வன்னிப் பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் மீண்டும் இயங்கத் தொடங்கியிருக்கும் பாடசாலைகளுக்கு அடுத்தவாரம் புதிய தளபாடங்கள் வழங்கப்படும் என மாகாணக் கல்விப்பணிப்பாளர் ப.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளை வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மீளவும் இயங்கத் தொடங்கியுள்ள பாடசாலைகளில் தளபாடப் பற்றாக்குறைகள் காரணமாக மாணவர்கள் நிலத்தில் அமர்ந்து கற்றலில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இப்பாடசாலைகளுக்கு தளபாடங்களை பெற்றுக்கொடுப்பதில் ஆளுநர் துரித கதியில் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் கல்விப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அடுத்த வாரமளவில் இத்தளபாடங்கள் வலையக் கல்விப்பணிப்பாளர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.