கம் ஆகியோருக்கு என் நன்றிகளை முதலில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இங்கு எனது நோக்கம் உங்கள் எழுத்தில் பிழை பிடிக்க வேண்டும் என்பதல்ல மாறாக எமது மக்களின் பிரச்சனை சரியான முறையில் அணுகப்படவேண்டும் என்ற அக்கறையே.

    இங்கு சங்கர சாஸ்திரிகள் தான் குழம்பியுள்ளாரா அல்லது வேண்டுமென்றே மற்றவர்களை குழப்புகிறாரா என்று தெரியவில்லை. ஏனெனில் நான் சுட்டிக்காட்டிய விடயங்களை ஏற்றுக்கொள்வதில் தனக்கு எந்த தடையும் இல்லை என்று கூறிய ஜெயபாலன் அடுத்து இந்தியா விடயத்தில் சங்கர சாஸ்திரியின் கருத்தை எற்பதாக எழுதியிருப்பது மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுக்கிறது.

    இந்தியா தொடர்பாக சங்கர சாத்திரிகள் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் அவருக்கு மட்டுமல்ல இன்று தமிழ் சமூகத்தில் மதிக்கப்படுகின்ற பலரும் கொண்டிருக்கும் கருத்துத்தான். இவர்கள் பயன்படுத்தும் சொற்கள் சில வேறுபட்டாலும் அவர்கள் சொல்ல வரும் கருத்து ஒன்றுதான். அதாவது இந்தியா பெரிய நாடு. அது தன் நலன்களுக்காக இலங்கையில் தலையிடுவதை தவிர்க்க முடியாது. ஆனால் நாம் இந்தியாவை தந்திரோபாயமாக பயன்படுத்தி தமிழர்களுக்கு உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்கிறார்கள். இது சரிதானா? இது சாத்தியம்தானா? என்பது குறித்து கொஞ்சம் கூட இவர்கள் அலசுவதில்லை.

    இந்தியா பெரிய நாடு .எனவே அதனை எதிர்க்க முடியாது என்கிறார்கள். ஏற்கனவே இலங்கை மக்கள் இந்தியாவுக்கு எதிராக வீரம் செறிந்த போராட்டத்தை நடத்திய அனுபவத்தைக் கொண்டிருக்கும்போது இவர்களால் இதை எப்படி சொல்ல முடிகிறது? மேலும் உலக வரலாற்றில் பெரிய அமெரிக்க வல்லரசை சிறிய வியட்நாம் நாடு விரட்ட வில்லையா? ரஸ்சிய வல்லரசை ஆப்கான் நாடு விரட்டவில்லையா? இன்றும் கூட கியுபா நாடு அமெரிக்காவை எதிர்த்து சுதந்திரமாக நிற்பதை நாம் காணவில்லையா?

    பெரிய நாடு என்பதற்காக அருகில் உள்ள சிறிய நாட்டில் நாட்டான்மை செய்வதை எந்த சுதந்திர உணர்வுள்ள மனிதனும் அனுமதிக்கமாட்டான். எந்தப் பெரிய வல்லரசாக இருந்தாலும் ஒரு நாட்டை தொடர்ந்து அடிமைப்படுத்தி வைத்திருக்கமுடியாது. அடிமைத்தனத்திற்கு எதிராக மக்கள் நிச்சயம் எழுச்சி கொள்வார்கள். அவர்கள் தியாகம் நிறைந்த வீரம் செறிந்த போராட்டத்தை நிச்சயம் புரிவார்கள். இறுதியில் சுதந்திரம் பெறுவார்கள். இதுதான் உலக வரலாறாக இருக்கும்போது இலங்கையில் மட்டும் இந்திய விரிவாதிக்கத்திற்கு எதிராக தமிழ் மக்கள் கிளர்ந்தெழக்கூடாது தொடர்ந்து அடிமையாக இருக்க வேண்டும் என்று கூறினால் இது கடைந்தெடுக்கப்பட்ட துரோகம் அல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்?

    அடுத்து இந்தியாவை பயன்படுத்த வேண்டும் என்கிறார்கள். ஏற்கனவே இப்படி வெளிக்கிட்டுத்தான் இத்தனை அழிவுகளைச் சந்தித்து இருக்கிறம். மீண்டும் பயன்படுத்த வெளிக்கிட்டு இன்னொரு முள்ளிவாய்க்கால் அழிவுக்குத்தான் இவர்கள் வழி காட்டப் போகிறார்கள்.

    இந்தியா சிறுபான்மை இனங்களின் சிறைக் கூடம் என்று தமிழ்நாடு விடுதலைப்படை தளபதி தோழர் தமிழரசன் கூறினார். அதனால்தான் இன்று இந்தியாவில் பல்வேறு தேசிய இனங்கள் விடுதலைப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். இந்தியாவில் போராட்டம் அற்ற ஒரு அமைதியான மாநிலத்தைக் கூட சுட்டிக்காட்ட முடியாது. இலங்கையில் தமிழ் மக்கள் உரிமை பெற்றால் அது தமிழ் நாட்டு தமிழ் மக்களுக்கு ஒரு உத்வேகத்தைக் கொடுத்து அவர்களும் விடுதலைப் போராட்டத்தை ஆரம்பித்து இந்தியா சுக்கு நூறாக உடைத்துவிடுவார்கள் என கருதி இந்திய அரசு எமது போராட்டத்தை தொடர்ந்து திட்டம் போட்டு நசுக்கி வருகிறது என்கிறார்கள். அப்படியாயின் இந்தியா உடையக் கூடாது என்பதற்காக நாம் தொடர்ந்து அடிமையாக இருக்க வேண்டுமா? இது என்ன நியாயம்? இந்திய ஆதரவு கனவான்களே இது குறித்து உங்கள் பதில் என்ன?

    தமிழ் சிங்கள உழைக்கும் மக்களின் ஜக்கியம் இலங்கையில் இருந்து இந்தியாவை விரட்டியடிக்கும். இலங்கை இந்திய புரட்சிகர சக்திகளின் ஜக்கியம் இந்திய விரிவாதத்திற்கு முடிவு கட்டும். இதுவே நாளைய வரலாறாக அமையும். அதனை சங்கர சாஸ்திரிகளோ அல்லது வேறு எவராலுமே தடுத்து நிறுத்த முடியாது என்பதை உறுதியாக சொல்கிறேன்.

    Reply
  • tholar
    tholar

    தமிழீழம்- இந்த பிரிவினைத் தீர்வு சாத்தியமில்லை என்பதற்காக மறுக்கப்படவில்லை. மாறாக இது தமிழ் மக்களுக்கு சிறந்த தீர்வு இல்லை என்பதாலேயே மறுக்கப்படுகிறது. இன ஒடுக்கு முறைக்குள்ளான தமிழ் மக்களுக்கு என முன்வைக்கப்பட்ட இந்த தீர்வானது இலங்கையில் உள்ள தமிழ் பேசும் மக்கள் அனைவரையும் ஒன்று படுத்துவதற்கு மாறாக அம் மக்களை பிரித்து ஆளும்வர்க்கத்திற்கு அடக்கு முறைக்கு துணை செய்கிறது. இந்த தமிழீழத் தீர்வுக்கு பதிலாக பிரதேச சுயாட்சி கோரிக்கை முன்வைக்கப்பட்டிருப்பின் இன ஒடுக்கு முறைக் கெதிரான போராட்டத்தில் ஒரு குடையின் கீழ் முஸ்லிம் மக்களை மட்டுமல்ல மலையக மக்களையும் இணைத்திருக்கமுடியும். அத்துடன் இதற்கு சிங்கள மக்கள் மத்தியில் முற்போக்கு சக்திகளின் ஆதரவையும் பெற்றிருக்கமுடியும். எல்லாவற்றுக்கு மேலாக இந்திய விரிவாதிக்கம் உட்பட அனைத்து ஏகாதிபத்திய ஊடுருவலையும் தடுத்திருக்க முடியும்.

    பிரதேச சுயாட்சி- இலங்கையை ஜந்து பிரதேசங்களாக பிரித்து அவற்றுக்கு சுயாட்சி வழங்கப்பட வேண்டும் என கம்யுனிஸ்ட்டுக்கள் கோருகின்றனர். இது ஓன்றும் புது வடிவம் அல்ல. ஏற்கனவே இது சுவிற்சலாந்தில் “கண்டோமென்டுகள” என குறிப்பிட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இலங்கையைப் போல் பரப்பளவு மற்றும் பல்வேறு இனங்கள் கொண்ட சுவிற்சலாந்தில் நடைமுறையில் இருக்கும் முறையை ஏன் இலங்கையில் கொண்டு வரமுடியாது? இந்தியா போன்று மாநில சுயாட்சி வேண்டும் எனக் கோருவோர், கனடா போன்று மாகாண சுயாட்சி வேண்டும் என்று கோருவோர் அதனிலும் சிறந்த பிரதேச சுயாட்சியை சுவிஸ் போன்று இலங்கையில் கொண்டு வரவேண்டும் எனக் கோரினால் ஏன்தான் வெறுக்கின்றனர் என்று புரியவில்லை. இங்கு சங்கர சாஸ்திரிகள் எதற்காக பிரதேச சுயாட்சியை நக்கல் அடிக்கிறார் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

