நாட்டிலுள்ள 20 பிரதான வைத்தியசாலைகளில் வியாழன் தாதிமார் சுகவீன விடுமுறை போராட்டம்

பதினொரு கோரிக்கைகளை முன்வைத்து நாட்டிலுள்ள 20 பிரதான வைத்தியசாலைகளில் கடமைபுரியும் தாதியர்கள் நாளை வியாழக்கிழமை ஒரு நாள் சுகவீன லீவுப் போராட்டத்தை நடத்த விருக்கின்றனர். தமது பதினொரு கோரிக்கைகள் தொடர்பில் மூன்று வருடங்களாக அரசாங்கம் ஏமாற்றிவந்ததன் காரணமாக இந்த முடிவை எடுத்திருப்பதாக அகில இலங்கை தாதிமார் சங்கத் தலைவர் எஸ்.பி.மெதிவத்த தெரிவித்தார்.

தாதி தொழில் 12 வருட சேவைக்குப்பின்னர் முதலாம் தரத்துக்கு பதவி உயர்வை வழங்குதல், 6/2006 ஆவது சுற்று நிருபத்தின் மூலம் தாதிச்சேவை சம்பள முரண்பாட்டை நீக்குதல், தாதியர் சபையொன்றை அமைத்தல், தாதியர் சேவை யாப்பைத் திருத்துதல், விபத்துக்கொடுப்பனவை 10 ஆயிரம் ரூபாவாக அதிகரித்தல், தாதியர் பயிற்சிப்பாடசாலைகளில் காணப்படும் குறைபாடுகளை அகற்றல் உட்பட 11 கோரிக்கைகளை மூன்று வருடங்களுக்கு முன்னர் முன்வைத்தபோதும் இன்றுவரையில் அவற்றில் ஒன்றையேனும் நிறைவேற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். திங்கட்கிழமை கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அகில இலங்கை தாதியர் சங்கத்தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த ஜூலை மாதம் 2 ஆம் திகதி நாடுமுழுவதும் தாதியர்கள் கறுப்புப்பட்டி அணிந்து தொழிற்சங்க நடவடிக்கையிலீடுபட்டபோதுஅரசாங்கம் ஆகஸ்ட் 15 ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு பெற்றுத்தருவதாக உறுதியளித்தது.ஆனால் அந்த உறுதிமொழியை அரசு காற்றில் பறக்கவிட்டபின்னர் மீண்டும் செப்டம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் தீர்வுத்திட்டம் சமர்ப்பிப்பதாக அறிவித்தது. 27 ஆம் திகதியாகியும் கூட அரசு மௌனம்சாதித்து வருகின்றது. அரசு கொடுத்த காலக்கெடுவான 30 ஆம் திகதியன்று நாம் ஒருநாள் சுகவீன லீவுப்போராட்டத்தில் இறங்க முடிவு செய்திருக்கின்றோம்.

நாட்டிலுள்ள வைத்தியசாலைகளுக்கு 56 ஆயிரம் தாதியர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால் இருப்பது 21 ஆயிரம் தாதியர்களே. இவர்களில் 70 சதவீதமான தாதியர்கள் வியாழக்கிழமை சுகவீன லீவுப்போராட்டத்தை நடத்துவர். இதன் காரணமாக மக்களுக்கு எற்படும் அசௌகரியங்களையிட்டு நாம் கவலையடைகின்றோம். எமது உரிமைகளை வென்றெடுக்க அரசுக்குக் கொடுத்த கால அவகாசம் போதுமென்றே நாம் நினைக்கின்றோம். மக்கள் பாதிக்கப்படுவார்களானால் அதற்கான பொறுப்பை அரசே ஏற்கவேண்டும். 30 ஆம் திகதி போராட்டத்துக்கு அரசு உரிய முறையில் செவிசாய்க்கத்தவறினால் அரசுக்கு குறுகிய கால காலக்கெடுவை விதித்து நாடுதழுவிய தொடர் போராட்டத்தை முன்னெடுக்கத் தயங்கப்போவதில்லை.

எமது போராட்டத்தை மழுங்கடிக்கச் செய்ய அரச சார்பு தொழிற்சங்கங்கள் காட்டிக்கொடுப்புக்குத் தயாரானால் அந்தச் சவாலைமுறியடிக்கவும் நாம் திட்டம் வகுத்திருக்கின்றோம். கடந்த காலத்தில் அரசசார்பு தாதியர் சங்கமும் அரச மருத்துவத்துறைத் தொழிற்சங்கமும் பல காட்டிக்கொடுப்புகளைச் செய்தனர்.
இதன் மூலம் அவர்கள் நாட்டு மக்களுக்கு துரோகமிழைத்துள்ளனர் எனவும் மெதிவத்த தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *