ஏ-9 பாதை திறப்பானது யாழ்ப்பாணத்திலிருந்து புலிகளினால் விரப்பட்ட முஸ்லிம்கள் தமது சொந்த இடங்களில் சென்று குடியேற வழிவகுக்குமென நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ஏ. எல். எம். அதாவுல்லா தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் அதாவுல்லா; “உண்மையே எப்போதும் வெற்றி பெறும்” என்பதைப் புலிகளின் தோல்வி நிரூபணமாக்கியுள்ளது எனவும் தெரிவித்தார். அமைச்சர் நமதுரையில் மேலும் தெரிவித்ததாவது:-ஆணையிறவு மீட்பும் “ஏ-9” பாதை திறப்பும் வடக்கு மக்களின் வாழ்வில் ஒளியேற்றியுள்ளது. உள்ளூர் உற்பத்தி வளர்ச்சி,
பொருளாதார முன்னேற்றம் என பல வகைகளிலும் அம் மக்களுக்கு நன்மை கிட்டும். மீதமுள்ள சிறு நிலப்பகுதியும் விரைவில் மீட்கப்பட்டு விடும். முழு நாட்டிலும் சுபீட்சம் ஏற்படும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்டுள்ள காத்திரமான முடிவுகளுக்கு அவருக்கு நன்றி கூற வேண்டும்.
யாழ்ப்பாணத்திலிருந்து புலிகளினால் விரட்டப்பட்ட முஸ்லிம்கள் பெரும் அல்லல்களை சந்திக்க நேர்ந்து ள்ளது. “ஏ-9” பாதை திறப்பானது முஸ்லிம் மக்களும் தமது சொந்த இடங்களில் சென்று குடியேற வழிவகுக்கும். கிழக்கில் மூவின மக்களும் தற்போது மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர். இந் நிலை வடக்கிலும் வரவேண்டும். அதற்கு “ஏ- 9” வீதி திறப்பு சிறந்த ஆரம்பமாகுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.