ஐபிசி தமிழ் ‘ரீக்கடை’ நடத்தியவர்கள் உட்பட அறுவர் வேலைநீக்கம் செய்யப்பட்டனர்!!!

சுமந்திரன் ‘தமிழ் தேசிய நீக்கம்’ செய்கின்றார் என்று ஐபிசி தமிழில் ‘ரீக்கடை’ நடத்தியவர்களையும் பேர்லோ திட்டத்தில் வீட்டில் இருந்தவர்களையும் ஐபிசி தமிழ் வேலை நீக்கம் செய்துள்ளது. ஐபிசி ரீக்கடையயைத் திறந்து சுமந்திரன் ‘தமிழ் தேசிய நீக்கம்’ செய்கின்றார் என்று அரட்டை அடிக்க அனுமதித்த கோகுலன், முகுந்தன் ஆகிய பாஸ்கரனுக்கு வேண்டப்பட்டவர்களே வேலை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் இருவருடன் ராஜ்குமார், சுலோமி, சுரேஸ், தினேஸ் ஆகியோரும் வேலை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். ஐபிசி கலையகம் பிரித்தானியாவில் தனது மனிதவலுவைக் குறைத்துவருவது இது முதற்தடவை அல்ல. நிறுவனங்கள் மனிதவலுவைக் குறைப்பது இன்றுள்ள காலகட்டத்தில் புதிதும் அல்ல. ஆயினும் 2020 இலங்கைப் பாராளுமன்ற தேர்தல் முடிவுகளும் ஐபிசி தமிழ் க்கு ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடிக்கு காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

ஐபிசி ஒன்றும் இலாபத்தில் இயங்குகின்ற ஊடகமல்ல. அதன் வருமானம் அதன் லண்டன் கலையகத்தை இயக்குவதற்கே போதுமானதாக இல்லை. நிறுவனர் கந்தையா பாஸ்கரன் புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் விரல்விட்டு எண்ணக் கூடிய பெரும் செல்வந்தர்களில் ஒருவர். அவர் ஐபிசி யை இயக்குவது நிச்சயமாக லாபநோக்கத்திற்காக அல்ல. தமிழ் மக்கள் மத்தியில் தன்னையொரு முக்கிய புள்ளியாக, அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக ‘கிங் மேக்கர்’ஆக தன்னை உருவகப்படுத்துவதே அவருடைய நோக்கமாக இருக்க முடியும்.

அதன் ஒருகட்ட நகர்வாகவே 2020 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் எம் ஏ சுமந்திரனை தோற்கடிக்க கட்சிக்குள்ளேயே பிரிவினையயைத் தூண்டிவிட்டதில் ஐபிசி நிறுவனர் பாஸ்கரன் முன்னணியில் நின்றார். எம் ஏ சுமந்திரனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஐபிசி நிறுவனர் லட்சங்களை வழங்கியதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தேசம்நெற்க்கு தெரிவித்திருந்தன. அவ்வாறான நிதி வழங்கப்பட்டவர்களில் மாவை சேனாதிராஜா முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவர்ணவாகினி குழுமத்தை வாங்குவதற்கும் ஐபிசி திட்டமிட்டு செயற்பட்டு வந்ததும் தேசம்நெற்க்கு தெரியப்படுத்தப்பட்டு இருந்தது. சுவர்ணவாகினியயை வாங்குவதற்காக மின்னல் ரங்காவோடு ஐபிசி கூட்டுச் சேர்ந்திருந்தது. அச்சமயம் ரங்கா ராஜபக்ச சகோதரர்களின் பக்கம் நின்றார். ஆனால் அவர் விபத்து ஒன்றில் சிக்கியதையடுத்து அவ்வழக்கை சென்ற ஐக்கிய தேசியக் கட்சி அரசு அவருக்கு எதிராகப்பயன்படுத்திக் கொண்டது. ரங்கா ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து ராஜபக்ச சகோதரர்களுக்கு தாவியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் ஐபிசி இன் சுவர்ணவாகினி கனவும் பலிக்கவில்லை.

