யாதும் ஊரே யாவரும் கேளீர்! தீதும் நன்றும் பிறர்தர வாரா! : முருகபூபதி (அமைப்பாளர், சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு)

Murugaboopathy_Writterஇலங்கைத் தமிழர்கள் தொடர்பில் எடுக்கப்படுகின்ற ஒவ்வொரு விடயமும் சர்வதேச அளவில் விவாதத்திற்குரியதாகிறது. இது தமிழ் மககளின் அரசியலுடன் மட்டும் மட்டுப்படுத்தப்படாமல் அதற்கு அப்பாலும் விரிந்துள்ளது. 2011 ஜனவரி 5 முதல் ஜனவரி 8 வரை இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள சர்வதேச எழுத்தாளர் மாநாடு அம்மாநாட்டை ஏற்பாடு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது முதல் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது.

மேற்படி மாநாட்டுக்கு இன்னும் இரு மாதங்களே உள்ள நிலையில் இம்மாநாடு பற்றிய விவாதக்களத்தை தேசம்நெற் ஆரம்பித்து வைக்கின்றது.

தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், கவிஞர் காசி ஆனந்தன், திரைப்பட இயக்குனர் மணிவண்ணன், கவிஞர்கள் அறிவுமதி, தாமரை, பத்திரிகையாளர்கள் சோலை, சுதாங்கன் தொடங்கி நியூயோர்க் ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு, டெக்மார்க் தமிழர் பேரவை எழுத்தாளர் எஸ் பொ, பிரான்ஸில் கி பி அரவிந்தன் என பலரும் இந்த மாநாட்டுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

இவ்விவாதத்தின் ஆரம்பக் கட்டுரையாக சர்வதேச மாநாட்டின் அமைப்பாளர் முருகபூபதி சில மாதங்களுக்கு முன் அனுப்பி வைத்த எதிர்வினைகளுக்கான பதில் பதிவிடப்படுகின்றது.

._._._._._.

யாதும் ஊரே யாவரும் கேளீர்! தீதும் நன்றும் பிறர்தர வாரா! : முருகபூபதி (அமைப்பாளர், சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு)

இலங்கையில் அடுத்த ஆண்டு (2011) நாம் நடத்தவுள்ள சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு தொடர்பாக ஏற்கனவே  பல இதழ்களிலும் (அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளில்) இணையத் தளங்களிலும் மலர்களிலும் எழுதியிருப்பதுடன் தமிழ்நாடு Zee Tamil தொலைக் காட்சியிலும் தொலைபேசி ஊடாக  விரிவாக பேசியிருக்கின்றேன். தமிழக ஜூனியர் விகடனும் எனது கருத்தை கேட்டு பதிவுசெய்துள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு 1987 ஆம் ஆண்டு புலம்பெயர்ந்து வந்த காலம் முதல் மூலையிலே சோம்பிக்கிடக்காமல் தொடர்ந்தும் கலை, இலக்கியப் பணிகளிலும் இலங்கையில் நீடித்த போரினால் பாதிக்கப்பட்ட ஏழைத் தமிழ் மாணவர்களுக்கும் அகதிகளுக்கும் உதவும் மனிதாபிமானப் பணிகளிலும் அயராமல் ஈடுபட்டுவருகின்றேன்.

ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சக்கரையாக நான் வாழ்ந்தவன் இல்லை. 1972 ஆம் ஆண்டு முதலே கலை, இலக்கிய, ஊடகத்துறையில் எனது பணிதொடர்கிறது. உலகின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் எனது பணிதொடரும்.

போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக உதவும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின்(Ceylon Students Educational Fund-Inc) பணிகளில் அர்பணிப்போடு இயங்கி அதனை இன்றளவும் காப்பாற்றி வருகின்றேன்.

இலங்கை மாணவர் கல்வி நிதியம் தொடர்ச்சியாக கடந்த 22 வருடகாலமாக இயங்கிக் கொணடிருப்பதுடன், கடந்த ஆண்டு மே மாதம் வன்னியில் முள்ளிவாய்காலில் முற்றுப்பெற்ற ஈழ யுத்தத்தின்போது சரணடைந்த முன்னாள் போராளிச் சிறார்கள்  (ஆண்கள்- பெண்கள்) இந்த ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு ஆசைப்பட்ட போது அவர்களது கல்வி சார்ந்த நலன்களை கவனிக்க மாணவர் கல்வி நிதியம் ஊடாக பணியாற்றினேன்.

இத்தனை வேலைப்பளுவுக்கும் மத்தியில்தான் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் எழுத்தாளர் விழா என்ற இலக்கிய இயக்கத்தையும் தோற்றுவித்து தொடர்ச்சியாக அவுஸ்திரேலியாவில் தமிழ் எழுத்தாளர் ஒன்றுகூடல் விழாவை முன்னெடுத்தேன்.

இதற்கும் அரசியல் சாயம் பூசி பகிஷ்கரித்தவர்களின் போலி முகங்களையும் அப்போது என்னால் பார்க்க முடிந்தது. 2001 ஆம் ஆண்டுமுதல் அவுஸ்திரேலியாவில் மெல்பன், கன்பரா, சிட்னி ஆகிய மாநிலங்களில் கடந்த பத்து ஆண்டுகாலமாக தொடர்ச்சியாக வருடம்தோறும் தமிழ் எழுத்தாளர் விழாக்களை ஒழுங்காகவும் கனதியாகவும் தரமாகவும் நடத்துவதற்கு நான் கடுமையாக உழைத்திருக்கின்றேன்.

முத்த படைப்பாளிகளான எஸ்.பொன்னுத்துரை, காவலூர் ராஜதுரை, கவிஞர் அம்பி, ஓவியர் ஞானசேகரம், நாட்டுக்கூத்துக் கலைஞர் அண்ணாவியார் இளைய பத்மநாதன், கலைவளன் சி சு. நகேந்திரன், பேராசிரியர் பொன்.பூலோகசிங்கம், கட்டிடக்கலைஞரும் குத்துவிளக்கு திரைப்பட தயாரிப்பாளருமான வி.எஸ.துரைராஜா, தையற்கலை நிபுணர் திருமதி ஞானசக்தி நவரட்ணம், இலங்கையின் மூத்த மலையக படைப்பாளி தெளிவத்தை ஜோசப் ஆகியோரை இந்த எழுத்தாளர் விழாக்களில் பாராட்டி கௌரவித்து விருதுகளும் வழங்கியிருக்கின்றேன். இந்தப்பணிகளை முன்னெடுப்பதற்காக எமது அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் (Australian Tamil Literary & Arts Society Inc- ATLAS) உறுப்பினர்கள் எனக்கு பக்கபலமாகவும் உறுதுணையாகவும் இருந்திருக்கிறார்கள். இந்த அமைப்பு அவுஸ்திரேலியா அரசில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

இந்த அனுபவங்களின் தொடரச்சிதான் நான் முன்னெடுத்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு.
இப்பொழுது  நான் இலங்கையில் ஒழுங்கு செய்துள்ள எமது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாட்டுக்கும் அரசியல் சாயம் பூசுவதற்கு ஒருகூட்டம் முற்பட்டிருக்கிறது.

இலங்கையில் சர்வதேச எழுத்தாளர் மகாநாட்டை நடத்துவதற்கு நாம் தீர்மானித்ததற்கு பல காரணங்கள் இருந்தன.

உலகம் பூராவும் சிதறுண்டு வாழும் ஈழ எழுத்தாளர்கள் தமது இலக்கிய உறவுகளை மீண்டும் காலம் கடந்துவந்து சந்திப்பதற்கும் குறிப்பிட்ட சந்திப்பானது கூடிக்களைந்து உண்டுகளித்துவிடும் ஒன்றுகூடலாக அமையாமல் பல ஆக்கபூர்வமான கலை, இலக்கியம், மற்றும் கல்வி சார்ந்த பணிகளை முன்னெடுப்பதற்காகவுமே திட்டமிடப்பட்டது.

அனுபவம் இல்லாத கல்வியை விட, கல்வி இல்லாத அனுபவம் மேலானது என்பார்கள். அதுபோன்று அவுஸ்திரேலியாவில் பத்து ஆண்டுகளாக தங்கு தடையின்றி தொடர்ச்சியாக தமிழ் எழுத்தாளர் விழாக்களையும் போரினால் பாதிப்புற்ற ஏழைத்தமிழ் மாணவர்களுக்காக அவுஸ்திரேலியாவிலிருந்து தங்கு தடையின்றி இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தை நடத்திவரும் அனுபவங்களிலிருந்தும் கற்றுக்கொண்ட பாடங்களினாலும் இலங்கையில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாட்டைக் கூட்டுவதற்கு பலரதும் ஆலோசனைகளையும் ஆதரவையும் பெற்றேன். சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பே இந்த யோசனை இலங்கையில் நடந்த மல்லிகைப்பந்தல் இலக்கியச் சந்திப்பில் இலங்கை படைப்பாளிகளினால் முன்வைக்கப்பட்டது.

அவுஸ்திரேலியாவிலிருந்து கொண்டு இலங்கை, தமிழகம், மலேசியா, சிங்கப்பூர், கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா உட்பட சில ஐரோப்பிய நாடுகளில் வதியும் நூற்றுக்கணக்கான கலைஞர்கள், படைப்பாளிகளுடன் தொடரச்சியான உறவும் தொடர்பும் கொண்டிருப்பவன் என்ற முறையில் இந்த மகாநாட்டுப் பணிகளை ஒருங்கிணைக்க மிகவும் பொறுத்தமானவன் முருகபூபதிதான் என்ற கருத்து குறிப்பிட்ட கொழும்பு சந்திப்பில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே தோற்றம் பெற்றதுடன், என்னிடம் சில பணிகளும் ஒப்படைக்கப்பட்டன.

2009 ஜனவரியில் வெளியான மல்லிகை  44 ஆவது ஆண்டு மலரில் ‘தொலைபேசி மான்மியம்’ என்ற  கட்டுரையின் இறுதிப் பகுதியில் குறிப்பிட்ட சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு பற்றி பதிவு செய்திருக்கின்றேன்.

அதனைப் படித்த மேலும் பல படைப்பாளிகள் என்னுடன் தொடர்புகொண்டு இந்த யோசனைக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தினர் .

தமிழகத்திலும் அவுஸ்திரேலியாவிலும் அகலக்கால் பதித்துள்ள எமது மூத்த படைப்பாளியான எஸ்.பொ. அவர்களுக்கு, எனக்கிருக்கும் சர்வதேச இலக்கிய தொடர்புகள் தெரிந்தமையால் தான் பல வருடங்களுக்கு முன்னர் அவரால் வெளியிடப்பட்ட ‘பனியும் பனையும்’ என்ற புலம்பெயரந்த படைப்பாளிகளின் கதைத் தொகுப்புக்காக  எனது ஆதரவை நாடியிருந்தார். நானும் என்னால் முடிந்த அளவு கதைகளை அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து சேகரித்துக் கொடுத்தேன்.
குறிப்பிட்ட ‘பனியும் பனையும்’ வெளியானது. ஆனால் தொகுப்பாசிரியர்கள் என்ற பெயரில் இந்தப்பணியில் சிறுதுரும்பும் எடுத்துப் போடாத எனது இனிய தமிழக நண்பர் இந்திரா பார்த்தசாரதியின் பெயரை எஸ்.பொ. அவர்கள் சேர்த்துக்கொண்டார். எனது பெயர் இருட்டடிப்புச் செய்யப்பட்டது.

ஏன் இப்படிச்செய்தீர்கள்?- என்று அவருக்கு மிகநெருக்கமாக இருந்தவர்கள் கேட்டபோது அவரிடமிருந்து ஆழ்ந்த மௌனம்தான் வெளிப்பட்டது.

தாம் இலங்கையிலும் அவுஸ்திரேலியாவிலும் இழந்துபோன இலக்கிய அந்தஸ்தை தமிழகத்தில் தக்கவைத்துக் கொள்வதற்காக அவர் மேற்கொண்ட முதல் முயற்சிதான் குறிப்பிட்ட நூலின் தொகுப்பில் அதற்குச் சம்பந்த மில்லாதவரின் பெயரைச் சேர்த்துக்கொண்டது.

இதற்கெல்லாம் முன்னோடியாக இலங்கையில் ஏற்கனவே வெளியான தமது நூல்களை தமிழகத்தில் மீள்பிரசுரம் செய்யும்போது தமிழக நூலக அபிவிருத்திச்சபையின் அங்கீகாரத்தைப் பெற்று விற்பனை செய்துகொள்வதற்காக குறிப்பிட்ட ஏற்கனவே வெளியான தமது நூல்களை (தீ, சடங்கு உட்பட பல நூல்கள்) தமிழகத்தில் இரண்டாம் பதிப்பு எனச் சுட்டிக் காட்டாமல் புத்தம்புதிய முதல் பதிப்பு என்று காண்பித்துக் கொண்டதுடன், சுஜாதா, இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன், ராமனுஜம், சாலை. இளந்திரையன் போன்ற நன்கு தமிழகத்தில் அறியப்பட்டவர்களின் அணிந்துரைகளுடன் தமிழக அங்கீகாரத்துக்கு அவாப்பட்டுக் கொண்டார்.

இலங்கையில் சாதி எதிர்ப்புப் போராட்டத்தில் டானியல், ஜீவா, ரகுநாதன், சுபத்திரன் போன்ற இடதுசாரி படைப்பாளிகளுடன் இணைந்து இயங்காமல் ஆலயப்பிரவேசம் மற்றும் தேநீர்க்கடை பிரவேசம் முதலான போராட்டங்களில் சேர்ந்து கொள்ளாமல் தாம் தோற்றுவித்த நற்போக்கு இலக்கிய முகாமை செலுமையுடன் வளர்த்துக்கொள்ளத் தெரியாமல் தனக்குத்தானே பகைவனாகிக் கொண்ட எஸ். பொ. அவர்கள் ஒரு சந்தரப்பத்தில் தமிழ் நாட்டில்  மேலே குறிப்பிட்ட படைப்பாளிகளுடன் தம்மை தக்கவைத்து தமது நூல்களை தமிழகத்தில் மறுபிரசுரம் செய்துவிட்டு, இப்போது தம்மை ஒரு தலித் இலக்கியப் போராளி என்று காண்பிப்பதற்காக மற்றுமொரு வேடம் புனைவதற்காக முயன்றுள்ளார்.

இலங்கைக்குச்சென்று தமது முன்னாள் நண்பர்களை சந்திப்பதற்காகவும் இழந்துபோன மரியாதையை மீட்டுக்கொள்வதற்காகவும் முருகபூபதியின் தயவை இவர் எப்படி நாடியிருந்தார் என்பதை  எனது ராஜஸ்ரீகாந்தன் நினைவுகள் நூலில் இடம்பெற்றுள்ள ராஜஸ்ரீகாந்தனின் கடிதங்கள் விளக்கும்.

அவுஸ்திரேலியாவில் சிட்னியில் இலக்கியப்பவர் என்ற அமைப்பின் தோற்றத்துக்கு காரணமாக இருந்து, பின்னர் அதனால் புறக்கணிக்கப்பட்டு, அவுஸ்திரேலியாவில் இழந்துபோன செல்வாக்கை மீண்டும் நிலைநாட்டிக்கொள்ள இவர் முயன்றபோது, எவருமே மித்ரா பதிப்பகத்தின் வெளியீட்டு விழாவுக்கு இவருக்காக தலைமை தாங்க முன்வராதபோது மெல்பனிலிருந்து முருகபூபதியை வரைவழைத்து (முருகபூபதி தமது சொந்தச் செலவில்தான் விமானம் ஏறினார்) குறிப்பிட்ட விழாவை நடத்தினார்.இச்சம்பவங்கள் எழுத்தில் அழுத்தமாக பல பத்திகளில் பதிவாகியிருக்கின்றன.

2009 இலே சர்வதேச மகாநாட்டில் சமரபிக்கப்படும் யோசனைகள் தொடர்பாக தொலைபேசி வாயிலாக பலதடவை எஸ்.பொ. அவர்களை நான் தொடர்புகொள்ள முனைந்தும் முடியாமல்போனது.
பின்னர் யுகமாயினி ஆசிரியர் சித்தன் அவர்கள் மூலம் தகவல் அனுப்பினேன். தகவல் கிடைத்ததும் எஸ்.பொ. சொன்ன வார்த்தைகள் “I am always with Murugapoopathy.  He doing Good Job. I am Going to support”

‘பனியும் பனையும்’ தொகுதியை மீள் பிரசுரம் செய்வதற்காக மீண்டும் எனது தயவை அவர் நாடினார். .அவரது இயல்புகளை நன்கு தெரிந்திருந்தமையால் நான் அதற்கு மறுத்துவிட்டேன்.
அவுஸ்திரேலியாவிலிருக்கும் அவரது நண்பர்கள் மூலமாகவும் என்னை இந்த தொகுப்பு வேலைக்கு மீண்டும் பயன்படுத்திக் கொள்ளப்பார்த்தார். எதையெதை யாராhல் செய்துமுடிக்க முடியும் என்பது அவருக்கு நன்கு தெரியும். நான் இதுவிடயத்தில் மீண்டும் ஏமாறத்தயாரில்லை என்று அவருக்கே தொலைபேசி மூலம் தெரிவித்திருக்கின்றேன்.

அந்த இரண்டாவது பதிப்பு முயற்சி பல மாதங்களாகியும் இன்றுவரையில் எனது தயவும் உதவியும் இல்லாமல் கிடப்பிலிருக்கிறது.

2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொழும்பில் நடந்த சர்வதேச மகாநாட்டுக்கான முதலாவது விரிவான ஆலோசனைக்கூட்டம் தொடர்பான செய்தியும் படங்களும் தமிழ்நாடு  யுகமாயினி 2009 மார்ச் இதழில் பிரசுரமாகியிருக்கிறது.

ஆசிரியர் சித்தன் இம்மாகாநாட்டுக்கான தமிழக பிரதிநிதியாக இயங்குவார் என்ற தகவலும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. சித்தனும் தமது ஆசிரியத் தலையங்கத்தில் மகாநாட்டை வரவேற்று தமது கருத்தை பதிவு செய்திருந்தார்.

மற்றுமொரு இலக்கிய சிற்றிதழான இனிய நந்தவனம் ஏப்ரில் இதழிலும் மகாநாடு பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

எமது மகாநாட்டின் நிகழ்ச்சிகளின் இணைப்பாளர்களில் ஒருவரான நண்பர் அந்தனிஜீவா தமிழகம் சென்று பாண்டிச்சேரி வரையில் பயணித்து இம்மகாநாடு குறித்த எமது 12 அம்ச யோசனைகளை பிரதியெடுத்த விநியோகித்துள்ளார்.

அதனைப் பார்த்த பா.செயப்பிரகாசம் மற்றும் பல தமிழக எழுத்தாளர்கள் என்னுடன் தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் தொடர்புகொண்டனர். தாமரை இதழ் ஆசிரியரும் தமிழ் மாநில கம்யூனிஸ்ட் கட்சி துணைச்செயலாளருமான மகேந்திரன் எனது குடும்ப நண்பர். அவரும் இந்த மகாநாடு தொடர்பாக தமது ஆதரவை நண்பர் அந்தனிஜீவாவிடம் தெரிவித்திருக்கிறார்.

இப்படியெல்லாம் பல முன்னேற்பாடுகள் நடந்துகொண்டிருக்க… திடீரென்று அந்தர் பல்டி அடிப்பது போல எனக்கும் எனது இலக்கிய நேர்மைக்கும் என்னுடன் இணைந்து மகாநாட்டு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களுக்கும் எதிராக அவதூறும் அபாண்டமும் பழிச்சொற்களையும் பரப்புவதற்கு எஸ்.பொ. வரிந்துகட்டி எழுந்திருப்பதன் மர்மம் என்ன?

2009 டிசம்பர் முதல் 2010 ஜூன் வரையில் எதுவுமே பேசாமல் ஆழ்ந்த மௌனம் காத்துவிட்டு இப்போது வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைப்பதற்கு அவர் புறப்பட்டுள்ளதற்கான ரிஷி மூலம் – நதி மூலம் என்ன?

போர் நடந்த காலப்பகுதியின் பின்னர் 2009 டிசம்பர் ஞானம் இதழ்  (115 ஆவது இதழ்) எஸ்.பொ.வுக்காக இலங்கையில் பவளவிழா சிறப்பு மலர் வெளியிட்டபோது அதனை மானசீகமாக ஆதரித்து ஏற்றுக்கொண்டவருக்கு, அந்த மலர் வெளியான மண்ணில் போர்க்குற்றம் நடந்தது தெரியாமலா இருந்தது. “இத்தருணம் எனக்கென்ன பவளவிழா மலர்” என்று கேட்காமலிருந்துவிட்டு இப்போது குறிப்பிட்ட ஞானம் இதழ் ஆசிரியரும் இணைந்துள்ள மகாநாட்டுப் பணிகளை கொச்சைப்படுத்த முனைந்துள்ள மர்மம் என்ன?

இலங்கையில் போர் முடிந்தபின்னர் நான் அங்கே சென்று சுமார் ஒருமாத காலம் தங்கியிருந்து கொழும்பு மற்றும் வடக்கு, கிழக்கு தமிழ்ப் பிரதேசங்களுக்கும் சென்று போரினால் பாதிக்கப்பட்ட மக்களையும் மாணவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் வன்னி அகதி முகாமிலிருந்து ஊக்கமுடன் கல்வி கற்று வவுனியா பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்ற பல ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு சைக்கிள்கள் (துவிச்சக்கரவண்டிகள்) பெற்றுக்கொடுத்ததுடன் அவர்களையும் எமது புலமைப்பரிசில் திட்டத்தில் இணைத்துக்கொண்டேன். இதற்கெல்லாம் அவுஸ்திரேலியாவிலிருக்கும் இரக்கமுள்ள தமிழ் அன்பர்கள் உறுதுணையாக விளங்குகிறார்கள்.
இந்தப்பணிகள் பற்றி ஏற்கனவே பல உண்மையான அறிக்கைகள் எமது இணையத்தளத்திலும் ஊடகங்களிலும் வெளியாகியிருக்கின்றன.

இலங்கைப் பயணத்தின்போது போர் நடந்த இடத்தில் பாதிப்புற்ற எழுத்தாளர்களையும் சந்தித்து அவர்களுக்கும் அத்துடன் மனநலம் குன்றிய படைப்பாளி ஒருவருக்கும் உதவி வழங்கியதுடன் திருகோணமலையில் தற்போது தங்கியிருக்கும்  கவிஞர் புதுவை ரத்தினதுரை அவர்களின் மனைவி, பிள்ளைகளையும் அவர்களின் உறவினர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் என்னால் இயன்ற உதவிகளும் செய்தேன்.

வலதுகை கொடுப்பது இடதுகைக்குத்தெரியக்கூடாது.

எனது இந்தப்பயணம் குறித்தும் புதுவை ரத்தினதுரையும் மற்றும் சில போராளிகளும் சரணடைந்தது தொடர்பான பல தகவல்களையும் நான் விரிவாக எழுத வேண்டும் என்று ஐரோப்பா, அவுஸ்திரேலியா  மற்றும் கனடா வாழ் தமிழ்ப் படைப்பாளிகள் என்னிடம் கேட்டுக்கொண்டபோதும் அப்படி எழுதி எனக்கு சுயவிளம்பரம் தேடிக்கொள்ள நான் விரும்பவில்லை. பல இடங்களுக்கும் சென்று கெமராவில் படங்களை எடுத்த நானும் எனது இலக்கிய நண்பர்களும் புதுவை ரத்தினதுரையின் குடும்பத்தை சந்திக்கச் சென்றபோது கெமராவை எடுத்துச்செல்ல விரும்பவில்லை.

நாம் அவர்களை எமக்கு விளம்பரம் தேடிக்கொள்வதற்காக சந்திக்கச் செல்லவில்லை என்பது மாத்திரமே உண்மை. அவரும் மற்றும் சிலரும் எங்கோ உயிரோடு இருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் திருமதி ரஞ்சி ரத்தினதுரையும் மற்றும் பிள்ளைகள் உறவினர்களைப் போலவே நானும் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றேன்.

எமக்கு ஆக்கபூர்வமான பணிகளும் கடமைகளும்தான் முக்கியமே தவிர மலினமான பரபரப்போ, மலினமான நேர்காணல்களோ சுயதம்பட்டம் அடிக்கும் அறிக்கைகளோ அல்ல.

இலங்கையில் போர் நடந்தது. போர்க்குற்றங்கள் இரண்டு தரப்பினாலும் நடந்துள்ளன. இதனை யாராலும் மறைக்க முடியாது. இது தொடர்பான நடவடிக்கையில் சர்வதேச சமூகம்  தொடர்ந்தும் ஈடுபடும்.

அதற்காக இலங்கை மக்களின் அன்றாட வாழ்வு தொடராமலா இருக்கிறது?
யாழ்ப்பாணத்தில் நல்லூரில் கந்தசுவாமி கோயில் வருடாந்த உற்சவம் நடக்காமலா இருக்கிறது?
கொழும்பில் பிரபலமான ஆடிவேல் விழா நடக்காமல் இருக்கிறதா? இதற்கு தமிழகத்திலிருந்து நாதஸ்வர, தவில் கலைஞர்கள் வருகைதராமலா இருக்கிறார்கள்.?
கம்பன் கழகத்தின் கம்பன் விழாவும் இசைவேள்வியும் நடக்காமலா இருக்கிறது?
மாத்தளை என்ற மலையக ஊரில் பிரசித்திபெற்ற முத்துமாரியம்மன் கோயிலின் வருடாந்த உற்சவமும் ஐந்துரத பவனியும்  பல்லாயிரக்கணக்hன தமிழ் பக்தர்கள் மத்தியில் நடக்காமலா இருக்கிறது.?
கொழும்பு புறக்கோட்டையில் தமிழ்ப் பெண்கள் பாற்குடம் சுமந்து திருவிழா நடத்திக் கொண்டிருக்கிறார்கள். வெள்ளவத்தையில் ஆண்கள் வேல்குத்தி பறவைக்காவடி எடுக்கிறார்கள்.

இலங்கையின் தமிழ்ப் பிரதேசங்களில் உலகநாயகன், சூப்பர் ஸ்டார், இளைய தளபதி, மெகா ஸ்டார், புரட்சிக்கலைஞர் ஆகியோரின் மசாலாப் படங்கள் காண்பிக்கப்படாமலா இருக்கிறது.
இலங்கை தமிழ்ப் பிரதேசங்களுக்கு போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தாம் சிரமப்பட்டு சேகரித்த மருந்து மற்றும் உணவுப்பொருட்களை கப்பலில் அனுப்பமுடியாமல் போனபோது ஐக்கிய நாடுகள் சபைக்கும் செஞ்சிலுவைச் சங்கத்திற்கும் இந்திய மத்திய அரசுக்கும் உருக்கமான வேண்டுகோள் விடுத்து சாகும்வரையில் பழ.நெடுமாறன் அவர்கள் உண்ணாவிரதம் இருந்த காலப்பகுதியில் சூப்பர் ஸ்டாரின் படங்கள் இலங்கையிலும் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் வாழும் நாடுகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகி அவருக்கும் அதனைத் தயாரித்த நிறுவனத்திற்கும் கோடி கோடியாக எமது தமிழ் மக்கள் கொடுத்தார்களே? அப்போது எங்கே போனது தமிழ் இன மான உணர்வு?

சுனாமியினால் கடற்கோள் வந்து எஸ்.பொ. பெண்ணெடுத்த கிழக்கு மாகாணம் பாதிப்புற்ற போதும் தாம் பிறந்து தவழ்ந்து விளையாடிய யாழ்ப்பாண மண்ணில் அகதிகளின் எண்ணிக்கை பெருகியபோதும் அந்தப் பக்கமே எட்டியும் பார்க்காத அம்மக்களின் தேவைகளுக்காக ஒரு சதமேனும் செலவிடாதவர்தான் இப்போது திடுக்கிட்டு எழுந்து போர்க்குற்றம் நடந்த மண்ணில் தமிழ் எழுத்தாளர்கள் ஒன்று கூடுவதற்கு தமது கண்டனத்தை தெரிவிக்கிறார்.

யார் ஐயா உம்மிடம் கருத்துக்கேட்டது?

கருத்துக்காக பல தடவைகள் தொலைபேசியிலும் தொடர்புகொண்டபோது சாமர்த்தியமாக நழுவிக்கொண்டு இப்போது அதுவும் 2010 ஜூன் மாதத்திற்குப் பின்னர் அறிக்கையும் அவுஸ்திரேலியாவை குறிபார்த்து வனொலி பேட்டிகளும கொடுப்பதன் மர்மம் என்ன? இவற்றின் ரிஷிமூலம் என்ன?

மகாநாட்டுக்கான நிதிவளம்:

பச்சைத் தண்ணீரில் பலகாரம் பொரிக்க முடியாது. 2009 ஜனவரி 3 ஆம் திகதி கொழும்பில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திலும் அதற்கு முன்னர் 27-12-2009 ஆம் திகதி கொழும்பு தினக்குரல் ஞாயிறு இதழிலும் இந்த மகாநாட்டிற்கான செலவுகளுக்கு எப்படி நிதி சேகரிக்கப்போகின்றோம் என்பது பற்றி தெளிவாகவே சொல்லியிருக்கின்றோம்.

இலங்கையில் வாழ்க்கைச்செலவு உயர்வினாலும் போருக்குப் பின்னரான பொருளாதார நெருக்கடியினாலும் பெரிதும் கஷ்டமுறும் படைப்பாளிகளிடமிருந்து நிதியுதவி பெறாமல், உலகெங்கும் வாழும் ஈழத்து படைப்பாளிகள் சுமார் 500 பேரிடமிருந்து தலா ஒருவர் $100 வெள்ளிகளை நன்கொடையாக தருவதன் மூலம் இந்த மகாநாட்டை சிறப்பாகவும் கலை. இலக்கிய கனதியுடனும் நடத்த முடியும் என்று கூறியிருக்கின்றேன். அத்துடன் பாதிப்புற்ற தமிழ்ப் படைப்பாளிகளின் குடும்பங்களுக்கு தொடர்ச்சியாக உதவுவதற்காக ஒரு நம்பிக்கை நிதியத்தை உருவாக்கும் எண்ணத்தையும் வெளியிட்டிருக்கின்றேன்.

இதற்கெல்லாம் உதவப் போகிறவர்கள் புகலிடத்தில் வாழும் மனிதநேயப் படைப்பாளிகளே தவிர போலி முகங்கள் அல்ல.

கிடைக்கப்பெறும் நிதி நன்கொடைகளுக்கு பற்றுச்சீட்டுகள் தரப்படுவதுடன் மகாநாடு முடிந்து ஒரு மாத காலத்துள் வரவு-செலவு அறிக்கை அங்கீகரிக்கப்பட்ட கணக்காய்வாளரிடம் (Auditor) காண்பிக்கப்பட்டு உதவியவர்களுக்கும் படைப்பாளிகள் சமூகத்துக்கும் சமர்ப்பிக்கப்படும்.
இந்த ஒன்று கூடல் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் அறிந்ததை பகிர்ந்து அறியாததை அறிந்துகொள்ளும் முயற்சியாகவே நிகழ்ச்சி நிரல் வடிவமைக்கப்படும் என்றும் பேசியிருக்கின்றேன். பல பத்திகளில் எழுதியுமிருக்கின்றேன்.

இலங்கையில் நடந்த திரைப்பட விழா ஒரு கேளிக்கை களியாட்ட நிகழ்ச்சி. அரசின் ஆதரவுடன் நடத்தப்பட்டது. அதனை எதிர்தார்கள் பகிஷ்கரித்தார்கள். அதற்கு ஒரு நோக்கம் இருந்தது.
ஆனால் எமது எழுத்தாளர் ஒன்று கூடலானது மிகவும் சாதாரண எளிமையான சிறுகச்சிறுக சேமித்து ஒரு ஏழைக்குடும்பம் நடத்தும் எளிமையான வைபவத்துக்கு நிகரானது.

இதனை அரசியலாக்கி அதற்குப் பின்னால் சிங்கள. தமிழ் அரசியல் தலைவர்கள் பலர் இருக்கிறார்கள் என்றெல்லாம் கற்பனையில் பிதற்றி சிறியதொரு நிகழ்வை பூதாகரமாக்கி தமது பொறமைப் பொச்சங்களை அம்பலப்படுத்தி அதற்கு நெருப்பூட்டி அதில் குளிர் காய்ந்து கெர்ண்டிருப்பவர்களை நாம் என்ன பெயர் சொல்லி அழைக்கலாம்.?

எந்த ஆதாரத்தில் நாம் இலங்கை அதிபரிடம் லஞ்சம் வாங்கித்தான் இதனை நடத்துகின்றோம் என்று நாக்கூசாமல் சொல்கிறார்கள்?

தமது இருப்பை வெளிப்படுத்திக் கொள்வதற்கும் சவாரி செய்வதற்கும் இச்சந்தர்ப்பத்தில் தோதான வாகனமாக இந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாட்டை கருதுகிறார்கள். இலங்கையில் நடத்தாமல் மலேசியாவில் நடத்தலாம் என்று மகத்தான யோசனைகளை அவுஸ்திரேலியாவிலிருந்து சொல்லுபவர்கள் அவுஸ்திரேலியாவில் 2001 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டுவரும் மிகச்சாதாரண தமிழ் எழுத்தாளர் விழா நடந்த மண்டபத்தின் பக்கமே எட்டியும் பார்த்ததில்லை. அதனை நடத்திய சங்கத்தின் சிறுசேமிப்புக்கோ கோரிய நிதியுதவிக்கோ ஒரு சதமேனும் கொடுத்ததும் இல்லை.
எழுத்தாளர் விழாக்களினதும் நடத்தவிருக்கும் மகாநாட்டினதும் பூர்வீகம் தெரியாமல் ஏதோ தாமும் இருக்கிறோம் பேர்வழிகள் எனச்சொல்லிக் கொண்டு தமக்கேயுரித்தான காழ்ப்புணர்வுகளுக்கு சொல் அலங்காரம் அணிவித்து போலி அரிதாரம் பூசி பவனி வருகிறார்கள்.

இதனை நான் எழுதிக்கொண்டிருக்கும் போது ஐரோப்பாவிலிருந்து (பிரான்ஸ்) ஒரு இலக்கிய நண்பர், நீண்ட காலத்திற்குப் பின்னர் தமது மனைவி பிள்ளைகளுடன் இலங்கை சென்று வடக்கு, கிழக்கு தமிழ்ப்பிரதேசங்களிலும் கொழும்பிலும் சுமார் 46 நாட்களை மகிழ்ச்சியோடும் பிரிநதவர்களை மீண்டும் பார்த்த குதூகலத்துடனும் விரிவான கடிதம் ஒன்றை எனக்கு மின்னஞ்சல் செய்துள்ளதுடன். மகாநாட்டுப் பணிகளிலும் ஒத்துழைக்கின்றார்.

இதுவரையில் நாம் பல புலம்பெயர் படைப்பாளிகளிடமிருந்து மகாநாட்டு மலர்கள், நூல்கள் ஆகியனவற்றுக்கு பல படைப்புகளை பெற்றிருப்பதுடன் நிதிப்பங்களிப்பையும் பெற்றுள்ளோம்.
மகாநாட்டிற்காக இலங்கையில் பிரத்தியேகமாக ஒரு வங்கிக்கணக்கும் திறக்கப்பட்டு உதவ விரும்பும் படைப்பாளிகள் மற்றும் இலக்கிய ஆர்வலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இப்படியொரு சர்வதேச நிகழ்வு நடக்கப்போகும் விடயமே அங்குள்ள எந்தவொரு அரசியல் வாதிகளுக்கும் சொல்லப்படவில்லை. நாம் அரசியல்வாதிகளோ, வியாபாரிகளோ, பரபரப்பான விளம்பரம் தேடும் போலிகளோ இல்லை.

காலம் கடந்து குடும்பங்கள் எங்காவது ஓரிடத்தில் ஒன்றுகூடுவதுபோன்று கலை இலக்கிய குடும்பத்தினர் தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் சந்தித்துக்கொள்ள விரும்பியிருக்கிறார்கள்.

இதனை வைத்துத்தான் இலங்கை அரசாங்கம் தனக்கு சர்வதேச அங்கீகாரத்தை பெறப்போகிறது என்று சொன்னால்…

ஆடிவேல் விழாவையும் நல்லூர்க்கந்தன் உற்சவத்தையும் மாத்தளை முத்துமாரியம்மன் ரதோற்சவத்தையும் அங்கே நாடுபூராவும் தமிழ்ப்பாடசாலைகளில் நடைபெற்றுவரும் தமிழ்த்தின விழாக்களையும் வாராந்தம் நடக்கும் நூல் வெளியீட்டுவிழாக்களையும் தொடர்புபடுத்தியும் தனக்கு ஒரு சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டிருக்கலாமே?

வெளியிலிருந்து வரப்போகிறவர்கள் தமது விடுமுறை மற்றும் வசதிகருதித்தான் வருவார்கள். வரவசதியில்லாதவர்கள் தமது கட்டுரைகளை படைப்புகளை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். மொழிபெயர்ப்பு அரங்கு, படைப்புகளில் செவ்விதாக்கம், சிறுவர் இலக்கியம் , நாடகம், கூத்து, குறும்படம் வலைப்பதிவு உட்பட பல நுண்கலைகள் தொடர்பான கருத்தரங்கு அமர்வுகள் நடைபெற   விருக்கின்றன.

தமிழகம் மலேசியா சிங்கப்பூர் உட்பட பல நாடுகளிலுமிருந்து வருகைதரும் சிற்றிதழ் ஆசிரியர்களின் கருத்தரங்கு அமர்வும் நடைபெறவிருக்கிறது.

ஏற்கனவே திருக்குறள், பாரதி கவிதைகள் சிங்களத்தில் மொழிபெயரக்கப்பட்டுவிட்டன. தமிழக படைப்பாளிகள் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், கு.சின்னப்பபாரதி ஆகியோரின் படைப்புகளும் இலங்கையில் டொமினிக்ஜீவா, திக்குவல்லை கமால், மேமன் கவி, செங்கைஆழியான், சாந்தன், மலரன்பன். தி.ஞானசேகரன் உட்பட பல படைப்பாளிகளின் நாவல்கள் சிறுகதைகள் சிங்களத்தில்  மொழிபெயர்க்கப்பட்டுவிட்டன. அத்துடன் மார்டின் விக்கிரமசிங்கா, கருணாசேன ஜயலத், குணசேனவிதான, ஜி.பி.சேனநாயக்கா உட்பட பலரது சிங்களப்படைப்புகள் தமிழுக்கு மொழிபெயரக்கப்பட்டுவிட்டன.

(இத்தருணம் ஒரு சிறுதகவல்: ஜெயகாந்தன் ஆசிரியராகவிருந்து முன்னர் வெளியான கல்பனா இதழில் குணசேனவிதானவின் சிங்களச்சிறுகதை தமிழில் மொழிபெயரக்கப்பட்டு வெளியானது.)
தமிழர் புகலிட நாடுகளில் எம்மவரின் தமிழ்ப்படைப்புகள் (நாவல், சிறுகதை, கவிதை, வாழ்க்கை வரலாறு) ஆங்கிலத்திற்கும் ஐரோப்பிய மொழிகளுக்கும் பெயர்க்கப்பட்டுள்ளன.

எமது அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் 6 ஆவது எழுத்தளர்விழாவில் (07-01-206) நான் தொகுத்து வெளியிட்ட ‘உயிர்ப்பு’ சிறுகதைத் தொகுப்பில் அவுஸ்திரேலியா தமிழ் எழுத்தாளர்கள் 20 பேரின் சிறுகதைகளை தொகுத்து வெளியிட்டேன்.

தற்போது இக்கதைத்தொகுதியை கனடாவிலுள்ள மொழிபெயர்ப்பாளரும் இலக்கிய ஆர்வலருமான ஒரு சகோதரி ஆங்கிலத்தில் மொழிபெயரத்து அனுப்பியுள்ளார். இத்தொகுப்பில் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் – முன்பு வசித்த 20 எழுத்தாளர்களின் சிறுகதைகள் இருக்கின்றன. பின்னர் இங்கு வதியும் 45 கவிஞர்களின் கவிதைகளை தொகுத்து வானவில் என்ற தொகுப்பை 7 ஆவது எழுத்தாளர் விழாவில் (27-01-2007) வெளியிட்டேன். எனினும் இந்த தொகுப்பு நூல்களிலும் எனது எந்தவொரு படைப்பும் இல்லை என்பது அவற்றை பார்த்தவர்களுக்கும் படித்தவர்களுக்கும் நன்கு தெரியும்.

மொழிபெயர்ப்புத்துறையில் எதிர்நோக்கப்படும் சவால்கள் சங்கடங்கள் தொடர்பாக விரிவாக ஆராய்வதற்காகத்தான் சர்வதேச மகாநாட்டில் மொழிபெயர்ப்பு அரங்கு நடைபெறவிருக்கிறது.
சிங்கள படைப்பாளிகளுடன் நாம் புரிந்துணர்வுடன் இயங்குவதையும் சிலர் கொச்சைப்படுத்தி அரசியலாக்கப் பார்க்கிறார்கள்.

கர்நாடக மாநிலத்துடன் பல வருடகாலமாக தமிழ்நாட்டிற்கு தண்ணீர்ப் பிச்சினை இருந்தாலும் தமிழ் வாசகர்கள் கன்னடப் படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்பை படிக்காமலா இருக்கிறார்கள்.
பிறப்பால் கன்னடராகப் பிறந்த நடிகர், நடிகையர்கள் தமிழ்த் திரையுலகில் கொடிகட்டிப் பறந்துகொண்டுதானே இருக்கிறார்கள்.

நாடு, மொழி, இனம், மதம், சாதி கடந்து சிந்திப்பவனே ஆரோக்கியமான கலைஞன், படைப்பாளி. எதனையுமே அரசியலாக்கி அதில் ஆதாயம் தேட முனைபவர்களுக்கு காலம் பதில் சொல்லிக்கொண்டே இருக்கும்.

யாதும் ஊரே யாவரும் கேளீர்.
தீதும் நன்றும் பிறர்தர வரா.

மகாநாடு திட்டமிட்டபடி நடக்கும் வருகைதர விரும்புபவர்கள் இலங்கையராக இருந்தால் தாயகத்தின் யதார்த்த நிலையையும் அங்குள்ள படைப்பாளிகளின்  ஆதங்கங்களையும் நேரில் பார்ப்பார்கள். தமிழகம் உட்பட ஏனைய நாடுகளைச் சேர்ந்தவர்கள் வந்தால் அவர்களுக்கு இந்தப் பயணம் சிறந்ததொரு வாழ்வனுபவமாக மனதிலும் எதிர்காலப் படைப்புகளிலும் பதிவாகும்.

Show More
Leave a Reply to மாயா Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

47 Comments

  • T Sothilingam
    T Sothilingam

    தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை வரவேற்கிறேன், இப்படியான பல மாநாடுகள் உலகில் தமிழர்கள் வாழும் நாடுகளில் எல்லாம் நடைபெற வேண்டும்.
    தமிழ் எழுத்தாளர்கள் கூடுவதை அரசியல் சந்தர்ப்பவாதம் என்றெல்லாம் கூறி கொச்சைப்படுத்தவது தவறானது. இப்படியான அரசியலும் சமூகத்தொண்டுகள் எமக்கு நிறையவே பாடங்களை தந்துள்ளது இதிலிருந்து நாம் இன்னமும் பாடங்களை கற்றுக்கொள்ளவில்லை என்பதே இந்த மாநாட்டுக்கு எதிரானவாதமாக எனக்கு தெரிகிறது.

    இலங்கை அரசு தமிழ் மாநாட்டுக்கு ஆதரவளிக்க உரிமையுள்ளது இலங்கை தமிழ் எழுத்தாளர்கள் இலங்கை அரசிடம் உதவி கோர உரிமையுடையவர்கள் இலங்கைத்தமிழர்கள் இதர நாட்டிலுள் தமிழ் எழுத்தாளர்களை அழைத்து மாநாட்டை நடத்துவது இலங்கைத் தமிழர்க்கு பெருமையான விடயமே. இந்த மாநாட்டை இலங்கையில் நடைபெற்ற பயங்கரவாதத்துடன் இணைத்தோ போரின் பாதிப்புடன் இணைத்தோ பார்ப்பது தவறானது.