    இந்தியா- 1983ல் சிலர் இந்தியா வரும் .விடுதலை கிடைக்கும் என்றார்கள். அவர்கள் கூறியபடி இந்தியா வந்தது .ஆனால் உரிமை கிடைக்கவில்லை. மாறாக எமக்கு உதைதான் கிடைத்தது. இப்போது மீண்டும் சிலர் இந்தியா வரும். உரிமை பெற்றுத் தரும் என்கிறார்கள். இந்த முறை என்ன கிடைக்கப் போகிறதோ தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக உரிமை மட்டும் கிடைக்காது என்பதை உறுதியாக கூறமுடியும். இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி ஒரு கூட்டம் காலம் காலமாக இந்தியாவைக் காட்டி மக்களை ஏமாற்ற அனுமதித்துக்கொண்டிருப்பது? இதற்கு ஒரு முடிவு கட்டப்பட வேண்டாமா?

    இப்போது புலிகள் இல்லை. எனவே இந்தியா உரிமை பெற்றுத் தரும் என்று கூறுபவர்கள் ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் அத்தகைய உரிமையை பெற்று தர வேண்டும். அவ்வாறு பெறத் தவறினால் தமிழ் மக்கள் முன் பகிரங்க மன்னிப்பு கோருவதுடன் இந்தியா எமக்கு எதிரிதான் என்று அறிவிக்க வேண்டும். இந்த சவாலை இந்திய ஆதரவாளர்கள் முன் வைக்கிறேன். அவர்கள் இந்த சவாலை ஏற்று நடைமுறைப் படுத்திக் காட்ட வேண்டும் இல்லையேல் இந்திய ஆதரவுப் பிரச்சாரத்தை நிறுத்த வேண்டும். தொடர்ந்தும் மக்களை ஏமாற்றக்கூடாது.

    மாக்ஸ் மற்றும் மாக்சியம் மீதான சங்கர சாஸ்திரியின் விமர்சனங்களுக்கான பதில்கள்.

    (1)மாக்சியம் ஒரு நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானம் என்கிறார்கள். அப்படியானால் மாக்ஸ் எந்த பரிசோதனைக் கூடத்தில் எத்தனை தொழிலாளர்களை வைத்து எப்படி கூலி முறை பற்றி ஆராய்ந்தார் என்பதை யாராவது மாக்சியவாதிகள் கூறமுடியுமா?
    போல் ஜோன்சன் என்பவர் “இண்டலெச்சுவல்” என்னும் புத்தகத்தில் முன்வைத்த குற்றச்சாட்டையே சங்கரசாஸ்திரிகள் இங்கு தமிழில் வைத்துள்ளார். போல் ஜோன்சனின் இந்த நூலைப்படித்தவர் அதற்கு எழுதிய பதில் நூல்களை ஏன் படிக்கத் தவறினார் என்று புரியவில்லை..பரவாயில்லை. மாக்ஸ் 12 வருடங்கள் தினமும் 16 மணிநேரம் செலவு செய்து எழுதியதே “மூலதனம்” புத்தகமாகும். அவர் இதனை வெறும் தத்துவமாக எழுதவில்லை. பல்லாயிரக் கணக்கான எடுகோள்கள் அடிக் குறிப்புகள் கொண்டு நிறுவியுள்ளார். அவர் பரிசோதனைக் கூடத்தில் தொழிலாளர்களை வைத்து ஆராயவில்லை என்பது உண்மைதான். ஆனால் அவர் எப்போதும் தொழிலாளர்களுடன் நெருக்கமாக இருந்து போராட்டங்களையும் அமைப்புகளையும் முன்னெடுத்தவராகவே இருந்துள்ளார். பல்வேறு நாடுகளிலும் இருந்த தொழிலாளர் தலைவர்களுடன் தொடர்ந்தும் தொடர்பில் இருந்து கருத்துக்களை பரிமாறியிருக்கிறார். பல்லாயிரக் கணக்கான அவரின் கடிதங்கள் இதற்கு சாட்சியாய் அமைகின்றன.

    (2)தன் வாழ்நாளில் ஒருபோதும் வேலைக்கு போகாதவர் மாக்ஸ். அதுமட்டுமல்ல தன் வீட்டு வேலைக்காரிக்கு ஒரு நாளும் சம்பளம் வழங்கியவர் அல்ல. இவர் கூலி பற்றி ஆராய்ந்தது எப்படி விஞ்ஞானம் ஆகும்? மாக்சியவாதிகளே விளக்கம் தருவீர்களா?
    இது தவறான குற்றச்சாட்டு. ஒருமுறை அவர் லண்டன் புகையிர வேலைக்கு சென்றார். ஆனால் அங்கு அவரின் கையெழுத்து நன்றாக இல்லை என்று கூறி வேலை வழங்கப்படவில்லை. அதேவேளையில் அவர் அமெரிக்காவில் இருந்து வெளியான ஒரு பத்திரிகையின் ஜரோப்பிய நிருபராக கடமையாற்றினார். அதற்காக அவருக்கு சிறிதளவு ஊதியமும் வழங்கப்பட்டது. அடுத்து மாக்ஸ் வேலைக்காரியான ஹெலன் டெமூத்திற்கு சம்பளம் வழங்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் இதனை அந்தக்கால சமூக அமைப்புடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். ஜென்னியின் தாயாரினால் குறிப்பிட்ட பணம் கொடுத்து வாங்கப்பட்ட இவ் ஹெலன் டெமூத் ஜென்னிக்கு உதவியாக அனுப்பப்பட்டார். (இது அந்தக் காலத்தில் வசதியான குடும்பங்களில் நடைமுறையாக இருந்துள்ளது.) எனினும் பின்னர் அவர் மாக்ஸ் குடும்பத்தில் ஒருவராகவே நடத்தப்பட்டுள்ளார். அவர் மாக்சின் பணிகளுக்கு விருப்பத்துடன் மாபெரும் பங்காற்றியுள்ளார். எனவேதான் அவர் இறந்த பின்பு இதனை சுட்டிக்காட்டி உரையாற்றிய எங்கெல்ஸ்; அவரின் பணிக்கு மதிப்பளிக்கும் வண்ணம் மாக்ஸ் கல்லறையில் அவரை புதைத்தார். அது சரி சங்கர சாஸ்திரி அவர்களே வேலைக்கு போகாதவர், சம்பளம் வழங்காதவர், கூலி பற்றி அராயக் கூடாது என்று ஏதாவது விதி இருக்கிறதா?

    (3)மாக்ஸ் எழுதிய விடயங்கள் யாவும் புத்தகங்களாக வெளிவரவில்லை. வெளிவந்த அவரின் எழுத்துக்கள் எல்லாவற்றையும் படித்தவர்கள் உலகத்தில் ஒருவர் கூட இல்லை. அப்படியிருக்க மாக்சியமே சரியானது. மாக்சியம் மூலமே அனைத்தும் பார்க்கப்பட வேண்டும் என எப்படி மாக்சியவாதிகளால் கூற முடிகிறது?
    மாக்ஸ் பல்லாயிரக்கணக்கான கடிதங்கள் எழுதியுள்ளார். பல நூற்றுக் கணக்கான கட்டுரைகள் எழுதியுள்ளார். பல்வேறு குறிப்புகள் எழுதியுள்ளார். இவை எல்லாம் நூல்களாக வெளிவரவில்லை என்பதும் வெளிவந்த எழுத்துக்கள் எல்லாவற்றையும் கூட படித்தவர்கள் இருப்பார்களா என்பதும் உண்மைதான். ஆனால் அவர் எழுதியவை எல்லாம் மார்க்சிய சாரம்சத்திற்கு ஆதரவாக இருக்கிறதேயொழிய ஒன்று கூட அதற்கு எதிராக இல்லை. எனவே அவரின் அனைத்து எழுத்தையும் படித்துவிட்டே மார்க்சியம் சரியானது என்று சொல்ல வேண்டும் எனக் கோருவது சின்னப்பிள்ளைத் தனமான வாதமாகவே இருக்கிறது.