ஆனால் தேர்தல் முடிவுகள் கந்தையா பாஸ்கரனின் கனவைக் கலைத்துவிட்டது. கடந்த தேர்தலில் எம் ஏ சுமந்திரன் வெல்வது உறுதி என்பது தேர்தலுக்கு முன்னரேயே தேசம்நெற் போன்ற ஊடகங்களினால் உறுதியாக கூறப்பட்டதுடன், தமிழரசுக் கட்சியினுள் கூடுதல் வாக்குகளை சுமந்திரன் பெறுவார் என்பதையும் ஊகித்து இருந்தோம். ஆனால் ஐபிசி தமிழ் சுமந்திரன் தோற்கடிக்கப்படுவார் என்று விருப்புவாக்குகள் எண்ணப்படும் பொழுதுகூட நம்பி இருந்தனர். அதுமட்டுமல்லாமல் இந்த விருப்பு வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடைபெற்றதாகவும் ஐபிசி சொல்ல முற்பட்டது. அதற்கேற்ப நேர்காணல்களையும் ஒளிபரப்பியது. ஆனால் எம் ஏ சுமந்திரனின் விருப்பு வாக்கு எண்ணிக்கை ஒரு போதுமே சர்ச்சைக்குரியதாக இருக்கவில்லை.

மத்தியில் கோத்தபாயாவின் அரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றதும், சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் கூடுதல் விருப்புவாக்குகளுடன் வெற்றி பெற்றதும், ஐபிசி தமிழ் ஆதரித்த வேட்பாளர்கள் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டதும் கந்தையா பாஸ்கரனின் கனவுகள் கலைக்கப்பட காரணமானது. கோத்தபாய அரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுள்ள நிலையில் சுவர்ணவாகினிக்குள் யாரையும் நுழைய அனுமதிப்பதாக அவர்கள் இல்லை.

ஐபிசி தமிழி இன் ‘ரீக் கடை’ நிகழ்ச்சி எம் ஏ சுமந்திரன் மீது சேற்றை வாரியிறைக்கும் வகையிலேயே திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது. அந்நிகழ்வில் எம் ஏ சுமந்திரனால் முன்மொழியப்பட்ட பெண்கள் மீது மோசமான அநாகரிகமான தாக்குதல்கள் நடத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட பெண்கள் இது தொடர்பாக தங்கள் விசனத்தை முகநூலில் பதிவு செய்திருந்தனர். ஐபிசி தமிழின் நன் மதிப்பையும் இந்நிகழ்வு மிகவும் பாதித்து இருந்தது.

சட்டத்தரணியான எம் ஏ சுமந்திரன் மக்களின் கணிசமான ஆதரவுடன் வெற்றி பெற்றதும், ஐபிசி தமிழ் சட்டச் சிக்கலுக்குள்ளாகலாம் என்ற அச்சமும் காரணமாகவும் ‘ரீக் கடை’ க்குப் பொறுப்பானவர்கள் நீக்கப்பட்டு இருக்கலாம் என ஊகங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. ஆனால் ஐபிசி தமிழ் தற்போதைய சூழ்நிலையில் தொடர்ந்தும் அங்குள்ள பணியாளர்களை வைத்து நிறுவனத்தை நட்டத்தில் இயக்க முடியாது என்ற காரணத்தினாலேயே வேலை நீக்கம் செய்ததாக தெரிவித்துள்ளது.

மேலும் அடுத்த மாகாணசபை தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் நிலையில் மாகாணசபையிலும் ஐபிசி தனது செல்வாக்கை செலுத்த முற்பட்டு வருகின்றது என பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தோற்கடிக்கப்பட்ட நிலையில், அவர் கட்சியின் தலைவராக இருந்த போதும் உறுதியான முடிவுகளை எடுக்கும் நிலையில் இல்லை. மாகாணசபை உறுப்பினர்கள் தேர்வில் எம் ஏ சுமந்திரனின் கைகள் ஓங்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த தேர்தலில் எம் ஏ சுமந்திரனின் ஆளாக இருந்த ஆர் நோல்ட்டையும் ஐபிசி சுமந்திரனுக்கு எதிராக திருப்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது. சுமந்திரன் – ஐபிசி தமிழ் மோதல் மாகாணசபை தேர்தலில் எவ்வாறு அமையப் போகின்றது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எம் ஏ சுமந்திரனுக்கு எதிராக ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் செயற்பட்ட போதும் சுமந்திரனின் வெற்றியயை எவராலும் தடுக்க முடியவில்லை. ஒரு வகையில் இந்த ஊடகங்கள் மக்கள் மத்தியில் இருந்து அந்நியப்பட்டு வருகின்றனவோ என்றே எண்ணத்தை தோற்றுவிக்கின்றது. ஐபிசி தமிழ், உதயன், காலைக் கதிர், வலம்புரி அனைத்துமே சுமந்திரனுக்கு எதிரான ஊடகங்களாகவே செயற்படுகின்றன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *