”நட்பில் பிரிவு எதுவும் இருக்கவில்லை. பிரிந்திருக்கவும் என்னால் முடியாது. அவர் எனது தலைவர், நண்பர். ஓர் மூத்த சகோதரன்.” : குமரன் பத்மநாதன்

Kumaran_PathmanathanPirabakaran Vதமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரும் ஆயுதக்கொள்வனவாளரும் வே.பிரகாரனினுக்குப் பின்னர் அவ்வமைப்பின் தலைவராக அறிவிக்கப்பட்டவருமான தம்பையா செல்வராசா பத்மநாதன் அல்லது குமரன் பத்மநாதன் (கே.பி.) கடந்த 05.08.2009 ஆம் திகதி கோலாலம்பூரில் 316, ஜலான் துங்கு அப்துல் ரஹ்மான் வீதியிலுள்ள பெர்ஸ்ட் ரியூன் ஹோட்டலில் வைத்து  கைது செய்யப்பட்டு மறுநாள் கொழும்புக் கொண்டு வரப்பட்டார்.

அவர் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியான கடந்த 5ஆம் திகதி வியாழனன்று சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ், டெய்லி மிரர் ஆங்கில பத்திரிகைக்காக தொலைபேசி மூலம் குமரன் பத்மநாதனை பிரத்தியேகமாக செவ்வி கண்டார்.

7ஆம் திகதி சனிக்கிழமை டெய்லிமிரர் பத்திரிகையில் வெளியான இப்பிரத்தியேக செவ்வியின் தமிழ் வடிவம் இது :-
 
கேள்வி: கடந்த வருடம் ஓகஸ்ட் 5ஆம் திகதி நீங்கள் கைது செய்யப்பட்டீர்கள். ஒருவருட காலமாக தடுத்து வைக்கப்பட்ட நிலையில் உங்கள் தற்போதைய சூழ்நிலை குறித்து எவ்வாறு வர்ணிப்பீர்கள்?

பதில்: நான் கைது செய்யப்பட்டபோது அதிர்ச்சியடைந்தேன். சுமார் ஒரு மணித்தியாலம் பெரும் திகைப்பாக இருந்தது. இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட போதும் கவலையடைந்தேன். ஆனால், நான் கடவுளை நம்புகிறேன். மோசமான நிலை ஏற்படலாம் என அச்சமடைந்த போதிலும் நான் அதிஷ்டசாலி. நான் கைது செய்யப்பட்டமை எனக்கு நன்மையளித்துள்ளது.
 
துன்பப்படும் தமிழ் மக்களுக்கு சேவையாற்ற எனக்கு இப்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. எமது போராட்டம் இலங்கையிலுள்ள எமது மக்களை குறிப்பாக வன்னியிலுள்ள மக்களை பரிதாபகரமான நிலைக்குத் தள்ளியுள்ளது.  இப்போது NERDO (வடக்கு கிழக்கு புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி அமைப்பு) ஊடாக சிறிய வழியிலேனும் என்னால் அவர்களுக்கு உதவ முடிகிறது.

கேள்வி: நீங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்தின் சூழ்நிலை என்ன?
பதில்: நான் வீடொன்றில் வைக்கப்பட்டுள்ளேன். நான் வெளியே போக முடியாது. ஆனால் வீட்டிற்குள்ளே சுதந்திரமாக எங்கும் நடமாடலாம். தொலைபேசியில் பேசுவதற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. என்னை இங்கு சந்திக்க வருவதற்கு மக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். நான் யாரையும் சந்திப்பதென்றால் அனுமதி பெற வேண்டும். அவர்களை சந்திப்பதற்கு நான் வெளியே செல்லும்போது சில அதிகாரிகள் என்னுடன் வருவார்கள். கட்டுப்பாடற்ற வகையில் மின்னஞ்சல் (ஈமெயில்) பயன்படுத்தும் வசதியும் உள்ளது.

கேள்வி: எந்த வழியிலாவது நீங்கள் மோசமாக நடத்தப்பட்டீர்களா?
பதில்: இல்லை நான் மிகவும் தயைவுடன் நடத்தப்படுகிறேன். ஆரம்ப நாட்களில் சிலவகை பதற்றம் இருந்தது. ஆனால் நாட்கள் சென்றபின் நம்பிக்கையும் பரஸ்பர மரியாதையும் நிலவுகிறது.

கேள்வி: எவ்வாறு இந்த சூழ்நிலை ஏற்பட்டது? புலம்பெயர்ந்த தமிழர்களில் பலர் நீங்கள் அரசாங்கத்துடன் உடன்பாடொன்றைச் செய்துகொண்டதாகவும் உங்கள் கைது ஒரு நாடகம் எனவும் கூறுகிறார்கள். எவ்வாறு நீங்கள் கைது செய்யப்பட்டு இங்கு கொண்டுவரப்பட்டீர்கள்?
பதில்: எனக்கெதிரான இத்தகைய குற்றச்சாட்டுகள் குறித்து எனக்குத் தெரியும். ஆனால் நான் எப்படி கைது செய்யப்பட்டேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனது கைது குறித்து ஆங்கிலத்தில் விரிவாக எழுதிய முதல் நபர் நீங்கள்தான். பல நாட்களின்பின் நான் அதை வாசித்தபோது சில சிறிய விடயங்களைத் தவிர, பெரும்பாலானவை சரியாக இருந்தன. இவர்கள் என்ன சொன்னாலும் உண்மை என்னவென்றால் நான் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டேன் என்பதாகும்.

கேள்வி: நீங்கள் எவ்வாறு கைது செய்யப்பட்டு இங்கு கொண்டுவரப்பட்டீர்கள் என்று கூறமுடியுமா?
பதில்: நான் ஹோட்டல் அறையில் அமர்ந்து, இங்கிலாந்திலிருந்து மலேசியாவுக்கு வந்திருந்த புலிகளின் முன்னாள் அரசியல் பொறுப்பாளர் நடேசனின் சகோதரருடனும் அவரின் மகனுடனும் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது எனக்கு கனடாவிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. சி.எம்.ஆர். வானொலியிலிருந்து ராகவன் பேசினார். தொலைபேசி சமிக்ஞை தெளிவாக இருக்கவில்லை. அதனால் நான் அவர்களிடம் கூறிவிட்டு வெளியே சென்றேன்.

நான் ஹோட்டல் ஓய்வரங்கப் பகுதியிலுள்ள கதிரையொன்றில் அமர்ந்து தொடர்ந்தும் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தேன். திடீரென மலேசிய அதிகாரிகள் குழுவொன்று என்னை சூழ்ந்துக்கொண்டது. ஒருவர் ‘வெரி சொரி மிஸ்டர் கே.பி’. என்று கூறிவிட்டு எனது தொலைபேசியை கைப்பற்றிக்கொண்டார். அது கீழே விழ மற்றொரு அதிகாரி அதை எடுத்தார். என்னை அவர்களுடன் வருமாறு கூறினர். அவர்களுடன் செல்வதைத் தவிர எனக்குத் தெரிவுகள் எதுவும் இருக்கவில்லை.

நான் கோலாலம்பூரிலுள்ள குடிவரவு தடுப்பு நிலையமொன்றுக்கு கொண்டு செல்லப்பட்டு சுமர் 36 மணித்தியாலங்கள் (2 பகல்களும் 2 இரவுகளும்) அங்கு வைக்கப்பட்டிருந்தேன். தடுப்பு நிலைய அறையொன்றில் நான் உறங்க வேண்டியிருந்தது. அவர்களின் உரையாடல் மூலம் நான் அதிகாரபூர்வமாக நாடு கடத்தப்படவுள்ளேன் என்பதை உணர்ந்துகொண்டேன். ஆனால் நான் இலங்கைக்கா? இந்தியாவுக்கா? அமெரிக்காவுக்கா? அல்லது வேறெங்குமா? கொண்டுசெல்லப்படப் போகிறேன் என்பது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

அதன்பின், நான் கோலாலம்பூர் விமான நிலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டேன். அங்கு  ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமொன்று காத்திருந்தது. அப்போது நான் கொழும்புக்கு கொண்டுசெல்லப்படப் போகிறேன் என்பது தெரிந்தது. நான் விமானத்தின் சிக்கன வகுப்புக்கான வாசல் வழியாக ஏற்றப்பட்டு  பின்னர் உட்புறமாக வர்த்தக வகுப்பிற்கு மாற்றப்பட்டேன். அதையடுத்து நான் இலங்கை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டு கொழும்புக்கு கொண்டுவரப்பட்டேன்.

கேள்வி: கைது செய்யப்பட்ட காலத்தில் நீங்கள் தாய்லாந்தில் வசித்தீர்கள். இந்நிலையில் பாங்கொக்கில் அல்லாமல் கோலாலம்பூர் புறநகரில் நீங்கள் இயங்கியமைக்கான காரணம் என்ன?  2007ஆம் ஆண்டு நீங்கள் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டதனாலா?

பதில்:  நான், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு வெளியே இருந்தபோது தாய்லாந்தில் பல வருடங்கள் அமைதியான வாழ்க்கையை முன்னெடுத்தேன். நான் அங்கு வசிப்பதும் அறியப்பட்டிருந்தது. மீண்டும் நான் புலிகள் அமைப்பில் தீவிரமாக செயற்படத் தொடங்கியபோது தாய்லாந்திலுள்ள எனது குடும்பத்தின்மீது மற்றவர்களின் கவனம் ஈர்க்கப்படுவதை நான் விரும்பவில்லை. அதனால்தான் நான் கோலாலம்பூருக்குச் சென்றேன். அத்துடன் எல்லா இடங்களிலிருந்தும் மக்கள் கோலாலம்பூருக்கு வந்து என்னை பார்ப்பதும் இலகுவாக இருந்தது.

உண்மையில் நான் 2007இல் கைது செய்யப்படவில்லை.  என்னை கைது செய்ய ஒரு முயற்சி நடந்தது. சில அதிகாரிகள் அதிகாலை வேளையில் எனது வீட்டை சூழ்ந்துகொண்டனர். அதிஷ்டவசமாக நான் அங்கு இருக்கவில்லை. ஆனால் நான் கைது செய்யப்பட்டுவிட்டதாக இலங்கையில் செய்தி கசிந்தது.

கேள்வி: நீங்கள் கொழும்புக்கு வந்தவுடன் என்ன நடந்தது? பாதுகாப்புச் செயலருடன் முதல் சந்திப்பிலேலேயே சிறந்த தொடர்பை ஏற்படுத்திக் கொண்டதாக நான் சில கதைகள் கேள்விப்பட்டேன்.
பதில்: கொழும்பு நோக்கிய விமான பயணத்தின்போது இலங்கை அதிகாரியுடன் நான் நீண்ட நேரம் கதைத்தேன். அவர் மிக சினேகபூர்வமானவர்.  இலங்கை அதிகாரிகளால்  நான் நாகரிகமாக நடத்தப்பட்டேன். அது எனக்கு ஆறுதல் அளித்தது. ஆனாலும் இலங்கை அடைந்தபின் என்ன நடக்குமோ என அப்போதும் இதயத்தில் கவலை இருந்தது. பாதுகாப்புச் செயலாளர் குறித்து மிக கவலை கொண்டிருந்தேன்.  அவர் கடுமையாகப் பேசும் சிங்கள கடும்போக்குவாதி என்ற அபிப்பிராயத்தையே நான் கொண்டிருந்தேன். அதனால் அவருடனான சந்திப்பு குறித்து உண்மையில் அச்சம் கொண்டிருந்தேன்.

ஆனால், பாதுகாப்புச் செயலரின் இல்லத்திற்கு நான் கொண்டு செல்லப்பட்டபோது சில விடயங்கள் நடந்தன. பின்னணியில் ஒளி பளிச்சிட புத்தர் சிலையொன்று அங்கு இருந்தது. நான் சில நிமிடங்கள் நின்று புத்தர் சிலையை நோக்கிவிட்டுச் சென்றேன். அதனால் எனது மனம் ஆறுதலடைந்தது. தாய்லாந்தில் நான் எனது மனைவியுடன் அடிக்கடி பௌத்த ஆலயங்களுக்குச் செல்வேன். எனது வீட்டில் புத்தர் படம் உட்பட அனைத்து மத கடவுள்களின் படங்களும் உள்ளன. அதனால் எனக்கு பேராபத்து எதுவும் வராது என நான் நினைத்தேன்.

பாதுகாப்புச் செயலாளர் ஏனைய அதிகாரிகளுடன் அமர்ந்திருந்தார். நான் உள்ளே நுழைந்தவுடன் அவர் எழுந்து என்னுடன் கைகுலுக்கிவிட்டு ‘பிளீஸ் சிட் டவுண்’ என்றார். ஏனைய அதிகாரிகளை எனக்கு அறிமுகப்படுத்தினார். திரு. கோட்டாபய மிக கண்ணியமானவராக இருந்தார். எதற்காகவும் கவலைப்பட வேண்டாம் என்றார். நான் அப்போது சரியாக என்ன சொன்னேன் என்று நினைவில்லை. ஆனால் “நுழைவாயிலில் நான் புத்தர் சிலையை கண்டேன், பாதுகாப்பாகவும் அமைதியாகவும் உணர்கிறேன்” என்பதுபோல் ஏதோ கூறினேன்.

கேள்வி: நீங்கள்  குறிப்பிடும் புத்தர் சிலை சம்பவமானது புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலுள்ள  உங்களை விமர்சிப்பவர்கள், புத்தரை புகழும் துரோகியென உங்களை சித்தரிப்பதற்கு ஏதுவாகலாம்?
பதில்: எனக்குத் தெரியும். நீங்கள் கூறுவது சரி. ஆனால் நான் உண்மையில் என்ன நடந்து என்பதையே சொல்கிறேன். நான் எதையும் மறைக்க விரும்பவில்லை. கடந்த ஜுன் மாதம் இலங்கைக்கு வந்த 9 பேர் கொண்ட புலம்பெயர் தமிழர் தூதுக்குழுவொன்றிடமும் நான் இந்த புத்தர் சிலை  பற்றி சொன்னேன். 

எனது வீட்டு சூழல் காரணமாகவும் எனது மனைவியின் மத நம்பிக்கை காரணமாகவும் எனக்கு புத்த வழிபாடு, ஆலயங்கள் பரீட்சியமானவை. எனவே புத்தர் சிலையை கண்டமை உணர்வு ரீதியில் எனக்கு உதவியது. இது தான் உண்மை. அதற்காக அவர்கள் என்னை தாக்க விரும்பினால் அதை செய்யட்டும். நான் புத்தருக்கோ பௌத்தத்திற்கோ எதிரானவன் அல்லன்.

கேள்வி: உங்கள் உணர்வுகளை புரிந்துகொள்கிறேன். பாதுகாப்புச் செயலாளருடனான உங்கள் சந்திப்பு எவ்வாறு தொடர்ந்தது?
பதில்: கேக், தேநீர் பரிமாறப்பட்டன. பிரச்சினையை அமைதியான வழியில் அவர்கள் தீர்க்க முயற்சித்ததாகவும் ஆனால் முழுமையான யுத்தத்தை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் பாதுகாப்புச் செயலர் கூறினார். அவர் சில கேள்விகளை கேட்டார். நான் உண்மையாக பதிலளித்தேன். எனக்குத் தெரியாத விடயங்களை கேட்டபோது அது பற்றி சொன்னேன். எனது பதில்களில் அவர் திருப்தியடைந்தவராகக் காணப்பட்டார். அதேவேளை, என்னைப் பொறுத்தவரை யுத்தம் நீண்டகாலத்திற்கு முன்பே முடிந்துவிட்டது எனவும் இப்போது எனது ஒரே குறிக்கோள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிலிருந்து மீண்டு இயல்பு வாழ்க்கை வாழ உதவுவதே எனவும் கூறினேன்.

பாதுகாப்புச் செயலரின் நடத்தைகள் எனக்கு உண்மையில் வியப்பாக இருந்தன. தொலைக்காட்சி நேர்காணல்களைப் பார்த்து அவர் ஒரு சிங்கள கடும்போக்குவாதி என்ற விம்பமே என் மனதில் இருந்தது, என்பதையும் அவரின் நடத்தை எனக்கு ஆச்சரியமளிக்கிறது என்பதையும்  ஒரு கட்டத்தில் நான் அவரிடம் சொன்னேன்.  அவர் சிரித்துவிட்டு “நான் எப்போதும் இப்படித்தான். சில ஊடகவியலாளர்கள் என்னை எரிச்சல்படுத்துகின்றனர். அதனால்தான் நான் அப்படி கோபமடைகிறேன் ” என்றார்.

நீண்ட உரையாடலின் பின்னர் அவர் ஒரு குறித்த அதிகாரியை எனக்கு அறிமுகப்படுத்தியதுடன், அவர் தான் எனக்குப் பொறுப்பாக இருப்பார் என்றார். சகல விடயங்கள் குறித்தும்  அந்த அதிகாரியுடன் தொடர்பு கொள்ளலாம் எனவும் தேவையானால் அவரூடாக தனக்கு  எழுத்து மூலம் எதுவும் தெரிவிக்கலாம்  எனவும் கூறினார்.  அவர் மீண்டும் என்னுடன் கை குலுக்கினார். நான் கொழும்பிலுள்ள வீடொன்றுக்கு கொண்டு செல்லப்பட்டேன். எனது வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பமாகியது.

கேள்வி: அதன்பின் என்ன நடந்தது? நீங்கள் அரசாங்கத்துடன் சேர்ந்துகொண்டு வெளிநாடுகளிலுள்ள புலம்பெயர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்கள் பற்றி அரசாங்கத்துக்கு தகவல் கொடுப்பதாகவும் குற்றச்சாட்டுகளும் தகவல்களும் வெளியாகின?

பதில்: இது பற்றி என்னை தெளிவாகச் சொல்ல விடுங்கள். இலங்கை புலனாய்வு அதிகாரிகள் என்னுடன் பேச ஆரம்பித்த போது எனக்கு இரு தெரிவுகள் இருந்தன. ஒன்று எதிர்ப்பது, இரண்டாவது ஒத்துழைப்பது. நான் மோதினால் நான் நீண்டகால சிறையை எதிர்நோக்க வேண்டியிருந்திருக்கும். அதனால் யாருக்கும் பலன் இருக்காது. ஆனால் நான் ஒத்துழைத்தால் நான் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் வென்றெடுக்கலாம். இது எமது மக்களுக்கு சில சேவைகளையாற்றுவதற்கு வாய்ப்பை வழங்கலாம்.

போராட்டம் இப்போதும் தொடர்ந்து அத்துடன் எனது தலைவரும் உயிருடன் இருந்திருந்தால் நான் அரசாங்கத்தை எதிர்த்து ஒத்துழைக்காமல் இருந்திருக்கலாம். நான் எத்தகைய பின்விளைவையும் சந்தித்திருப்பேன். ஆனால் நிலைமை அப்படியில்லை. எல்லாமே முடிந்துவிட்டது. எனவே எதிர்ப்பதில் அர்த்தமில்லை. எனவே நான் ஒத்துழைப்பதை தெரிவு செய்தேன்.
 
இன்னொரு விடயத்தையும் நான் நினைவுபடுத்த வேண்டும். நான் 2003 ஜனவரியிலிருந்து 2008 டிசெம்பர் வரை நான் இயக்கத்திற்கு வெளியே இருந்தேன். எனக்கு 2003 ஆம் ஆண்டிற்கு முந்தைய விசயங்கள் மட்டுமே தெரிந்திருந்தது. அக்காலப் பகுதியில் கட்டமைப்பிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. சம்பந்தப்பட்ட நபர்களிலும் எனக்குப் பின்னால் வந்தவர்களால் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. இதைத் தெளிவாக புலனாய்வு அதிகாரிகளுக்கு எடுத்துக்கூறினேன். அவர்கள் எனது நிலையை புரிந்துகொண்டனர்.

நாங்கள் பேசும்போது வேடிக்கையான விடயமொன்று நடந்தது. ஒரு கட்டத்தில் அதிகாரிகள் என்னைப் பார்த்து சிரிக்கத் தொடங்கினர்.  “உங்களுக்கு தற்போதைய எல்.ரி.ரி.ஈ. பற்றி எதுவும் தெரியாது” என பகிடியாக கூறினர். அவர்கள் சொன்னது சரிதான். பல வருடங்களுக்கு முந்தைய கட்டமைப்புகள் பற்றி மாத்திரமே என்னால் சொல்ல முடிந்தது. 2002 ஆம் ஆண்டுக்கு பின்னரான சூழல் குறித்து எனக்கு அதிகம் தெரிந்திருக்கவில்லை. அதை அவர்கள் உணர்ந்துகொண்டு என்னை பார்த்து சிரித்தனர்.

இலங்கை புலனாய்வுத்துறை எமது மக்களில் சிலர் எண்ணுவதைப்போல் முட்டாள்தனமானது அல்ல. அதேவேளை ஏனைய நாடுகளின் புலனாய்வுத் துறையுடனும் அதிக பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

கேள்வி: ஆனால் புலம்பெயர்ந்தோர் மத்தியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்த தகவல்களை நீங்கள் அரசாங்கத்திற்கு வழங்குவதாக, நெடியவன் தலைமையிலான காஸ்ட்ரோ சார்பு குழுவும் சில ஊடகங்களும் உங்களுக்கு எதிராக பிரசாரம் செய்கின்றன?
பதில்: அது எனக்குத் தெரியும். ஆனால், உண்மை சற்று வித்தியாசமானது. புலனாய்வு ஆட்களால் பல்வேறு வட்டாரங்களிலிருந்து தகவல்கள் பெறப்படும் அதேவேளை, அவர்களுக்கு காஸ்ட்ரோவின் ஆட்களாலும் அதிக தகவல்கள் கிடைத்துள்ளன.

கேள்வி: அது எப்படி?
பதில்: எனக்கு சொல்வதற்கு சற்று தயக்கமாக இருக்கிறது. ஆனால் நீங்கள் கேட்பதால் சொல்கிறேன். இராணுவம் விசுவமடுவை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தபோது காஸ்ட்ரோவும் அவரின் பிரிவினரும் அனைத்தையும் விட்டுவிட்டு ஓடிவிட்டனர். எனவே புலிகளின் வெளிநாட்டுச் செயற்பாடுகள் குறித்து இலங்கை அதிகாரிகளிடம் இப்போது அதிக தகவல்கள் உள்ளன. அவர்களிடம் கணினிகள், தகவல் திரட்டுகள் உள்ளன. புலிகளுக்குப் பணம் கொடுத்தவர்களின் பட்டியல்கள், திகதிகள், தொகைகள் என்பன உள்ளன. அவர்களிடம் வரி பற்றுச்சீட்டுகளின் பிரதிகள் உள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் யார் நிதி சேகரிக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். புலிகளினால் முதலீடு செய்யப்பட்ட வர்த்தகங்கள், சொத்துக்களை யார் நிர்வகிக்கிறார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியும். சமாதானப் பேச்சுவார்த்தை காலத்தில் வெளிநாடுகளிலிருந்து வன்னிக்குச் சென்ற அனைவரின் விசிட்டிங் கார்ட்டுகள்கூட அவர்களிடம் உள்ளன. ஆனால், தகவல் கொடுப்பவன் என மக்கள் என்னை தூற்றிக்கொண்டிருந்தால் நான் என்ன செய்ய முடியும்?

கேள்வி: காஸ்ட்ரோவின் பிரத்தியேக டயரிகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அது உண்மையா?
பதில்: நான் எந்த டயரியையும் பார்க்கவில்லை. ஆனால் புலனாய்வு ஆட்கள் உத்தியோகபூர்வமற்ற விதமாக நட்பு ரீதியில் என்னுடன் உரையாடிய போது காஸ்ட்ரோவின் 20 வருடகால டயரிகள் தம்மிடம் இருப்பதாகக் கூறினர். அவர் (காஸ்ட்ரோ) வெளிப்படையாக பல விடயங்களை அந்த டயரிகளில் எழுதியுள்ளார். ஒரு தடவை அதிகாரியொருவர் என்னிடம் சிரித்துக் கொண்டே காஸ்ட்ரோவுக்கு காதல் தொடர்பொன்று இருந்ததா எனக் கேட்டார். எனக்கு அது பற்றி தெரியாது என்றேன். அவர் சிரித்துக்கொண்டு முழுக்கதையையும் சொன்னார். காஸ்ட்ரோ அது பற்றிகூட எழுதியுள்ளார்.

கேள்வி: தமிழிழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு கட்டமைப்பில் நீங்கள் மிக சக்தி வாய்ந்த நபராக விளங்கிய காலமொன்று இருந்தது. ஆயுதக்கொள்வனவு, புலிகளின் கிளைகள் நிர்வாகம், நிதி சேகரிப்பு, மூன்று முக்கிய பிரிவுகளுக்கு நீங்கள் பொறுப்பாக இருந்தீர்கள். 2003 ஆம் ஆண்டில் நீங்கள் இந்த இயக்கத்திலிருந்து விலகியபின் நீங்கள் உங்கள் செல்வாக்கை இழந்துவிட்டதைப் போன்றும், 2009 ஆம் ஆண்டு மீண்டும் அதில் இணைந்தபோது உங்களை மீள நிலைநிறுத்திக் கொள்வதற்கு சிரமப்பட்டதைப் போன்றும் தோன்றியது. அப்போது என்ன நடந்தது? ஏன் விலகினீர்கள்? நீங்கள் திருமணம் செய்ததுதான் காரணமா?

பதில்: இல்லை இல்லை. எனது திருமணம் காரணமல்ல. நான் கடந்த நூற்றாண்டின் 90களின் முற்பகுதியில் திருமணம் செய்தேன். இந்த நூற்றாண்டில் அல்ல. எனது மகள் இப்போது தனது பதின்மர் பருவத்தின் கடைசியில் இருக்கிறாள்.

எனவே, நடந்தவை வேறு. 2002 ஆம் ஆண்டு சமாதான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டு போர் நிறுத்தம் பிரகடணப்படுத்தப்பட்ட பின்னர், தலைவர் பிரபாகரன் புலிகள் அமைப்பை புதிய வழியில் மீளமைக்க முயன்றார். இவ்விடயங்கள் குறித்து நான் வன்னிக்கு வந்து அவரை சந்திக்க வேண்டும் என அவர் விரும்பினார்.

ஆனால், அப்போது பல நாடுகளின் புலனாய்வு வலைப் பின்னல்களால் தேடப்படும் நபர்களின் பட்டியலில் நான் முன்னிலையில் இருந்தேன். 2001 ஆம் ஆண்டின் செப்டெம்பர் 11 தாக்குதல் உலகின் உலகின் பாதுகாப்பு நிலைவரத்தை மாற்றியிருந்தது. நான் அப்போது இலங்கைக்கு பயணம் செய்யும்’ ரிஸ்க்’ எடுக்க விரும்பவில்லை. நான் பல நாடுகளின் புலனாய்வு முகவரகங்களால் குறிவைக்கப்பட்டுள்ளேன் என்பதை எனது சொந்த தகவல் வட்டாரங்களின் மூலம் அறிந்திருந்தேன். எனவே நான் தயங்கினேன். இது எனது தலைவருக்கு சினமூட்டியது.

மற்றொரு விடயம் எனக்கும் இயக்கத்திற்கும் தலைவருக்கும் இடையிலான இணைப்பில் (லிங்க்) மாற்றம் ஏற்பட்டது. 15 வருடகாலமாக வேலு என்பவர் எனக்கும் புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் இடையிலான தொடர்பாடல் இணைப்பாக அவர் செயற்பட்டார். திடீரென அவர் மாற்றப்பட்டு புதிய ஒருவர் நியமிக்கப்பட்டார். நான் வேலுவுக்கு பழக்கப்பட்டிருந்ததால் புதிய நபருடன் அஜஸ்ட் செய்துகொள்ள எனக்கு கடினமாக இருந்தது. ஒரு வழியில் தொடர்பாடல்கள் பாதிக்கப்பட்டன.

அதேவேளை, புலிகளின் பல சிரேஷ்ட தலைவர்கள் போர் நிறுத்தத்தை தமது அதிகாரத்தை விரிவுபடுத்துவதற்குப் பயன்படுத்துவதில் அக்கறையாக இருந்தனர்.

புலிகளின் கப்பல்களை கடற்புலிகளின் கட்டுப்படுத்த வேண்டுமென கடற்புலிகளின் தளபதி சூசை விரும்பினார். அதுவரை அக்கப்பல்களுக்கு நான் பொறுப்பாக இருந்தேன். அரசியல் பொறுப்பாளர் எஸ்.பி.தமிழ்ச்செல்வன் புலம்பெயர்ந்த மக்களின் அரசியல் செயற்பாடுகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பினார். காஸ்ட்ரோ வெளிநாட்டு நிர்வாகத்திற்குப் பொறுப்பாக இருந்தார். அவர் அனைத்து வெளிநாட்டுக் கிளைகளினதும் முழுக்கட்டுப்பாட்டை பெற விரும்பினார். நிதிக்குப் பொறுப்பாக இருந்த தமிழேந்தி நிதி சேகரிப்பு நடவடிக்கைகளில் அதிக பங்கு வகிக்க விரும்பினார். 

எனவே அவர்கள் அனைவரும் பிரபாகரன் எனது அதிகாரத்தை குறைத்து  அவற்றை தமக்கு வழங்க வேண்டும் என விரும்பினர். போர்நிறுத்தம் காணமாக புலம்பெயர்ந்த மக்கள் பலர் வன்னிக்கு அடிக்கடி வன்னிக்குப் பயணம் செய்தனர். எனவே தம்மால் சகல விடயங்களையும் தொலைபேசி, பெக்ஸ், மின்னஞ்சல் மூலம் நேரடியாகக் கையாள முடியும் என பிரபாகரனுக்கு புலிகளின் ஏனைய சிரேஷ்ட தலைவர்கள் அறிவுறுத்தினர்.

பின்னர் எனக்கு அதிக பொறுப்புகள் காரணமாக பளுமிகுந்துள்ளதாகவும் எனவே சில நடவடிக்கைகளிலிருந்து நான் ஓய்வுவெடுக்க வேண்டும் எனவும் அவர் பிரபாகரன் தெரிவித்தார்.  நான் என்ன செய்ய முடியும்? அதனால் நான் ஓய்வு பெற்றேன்.

கேள்வி: உங்களுக்கும் வெளிநாடுகளிலுள்ள உங்கள் நெருங்கிய சகாக்களுக்கும் எதிராக சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லையா?
பதில்:  ஆம். சில குற்றச்சாட்டுகள் இருந்தன. சில பெண்களை வன்னிக்கு அனுப்பி எனக்கும் பாரிஸிலுள்ள மனோ, ஒஸ்லோவிலுள்ள சர்வே ஆகியோருக்கும் எதிராக புகாரிடச் செய்யும் அளவுக்கு அவர்கள் சென்றனர். சில பெண்கள் பிரபாகரனுக்கு முன்னால் சத்தமிட்டு அழுததாகவும் நான் கேள்விப்பட்டேன்.

கேள்வி: இதன் பின்னால் யார் இருந்தார்கள்?
பதில்:  அது ஒரு சதி. காஸ்ட்ரோ, தமிழ்ச்செல்வன் ஆகியோர் அதன் பின்னால் இருந்தனர். கவலையளிக்கும் விதமாக தலைவர் அதில் ஏமாற்றப்பட்டார். நாம் எம்மை நேரடியாக தற்காத்துக்கொள்ள முடியவில்லை.

கேள்வி: அதன்பின் என்ன நடந்தது?
ப:  நான் முன்பு கூறியதைப் போல தலைவர் என்னை ஓய்வெடுக்குமாறு கூறினார். அதனால் நான்  ஓய்வுபெற நேரிட்டது. வெளிநாட்டு நிர்வாகங்களை காஸ்ட்ரோ முழுமையாக பொறுப்பேற்றார். எனது விசுவாசிகள் என அவர் கருதிய அனைவரையும் அவர் நீக்கினார். சில மாதங்களுக்குள் ஏறத்தாழ அனைத்தும் மாறின. புலிகளின் விசுவாசமான செயற்பாட்டாளர்கள் பலர் அவர்களின் பதவிகளிலிருந்து முறையற்ற விதமாக நீக்கப்பட்டனர்.