    சோசலிச தமிழீழத்தை உருவாக்கப் போனவர்கள் சர்வதேச வல்லாதிக்க ஏகாதிபத்திய சோசலிச எதிரிகளின் நாட்டில் நாடுகடந்த தமிழீழம் என்று பேய்க்காட்டுவதை ஆதரிப்பவர்கள் எப்படி இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் – தமிழர்கள் தமது நாட்டில் மாநாடு நடத்துவதை எதிர்க்க முடியும்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…..இந்த மாநாட்டை இலங்கையில் நடைபெற்ற பயங்கரவாதத்துடன் இணைத்தோ போரின் பாதிப்புடன் இணைத்தோ பார்ப்பது தவறானது……//

    உலகில் கள்ள கிறடிற் காட்டில் இருந்து சவூதிஅரேபிய வீட்டுவேலை தொழிலாலர் உரிமை மறுப்பு வரை வலிந்து புலி முடிச்சுப்போடுவோர் இதனை மட்டும் கொம்பாட்மன்ரலைஸ் (Compartmentalise) பண்ன கோருவது விந்தையிலும் விந்தை!

    Reply
  • Rohan
    Rohan

    //பனியும் பனையும்’ தொகுதியை மீள் பிரசுரம் செய்வதற்காக மீண்டும் எனது தயவை அவர் நாடினார். .அவரது இயல்புகளை நன்கு தெரிந்திருந்தமையால் நான் அதற்கு மறுத்துவிட்டேன்……

    அந்த இரண்டாவது பதிப்பு முயற்சி பல மாதங்களாகியும் இன்றுவரையில் எனது தயவும் உதவியும் இல்லாமல் கிடப்பிலிருக்கிறது.
    …….//

    ‘எனது தயவை நாடினார்’ போன்ற சொற்களை முருகபூபதி பயன்படுத்துவது அவர் தம்மை ஒரு ‘தயவு வழங்கும் சிங்கன்’ என்றுநினைக்கிறார் என்பதைச் சுட்டிநிற்கிறது. அது தவிர ‘நான்’ அது செய்தேன் – இது செய்தேன் – என்று எல்லா விடயங்களையும் ‘ஏக போக உரிமை’ கோருவது எந்த அளவுக்குச் சரியாகும்?

    Reply
  • thurai
    thurai

    தமிழ் எழுத்தாளர் மகாநாடு இலங்கையில் சிறப்பாக நடைபெறுவதற்கு எனது வாழ்த்துக்கள். உலகம்முழுவதும் தமிழர் வாழுமிடமெல்லாம் இதே போன்று எழுத்தாளர் மகாநாடுகள் நடைபெறவேண்டும் கருத்துக்கள் மோதவேண்டும், அப்போதுதான் உண்மை பிறக்கும்.

    இதுவரை காலமும் புலியின் வாலைப்பிடித்திருந்தவர்கழும், தமிழ் மொழியும் இலங்கைத்தமிழரும் தலைவரிற்கும் புலிகளிற்குமே சொந்தமாக்கினார்கள். தமிழர் வாழுமிடங்களில் புலிதின்னாத புல் கடைக்குக்கூட எதிர்க்கடை போடமுடியாது.

    கருத்துக்களிற்கும் எழுத்துக்களிற்கும் தமிழரிடையே சுதந்திரமின்றி 30 வருடம் பயங்கரவாத்துடன் கழிந்துவிட்டது. புலிகழும் உலகின் முன் பயங்கரவாதிகளாகிவிட்டனர். இப்போ இலங்கை அரசை பயங்கரவாதிகளாக உலகிற்கு காட்டுவதன் மூலம் புலிக்கு திரும்ப உயிர் கொடுக்கலாம் என்பதே சிலரின் விருப்பம். இதற்காகவே படாதபாடு புலிசார் ஊடகங்கள் படுகின்றன.

    தமிழர்களில் அக்கறை கொண்டவ்ர்களாக் கதைவிடும் இவர்கள் 100 வருடங்களிற்குமேல் தேயிலைத்தோட்டங்களில் முதுகு முறிய வேலை செய்யும் தொழிலாளர்களிற்காக உலகளாவிய அளவில் ஓர் போராட்டத்தை தொடங்குவார்களா? ஒரு நேரம் தேனீர் அருந்துவதை நிறுத்துவார்களா?– துரை

    Reply
  • நந்தா
    நந்தா

    எஸ்.பொ. வின் முடக்கு வாதங்கள் அந்த நாள்க்களிலேயே அறிந்து கொள்ளப்பட்டவை. எழுத்துக்கள் மூலம் சுய விளம்பரப் பிரியர்களாகிவிட்ட பலர் தமக்கு என்ன கிடைக்கிறது என்பதையே இப்படியான சந்தர்ப்பங்களில் யோசனை செய்கிறார்கள். கிடைக்காவிட்டால் விமர்சனம் அல்லது கண்டனம். கிடைத்தால் புகழ்பாடல். அவ்வளவுதான்!

    Reply
  • மாயா
    மாயா

    எந்த தமிழராக இருந்தாலும் > அவர்கள் விரும்பியபடி எதையாவது செய்ய சுதந்திரம் வேண்டும். கற்ற தமிழர்கள் புலம் பெயர்ந்து வந்தாலும் > கல்வியறிவே இல்லாத பலர் புலிகளது கல்வி மற்றும் தலைமைத்துவத்தில் முக்கிய பங்கு வகித்தனர். இவர்களுக்கு இருந்த ஒரே தகுதி > பிரபாகரனின் ஆள் > நாட்டில் இருந்து வந்தவர்> புலிகளது ஆதரவு என்பதுதானே தவிர வேறு எதுவுமே இல்லை.

    அதிகமான மேற்குலகத்தினருக்கு இந்த பாழாய் போன தமிழர் போல எந்த தடையும் வாழ்கையில் முன்னேற இருந்ததில்லை. புலம் பெயர்ந்தவர்கள் > புலத்தில் சுதந்திரம் கிடைத்ததால்தான் கோப்பை கழுவியாவது நிம்மதியாக வாழ்கின்றனர். அப்படி குளிரிலும் > பனியிலும் உழைத்ததயைும் ஏப்பம் விட்டவர்கள் சொகுசாக வாழந்த புலத்து புலிகள்தான். இவர்களில் பெரும்பாலானோர் வேலைக்கே போகாதவர்கள். ஆனால் இவர்களுக்கு இருக்கும் சொத்து வேலைக்கு போனவர்களை விட அதிகம். சாதாரணமாக சுவிசிலெல்லாம் வேலை செய்யாதவர்களுக்கு குடியுரிமை கிடைக்காது. அத்தனை புலி ஆதரவாளர்களுக்கும் குடியுரிமையுண்டு. அதாவது இவர்கள் சம்பளம் வாங்கிக் கொண்டு வேலை செய்தவர்கள். சமூக சேவையென பொய்யான வேசம் தரித்தவர்கள். இவர்களுக்கு தொடர்ந்தும் வாழ ஏனையோர் எதையாவது செய்தால் தடுக்க வேண்டும். இன்னும் அந்தக் குணம் மாறவில்லை. சிங்களவன் இவர்களுக்கு மன்னிப்பு அளிக்கிறான். என்னைப் பொறுத்தவரை இவை தேவையில்லாத ஒரு விடயம். யுத்தம் முடிந்தவுடன் பிள்ளையான அல்லது கருணா கையில் பவரை கொடுத்திருந்தால் > அவர்கள் புலிகளைப் போல நல்ல தீர்வை அவர்களுக்கு வழங்கியிருப்பார்கள்.

    இனிமேலாவது புலிக் காச்சல் உள்ளவர்கள் படுத்துறங்குவது நல்லது. இல்லையென்றால் இந்தக் காச்சல் நெருப்புக் காச்சலாகி புலிகளது வாழ்வையே குடித்துவிடும்.

    Reply
  • சிலோன் ஆதவன்
    சிலோன் ஆதவன்

    //தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் திரைப்பட இயக்குனர் மணிவண்ணன் கவிஞர்கள் அறிவுமதி தாமரை பத்திரிகையாளர்கள் சோலை சுதாங்கன் தொடங்கி நியூயோர்க் ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு டெக்மார்க் தமிழர் பேரவை எழுத்தாளர் எஸ் பொ பிரான்ஸில் கி பி அரவிந்தன் என பலரும் இந்த மாநாட்டுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.//

    இவர்கள் ஈழத்து எழுத்தாளர்களுக்காக என்ன செய்து விட்டார்கள்?
    எதற்காக இவர்களின் கூற்றைப் பெரிது படுத்த வேண்டும்?

    Reply
  • T Jeyabalan
    T Jeyabalan

    லெ முருகபூபதியினுடைய கட்டுரையின் பிரதான விடயம் சர்வதேச செய்தியாளர் மாநாடு இலங்கையில் கொழும்பில் நடத்தப்படுவது பற்றியதே. இந்நிகழ்வு இலங்கையில் இம்மாநாடு நடத்தப்பட வேண்டும் என்று ஒருசாராரும் இலங்கையில் நடத்தப்படுவதற்கு எதிராக மறு சாராரும் வாதங்களை முன் வைக்கின்றனர். தேசம்நெற் வாசகர்களும் இவ்விவாதத்தில் காத்திரமான கருத்துப் பகிர்வை மேற்கொள்ள வேண்டும்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    முருகபூபதியின் கருத்துக்கள் வரவேற்கத்தக்கன. அவரின் மாநாடு வெற்றிபெறும் என்கின்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. முக்கியமாக மொழிபெயர்ப்பு திசையில்! மேலும் கொழும்பில் நடாத்துவது ஈழத்தின் படைப்பாளிகள் வெளிநாட்டு தூதரகங்களில் விசாவுக்காக மொழிதெரியாத அலுவலர் ஒருவருக்கு பல்லைக்காட்டி கூனிகுறுகி நிற்கும் அவல நிலையையும் தடுக்கும். அத்துடன் அதிக பார்வையாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொள்ளவும் வாய்ப்பளிக்கும். வெளிநாட்டில் வைத்தால் எத்தனைபோர் வருவார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே! ஆனாலும் ஏன் இம்மாநாடு யாழ்ப்பாணத்திலோ, மட்டக்களப்பிலோ அன்றி மலையகத்திலோ ஏற்பாடு செய்யப்பட இல்லை என்கின்ற கேள்வி எழாமலில்லை.

    நிற்க,

    போர்க்குற்றம் தொடர்பான நடவடிக்கையில் சர்வதேச சமூகம் தொடர்ந்தும் ஈடுபடும் எனச் சொல்லி இருக்கிறீர்கள். இதில் உங்கள் பங்களிப்பென்ன? போர்க்குற்றம் நிகழ்ந்திருக்கிறது என ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள். போர்க்குற்றம் நிகழ்ந்த நாடுகளை உலகாரங்கில் தோலுரிக்க சமூக பொருளாதார பிரயாணத் தடைகளை நாடுகள் பிரயோகிக்கின்றன. அதனை சொந்த நாட்டவரான நீங்கள் செய்யாமல் சர்வதேச சமூகம் செயும் எனச் சொல்வது என்ன நியாயம்?

    மேலும் கர்நாடகாக்காரன் தண்ணீர் கொடுக்கவில்லையென்று தமிழன் மொழிபெயர்க்கவில்லையா என நல்ல ‘வசதியான’ கேள்வி ஒன்று கேட்கிறீர்கள். இங்கே மொழிபெயர்ப்பல்ல பிரச்சினை. தாராளமாக மொழிபெயர்க்க வேண்டும். அதில் உங்கள் பங்களிப்பு கனதியானது என ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் போர்க்குற்றங்கள் நிகழ்ந்த ஒரு நாடு, திட்டமிட்ட இனப்படுகொலை செய்த ஒரு நாடு, திட்டமிட்ட இன ஒடுக்குமுறை செய்த ஒரு நாடு எல்லாவற்றுக்கும் மேலாக மொழியை இச்செயல்களுக்கு அரசியலமைப்பின் உதவியோடு (பெரும்பான்மை மொழி பேசுவோரின் வாக்குகள் மட்டுமே கொண்டு) செய்த ஒரு நாட்டை கர்நாடக தண்ணீர்ப் பிரச்சினையோடு ஒப்பிடுதல் முருகபூபதிக்கு அழகல்ல. அவ்வாறு ஒப்பிடுதலோடு நிற்காமல் கேவலம் மூன்றாம்தர (தரம் கெட்ட)சினிமா ரசிகர்களின் செயல்கலையும் உங்களின் ஆக்கபூர்வமான இலக்கிய மாநாட்டையும் ஒப்பிட்டீர்களே அது இன்னும் மோசம்.
    உலக சமூகம் சினிமா ரசிகர்களையோ பால்குடம் தூக்குபவர்கலையோ போர்க்குற்ற விசாரணையில் சாட்சிக்கு அல்லது ஆலோசனைக்கு அழைப்பதில்லை மாறாக உங்கள் போன்ற இலக்கியவாதிகளை, சட்ட வல்லுனர்களை, சமூகநலன் விரும்பிகளைத்தான் அழைக்கிறது. முருகபூபதி தனக்கு எஸ்.பொ வின்பால் இருக்கு கோபத்தைத் தீர்த்துக்கொள்ள ஏன் இவ்வளவு தரம் தாழ்ந்து சினிமா விசிலடிச்சான் குஞ்சுகளை துணைக்கழைக்கிறார் எனத்தெரியவில்லை. ஒருவேளை ஆத்திரம் கண்ணை மறைக்கிறதோ தெரியவில்லை.

    எவ்வாறாயினும் மாநாட்டின் விளைவுகளை பொறுத்திருந்து பார்ப்போம்.

    Reply
  • Saleem
    Saleem

    புலிவாலைப் பிடித்த பல தமிழ் எழுத்தாளர்கள் (இந்தியாவிலும் சரி இலங்கையிலும் சரி)புலிவாலை விடமுடியாமல் திண்டாடுவதன் காரணமே இந்த மாநாட்டுப்பிரச்சினைகள் இவற்றிலிருந்து வெளிவர இந்த மாநாடு நடைபெற்று வெற்றிகொள்ளப்படல் வேண்டும்.

    இந்த மாநாடு ஒழுங்கமைப்பாளர்கள் தமது அனுபவத்தை விருத்திசெய்து அவுஸ்திரேலியா லண்டன் போன்ற நாடுகளிலும் உலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு நடாத்த முன்வர வேண்டும். இந்த செய்தியுடன் புலிவால்கள் சிலவேளை முந்திவிடுவார்கள் பரவாயில்லை

    Reply
  • BC
    BC

    தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்க்கு மனபூர்வமாக வாழ்த்துவோம். சிலருக்கு கருணாநிதி தமிழ்நாட்டில் மகாநாடு நடத்துவது தான் பிடிக்கவில்லை என்று பார்த்தால் இலங்கை எழுத்தாளர்கள் இலங்கையில் மகாநாடு நடத்துவதும் பிடிக்கவில்லை!

    Reply
  • suban
    suban

    இந்த மாநாட்டுக்கு வரமாட்டேன் என்று அடம்பிடித்தவர்கள், புலி முடிந்த பின்பு அரசிடம் புலிகள் மண்டியிட்ட மாதிரி வேறு ஒரு வேடம் போடுவார்கள் அதையும் பார்த்துக்கொள்ளத்தான் போகிறோம்.– suban jaffna

    Reply
  • மாயா
    மாயா

    //இந்த மாநாட்டுக்கு வரமாட்டேன் என்று அடம்பிடித்தவர்கள், புலி முடிந்த பின்பு அரசிடம் புலிகள் மண்டியிட்ட மாதிரி வேறு ஒரு வேடம் போடுவார்கள் அதையும் பார்த்துக்கொள்ளத்தான் போகிறோம்.– suban jaffna//

    இந்த வாக்கியம் , குழுவாக தற்கொலை செய்து கொள்ளப் போகிறோம் என்று பீலா விட்டு , கடைசியில் வெள்ளைக் கொடியோடு வந்த ஆட்கள் போல கடைசியில் புலிகளில் சிலரும் இணைந்து கொள்ளலாம் என்பதை கோடிட்டு காட்டுகிறது.

    அடேங்கப்பா , அந்த சிங்களவனே தமிழனுக்கு மாநாடு நடத்த விடுறான். இந்த தமிழன் விடுறான் இல்லையப்பா? அதாவது எங்களுடைய எதிரி சிங்களவனில்லை. தமிழன்தானா?

    Reply
  • palli
    palli

    இந்த எழுதாளர் மகானாட்டை இலங்கையில் நடத்தினால் அது எழுதாளர் மகாநாடு; அதே மகாநாட்டை வெளிஉலகில் நடத்தினால் அது எழுதுவோர் நடத்தும் மானாட மயிலாடவாகதான் இருக்கும்; இதில் நான் சாந்தனின் கருத்தில் உடன்படுகிறேன்; காரனம் இலங்கையில் பல நூறு எழுதாளர்கள் இருக்கிறார்கள். அவர்களால் இந்தியாவுக்குகூட போக முடியாத நிலை, ஆனால் சர்வதேசத்தில் இருக்கும் (இந்தியா உட்பட) எழுதாளர்கள் இலங்கைக்கு போவதில் எந்த பிரச்சனையும் இருக்காது, பொருளாதார பிரச்சனை உட்பட,

    வேறு ஒரு நாட்டில் ஒரு மகாநாடு நடத்தும் செலவில் பத்தில் ஒருவீதம் கூட செலவில்லாமல் இலங்கையில் மகாநாடு நடத்த முடியும்; அத்துடன் முப்பது வருடமாய் பலர் தமது மனதுக்குள்ளேயே தமது எழுத்தை முடக்கி வைத்துள்ளதையும் நாம் நினைவு கொள்ள வேண்டும்; ஆகவே இந்த மகநாடு இலங்கையில் நடத்த படுவதே மிகசிறப்பு, இலங்கையில் இந்த மகாநாடு நடக்கும் பட்சத்தில் எதுக்காக இந்த மகாநாடு கூடினார்களோ அது வெற்றி பெற வாய்ப்புக்கள் அதிகம்; அதே மகநாடு புலம்பெயர்ந்து நடக்குமாயின் இந்த மகாநாடு பற்றிய விமர்சனமே மகாநாட்டை முழுமையாக பற்றி கொள்ளும்: காசி அண்ணன் போல் ஆயிரம் காசி அண்ணன் இலக்கையில் வடகிழக்கில் உள்ளனர்; அதேபோல் இந்திய எழுதாளருக்கு பல வாய்ப்புக்கள் இருக்கு ஆனால் எம் மண்ணின் எழுதாளர்களுக்கு அப்படி இல்லை; அவர்களை எல்லாம் அழைத்து வில்லுப்பாட்டு பாட புலம்பெயர் தேசத்தில் பலர் உண்டு; ஆகவே இந்த மகாநாட்டின் நாயகர்களாக மண்ணின் உறவுகளை வைத்து அங்கேயே இந்த மகாநாட்டை நடத்தலாம், நடத்த வேண்டும்; நடத்துவீர்கள் என்னும் நம்பிக்கையுடன் உங்கள் முயற்ச்சியை வாழ்த்தி பாராட்டி முடிக்கிறேன்;
    நட்புடன் பல்லி,

    Reply
  • நந்தா
    நந்தா

    பல்லியின் வாதங்களோடு உடன்படுகிறேன். பல முகம் தெரியாத இலங்கை எழுத்தாளர்களை அடையாளம் காண உதவுவதுடன், செலவுகள் குறைக்கப்பட முடியும் என்பதும் ஒரு காரணம்.

    இவ்வளவு காலமும் மனதில் அடக்கப்பட்டுள்ள பல விஷயங்களை எழுதுபவர்கள் பகிரங்கமாக்கவும் இந்த மானாடு ஒரு களமாக அமையலாம் என்பது என் எதிர்பார்ப்பு!

    Reply
  • சிலோன் ஆதவன்
    சிலோன் ஆதவன்

    //வேறு ஒரு நாட்டில் ஒரு மகாநாடு நடத்தும் செலவில் பத்தில் ஒருவீதம் கூட செலவில்லாமல் இலங்கையில் மகாநாடு நடத்த முடியும்; அத்துடன் முப்பது வருடமாய் பலர் தமது மனதுக்குள்ளேயே தமது எழுத்தை முடக்கி வைத்துள்ளதையும் நாம் நினைவு கொள்ள வேண்டும்; ஆகவே இந்த மகநாடு இலங்கையில் நடத்த படுவதே மிகசிறப்புஇ இலங்கையில் இந்த மகாநாடு நடக்கும் பட்சத்தில் எதுக்காக இந்த மகாநாடு கூடினார்களோ அது வெற்றி பெற வாய்ப்புக்கள் அதிகம்; அதே மகநாடு புலம்பெயர்ந்து நடக்குமாயின் இந்த மகாநாடு பற்றிய விமர்சனமே மகாநாட்டை முழுமையாக பற்றி கொள்ளும்://

    பல்லியின் கருத்துடன் நான் முழுமையாக இணைகின்றேன். நிச்சயமாக இந்த மகாநாடு இலங்கையில் நடத்தப்பட வேண்டும். சர்வதேச மகாநாடு என்று கூறப்பட்டாலும்கூட, இதில் முழுமையாக பயன்பெறப் போவது இலங்கை எழுத்தாளர்களே.

    இந்த மகாநாடு இலங்கையில் நடத்தப்படுவதில் இலங்கை எழுத்தாளர்களுக்கு ஓரளவுக்காவது ஒரு உத்வேகம் கிடைக்கும். விழாவின் பிரதான மேற்பாளரும், இவ்விழாவின் அடிப்படைக் காரணகர்த்தாவுமான முருகபூபதி தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்தாலும் அவரும் இலங்கையரே. இலங்கையிலுள்ள நிலை அவருக்கு நன்கு தெரியும். அத்துடன்இ இந்த விழாவிற்கு இலங்கையில் பிரதான இணைப்பாளராக இருப்பவர் டாக்டர் ஞானசேகரன். ஒரு தலைசிறந்த இலக்கியவாதியாகவும், ஞானம் பத்திரிகையின் ஆசிரியராகவும் உள்ள டாக்டர் ஞானசேகரனுக்கு இலங்கை எழுத்தாளர் நிலை நன்கு தெரியும்.

