இங்கிலாந்தினுடை முன்னால் கல்விச் செயலாளராக இருந்த மைக்கல் கோவ் யாழ்ப்பாணிய கல்விச் சிந்தனைக்கு ஒப்பான சிந்தனையையே கொண்டிருந்தார். பரீட்சைகளே அறிவைத் தீர்மானிக்கும் என்ற நிலைப்பாட்டில் ஓலெவல் ஏலெவல் பரீட்சைகளைக் கடினமாக்கி பெறுபேற்றுக்கான வெட்டுப்புள்ளிகளையும் கடுமையாக்கினார். அதன் படியே 1 முதல் 9 வரையான புள்ளிகள் ஓலெவலுக்கும் ஏலெவலுக்கு வழமை போல் ஏ,பி, சி, …. என்ற முறையும் உள்ளது. இதனையும் 1 முதல் 9 ற்கு மாற்றும் எண்ணம் உள்ளது. இதன்படி மிகச் சிறுபான்மையினரான வசதி படைத்த மாணவர்கள் பாடசாலையைவிட தனிப்பட்ட வகுப்புகளை எடுக்கும் வசதி உள்ளவர்கள் மட்டுமே பலனடையும் வகையில் இப்புதிய கல்விக்கொள்கை அமைந்துள்ளது. பரீட்சைக்கு மாணவர்களைத் தயார் செய்வதும் அவர்கள் பரீட்சையில் சித்தியடைவதுமே நோக்கமாக உள்ளது. இது முற்றிலும் அறிவுபூர்வமான விடயம் அல்ல.
குறிப்பாக யாழ்ப்பாணிய கல்விமுறை அவ்வாறே இருந்தது. அதனால் பாடசாலைகளில் நூல் நிலையங்கள் இல்லை. யாழ்ப்பாணத்தில் புத்தகக் கடைகளும் இல்லை. வினாவிடை புத்தகங்களும் துரித மீட்டல்களும் தான் புத்தகக் கடைகளில் விற்கப்படுகிறது. அவ்வாறே பிரித்தானிய கல்விமுறையும் மாற்றப்பட்டு வருகின்றது. இங்கிலாந்தின் அரச பாடசாலைகளில் பெரும்பாலும் நூலகங்கள் கைவிடப்படுகின்றன. உள்ளுராட்சி நூலகங்களையும் தற்போதைய கொன்சவேடிவ் கட்சி மூடிவருகின்றது. மாணவர்கள் அறிவை வளர்ப்பதற்குப் பதிலாக பரீட்சைக்கு தயார் செய்யப்படும் பரிசோதணைக்கூட விலங்குகள் ஆக்கப்படுகின்றனர். அறிவு பரீட்சைப் பெறுபேறுகளுக்குள் குறுக்கப்பட்டுவிட்டது. பின்தங்கிய பிரிவினரான மாணவர்கள் அரசின் கல்விக் கொள்கைகளால் கைவிடப்படுகின்றனர். இவர்களில் 80 வீதமானவர்கள் பிரித்தானிய சிறைக் கூடங்களை நிரப்புகின்றனர்.