கேள்வி: ஆனால் அப்போதும் நீங்கள் ஆயுதக் கொள்வனவுக்குப் பொறுப்பாக இருந்தீர்கள். ஏன் அது மாறியது? எப்படி ஆனந்தராஜா அல்லது ஐயா உங்களுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டார்?
பதில்: அது இன்னொரு கதை.  ஐயா மிக விவேகமான மனிதர். அவரிடம் சிறந்த பயண ஆவணங்கள் இருந்தன. சுதந்திரமாகப் பயணிப்பார். அத்துடன் அவர் தகுதிபெற்ற கணக்காளர். எனவே எனது அறிவுறுத்தலின்படி அவர் எமது கணக்குகளை தணிக்கை செய்வதற்காக அவர் சகல நாடுகளுக்கும் செல்வார்.

பின்னர் நான் அதிகமாக அறியப்பட்டு பல புலனாய்வு முகவரகங்களால் தேடப்பட்ட போது எனது பயணங்களையும் நடமாட்டங்களையும் கட்டுப்படுத்திக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டேன். எனவே நான் அவரை ஆயுதச் சந்தையில் ஆயுதங்களை வாங்கக்கூடிய இடங்களுக்கும் அனுப்பத் தொடங்கினேன். ஆந்த இடங்களுடன் அவர் பரிட்சியமானார்.
பின்னர் பிரபாகரனிடமும் எனது பிரதிநிதியாக அவரை நான் அனுப்பினேன். அவர் மீது நான் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தேன். அவர் எனக்கு விசுவாசமாக இருப்பார் என நினைத்தேன். ஆனால் வன்னியிலுள்ள எனது நண்பர் ஒருவர் ‘இவர் உண்மையாகவே உங்களுடைய ஆளா? அவர் உங்களுக்கு எதிராக தலைவரின் மனதில் நஞ்சூட்டிக்கொண்டிருக்கிறார்’ என்று கூறியபோது அதிர்ச்சியடைந்தேன். ஐயா தானே சகல ஆயுதக்கொள்வனவுகளையும் மேற்கொள்வது போலவும் அனைத்தையும் தன்னால் செய்ய முடியும் என்பதுபோலவும் காட்டிக்கொண்டதாக அறிந்தேன். அதன்பின் ஐயா பற்றி பாலா அண்ணை சொன்னது சரி என்று உணர்ந்தேன். 

கேள்வி: பாலா அண்ணை (அன்ரன் பாலசிங்கம்), ஐயா பற்றி உங்களிடம் என்ன சொன்னார்?
பதில்: பாலா அண்ணையும் அடேல் அன்ரியும் 1999 ஆம் ஆண்டில் வன்னியிலிருந்து கடல் வழியாக வெளியேறியபோது அவர்கள் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் தங்குவதற்கும் லண்டனுக்குச் செல்வதற்கு முன்னர் மருத்துவ சிகிச்சை பெறவும் நான் ஏற்பாடு செய்தேன். நான் அப்போது இந்தோனேஷியாவில் இருந்ததால் அவர்களின் நலன்களைக் கவனிக்கும் பொறுப்பை நான் ஐயாவிடம் கொடுத்திருந்தேன். ஆனால் மனிதர்களை மிகச்சரியாக எடைபோடும் பாலா அண்ணை பின்னர் என்னிடம் “‘நீ இந்த ஆளை நம்புகிறாய். ஆனால் இருந்துபார் ஒருநாள் உனது இடத்தை அவர் பிடித்துக்கொள்வார்” எனக் கூறினார். பாலா அண்ணையின் மதிநுட்பத்தை நான் உணர்ந்தபோது கால தாமதமாகியிருந்தது.

கேள்வி: ஆகவே தமிழீழ விடுதலைப் புலிகளின் கே.பி. டிபார்ட்மென்ட் என அறியப்பட்ட, வெளிநாட்டுக் கொள்வனவுப் பிரிவிலிருந்து நீங்கள் விடுவிக்கப்பட்டீர்கள். அதற்கு என்ன காரணம் சொல்லப்பட்டது?
பதில்: நான் முன்பே சொன்னதைப்போல் தலைவரை சந்திப்பதற்காக நான் இலங்கைக்குச் செல்லவில்லை. பல புலனாய்வு நிறுவனங்களின் பட்டியலில் மேல் இடத்தில் நான் இருந்ததால் பயணம் செய்வது ஆபத்தானது என உணர்ந்தேன். இந்நிலையில் நான் ஆயுதம் வாங்குவதற்காக பயணம் செய்து ஆபத்துக்குள்ளாவதை தான் விரும்பவில்லை என பிரபாகரன் கூறினார். சில காலத்திற்கு ஓய்வெடுக்குமாறும் அங்கு வருவதற்கும் தன்னை சந்திப்பதற்கும் முயற்சிக்குமாறும் அவர் கூறினார்.

இதன்பின் நான் எனது கடமைகளை விடுவிப்பதைத் தவிர எனக்கு வேறு தெரிவுகள் இருக்கவில்லை. எனக்குப் பதிலாக நியமிக்கப்படுபவர்கள் தொடர்ந்தும் என்னிடம் ஆலோசனை கேட்பார்கள் எனவும் பிரபாகரன் கூறினார். ஆனால் அது நடக்கவில்லை.

கேள்வி: இது எப்போது நடந்தது. உங்களுக்கும் பிரபாரகரனுக்கும் இடையில் பிரிவொன்று ஏற்பட்டதா? அதன்பின் என்ன நடந்தது?
பதில்: இது 2002 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடந்தது. 2003 ஆம் ஆண்டிலிருந்து நான் இயக்கத்தின் அன்றாட செயற்பாடுகளிலிருந்து நான் விலகியிருந்தேன். ஆனால் நான் ஒருபோதும் முறையாக இயக்கத்திலிருந்து விலகவில்லை. அது பென்ஷன் இல்லாமல் ஓய்வெடுப்பது போலத்தான்.

அவருக்கும் எனக்கும் இடையிலான நட்பில் பிரிவு எதுவும் இருக்கவில்லை. அவரிடமிருந்து பிரிந்திருக்கவும் என்னால் முடியாது. அவர் எனது தலைவர், நண்பர். அத்துடன் எனக்கு ஓர் மூத்த சகோதரன் போல. ஆனால் நடந்த விசயங்களால் நான் வருத்தமடைந்தேன். முன்புபோல் நான் அவரை அடிக்கடி தொடர்புகொள்ளவில்லை. நான் அதைச் செய்யவேண்டுமென அவர் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் நான் அதைச் செய்யவில்லை. நாம் இருவரும் ஒருவரிடமிருந்து ஒருவர் திசைத்திரும்பியிருந்தோம். ஆனால் ஆனால், ஒரு போதும் பிளவு ஏற்படவில்லை. எமக்கிடையிலான பரஸ்பர அன்புணர்வு நீடித்தது. 