    எழுத்தாளர்கள் விழா எனும்போது முருகபூபதி அவர்களும், டாக்டர் ஞானசேகரன் அவர்களும் முக்கிய ஒரு விடயத்தை கவனத்திற் கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கின்றேன்.

    இலங்கையின் இலக்கிய விழாக்களின் போது அமைப்புக் குழுக்களிலுள்ளவர்களே விருதுகளைப் பெற்றுக் கொள்வதும், பட்டங்களைப் பெற்றுக் கொள்வதும் சாதாரண விடயம் என்பதை இருவரும் நன்கறிவர். இத்தகைய நிலை இந்த இலக்கிய விழாவில் ஏற்படக்கூடாது. கடந்த 30 வருட அனுபவங்களில் பாதிக்கப்பட்ட எழுத்தாளர்களின் மனநிலையை உணர்ந்து பல்வேறுபட்ட சிரமங்கள் மத்தியிலும் தமிழ் வளர்க்க பாடுபட்டவர்களை உண்மையாக இனங்கண்டு கௌரவிப்பார்களாயின் புலம்பெயர் சமூகத்தால் நடத்தப்படக்கூடிய இந்த இலக்கிய விழாவின் நோக்கம் ஓரளவேனும் நிறைவேறும். இலங்கையில் பல்வேறு பிரச்சினைகள் மத்தியில் மௌனமாக இருந்து தமிழ் வளர்க்கும் பலர் இருக்கின்றார்கள். அதேநேரம், தான் தலைசிறந்த இலக்கியவாதி என தம்பட்டம் அடித்துக் கொண்டு பணத்துக்காகவும், விருதுகளுக்காகவும் அலையும் பல எழுத்தாளர்கள் இருக்கின்றார்கள். தற்போது கிடைக்கும் தகவல்களின்படி இதில் இரண்டாம் தரத்தினர் தற்போதே விழா அமைப்பாளர்களுடன் நெருங்கிவிட்டதாக அறியமுடிகின்றது.

    எனவே, முருகபூபதியும், டாக்டர் ஞானசேகரனும் மிகவும் விழிப்புடனும், அவதானத்துடனும் இருக்க வேண்டியது விழாவின் உண்மையான வெற்றிற்கு ஏதுவாக அமையலாம். மாறாக சுயநல நோக்கமிக்க போலிகளின் நடிப்புகளில் இவர்கள் மயங்கினால் இதுவுமொரு சாதாரண இலக்கிய விழாவாக மாறுவது தவிர்க்க முடியாதது.

    இந்த இலக்கிய விழா தொடர்பான மேற்படி கருத்தைக் கூறுவதற்கு அடிப்படை பின்னணி இல்லாமலில்லை. இந்த விழா தொடர்பாக தேசம்நெற் தொடர்ந்தும் களமமைத்துக் கொடுக்குமாயின் விழாவில் பயன்பெற காத்திருக்கும் சிலர் பற்றி ஆதாரத்துடன் கருத்துக்களை முன்வைக்கக் கூடியதாக இருக்கும்.

    நோக்கம் சிறப்புற நிறைவேற வேண்டும். முருகபூபதியினதும் டாக்டர் ஞானசேகரனதும் உண்மையான இலக்கு நிறைவேற வேண்டும். போலிகளை இனங்காட்டுவதில் விழா நிறைவுபெறும் வரை சிலோன் ஆதவன் விழிப்புடன் இருப்பான்.

    Reply
  • thurai
    thurai

    //ஆனால் போர்க்குற்றங்கள் நிகழ்ந்த ஒரு நாடு, திட்டமிட்ட இனப்படுகொலை செய்த ஒரு நாடு, திட்டமிட்ட இன ஒடுக்குமுறை செய்த ஒரு நாடு எல்லாவற்றுக்கும் மேலாக மொழியை இச்செயல்களுக்கு அரசியலமைப்பின் உதவியோடு (பெரும்பான்மை மொழி பேசுவோரின் வாக்குகள் மட்டுமே கொண்டு) செய்த ஒரு நாட்டை கர்நாடக தண்ணீர்ப் பிரச்சினையோடு ஒப்பிடுதல் முருகபூபதிக்கு அழகல்ல//சாந்தன்

    இலங்கையில் நடைபெற்ர குற்ரங்கள் எல்லாவற்ரிற்கும் இலங்கை அரசு மட்டும் பொறுப்பல்ல. தமிழர் தாங்கள் செய்த குற்ரங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். புலிகள் இலங்கையில் அழிந்து ஒரு வருடமாகியும் தேசத்தில் கூட சொந்த முகத்துடன் தமிழர் தங்கள் கருத்தை தெரிவிக்க முடியாத பயங்கரவாதத்தை உருவாக்கியது யார்? சிங்களவரா? அண்மையில் கூட புலம்பெயர்நாடுகளில் கொலைப்பயமுறுத்தல் நடைபெற்றுள்ளது. எனவே சிங்களவரின் மத்தியிலேயே தமிழரால் பயமின்றி சொந்த கருத்தை சொந்த முகத்துடன் சொல்லக்கூடிய நிலமை உள்ளது. சிங்களரசு வெளிபடையான பயங்கரவதிகள் என்றால் தமிழரில் பலர் மறைமுகமான பயங்கரவாதிகள். சிங்களவர் இலங்கையில் மட்டும் தமிழ்பயங்கரவாதிகள் உலகமெங்குமுள்ளனர்.–துரை

    Reply
  • palli
    palli

    தேசத்தில் விடும் பின்னோட்டங்கள் சின்னபிள்ளை விளையாட்டாக சிலர் எடுக்கலாம்; இவர்களுக்கும் இலக்கியத்துக்கும் என்ன உடன்பாடு அல்லது என்ன தெரியும் என சில அறிவுஜீவிகள் கேக்கலாம்; உன்மைதான் இலக்கியம் எமக்கு தெரியாது; ஆனால் மனிதம் தெரியும்; அவர்கள் வாழ்வுநிலை தெரியும்; அது தெரியும்போது இலக்கியம் எமக்கு தெரிய வேண்டியதில்லை, காரணம் இலக்கியம் என்பதே இறந்துபோன அல்லது கடந்தகால கதைகளை கற்பனை வளத்துடன் சொல்லுவதுதான்; ஆகவே இலக்கியவாதிகளை மனதில் கொண்டு இந்த மகாநாட்டை நடத்தமுன் வர வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை; இலக்கியவாதிகளை மரியாதை செலுத்தலாம்; ஆனால் போலி இலக்கியவாதிகளை இனம்காணல் அவசியம், சிலோன் சொல்லுவது போல் விருதுக்கு உரிய பலர் இலங்கையில் இருட்டில் இருக்கிறார்கள். அவர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வாருங்கள். பெண்ணியமா இந்தியாவில் இருந்து பெண்ணியவாதிகளை அழைக்கிறார்கள். இலக்கியமா அதுவும் அப்படியே, இப்படி பலதை எம்மால் சொல்ல முடியும், இன்று நடந்து முடிந்த செம்மொழி மகாநாட்டில் எத்தனை இலங்கை தமிழர் அழைக்கபட்டனர்; ஆனாலும் நாம் அறிவு மதிக்கும் மணிவண்ணனுக்கும் முதலிடம் கொடுக்க வேண்டும் என்பது சிரிப்பாக இல்லை,

    மகாநாட்டை தேடி எழுதாளர் வரவேண்டும்: எழுதாளரை தேடி மகாநாடு போவது சரியல்ல; இந்த மகாநாட்டுக்காய் (இலங்கையில் நடந்தால் ) எந்த வகையில் குறுக்கீடு யார் செய்தாலும் தேசம் இடம் தரும் பட்சத்தில் எவருடனும் எப்போதும் வாதாடவும் அல்லது ஒருங்கிணைப்பாளருக்கு உதவவும் பல்லி தயாராக உள்ளேன்,எழுதாளனாய் அல்ல இலங்கை தமிழனாய்; எதார்த்தவாதியாய், ஒரு மனிதனாய்,
    நட்புடன் பல்லி,

    Reply
  • mathan
    mathan

    இந்த தமிழ் மகாநாடு தொடா;பான கட்டுரை புதிய ஜனநாயக முன்னணியின் இணையத்தளத்தில் இது வரை ஆறு பாகங்கள் வெளிவங்துள்ளது

    Reply
  • மாயா
    மாயா

    கீபீ அரவிந் போன்றவர்கள் ஏன் இந்த மாநாட்டை வெறுக்கிறார்கள் என்பது யாருக்காவது தெரியுமா?

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….மகாநாட்டை தேடி எழுதாளர் வரவேண்டும்: எழுதாளரை தேடி மகாநாடு போவது சரியல்ல….//
    என்ன பல்லி இப்படி ஒரு குண்டைத்தூக்கி முருகபூபதியின் தலையில் போடுகிறீர்கள். எழுத்தாளரைத் தேடித்தான் இந்த மாநாடு இலங்கை போகிறது என முருகபூபதியே சொல்லி இருக்கிறார் எனக் கேள்விப்பட்டேன்.

    //….ஆகவே இலக்கியவாதிகளை மனதில் கொண்டு இந்த மகாநாட்டை நடத்தமுன் வர வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை;….//
    அப்போ யாரை மனதில் வைத்து நடத்தலாம் என்கிறீர்கள். அரசியல்வாதிகளை வைத்து நடத்தலாமா? போகிறபோக்கில் எஸ்.பொ சொன்னமாதிரி மஹிந்தா வந்து மேடையேறினானும் ஏறுவார்.

    Reply
  • santhanam
    santhanam

    இலக்கியவாதிகள் யார்? அரசியல்வாதிகள் யார்? கவிஞர் ஊடகவியளாளர் மாநாடு நடத்துகிறார். தமிழ் தெரிந்தவன் இலக்கிய மாநாடு துப்பாக்கி தூக்கியவன் அரசியல் மாநாடு.
    என்ன நடந்தாலும் எந்த மாற்றமும் அடையாத பாறைபோல கிட்டத்தட்ட சுரணை இல்லாமல் தமிழன் இருக்க பழகிக் கொள்ள வேண்டும். இல்லேன்னா இருக்க முடியாது தமிழன் எங்கே ஒட…………….

    Reply
  • palli
    palli

    //மகாநாட்டை தேடி எழுதாளர் வரவேண்டும்: எழுதாளரை தேடி மகாநாடு போவது சரியல்ல….//
    என்ன பல்லி இப்படி ஒரு குண்டைத்தூக்கி முருகபூபதியின் தலையில் போடுகிறீர்கள். எழுத்தாளரைத் தேடித்தான் இந்த மாநாடு இலங்கை போகிறது என முருகபூபதியே சொல்லி இருக்கிறார் எனக் கேள்விப்பட்டேன். //இதுசாந்தன்:

    //ஈழத்தின் படைப்பாளிகள் வெளிநாட்டு தூதரகங்களில் விசாவுக்காக மொழிதெரியாத அலுவலர் ஒருவருக்கு பல்லைக்காட்டி கூனிகுறுகி நிற்கும் அவல நிலையையும் தடுக்கும். அத்துடன் அதிக பார்வையாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொள்ளவும் வாய்ப்பளிக்கும். வெளிநாட்டில் வைத்தால் எத்தனைபோர் வருவார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே! //
    இதுவும் சாந்தனே;

    //அப்போ யாரை மனதில் வைத்து நடத்தலாம் என்கிறீர்கள். //
    பல்லி சாந்தன் போல் தமது மன அழுத்தங்களை எழுத முடியாமல் விலங்கிடபட்ட ஆயிரகணக்கான பல்லி சாந்தஙளை மனதில் கொள்வது ஒரு தவறா?? இலக்கியம் எல்லோருக்கும் புரியாது, ஆனால் கீராமத்து கிறுக்கல்கள் கூட இலக்கியவாதிகளுக்கு புரியுமல்லவா?? இலக்கியவாதிகள் மட்டுமே
    எழுத வேண்டும் என தேசம் சொன்னால் உங்கள் முன்னால் இன்று பல்லி வரமுடியுமா?? இதுக்கு மேல் வேண்டுமாயின் பல்லி குசும்புவின் உதவியை நாட வேண்டி இருக்கும் ;

    //அப்போ யாரை மனதில் வைத்து நடத்தலாம் என்கிறீர்கள். அரசியல்வாதிகளை வைத்து நடத்தலாமா?//
    அப்படி யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை, யாரைபார்த்தாலும் அடங்காத வாதிகளாகதான் இருக்கிறார்கள்;

    //போகிறபோக்கில் எஸ்.பொ சொன்னமாதிரி மஹிந்தா வந்து மேடையேறினானும் ஏறுவார்.//
    வரட்டுமே இது என்ன செம்மொழி மகாநாடா?? எழுதாளர் மகாநாடுதானே,

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    பல்லி,
    நான் மாநாடு எழுத்தாளர்களையும், வாசகர்களையும் தேடிப்போகவேண்டும் எனக்கருதுகிறேன். அதேபோலத்தான் முருகபூபதியும் கருதுகிறார். ஆனால் நீங்கள் தான் ”..மகாநாட்டை தேடி எழுதாளர் வரவேண்டும்: எழுதாளரை தேடி மகாநாடு போவது சரியல்ல… எனச் சொல்லி இருக்கிறீர்கள். அப்படிப்பார்த்தால் நீங்கள் முருகபூபதியின் நிலைப்பாட்டுக்கு எதிரானவர்தானே இல்லையா?

    //….வரட்டுமே இது என்ன செம்மொழி மகாநாடா?? எழுதாளர் மகாநாடுதானே,..//
    உண்மைதான். நீங்கள் சொன்னதுபோல ”…காரணம் இலக்கியம் என்பதே இறந்துபோன அல்லது கடந்தகால கதைகளை கற்பனை வளத்துடன் சொல்லுவதுதான்…” மஹிந்தாவுக்கு நல்ல கற்பனை வளம் உண்டு. மஹிந்தா ஆதரவாளர்களுக்கும் அவைக்கு குறைச்சல் இல்லை. வாய்க்கு வந்தபடி சொந்த மக்களைத் திட்டி, காட்டிக்கொடுத்து கடைசியில் இந்தியாவில் ஒழித்து இருந்து ”பிடிசாப” பின்னூட்டம் இடுகிறார்கள். பார்க்கிறோம் தானே?

    Reply
  • para
    para

    கிபியாயிருந்தாலென்ன கேபியாயிருந்தாலென்ன அவர்களையும் புரிந்துகொள்ளுங்கள். முள்ளிவாய்க்கால் அழிவுக்கு இவர்களுக்கு பொறுப்பில்லையா?. அந்தக்குற்ற உணர்வில ஏதேதோ கதைக்கத்தான் செய்வார்கள். அவர்களை விட்டுவிடுங்கள். முருகபூபதி வெறும் வார்த்தைகளால் பதில் சொல்லிக்கொண்டிராது செயலால் பதிலினைத் தரட்டும். அவருக்கு எங்கள் வாழ்த்துக்கள்!

    Reply
  • மாயா
    மாயா

    //போகிறபோக்கில் எஸ்.பொ சொன்னமாதிரி மஹிந்தா வந்து மேடையேறினானும் ஏறுவார்.//

    //வரட்டுமே இது என்ன செம்மொழி மகாநாடா?? எழுதாளர் மகாநாடுதானே, – பல்லி //

    பல்லி சொல்வது போல மகிந்தவுக்கு அந்த தகுதியுண்டு. இருந்தாலும் வர மாட்டார். காரணம் மகிந்த ஐநாவில் தமிழ் மொழி பேசிய ஒரு மனிதன். ( எத்தனை தமிழ் தேசியவாதிகள் இருந்தார்கள். என்ன பயன்? ஆங்கிலத்தில்தானே பேசுகிறார்கள்?)

    மிக முக்கியமான மகிந்த தமிழில் கதைக்கும் போது பேப்பர் பார்த்து கதைப்பதில்லை. பாடமாக்கியாவது கதைக்கிறார். மேதகு எல்லாம் யாரோ எழுதிக் குடுத்தாலும் பார்த்துதானே படித்தார்? என்ன இருந்தாலும் இந்த மாநாடு சிறப்பாக நடக்க வாழ்த்துவோம்.

    Reply
  • palli
    palli

    //நான் மாநாடு எழுத்தாளர்களையும், வாசகர்களையும் தேடிப்போகவேண்டும் எனக்கருதுகிறேன். அதேபோலத்தான் முருகபூபதியும் கருதுகிறார்//
    இதில் எனக்கு சிறிதும் கருத்து முரன்பாடு கிடையாது, ஆனால் நான் சொல்லியது தம்மை எழுத்தாளராயும் இலக்கியவாதிகளாகவும் காட்டி வரமாட்டோம் என அடம்பிடிப்பவர்களையே, (மன்னிக்கவும் மொட்டையாய் எழுதாளர் என முன்பு எழுதியதுக்கு)

    //இந்தியாவில் ஒழித்து இருந்து ”பிடிசாப” பின்னூட்டம் இடுகிறார்கள். பார்க்கிறோம் தானே?//
    எனக்கு அப்படி யாரையும் தெரியாது; ஆனால் சாந்தனையும் தெரியாது ;காரணம் அவரும் ஒழிந்திருந்துதான் அவரது கருத்தை வைக்கிறார்; சாந்தன் எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார்; அவர் ஆரம்பகால கழகதோழர் (உங்களைபோல்) பின்பு கழகம் சரியல்ல என்பதால் அதைவிட்டு வெளியேறி சிலகாலம் இந்தியாவில் இருந்துவிட்டு பின்பு புலத்துக்கு வந்துவிட்டார் (இதுவும் உங்களை போல்தான்) பின்பு புலத்தில் ரஜனி ரசிகன்போல் புலி ரசிகனாகி அவர்களுக்கு பின்னால் திரிந்தார்; (இதுவும்;;;;) பின்பு முள்ளிவாய்க்காலுக்கு பின்பு மனம் சோர்ந்து புலி விட்ட புருடா கழகத்தை விட மோசம் என சொன்னார்; இன்று சொன்னது இதோ உங்களுக்காய் பல்லியின் பக்குவத்துடன்;

    நாடு கடந்த அரசு என ஒரு குறூப்;
    நாட்டாண்மை தனத்துடன் ஒரு குறூப்;
    மக்கள்வை என சொல்லி ஒரு குறூப்;
    மக்களுக்கு சேவையென ஒரு குறூப்;
    மகிந்தாவுடன் இணக்கமாய் ஒரு குறூப்;
    மட்டகளப்பில் தனியாக ஒரு குறூப்;
    நெடியவனுக்கும் தேவை ஒரு குறூப்;
    கொடியவன் கஸ்ரோவுக்கும் ஒரு குறூப்;
    சேர்ந்தே இயங்கலாம் என ஒரு குறூப்;
    சேராமல் கிழிப்போம் எனவும் ஒரு குறூப்;
    சேர்த்தது மட்டுமே போதுமென ஒரு குறூப்;
    சேர்த்தது எல்லாம் எங்கே என ஒரு குறூப்;
    அரசின் அரைவணைப்பில் இருக்க ஒரு குறூப்;
    அடிக்கடி கொழும்பு சென்று வர ஒரு குறூப்;
    மாவீரர் உரை காத்தும் தேடியும் ஒரு குறூப்;
    மக்களுக்குகே தெரியும் எனவும் ஒரு குறூப்;
    தமிழகத்தில் தனி ஈழமே தீர்வு என ஒரு குறூப்;
    தமிழ் மகாநாடு நடத்த லண்டனில் ஒரு குறூப்;
    தமிழ்செல்வனுக்கு சிலை எனவும் ஒரு குறூப்;
    தலைவரு இனி இல்லை எனவும் ஒரு குறூப்;
    பொட்டர் பெயர் வேண்டுமெனவும் ஒரு குறூப்;
    பொழுது போக்காய் புலியாவோம் ஒரு குறூப்;
    பாலசந்திரன் பாரிஸ்சில் நடத்துகிறார் ஒரு குறூப்;
    பாஸ்கரனும் கனடாவில் புலியென ஒரு குறூப்;
    தேவையில்லை புலி என தர்சஸ்ன் ஒரு குறூப்;
    தேவை புலிகள் தொலைகாட்சியில் ஒரு குறூப்;
    இமானுவலொ ஒரு குறூப்;
    இணைவோம் ஒரு குறூப்;
    இத்தனையும் ஒரு குறூப்;

    இரு எழுத்தில் சொல்வதானால்; புலி

    இரு வரியில் சொல்வதானால்;
    புலம் பெயர் தேசத்தில் புலியமைப்பு இன்று
    புது புது குறூப்பாய் புருடா,

    இன்னும் தேடினால் கிடைக்கும் சில பல குறூப்புகள்.

    Reply
  • santhanam
    santhanam

    பல்லியின் வசனநடையில் மிகவும் யாதார்த்த உண்மையுண்டு புலத்துதமிழரின் நிலை இப்ப இப்படிதான்.1984ல் 29 இயக்கம் களத்தில் நோட்டிஷ் ஒட்டியது புலத்தில் இன்ரநெற்றில் புலிகளின் 30 குறூப் லீம் பண்ணுகிறார்கள்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….எனக்கு அப்படி யாரையும் தெரியாது; ஆனால் சாந்தனையும் தெரியாது ;….//
    என்ன பல்லி தெரியாது என்கிறீர்கள். அண்மையில் தான் ராஜபக்சா துரோகி, நம்பி ஏமாந்துவிட்டேன். இப்போது இந்தியாவில் பிச்சை எடுக்கப் பண்ணிவிட்டார்கள். பிள்ளைகளைப் பார்த்தால் ரத்தக்கண்ணீர் வருகிறது, கொலை முயற்சி நடக்கிறது என இங்கே தேசத்தில் ராஜபக்சாவுக்கு நாகாசுரன் பட்டம் கொடுத்து தீபாவளி வருகிறது என ஒருவர் சாபம் போட்டார். தெரியாது என்கிறீர்களே?

    உங்கள் வசன கவிதையில் இன்னும் சிலதை விட்டுவிட்டீர்கள்

    இலக்கிய குரூப்,
    இலங்கும் பெண்ணிய குரூப்.
    அதனுள் பாரிஸ் குரூப், லண்டன் குரூப்
    அதைவிடுத்து முருகபூபதி குரூப் ….

