முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கொக்கிளாய் மக்கள் 26 வருடங்களின் பின் அவர்களின் கிராமத்தில் மீள்குடியேற்றப்படவுள்ளனர். இக்கிராமத்திலிருந்து 1984ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கைகள் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் பல்வேறு இடங்களிலும் வசித்து வந்தனர்.
கொக்கிளாய் கிராமத்தில் மக்கள் மீள்குடியேற தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், இப்பகுதிகளில் மீள்குடியேற 34 குடும்பங்கள் மட்டும் பதிவுகளை மேற்கொண்டுள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். வவுனியா மெனிக்பாம் முகாமில் தங்கியுள்ள இக்குடும்பங்கள் இன்று திங்கள் கிழமை முல்லைத்தீவிற்கு அழைத்து வரப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அழைத்து வரப்படுகின்றவர்கள் பாடசாலையொன்றில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டு பின் அவர்களது காணிகளில் தற்காலிக வீடுகள் அமைக்கப்பட்டு குடியமர்த்தப்படவுள்ளதாகவும் அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசச் செயலர் பிரிவிக்குட்பட்ட விசுவமடு கிழக்கு கிராமஅலுவலர் பிரிவில் எதிர்வரும் 29ம் திகதி மக்கள் மீள்குடியேற்றப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.