    (4)இப்பொழுது ஒரு அமைப்பு மாக்சின் எழுத்துக்கள் எல்லாவற்றையும் நூல்களாக தொகுத்து வெளியிடும் பாரிய பணியை செய்து கொண்டிருக்கிறது. அவை யாவும் வெளிவரும்போது மாக்சியம் குறித்த தற்போதைய கருத்துக்கள் பெருமளவில் மாறும் நிலை ஏற்படும் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டுகிறது. இது உண்மையாயின் அப்போது இந்த மாக்சியவாதிகள் என்ன கூறப்போகின்றனர்?
    சங்கர சாஸ்திரிகள் இந்த செய்தியை எங்கிருந்து பெற்றார் என்று தெரியவில்லை. ஆனால் கனடாவில் உள்ள பேராசிரியர் ஒருவர் கேம்பிறிட்ஜ் பல்கலைக் கழகத்திற்கு சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரையில் இதனைக் குறிப்பிட்டிருக்கிறார். அந்த பேராசிரியர் என்னுடன் தொடர்பு கொண்டு தனது அந்த ஆய்வுக் கட்டுரையை அனுப்பியிருந்தார். அவரிடம் நான் “ மாக்சின் கருத்து கடந்த காலத்தில் பெருமளவு மாற்றப்பட்டுள்ளது என்பதற்கும் இனி வெளிவரப்போகும் நூல்கள் இதுவரை மாக்ஸ் பற்றி கொண்டிருந்த கருத்தை பெருமளவில் மாற்றும் என்பதற்கும் ஒரு உதாரணத்தை சுட்டிக் காட்டுங்கள்” என்று கேட்டேன். அதற்கு அவர் இதுவரை பதில் தரவில்லை. எனவே இதையே சங்கர சாஸ்திரிகளிடமும் கேட்கிறேன். முடிந்தால் உங்கள் கூற்றுக்கு ஆதாரமாக ஒரு உதாரணம் காட்டுங்கள். அதன்பின நான் உங்கள் விமர்சனத்தை ஏற்றுக் கொள்கிறேன்.

    (5)மாக்ஸ் தனது “மூலதனம்” புத்தகத்தில் சுட்டிக்காட்டிய சில எடுகோள்கள் திரித்தும் தனது கருத்துக்களுக்கு ஏற்றவாறு மாற்றியும் பயன்படுத்தியுள்ளார். இவ்வாறு தவறுகளைக் கொண்ட ஒரு நூல் எப்படி சிறந்த விஞ்ஞானமாக இருக்கமுடியும்?
    இது எங்கெல்ஸ் காலத்திலேயே கூறப்பட்ட ஒரு குற்றச்சாட்டுதான். இதற்கு எங்கெல்ஸ் மூலதனம் புத்தகத்திற்கு எழுதிய தனது முன்னுரையில் தகுந்த பதில் அளித்துள்ளார். அப்படியிருந்தும் சங்கர சாஸ்திரிகள் எதற்காக மீண்டும் அதனை இங்கு கூறுகிறார் என்று தெரியவில்லை. மூலதனம் புத்தகத்தில் மாக்ஸ் பல்லாயிரம் அடிக் குறிப்புகளை பயன்படுத்துள்ளார். அவற்றில் சில எண் தவறுகள் இடம்பெற்றது உண்மைதான். ஆனால் அவை மாக்ஸ் சுட்டிக்காட்ட வந்த விடயத்தை பாதிக்கவில்லை என்பதை எங்கெல்ஸ் விளக்கியுள்ளார்.

    இந்த பின்னூட்டம் மிகவும் நீண்டு விட்டதால் மனம் குறித்த மாக்ஸ் கருத்துக்களை அடுத்த பின்னூட்டத்தில் தர விரும்புகிறேன்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    சங்கரசாஸ்திரியின் அறிவு (புலமை) தமிழ்மக்களின் குறிப்பாக யாழ்பாண படித்தவர்க்கத்தின் குணாம்சம்களையே பிரதி பலிக்கிறது.
    முப்பது வருடங்கள் யாழ்பாணமத்தியவர்கப் புத்தி மலையகத்தில் வாழும் உழைப்பாளி மக்களையோ சாதிரீதியாக பிளவுண்டு போனவர்களையோ ஏன் கிழக்குமகாணத்து மக்களையோ தமிழர்களாக ஏற்றுக்கொண்டதில்லை.
    இது அப்பட்டமான முதாலிளித்துமான குணாம்சமே!.இதைத்தான் கடந்த முப்பது வருடங்களாக புலிகள் செய்தார்கள். அவர்களின் வேலைத்திட்டத்திற்கு பரிபூரண ஆதரவையும் வழங்கியவர்கள் புலம்பெயர் தமிழர்களே. இந்த மத்தியதரவர்க்கம் ஒருபகுதி ஈழத்து உழைப்பாளி மக்களை புதைத்தாகிவிட்டது.
    அடுத்தது மாக்ஸியத்தை குழிதோண்டிப் புதைப்பதற்கு மண்வெட்டியுடன் புறப்பட்டிருக்கிறார்கள். இதில் ஒருவரே சங்கரசாஸ்திரி. மாக்ஸியத்தின் கோட்பாடுகளுக்கு ஏற்பட்ட ஏச்சுக்களும் பேச்சுக்களும் வசைவு வார்த்தைகளும் யேசுபிரானுக்கு கூடகிட்டியதில்லை. தொடாந்து அப்படியே செய்யுங்கள். அதிலிருந்து நீங்கள் மீறமுடியாது என்பதே எங்கள் எண்ணம்.
    ஆனால்…நிலப்பிரபுத்தவ வர்க்கத்தை பலாத்காரமாக தூக்கியெறித்த இந்த முதாலித்துவம் ஆட்சியில் அமர்ந்து கொண்டது. அதற்கிருந்த பேராசையான பணம் தேடும் வெறி நீண்டகாலத்திற்கு இந்த உலகை சமாதானத்திற்குள் வைத்திருக்க முடியவில்லை.