    உங்களுக்கு மட்டும்தான் இந்த குரூப்புகள் பற்றி எழுத முடியும் என நினைக்க வேண்டாம்!

    Reply
  • aathav
    aathav

    இம்மாநாடு பற்றிய இரு பிரதான ஓட்டங்கள் உள்ளன. ஒன்று அரசுசார்பு> அதன் பின்புல மாநாடு என! இதை எஸ்.பொ.வும் சில புலி இணையதளங்களும் முன்நிறுத்துகின்றன! இது தமிழகத்தில் தீராநதியில் வர பல தமிழக எழுத்தாளர்களும் குழம்பியுள்ளனர். இது இப்போது சோபாசக்தி முருகபூபதியிடம் எடுத்த பேட்டியின் ஊடாக தீர்ந்துள்ளது என கருதுகிறேன்! இதனால் தமிழக எழுத்தாளர்கள் பலர் மாநாட்டிற்கு சாதகமான கருத்துக்களை தெரிவிக்கின்றனர். இந்நிலையே இலங்கையிலும்! இதை மையப்படுத்தியதே மதன் குறிப்பிட்ட புதிய ஜனநாயக முன்னணியில் வந்துள்ள கட்டுரைகள்! இதைவிட இம்மாநாட்டை அரசு தனக்கு தனக்கு சாதகமாக்கவும் பயன்படுத்தலாம்! அதற்குதானே தமிழ் ஐனநாயக நீரோட்டக்காரர்கள் உள்ளார்களே! இது இல்லாதவிடத்து இம்மாநாடு அவர்கள் முன்வைத்த 12-அம்சக் கோரிக்கைகளுடன் குறித்த இலக்குடன் நடைபெறும்!

    Reply
  • thurai
    thurai

    //இலக்கிய குரூப்,
    இலங்கும் பெண்ணிய குரூப்.
    அதனுள் பாரிஸ் குரூப், லண்டன் குரூப்
    அதைவிடுத்து முருகபூபதி குரூப் //சாந்தன்

    மேற்கூறியவையெல்லாம் தமிழரின் குரூப் இலங்கையிலும் அனுமதியுண்டு, உலகினிலும் அனுமதியுண்டு. பல்லி கூறியவை அனைத்தும் பயங்கரவாதிகளின் குரூப்புக்கள். அதாவது புலிகளின் குரூப்புக்கள்.

    பல்லி சொன்ன குரூப்புக்களை எல்லாம் முன்பு வன்னியில் இருந்த நாணயக் கயிறு கட்டுப்படுத்தியது. இப்போ நாணயக் கயிறு அறுந்துவிட்டது. ஒன்றோடு ஒன்று மோதும் குரூப்புக்களாகிவிட்டன.– துரை

    Reply
  • BC
    BC

    பல்லி கூறிய குரூப்புக்கள் ரசிக்கதக்க உண்மைகள்.

    Reply
  • palli
    palli

    //இலக்கிய குரூப்,
    இலங்கும் பெண்ணிய குரூப்.
    அதனுள் பாரிஸ் குரூப், லண்டன் குரூப்
    அதைவிடுத்து முருகபூபதி குரூப் ….
    உங்களுக்கு மட்டும்தான் இந்த குரூப்புகள் பற்றி எழுத முடியும் என நினைக்க வேண்டாம்!//

    நான் முடிக்கும்போது இன்னும் தேடினால் கிடைக்கும் எனதானே சொன்னேன்; தேடுங்கள் எழுதுங்கள். ஆனால் நான் சொன்னவை ஒரு தலையை நம்பி பின்பு வெம்பி இன்று எம்பி அதனால் பிரிந்தவை; நீங்க சொன்னவை பல தலமையின் கீழ் புலம்பி பின் தனியாக அலம்பி இன்று ஒன்றாய் செயல்பட நினைக்கிறார்கள். அதுசரி அல்லது பிழை என்பதை விமர்சிப்போம்; ஆனால் உங்க நிலை,

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //மேற்கூறியவையெல்லாம் தமிழரின் குரூப் இலங்கையிலும் அனுமதியுண்டு, உலகினிலும் அனுமதியுண்டு. //

    அவசரப்பட வேண்டாம் துரை. இலங்கையில் அனுமதி மட்டுமா ஆனானப்பட்ட ஸ்ரீலங்காவின் மிக அனுமதி கொண்ட ஊதுகுழலான இலங்கை ஒலிபரப்புக்கூட்டுதாபனப் பணிப்பாளரே இந்தியாவில் அல்லல் படுகிறார். இந்த குரூப் எல்லாம் எம்மாத்திரம். பொறுத்திருங்கள் எல்லோருக்கும் ஆப்பு இருக்கிறது!

    Reply
  • மாயா
    மாயா

    //பொறுத்திருங்கள் எல்லோருக்கும் ஆப்பு இருக்கிறது!- சாந்தன்//

    இதை வாசிக்கும் போது “உள்ள விட்டு அடிப்பார்” என்று சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது.

    Reply
  • ashroffali
    ashroffali

    //என்ன பல்லி தெரியாது என்கிறீர்கள். அண்மையில் தான் ராஜபக்சா துரோகி, நம்பி ஏமாந்துவிட்டேன். இப்போது இந்தியாவில் பிச்சை எடுக்கப் பண்ணிவிட்டார்கள். பிள்ளைகளைப் பார்த்தால் ரத்தக்கண்ணீர் வருகிறது, கொலை முயற்சி நடக்கிறது என இங்கே தேசத்தில் ராஜபக்சாவுக்கு நாகாசுரன் பட்டம் கொடுத்து தீபாவளி வருகிறது என ஒருவர் சாபம் போட்டார். தெரியாது என்கிறீர்களே?//சாந்தன்.

    சாந்தன்…. நான் ஒரு போதும் யாரையும் நம்பியிருக்கவில்லை. ரணிலை விட ராஜபக்ச நல்லவர். அதனால் தான் அவருடன் சேர்ந்திருந்தேன். அதனை நான் பல தடவைகள் தெளிவாகச் சொல்லி இருக்கின்றேன். அதேபோல என்றைக்காவது அதே ராஜபக்ஷ தமிழ் மக்களுக்கு எதிரானவராக மாறும் போது நான் அங்கிருக்க மாட்டேன் என்பதையும் முற்கூட்டியே தெரிவித்திருந்தேன். நான் அதைத்தான் நிரூபித்திருக்கின்றேன்.

    ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். எம்மைச் சுற்றி நடப்பவை எல்லாம் தீமைகளாக இருக்க அதில் ஒன்றை நாம் கட்டாயமாகத் தெரிவு செய்து தான் ஆக வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்படும் போது எமக்குப்பாதிப்பு குறைவானதையே தெரிவு செய்ய வேண்டும்.

    அந்த யதாத்தம் அப்போது ராஜபக்ஷவுக்கு பொருத்தமாக இருந்தது. இப்போது இல்லை. நானும் இல்லை.

    அதுசரி நான் இந்தியாவில் பிச்சை எடுப்பதாக யார் உமக்குச்சொன்னது..? நான் எந்த இடத்திலாவது அப்படி சொன்னேனா?

    ஓ…. நீர் ஒரு காலத்தில் இந்தியாவில் பிச்சை எடுத்தவர் தானே…. அப்போது உம்முடன் பிச்சையெடுத்த கூட்டம் இப்போதும் இருக்கின்றார்கள். அதில் ஒருவர் அண்மையில் என்னைக் கண்டு கையேந்தியபோது நான் என்னிடம் ஏதுமில்லையப்பா…. உன் நிலையை விட என் நிலை மோசம்பா.. என்று சொன்னதை தவறாக விளங்கிக் கொண்டு உங்களுக்கு அறிவித்து விட்டாரோ…

    சாந்தன்……. ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். .. நான் தன்மானம் நிரம்பிய தமிழன். மானஸ்தன். என்றைக்கும் என் தன்மானத்தையும் என் இனத்தையும் அநியாயமாக விட்டுக் கொடுக்க மாட்டேன். அதற்காக என் இனத்தில் ஒருவன் அநியாயம் செய்யும் போது அவனுக்குத் துணை நின்று நியாயப்படுத்தவும் மாட்டேன்.

    அதே போல மற்றவர்களின் துன்பத்தில் உருகும் மனம் எனக்குண்டு. இராணுவமும் புலியும் தீவிரமாக செல் அடித்துக் கொண்டிருந்த பயங்கரமான சூழலின் மத்தியிலும் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்காய் நிவாரணப்பொருட்களை எடுத்துக் கொண்டு சம்பூருக்குள்ளும் மூதூருக்குள்ளும் வெருகல் வாகரையிலும் ஏன் வன்னியிலும் உயிரைத் துச்சமாக மதித்துக் கடமையாற்றியவன் தான் நான். ராஜபக்ஷவுடன் நான் சேர்ந்திருந்த காரணத்தால் கிடைத்த அதிகாரத்தை வைத்தே அதனையெல்லாம் சாதித்தேன்.

    அன்றைக்கும் நீங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வெறுமனே பின்னூட்டம் மட்டும் தான் இட்டுக் கொண்டிருந்தீர்கள். நான் என் உடம்பில் செல்லடி பட்டு காயமுற்ற நிலையிலும் அந்த மக்களின் பசி தணிக்க பறந்தோடிக் கொண்டிருந்தேன். துப்பாக்கிகள் உறுமிய சப்தம் காரணமாக பல இரவுகளில் தூக்கமின்றி மண் தரைக் கூடாரங்களுக்குள் கண் விழித்து கால்களுக்குள் முகம் புதைத்த நிலையில் முழு இரவையும் கழித்திருக்கின்றேன்.

    எத்தனையோ அரச அதிகாரிகள் இராணுவத் தரப்பினர் என அனைவரையும் ஏசிப் பேசி நான் மேற்கொண்ட பணியினைத் தடையின்றி மேற்கொண்டுள்ளேன். இனவாதம் பேசிய அனைவருக்கும் ஓங்கி அறையாத குறையாக பதில் கொடுத்திருக்கின்றேன். அதையெல்லாம் உங்களால் செய்ய முடியாது. வெறும் அனுதாபங்களை மட்டுமே உங்களால் பகிர முடியும். உங்களைப் போல மற்றவனின் துன்பத்தில் ஆனந்தம் கண்டு மனம் நொந்து வந்திருப்பவனை மேலும் குத்திக் கிழிக்கும் குரூர புத்தி எனக்கிருக்கவில்லை. இனியும் இருக்காது. அதனால் தான் என்றைக்கும் என்னதான் துன்பங்களை எதிர்கொண்டாலும் நான் மனிதநேயத்தை கைவிடாமல் இருக்கின்றேன்.

    மற்றது என்னைப் போன்ற ஒருவன் ராஜபக்ஷவிடம் இருந்த காரணத்தால் எமது இனத்துக்கு கிடைத்த நன்மைகள் இன்றல்லாது போனாலும் என்றைக்காவது ஒரு நாள் உங்களுக்குப் புரிய வரும். எனக்குத் தரப்பட்ட அதிகாரத்தை வைத்து நம்மினத்துக்கு என்னென்ன நன்மைகள் செய்துள்ளேன் என்பது அந்தந்தத் தரப்பினரால் வெளிக் கொண்டு வரப்படும்.. அதன்போது நீங்கள் என்னை இகழ்ந்ததற்காக வெட்கித் தலை குனியத் தான் போகின்றீர்கள்.

    உங்களைப் போன்று வளமான வாழ்வு ஒன்று மட்டுமே என் குறிக்கோளாக இருந்திருந்தால் என்றைக்கோ நானும் ஐரோப்பிய நாடொன்றின் இலங்கைத் தூதுவராலயமொன்றில் மூன்றாம் நான்காம் நிலைகளில் பொறுப்பான பதவியொன்றைப் பெற்று வசதியாக வாழ்ந்திருப்பேன். அன்றைக்கு நான் அப்படியெல்லாம் நினைத்ததில்லை. என்னால் முடிந்த மட்டிலும் அப்பாவி மக்களுக்கான விடயங்களில் பங்களிப்புச் செய்வதிலேயே நான் மன நிறைவுற்றேன்.

    இதையெல்லாம் ஒன்றுமேயறியாமல் நான் நொந்து இருக்கும் நிலையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது நீங்கள் எங்கு கற்ற மானிட நேயம் சாந்தன்…? அல்லது மானிட நேயம் என்றால் என்ன விலை என்று கேட்கும் ரகமா நீங்கள்…?

    Reply
  • palli
    palli

    சாந்தன் புலி வைக்காத ஆப்பையா சிங்கம் வைக்க போகுது; சிங்கத்தால் இலங்கயில்தான் ஏதும் செய்ய முடியும்: மற்றும்படி ஒன்றும் செய்ய முடியாது; ஆனால் உங்க புலி புலத்திலும் அல்லவா மிரட்டியது மிரட்டுகிறது; நீங்க சொன்னவர் அரசில் இருந்தார் அது தவறும்போது அதைவிட்டு விலகி விட்டார், ஆனால் நீங்கள் புலி வாழ்ந்தபோதும் அது காணாமல் போனபோதும் அதன் புகழ் பாடுவதில்தானே கவனம் செலுத்துகிறீர்கள். ஆளும் வர்க்கத்துக்கு எதிராக(தவறாகும் போது) எதிராக செயல்படுவது மிக பெரிய விடயம்; அந்த அனுபவம் எமக்கு உண்டு புலிக்கு எதிராய் அது வாழ்ந்த காலத்தில் செயல்பட்டதால் வந்தது, எம்மை ஒரு தீண்டதகாதவர்கள் போல் நீங்கள் மட்டுமல்ல எமது உறவுகளும் நடத்தின; கேலி பேசின; ஆனால் இன்று எல்லாம் மாறி போச்சு; ஆனாலும் நீங்கள் மாறவில்லை; அது உங்கள் பிரச்சனை; ஆனாலும் பல்லியும் சாந்தனும் நேரம் கிடைக்கும் போது எல்லாம் கருத்தாட்டம் போடுவோம்; இந்த மகா நாட்டில் மட்டும் ஒரே குரலாய் வாழ்த்துவோம்; காரணம் பலன் பெறபோவது எம்மினம் எம் உறவுகள்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…சாந்தன்…. நான் ஒரு போதும் யாரையும் நம்பியிருக்கவில்லை. ரணிலை விட ராஜபக்ச நல்லவர். அதனால் தான் அவருடன் சேர்ந்திருந்தேன். …// அஷ்ரஃப் அலி
    நம்பி இருக்கவில்லை ஆனால் பக்கத்தில் இருந்தீர்கள் அப்படித்தானே. அதாவது ‘அலுவல்’ பார்க்க அண்டி இருப்பது இல்லையா?? உங்கள் ‘நம்பகத்தன்மை’ அவ்வளவு அபாரம், அதை ராஜபக்சா அறிந்துவிட்டார் அதால் தான் இந்த நிலையோ?
    //….அதனை நான் பல தடவைகள் தெளிவாகச் சொல்லி இருக்கின்றேன். அதேபோல என்றைக்காவது அதே ராஜபக்ஷ தமிழ் மக்களுக்கு எதிரானவராக மாறும் போது நான் அங்கிருக்க மாட்டேன் என்பதையும் முற்கூட்டியே தெரிவித்திருந்தேன். நான் அதைத்தான் நிரூபித்திருக்கின்றேன். ….//
    இதை நீங்கள் ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு நிரூபிக்க வேண்டும்? அதற்குபோய் ஸ்ரீலங்கா ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் ‘பணிப்பாளர்’ வேலை பார்த்து செய்திகலை ‘திரித்து’ நல்ல நம்பக வேலை செய்து பின்னர் சொந்த பந்தங்கள் சாகும்போதெல்லாம் பயங்கரவாதி பட்டம் கட்டி பெண்கள் கற்பழிக்கப்பட்டபோது அது ‘காதல்’ விவகாரம் என செய்தி வாசித்து இப்போது ராஜபக்சா தமிழருக்கு எதிரானவர் என ‘நிரூபிக்கிறீர்களா? நல்லது மிக நல்லது வாழ்க உங்கள் ‘தியாகம்’!!!

    //….ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். எம்மைச் சுற்றி நடப்பவை எல்லாம் தீமைகளாக இருக்க அதில் ஒன்றை நாம் கட்டாயமாகத் தெரிவு செய்து தான் ஆக வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்படும் போது எமக்குப்பாதிப்பு குறைவானதையே தெரிவு செய்ய வேண்டும். ….//
    இப்போது உங்களைச்சுற்றி நடப்பதில் எந்த தீமையை தெரிவு செய்திருக்கிறீர்கள். தெரிவு செய்த தீமை இப்போ என்னவாக வந்து நிற்கிறது? அப்போ பின்னர் ஏன் தேசத்தில் வந்து அலுமாரி நிறைய எஸ்.எம்.ஏ வைத்திருந்தேன் இப்போ குழந்தையிம் முகத்தைப் பார்க்க அழுகை வருகிறது என அழுகிறீர்கள். தீமையை நீங்களே தெரிவுசெய்தீர்கள் தானே? இல்லையா?

    //…..அதுசரி நான் இந்தியாவில் பிச்சை எடுப்பதாக யார் உமக்குச்சொன்னது..? நான் எந்த இடத்திலாவது அப்படி சொன்னேனா?…..//
    பிச்சை என்றால் சாப்பாட்டுக்கு/பணத்துக்கு கையேந்துவது தான் என எந்த தமிழ் வாத்தியார் உங்களுக்குச் சொன்னார்?

    //….ஓ…. நீர் ஒரு காலத்தில் இந்தியாவில் பிச்சை எடுத்தவர் தானே…. அப்போது உம்முடன் பிச்சையெடுத்த கூட்டம் இப்போதும் இருக்கின்றார்கள். அதில் ஒருவர் அண்மையில் என்னைக் கண்டு கையேந்தியபோது நான் என்னிடம் ஏதுமில்லையப்பா…. உன் நிலையை விட என் நிலை மோசம்பா.. //
    மனிதாபிமானம் நன்றாகவே தெரிகிறது? உண்மைதான் வெள்ளைவான் தேடிவரும் மோசமான நிலை(கொலை முயற்சி நடந்தது என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருந்தீர்கள்) உங்களுக்கு வந்துள்ளதே? பாதுகாப்பு பிச்சை !

    ///….சாந்தன்……. ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். .. நான் தன்மானம் நிரம்பிய தமிழன். மானஸ்தன். என்றைக்கும் என் தன்மானத்தையும் என் இனத்தையும் அநியாயமாக விட்டுக் கொடுக்க மாட்டேன். அதற்காக என் இனத்தில் ஒருவன் அநியாயம் செய்யும் போது அவனுக்குத் துணை நின்று நியாயப்படுத்தவும் மாட்டேன். ….//
    நாங்கள் எல்லாம் என்ன? தமிழன் இல்லையா, மானம் இல்லாதவர்களா? சும்மா பெரிய கதை விட வேண்டாம். உமது கருத்துகள் விவாதங்கள் தேசத்தில் வந்தது. அஷ்ரஃப் அலி அவர்களே இன்ரனெற்றில் வந்தால் அவை சாகாவரம் பெறும் என்கின்ற உண்மையை அறிந்து கொள்ளுங்கள்.
    //…. ஏன் வன்னியிலும் உயிரைத் துச்சமாக மதித்துக் கடமையாற்றியவன் தான் நான். ராஜபக்ஷவுடன் நான் சேர்ந்திருந்த காரணத்தால் கிடைத்த அதிகாரத்தை வைத்தே அதனையெல்லாம் சாதித்தேன். …//
    அப்பப்பா உங்கள் அர்ப்பணிப்பு புல்லரிக்க வைக்கிறது. அதிகாரத்தை வைத்து அலுவல் பார்த்தீர்கள் ஆனால் அதற்கு துச்சமாக மதித்து என பில்ட்-அப் கொடுக்கிறீர்களே. கண்ணதாசன் அழகாகச் சொல்லி இருக்கிறார் “பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா செளக்கியமா” என!
    உங்கள் லொஜிக்கின்படி பார்த்தால் பாம்பு தனது உயிரைத்துச்சம் என மதித்து பரமசிவனின் கழுத்தில் இருந்து கேட்டது எனச்சொல்வீர்கள் ப்பொ இருக்கிறது!
    //….அன்றைக்கும் நீங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வெறுமனே பின்னூட்டம் மட்டும் தான் இட்டுக் கொண்டிருந்தீர்கள்…..//
    அப்படி நீங்கள் நினைத்தால் நான் என்ன செய்வது?
    //….நான் என் உடம்பில் செல்லடி பட்டு காயமுற்ற நிலையிலும் அந்த மக்களின் பசி தணிக்க பறந்தோடிக் கொண்டிருந்தேன். துப்பாக்கிகள் உறுமிய சப்தம் காரணமாக பல இரவுகளில் தூக்கமின்றி மண் தரைக் கூடாரங்களுக்குள் கண் விழித்து கால்களுக்குள் முகம் புதைத்த நிலையில் முழு இரவையும் கழித்திருக்கின்றேன். …..//
    என்னப்பா கிடைத்த அதிகாரத்தை வைத்து சாதித்தேன் என்கிறீர்கள். அடுத்த கணமே உடம்பில் செல்லடிபட்டது எனவேறு சொல்கிறீர்கள். நல்லகதை நம்பித்தான் ஆக வேண்டும்! உங்கள் அதிகாரத்தை வைத்து துப்பாக்கி உறுமல்களை நிறுத்தி இருக்கலாமே?
    //…..எத்தனையோ அரச அதிகாரிகள் இராணுவத் தரப்பினர் என அனைவரையும் ஏசிப் பேசி நான் மேற்கொண்ட பணியினைத் தடையின்றி மேற்கொண்டுள்ளேன். இனவாதம் பேசிய அனைவருக்கும் ஓங்கி அறையாத குறையாக பதில் கொடுத்திருக்கின்றேன்……//
    அவ்வளவு அதிகாரம் ராஜபக்சா கொடுத்தாரா? ராஜபக்சா நல்ல மனிதராக இருக்கிறாரே?
    //….. உங்களைப் போல மற்றவனின் துன்பத்தில் ஆனந்தம் கண்டு மனம் நொந்து வந்திருப்பவனை மேலும் குத்திக் கிழிக்கும் குரூர புத்தி எனக்கிருக்கவில்லை. இனியும் இருக்காது. அதனால் தான் என்றைக்கும் என்னதான் துன்பங்களை எதிர்கொண்டாலும் நான் மனிதநேயத்தை கைவிடாமல் இருக்கின்றேன்….//
    மக்கள் கொலைசெய்யப்படும்போது பயங்கரவாதி பட்டம், பெண்கள் கற்பழிக்கப்படும்போது கள்ளக்காதலர் பட்டம். அகதியாய் அலையும்போது அள்ளிக்கொடுக்கிறோம் ஆனால் அவர்கள் பொய்சொல்கிறார்கள் என செய்தி. ஆனால் அலுமாரி முழுவதும் எஸ்.எம்.ஏ பால்மா? எட்டடுக்கு மாளிகையில் வாழ்வு இவ்வளவும் ஒலிபரப்புக்கூட்டுத்தாபன பணிப்பாளர் செய்த மனிதாபிமானப் பணிகள். ஏற்றுக்க்கொள்ளத்தான் வேண்டும்!

    //..மற்றது என்னைப் போன்ற ஒருவன் ராஜபக்ஷவிடம் இருந்த காரணத்தால் எமது இனத்துக்கு கிடைத்த நன்மைகள் இன்றல்லாது போனாலும் என்றைக்காவது ஒரு நாள் உங்களுக்குப் புரிய வரும். எனக்குத் தரப்பட்ட அதிகாரத்தை வைத்து நம்மினத்துக்கு என்னென்ன நன்மைகள் செய்துள்ளேன் என்பது அந்தந்தத் தரப்பினரால் வெளிக் கொண்டு வரப்படும்.. அதன்போது நீங்கள் என்னை இகழ்ந்ததற்காக வெட்கித் தலை குனியத் தான் போகின்றீர்கள். ….//
    ஏன் அவ்வலவு காலம் பொறுக்க வேண்டும். இவ்வளவு உதவி செய்த ராஜபக்சாவை இப்போது துரோகி என்கிறீர்களே? நியாயமா? அப்போ ராஜபக்சா வந்து இதே கேள்வியை உங்களை நோக்கி கேட்கப்போகிறாரே? எவ்வளவு நன்மை செய்ய உதவினேன். ஆனால் ஒரே இரவில் என்னை திட்டித்தீர்க்கிறீரே? எட்டவிலகி விட்டீரே? ஏன் உம்மினினத்துக்குச் செய்த நன்மைகளை அந்தந்த தரப்பு வெளிக்கொணரும் வரை பொறுக்கிறீர்? இது நியாயமா அஷ்ரஃப் அலி அவர்களே? இவ்வாறுதான் நான் செய்த நன்மைகள் வெளிவருவதில்லை என தன்னையும் தன் செயல்களையும் நியாயப்படுத்தப் போகிறாரே?
    //…..உங்களைப் போன்று வளமான வாழ்வு ஒன்று மட்டுமே என் குறிக்கோளாக இருந்திருந்தால் என்றைக்கோ நானும் ஐரோப்பிய நாடொன்றின் இலங்கைத் தூதுவராலயமொன்றில் மூன்றாம் நான்காம் நிலைகளில் பொறுப்பான பதவியொன்றைப் பெற்று வசதியாக வாழ்ந்திருப்பேன்…..//
    மூன்றுமாடிக் கட்டடம், அலுமாரி நிறைய எஸ்.எம்.ஏ. …எப்படி இருந்தேன் என நீங்கள் தானே பந்தி பந்தியாக உங்கள் வசதியான வாழ்வு பற்றிச் சொன்னது? இல்லையா? ஸ்ரீலங்காவின் பொய் ஊதுகுழலுக்கு ‘பணிப்பாளராக’ இருந்து பெற்றவைதான் அவை இல்லையா? வெளிநாட்டுத் தூதரகப் பதவி (ஒபிசியல் ஊதுகுழல்) உங்களுக்கு நல்ல பொருத்தமாக இருக்கும்!

    //…..இதையெல்லாம் ஒன்றுமேயறியாமல் நான் நொந்து இருக்கும் நிலையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது நீங்கள் எங்கு கற்ற மானிட நேயம் சாந்தன்…? அல்லது மானிட நேயம் என்றால் என்ன விலை என்று கேட்கும் ரகமா நீங்கள்…?…..//
    ஸ்ரீலங்கா ஒலிபரப்புக் கூட்டுத்தாபன செய்திகளைக் கேட்டிருக்கிறீர்களா? அவற்றின் பயங்கரவாதிகள் பட்டம் 70, 80 வயது கிழவர்கள் கூட, கற்பழித்துவிட்டு கொலைசெய்து புலிஎன எழுதித்தா என அடம்பிடிக்கும் ராணிவத்துக்கு மனிதாபிமானப் பட்டம் எல்லாம் கொடுக்கும் செய்திகளை கேட்டிருக்கிறீகளா? வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவது பற்றி நீங்கள் தான் எனக்கு பாடம் எடுக்க வேண்டும்! அதில் பெயர் போன அமைப்பில் இருந்தவர்தானே நீங்கள்!!

    Reply
  • மாயா
    மாயா

    முதலில் ashroffalன் வேதனையான வார்த்தைகளை விளங்கிக் கொள்கிறேன். ashroffal சொல்வது உண்மை என்பதை நானும் அறிந்துள்ளேன். அவருக்கு கிடைக்க வேண்டிய பொறுப்புகள் வேறு இருவருக்கு தற்போதுதான் கிடைத்தது. அலியை உண்மையாகவே பாராட்டுகிறேன். வாயால் பேசுபனையும் ; இதயத்தால் குமுறுபவனையும் எம்மால் புரிந்து கொள்ள முடிய வேண்டும்.

    பல்லி சொல்வது போல் ; புலி ஆதரவாளர்கள் நல்லதுக்கும் தலையாட்டினார்கள். கெட்டதற்கும் தலையாட்டினார்கள். இவர்கள் தலையாட்டி பொம்மைகளே தவிர ; அதுதான் புலி ஆதரவாளர்கள் விட்ட ; இன்னும் விடும் தவறு. இவர்களுக்கு மக்கள் நலன் பெரிதல்ல. புலி நலன் போல ; சுயநலனே பெரிது.

    இதோ இந்த செய்தியை பாருங்கள்:

    கொழும்பு சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை நிராகரிக்கிறோம் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் கலைஞர்கள் கூட்டறிக்கை

    Reply
  • moorthy
    moorthy

    தேசம் இணையத்தளத்திற்கும் தமது கருத்துக்களை தெரிவிக்கும் வாசகர்களுக்கும் ஒரு வேண்டுகோள்.
    இலங்கையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ள எழுத்தாளர் மகாநாடு தொடர்பாக கருத்துக்கள் பரவலாக வெளியாகியிருக்கின்றன. இவற்றை ஆக்கபூர்வமான கருத்துக்கள், எள்ளிநகையாடும் கருத்துக்கள், அவதூறு பரப்பும் கருத்துக்கள் என்று வகைப்படுத்தலாம்.
    இலங்கையில் ஏன் நடத்துகின்றோம் என்று மகாநாட்டு ஏற்பாட்டாளர்கள் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் முன்வைத்துள்ள யோசனைகளின் பிரகாரம் மகாநாட்டை நடத்தி முடிப்பதற்கும் எதிர்காலத்திட்டங்களுக்கும் அவர்கள் புலம்பெயர்ந்து வாழும் எம்மவர்களையே குறிப்பாக படைப்பாளிகள், கலைஞர்கள், ஊடகவியலாளர்களையே நம்பியிருக்கின்றனர். எனவே அதரவு தரவிருப்பவர்கள் தம்மால் இயன்ற நிதியுதவியை அவர்களுக்கு அனுப்பலாம். மகாநாடு முடிந்ததும் முறையாக வரவு செலவு அறிக்கை சமர்ப்பித்து உதவியவர்களுக்கு தெரிவிக்கவும் தயாராக இருக்கிறார்கள். எனக்கு கிடைத்த மின்னஞ்சலை தேசம் நெட் வாசகர்களுக்கும் அனுப்புகின்றேன்.
    மூர்த்தி –

    சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு
    எமது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு- ஒன்றுகூடல் அடுத்த ஆண்டு (2011) ஜனவரி மாதம் முற்பகுதியில் நான்கு நாட்கள் இலங்கையில் கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு தொடர்பான விரிவான ஆலோசனைக்கூட்டம் கடந்த 03-01-2010 ஆம் திகதி கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது. எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்கள், வானொலி தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள், பயிற்சிப்பத்திரிகையாளர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் கலந்து சிறப்பித்து கருத்துக்களை பயனுள்ளமுறையில் பகிர்ந்துகொண்டனர்.

    பின்னர் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, ஹட்டன் ஆகிய பிரதேசங்களிலும் எழுத்தாளர் சந்திப்புகள் ஒழுங்குசெய்யப்பட்டு தகவல் அமர்வுகள் நடைபெற்றன.

    இம்மகாநாடு தொடர்பாக எமது சக்திக்கு அப்பாற்பட்ட செலவுகளை நாம் சந்திக்கநேர்ந்துள்ளது. முழுமையாக படைப்பாளிகள், கலைஞர்கள் இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் அன்பர்களின் நன்கொடைகளின் மூலமே நாம் இந்தப்பணியை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம். அதற்காக வெளிநாடுகளில் வதியும் கலை, இலக்கியவாதிகளின் ஆதரவை நாடுகின்றோம்.

    மகாநாட்டிற்காக கொழும்பில் வங்கிக்கணக்கும் ஆரம்பித்துள்ளோம். தங்கள் நன்கொடைகளுக்கு பற்றுச்சீட்டு வழங்கப்படுவதுடன் மகாநாடு முடிந்து ஒரு மாதகாலத்துள் வரவு-செலவு அறிக்கை அங்கீகரிக்கப்பட்ட கணக்காய்வாளர் நிறுவனத்தின் மேற்பார்வையுடன் தங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.
    நாம் எதிர்நோக்கும் செலவுகள்: மண்டப வாடகை, உணவு மற்றும் தங்குமிட வசதி, போக்குவரத்து, அச்சிடல் பணிகள்.
    இலங்கையில் இலக்கிய ஆர்வம்மிக்க அன்பர்களின் ஆதரவையும் பெறவுள்ளோம். இந்தப்பாரிய பணிக்கு ஆதரவு வழங்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

    முக்கியகுறிப்பு:- குறிப்பிட்ட வங்கிக்கு தாங்கள் நிதியுதவி அனுப்பும் பட்சத்தில் எமது மின்னஞ்சலுக்கும் அவசியம் தெரிவிக்கவும்.
    E.Mail: international.twfes@yahoo.com.au

    நன்றி
    அன்புடன்
    லெ.முருகபூபதி (அமைப்பாளர்)

    Bank Details:
    Name: TAMIL WRITERS ASSOCIATION
    Bank: HATTON NATIONAL BANK
    Branch: WELLAWATTE, SRILANKA
    SWIFT CODE: HBLKLILX
    Branch No: 7083 009

    Reply
  • Sripathy Sivanadiyan
    Sripathy Sivanadiyan

    இனப்பிரச்சினையில் அரசியல் நடத்தி அழிவுக்கே வழி செய்தவர்கள்தான் இப்போது அதே அரசியல் ஆயுதத்தை இலங்கை மண்ணில் நாம் காணப்போகும் தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கு எதிராகவும் எடுத்திருக்கிறார்கள். தங்களின் அரசியல் முகத்திற்கு ஆபத்து வரும்போதெல்லாம் இன உணர்வு என்கிற முகமூடியை எடுத்து போட்டுக்கொள்கிறார்கள். உலகத்தில் எங்கே யுத்தம் நடந்தாலும் அது முடிவுக்கு வந்தபிறகு, மறுவாழ்வு பணிக்கும், அமைதியான சூழ்நிலைக்கும்தான் எல்லோருமே வழி தேடுவார்கள். ஆனால்.. இவர்கள் அப்படியல்ல. ஐயோ.. அதற்குள் பிரச்சினை முடிந்து விட்டதா? இனி எதை வைத்து நாம் அரசியல் நடத்துவது? எப்படி கூட்டம் சேர்த்து குளிர் காய்வது? என்கிற கவலையோடு தரம் தாழ்ந்த சிந்தனையில் இறங்கி விட்டார்கள்.

    போர் நடந்த இலங்கைபூமி இப்போது இயல்புக்கு திரும்பி கொண்டிருக்கிறது.. எல்லா விழாக்களும் கொண்டாட்டங்களும் தங்கு தடையின்றி நடந்து கொண்டுதான் இருக்கிறது. மக்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். ஆனாலும் இந்த மாநாட்டை மட்டும் நடத்தவே கூடாதாம். அப்படியானால் இவர்களின் உண்மையான உள்நோக்கம் என்ன?

    தமிழ் எழுத்தாளர்கள் எல்லோரும் ஒரே இடத்தில் ஒன்று சேர்வதா? அரசியலை காட்டி நாம் பிரிக்க நினைத்தால் இலக்கியம் இவர்களை சேர்க்க நினைக்கிறதே…. மாநாடுக்குபிறகு, அன்பும் சமாதானமும் ஏற்பட்டு அங்கே அமைதியான சூழ்நிலை உருவாகிவிட்டால் அதன்பிறகு நாம் எங்கே போய் எதைச்சொல்லி அரசியல் நடத்துவது? இதுதான் அவர்களுக்கு இப்போதுள்ள மிக பெரிய பிரட்ச்சினைஎதவிர, இன உணர்வு என்று சொல்லுவதெல்லாம் வேடிக்கை வசனங்கள்தான்.

    சிங்களம், தமிழ் என்கிற இருவேறு மொழிகள் கொண்ட இரண்டு இனங்கள் வாழும் இடத்தில் இனி, மொழிகள் கலந்தால் மட்டுமே உறவுகள் வளரும்.
    வீதிக்கி வீதி கோசங்கள் போடுவதாலோ, இணைய தளத்தில் ஏதாவது கதைகளை பரப்பி திரை மறைவு அரசியல் நடத்துவதாலோ இலங்கை மண்ணில் ஒருபோதும் ஒற்றுமை ஏற்படாது.

    சிந்திப்பது தமிழாகவே இருந்தாலும் அதை சிங்களனுக்கு எடுத்துச்சொல்ல, நமது உயர்வான எண்ணங்களை அவனுக்கும் புரிய வைக்க தமிழனுக்கும் சிங்கள மொழி தெரிந்திருக்க வேண்டும். பாராளுமன்றத்தில் கூட இனிவரும் காலத்தில் சிங்களம் பேசுகிற தமிழன்தான் எல்லோராலும் கவனிக்கப்படுவான். மதிக்க படுவான். இதுதான் நாளை நிகழப்போகும் நிஜம்.

    போர்குற்றங்கள் எதையுமே நாம் நியாயப்படுத்தவில்லை. ஆனால் அதேசமயம், இதுமாதிரியான நிகழ்வுகள் இப்போதுதான் முதன்முறை என்பதைப்போல யாரோ சிலபேர் பேசுவதை நாம் ஏற்றுகொள்ள முடியாது.

    இன்றுள்ள சக்திவாய்ந்த ஊடக வசதிகள் எதுவும் அப்போது முப்பது வருடங்களுக்கு முன் இல்லை. தமிழ் மக்கள் யாரும் இந்த அளவுக்கு உலகம் முழுவதும் பரவி இருக்கவில்லை. ஆகையால்தான் இன்று சிலபேர் செய்கிற மிகைப்படுத்துகிற வேலையோ, குழப்பமான சூழ்நிலையோ அப்போது ஏற்படவில்லை.

    கல்வி, செல்வம், வீரம் போன்ற விசயங்களை நாங்களும் மறக்கவில்லை. ஆனால் இப்போது எங்கள் மக்களுக்கு தேவை கல்வியும் செல்வமும்தான். வீரம் அல்ல.

    முப்பது ஆண்டுகளாக நாம் கட்டிக்காத்த வீரத்தை, மூன்று விதமான படைகளை கைவசம் வைத்திருந்த விடுதலை புலிகளை இருபது நாடுகளின் உதவியோடு இலங்கை அரசு வென்று விட்டது.இந்த தோல்வியை நாங்கள் வெளிப்படையாக ஏற்றுகொள்கிறோம். வெற்றியைப்போல திரித்து சொல்வதிலோ, விரைவில் வெற்றி வரும் என்று தற்காலிக சமாதானத்தை ஏற்படுத்தி உலகத்தை எமாற்றுவதிலோ எங்களுக்கு உடன்பாடு இல்லை. இன்றுள்ள எதார்த்த நிலையை புரிந்துகொண்டு அதற்கு ஏற்றபடி செயல்படுகிறோம். அவ்வளவுதான்.

    ஒரு நாட்டுக்குள் நடைபெறுகிற சமூக நலன் சார்ந்த காரியங்களுக்கும், மக்கள் கூடும் பொதுவான நிகழ்வுகளுக்கும் அந்த நாட்டு அரசாங்கத்தின் அனுமதியை பெறுவதோ, ஆதரவை பெறுவதோ குற்றமான செயல் அல்ல. இயல்பான நடைமுறைதான். இந்த அடிப்படை அறிவுகூட இல்லாதவர்களுக்காக நாம் அனுதாப படலாமேதவிர, விளக்கம் கொடுத்து புரிய வைக்க முடியாது.
    பயங்கரவாதம் என்பது இருபுறமும் கூரான ஆயுதம். அது எதிரியை மட்டும்தான் தாக்கும் என்பது நிச்சயமில்லை. இதை நிகழ காலத்தில் நிஜமாகவே பார்த்தபிறகும் பழைய பல்லவியை திரும்ப திரும்ப பாடுவதில் அர்த்தமில்லை.
    பிணத்தை அறுத்து வைத்து பிழைகள் தொடங்கியது எங்கே? யார்மீது?
    என்றெல்லாம் ஆய்வு செய்யும் நிலையில் நாங்கள் இல்லை.

    அன்பும் அமைதியும் மகிழ்ச்சியான மறுவாழ்வும் ஏற்படுத்தி தருவதற்குதான் நாங்கள் வழி தேடுகிறோம். எவை எவையெல்லாம் எமது மக்களுக்கு சாதகமாக இருக்குமோ அதையெல்லாம் முறையாக பயன்படுத்தவும் இனி தயங்க மாட்டோம் . அரசியல் சாயம் இல்லாத, உண்மையான உணர்வுள்ள தமிழ் எழுத்தாளர்கள் எல்லோருமே இப்போது ஓரணியில் திரண்டு விட்டார்கள். இனம் மொழி வேறுபாடு இல்லாமல் எல்லா விசயங்களும் இந்த மாநாட்டில் பரிமாறப்படும். இதனால் சமூக ஒற்றுமையும் ஒளிமயமான நல்ல எதிர்காலம் உருவாவதற்கு தேவையான கூட்டு சிந்தனைகளும் உருவாகும் . நாடு நலம் பெற , இனமும் மொழியும் கலந்து எல்லோரும் எல்லா வளங்களும் பெற்று வாழ இந்த மாநாடு ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும். இது அரசியல் மாநாடு அல்ல.

    இலங்கை மண்ணில் அமைதியை விரும்புகிற தமிழ் எழுத்தாளர்களின் மாநாடு, உண்மையான உணர்வுள்ளோர் ஒன்றுகூடும் மாநாடு. அமைதியான வாழ்வுக்கு அடித்தளமான மாநாடு. இலங்கை மண்ணில் வாழும் இருவேறுபட்ட இனங்களும் எதிர்வரும் காலத்தில் ஒருதாய் வயிற்று பிள்ளைகளைப்போல் ஒற்றுமையுடன் வாழ்வதற்கு அடித்தளம் அமைப்பதே எங்கள் முதல் பணி.
    சமூக ஒற்றுமைக்காக இனி எழுதுகோலையே ஆயுதமாய் ஏந்துவோம்.
    இலக்கியத்தில் புதுமைகள் செய்வோம். எழுத்தாளர்களே..இலங்கை நோக்கி வாருங்கள்.

    ஸ்ரீபதி சிவனடியான்

    Reply
  • ashroffali
    ashroffali

    //நம்பி இருக்கவில்லை ஆனால் பக்கத்தில் இருந்தீர்கள் அப்படித்தானே. அதாவது ‘அலுவல்’ பார்க்க அண்டி இருப்பது இல்லையா?? உங்கள் ‘நம்பகத்தன்மை’ அவ்வளவு அபாரம் அதை ராஜபக்சா அறிந்துவிட்டார் அதால் தான் இந்த நிலையோ?// சாந்தன்..

    நீங்கள் சில வேளைகளில் முன் வைக்கும் கருத்துக்கள் விதண்டாவாதம் என்பதாகவே எனக்குப்படுகின்றது. அதற்குப்பதிலளிக்க நான் விரும்புவதில்லை. ஒருவனை மட்டம் தட்ட வேண்டுமாயின் அதற்காக நாம் நம்மையே தாழ்த்திக் கொள்ள முற்படக் கூடாது. உங்கள் கருத்துக்கள் உங்களைத் தான் தாழ்த்திக் கொள்ள உதவுகின்றது. என்னையல்ல…. ஏனெனில் நான் ராஜபக்ஷவிடம் எந்த அலுவலையும் பார்த்துக் கொள்ள வேண்டிய தேவையில் இருக்கவில்லை. நான் நன்றாகத் தான் வாழ்ந்தேன்.

    எனது பிரதான தொழில் மொழிபெயர்ப்பு – சிங்களம்-தமிழ்.. உங்களுக்குத் தெரியுமா.. இலங்கையில் மொழிபெயர்ப்புக் கட்டணங்கள் என்னவென்று..?ஒரு பக்கம் (360 சொற்கள்) ஐனூற்றி ஐம்பது ரூபாய். அது அரசாங்கக் கட்டணம். தனியார் விளம்பர ஏஜன்சிகள் மற்றும் பாரிய கம்பனிகள் எனில் அதுவே ஆயிரத்து ஐனூறு வரை தருவார்கள். சராசரியாக நான் நாளொன்றுக்கு ஆறு பக்கங்கள் மொழிபெயர்ப்புச்செய்திருக்கின்றேன். பெரும்பாலும் இரவு நேரங்களில் தான். ஆக எனது நாளாந்த வருமானம் என்னவென்று புரிகின்றதா உங்களுக்கு..?

    அப்படியிருக்க என்ன தேவைக்காக நான் காரியம் பார்த்துக் கொள்ள அரசாங்கத்துடன் ஒட்டியிருக்க வேண்டும்…? எனக்கு அழைப்பு வந்தது.. அந்தத் தருணத்தில் அது நன்றாகப் பட்டது. சேர்ந்து கொண்டேன். தவறிப் போக ஆரம்பித்தவுடன் விலகி விட்டேன். அவ்வளவுதான்.

    எனவே பிழைப்புக்காக நீங்கள் மற்றவர்களை அண்டி வாழ்வதை உங்களையறியாமல் வெளிப்படுத்தி மற்றவர்களின் முகத்தில் கரி பூசப்போய் உங்கள் முகத்தில் நீங்களே பூசிக்கொள்ள வேண்டாம் நண்பரே..

    //செய்திகலை ‘திரித்து’ நல்ல நம்பக வேலை செய்து பின்னர் சொந்த பந்தங்கள் சாகும்போதெல்லாம் பயங்கரவாதி பட்டம் கட்டி பெண்கள் கற்பழிக்கப்பட்டபோது அது ‘காதல்’ விவகாரம் என செய்தி வாசித்//
    இப்படியெல்லாம் நான் செய்துள்ளதாக ஒரு ஆதாரத்தை மட்டும் முன் வையுங்கள்… பார்க்கலாம். கண்டபடி கற்பனையில் குற்றச்சாட்டுகளை அள்ளி வைப்பதற்குப் பெயர் கருத்துச் சுதந்திரமல்ல.. அபாண்டம். அவ்வளவுதான். நீங்கள் முன் வைத்த குற்றச்சாட்டுகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை. நீங்கள் தந்ததை (அபாண்டத்தை) நான் பெற்றுக் கொள்ளத் தயாரில்லை. ஆக நீங்களே திரும்பப் பெற்றுக் கொள்கின்றீர்களா தோழரே…

    //அப்போ பின்னர் ஏன் தேசத்தில் வந்து அலுமாரி நிறைய எஸ்.எம்.ஏ வைத்திருந்தேன் இப்போ குழந்தையிம் முகத்தைப் பார்க்க அழுகை வருகிறது என அழுகிறீர்கள். தீமையை நீங்களே தெரிவுசெய்தீர்கள் தானே? இல்லையா?//
    பதில் ஏற்கெனவே தந்து விட்டேன். தற்போது நான் வாழும் சூழ்நிலை நானே தேடிக் கொண்டது. அதுவும் என் மனச்சாட்சிக்காகவும் கொண்ட கொள்கைகளுக்காகவும் ஏற்றுக் கொண்ட தியாகம் இது. இதை நீங்கள் கொச்சைப்படுத்தியதற்காக நான் வருந்த மாட்டேன். தியாகத்தின் மேன்மையைப் புரிந்துகொள்ள தியாகமொன்றைச் செய்திருப்பவர்களால் மட்டும் தான் முடியும். நீங்கள் யாருக்காகவும் எதையும் தியாகம் செய்ததில்லை போலும். அதனால் தான் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆக உங்கள் கூற்றையும் அபாண்டங்களையும் நான் பெரிதுபடுத்தப் போவதில்லை.

    நான் தெரிவித்த சில விடயங்கள் என் முன்னைய வாழ்க்கைக்கும் இன்றுள்ள வாழ்க்கைக்குமான வித்தியாசத்தை வெளிக்காட்டத்தான். அதனைத் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். என் குடும்பத்தைப் பாதுகாப்பதற்கு மூட்டை சுமக்கவும் என் தோள்களில் தெம்பிருக்கின்றது தோழரே…. மனதில் தெம்பும் இருக்கின்றது. அதற்கு மேலாக படைத்தவன் வழி காட்டுவான் என்ற நம்பிக்கையும்… நல்ல உள்ளங்களில் அன்பான வார்த்தைகள் மற்றும் அனுசரணைகளும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் ஏராளமாய் எனக்குள் உண்டு. அது போதும் எனக்கு…

    //இன்ரனெற்றில் வந்தால் அவை சாகாவரம் பெறும் என்கின்ற உண்மையை அறிந்து கொள்ளுங்கள்.//
    என்றைக்காவது நான் இன விரோதக் கருத்துக்களை முன் வைத்திருந்தால்.. மனிதாபிமானம் தவறி நடந்திருந்தால்….. மனச்சாட்சிக்கு விரோதமான கருத்துக்களை முன் வைத்திருந்தால் தேடிக்கண்டு பிடித்து முன் வையுங்கள். அதை விட்டு மேலோட்டமான குற்றச்சாட்டுகள் வேண்டாம்.

    //கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா செளக்கியமா” என! உங்கள் லொஜிக்கின்படி பார்த்தால் பாம்பு தனது உயிரைத்துச்சம் என மதித்து பரமசிவனின் கழுத்தில் இருந்து கேட்டது எனச்சொல்வீர்கள் ப்பொ இருக்கிறது!//
    உங்களை நினைத்தால் பரிதாபமாக உள்ளது. முதலில் எதையும் தெளிவாக விளங்கிக் கொள்ள முற்பட வேண்டும். நான் எனக்கான அதிகாரத்தை வைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்காக பணி செய்தேன். பரமசிவன் கழுத்திலிருந்த பாம்பு தனக்குக் கிடைத்த அதிகாரத்தை வைத்து அந்த நேரத்தில் அகங்காரமாக நடந்து கொண்டுள்ளது. அதற்கும் எனக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு நண்பரே.. நான் ஒரு போதும் பாதிக்கப்பட்ட மக்களிடம் போய் என் அதிகாரத்தைக் காட்டியதில்லை. ஒரு வார்த்தைதானும் மனம் நோகப் பேசியதுமில்லை.

    //என்னப்பா கிடைத்த அதிகாரத்தை வைத்து சாதித்தேன் என்கிறீர்கள். அடுத்த கணமே உடம்பில் செல்லடிபட்டது எனவேறு சொல்கிறீர்கள். நல்லகதை நம்பித்தான் ஆக வேண்டும்! உங்கள் அதிகாரத்தை வைத்து துப்பாக்கி உறுமல்களை நிறுத்தி இருக்கலாமே?//
    இதைத் தான் உங்கள் புரிந்துகொள்ளும் சக்தி போதாது என்று சொல்வது… நான் சகல அதிகாரங்களும் கொண்டிருந்தவன் என்று சொல்லியிருந்தால் நீங்கள் சொல்வது சாத்தியம். எனக்குக் கிடைத்த அதிகாரத்தில் தான் நான் என்னாலான மட்டில் சேவை செய்துள்ளேன். அதிகாரங்கள் என்பதற்கு ஒரு எல்லை இருக்கும். அதனை தயவு செய்து புரிந்துகொள்ள வேண்டும். நாம் இருக்குமிடத்தை வைத்து அந்த அதிகாரத்தை கொஞ்சம் மீறிப் போய் சில நல்ல விடயங்களைச் செய்யலாம். அதற்கு மேல் முடியாது.

    அடுத்தது.. உடம்பில் ஷெல்லடி பட்டதற்கும் அதிகாரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை நண்பரே…. அதிகாரத்தில் இருப்பவர்களைத் தாக்கக் கூடாது என்று புரிந்து கொண்டு செயல்படுவதற்கு அவற்றுக்கு சிந்தணா சக்தி எல்லாம் இல்லை. ஆனால் என் வார்த்தைகளிலுள்ள யதார்த்தம் என்னவென்றால்… பரஸ்பரம் கடுமையான ஷெல் வீச்சுக்கள் நடைபெற்ற பகுதிகளிலும் நான் பொது மக்களுக்கான நிவாரணப் பொருட்களை எடுத்துச் சென்றிருக்கின்றேன் என்பது தான்.

    வாகரையில் ஒரு தடவை நாங்கள் பாலம் ஒன்றினூடாகப் பயணிக்கையில் பாலம் தகர்க்கப்பட்டது. நான் பயணித்த வாகனம் நீருக்குள் விழுந்து விட நீந்திக் கரை சேர முற்பட்ட என்னை தவறுதலாகப் புரிந்து கொண்டு இராணுவச் சிப்பாய்கள் துப்பாக்கியை நீட்டி சுடத் தயாரானார்கள். அதன் பின் நான் சிங்களத்தில் கத்தி எனக்கான சங்கேத வார்த்தையைச் சொன்னவுடன் தான் துப்பாக்கியைத் தாழ்த்தி சல்யூட் செய்தார்கள். அதிகாரம் என்பதற்கும் போரின் போதான சமய சந்தர்ப்பம் என்பதற்கும் வித்தியாசம் அதுதான்.

    அதே போல் தான் ஷெல்லடிகளும் ஒரு பிரதேசத்தை நோக்கி இலக்கு வைக்கப்படும் போது அந்தப் பிரதேசத்தில் யார் யாரைத் தாக்கக் கூடாது என்ற வரையறையெல்லாம் அதற்கில்லை. அந்தளவு கடுமையான யுத்தசூழலின் மத்தியில் பொதுமக்கள் யாரும் அப்பிரதேசத்துக்குப் போகவும் மாட்டார்கள். அதைத் தாண்டி சென்றால் தான் பொதுமக்களை நெருங்கலாம். அதுதான் அன்றைய யதார்த்தம்.

    //அவ்வளவு அதிகாரம் ராஜபக்சா கொடுத்தாரா? ராஜபக்சா நல்ல மனிதராக இருக்கிறாரே?//
    ஜனாதிபதியின் மிக முக்கியமான ஒருங்கிணைப்பு அதிகாரி என்ற வகையில் எனக்கான அதிகாரத்தைப் பயன்படுத்தி போரை நிறுத்த முடியாது. யாராவது ஒருவரைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் போது என்னால் தலையிட முடியாது. ஆனால் இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்த மக்களுக்கான நிவாரண நடவடிக்கையின் போது போரில் ஈடுபடும் யாரும் என்னைக் கட்டுப்படுத்த முடியாது. நிபந்தனைகள் விதிக்க முடியாது. இரு தரப்பு பாதுகாப்பு அரண்களுக்கும் இடைப்பட்ட பகுதிக்குள் சிக்குண்டிருந்தவர்களை நாடி நான் சென்றபோது யாருக்கும் என்னைத் தடுக்க முடியாதபடி அதிகாரங்கள் எனக்கிருந்தன. ஏனெனில் எனது நடவடிக்கைகளின் பலன் அரசாங்கத்துக்கு என்பதால். அதுதான் எனது பின்னூட்டத்தின் அர்த்தம். .

    //மக்கள் கொலைசெய்யப்படும்போது பயங்கரவாதி பட்டம்இ பெண்கள் கற்பழிக்கப்படும்போது கள்ளக்காதலர் பட்டம். அகதியாய் அலையும்போது அள்ளிக்கொடுக்கிறோம் ஆனால் அவர்கள் பொய்சொல்கிறார்கள் என செய்தி. ஆனால் அலுமாரி முழுவதும் எஸ்.எம்.ஏ பால்மா? எட்டடுக்கு மாளிகையில் வாழ்வு இவ்வளவும் ஒலிபரப்புக்கூட்டுத்தாபன பணிப்பாளர் செய்த மனிதாபிமானப் பணிகள். ஏற்றுக்க்கொள்ளத்தான் வேண்டும்! //

    நான் அவ்வாறு நடந்ததில்லை. என் மீது குற்றம் சாட்டும் நீங்கள் அதற்கான ஆதாரங்களை முன் வைக்காது வெறுமனே குற்றம் சாட்டுவதாயின் அது அபாண்டம். அதை நான் ஏற்கெனவே தெரிவித்து விட்டேன். அடுத்தது… என் சொந்த உழைப்பில் நான் தேடிச் சேர்த்தவற்றிற்கும் மனிதாபிமானத்துக்கும் என்ன சம்பந்தம்.. நான் நன்றாக இருக்கும் வரை நாலு பேருக்கு என்னாலான நல்லது செய்திருக்கின்றேன். அதை உங்களிடம் விளக்க வேண்டியதில்லை.

    உங்களுக்குத் தெரியுமா.. நான் ஒரு உயரதிகாரி என்ற வகையில் கொழும்பை விட்டு நான் வெளியே செல்லும் போதெல்லாம் எனது பயணத்துக்கான எரிபொருள் செலவு தங்குமிடம் சாப்பாட்டுச் செலவு மற்றுமுண்டான அலவன்ஸ் எல்லாம் இருந்தது. நான் இதுவரை அவற்றில் ஒரு சதம் கூட எடுத்ததில்லை. இராணுவ ஹெலிகொப்டரில் போய் அவர்களின் செலவிலேயே அனைத்தையும் சாதித்து விட்டு அனைத்து அலவன்சுகளையும் நானும் எடுத்திருக்க முடியும். அப்படிச் செய்ய மனம் வரவில்லை. என் உழைப்புதான் என் பிள்ளைகளுக்கான தேவைகளை அப்படி சேர்த்து வைக்க வழி செய்தது. அது என் பிள்ளைகள் மீது நான் வைத்திருந்த பாசம்.அதுதான் அடுத்தவர்களின் பிள்ளைகளையும் நேசிக்க எனக்குக் கற்றுக் கொடுத்தது. நான் யாருக்கு எதிரான தளத்தில் இருந்து செயலாற்றினேனோ அவர்களையும் மதிக்கும் பண்பைத் தந்தது.

    //ஏன் அவ்வலவு காலம் பொறுக்க வேண்டும். இவ்வளவு உதவி செய்த ராஜபக்சாவை இப்போது துரோகி என்கிறீர்களே? நியாயமா? அப்போ ராஜபக்சா வந்து இதே கேள்வியை உங்களை நோக்கி கேட்கப்போகிறாரே? எவ்வளவு நன்மை செய்ய உதவினேன். ஆனால் ஒரே இரவில் என்னை திட்டித்தீர்க்கிறீரே? எட்டவிலகி விட்டீரே? ஏன் உம்மினினத்துக்குச் செய்த நன்மைகளை அந்தந்த தரப்பு வெளிக்கொணரும் வரை பொறுக்கிறீர்? இது நியாயமா அஷ்ரஃப் அலி அவர்களே? இவ்வாறுதான் நான் செய்த நன்மைகள் வெளிவருவதில்லை என தன்னையும் தன் செயல்களையும் நியாயப்படுத்தப் போகிறாரே?//

    இதற்கெல்லாம் பதில் சொல்வது அநாவசியம் என்று நினைக்கின்றேன். என்னை மட்டம் தட்ட வேண்டும் என்பதற்காய் உங்கள் ஆற்றல்கள் நேரம் என்பவற்றை வீணடித்துக் கொள்ள வேண்டாம் என்று மட்டும் தான் தாழ்மையுடன் அறிவுரை கூறுவேன். ஏனெனில் இதில் எந்தப் புத்திசாலித்தனமும் எனக்குத் தென்படவில்லை…

    //மூன்றுமாடிக் கட்டடம், அலுமாரி நிறைய எஸ்.எம்.ஏ. …எப்படி இருந்தேன் என நீங்கள் தானே பந்தி பந்தியாக உங்கள் வசதியான வாழ்வு பற்றிச் சொன்னது? இல்லையா? ஸ்ரீலங்காவின் பொய் ஊதுகுழலுக்கு ‘பணிப்பாளராக’ இருந்து பெற்றவைதான் அவை இல்லையா? வெளிநாட்டுத் தூதரகப் பதவி (ஒபிசியல் ஊதுகுழல்) உங்களுக்கு நல்ல பொருத்தமாக இருக்கும்!//
    என் வசதியான வாழ்வு எங்கிருந்து வந்தது என்று உங்களுக்கு நான் விலாவாரியாகச் சொல்லி விட்டேன். ஆக இந்தக் கேள்விக்கும் பதில் கொடுக்க வேண்டியதில்லை அல்லவா…. நண்பரே… அரசாங்கம் எனக்குத் தந்த சம்பளத்தை விட நான் படைத்தவன் எனக்குத் தந்திருந்த திறமைகளால் உழைத்தது நான்கு மடங்கு அதிகம். அதை நான் ஏற்கெனவே விரிவாகத் தந்துள்ளேன். மீண்டும் ஒரு தடவை வாசித்துப் பாருங்கள்… சரி தானே…

    //பயங்கரவாதிகள் பட்டம் 70, 80 வயது கிழவர்கள் கூட, கற்பழித்துவிட்டு கொலைசெய்து புலிஎன எழுதித்தா என அடம்பிடிக்கும் ராணிவத்துக்கு மனிதாபிமானப் பட்டம் எல்லாம் கொடுக்கும் செய்திகளை கேட்டிருக்கிறீகளா? வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவது பற்றி நீங்கள் தான் எனக்கு பாடம் எடுக்க வேண்டும்! அதில் பெயர் போன அமைப்பில் இருந்தவர்தானே நீங்கள்!!//
    அதில் எல்லாம் என் பங்களிப்பு இருந்ததில்லை. நான் செய்ததுமில்லை. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் எல்லா செய்திகளுக்கும் நாங்கள் பொறுப்பல்ல. நான் பணியாற்றியது ஜனாதிபதி ஊடகப் பிரிவு. மற்றும் ஜனாதிபதி அலுவலக நிவாரணப்பிரிவு. அதற்கு மேல் யார் யாரோ செய்யும் தவறுகளையெல்லாம் நான் ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

    70-80 வயதுக்குரியவர்களை எப்படி கற்பழித்தார்கள் என்பது மட்டும் எனக்கு விளங்கவில்லை. ராணுவம் செய்த அநியாயங்களையும் அரசாங்கத்தின் அநியாயங்களையும் எதிர்த்துத் தான் நான் அங்கிருந்து வெளியேறி வந்துள்ளேன். அதைக்கூட நீங்கள் விளங்கிக் கொள்ளவில்லையா? அல்லது என்னை மட்டம் தட்ட வேண்டுமென்ற ஆவலில் அவை கிரகிக்கப்படவில்லையா நண்பரே..?

    மாயா…..

    //முதலில் ashroffalன் வேதனையான வார்த்தைகளை விளங்கிக் கொள்கிறேன். ashroffal சொல்வது உண்மை என்பதை நானும் அறிந்துள்ளேன். அவருக்கு கிடைக்க வேண்டிய பொறுப்புகள் வேறு இருவருக்கு தற்போதுதான் கிடைத்தது. அலியை உண்மையாகவே பாராட்டுகிறேன். வாயால் பேசுபனையும் ; இதயத்தால் குமுறுபவனையும் எம்மால் புரிந்து கொள்ள முடிய வேண்டும்.//

    மனமார்ந்த நன்றிகள் மாயா… தேசம் நெற்றின் பலமே மற்றவர்களைப் புரிந்து கொள்ளக்கூடிய நல்ல உள்ளங்கள் ஒரு சிலரும் இருப்பது தான்… மீண்டும்.. நன்றி மாயா… நன்றி பல்லி… நன்றி ஜெயபாலன் அண்ணா… பரவாயில்லை சாந்தன்… உங்கள் கருத்துச் சுதந்திரத்தை மதிக்கின்றேன்..

    Reply
  • chandran .raja
    chandran .raja

    யார் இந்த சிறீபதி சிவனடியார்? எனக்கு ஒரு சந்தேகம் வருகிறது. ஜேர்மனியிலும் இதே பெயரில் ஒரு வியாபாரி இருந்தார்? அவர் தனக்கு ஆதாயத்திற்கு உட்பட்ட அத்தனை பிரச்சனைகளையும் தலையில் தாங்குவார். ஒருவன் அந்தரிப்பவனாக இருக்கட்டும். அகதியாக இருக்கட்டும். அகதியாகயிருந்து பல மோசடிகளில் பணம் சேர்த்தவனாக இருக்கட்டும். எல்லோருடமும் சேர்ந்து உறவாடாக் கூடிய தகமை பெற்றவர். அவரை பொறுத்தவரை அரசியலோ இலக்கியமோ எல்லாம் பணப்பட்டு வாடா பற்றியது தான். கவிழ்த்த தொப்பிக்குள் இருந்து புறவாவை பறக்கவிடுவார். முயலை ஓடவிடுவார். இந்த பிராங்போட் சிறீபதிசிவனடியார் தானா? இந்த பின்னோட்டத்துக்கு உரிமையானவர். தயவுசெய்து யாராவது இதை தெளிவு படுத்துங்கள்.

    Reply
  • மாயா
    மாயா

    //சமூக ஒற்றுமைக்காக இனி எழுதுகோலையே ஆயுதமாய் ஏந்துவோம் – சிறீபதி சிவனடியார்//

    //யார் இந்த சிறீபதி சிவனடியார்? எனக்கு ஒரு சந்தேகம் வருகிறது. ஜேர்மனியிலும் இதே பெயரில் ஒரு வியாபாரி இருந்தார்?
    – chandran .raja//

    ஆகா…. மாட்டிக்கிட்டாரா? இவரும் சிறீலங்கா வாராரா? வாங்கோ …… வாங்கோ……..அந்த ஆளாயிருந்தா ….. அங்க வச்சு பேசுவோம்? தெரிஞ்சா விவரம் எழுதுங்ப்பா? இவரு என்ன பிளேட்டை மாத்தி போடுறாரு. ம்ம்……

    Reply
  • சுகுணகுமார்
    சுகுணகுமார்

    //முப்பது ஆண்டுகளாக நாம் கட்டிக்காத்த வீரத்தைஇ மூன்று விதமான படைகளை கைவசம் வைத்திருந்த விடுதலை புலிகளை இருபது நாடுகளின் உதவியோடு இலங்கை அரசு வென்று விட்டது.இந்த தோல்வியை நாங்கள் வெளிப்படையாக ஏற்றுகொள்கிறோம். //

    சிறீபதி சிவனடியானோ அல்லது யாரோ உண்மையில் மனம் மாறி யதார்த்தை புரிந்தால் வரவேற்போம்! நாமும் புலிகள் போல் துரோகி முத்திரை குத்துவது நம்மையும் புலியாக்கிவிடும்! இவர்கள் அண்மையில் ஊரக்க போய் வந்ததால் புலிவால்கள் எற்கனவே இவர்களை வாங்குகிறார்கள்! இங்கே ஞபாகம் வருவது ஒரு ஸ்ப்பானிய முதுமொழி : A wise man changes his mind, a fool never will!

    Reply
  • Information
    Information

    எழுத்தாளர் ஒன்றுகூடல்-எனது பார்வை
    Posted on November 8, 2010 by noelnadesan – நடேசன்

    இலக்கிய காவிகளின் சிறுபிள்ளைத்தனம்

    கொழும்பில், வரும் தைமாதத்தில் நடக்கவிருக்கும் எழுத்தாளர் ஒன்றுகூடலுக்கு எதிராக இங்கிலாந்தில் பத்மனாப ஐயரும் கனடாவில் காலம் செல்வமும் மற்றும் தமிழ்நாடு உட்பட வேறும் சில வெளிநாடுகளில்; வாழும் எழுத்தாளர்களும் இணைந்து பலரிடமும் கையொப்பம் வாங்கி அதை பிரசுரித்து இலக்கிய சேவை செய்கிறார்கள்.

    வாழ்க அவர்களது சேவை.

    கறுப்புப் பூனையை இருட்டில் தேடும் இவர்கள், தங்களது மன வெறுப்புகளை தீர்க்க நடத்தும் சிறுபிள்ளைத்தனமான சுய இன்பம் தேடும் நடவடிக்கையன்றி வேறில்லை. இந்த நடவடிக்கை மூலம் இவர்கள் இலங்கை அதிபர் ராஜபக்சவை தனிமைப்படுத்த நினைக்கிறார்கள்.

    இந்த வழிமுறையை இலங்கையில் புலிகளுக்கு சொல்லிக்கொடுத்திருந்தால் எத்தனை பேர் உயிரோடு இருந்திருப்பார்கள்?

    எழுத்தாளர் சாருநிவேதிதா சொல்லும் யானையோடு உடலுறவு கொண்ட கொசு மாதிரியான கதையாக இருக்கிறது இவர்களின் நடவடிக்கை. இதனால் மகாநாடு நடக்காமல் போய் விடும் என மகிந்த ராஜபக்ச இப்பொழுது நடுங்கிக்கொண்டிருப்பார் அவரது கனவில் பத்மநாப ஐயரும் காலம் செல்வமும் மொட்டை வாளுடன் தோன்றுவார்கள்.

    முள்ளிவாய்க்காலில் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழ் தேசியத்துக்காக போராடி துண்டு துணி இல்லாமல் அம்மணமாக போனபின் இந்த இரு இலக்கிய காவிகளும் போர்கொடியுடன் புறப்பட்டிருக்கிறார்கள். (இவர்கள் மற்றவர் படைப்பதை காவுபவர்கள்)

    முக்கியமாக பத்மனாப ஐயர் “இதில் முருகபூபதி இல்லை நடேசன்தான் இதற்குப்பின்னணி எனச்சொல்லி, அதனால்தான் தாம் இப்படி எதிர்ப்பதாக” கூறி இருக்கிறார்.

    யாரோ கஷ்டப்பட நான் பலனடைய விரும்பவில்லை.

    நான் ஏதாவது செய்வதென்றால் நேரடியாகத்தான் செய்வேன். மேலும் நான் என்னை ஒரு எழுத்தாளனாக என்றைக்கும் நினைப்பவனும் அல்ல. நான் சார்ந்த சமூகத்தின் தேவைகளுக்காக எழுத்தை பாவிப்பவன் மட்டுமே. அதாவது துப்பாக்கியை தற்பாதுகாப்புக்கு மட்டும் பாவிக்கும் சாமானியன் போல். நான் துப்பாக்கியை கொண்டு திரியும் போர்வீரன் அல்ல. தேவை முடிந்ததும் உதயம் என்ற பத்திரிகையின் நிருவாகப்பொறுப்பை மற்றுமொருவருக்கு கொடுத்தவன்.

    இப்படி என்னை வரையறுத்துக் கொண்ட நான் எப்படி எழுத்தாளர் மகாநாட்டில் ஈடுபடுவேன்?

    குறைந்த பட்சம் எஸ்.பொ சீனக் காசில் இந்த மகாநாடு நடப்பதாக சொன்னார். இரசிக்கக் கூடியதாக இருந்தது. அவருக்கு அதனால் தமிழ்நாட்டில் பிரபலமும் கிடைத்தது. ஆனாலும் நீஙகள் எழுத்தாளரிடம் பெட்டிசம் வாங்கி பகிஷ்கரிப்பதாக அறிக்கை விடுவதும் அத்துடன்; மகாநாடு நடத்தும் உரிமையை அங்கீகரிப்பதாக கப்சா விடுவதும். நகைச்சுவையாகக் கூட இருக்கவில்லை. விடுதலைப்புலிகள் பொங்குதமிழ், மானுடத்தின் ஒன்று கூடல் என நடத்திய போது நாங்கள் அறிக்கை விட்டோமா? பகிஷ்கரிக்கச் சொன்னோமா? அப்போது மட்டும் தமிழன் இரத்தம் சிந்தாமல் வேறு என்ன சிந்திக் கொண்டிருந்தான்.?

    கடந்த முப்பது வருடமாக இலங்கையில் நடந்த விடயங்கள் பத்மநாப ஐயருக்கும் செல்வத்திற்கும் மறந்துவிட்டதா?

    உங்களுக்கு விருப்பம இல்லையென்றால் பேசாமல் இருப்பதுதானே. காலம் காலமாக பகிஷ்கரித்து தமிழர் என்னத்தைக்கண்டனர்? இலங்கையில் தூக்கிய அதே காவடியை மேற்கு நாடுகளிலும் தூக்கிறதுதான் திடசங்கற்பம் என்று வரிந்துகட்டி நிற்கிறீர்களா?

    நான் அறிந்த உண்மை

    இந்த எழுத்தாளர் மகாநாடு பற்றிய உண்மையை அறிய விருப்பமில்லாதவர்களுக்கு சொல்லியும் பிரயோசனம் இல்லை. ஆனால் வெளியே சொல்லிவிடுவது சமூகக் கடமையாகிறது. இலங்கையில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு நடத்தவேண்டுமென்று பலவருடங்களாக டொமினிக் ஜீவா மல்லிகையில் எழுதி இருக்கிறார். மல்லிகையை தொடர்ந்து படிப்பவர்களுக்கு இது தெரியும். டொமினிக் ஜீவாவுக்கு தொடர்ச்சியாக பல வழிகளில உதவி செய்து மற்றவர்கள் மூலமும் உதவி செய்யவைக்கும் ஒரேமனிதர் முருகபூபதிதான் . ஒருவிதத்தில் இவரை ஜீவாவின் சீடர் எனலாம். இருவருக்கும் பல ஒற்றுமையுண்டு. குறிப்பாக இலங்கையில் ஜீவாவும் அவுஸ்திரேலியாவில் முருகபூபதியும் தாங்கள் நம்பிய இலக்கியத்துக்கு உழைத்து பலவருடங்களை இழந்தவர்கள். இருவரும் பணத்துக்கு எதுவித மரியாதையும் கொடுக்காத மனிதர்கள்.

    இப்படியான முருகபூபதி, டொமினிக் ஜீவாவின் கனவை நிறைவேற்ற புறப்பட்டதில் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. ஆனால் போர் முடிந்தபின் இதை நடத்தினால் இலங்கைக்கு வெளிநாடுகளில் வாழ்பவர்கள்; வருவார்கள் என திட்டமிட்ட முருகபூபதிக்கு தமிழக எழுத்தாளர்கள் பற்றிய புரிந்துணர்வு இருக்கவில்லை.

    விடயம் புரிந்தவர்கள் கூட காற்று எங்கு வீசுகிறதே அங்குதான் இருப்பார்கள். விடுதலைப் புலிசார்பு காவடியை இலங்கையை சேர்ந்தவர்கள் இறக்கிவைத்தாலும் தமிழகத்தில் இறக்க முடியாமல் திணறுகிறார்கள். பாரிய எண்ணைக்கப்பல் போல் திரும்புவதும் கடினம். கல்பாக்கம் அணுஉலையில் இருந்து வரும் சக்தியிலும் பார்க்க தமிழ்நாட்டில் கோசங்களுக்கு மிகவும் வலிமை உண்டு.

    முருகபூபதியை பொறுத்த மட்டில் புலிசார்பு எழுத்தாளர்கள் இம்மகாநாட்டை எதிர்க்கமாட்டார்கள் என தப்புக்கணக்குப் போட்டார். உண்மையில் இவர் புலிசார்பு ஈழத்தமிழ் எழுத்தாளர்களைத்தான் தொடர்பு கொண்டு பேசினார்.

    இராஜேஸ்வரி மற்றும் என் போன்றவர்கள் உண்மையிலேயே கொழும்பில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் புறக்கணிக்கப்பட்டோம். இராஜேஸ்வரி முழு நேரமும் மண்டபத்துக்கு வெளியே நின்று முருகபூபதியை விமர்சித்துக் கொண்டிருந்தார். நான் அரைவாசி நேரம் வெளிநடப்பு செய்தேன்.எனது காட்டத்திற்கு காரணம், புரபஸர் சிவத்தம்பி இப்படித்தான் வெளிநாட்டு எழுத்தாளர்கள் எழுத வேண்டும் என பாடம் நடத்திவிட்டுச் சென்றார். இதற்கு பதில் அளிக்க முயன்ற போது, புரபஸர் சிவத்தம்பி வெளியேறும் வரையும் அவருக்கு பதில் அளிக்க,முருகபூபதி அனுமதிக்கவில்லை.

    முருகபூபதி இதுவரைகாலம் விடுதலைப்புலிகளை விமர்சித்தது இஸ்லாமிய மக்களை யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றியபோது மட்டும்தான். முருகபூபதி தான் இலக்கியவாதி, அரசியல்வாதி இல்லை என கூறிக்கொண்டு மனமுடையாத விக்கிரமாதித்தன் போல் மீண்டும் மீண்டும் போஸ்ட்கார்ட், கடிதம் எழுதுபவர்களை எல்லாம் அழைத்து விழா நடத்துவார். அவர் அவுஸ்திரேலியால் 2001 ஆம் ஆண்டு முதலாவது எழுத்தாளர் விழாவை நடத்தியபோது அதனை பகிஷ்கரிக்கச் சொல்லி வன்னியிலிருந்து உத்தரவு வந்ததாக இங்கு புலிசார்பினர் பகிஷ்கரிப்பார்கள். இது கடந்த பத்துவருடங்களாக நான் இங்கு காணும் காட்சி. முருகபூபதி முடிந்தவரையில் எழுத்தாளர்களை ஒருங்கிணைப்பார்.

    முருகபூபதி இலங்கையில் பலரது வேண்டுகோளையேற்று அங்கும் ஒருங்கிணைக்க விரும்பி இந்த நிகழ்ச்சியை சர்வதேச மகாநாடாக்கிவிட்டார். அதாவது சாதாரண அரிசிக் கடைக்கு சிவா இன்ரநாசனல் எனப் பெயர் போடுவது போல். இதனை மகாநாடு என்று பெயர் சூட்டியது அவரது இயல்பான நல்ல குணம்தான்.

    இப்படி இவர் தொடங்கியதும் நான் எச்சரித்தேன். முக்கியமாக எனது இலக்கிய ஆசானாக நான் கருதும் எஸ்.பொ.வைப் பற்றி சொல்லியிருந்தேன்.. நிச்சயமாக எஸ்.பொ இந்த மகாநாட்டுக்கு எதிராக கருத்து வெளியிடுவார் அதனை தமிழ்நாட்டு பத்திரிகைகள் பெரிது படுத்தும். இறந்துவிட்ட, வேலுப்பிள்ளையின் மகனை கதிரையில் இருத்தி பத்திரிகை படிக்கக் கொடுத்தவர்களுக்கு இது பெரிய விடயம் அல்ல. வெறும் வாயை மெல்லும் இவர்களுக்கு இது அவல். நீங்கள் மகாநாடு நடத்தி பெறும் பிரபல்யத்தை விட எஸ்.பொ. அதிகமாக பிரபலம் பெறுவார். இதை விட அவருக்கு தேவை என்ன?

    அவரை இந்த மகாநட்டுக்காக இலங்கைக்கு வரும்படி நான் அழைத்தேன் அவர் இலங்கைக்கு வந்தால் எனது கருத்தை சொல்வேன். அது பிரச்சினையில் போய் முடியும் என்று கண்ணியமாக மறுத்தார். இத்தகவலை முருகபூபதியிடம் சொன்னேன்.

    இந்த மகாநாட்டுக்கு எதிராக மட்டும் அவர் கருத்து வெளியிட்டிருந்தால் எஸ்.பொ. தொடர்ச்சியாக தனது பெயரைக்காப்பாற்றி இருக்க முடியும். ஆனால் மகாநாட்டு அமைப்பாளர்கள் அரசாங்கத்திடமும் கே. பி.யிடமும் சீனாவிடமும்; பணம் வேண்டுவதாகக் கூறி தனது கருத்தில் தனக்கே நம்பிக்கை இல்லை எனக்காட்டிக்கொண்டார்.

    கடந்த 22 வருடங்களுக்கும் மேலாக அவுஸ்திரேலியாவில் இலங்கை மாணவர் கல்வி நிதியம் என்ற அமைப்பின் மூலம் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்க்குழந்தைகளுக்கு படிப்பதற்கு உதவும் முருகபூபதி மீது பண ஊழல் குற்றச் சாட்டு ஒட்டவே ஒட்டாது.

    மெல்பனில் சாதாரணமான ஒரு தொமிற்சாலையில் வேலை செய்துகொண்டு பொது விடயங்களில் ஈடுபடும் முருகபூபதியை பல முறை கண்டு நான் வியந்தது உண்டு.

    பத்து டொலரும் இல்லாமல் பத்தாயிரம் டொலர் செலவு தரும் பொது வேலையை தொடங்கும் இவரது துணிவை யாரிடமும் நான் கண்டதில்லை. இப்படிப்பட்ட முருகபூபதிமேல் எஸ்.பொ எறிந்த சேறு மீண்டும் அவரிடமே திரும்பி வந்து அவரை அசிங்கப்படுத்தி உள்ளது.

    மிகவும் கூர்மையானவர் என கருதப்படும் எஸ்.பொ. வுக்கு எப்படி இது புரியாமல் போய்விட்டது? கோபம் அவரது அறிவை மழுங்கடித்து விட்டதா? அவரது கோபம் நிட்சயமாக முருகபூபதி மீது இருக்கவில்லை. முருகபூபதியால் யாரையும் காயப்படுத்தத் தெரியாது என்பது இரண்டு தசாப்தகாலமாக அவருடன் பழகும் அதேவேளையில் அவரை விமர்சிக்கும் எனக்கு நன்கு தெரியும. எஸ்.பொ.வின் ஆத்திரம் வேறுவிதமானது – This is called misdirected anger.

    தமிழ் நாட்டு எழுத்தாளர் உலகம்

    அன்பான தமிழ்நாட்டு எழுத்தாள நன்ண்பர்களே நான் சொல்லப்போகும் விடயங்கள் கசப்பானவை. ஆனால் உண்மை என்பது நேர்மையானவர்களுக்கு புரியும் எஸ்.பொ எறிந்த கைக்குண்டை எடுத்துக் கொண்டு கிடையில் நிற்பவரகள் யார் எனப் பார்போம். இவர்கள் எல்லோரும் மொத்தமாக செய்த மனிதாபிமான உதவிகளை விட முருகபூபதி தனி ஒருவனாக இலங்கைத் தமிழருக்கு உதவிகள் செய்துள்ளார். இந்த மனிதாபிமானம் மட்டும் முருகபூபதிக்கு யானைப்பலம் கொடுக்கும்.

    ஆனால் பாவம்… சில தமிழ் நாட்டு எழுத்தாளர்கள் சிலரைத்தவிர மற்றவர்கள் எந்தக்காலத்திலும் இலங்கைப்பிரச்சினையைப் புரிந்து கொள்ளவில்லை.

    எத்தனை பேர் இலங்கை வந்திருக்கிறார்கள்?

    எத்தனை பேர் ஆய்வுகளை செய்திருக்கிறார்கள்?.

    பலர் தமது வாழ்க்கையில் ஒரு சிங்களவரைக்கூடப்பார்த்ததில்லை. இலங்கைப் பிரச்சினையை மணியனின் பயணக்கதை போல் எழுதுகிறார்கள். பரபரப்புக்காக தினத்தந்தி பாணியில் எழுதும் இவர்களை வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழ் மந்தைகள் விமான ரிக்கட் கொடுத்து அழைப்பார்கள். இப்படி ஒரு தரம் வந்த பின் அவர்கள் பிரபலமாகிவிடுவார்கள். இலங்கை பிரச்சினையில் அவுஸ்திரேலி;ய பல்கலைக்கழகங்கள் செய்த அளவு கூட தமிழ்நாட்டில் ஆய்வுகள் செய்யப்படவில்லை (டில்லியில் உள்ள ஜவஹர் லால் நேரு பல்கலைக்கழகம் விதிவிலக்கு)

    கேள்வி ஞானத்திலும் விடுதலைப்புலிகளின் பிரச்சாரத்திலும் அறிந்தவற்றைக் கொண்டு தற்கால புறநானூறு படைக்கலாம். ஆனால் நுட்பமாக விடயங்களைப் புரிந்து கொள்ளமுடியாது. தமிழ்ப்பட கனவுக்காட்சிகளில் வருவது போல்த்தான் பெரும்பாலோருக்கு இலங்கைப் பிரச்சினை. இலங்கைப்பிரச்சினை சிங்கள-தமிழ் பிரச்சினையாகப் புரிந்து கொண்டுள்ளார்கள்.

    60 விழுக்காடுக்கு மேற்பட்டதமிழ் பேசுபவர்கள், சிங்கள மக்களோடு,வடக்கு- கிழக்குக்கு வெளியே , வாழ்வது இவர்களுக்குத் தெரியுமா?

    விடுதலைப்புலிகள் நினைத்தது போல் இலங்கையில் வட,கிழக்கு பிரிக்கப்பட்டிருந்தால் முள்ளிவாயக்கால் மரணங்கள் சிறு பிள்ளை விளையாட்டாக இருந்திருக்கும்.

    இந்திய- பாகிஸ்தான் பிரிவினையில் பஞ்சாப்பில் நடந்ததற்கு ஒப்பான அழிவை இலங்கைத் தமிழர்கள் எதிர் கொண்டிருப்பார்கள் முக்கியமாக இந்தியாவில் இருந்து 200 வருடங்கள் உள்ளே வந்த மலையகத்தமிழர் இதன் தாக்கத்தை அனுபவித்திருப்பார்கள். மகாவலிகங்கைக்குப் பதிலாக மத்திய மலைநாட்டில் இருந்து இரத்த கங்கை ஓடி இருக்கும்.

    தமிழ் நாட்டில் எழுந்த திராவிடநாடு கோரிக்கையின் விளைவாகவே எமது ஈயடிச்சான் கொப்பிகளும் இந்த ஈழக்கோரிக்கையை வைத்தார்கள். ஆனால்; என்ன? நாங்கள் பக்கத்து வீட்டார் கொளுத்திய வெடியைப் பார்த்து கொளுத்த வெளிக்கிட்டு எங்களது வீட்டையே கொளுத்திப் போட்டு இப்ப கையை தலையில் வைத்தபடி முற்றத்தில் குந்தி இருக்கிறம்.

    நீங்கள் செய்யும் வேலையால் மற்றவர்கள் பாதிக்கப்படுவர் என தெரிந்தும் அதை செய்வது பொறுப்பான செயல் இல்லை என்பதை தமிழக எழுத்தாளர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

    கடந்த ஒன்றரை வருடத்தில் அகதியாக நிற்கும் மக்களுக்காக அறிக்கை விடுவதையும் தமிழனுக்கு கவிதை எழுதுவதையும், மகிந்த இராஜபக்சவிற்கு அறம் பாடுவதையும் தவிர்த்து நீங்கள் செய்தது என்ன என்பதை சற்று சிந்தியுங்கள்.

    ஈழத்தில் நடந்தது புதிய விடயம் அல்ல. மிக அருகிலேயே முன்னுதாரணங்கள் உண்டு இலங்கை அரசாங்கங்கள் மக்கள் விடுதலை முன்னணி என்ற ஜே.வி.பி.க்கு எதிராக இருமுறை போர் தொடுத்தபோது 60 ஆயிரத்துக்கும் மேல் சிங்கள இளைஞர்கள் அழிந்தார்கள். ரோஹணவிஜயவீரவுக்கு நடந்ததுதான் வேலுப்பிள்ளை பிரபாகனுக்கும் நடந்தது. இந்திய அரசாங்கம் பஞ்சாப்பில் காலிஸ்தான் இயக்கத்தினரை கொன்று குவித்தபோது நான் இந்தியாவில் இருந்தேன். தற்பொழுது காஸ்மீரில் நடப்பதும் எதிர்காலத்தில் நக்சலைட்டுகள் என்று இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் வாழும் ஆதிவாசி மக்களுக்கு நடக்கப் போவதுதான் இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் நடந்தது. அரசுயந்திரங்கள் எந்த நாட்டிலும் ஒரேமாதிரியாகத்தான்தொழிற்படும்.விடுதலைப்புலிகள்விடயத்தில் அவர்களின் பலத்தினால் சிறிது காலம் எடுத்தது.

    பயங்கரவாதம் மூலம் மக்கள் பிரச்சினையில் தீர்வு காண முடியாது. காரணம் அரசாங்கங்களும் அதனது படைகளும் பயங்கரவாதத்தை வீரியமாக திறமையாகப்பாவிப்பார்கள் – By Leon Trotsky

    Reply
  • மாயா
    மாயா

    மிருக வைத்தியர் நடேசன் என வைத்தியர் நடேசனை நையாண்டி செய்து யாரோ நக்கலாக ஏதோ எழுதியிருந்தார்கள். மிருகங்களின் குணாதிசயங்களை அக்கு வேறு அணி வேறாக தெளிவாக எழுதியுள்ளார். மனிதனும் மிருக இனம்தானடா என யாரோ சொல்றது காதில் கேட்கிறது. பாம்புக்கு பால் கொடுத்தாலும் அது கொத்தவே செய்யும். முருகபூபதி இப்போது உணர்ந்திருப்பார்? ஏனையவர்கள்……….?

    Reply