விசுவமடுவில் இரு பெண்கள் மீது பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதான குற்றச்சட்டில் வழக்கு விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்த நான்கு இராணுவச் சிப்பாய்களுக்கும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த யூன் மாதம் 6ஆம் திகதி விசுவமடுவில் இரு பெண்கள் மீது பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட நான்கு இராணுவச்சிப்பாய்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்டு அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட நான்கு இராணுவச் சிப்பாய்களையும் பிணையில் விடுவிக்குமாறு அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி திருமதி கொஸ்வத்த பிணைமனு ஒன்றை கடந்த 10ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பித்திருந்தார். இம்மனுவை ஆட்சேபித்து பாதிக்கப்ட்டவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கே.எஸ். இரத்தினவேல் வாதாடியிருந்தார். வழக்கு விசாரணைகள் பூர்த்தியடைந்த நிலையில் 20ஆம் திகதி பிணைமனு மீதான தீர்ப்பினை வழங்குவதாக நீதவான் பெ.சிவகுமார் அறிவித்திருந்தார்.
இதன்படி நேற்று 20ஆம் திகதி புதன்கிழமை குறித்த நான்கு சிப்பாய்களுக்கும் நிபந்தனையின் அடிப்படையில் பிணை வழங்கப்படுவதாக நீதவான் அறிவித்தார். இச்சிப்பாய்கள் 25 அயிரம் ரூபா காசுப் பிணையிலும், ஒவ்வொருவரும் மூன்று பேரின் ஐந்து இலட்ச ருபா சரீரப்பிணையிலும் செல்ல நீதவான் உத்தரவிட்டார். மாதத்தில் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிட வேண்டும் எனவும் அறிவித்த நீதவான் குறித்த நபர்கள் வெளிநாடுகளுக்குப் பயணமாவதைத் தடுக்குமாறும் சம்பந்தப்பட்ட திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.