    இது அடிக்கடி மதவெறிக் இனவெறி இனப்பெருமைகளைப் பேசியே தனது பிரச்சாரத்தின் வலிமைகொண்டு யுத்தங்களை வெற்றி கெண்டது. இதன் ஒவ்வொரு வெற்றியும் உழைப்பாளிமக்களின் தோல்வியாகின. அது மாக்ஸியத்தின் தோல்வியும் கூடத்தான். இன்று…உலகமக்கள்- உழைப்பாளி மக்கள் உலகத்தின் ஒருவீதமக்களுக்கு கடன்பத்திரம் எழுதப்பட்டவர்களாக்கப் பட்டிருக்கிறோம்.
    எனக்கு கிடைத்த புள்ளிவிபரப்படி…
    அமெரிக்காவின் தேசியக்கடன் பதின்மூன்று திரிலியன் டொலராகவும் பிரித்தானியாவின் தேசியகடன் நான்கு திரிலியன் ரேலிங்ஸ் பவுஸ்சாகவும் இருக்கிறது.ஐரோப்பிய யூனியனின் கடன் தொகை இவ்வளவு இல்லாவிட்டால் விட்டாலும் உலககளவில் யுத்தம் நடைபெறாவிட்டால் பிரித்தானியாவின் கடன்தொகையை ஒர்ரிரு வருடங்களிலேயே மிஞ்சிவிடுமென்று கணக்கிடப் பட்டிருக்கிறது. ஆகவே இத்தால் அறியப்படுவது என்னவென்றால். காலத்திற்கு காலம் உற்பத்தி சாதனங்கயையும் உற்பத்திசக்திகளின் ஒருபகுதியை அழித்தொழிக்காமல் முதாலிளித்துவம் உயிர்வாழமுடியாது என்பதே. இதைத்தான் கால்மாக்ஸ்சும் எடுத்துரைத்தார்.

    இதற்கு மாற்றுவழி தேடுவதாக இருந்தால் உலகத்தொழிலாளரே ஒன்று படுங்கள் என்ற கோஷத்தையும் முன்வைத்தார். இந்த தொழிலாளர் ஐக்கியத்தின் ஊடாக புதிய ஒருசமுதாயத்தை நிறுவமுடியும் அதற்கான சக்தியும் அவர்களிடம் உண்டு என்பதையும் பலவகையிலும் நிறுவியும் காட்டினார். இதுவே! மாக்ஸியம்.

    சாஸ்திரி எங்கள் மேதாவிலாசம் எம்இனத்தை இன்னும் இக்கட்டான நிலைக்கே இட்டுச்செல்லும். இதே பட்டியுடன் உலவவிடுவது உங்கள் இனத்தில் பிறந்த எனக்குக்கும் அழகல்ல. இதற்கான உங்கள் மறுப்பை தொடர்ந்து எழுதுங்கள். ஆழ்கடல் மூழ்கி முத்தெடுப்போம். அதன் மூலம் மாலைகள் கோர்த்து எம் இனத்திற்கு சூட்டுவோம்.

    Reply
  • kathir
    kathir

    //அடுத்து மாக்ஸ் வேலைக்காரியான ஹெலன் டெமூத்திற்கு சம்பளம் வழங்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் இதனை அந்தக்கால சமூக அமைப்புடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். ஜென்னியின் தாயாரினால் குறிப்பிட்ட பணம் கொடுத்து வாங்கப்பட்ட இவ் ஹெலன் டெமூத் ஜென்னிக்கு உதவியாக அனுப்பப்பட்டார். (இது அந்தக் காலத்தில் வசதியான குடும்பங்களில் நடைமுறையாக இருந்துள்ளது.) //tholar

    நாவலர் காலத்திலும் இப்படித்தானே. அந்தக்கால நிலைமைக்கு ஏற்றாற் போல் நாவலரும் நடந்துள்ளார்.