கேள்வி: அப்போது உங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பிரசாரங்களில் ஒரு பகுதியாக,  பிரபாகரனுக்கு உங்கள் மீது வெறுப்பு ஏற்பட்டது எனவும் நீங்கள் துரோகி என அவரால் கருதப்பட்டதாகவும் கூறப்பட்டது.
பதில்: அது எனக்குத் தெரியும். நான் 2003 ஆம் ஆண்டு புலிகளின் அமைப்பின் செயற்பாடுகளிலிருந்து ஒதுங்கியிருந்த பின்னர் வெளிநாடுகளிலிருந்து புலிகளின் புதிய தொகுதி செயற்பாட்டாளர்களுக்கு என்னைப் பற்றியயோ கடந்த காலத்தைப் பற்றியோ தெரிந்திருக்கவில்லை. எனவே எனக்கெதிராக எதுவும் சொல்லப்பட்டிருக்கலாம்.

உண்மை என்னவென்றால், நாம் விலகியிருந்தாலும் எம் இருவருக்கிடையிலும் மிகுந்த அன்பும் பாசமும் இருந்தது. ஒரு சம்பவம் காரணமாக பிரபாகரன் எழுத்து மூலம் என் மீதான அன்பை வெளிப்படுத்தியிருந்தார். வெளிநாட்டிலிருந்த புலிகளின் வான்படைப் பிரிவு செயற்பாட்டாளர் ஒருவருக்கு சில விடயங்களுக்காக என்னுடன் கலந்தாலோசனை நடத்த வேண்டியிருந்தது. அதற்கு தலைவர் அனுமதியளிப்பாரா என்று அவருக்குத் தெரியாமலிருந்தது. எனவே அவரின் முன்னாள் நண்பர் கே.பியுடன் தொடர்புகொள்ளலாமா என்று கேட்டு அவருக்கு ஒரே மெசேஜ் அனுப்பினார். பிரபாகரன் தனது எழுத்து மூல பதிலில், அதை செய்யலாம் என்று கூறியதுடன் கே.பி. தனது முன்னாள் நண்பன் அல்லவெனவும் ‘இன்றும் என்றும் நல்ல விசுவாசமான நண்பன்’ எனவும் வலியுறுத்தியிருந்தார்.

கேள்வி: எனவே நீங்கள் புலிகள் அமைப்பிலிருந்து ஓய்வுபெற்றீர்கள். அப்போது உங்களுக்கும் புலிகளுக்கும் இடையிலான எல்லா விசயங்களும் முடிந்துவிட்டது என எண்ணினீர்களா?
பதில்:  அவ்வேளையில் நான் அப்படித்தான் நினைத்தேன். நான் புலிகள் அமைப்பிலிருந்து விலகியிருப்பதைப் பற்றி எனது மனைவியிடம் சொன்னது நினைவிலுள்ளது. இப்போது அவளுடனும் எமது மகளுடனும் அதிக காலத்தைச் செலவிட முடியும் என்று கூறினேன். ஆனால் அவள் “உங்களால் உண்மையாக அப்படி செய்ய முடியுமா? மீண்டும் வி.பி. (வேலுப்பிள்ளை பிரபாகரன்) உங்களை அழைத்தால் மீண்டும் திரும்பிச் செல்லாமல் இருக்க முடியுமா?” என்று கேட்டாள்.

எனக்கும் பிரபாகரனுக்கும் இடையிலான பிணைப்பை எனது மனைவி உணர்ந்திருந்தாள். அவள் பிரபாகரனின் மனைவி மதிவதனியுடன் தொலைபேசியில் பேசுவாள். அவர்கள் இருவருக்கும் தமது கணவர்களுக்கிடையிலான நெருங்கிய நட்பு தெரிந்திருந்தது.

கேள்வி: நீங்கள் மீண்டும் திரும்பிய விடயம் எப்படி நடந்தது? எப்படி ஏன் இந்த இயக்கத்தில் நீங்கள் மீண்டும் இணைந்தீர்கள்? யுத்தத்தின் கடைசி நாட்களில் உங்கள் பாத்திரம் என்ன?
பதில்: அது மற்றொரு நீண்ட கதை.

(அடுத்த வாரம் தொடரும்)

DBS Jeyaraj 

(தமிழில்: ஆர்.சேதுராமன்)

நன்றி தமிழ்மிரர்

Show More
Leave a Reply to DEMOCRACY Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • DEMOCRACY
    DEMOCRACY

    Suba Devan, the Chola king and his wife Kamalavati went to Chidambaram and eagerly prayed to the Lord Nataraja for a son. The Lord granted their wish and caused the spider to be born as the Chola king’s child. Soon Kamalavati conceived the child. The day of delivery arrived.–Purananuru – 74(c.200–848).
    Kulothunga Chola II was a 12th century king of the Chola Dynasty.Kulothunga II preferred to live in Chidambaram rather than the royal capital at Gangaikonda Cholapuram.Kulothunga II had a comparatively peaceful reign. His reported persecution of Vaishnavism is disputed. Chidambaram Temple, a major Shiva shrine, also houses a separate temple to Lord Vishnu and is one of 108 Divya Desams (sacred temples of Lord Vishnu).Bodhidharma was a Buddhist monk who lived during the 5th/6th century and is traditionally credited as the transmitter of Zen (Chinese: Chán, Sanskrit: Dhyana) to China.

    Annie Besant (London 1 October 1847 – 20 September 1933 in Adyar, India) was a prominent Theosophist, women’s rights activist, writer and orator and supporter of Irish and Indian self rule. .Up until Besant’s presidency, the Theosophysical society had as one of its foci Theravada Buddhism and the island of Ceylon, where Henry Olcott did the majority of his useful work. Under Besant’s leadership there was a decisive turn away from this and a refocusing of their activities on “The Aryavarta”, as she called central India. Besant actively courted Hindu opinion more than former Theosophical leaders.
    பிளாவட்ஸ்கி,மேடம் அன்னி பெஸண்ட்,கேணல் ஆல்கால்ட்,போன்றவர்களின் நோக்கம் மத ஆராய்ச்சியே தவிர காலனித்துவத்தை நிறுவுவது அல்ல.அவர்கள் முதலில் புத்தமதத்திற்கு அறிமுகமானது,”ஜப்பானிய கோணம் கொண்ட சென் புத்தமதமாகும்”.இது தியானம்,யோகம் என்பதனை “கண்டம்பிளேஷ்ன்(CONTEMPLATION)” முலம் பயின்ற ஹத்த யோகா வகையை சார்ந்தது!.The word Hatha is a compound of the words Ha and Tha meaning sun and moon (சொட்டும் விழிச் சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ..- பாரதியார். ), referring to Praana and Apaana, and also to the principal nadis (energy channels) of the subtle body that must be fully operational to attain a state of dhyana or samādhi. According to the Monier-Williams Sanskrit Dictionary, the word “hatha” means forceful. It is a strong practice done for purification.ஆனால் இவைகள் சில சமயங்களில் அரசியல் தீர்வுகளை தருவதில்லை!.

    பிரிட்டிஷ் வானவியல்- இயற்பியலாரான, திரு.ஸ்டீபன் ஹாக்கின்ஸின் இக்கூற்று இந்து மத கோட்பாட்டுடன் ஒத்திருக்கிறது என்றால்,/”Their existence would be a key confirmation of string theory, and they could make up the mysterious dark matter that holds galaxies together,” he told the BBC./–Stephen William Hawking, CH, CBE, FRS, FRSA (born 8 January 1942)is a British theoretical physicis.
    “theoretical physicist and Nobel laureate Steven Weinberg at the University of Texas in Austin.” இவருடைய இக்கூற்று அதன் திரிபுகளை ஒத்திருக்கிறது!./ Are they also going to be disappointed about our position in nature, our purpose?
    We don’t see any purpose dictated to human beings in nature. Human life does have a purpose, but it is a purpose that we invent for ourselves. It takes a certain act of courage to look at nature, not see any plan for human beings in there and yet go on and live good lives, love each other, create beautiful things, explore the universe. All these take more courage without having some divine plan that we discover, but one that we rather create for ourselves.
    Do you think most people have that kind of courage?
    I don’t know. People have to have a lot of courage just to get on with their lives. And if there is no … Well, I don’t know the answer to that question./–Steven Weinberg.

    நான் மேற்கண்டவற்றை ஏன் கூறுகிறேன் என்றால், கே.பி. யின் புத்தமதப் பற்று ஒன்றும் தமிழர்களின் வரலாற்றில் புதியது அல்ல!. அனல் அவர் டி.பி.எஸ்.ஜெயராஜிடம் தெரிவித்த “அடுத்தபகுதியின்” கருத்தில் சரணடைந்தவர்களின்? நிலைக்கு இந்தியாவில் யார் மீது குற்றம் சாட்டுகிறார் என்பதிலிருந்துதான் அவருடைய புத்தமதம், கர்னல்.ஹென்ரி ஓல்கோல்டின் உடையதா அல்லது உண்மையா புத்தருடையதா என்று தெரியவரும்!.

    மேற்குலக இந்து-புத்தமத திரிபு என்பது நன்மை பயக்கக்கூடியதே, ஆனால், அரசியல் தீர்வுகளை பொருத்தவரை, “இதன் அடிப்படையிலான சர்வதேச சமூக” தரவுகளில் இலங்கை தமிழர்களைப் பற்றியான தரவுகள் சிக்கியுள்ளன. இது தெற்காசியாவின் நடைமுறை ஒழுங்கு முறையாக உள்ளது!. இதிலிருந்து தங்களின் நிலையின் நியாயத்தை இலங்கைத் தமிழர்கள், முன்வைக்க, எடுத்தியம்ப திராணியற்று இருக்கின்றனர்!. மேலும், தமிழர்கள்(இனம்)என்ற அடிப்படையில் “உள் உறவுகள்” இயங்குவதாக தெரியவில்லை!. கே.பி. க்கும், கருணாவுக்கும் – பொட்டம்மானுக்கும் இடையேயான உறவுகள்தான் முக்கிய அரசியல் முடிவுகளை எடுக்க காரணாமாக அமைந்துள்ளன!.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    — நான் ஏற்கனவே பலமுறை “CANNIBALISM” என்ற சொல்லை தமிழர்களின் “உள் உறவுகளை(ஆளை ஆள் விழுங்கும்)” சித்தரிப்பதற்கு உபயோகித்துள்ளேன்!.இந்த “CANNIBALISM” சத்தை “சிங்கள இராணுவத்தின்” உதவியுடன், கே.பி. அங்கீகரித்தால் அது தமிழர்களின்? வாழ்வியலில் பாரதூரமான விளைவுகளை ஏற்ப்படுத்தும்!. ஆனால், தெற்கசியாவின் நடைமுறை ஒழுங்கு (Hindu- Buddhist interpretations) முறை இந்த “CANNIBALISM” லிசத்தை அங்கீகரிக்கும் நிர்பந்தத்தைதான் இலங்கைத் தமிழருக்கு தெரிவாக வழங்கியிருக்கிறது என்பது என் ஆராய்ச்சிக் கணிப்பு!. ஆகையால் தமிழர்கள்? என்பவர்களின் நடைமுறை (இயங்கியல்) உட்பிரிவுகள் தங்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்க, தங்களை தற்காத்துக் கொள்ள, “பாரிய கொலைகளில்” தங்கள் உட்பிரிவுகள் (ஜாதி?)மீது மேற்கொள்வது தவிர்க்க இயலாமல் போய்விடும் என்பதும் என் கணிப்பு. சில உட்பிரிவுகளிடையே மிக இறுகிய (சமுதாய கண்ணோட்டமில்லாத)”சுய இயங்கியல்(ENTITY) போக்குகள்” காணப்படுவது ஆராய்ச்சிக் குரியது! (உதா: செட்டியார் (எச்சில் கையால் காக்காய் ஓட்டாதது(PLUTOCRACY), முதலியார், வெள்ளாளர்: சாத்வீகமான முகத்துடன், மிகக் கொடூரமாக “திரிபுக்கு ஆதரவாக” காட்டிக்கொடுத்தல், அயோதிதாஸரின்(ஹென்ரி ஓல்கோல்ட்) தலித்தியத்திற்கு ஆதராவாக சமூக நீதி போராட்டத்தை நிராகரித்தல் போன்றவை)

    Reply
  • Kumar
    Kumar

    சத்தியமா பின்னூட்டம் ஒண்டும் விளங்கெல்ல. டெமொக்கிரசி தான் மெத்தப்படித்தவரெண்டு சொல்ல வாராரோ? கொஞ்சம் புரியும்படியா எழதுங்கள்.

    Reply