சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தங்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்படவேண்டும் எனக்கோரி உண்ணாவிரதம் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் தினமான இன்று வெள்ளிக்கிழமை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 800 தமிழ் அரசியல் கைதிகள் இவ்வாறு உண்ணாவிரத்தில் ஈடுபடப்போவதாக நேற்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
பொது மன்னிப்பு வழங்கப்படவேண்டும் இல்லையேல் பிணையில் விடுவிக்கப்பட வேண்டும் என இக்கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மனித உரிமைகள் தினமான இன்று சர்வதேசத்தின் கவனத்தைப் பெறும் நோக்கில் இப்போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இக்கைதிகளின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
நீண்ட காலமாக எதுவித விசாரணைகளும் இன்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இக்கைதிகள் தம்மீதான வழக்கு விசாரணகள் நடைபெற வேண்டும் அல்லது, விடுதலை செய்யப்பட வேண்டும் என்ககோரி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்துள்ளனர். அரசியல்வாதிகளிடமும் வேண்டுகோள் விடுத்து வந்துள்ளனர். இவற்றிக்கு சாதகமாக எதுவும் நடைபெறவில்லை. எனவே மனித உரிமைகள் தினமான இன்று உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் கவனயீர்ப்பினைப் பெறும் நோக்கில் அடையாள உண்ணாவிரதத்திலீடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.