    Reply
  • thiru
    thiru

    மாக்ஸ்சிசம் பேசுபவர்கள் ஒரு விசயத்தை கவனம் எடுக்க வேண்டும் புலிகளின் முதலாவது புத்தகம் சோசலிசம் என்றுதான் சொன்னது பிறகு என்ன நடந்தது கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கோ!

    அந்த புத்தகத்தை தூக்கியவர்கள் தங்களை, மற்றவர்களை, எல்லாரையுமே கொன்றார்களே அது ஏன்!
    மாக்ஸிசம் சரியான தத்துவம் என்றால் ஏன் இன்னும் எழும்புதில்லையாம் சிலவேளை இதை கதைப்பவர்களே பிழைவிடுகினமோ அப்டியாயின் யாருடைய மாக்ஸிசம் சரியானது என இங்கே எழுதுங்கோ!

    சீனாவில் ஏன் மாக்ஸசம் தோற்றுப்போனது இப்ப அங்க கொம்பன்சேசன் கொடுக்கினம் இது மாக்ஸிசமோ! சனங்கள் இருந்த இடத்தை விட்டு 24 மணிநேரத்தில எழுப்பி அந்த சனங்கள் அழுதுகொண்டிருக்கிறது அந்த சனங்கள் இருந்த இடத்தில அமெரிக்க ஜரோப்பியர்களுக்கு பெரிய வீடுகள் கட்டப்படுகிறது… மாக்ஸிசம் சீனாவைவிட வேறுயார் இனிபேச வேணும்?!

    நீங்கள் மாக்ஸசம் என்று வாயால் கதைச்சால் உங்களுக்கும் இனிமேல் முள்ளிவாய்க்கால் வெட்டுவார்கள் ஆகவே முதலில் சனத்துக்கு உதவி செய்யுங்கோ. உதவி செய்து கொண்டு உங்கட மாக்ஸிசத்தை மாக்ஸிசம் என்று சொல்லாமல் அவர்களின்ர வாழ்க்கையுடன் இணையுங்கோ. சிலவேளை நீங்கள் நினைக்கிற தத்துவத்தை நிசமாக்கலாம். இதைவிட்டுவிட்டு நோட்டீஸ்ல மாக்கிசிசம் விட்டால் சனத்திடம் எடுபடாது சனம் உதுகளை நல்லா படித்துவிட்டார்கள்!

    Reply
  • nantha
    nantha

    ஜே ஆர் ஜெயவர்த்தனாவும், புலிகளும் “சோஷலிசம்” என்று சொன்னபடியால் சோஷலிசம், கம்யூனிசம் என்பன “பிழை” என்று ஒருவர் எழுதியுள்ளமை வேடிக்கையும், அறியாமையுமாகும். கம்யூனிசத்தின் பரம எதிரியும் அமெரிக்க எடுபிடியான ஜே ஆர், பிரபாகரன் கும்பலின் கூட்டுச் சதியின் விளைச்சலே 1983 இனகலவரம். இந்த “கள்ளக் காதல்” பின்னர்” வன்னியை புலிகளுக்குப் பிரித்துக் கொடுத்தலிலும், இந்திய சமாதானப் படைக்கு எதிராக புலிகளுக்கு ஆயுதம் வழங்கியதிலும் முடிந்துள்ளது. ஜே ஆர் ஜெயவர்த்தனவுக்கும் “சோஷலிசத்துக்கும்” என்ன சம்பந்தம்? புலிகளும் யு என் பியும் ஆரம்பத்தில் “சோஷலிசம்” என்ற கோஷம் பிரயோகிப்பதன் மூலம் மற்றவர்களை முட்டாள்களாக்கி சோஷலிசத்துக்கும் கம்யூனிசத்துக்கும் ஆதரவளித்தவர்களை கொன்று குவித்தனர். சோஷலிசத்துவத்துக்கும், கம்யூநிசத்துக்கும் பரம எதிரிகளான கத்தோலிக்க/கிறிஸ்தவ பாதிரிகள் புலிகளுக்கும், யு என் பிக்கும் ஆதரவு கொடுப்பவர்கள் என்ற சாதாரண உண்மையை மறைத்து மீண்டும் அந்த மகத்தான தத்துவங்களுக்கு எதிராக விஷம் கக்கும் நோக்கம் என்ன?

    பாராளுமன்றத்தில் இருந்த ஒரேஒரு கம்யூனிஸ்ட் எம்பியான சரத் முத்தேட்டுவகம கொல்லப்பட்டுள்ளமை முதல் படியாகும். புலிகளும் முதலில் கொன்று தள்ளியது தமிழர்களிடையே இருந்த கம்யூனிச்டுக்களையும் இடதுசாரிகளையும் என்பதை மறந்து இப்போது தொலைந்து போன “நாசி” கிரிமினல்கலான புலிகளை “கம்யூனிஸ்ட்டுக்கள்” என்று வர்ணம் தீட்டுவதன் உட்கருத்து புரிந்து கொள்ளக் கூடியதே!

    புலிகளுடன் இறுதிவரை படுத்துறங்கிய கத்தோலிக்க பாதிரிகளையும் கம்யூனிஸ்ட்டுக்கள் என்று உலகத்தை ஏமாற்ற முயற்சிப்பது படு கேவலமான முயற்சி! பாதிரிகளின் பொதுசன விரோத நடவடிக்கைகளை மூடி மறைத்து கம்யூனிச்ட்டுக்களுக்கு எதிராக புலம்பி தமிழர்களை காப்பாற்ற முடியாது.

    புலிகளுக்கும் ஜே ஆர் ஜெயவர்த்தனவுக்கும் பாலமாக இருந்த கத்தோலிக்கர்களைப் பற்றி மூச்சு விடாது புலிகளுக்கு பக்க பலமாக இருந்த பாதிரிகளைப் பற்றி எந்த தகவல்களையும் தராது “கதைப்பதன்” நோக்கம் “ரீகன், தச்சார்” காலத்து கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரத்தின் தொடர்ச்சியே ஆகும்.

    சகல இயக்கங்களுக்கும் ஆரம்பத்தில் பணம் கொடுத்தவர்கள் கம்யூனிச எதிரிகளான பாதிரிகளே என்பது இயக்கங்களின் மேல்மட்டத்து கோஷ்டிகளுக்கு நன்றாகவே தெரியும்!

    மக்களைக் கொன்று ஒரு அரசியல் ஸ்திரத்தன்மையை உருவாக்குவது அமெரிக்க சீ ஐ எ அமைப்பின் ஒரு சாதாரண டெக்னிக் என்பதை எல்லோரும் அறிவார்கள். தமிழுக்கும் அமெரிக்காவுக்கும் வத்திக்கானுக்கும் என்ன சம்பந்தம்?

    அமேரிக்கா கப்பல் அனுப்பித் தங்களைக் காப்பாற்றும் என்று புலிகள் ஆகாயத்தையும், கடலையும் நோக்கி காத்திருந்தது “எந்த கம்யூனிச” தத்துவம் என்று கம்யூனிசத்துக்கு எதிராக புலம்புபவர்கள் சொன்னால் நல்லது.

    அமெரிக்காவின் இந்திய எதிர்ப்பின் பலாபலனே இந்த 1983 கலவரமும் அதன் தொடர்ச்சியாக நடந்தேறிய கொலைகளும், கொள்ளைகளும் என்பதை தெரிந்து கொள்ளாது புலிகளின் “இராஜ தந்திர” நகர்வுகளைப் பற்றி அதீத நம்பிக்கை கொண்டுள்ளவர்கள் தற்போது அமெரிக்க எசமானர்களின் கம்யூனிச எதிர்ப்பு விஷத்தை தொடர்கிறார்கள்.

    சிங்களவர்கள் தற்போது விழித்துக் கொண்டுள்ளதாகவே தெரிகிறது. தமிழர்கள் இன்னமும் தூக்கக் கலக்கத்தில் நடக்கிறார்கள்!

    அமெரிக்கர்களுக்கும், ஐரோப்பியர்களுக்கும் இலங்கையில் நிரந்தரமாக ஒரு படைத்தளம் தேவையே ஒழிய தமிழும் சிங்களமும் அல்ல. தமிழர்களின் “வெள்ளை எசமான விசுவாசம்” கை கொடுக்கும் என்று நினைத்து அவர்கள் தோற்றுபோயுள்ள நிலையில் அவர்கள் “போர் குற்றம்” என்று இப்போது இலங்கை அரசுக்கு எதிராக கதைத்து காரியம் சாதிக்க முனைகிறார்கள்.

    Reply